தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக வேலை தமிழருக்கே

தமிழக வேலை தமிழர்க்கே என்ற முழக்கம் ஏன் எழுப்பப் படுகிறது ? தொடர்ந்து நடுவணரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக பொன்மலையில் இந்திய ரயில்வே யின் தொழிற்பழகுநர் பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1765 க்கு 1600 பேர் வட இந்தியர்கள். இதைத் தொடர்ந்து  தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் தேசியப் பேரியக்கம் ஆகியோர் இதனைக் கண்டித்தன. தமிழ்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதமே இது. 

                      


இதைத் தொடங்கியவுடனே இதை ஒரு இனவெறிக் கருத்தாக மாற்றி நஞ்சைக் கக்கத் துவங்கினார்கள் காவிகள். தமிழ்நாட்டில் யாருமே வரக் கூடாது என்று சொன்னது போலவும், தமிழ்நாட்டுக்காரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வேலை பார்க்கலாமா என்று அறிவாளித்தனமாகக் கேட்டனர். தனியார் வேலைக்கு வருவதும், நடுவணரசுப் பணிகளில் தேர்வு எழுதித் தேர்வாவதும் ஒன்றா ? இப்பிரச்சனையை அடிப்படையையே மாற்றி தமிழ் இனவெறி என்று பூச்சாண்டி காட்டினர். தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை குற்றம் சொல்வதில் அவ்வளவு ஆவல். 

நடுவில் இரண்டு பேர். அவர்களின் ஒருவர் பத்திரிக்கையாளர், இன்னொருவர் பொருளாதார நிபுணர். இவர்களுக்கு அடித்துப் பேசவென்று எந்த வலுவான பதில்களோ கருத்துக்களோ இல்லை. நேராக தேசபக்தர்கள் என்றே போட்டிருக்கலாம். அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. 

பத்திரிக்கையாளர் விஜயகுமாரின் கருத்துக்கள்,

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறமை தகுதி எல்லாமே இருக்கின்றன என தொடக்கத்திலேயே தடவிக்கொடுத்து விடுகிறார்.

1.  இது வெறும் நிர்வாகத் தவறுதான். 
2. சில தமிழ் முதலாளிகள் முழுக்க வட இந்தியர்களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்று தனியார் வேலையை இங்கே கொண்டு வந்து என்னவோ பெரிய கருத்து சொன்னதைப்போல புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார் பத்திரிக்கையாளர்.

பொருளாதார நிபுணரின் சத்யகுமாரின் கருத்துக்கள்.

1. பிரிவினை பேசக்கூடாது.
2. தமிழக அரசின் தவறு.
3. மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
4. தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றிப் பேசும்போது உடனே மாவட்டவாரியாக பிரச்சனை செய்தால் என்ன     செய்வது ?என்று கேட்டு மடக்குகிறார். 
5. சென்னையைச் சார்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுவதாக இவரிடம் மற்ற மாவட்ட மாணவர்கள் குறை சொன்னார்களாம்.

101% ஐயமின்றிச் சொல்லலாம் காவிகளின் சிந்தனை நஞ்சு மட்டுமே. எப்போதும் நிரூபிக்கிறார்கள். மனதிலே காவிக் கறை படியாத மேன்மக்கள் அனைவருக்கும் இவ்விவாதத்தின் நியாயம் புரியும்.

90% தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசுக்கு சொந்தமான நிறுவனப் பணிகளில்
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils

என்று கேட்பது இனவெறியன்று. டெல்லியின் இந்திவெறிக்கு எதிரான இன உரிமையே. 

தமிழகத்தின் கல்வித் தரத்தால் மருத்துவப் படிப்பில் தரமற்றவர்கள் சேர முடிகிறார்கள் என்று சொல்லி NEET தேர்வைத் திணித்தார்கள். இப்போது இம்மாதிரியான தேர்வுகளில் கூட சேர முடியாத அளவுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் இருக்கிறார்கள் ?

ஒரு வேளை இது தவறான போராட்டமாக இருப்பினும்இவர்கள் சொல்வது போல் தமிழக அரசின் தவறாகவோ, மாணவர்களுக்கு போதிய தேர்வு வழிகாட்டிகள் இன்மையோ, போதுமான பயிற்சி மையங்கள் இல்லாமையோதான் காரணமாக இருந்தாலும், கோரிக்கை நியாயமான கோரிக்கைதான். அது தமிழகத்தின் மீதான வன்மத்தின் எதிர்வினையாகவே கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில் கல்வியில் தரமில்லை, திராவிடக் கட்சிகளால் எதுவும் முன்னேறவில்லை என்றெல்லாம் சொல்லி, NEET தேர்வு திணிப்பு, ஹிந்தித் திணிப்பு உட்பட பல்வேறு விசயங்களில் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் டெல்லி அரசின் இந்தி வெறி அதிகாரத்திமிருக்கு எதிர்ப்பாகவே பொருள் கொள்ள வேண்டும்.  

#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆண்டாளை இழிவு செய்த எச்.ராசா, விஜயேந்திர சங்கராச்சாரி !

 எச்.ராசா அவர்களின் தந்தையாரின் உழைப்பில் வெளியான செங்கிருதம்-தமிழ் அகராதி ஒன்றை வெளியிடுவதற்காக எச்.ராசா விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிறிஸ்தவரான சாலமன் பாப்பையாவையும் மதச்சார்பின்மை போற்றியான ராசா அவர்கள் வரவேற்றிருந்தார். இந்த விழாவை சிறப்பிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களும் வந்திருந்தார். ஏனென்றால் சமஸ்கிருதத்தைப் புகழ வேண்டுமே. இந்த விழா நடந்த போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரதமாதாவின் புத்திரர்களாக அனைவரும் எழுந்து நின்றனர். உயர்வான மேடையில் அமர்ந்திருந்த சங்கராச்சாரியும் எழுந்து நின்றார். பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதற்கு அந்த மேன்மகனார் எழுந்து நிற்கவில்லை.  

தமிழை தனது ஆன்மாவிலிருந்து வெறுக்கும் ஒருவரை இம்மேடையில் ஏற்றியதன் மூலமாக அவருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி விட்டார் எச். ராசா. தமிழினத் தலைவர் எச். ராசா அவர்களும் இதைக் கண்டுகொள்ளவோ கண்டிக்கவோ இல்லை. அப்படிச் செய்திருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தமிழைத் தனது பெயரில் தாங்கிக் கொண்டிருக்கும் தமிழிசை அவர்கள் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார். தமிழை வளர்த்த ஆண்டாளுக்கு இப்படி ஓர் இன்னல் நேருமென்பதை அவர் எப்படி எதிர்கொள்வார் ?

இதற்கு முன்பும் கூட ராசா ஆண்டாளை வேசி என்று கூறினார். நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அது எப்படி?  வைரமுத்து ஆண்டாளை தனது தாயாகக் கருதுவதாகக் கூறினார். ராசாவோ வைரமுத்துவை வேசிமகன் என்று திட்டினார். என்ன ஒரு சின்ன சிக்கல் எச். ராசா முதலில் வைரமுத்துவை வேசிமகன் என்று கூறிய பின்னர்தான் வைரமுத்து ஆண்டாள் எனது தாய் என்று கூறினார். முன்ன பின்ன இருந்தாலும் அன்னை ஸ்ரீ ஆண்டாளை இழிவு படுத்திய எச். ராசாவை மன்னிக்கலாமா பக்தர்களே ! இப்பக் கணக்கு நேராயிட்டுது பார்த்தேளா ? 


பிரச்சனை என்ன என்பது இங்கு முக்கியமில்லை. ஆண்டாளை அவமானப்படுத்திய எச். ராசா அவர்களும், விஜயேந்திர சங்கராச்சாரி அவர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அது எங்கள் உணர்வைப் புண்படுத்தியதாகும். என்ன ஏது என்று விளக்கம் கேட்காதீர்கள். அது எங்கள் உணர்வு சார்ந்தது. ஆம் ஆண்டாளை இழிவு படுத்தி விட்டார் எச்.ராசா. மார்கழிப்புரட்சியின் தலைவரான அழகுத் தமிழ் திருவாய் மொழியாளரான ராசா அவர்கள் ஆண்டாளை அவமானப்படுத்தியிருக்கிறார். ஆண்டாள் அளவுக்கு தனக்கு தமிழ் வரவில்லை என்பதால் அவமானப்படுத்தியிருக்கலாம் என்று ஒரு வாரம் முன்பிருந்து ஆண்டாளைத் தாயாக வரித்துக் கொண்ட தமிழர்கள் கருதுகிறோம். 


ஆண்டாளை எங்கே இழிவு படுத்தினார் என்று கேட்கக் கூடாது. ஆண்டாள் கோடிக்கணக்கான தமிழர்களின் தாய். எனவே தமிழர்களின் தாய்=தமிழ்த்தாய் என்று கொள்வோம். ஆக தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த்தாயாகிய ஆண்டாளுக்கும் சேர்த்துத்தான் பாடப்படுகிறது. இது எங்களது நம்பிக்கை. அதில் தலையிட எவனுக்கும் உரிமையோ அருகதையோ இல்லை.  இந்த விளக்கத்தைல் சமாதானமாகதவர்களுக்காக இன்னொரு விளக்கத்தையும் கொடுக்கிறேன். சார்ந்தோர்கள் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யவும். ஆண்டாள் வளர்த்ததால்தான் தமிழ் வளர்ந்தது. அதனால்தான் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பெற்றது.  எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காதது ஆண்டாளை அவமதிப்பது போலாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காத சங்கராச்சாரி 100 கோடி இந்துக்களையும் இழிவு செய்துவிட்டார். எப்படி என்று கேட்பவர்களுக்கு, ஆண்டாள் தமிழர்களின் தாய், தமிழர்கள் இந்துக்கள், எனவே உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் புண்பட்டுவிட்டனர். இங்கே இந்துக்களுக்காக கேள்வி கேட்க இந்துக்களே உள்ளனர், புலுத்தறிவுப் பன்னாடைகள், கம்மனாட்டிக் கம்மூனிசிட்டுகள் உட்பட எச்சக்களைகள் அந்நிய மதத்துக்கு மட்டுமே சொம்பு தூக்குவர். 

இந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் பஹூத்தறிவுப் பன்னாடைகள் மற்ற மொழிக்காரர்களிடம் கேட்க முடியுமா ? கேட்டால் வாயிலியே வெட்டுவார்கள் என்பதால்தானே இந்துத் தமிழர்களிடம் மட்டும் இந்த வீரம் ?. இப்போதெல்லாம் அது நடக்காது தமிழ் இந்துக்கள் விழித்துக் கொண்டனர்.  நாம் இந்துக்களாப் போராடினால் மதவெறி என்று கூவுவார்கள் திருட்டு திராவிடக் கும்பல். எனவே நாம் தமிழ் + ஆண்டாள் என்று போராடினோம். தற்போது அதையே தொடர்வோம். இப்போது பாருங்கள் தமிழ் இனவெறி என்று அவதூறு செய்வார்கள் கம்மினாட்டி கம்யூனிஸ்ட்டுகள். அதெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 

எனவே தமிழன்னை ஆண்டாளைப் போற்றும் பாடலுக்கு நிற்காமல் இழிவு செய்ய விஜயேந்திரனுக்கு எப்படித் துணிவு வந்தது, இந்த விழாவை ஏற்பாடு செய்யக் காரணமான எச்.ராசா கொடுத்த உற்சாகமாகத்தான் இருக்கும். எச்.ராசாவின் தமிழ்ப்பற்றும், தமிழகப்பற்றும், இனவுணர்வும், தமிழ்மொழியுணர்வும் எங்களுக்குத் தெரியும், இருந்தாலும் அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  

புரட்சி நடக்கும்போது புரட்சியில் ஈடுபட்டவர்களே புரட்சிக்குத் துரோகமிழைத்த நிகழ்வுகள் வரலாற்றில் நிறைய உண்டு. அவ்வகையில் மார்கழிப் புரட்சி நாயகனான எச். ராசா அவர்களே அப்புரட்சியைக் காட்டிக் கொடுத்துள்ளார். எனவே மார்கழிப் புரட்சியாளர்கள் தங்களது களத்தை மாற்றிக் கொண்டு புரட்சியைத் தொடருமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஆண்டாளை இழிவு படுத்தியவர்களைக் கண்டிக்கப் போன அவர், தானும் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்கு மூல காரணாமாகிவிட்டார். என்னே ஆண்டாளின் திருவிளையாடல் ! தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதானன்றோ !

 மன்னிப்புக் கேட்கும் முறை: 

நாம் எதிரிகளை மதிப்பவர்கள். எனவே எதிரிகளின் மொழிகளிலேயே மன்னிப்புக் கேட்க வைப்போம். தங்களின் பெருமதிப்புக்குரிய சொறியான் ஈவே ராம்சாமி நாயக்கனின் சிலை முன்பு நின்று கருப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் வாயைத் திறக்காமல் 5 முறை, 

 கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை 
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;  
கடவுளை பரப்பியவன் அயோக்கியன் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி 

 என்று சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்க வேண்டும். செய்வீர்களா ? செய்வீர்களா ?. மன்னிப்புக் கேட்க வேண்டிய கடைசித் தேதி மன்னிப்பு கேட்ட பின்னர் அறிவிக்கப்படும். 

இப்போது தர்மப்போராளிகளுக்கு ஒரு வித கலக்கமும், ஐயமும் நேரலாம். நம்ம மதம் ஆப்ரகாமிய மதங்களைப் போல் மற்றவரை வெறுக்கச் சொல்லவில்லை நாத்தீக நாதாரிகளையும் ஏற்றுக் கொள்வதுதானே நம் பண்பாடு. வாழு வாழவிடு என்பதுதானே நமது கொள்கை. இப்படிப் போராட்டம் பண்ணி வெறுப்பதெல்லாம் நமக்கு ஒத்து வராதே என்று தோணலாம். ஆனால் திருவரங்கப் பெருமானின் ஆலயத்தை பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்ற சொறியான் ராமசாமியை மன்னிக்காத நாம், இலங்கையில் புதிய ஆலயங்களைக் கட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக சில கோயில்களை ஆகம முறையில் ராமாயண காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட விமானங்களின் மூலம் குண்டு போட்டுத் தகர்த்த நமது ஸ்ரீமான் ராஜபக்ச அவர்களுக்கு நம் கோயிலில் வைத்து பூரணகும்ப மரியாதையும் செலுத்தி விட்டோம். நாம் நமக்கு நன்மை செய்தவர்களை போற்றுவதிலும் சிறந்தவர்கள். எதிரிகளை அழிப்பதிலும் சிறந்தவர்களே!
Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடாதீங்க "ஜி"

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகை - ஜி போடுது கொங்கு நாடு - அதில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நச்சுக் கலாச்சாரமான "ஜி" போட்டுப் பேசுவது பற்றி எழுதியிருந்தேன். ஜி போடுது கொங்கு நாடு என்பதற்குப் பதிலாக ஜி போடுது தமிழ் நாடு என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது கோவைப் பகுதிகளில் மட்டும்தான் இருப்பதாக எண்ணியிருந்தேன். நாம் இருக்கும் பகுதிதானே நம் உலகம். ஆனால் தமிழகம் முழுவதுமே இப்படித்தான் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இனி நானும் வெட்கப்படாமல் ஜி போட்டுப் பேசும் ஒவ்வொருவருடனும்  ஜி போட்டுப் பேசாதீங்க (டா போட்டுப் பேசாதே என்பதைப் போல்) என்று கூறியாக வேண்டும் போல் இருக்கிறது. 

நான் ஈரோட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே இருக்கும் வரை நண்பர்களை அழைப்பதும், நண்பர்கள் என்னை அழைப்பதும் "மாப்ள", "மாப்பி" என்றுதான் இருந்தது. நாங்கள் முடித்த பின்னர் வேலை தேடியலையும் படலம் வந்துவிட முக்கால்வாசிப் பேர் சென்னைக்குப் பொட்டியைக் கட்டினோம். அங்கே போய் இருந்த சில வருடங்களில் இந்த "மாப்பிள்ளை" என விளிப்பது போய் "மச்சான்" என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தோம். அதற்குப் பிறகு என்னாலும் இந்த மாப்பி என்றழைக்கும் பண்பாட்டை மீட்டெடுக்க முடியவில்லை.

வெள்ளுடை மேன்மக்கள் தொடங்கி அம்மா, ஆத்தா, ஆயா என்பவற்றை மாற்றி மூன்றெழுத்துக்  கெட்ட வார்த்தைகளாக அன்றாடம் பயன்படுத்தும் கீழ்மக்கள் வரை வரையறை இல்லாமல் ஜி போட்டுத் தாளிக்கிறார்கள். கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. திரைப்படம், நாளிதழ்கள், வார இதழ்கள், நெடுந்தொடர்கள், நேர்காணல்கள் என எல்லா மக்கள் திரள் ஊடகங்களிலும் இந்தப் பண்பாடு படுவிரைவாகப் பரவி வருகிறது. குறிப்பாக தமிழை தமிழாக எழுத முனையும் இணையத் தமிழர்கள், தமிழை சரியாகப் பேசாதவர்கள், தமிங்கில தத்திகள், தமிழை சரியாக பேச முயலாதவர்கள், இடையிடையே தமிழில் பேசுகிறவர்கள் இப்படி எல்லாத் தரப்பினரும் ஜி போடுகின்றனர். 


ஃபேஸ்புக் - ஐ முகநூல் என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது தவறாயிற்றே. என்ன செய்ய ? இது வரை எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்கு இனிய தமிழாக மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கவில்லை தமிழ்நாட்டினர். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள யாவற்றையும் கிண்டலடித்து மகிழும் தமிழர்கள், கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை நமீதா தமிழில் பேசுவதை கண்டமேனிக்குக் கிண்டலடித்தவர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலைஞர்ஜி என்று அழைத்ததையும் கிண்டலடித்தவர்கள். அதாவது தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால் அதையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் இவர்கள் மட்டும் ஒழுங்காகப் பேச மாட்டார்கள். வெட்டி பந்தாவுக்காக சார் போட்டும், ஜி போட்டும் பேசுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் பாருங்கள் அரைவாசி நடிகர்களின் தாய்மொழி தெலுங்காகவோ, மலையாளமாகவோ இருக்கும். அவர்கள் எவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் மற்ற மொழி பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் ? மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்கள் எத்தனை பேர் ? நமக்கு அடுத்தவர்களை ஓட்டுவதுதான் பிடிக்கும். நமது மொழியையே ஒழுங்காகப் பேசத் தெரியாமல் அடுத்த மொழியை எங்கே கற்பதாம் ?

அணு உலை எதிர்ப்பாளரும், தமிழ்தேசியவாதியுமான சுப. உதயகுமார் அவர்களும் ஃபேஸ்புக் - இல் "ஜி" குறித்துப் பதிந்த நிலைக் கூற்று

 
அடுத்ததாக நமது முதன்மை எதிரிகளான இந்துத்துவவாதிகள் சமீபத்தில் திறந்து வைத்த கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்ட சுவர்(பெரியாருக்குப் பதிலடியாம்). இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் என்று எழுதியிருப்பதை மனதாராப் பாராட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் சுவரொட்டிகளில் கூட பெயருக்குப் பின்னால் "ஜி"யைச் சேர்த்து எழுதுகிறவர்கள். அந்த "ஜி" யை இங்கே பொறிக்காமல் தமிழ் திரு என்று போட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலே ஒரு சின்னம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு இந்தி "ஓம்". தமிழில் கூட ஓம் என்பதை எழுதலாம் என்று இவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா ? அல்லது ஹிந்திதான் "மேல்"  என்று "குறி"ப்பால் உணர்த்த விரும்புகிறார்களா ? 


இவரது பங்காளியான இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் "கோபால்ஜி ஹிந்து முன்னணி" என்றுதான் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார்.  இது என்ன கேலிக் கூத்து ? கருணாநிதியின் ஃபேஸ்புக் பெயர் "கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று எழுதியிருந்தால் எப்படி சிரித்திருப்பார்கள் ? அவரே அவரை அவர்கள் என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்பது போல் ராம கோபாலன்"ஜி" - யே ராமகோபாலன்"ஜி" - யை ராமகோபாலன்"ஜி" என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்கலாம். ஜி ! என்ன ஜி நீங்க இப்படிப் பண்றீங்களே ஜி !

வெளி மாநிலத்தார் யாரேனும் தமிழ்செல்வன் என்றோ தேன்மொழி என்றோ பெயர் வைக்கிறார்களா ? இல்லை டெல்லியில் யாரேனும் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், அண்ணன் அமித் ஷா என்றோ அழைக்கிறார்களா ? தமிழர்களுக்கு மட்டும் என்னத்துக்கு இந்தப் பிழைப்பு ? "அக்கா தமிழிசை அவர்கள்" என்றுதான் வட மாநிலத்தலைவர்களும் கூப்பிட வேண்டும் என்று உங்க தேசியச் செயற்குழுவில் தீர்மானம் போடுங்கள் பார்ப்போம். இல்லை அக்காவையும் உங்கள் வடமாநிலப் பங்காளிகளைப் போல அக்கா"ஜி" என்றோ, தமிழிசை"ஜி" என்றோ அழைக்கப் போகிறீர்களா ? 

அடுத்ததாக நமது மதிப்பு மிக்க "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்ட தினமணி ஆசிரியர் ராகுல்"ஜி" என்று தலைப்பிட்டு தலையங்கமே எழுதி விட்டார். தனது நாளிதழில் எப்படி தமிழ் எழுத்தின் மூலமாகவே ஹிந்தித் திணிப்பை பணிவாகப் பரப்பி வருகிறார் என்பதைப் பாருங்கள். 

தினமணி கடைசிப்பக்கம்  - 09- 05 - 2015
 இப்படியே விட்டால் தமிழை ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும், தமிங்கிலத்துக்கும் இடையே தேடிப்பார்த்தாலும் கிடைக்காது போகும். தயவு செய்து ஜி போட்டுப் பேசாதீர்கள், பேசாதீர்கள். இதையெல்லாம் நம் போன்ற இணையப் போராளிகள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடுது கொங்குநாடு

தலைப்பைப் படித்து பெரிதாக யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஓ போடுவது ஜே போடுவது ஜால்ரா போடுவது, ஆமாஞ் சாமி போடுவது, சோப்புப் போடுவது, கடலை போடுவது, அறுவை போடுது, ரம்பம் போடுவது, மொக்கை போடுவது, சீன்(scene) போடுவது என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா. அது போலவே டீ போட்டுப் பேசுவது, டா போட்டுப் பேசுவது, சார்(sir) போட்டுப் பேசுவது என்பனவும் நமக்குத் தெரியும். தற்காலத்தில் தமிழ்நாட்டில் பலர் ஒன்றைப் போட்டுப் பேசுகின்றனர். அது என்னவென்பதைத்தான் தலைப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

கொங்கு நாடு கேள்விப்பட்டிருப்பீர்கள். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, போன்ற சில மாவட்டங்களை சேர்த்து கொங்கு நாடு என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பகுதிகளில் வழங்கும் தமிழ் வட்டார வழக்கும் கொங்கு தமிழ் என்றே வழங்கப்படுகிறது. "ஏனுங்" "சரிங்" "வாங்" "போங்" "ஙோவ்" அந்த க என்ற எழுத்தைச் சொல்கிறார்களா இல்லையா என்ற குழப்பம் வருகிற மாதிரி உச்சரிப்பார்கள். அதுவே கொங்கு தமிழின் அழகு எனலாம். இதை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று பண்பலை வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறவர்கள், சில திரைப்படங்கள் ஏனுங்கோ வாங்கோ போங்கோ என்று ஏற்றிச் சொல்லி அப்படிப் பேசுவதுதான் கோயமுத்தூர் தமிழ் என்று உயிரை வாங்கோ வாங்கென்று வாங்குவார்கள்.

என்னுடையது உன்னுடையது, என்பதை என்றது, உன்றது என்றும் சொல்வர். "என்றா கண்ணு சொல்லிப்போட்ட நீயி" என்ற குடும்பம், உன்ற புருசன் என்றெல்லாம் கே.எஸ். ரவிக்குமார் படங்களில் வரும் பெரிய மனுசன்மார்களின் வசனத்தையும் கேட்டிருக்கிறோம். என் + தன் = எந்தன் உன் + தன் = உந்தன் என்றுதான் கவிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்+தன் என்பது என்றன் உன்+தன் என்பது உன்றன் என்றுதான் குறிப்பிட வேண்டுமாம்.  (நன்றி - கவிஞர் மகுடேஸ்வரன்) சரி அது கிடக்கட்டும். எல்லாரும் ஒரு விடயம் சொல்வார்கள். கோயமுத்தூர்காரர்கள் மரியாதை உள்ளவர்கள். கோயமுத்தூர் மரியாதைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றெல்லாம் கூறுவார். மற்ற ஊர்க்காரர்கள் எல்லாம் மரியாதை தெரியாதவர்களா என்ன ? அவர்கள் மொழி நடை, வட்டார வழக்கு அடுத்தவர்களுக்கு மரியாதை தருவதாகத் தெரிகிறது. அவ்வளவே கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்பது தாண்டி கோவை மரியாதை தரும் ஊர் என்பதெல்லாம் "தமிழ் உலகின் மொழி", "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய" போன்ற பழமொழிகளைப் போன்றே வெறும் கேட்பதற்கினிய வதந்தி தான் .

கோவையைத் தாண்டி சற்று ஊர்களுக்குச் சென்று பார்த்தான் தெரியும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவனை தாத்தா வயது கீழ்ஜாதிக்காரர் வாங்க போங்கவென்றுதான் அழைக்க வேண்டும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவன் அப்பா வயது கீழ் ஜாதிக்காரரை பெயர் சொல்லியும், சமயத்தில் வாடா போடாவென்றும் அழைக்கும் அளவுக்கு மரியாதை உள்ள ஊர். அந்தப் பெருமையைச் சொல்லி சிலிர்ப்பவர்கள் இதையும் சொல்ல வேண்டும் அல்லவா ? நமக்கு நடப்பை விட கனவுலகில் இருக்கும் மணித்திருநாடுதானே வேண்டும் போலிப்பெருமை கொள்ள ? ஆனால் கொங்கு நாடு என்பது உண்மையில் மணித்திருநாடாக (utopia)  இல்லாமல் (ஜாதிப்) பிணிமிகு நாடாக (dystopia) அன்றோ இருக்கிறது.

தலைப்புக்கு வருகிறேன். நாம் எல்லோரும் மரியாதையா ஒருவரை விழிப்பதென்றால் எப்படி விளிப்போம். வாங்க போங்க என்றும் நபரின் பெயர் சொல்லியும் அல்லவா ? தற்போது கோவையில் பலரும் பெயருக்குப் பின்னால் ஜி போட்டுத்தான் அழைக்கிறார்கள். 20 வயது கூட நிரம்பாதவர்கள் கூட இப்படிப் பேசிப் பழகியிருக்கின்றனர். என்னய்யா இது ஒரு வசதிக்காக மரியாதைக்காகவும் "ஜி" போட்டுப் பேசுவது தவறா என்று சிலர் எண்ணக் கூடும். நாம் எல்லோரையும் சார் போட்டு அழைக்கிறோமே அதுவே என்ன ஒரு இழிவு தெரியுமா நான் மேற்சொன்ன ஜாதி இழிவைப் போலத்தான். ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அவர்களை அண்டிப் பிழைத்தவர்கள் எல்லாம் இந்த "சார்" என்ற சொல்லைப் பயன்படுத்தித்தான் அவர்களிடம் இளித்து நின்றனர். ஆங்கிலேயர் போன பின்னரும் இந்த "சார்" நம்மை விடவில்லை. நமது எஜமானர்களை அழைக்கப் பயன்படுத்தி வருகிறோம். சார் என்றால் என்ன "Slave I Remain" என்று பொருளாம். ("Servant I Remain"  என்றும் பொருள்)

அவ்வப்போது என்னுடைய உறவினர் ஒருவர் மற்றவர்களை பேச்சினைடையே இப்படி அழைப்பார். அவர் பேசிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மணி என்றால் " மணி "ங்க" இங்க பாருங்க. அதெல்லாம் சரிதாங்க" இது எனக்கு ரொம்பவும் விநோதமாகத் தெரிந்தது. இது மாதிரி வேறு யாரும் அழைத்ததாகத் தெரியவில்லை.

தேவையில்லாத இடங்களில் கூட, வேண்டுமென்றே ஜி ஜீ என்று பெயருக்கு முன்னரும் பின்னரும் சேர்த்துப் பேசத் துணிகின்றனர்.  திரைப்பட விழாக்களில் நடிகர்கள் மாற்றி மாற்றி அந்த சார் இந்த சார் என்று அறுத்தெடுக்கிறார்கள். அது போலவே இப்போது ஜி போட்டு விளிப்பது மிகவும் சர்வசாதரணமாகி வருகிறது.

இல்லீங்ஜி
ஆமாஞ்ஜி
ஜி என்ன இது
சரிங் ஜீ
வரட்டுமா ஜி
பாய்ஜி

ஆரம்பிக்கும்போதும் "ஜி"ல ஆரம்பித்து முடிக்கும்போதும் "ஜி" யிலேயே முடிக்கிறார்கள். ஒருவரை பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை, ஜீ மட்டுமே போதுமாயிருக்கிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் நம்மை விட மூத்த பெண்களை நாம் என்னவென்று அழைப்போம். அக்கா என்றுதானே ? ஆனால் தற்போது பாருங்கள் எல்லாரும் 30 வயது நடிகைகள், கொஞ்சம் மூத்த பெண்கள், திருமணமான பெண்களைக் கூட "ஆன்ட்டி" என்றே அழைக்கின்றனர். ஆன்ட்டி என்பது பெண்களை வயதானவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் கேலிக்குரிய பெயராகிவிட்டது.

முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது பாய் என்கிறோமே ஏன் ? ஹிந்தியில் பய்யா என்றால் அண்ணா என்று பொருள். முஸ்லிம் என்றாலே உருதுவில் பாய் என்றழைத்து அதுவே அவர்களின் அடையாளமுமாகிவிட்டது. தமிழ் முஸ்லிம்களைக் கூட பாய் என்றே அழைக்கிறோம். முஸ்லிம்களே கூட அவர்களிடையே பாய் என்று அழைத்துக் கொள்வதுமுண்டு. இதே போல் இந்த ஜீ என்பதும் வளர்ந்து வருகிறது. முதலில் வட இந்தியர்கள் மட்டும் பயன்படுத்தியது போய், வட இந்தியர்களிடம் பேசும்போது மட்டும் நாம் பயன்படுத்திய ஜி, தற்போது தமிழர்களிடையேயும் பரவிவருகிறது. நானும் கூட இப்படிப் பேச வேண்டி இருக்கிறது சமயத்தில். இணையத்தமிழர்களும் கூட ஜி போட்டு எழுதுகின்றனர்.

இதன் முக்கியக் குற்றவாளிகளாக இந்துத்துவா இயக்கத்தையே நான் குற்றம் சாட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் மொழிவாரி மாநிலம் என்பதையே ஏற்காதவர்கள். நம் பிரதமர் உட்பட. இந்தி, செங்கிருதம் போன்ற மொழிகளைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பவர்கள். மாநாடுகள், பாராட்டு அறிக்கைகள், போராட்ட முழக்கங்கள் உட்பட அனைத்திலும் கூட ஜீ என்ற எழுத்தைப் போட்டுத்தான் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுகின்றனர். சுவரெழுத்துக்களிலும் கூட ஜி என்பது சேர்ந்து விட்டது. ஏன் இவர்கள் அறிவிப்பு முழுவதையும் ஹிந்தியிலேயே எழுதியிருக்கலாமே. அவற்றையெல்லாம் படிக்கும் கொடுமை மற்றவர்களுக்கிருக்காதல்லவா ? இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதுவார்கள் எப்போதாம் ? சித்திரை ஒன்றாம் நாளுக்கு. அதிலும் அந்த ஓம் என்ற (வடமொழிக்)குறியீட்டை பெரியதாக தமிழெழுத்துக்களினிடையே திணித்து தமிழ் வாக்கியத்தைப் பிளந்து வைப்பார்கள். (இவர்களைக் கண்டால்தான் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது)

தமிழெழுத்தைப் பயன்படுத்தி ஹிந்தியை வளர்க்கும் இவர்களை போலத்தான் இந்தியா முழுதும் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஆங்கில எழுத்துக்களின் மூலம் ஹிந்தியத் திணித்து வருகின்றனர். நிகாலோ, சலோ, பச்சோ என்றெல்லாம் ஹிந்திச் சொற்களை ஆங்கிலத்தின் மூலம் எழுதுகின்றனர். விற்பனை பொருட்களின்  பெயர்கள், திட்டங்களின் பெயர்கள்தான் ஹிந்தித் திணிப்பின் வாகனம். இதில் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களும் அடக்கம்.

இவர்களைப் போலவே இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸ் காரர்கள், இவ்வாறு ஜி சேர்த்து எழுதுவதில்லை. அன்னை சோனியா, அன்னை இந்திரா, தலைவி சோனியா அவர்கள்,  தலைவர் ராகுல், அமரர் ராஜீவ் என்றுதான் எழுதியும் பயன்படுத்தியும், பேசியும் வருகின்றனர். தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள் கூட தமிழில்தான் பெயரையும் தலைவர் பெயருக்குப் பின்னர் அவர்கள் என்பதையும் எழுதி வருகின்றனர். கலைஞர் அவர்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்படியெல்லாம் பார்த்திருப்போம்.  என்ன எரிச்சலென்றால் பெயருக்கு முன்னர் அடைமொழி எரிமலை, தானைத் தலைவர், இனமானக்காவலர் வைத்து சிரிப்பு மூட்டுவார்கள். பொதுவுடமைக்காரர்களோ தோழர் என்று சொல்லிக் கொள்வர்.

பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள்தான் மோடிஜீ மோடிஜீ என்று பேசியும் எழுதியும் வந்தனர். இது அப்படியே மற்ற தமிழகத் தலைகளையும் குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். ராமகோபாலன்ஜீ, அர்ஜூன் சம்பத் ஜீ, முருகானந்தம் ஜீ என்று மாறுகிறது. இன்னொரு எரிச்சல் என்னவென்றால் தமிழகம் சாராத தலைவர்களனைவருக்கும் ஜாதிப்பெயரையே தங்களது இரண்டாவது பெயராக வைத்துள்ளனர். பெரும்பான்மையாக இவர்களைக் குறிப்பிட இந்த ஜாதிப்பெயரே பயன்படுத்தப்படுகிறது. மோடி, நாயுடு, ரெட்டி,  பிரகாஷ் காரத், மம்தா பானர்ஜி, பாண்டே, பென், மேனன், நாயர், சாட்டர்ஜி, இப்படியெல்லாம் இருக்கின்ற பெயர்களையே அவர்களைக் குறிப்பிடுகின்றனர். இந்த ஜாதிப்பெயரின் பின்னால்தான் ஜீ போடுகிறார்கள். ஆந்திராவில் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றுதான் அறிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது மட்டும்தான் இல்லை. மற்றபடிக்கு ஜாதி உணர்வெல்லாம் ஆகாவென்றுதான் இருக்கிறது. ஜாதிப்பெயர் பின்னால் இருக்கும் மற்ற மாநிலத்தில் ஜாதி உணர்வே இல்லாமல் இருப்பவர்களும் உள்ளனர். இருப்பினும் மற்ற மாநிலத்தவரைப் போல் ஜாதிப்பெயரை சேர்க்காமல் இருப்பதை நாம் பெருமையாகவே கருத வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இப்போது தமிழ்நாட்டிலும் ஜாதிப்பெயரைப் பின்னால் சேர்த்துக் கொள்வதை ஃபேஸ்புக்கில் தொடங்கியுள்ளனர். ஜாதியை இனமென்றும் சொல்லிக் கொள்வதால் அதன் பெயரில் அழைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள் சிலர். நாளை இவர்கள் பெரிய தலைவர்களாக வளரும் போது இவர்களைப் பார்த்து எல்லா ஜாதிக்காரர்களும் தங்களது பெயரைப் பின்னால் இணைத்துக் கொள்வர். அப்போது இந்த "ஜீ"யும் சேர்ந்து கொள்ளும். அன்றைய நாளினைக் கற்பனை செய்து கொண்டால் இப்படி இருக்கும். "முத்தரையர் ஜி யின் கருத்துக்கு கவுண்டர் "ஜி" அவர்கள் கண்டனம்",  "நாளை தேவர்ஜி பேசுகிறார்" "மதிப்புக்குரிய செட்டியார்ஜி இறந்தார்", "ஐயர் ஜி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது" அறிவிக்கப்பட்டது" "மள்ளர்ஜி நாளை மதுரை வருகிறார்", "கள்ளர்ஜி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்" "நாடார்ஜீ மாலை அணிவித்து வரவேற்றார்". 

இதையெல்லாம் கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா ? "நமஸ்காரம்" என்பதே தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. அதைத் தமிழில் வணக்கம் என்று மாறுவதற்கு தெருவில் நின்று போவோர் வருவோரிடமெல்லாம் வணக்கம் சொல்லி அதை மாற்றியிருக்கிறார்கள் நமது (திராவிட இயக்கத்தவர்)முன்னோர்கள். இதெல்லாம் இனி நிலைக்குமா ? ஏனென்றால் உலகத்திலேயே பேபி ஷாலினி என்று குழந்தைக்குப் பெயர் வைத்தது தமிழனன்றி வேறு யார் என்று எனக்குத் தெரியவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் கோவை அதிர்ந்த போது


தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - இல் வெளியான ஒரு சிறு கட்டுரை. கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு ஹிந்தி எதிர்ப்பு மொழிபோராளியைக் குறித்து சிறு கட்டுரை வெளியிட்டிருந்தது.  அறியப்படாத கொங்கு நாட்டு மொழிப்போர் வீரர்கள் - ஈகியர்கள் குறித்து ஒரு சிறு பதிவாக இருக்கும் என்று மொழிபெயர்த்தேன். பிழை நேர்ந்திருப்பின் வருந்துகிறேன்.

இளங்கீரன் - படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்


தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்னரும், போராட்டக் காரர்களால் ஒரு காவலர் தீ வைத்து எரிக்கப்பட்டதை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கோவையைச் சார்ந்த ஒரு காவலர், தான் ஒடுக்கும் சக்தியாக இருப்பதாக வருந்தி தனது சீருடையையே (காவலர் பதவியைத்) துறந்தார் என்பதை பலர் அறியவில்லை.

மனசாட்சி உறுத்திய அக்காவலர் காளிமுத்து, போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடும்போது தன் கண்களை மூடிக் கொண்டவர். "அவர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் இயக்கத்தின் இரகசிய ஆதரவாளர். அந்நிகழ்வின் பின்னர் தனது பணியை உதறிவிட்டு ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை நடத்தினார் என்று நினைவு கூர்கிறார் இளங்கீரன் எனும் கோவையைச் சேர்ந்த பிரபலமான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர். இவர் பேரூரிலுள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழாசிரியர் பட்டம் படித்துக் கொண்டிருந்தவர். அந்நாளில் நகரமே தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது, அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்தது என்கிறார். பூலைமேடு (இன்று பீளமேடு என்றழைக்கப்படுகிறது) தண்டபாணி என்ற பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டு இறந்தார். மொழிப்போராட்டத்தில் எண்ணிறந்த மாணவர்கள் இறந்ததால் மனமுடைந்த அவர் இம்முடிவைத் தேடிக் கொண்டார்.

ஏ துரைக்கண்ணு என்று அரசுக் கல்லூரி மாணவர் தலைவர், கோவை நகர ஹிந்தி எதிர்ப்பியக்கத்தின் செயலாளராகவும், இளங்கீரன் தலைவராகவும் இருந்தனர். தலைமறைவாக இயங்கிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, நாங்கள் உப்பிலிபாளையத்திலுள்ள காவலர் குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தோம். காவலர் காளிமுத்து தனது இல்லத்தில் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தார்.

தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் மறியல் போராட்டம் செய்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஆயுதப் படைக் காவலர் எனது முடியைப் பிடித்து அடித்து, நான்தான் ரிங் லீடரா என்று கேட்டார். ரிங் லீடர் என்பது அந்நாட்களில் குழுத் தலைவர் என்று பொருள்படும். கோவையில் இராணுவமே வந்திறங்கிய போதும் மாணவர்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிடுகிறார் இளங்கீரன். அந்நாளில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று இப்படித் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம். "சுட்டுத் தள்ளினார்கள்... சப்பாத்தியை ! "(யாரையும் சுடவில்லை என்பதை அப்படிக் கிண்டலடித்ததாம்).

இளங்கீரன் ஒரு கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அது பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களால் எழுதப்பட்ட ஹிந்தித் திணிப்பு-எதிர்ப்பு கவிதைகளின் தொகுப்பாகும். அதன் விலை 25 பைசா. அதன் தலைப்பு "ஜனவரி 26 இல் மானம் கெடும் தமிழர்க்கு"

அந்நூலின் தொகுப்பாசிரியர், துரைக்கண்ணு கீழ்க்கண்டவாறு அணிந்துரை எழுதினார். "எப்போது தோன்றியது என்று கண்டறிய முடியாத பழம்பெருமை வாய்ந்த தமிழ் என்ற மொழி, இந்நாளில் (26.1.1965) இறந்து விடும்". இந்தச் சிறு கவிதைத் தொகுப்பு என்பது கோவை கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்க்கிறோம். என்பதே அதன் சாரமாக இருந்தது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ஏ ராமசாமி என்பவர், இந்திய மொழிகளின் சுதந்திரப் போராட்டம் என்ற தனது நூலில் சொல்கிறார். துரைக்கண்ணுவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் படுகாயமுற்றனர். அதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், அதே நாள் மாலை 6 மணியளவில்
Aya Toofan என்ற ஹிந்திப்படம் திரையிடப்பட்ட நாஸ் திரையரங்கத்தை தீவைத்துக் கொளுத்தினர். அங்கே விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

என்னது பாஜக தமிழை ஏற்றுக் கொண்டதா ?

அய்யடா !! இந்திய மக்கள் கட்சி (பிஜேபி) தமிழைப் பெருமைப்படுத்தறாங்களாம். ஏன் இப்போதுதான் தமிழின் பெருமையை புரிந்து கொண்டீங்களாக்கும். சரி இருக்கட்டும். இந்த அறிவிப்பில் ஏதாவது நேர்மை இருக்கிறதா ?

இதுவரை ஹிந்தியை, செங்கிருதத்தை திணித்த போதும், பொய்களை அவிழ்த்து விட்ட போதும் ஒன்றுமே நடக்காதது போன்று கள்ள மௌனம் காத்தவர்களும், தமிழ் வெறியர்களும் சேர்த்து இதை "பாத்தியா பாத்தியா இப்ப என்ன சொல்வ? என்று  கொட்டி முழக்கலாம்.

ஹிந்தி மொழியையே திணிப்பதற்கும், திருக்குறளைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறுபாடு இல்லையா ? 

ஹிந்தி மொழியை நாம் கற்க வேண்டும். பதிலுக்கு அவர்கள் திருக்குறள் பாடமும் திருவள்ளுவர் நாள் விழாவும். நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வரேன் ஊதி ஊதி ரெண்டு பேருந்திங்கலாம்.

இப்படிச் சொன்னால் புரியும், நீங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஹிந்தியில் ஒரு பெரிய அறிஞரின் இலக்கியத்தின் ஒரு பகுதியை பாடமாக வைத்துக் கொள்கிறோம். எப்படி வசதி ?

சரி தமிழல்லாத மற்ற மாநிலங்களில் இது போல் அவர்கள் மொழிக்கும் மொழிசார்ந்த இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா நடுவணரசு ?

ஹிந்தித் திணிப்புக்கு இந்த திருவள்ளுவர் விழாவும் டேலியாகாது என்ற போதும், இது தவறே.

அட ராமா !! இனி இங்க நம்ம இந்தியைத் திட்ற மாதிரி அங்க தமிழையும் வள்ளுவனையும் திட்டுவார்கள். தேவை எல்லா மொழிகளுக்கும் சமத்துவமே.

தமிழைப் புகழ்வதாலோ அடுத்தவன கொண்டாடச் சொல்வதையோ, படிக்கச் சொல்வதையோ ஏற்க  முடியாது. ஒரு மொழி பேசுவோர் மற்றதை கற்பது இயல்பாக நடக்க வேண்டும். நடக்கும். எப்போது ? எல்லா மொழிகளும் சமமாக நடத்தப்படும்போது.

இங்க இந்தித் திணிப்பும் வேண்டாம் அங்க தமிழ் வள்ளுவத் திணிப்பும் வேண்டாம். சம்பந்த சம்பந்தமில்லாமல் எதற்கெடுத்தாலும் அப்படிக் கொண்டாட வேண்டும் இதைக்கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு.

முதலில் உங்கள் ஹிந்தி, சம்ஸ்கிருத  வெறியைக் கைவிடத் தயாரா  ?

ஹிந்தி விசயத்தில் காங்கிரசுக்கு எதிராக நிலைப்பாடு எடுங்களேன் பார்ப்போம்.

ஹிந்திதான் நாட்டின் முக்காவாசிப் பேர் பேசுகிறார் என்றெல்லாம், செங்கிருதம்தான் எல்லாவற்றுக்கும் மேல் என்று நம்பிக்கையுடையவர்களிடம் எல்லா மொழியும் சமமென்று சொல்லுங்களேன். திருந்த வேண்டியது நீங்கதான்.

கால் நூற்றாண்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி பெரிய அளவில் கூட்டம் சேர்க்க இயலவில்லை. தமிழ் இந்துக்கள் வந்தமா சாமி கும்பிட்டமா என்று போனார்கள். இவர்களுடன் இணைந்து ராமன் கோயில் வேண்டுமென்று கலவரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு இவர்களே குண்டு வைத்தும் பார்த்தார்கள். வெறுப்பை விதைக்க முயன்று பார்த்தார்கள். கடைசியாக மோடி அலையில் அள்ளிவிடலாம் என்று நினைத்தார்கள். அதிலும் எதிர்பார்த்தளவு இல்லை. தூய இந்தியா என்ற இவர்களது நகைச்சுவை சுய விளம்பரக் கைப்படம்(செல்ஃபி) எடுத்து ரஜினி கமல் என்று அனைவரையும் டாக் செய்து பார்த்தார்கள். இப்போது ஆண்ட பரம்பரைக் கனவில் திளைக்கும் மேல்ஜாதி வெறிக் கூட்டத்தை வளைக்க ராஜ ராஜ சோழனைக் கொண்டாடி உள்ளே புகப் பார்க்கிறார்கள். அதன் அடுத்த முயற்சியாகத்தான் திருவள்ளுவரைப் புகழ்ந்து தமிழனின் நெஞ்சை நக்கி நஞ்சை விதைக்கப் பார்க்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஸ்ரீ தமிழ் நாடு


இலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வன்முறை செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கலவரம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் தமிழர்கள் மீது கொடிய கொலை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சிங்களப் பேரினவாத வெறி காரணமாக தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை கொலைகள் ஏவப்பட்டன. அதன் விளைவாக தமது வன்முறையை வெவ்வேறு கொடிய வழிகளில் வெளிப்படுத்திய காட்டுமிராண்டிகள் கொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களின் மார்பகங்களின் மீது ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதித் தனது வெறியைத் தணித்துக் கொண்டனர் என்று படித்திருக்கிறோம்.  இன்றும் ஸ்ரீலங்கா என்ற அந்நாட்டின் பெயர் அதன் இனவாதத்தைப் பறைசாற்றி நிற்கிறது. நிற்க.

தற்போது தமிழகத்தில் எங்கெங்கு காணினும் ஒரு நச்சுக் காளானைக் காண முடிகிறது. வீதிகளெங்கும் நிறைந்திருக்கும் கடைகளின் பெயர்ப்பலகைகளைக் கண்டால் கடைகளின் பெயர்களில் முன்னோ பின்னோ ஒட்டிக் கொண்டிருக்கும் "ஸ்ரீ". குழந்தைக்குப் பெயர் வைப்பதிலிருந்து பெரும் நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது வரையில் ஸ்ரீ என்ற ஒரு எழுத்து இல்லாமல் பெயரையே காண முடிவதில்லை. எல்லாம் சிவமயம் என்று கேட்டிருக்கிறோம். இங்கே எல்லாம் ஸ்ரீ மயமாகி இருக்கிறது. ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் இருந்தால் நன்மை நடக்கும் என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். இந்த மூட நம்பிக்கையைப் பரப்புவதோடு அல்லாமல், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.

இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு வட ஹிந்தியர்கள் 70 வருடங்களுக்கு முன்பே வைத்திருக்கும் பெயர்களைத்தான் வைக்கிறார்கள் தமிழகத்தினர். இன்னும் சில முண்டங்கள் நடிகைகளின் பெயர்களையும் பயங்கரமான ட்ரென்டியாக, ஃபேஷனாகக் கருதி வைக்கிறார்கள். 5 வருடங்களில் அந்த நடிகையே இருக்க மாட்டார். அந்த பெயரும் காணாமல் போகும். எனக்குத் தெரிந்து மட்டும் மூன்று பேர்கள் தங்கள் குழந்தைக்கு ஹன்சிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். எனது நண்பன் ஒருவன் பெயர் கணேஷ்குமார். அவனது அப்பா ஏன் அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினாரென்று பெயர்க்காரணம் சொன்னான். அந்தப் பெயருக்கு வட இந்தியாவில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்குமாம். தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு வேலை தேடிப்போன காலத்தில் உருவான மனநிலை, அவனுக்குப் பிடித்த மாதிரி பெயர் வைத்துக் கொண்டு பல்லிளித்தாள் அவன் உடனே அருள் பாலிப்பானா ? வட இந்தியர்கள் தென்னிந்தியாவுக்கு வேலை தேடி வரும் இக்காலத்திலும் தொடர்கிறது இந்த முட்டாள்தனம். போன தலைமுறைகளில் அதிக அளவில் வைக்கப்பட்ட சுரேஷ், ரமேஷ், தினேஷ், ஷங்கர், ராஜேஷ் போன்ற ஹிந்தித் திரைப்படம் பார்த்து பெயர் வைத்த மூடத்தனத்திலிருந்து இன்றைய தலைமுறையினர் மாறிவிட்டனர். இவர்கள் வைக்கும் பெயர்களைக் கேட்டால் வருங்காலத்தில் பாருங்கள் "நம்மை விட ஹிந்தி மொழியுணர்வு மிக்கவனாக இருப்பவன் தமிழன்" என்று வட இந்தியர்களே தலை சுற்றிக் கீழே விழுவார்கள்.

தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொலைக்காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லும் நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரிந்து விடும். ஜாதியையும் அதன் சடங்குகளை மட்டும் ஒரு அங்குலம் விட்டுக் கொடுக்காமல் பின்பற்றும் தமிழர்கள் தமிழில் பெயர் வைப்பதை மட்டும் இழிவாகக் கருதி சமஸ்கிருதப் பெயர்களை வைக்கின்றனர். கண் தெரியாதவன் இருட்டுக்குள் கருப்புப் பூனையைக் கண்டதாக சொல்வது போல அடுத்த வீட்டுக்காரனைப் பார்த்தே தன்னை ஒப்பிட்டுக் கொண்டு வாழும் இவர்கள் பெயர் வைக்கவும் என்ன ஏதென்றே தெரியாமல் வாயிலேயே நுழையாத பெயரை வைக்கின்றனர்.  கட்டாயமாக ஹ ஷ, ஜ என்ற எழுத்துக்கள்  வழியில் தொடங்கும் பெயரையோ அல்லது அந்த எழுத்துக்களில் ஒன்றாவது பெயரின் இடையிலாவது வந்து விட வேண்டும். ஸ்ரீ என்ற எழுத்தை முன்னர் சேர்த்து வைப்பதில் பெயரியல் விதிகள் இடிக்கிறதா ? ஸ்ரீ நந்தினி /ஸ்ரீ வித்யா என்று வைக்க விரும்பியவர்கள் வித்யா ஸ்ரீ/நந்தினி ஸ்ரீ என்று வைத்துக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது மட்டுமல்ல பெரிய தொழிற்சாலைகளோ, பள்ளி, கல்லூரிகள் தொடங்குகிறவர்களும் முன்பு ஸ்ரீ என்ற எழுத்தை ஏதோ கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்பது போல் சேர்த்துக் கொள்கின்றனர்.

இதையெல்லாம் (முதல் பத்தியை இங்கு தொடர்பு படுத்திக் கொள்ளவும்) பார்க்கும் ஈழத்தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். சிங்களனோ அடடா ஈழத் தமிழனுன்களை விட இவனுகளாகவே நம்ம வழிக்கு வந்துட்டானுகளே என்று இன்ப அதிர்ச்சி அடைவான்.

சரி மனிதர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும்தான் மட்டும்தான் வைக்கிறார்களா என்றால் இல்லை. தங்கள் குலதெய்வங்களுக்கும், இன்ன பிற கடவுளின் பெயருக்கு முன்னரும் ஸ்ரீ என்ற எழுத்தை சேர்த்துக் கொள்கின்றனர். ஏன் கடவுளுக்கே பெயரை மாற்றுகிறோமே அந்த கடவுளிடம்தான் தங்கள் தலையெழுத்தை மாற்றும்படி வழிபாடு செய்கிறார்கள் கடவுளின் பெயரையே மாற்றி வைக்கும் பக்தர்கள். என்னவொரு முரண்நகை. செல்லாண்டியம்மன், கோட்டை மாரியம்மன், பிடாரியம்மன், முத்துமாரியம்மன், அய்யன் என எல்லா அம்மன்களும், ஆத்தாக்களும், அப்பன்களும் தங்கள் திருப்பெயரின் முன் ஸ்ரீயுடன்தான் காட்சி தருகிறார்கள். எல்லாவற்றையும் மீறும் வகையில் தமிழ்க்கடவுள்களான சிவனுக்கும், முருகனுக்கும் கூட ஸ்ரீயைச் சேர்த்தாயிற்று. திருச்செந்தூர் முருகன் பேக்கரி/ட்ராவல்ஸ்/வாட்டர் சப்ளையர்ஸ் என்ற பெயர்களுக்குப் பதிலாக ஸ்ரீ செந்தூர் முருகன் என்று எழுத்துக்களைக் காண நேரிடுகிறது. ஸ்ரீ சிவன் என்ற பெயரைக் கண்டு எங்கே முட்டிக் கொள்வது என்று தோன்றியது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். திருமறைக்காடு வேதாரண்யம் ஆனது போதாதா ?

தமிழ் தனித்தியங்கும் தன்மை பெற்றிருந்தாலும் பிறமொழி சொற்களையும், எழுத்துக்களையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. வடமொழிப்பெயர்கள் தமிழ்த் தன்மையுடன் இருப்பதற்காகத்தான் எடுத்துக்காட்டாக ராம் என்ற பெயரை முன்னர் "இ" சேர்த்தும் இறுதியில் "அன்" விகுதியும் இராமன் சேர்த்துத் தமிழாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தமிழ் வெறுப்பாளர்கள் சாதாரணமாக இருக்கும் சராசரி தமிழ்ப் பெயர்களையுமே கூட செங்கிருத ஒலியமைப்புடன் வரும்படி மாற்றிக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். மிகச் சொற்பமான அளவிலேயே தமிழ் செல்வன், தமிழரசன், தமிழ் செல்வி, தமிழரசி வகையிலான பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த சமஸ்கிருதப் பித்து வெள்ளமெனப் பாய்ந்து பரவி வருகிறது.

ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அதில் நகைச்சுவையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக வைக்கப்படும் "அது நம்மள நோக்கித்தான் வருது", எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க" நீங்க வடக்குப் பக்கம் போங்க" போன்ற வசனங்களை எல்லோரும் பேசிச் சிரித்து மகிழ்கின்றனர். அது மொழிமாற்றம் செய்ததன் குறையல்ல. உண்மையிலேயே ஆங்கிலப் படங்களில் பேசும் வசனமே அதுதான். நமக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவர்கள் என்னமோ பயங்கரமான விஞ்ஞானம் பேசுவதாக நினைத்துக் கொள்கிறோம். அது போலத்தான் இந்த சம்ஸ்கிருதப் பெயர்களும் வெறும் கடவுளின் பெயர்களும், வினைப் பெயர்களும் தான். அது நமக்குப் புரியாத மொழியில் இருப்பதால் அது நமக்கு மிக உயர்ந்ததாகத் தெரிகிறது,

ஸ்ரீ என்பது திரு எனப் பொருள்படும் சம்ஸ்கிருத ஹிந்தி சொல்தானே. இப்போது எல்லோரும் சரிங்க் "ஜி" வாங்க"ஜி" என்று வயது பார்க்காமல் மரியாதை நிமித்தம் சொல்லப்படுவது போல.

ரஜினிகாந்த் பேசும் போது கலைஞர் "ஜி", மோடி"ஜி" என்பாரல்லவா .


அதுவே கமல் போன்றவர்கள் பேசும்போது பாலச்சந்தர் ஐயா "அவர்கள்", சிவாஜி ஐயா அவர்கள் என்பார். 


தொலைக்காட்சி விவாதங்களில் "தலைவர் கலைஞர் அவர்கள்" "புரட்சித் தலைவி அம்மா அவர்கள்" என்பனவற்றின் எளிய வடிவம்தான் ஜி என்பது.

அது போலவே திரு.கருணாநிதி, திரு.வைகோ திரு. நரேந்திரமோடி என்று சொல்வோம் (திருமிகு, திருமின் என்று பெண்பாலுக்கு இடலாம்)


ஹிந்திப் பித்துக்குளிகள் தமிழில் அடிக்கும் சுவரொட்டிகளிலேயே "ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்கள்" வருகை புரிகிறார் என்று போடுவார்கள். வீரத் துறவி "ராமகோபாலன் ஜி" உரையாற்றுகிறார் என்றும் போடுவார்கள்.

குழந்தைக்கு பெயர்வைக்கிறவர்கள் ரொம்ப விவரமாக அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்று கேட்டுத்தானே வைக்கிறார்கள் இல்லையா. ஸ்ரீ - க்கு மட்டும் சும்மா புனிதம் என்று விட்டுவிடுகிறார்களா. ஸ்ரீ க்கு என்ன பொருளென்று வினவினால் திரு என்று வரும். அந்த திரு என்ற சொல்லைத்தான் எல்லாப் பெயர்களுக்கும் மெனக்கெட்டு வைக்கிறார்களா ? ஸ்ரீமதி என்றெல்லாம் வைக்கிறார்களய்யா.

வித்யா விகாஸ் என்று ஒரு பள்ளி இருக்கிறது.  பெயரின் பொருளென்ன. ஒன்றுமில்லை கனவான்களே !


வித்யா - கல்வி (அறிவு, ஞானம், கலை போன்ற பல பொருள்கள் தரும் சொல்) விகாஸ் - வளர்ச்சி, முன்னேற்றம், போன்ற பலபொருள்கள் கல்வி என்ற பொருளும் இதில் அடக்கம்)

 கல்வி வளருமிடம், அறிவு முன்னேற்றம் இவ்வளவுதான் அதன் பொருள். இதையே தமிழில் சொல்லும்போது இவ்வளவுதானா என்று வெத்தாகத் தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தில் வைத்தால் கெத்தாக இருக்கிறது

நமக்குத் தெரியாத ஒன்றை உயர்வாக நினைக்கும் போக்குதான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்

சிவபெருமான் = ஷிவா
பிள்ளையார் = விக்னேஷ், கணேஷ், விநாயக்.. 

(மூர்த்தி என்றால் சிலை, கணேஸ் மூர்த்தி என்றால் வியாகர் சிலை, நாராயண மூர்த்தி என்றால் பெருமாள் சிலை என்று கிண்டல் செய்யலாம். எப்படி அருமையாக இருக்கிறது பாருங்கள்)
காளியாத்தா, கொற்றவை - துர்கா
அம்மன் - அம்பா
கலைமகள் - சரஸ்வதி
திருமால் - விஷ்ணு

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். குமாரன் என்று தமிழ்த்தன்மையுடன் இருந்ததை மாற்றி குமார் என்று வைத்தார்கள். சிவக்குமார் என்ற எனது பெயரை யாராவது ஷிவா- என்று அழைத்தாலோ, shiva என்று எழுதினாலோ எரிச்சலாக இருக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு அதுதான் இயல்பாக இருக்கிறது. நடிகை ஸ்ரேயா-வின் பெயர் உண்மையில் ஸ்ரீயா என்பதுதான். அதை ஊடகப் புண்ணியவான்கள் எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எங்கோ தொடங்கி எங்கோ வந்து விட்டேன். திரும்புகிறேன்.

நீலம், பச்சை, சிவப்பு போன்ற கண்ணைப் பறிக்கும் ஆடை அணிபவர்களை எள்ளி நகையாடும் விடலைகள் அதே நிறத்தில் ஃபேஷன் என்று வரும்போது பெருமிதத்துடன் அணிவதில்லையா அது போலவே பெயர் வைக்கும் நகைச்சுவையும் அரங்கேறுகிறது.

தமிழ் மொழியின் வழியில் வந்த இந்துக்களே இப்படி என்றால் எப்போது கிறித்தவ, இஸ்லாமியர் தமிழில் பெயர் வைக்கத் தொடங்குவது ?.

குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவப் பெயர்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் மதம் சார்ந்த நூல்களை கருத்துக்களை சிறப்பாகத் தமிழ்ப்படுத்தியிருந்தாலும் இஸ்லாமியர் யாரும் (மணவை முஸ்தபா என்ற தமிழறிஞர் தவிர) வைத்த மாதிரி தெரியவில்லை. அப்படிப் பெயர் வைப்பது ஹரம் ஒன்றும் இல்லைதானே. இன்னும் ஏன் அன்பன் என்று இல்லாமல் ஆஷிக், மணிமகள் என்றல்லாமல் ஃபாத்திமா என்றெல்லாம் வைக்கிறீர்கள்.

இப்படியே ஸ்ரீ பைத்தியம் பிடித்து அலையும் தமிழ்நாட்டினர் கொஞ்சகாலத்தில் ஊர்ப்பெயர்களையெல்லாம் ஸ்ரீப்பூர்,  ஸ்ரீநெல்வேலி, ஸ்ரீசெந்தூர் என்று மாற்றுவார்கள். தமிழ் நாட்டின் பெயரையும் ஸ்ரீ தமிழ் நாடு என்று மாற்றுவார்கள் இல்லை ஸ்ரீ நாடு என்றே மாற்றுவார்கள். ஏன் தமிழ் மொழியின் பெயரையுமே ஸ்ரீ தமிழ் என்று அழைப்பார்கள் இல்லை இல்லை ஸ்ரீமிழ் என்றே ஆக்குவார்கள்.

வாழ்க ஸ்ரீ வளர்க ஸ்ரீ !

 
Download As PDF
Bookmark and Share

Post Comment

மெட்ராஸ் கஃபே - தமிழர்களுக்கு எதிரான விஸ்வரூபம் ?

 

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைக் கண்டால் ஈழப் போரை அடிப்படையாகக் கொண்ட கதைக் களம் போல் தெரிகிறது.  இந்தப் படம் முதலில் ஜாஃப்னா (Jaffna ) என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இலங்கை வரைபடத்தினைப் பின்புலமாகக் கொண்டு நிற்கும் ஜான் ஆப்ரஹாம் இந்திய உளவுத்துறை ஒற்றன். விடுதலைப் புலிகள் கடத்திச் செல்வதாகவும் காட்டுகிறார்கள். ஈழப் போரை மையமாக வைத்து, இந்திய உளவுத்துறையின் நாதாரித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிக்கும் திரைப்படமாக இருக்கும் போல் தெரிகிறது. கிளுகிளுப்புக்காக ஆங்கிலப் படத்தின் பாணியிலேயே ஒரு பெண் நிருபரையும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ போர் (war) படங்களைப் பார்த்திருக்கிறேன், பெரிய அளவில் வருந்த வில்லை. இப்போது ஈழப்போரைப் பின்னனியாகக் கொண்ட ஒர் சண்டைப் படம் வருகிறது அதிலும் இந்திய உளவாளியை நாயகனாகக் கொண்டு எனும்போது உலகமகா எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இப்படித்தானே அந்தந்தப் போரைப் பின்னனியாகக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டைப் பற்றிய ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு கருவியைக் கண்டுபிடித்தார் என்பதற்காக ஒரு தமிழரைப் புகழ்கிறார்கள். ஈழப்போரை நடத்தியது இந்தியாதான் என்று தெரிந்த பின்னும் இன்னும் இந்தியாவை விடாமல் நம்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். மிச்சமிருக்கும் சில லட்சம் தமிழர்களை இந்தியா கொன்றாலும் அவர்கள் இந்தியாவின் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள். நம்மைப் போன்றவர்களால்தான் அதை சகிக்க முடிய வில்லை. அத்தகைய தமிழர்கள் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எப்படி எதிர்ப்பார்கள் அவர்கள் இந்தியாவையும் நம்புகிறவர்கள் அமெரிக்காவையும் ஆதரிப்பவர்களாயிற்றே ?!

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க், அஸாஞ்ஜே என பலரும் அமெரிக்காவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியும் அமெரிக்காவின் ஆதரவை வேண்டித் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். ஒசாமா பின் லேடனைக் கொல்லவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். ஆனால் அமெரிக்காவோ அதற்கு நன்றியாக தமிழர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக தமிழரை அழித்த சிங்களப் பேரினவாத பயங்கரவாத ராணுவத்தினருடன் ராணுவக் கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையான இந்தியா இன்னும் அகதிகளைக் கூட அவமானப்படுத்தியே வருகிறது.

திரிகோணமலையில் சிங்கள - அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி
விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தது ஏனென்றால் அது இஸ்லாமியரைப் புண்படுத்தியது, தாலிபன்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. அமெரிக்காவைப் புகழ்கிறது. அவ்விவகாரத்தில் எனக்கு இப்போதும் அதே நிலைப்பாடுதான். இஸ்லாமியர்களின் தம்மை தீவிரவாதியாக சித்தரிப்பதையும், ஆப்கானியர்களைத் தீவிரவாதியாகவும் அமெரிக்கனை யோக்கியனாகக் காட்டுவதாகவும் எதிர்த்தது நியாயமானதே. 30 வருடங்களாக வல்லரசு நாடுகளின் ராணுவ ஆக்ரமிப்பால் 2 மில்லியன் ஆப்கானியர்கள் கொல்லப்பட்டும், பலர் ஊனமுற்றும், அகதியாகவும் அலைகின்றனர். இதை கேவலப்படுத்தி அமெரிக்காவை ஆப்கானியத் தீவிரவாதிகள் வைக்கும் குண்டு வெடிப்பிலிருந்து காக்கும் அமெரிக்காவைப் போற்றும் படமாகவும் அமெரிக்காவால் ராணுவ ஆக்ரமிப்புக்குள்ளாகியிருக்கும் ஆப்கானியரைக் கேவலமாகவும் காட்டி இருப்பதை எதிர்ப்பது நியாயமானது. ஆனால் இஸ்லாத்தை இழிவு செய்கிறது, இஸ்லாமியரைப் புண்படுத்துகிறது, என்று மத உணர்வு ரீதியாக எதிர்த்துப் படத்தையே தடை செய்யக் கேட்டது தவறே.

விஸ்வரூபம் பற்றிய பதிவில் இஸ்லாமியரின் எதிர்ப்பை கொச்சைப்படுத்துகிற தமிழர்களுக்கு என்று நான் எழுதியது இதுதான், //இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், "இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா ? // அது இப்போது மெட்ராஸ் கஃபே வடிவில் ராணுவத்திற்குப் பதிலாக உளவாளியாக மாறி  சிறு அளவில் உண்மையாகி விட்டது.

இந்த மெட்ராஸ் கஃபே படமும் இந்தியாவை யோக்கிய சிகாமணியாகக் காட்டப்போகிறது. இரு தரப்பும் இலங்கையில் போர் புரிந்தனர் என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் ரசிகர்கள். இந்தியாவிலிருந்து போய் இலங்கையில் நாடு கேட்டால் அவன் சும்மாயிருப்பானா, ராஜீவைக் கொன்ற தீவிரவாதிகளுக்கு இதுதான் சரியான தண்டனை  என்று முற்றுமறிந்த ரசிக சிகாமணிகள் வக்கனை பேசுவார்கள். இந்திய உளவுத்துறை அதிகாரி உயிரைப் பணயம் வைத்து என்ன சாகசம் செய்யப் போகிறாரோ தெரியவில்லை. 

விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாகவும், இந்திய உளவுத்துறை அதிகாரியை கடத்துவதாகவும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல போராளிகளே, இந்திய உளவுத் துறையினரைக் கடத்த மாட்டார்கள் அவர்கள் இந்தியாவின் நண்பர்கள் என்றெல்லாம் சொல்லி அப்படத்தைத் தடை செய்யச் சொல்லி விளம்பரம் தேட மாட்டார்கள் "தமிழர்கள்"  என்று நம்புகிறேன்.

படம் வெளியான பின்பு திரைப்படத் திறனாய்வு (விமர்சனம்) எழுதும் வலைப்பதிவர்கள் இப்படத்தைக் கிழித்துத் தொங்கவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் ராம்போ, ஜேம்ஸ்பாண்ட், மிஷன் இம்பாஸிபிள், இன்னும் பல ராணுவத்தின் பெருமைகளை பீற்றிக் கொள்ளும் படங்கள்  உளவுத்துறை அமெரிக்காவின் பெருமை சொல்பவை. இப்படங்களைப் பார்ப்பவர்கள் உலகிலேயே ஜனநாயகத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்கள் அமெரிக்க ராணுவத்தினர்கள், சிஐஏ எஜென்ட்கள் ஆகியோர்கள் என்றுதான் நம்புவார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். நம் இந்தியப் படங்களில் ராணுவத்தை, காவல்துறையை வைத்து போலி தேசபக்தியைத் தூண்டும் படங்கள் எடுக்கப்படுகின்றதுன . இப்போது டான்கள், கேங்ஸ்டர்கள், மாஃபியாக்கள் போன்ற அயோக்கியர்களை நாயகர்களாகக் காட்டும் இந்தியப் படங்கள் வருகின்றன. அதே போல் உளவுத்துறை,  உளவாளிகள் செய்யும் சாகசங்கள் வரத் தொடங்கி விட்டன. ஏஜென்ட் வினோத், கமோன்டோ, ஏக் தா டைகர்  ஆகியன எடுத்துக்காட்டுகள். அடுத்ததாக இந்த மெட்ராஸ் கஃபே. இந்த உளவுத்துறையினர் எனப்படுகிறவர்கள், இறையாண்மையுடைய இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அந்நாட்டிற்கெதிரான பாதுகாப்புக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள். இறையாண்மையுடைய இலங்கையில் இந்தியா தலையிடாது என்று சொன்னார்கள்.  வாய்கிழியப் பேசினார்கள். இப்போது இந்திய உளவாளியை இலங்கைக்கு அனுப்புவது இலங்கை என்ற நட்பு நாட்டிற்குச் செய்யும் துரோகம். எனவே இந்த இயக்குநர் இந்தியாவை கேவலப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், உளவாளியை அனுப்பி வீரதீர சாகசத்திற்கெல்லாம் இடம் கொடாமல் இலங்கை அரசு இந்திய அரசு மிகச் சிறந்த நட்பு நாடுகளாகவே இருக்கின்றன.பார்ப்போம்.

விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவும் இந்திய உளவாளி என்று இத்திரைப்படம் விமர்சிக்கப்படுகிறது. இதில் ஒன்றும் நடக்காததல்ல. புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய உளவுத்துறையால், இஸ்ரேலிய உளவுத்துறையால்  பயிற்றுவிக்கப்பட்டவர்களே , அது போல் உலகெங்கும் உள்ள் இஸ்லாமிய இயக்கங்களும் அமெரிக்க உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்களே. இவ்வியக்கங்களுக்குள் பல உளவாளிகள் ஊடுருவி போராட்டங்களுக்கு உலை வைத்ததும் ஈழம் வரை நடந்த வரலாறு. இதிலெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது ? ஒரு வேளை இப்போது நாம் எதிர்பார்ப்பது போல இந்திய உளவாளி புலிகளுக்குள் ஊடுருவி ரகசியங்களைக் கறந்து வருவது போலவோ அல்லது பணயக் கைதிகளை மீட்பது போலவோ இருந்தால் நாம் என்னவென்று அதைப் புரிந்து கொள்வது ? இந்திய உளவுத்துறை என்ன செய்யுமோ அல்லது செய்ததோ அதைத்தான் கொஞ்சம் திரைப்பட மசாலாத்தனத்துடன் வேறுவிதமாக படம் காட்டியிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். என்ன சிங்கள ராணுவம் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகள் படத்தில் வரும் அதை சகித்துக் கொள்ள வேண்டும்.

என்ன இதனால் சங்கடப் படப் போகிறவர்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான். எனக்கு இதையெல்லாம் கேட்டு சலித்து விட்டது. 

அமெரிக்காவில் அமெரிக்க அரசை விமர்சித்துக் கூட ஹாலிவுட் படம் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திரம் இந்தியாவில் இல்லை. ரசிகர்களும் அவ்வளவும் பக்குவமானவர்கள் இல்லை. இந்திய இயக்குநர்கள் படமெடுத்தால் இந்தியாவின் பங்கை மறைப்பார்கள், தமிழர்கள் எடுத்தால் புலிகளின் தவறுகளை மறைப்பார்கள். இந்திய அரசை விமர்சித்துப் படமெடுத்தால் படம் தடை செய்யப்படும். புலிகளைப் பற்றி எடுத்தால் தமிழர்கள் எதிர்ப்பார்கள். நடுநிலையுடன் நேர்மையாக படம் எடுக்க இங்கு சூழ்நிலையோ ஆட்களோ இல்லை. தமிழர்கள் இதைத் தடை செய்யக் கோரினால் நமக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். சீமான்களை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

இஸ்லாமியர் ஏன் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப் படுவதை எதிர்க்கின்றனர் என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே போல் தடை செய்ய வேண்டும், வெளியிட வேண்டாம் என்று முரட்டுத்தனமாக செயல்படுவதால் என்ன நேர்ந்தது என்றும் அவர்களிடமிருந்தே தெரிந்தும் கொள்ளலாம். தமிழர்களை இனவெறியர்களாகக் காட்டுவதற்கு வட இந்திய ஆங்கில ஊடகங்களும், சோ ராமசாமிகளும், சுப்ரமணிய சாமிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் போலியான புகைப்படங்கள்


ஃபேஸ்புக்கில் தமிழ் உணர்வுக் குழுக்களும், இஸ்லாமியக் குழுக்களும் அறிந்தோ அறியாமலோ சில புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றன. அவை போலியானவை என்பதைச் சொல்லவே இதை எழுதுகிறேன். அது ஒரிரு வருடங்களுக்கு முன்பே தெரிந்ததுதான் என்றாலும் அது இன்னும் புதிதான புகைப்படம் போல பல நூறு பேர்களால் பகிரப்படுகிறது

ஒரிரு புகைப்படம் ஈழ ஆதரவு குழுக்கள் மூலம் தமிழர்களிடையே பரப்பப் படுகிறது இதில் பல பிணங்கள் எரிந்து கரிக்கட்டையாகக் கிடக்கின்றன. இது ஈழப்போரில் நடந்த இனஅழிப்புப் போரின் தடயமல்ல. காங்கோவில் நடைபெற்ற ஒரு எரிவாயு வாகன விபத்தில் இறந்தவர்களுடையது இந்தப் புகைப்படத்தில் நின்று கொண்டிருப்பவர்களை உற்று நோக்கினால் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்று புரியும்.

வெளிநாட்டுக் கிறித்தவ அமைப்புகள் சில முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறித்தவர்கள் என்றும் தகவலைப் பரப்பி வந்திருக்கின்றனர்.



இன்னொரு புகைப்படம் இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் மார்பகத்திலிருந்து பாலருந்தும் குழந்தை. இதுவும் ஈழத்திலிருந்து எடுக்கப்பட்டதில்லை என்பது அந்தப் பெண்ணின் மங்கோலிய முகமே காட்டி விடுகிறது. இது நேபாளத்தைச் சேர்ந்த ஒரு திரைப்படத்தின் புகைப்படம்.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்பவர்கள் புகைப்படத்தின் மீதோ அல்லது அதற்கு மேலே ஏதாவது உணர்ச்சியூட்டும் கவிதைகளையோ அல்லது கருத்துக்களையோ எழுதி பகிர பார்ப்பவரும் உணர்ச்சி வயப்பட்டு உண்மையினை அறியாமலேயே பரப்பி விடுகின்றனர். இது போன்ற போலிகளை நம்பாதீர்கள்.

இந்தப் புகைப்படம்  பர்மா (அ) மியான்மர் புத்த பிக்குகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் பிணங்கள் என்று பகிரப்படுகிறது. ஆனால் இது உண்மையில் 2010 இல் சைனாவில் நடந்த புவி அதிர்ச்சியின் மாண்டவர்களில் உடல்களை திபெத்திய புத்தத் துறவிகள் அடக்கம் செய்யும் போது எடுக்கப்பட்டது. இது போன்று முழுக்கை சட்டை அணிந்திருப்பவர்கள் திபெத்தியர்களே. பர்மியத் துறவிகள் இலங்கைத் துறவிகளைப் போல துணியை உடல் முழுக்கச் சுற்றி அணிந்திருப்பார்கள். .மேலும் பர்மிய முஸ்லிம்கள் வெள்ளை நிறத்தவர்களும் அல்ல.


இந்தப் புகைப்படம், 2006 இல் ஈழத்தில் சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகளில் ஒன்று. இது தமிழ்நெட்டில் வெளியானது. இது பர்மிய முஸ்லிம்கள் படுகொலை என்று பரப்பப்படுகிறது. அந்தப் புகைப்படத்தின் மேல் வலது மூலையில் பாருங்கள். Like My Page  "Love Islam" - என்று தனது குழுவை இஸ்லாமியரிடம் ஃபேஸ்புக்கில்  பரப்புவதற்கு இஸ்லாமிய உணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இது ஈழத்து பிணத்தை விற்கும் நக்கீரனுக்கு ஒப்பானது.




இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புகிறவர்களின் நோக்கம் இறந்தவர்களையும் போராடுகிறவர்களையும் கேவலப்படுத்துவதாகும். தற்போது போராடி வரும் மாணவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் சில படங்களை வைத்து வட இந்திய ஊடகங்களும், இலஙகை அரசின் ஊடகங்களும் மாணவர் போராட்டத்தின் நேர்மையையே கேள்விக் குறியாக்கி விட்டன. மாணவர்கள் போராட்டத்தின் போது வைத்திருந்த பதாகைகளில் இறந்த மக்களின் புகைப்படங்களை அச்சடிக்க்கப்பட்டிருந்தன. அதில் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிங்கள மக்களின் உடல்களும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள மக்களை, புலி ஆதர்வாளர்கள் தவ்றாக சித்தரிக்கின்றனர் என்று கிழித்து விட்டார்கள்.இது மாணவர்களின் போராட்டத்தை எந்தளவுக்கு கேள்விக்குட்படுத்தும் என்பது புரிகிறதா ? உண்மையிலேயே இந்தப் போலிகளது நோக்கம் படுகொலைகளை விற்று உணர்ச்சியைத் தூண்டி வெறுப்பை வளர்ப்பதன்றி வேறில்லை.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்மயி வேறு என்னதான் செய்ய வேண்டும் ?


பெண்கள் மீதான வசைச் சொற்களைக் கண்டு வெம்பியதால் இது குறித்து அழுத்தமாக எழுதத் தோன்றுகிறது. அடிக்கடி இது குறித்து எழுதுகிறேன். அதனால்தான் சின்மயியின் பிரச்சனை குறித்தும் எழுதுகிறேன். எல்லாக் கோணங்களிலும் ஆராய விருப்பமும் இல்லை. பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்ப்பதற்கு மட்டுமே ஒரு சந்தர்ப்பமாகக் கருதி இதைச் சொல்கிறேன். மாட்டிக்கொண்டவர்களை கும்முவதும் மகிழ்வதும் எனக்குப் பிடிக்காது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான ஆதாரம் சரவணக்குமார் என்பவர் மீது மட்டும் இருக்கிறது. ராஜன் முன்பு டிவிட்டரில் சின்மயியிடம் விவாதத்தில் ஈடுபட்டு, அவரை அதிகம் கேலி பேசியதால் எரிச்சலடைந்த சின்மயி அவரை ப்ளாக் செய்துவிட்டார். பின்பு எதுவும் சொல்லவில்லை என்கிறார். ஆனால் சின்மயி தொடர்ந்து வெவ்வேறு முகவரிகளில் வருகிறார்கள் தொல்லை தருகிறார்கள் என்று இதற்கு முன்பே ஒரிரு முறை சொல்லி வந்தார். ராஜன் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையாளர் சின்மயியுடன் பிரபலமானவர்களில் ஒருவராக ராஜனையும்  சேர்த்து எழுதியதால் சின்மயி அப்பத்திரிக்கையாளருடன் சண்டயிட்டார். பின்பு தொடர்ந்து ராஜனால் தொல்லை ஏற்படுவதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை. ராஜன் தனது ஃபாலோயர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனபதற்காக மிகவும் கீழ்த்தரமான கீச்சுக்களை, பதிவுகளை எழுதியுள்ளார். பல அரசியல் தலைவர்களை நடிகர்களை இழிவு செய்துள்ளார்.

ஆனால் சின்மயியை தனிப்பட்ட முறையில் தாக்கி இவ்வாறு எழுதவில்லை சும்மா கிண்டல் மட்டுமே செய்துள்ளார். என்பதில் உறுதியாகத் தெரிகிறது. அதுவும் சின்மயி ப்ளாக் செய்த பிறகு எதுவும் எழுதவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். எழுதியவர்கள் மற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட முடியுமா ? ராஜனை மட்டும் முன்னிலைப்படுத்துவதன் காரணம் புரியவில்லை.  

ஆதாரமும் இல்லைஇது பாரபட்சமான தனிப்பட்ட வெறுப்பாகத் தெரிகிறது. 

3 வருடங்களாக பதிவுலகில் இருப்பதால் அவர் தனிப்பட்ட பெண்கள் மீது பாலியல் அவதூறு செய்ய மாட்டார். சந்தனமுல்லை, சாரு நிவேதிதா விவகாரங்களில் அவர் எழுதிய பதிவுகள் அதற்குச் சான்று. ஆனால் அவரே இவ்வளவு கீழ்த்தரமான ட்வீட்டுகளும், பதிவுகளும் எழுதியது முரண்.

தினத்தந்தி வழக்கம் போல ஈனத்தனமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் கைது என்று படமெல்லாம் போட்டிருக்கிறார்கள். கூகிளிலும் ராஜன் படம் வருகிறது. இதெல்ல்லாம் அதிகபட்சமானது. உலகமகாக் கொலைகாரன்களுக்கே தூக்கு தண்டனை வேண்டாம் என்கிறோம். இது போன்ற வசைபாடல் ஆபாசமாக வர்ணிப்பது என்பதற்கெல்லாம் இவ்வளவு தண்டனை வேண்டாம். சராசரிப் பெண்களையெல்லாம் வன்கலவி செய்தவன்களெல்லாம் நடமாடுகிறார்கள். அதே நேரத்தில் இது போன்ற இணையத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பது பெண்களின் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்த கண்ணியமான காவல்துறை கூடங்குளத்தில் என்ன செய்தது ? .

தன் குழந்தையைத் தேடிச் சென்ற லவீனாவிடம் அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

இது மாதிரி பலரிடம் உதயகுமாருடன் தொடர்புபடுத்தி, பாலியல் ரீதியாக கேள்வி கேட்டிருக்கின்றனர். இது குறித்துப் பல புகார்கள், மனித உரிமை மீறல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன காவல்துறையினர் மீது. இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது.

சைபர் கிரைம் குறித்து 18 பெண்கள் புகாரளித்தும் சின்மயியின் புகார் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தனிப்பட்ட செல்வாக்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவ்வப்போது ஜாதிப் பெருமிதத்துடனும் திமிருடனும் பேசியிருக்கிறார்.

இட ஒதுக்கீடு, மீனவர்கள் மீனைக் கொல்வது, சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என வன்மமாகக் கருத்து வைத்திருக்கிறார்.

புகழ்விரும்பி எக்செட்ரா......

இதெல்லாம் சரியென்று ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் மற்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சின்மயியின் தவறுகளைக் கண்டிக்கும் அதே நேரம் மற்றொன்றையும் கண்டிக்க வேண்டும்.

அவர் பார்ப்பனத் திமிருடன் நடந்து கொண்டார் என்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்துப் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் உட்பட.

ஃபேஸ்புக்கில் பலரும் இந்துத்துவாவாதிகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு போன்ற பகிர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் யாரும் இந்துத்துவாவாதிகளோ பார்ப்பனர்களோ அல்ல. பார்ப்பனப் பெண் மட்டுமல்ல இட ஒதுக்கீடு பற்றி அறியாத எந்தவொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆண், பெண்களின் கருத்தும் சின்மயி கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் படித்ததே இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் என்பதை அறியாமல் இருப்பதால்தான் அப்படிப் பேசுகிறார்கள். சின்மயி பார்ப்பனராக இருப்பதால் அதை வைத்தே அவரை தாக்க முடிகிறதே. இதே வேறு ஜாதியாக இருந்திருந்தால் ?

அதே போல் உதயகுமாரைப்பற்றி இழிவு செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பன இந்துத்த்வாக்களா ?

அதே போல் மீனைக் கொல்வது பாவமில்லையா என்று கேட்டதை, மீனவர்கள் மீனைக் கொல்லும்போது, சிங்களப்படை மீனவர்களைக் கொல்லலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்கு ஒரு ஸ்க்ரின் ஷாட்டை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஆமாம் என்று சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. அதை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

எல்லோரையும் பெண்களையும் தலைவர்களையும் இழிவு படுத்தி இருப்பதை அவர் எதிர்க்கிறார், கண்டிக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்.

திட்டம் போட்டு சிக்க வைத்தார் என்கிறார்கள். அவர் அம்மாவைப்பத்தித் தவறாகப் பேசினால் அவர் கோபப்படக்கூடாதா என்ன ?

அவர் தமிழச்சி என்று சொல்வதை எதிர்க்கிறார்கள். அவர் தெலுங்குப்பெண் என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் தமிழ்நாட்டில்தான் இப்படித் துணிச்சலாகத் தெலுங்கு என்று சொல்லியிருக்க முடியும். அதே  நான் பிராமணப் பெண் என்று சொல்லியிருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள்.

தமிழ்ப் பெண் என்று சொன்னால் அதையும் நக்கலடிக்கிறார்கள்.

இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை நாடினார், அதே போல்தானே அவரை ஆபாசமாகப்பேசியவர்களும் தலித் ஆதரவு, மீனவர் ஆதரவு என்று உணர்ச்சி அரசியலை தனக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு நியாயம் தேடுகிறார்கள். இது மட்டும் தவறில்லையா ?

ஒரு பெண் எதிர்க்கருத்து வைத்தார் என்பதற்காக அதை பாலியல் ரீதியில் வசைபாடுவதை ஆண்கள் மிகச் சாதாரணமாக எடுத்து கொள்வதையும் அதைக் கடந்து சென்று விடுவதையும் தவறே இல்லையெனப்பார்ப்பதும்தான் எனக்கு வலிக்கிறது. அவர் பார்ப்பனப் பெண்ணாகவே இருக்கட்டும் அதற்காக தமிழ்ப்போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர்களை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவது சரியாகுமா ?

படித்தவர்கள் பண்பாளர்கள் நிரம்பிய இணைய, டிவிட்டர், பதிவுலகில் பல அன்பர்களின், அறிவாளர்களின், முற்போக்குவாதிகளின் வன்மத்தையும், வக்கிரத்தையும் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. மலையாளியோ, சிங்களனோ தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தால் ஒருநிலையும் , தமிழன் செய்தால் ஒரு நிலையும் எடுக்கிறார்கள்.

பெண்கள் மட்டுமல்லா பிற அரசியல் தலைவர்களையும் கண்டமேனிக்கு காய்ச்சுகிறார்கள். சில வருடங்களாக வலைப்பூக்களைப் படித்ததிலிருந்தே இது தெரிகிறது.

சரி சின்மயிக்குப் பதிலாக ஜெயலலிதா குறித்த ட்வீட்டுகள் வேறொரு உளவுத்துறையின் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார் ?

களத்தில் போராடும் உதயகுமார் போன்ற தலைவர்கள் அபத்தமாக வாய் விடுவதில்லை. ஆனால் இணையத்தில் அனைவரும் மனம் போன போக்கில் போட்டுத் தாக்குகிறோம் இல்லையா

3 வருடங்கள் முன்பு ஈழப்போர் நடந்த போதுதான் பதிவுலக அறிமுகத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒரு பதிவர் எல்லாளன் என்று பெயர், புலிகளின் செய்திகள் அருமையான மொழிநடையில் உடனுக்குடன் கிடைப்பதால் அதில் படிப்பது வழக்கம். ஜெயலலிதா புலிகளின் மீது வெறுப்பான அறிக்கைகள் வெளியிட்ட காலத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படம் ஒன்று மினிட்ரௌசருடன் இருப்பது போல் வெளியிட்டு, சீலை தூக்கிய சிங்காரி என்பதை அதன் தலைப்பாக வத்திருந்தார்.

கருணாநிதி ஃபேஸ்புக்கில் வந்த போது வசவுகளாகப் போட்டு ஒரே நாளில் அவரை வெளியேற்றினார்கள்.

கனிமொழி ராசாவைப் பற்றி வந்த செய்திகள்

மன்மோகன் சோனியாவை இணைத்து வெளிவரும் கேலிப்படங்கள்

நடிகர் விஜய் குறித்து வருகின்றவை

இதெல்லாம் இணையத் தமிழர்கள் செய்கின்றவைதான். இதுதான் எரிச்சலாக இருக்கிறது. மேலே இருக்கின்ற ஒரு செயலை நாகரீகமாக எதிர்ப்பவர்கள், இன்னொன்றை உறுத்தலின்றிச் செய்கின்றனர்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை வைத்து அரட்டைக் கும்மியடிக்கின்றனர். மற்றவர்களை சொம்படிப்பவன், இணையப் பொரச்சி, அல்லக்கை பட்டங்களை அள்ளி  வீசுகின்றனர்.

இப்படி இவர்கள் செய்தது சரியென்றால் கவிஞர் மீனா கந்தசாமி மாட்டுக்கறித் திருவிழாவை ஆதரித்ததாக சந்தித்த வசைகளும் சரிதான். அவர் தலித் அல்லது தமிழர் என்பதால் அதை மட்டும் எதிர்க்கக் கூடாது சரிதானே. ஏனென்றால் இந்துத்துவாக்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அவரை ஒருவன் Bitch I want to fuck you  என்று ட்வீட்டியிருந்தான். 

நன்றி சவுக்கு
 நீங்கள் என்ன மகத்தான கொள்கைக்காகப் போராடினாலும் பெண்களை பாலியல் ரீதியில் தாக்கும் போது அதன் வீரியம் போய்விடுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணமே தெரிகிறது.

பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள் எனபதே இப்பதிவின் நோக்கம்.

இதைப் போன்ற சிறிய நிகழ்வுகளைப் பெரியதாக்கி இணைய சுதந்திர வெளிக்குப் பூட்டுப் போடவும், கருத்துரிமைக்கு ஆப்பு வைக்கவுமே வழிவகுக்கும். ஏற்கெனவே பல தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனவாம்.

இது போன்ற தனிநபர் தாக்குதல் மட்டுமன்றி "கண்ணியமான" எதிர்க்கருத்தாளர்களும் அரசால் நசுக்கப்படும் போலத் தெரிகிறது.

2 வாரங்களுக்கு முன்புதான் இதே மாதிரி ஒன்றை எழுதினேன்.

http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post_4.html
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை இல்லை இல்லவே இல்லை !!


எங்கேயாவது யாராவது திராவிட இயக்கத்தினர் அல்லது தமிழர்கள், தமிழகத் தலைவர்கள் தமிழரை ஹிந்தி கற்பதிலிருந்து தடுத்து விட்டனர் என்று சொன்னால் சுர்ரென்று கொதிப்பு தலைக்கு ஏறிவிடுகிறது. இதே போல் வெறியேற்றும் இன்னொன்று இங்கிருந்து இலங்கைக்குப் போய் நாடு கேட்டால் அவனெப்படிக் கொடுப்பான் ? அவர்கள் தெரியாமல் சொன்னாலும் சரி தெரிந்து சொன்னாலும் சரி. எல்லா இடத்திலும் போய் சொல்லிக் கொண்டிருக்கவா முடியும். என்றாலும் சிலரிடம் புரிந்து கொள்ளும் தன்மையுடையவரிடம் மட்டும், தோன்றுகிறவரிடம் மட்டும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், இருக்கிறோம். இருந்தாலும் பெரிய ஞானமுடையவரெல்லாம் இதை சொல்வதுதான் செரிக்க முடியாததாக இருக்கிறது.

அது என்ன எழவோ தெரியவில்லை. ஹிந்தி வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்கிறார்கள்.  இந்த ஒரு சொல்லில் வரலாற்றைத் திரிப்பது என்று சொல்வது போல இந்த ஒரு வரியில் அத்தனை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி, காக்கையைக் குயிலாக்கி, குயிலை கழுகாக்கி விடுகிறார்கள். 


காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

பாரதியார் தமிழை உயர்த்திப் பாடினார்.

இது போன்ற ஒரு வரியில் வரலாற்றைத் தவறாகப் பரப்புவது போலத்தான் ஹிந்தி தேசிய மொழி என்ற பொய் திரும்பத் திரும்பப் பரப்படுகிறது.

தேசிய மொழியாகிய ஹிந்தியைத் தமிழர்கள் கற்பதை அரசியல் வாதிகளும் மொழி வெறியர்களும் தடுத்து விட்டார்கள் அதனால்தான் தமிழர்கள் முன்னேற முடியவில்லை அல்லது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.

நான் அங்கே போனேன், ஹிந்தி தெரியாமல் தொல்லையாக இருந்தது, இன்னார் கேட்டார் அவமானமாக இருந்தது. அரசியல்வாதிகளை நினைத்து ஆத்திரமாக வந்தது.

இது மாதிரியான பேச்சுக்களை அவ்வப்போது அடிக்கடி கேட்கவும் வேண்டியிருக்கிறது. இதிலெது உண்மை ? இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது. ஹிந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஹிந்தி அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் காரணமாகவும் ஹிந்தி மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரும்பான்மை மொழியாக இருப்பதன் காரணமாகவும்தான். இதில் நடுவண் அரசின் பலதுறைகளில் தனிப்பட்ட முறையில் ஹிந்தி வளர்ப்பு அல்லது திணிப்பதற்கெ அரசே முகவராக செயல்படுகிறது.

மொழி வெறி என்னவென்று பார்ப்போம். தமிழ் வெறியர்கள் ஹிந்தியை கற்பதைத் தடுத்து விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. எது மொழி வெறி. இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகள் 1950 களுக்கு முன்பு இல்லை. அவர்கள் வசதிக்கேற்ப சிலவற்றை பிரித்துக் கொடுத்தும், சேர்த்து விட்டும் சென்றனர். இந்தியாவில் பல தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதும், ஆப்ரிக்க கண்டத்தில் ஆடை கூட அணியாத மனிதர்கள், ஏகே 47 துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மற்ற இனங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு கண்டங்களிலும் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் 500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக இருந்தது. தொடர்ந்து படையெடுப்புக்கள், இறுதியாக முகலாயர், பின்பு ஆங்கிலேயர் ஆகியோர் மொத்தமாக இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஒன்றாக ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

பின்பு 1947 - இல் பிரிட்டிஸ் வெளியேற இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். இந்தத் தலைமையின் கீழ் பல தேசிய இனங்கள் அடிமையாயின. 2 டஜன்க்கும் மேலான மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக ஆங்கிலமும் இருந்தது. ஆங்கில அறிவின் காரணமாகத்தான் பல நாட்டு தத்துவங்களும் சித்தாந்தங்களும் அறிமுகமாயின. ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் பல மொழிகள் பேசியவர்கள் நிறைந்த நாட்டை ஒரு தேசியத்தில் அடைக்க முயன்றார்கள். மற்ற சிறுபான்மை மொழிகளின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள். அன்றைக்கு ஆங்கிலம் இருக்கும் நிலைக்கு பதிலாக ஹிந்தியைத் திணிக்க எத்தனித்தார்கள்.

நாட்டுக்கு "சுதந்திரம்" வாங்கித் தந்த காங்கிரஸில் இருந்தவர்கள் பெரும்பான்மையான தலைவர்கள் ஹிந்தியை தேசிய மொழியாகக் கொண்டவர்கள். ஹிந்தி வெறியர்கள். ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களுக்கு தேசிய மொழியின் பெயரால் ஹிந்தியைத் திணிக்க முயன்றனர். அதை மற்றவர்கள் எதிர்த்தார்கள். தமிழர்கள் அதிகமாக கடுமையாக எதிர்த்தார்கள். இது போன்ற பிரச்சனைதான் கிழக்கு பாகிஸ்தானில் உருதுவைத் திணித்த போது வங்காளிகள் அதை எதிர்த்தனர், வங்கதேசம் உருவானது.

ஹிந்தித் திணிப்பைத்தான் ஹிந்தி எதிர்ப்பு என்றும் ஹிந்தி வெறுப்பு என்றும் திரித்து பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் மீது தம் மொழியைத் திணித்து அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவன் மொழி வெறியனா அல்லது தம் மொழிக்காக போராடுகிறவன் மொழிவெறியனா ? ஹிந்தி வெறியர்கள் என்று யாருமே சொல்லக் காணோம். ஹிந்தி வெறியர்கள்தான் போராட்டத்தை அடக்க மத்திய ரிசர்வ் படைய அனுப்பினார்கள். போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள். ஹிந்தி வெறியன் என்று யாருமில்லையாம். ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி வெறுப்பாளன் பட்டம். சரி இப்படி வைத்துக் கொள்வோம், ஒரு வேளை காங்கிரஸில் தமிழர்கள் அல்லது தமிழ் வெறியர்கள் அதிகமாக இருந்து, தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருந்தால் அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் என்ன நிலை எடுப்பார்களோ அது போலத்தான் இதுவும்

ஹிந்தி கற்றுக் கொள்வதை யாரும் எதிர்க்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. அந்தக் காலத்தில் வட இந்தியர் ஆதிக்கமிருந்ததன் காரணமாக பல அரசுத் தொழில் நிறுவனங்கள் வட இந்தியப் பகுதிகளில் தொடங்கப்பட்டன. அங்கே செல்ல வேண்டிய தேவை தென்னிந்தியர்களுக்கு இருந்தது. அதை வைத்து அக்காலத்தில் ஹிந்தி தெரியாதவர்களை குற்ற உணர்வுக்குள்ளாக்கினர். இந்த உலக மயக் காலத்தில் வட இந்தியர்கள் தென்னிந்தியா நோக்கி பிழைக்க வரும் நிலை இருக்கிறது. இன்னும் வந்து பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது ஒன்று அறியாமை இல்லையென்றால் அயோக்கியத்தனம்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு தெரியவில்லை என்று அந்தந்த மாநிலத்திற்குச் செல்லும்போது எவ்வளவு வருத்தப்படுவோமோ அவ்வளவு வருத்தப்பட்டால் போதுமானது. தேசிய மொழியைக் கற்கவில்லை என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மாண்டரின், உருது அரபி ஆகியவை தெரியவில்லை என்றும் வருத்தப்படலாம் தவறில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் ரொம்பவும் பீற்றிக் கொள்ளத் தேவையில்லை. வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே படும் அவலங்களைக் கண்ட பிறகும் ஹிந்தி தேசிய மொழியைக் கற்காமல் ஏமாந்து விட்டோம் என்று கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். 

படம் - ஃபேஸ்புக்
இன்னொன்று, ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை என்பது வரலாறு. தமிழர்களைப் போலவே மொழி உணர்வுடையவர்கள் வங்காளிகளும் கன்னடர்களும். தற்போது ஸ்ரீதேவி நடித்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படம் வெளியாகவுள்ளது. அதில் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆங்கிலம் தெரியாமல், அமெரிக்காவில் எப்படி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ஹிந்தி தெரியாமல் அமெரிக்கர்கள் இந்தியாவில் எப்படி சமாளிப்பார்களோ அது போலத்தான் என்கிற பாணியில் பதிலளிப்பது போலவும் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் காட்டியிருக்கிறார்கள். ஹிந்தி பேசும் ரசிகர்களிடம் கைத்தட்டலை எதிர்ப்பார்த்தோ அல்லது தமது அறிவின் அடிப்படையிலோ இக்காட்சியை வசனத்தை இயக்குனர் வைத்திருக்கலாம். இது ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களை இழிவு செய்வதாகக் கூறியும், அவ்வசனத்தை நீக்கக் கூறியும், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியன்று எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு கையெழுத்துக்கள் மூலமாக எதிர்ப்புக்குரல் Change - தளத்தில் தொடங்கப்பட்டது.

இதைத் தொடங்கியவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் இல்லை. கன்னடர்கள். அதனால் தமிழர்களைப் போல மொழிவெறியர்கள், திராவிட இயக்கம் தடுத்து விட்டது என்ற வாதமெல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

அந்த இணைப்புக்கள் :- 


இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை என்பதற்கான  ஆவணம்
Download As PDF
Bookmark and Share

Post Comment