இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்திய விடுதலை நாளில் - இந்தியிடமிருந்து விடுதலை வேண்டி - ‪#‎StopHindiImposition‬

நேற்று இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா முழுவதும், இந்தியர் வாழும் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. அதே நேரம் ட்விட்டரில்  ஹிந்தித் திணிப்புக்கு எதிரான கருத்துக்களைத் தாங்கிய சுட்டுரைகள்/கீச்சுகள்/ட்விட்டுகள் ‪#‎StopHindiImposition‬ என்ற ஹாஷ்டாக் மூலமாக தொடர்ந்து பகிரப்பட்டு, அது ட்விட்டர் ட்ரென்டில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் "பரபரப்பான" தலைப்பாக வைக்கப்பட்டது. பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள், வெளியிடுவதற்கென்றே சேமித்து வைக்கப்பட்டு பின்பு பகிரப்பட்டன. சிலர்  சொந்தக் கருத்துக்களையும் பகிர்ந்தனர்.


இதன் மூலம் மக்கள் தொடர்பு ஊடகங்களில் செய்தியாகவும் எதிர்பார்த்தபடி வந்தது. இதன் மூலம் ஹிந்தி தேசிய மொழி, இந்தியா முழுவதும் ஹிந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டும், இதன் மூலம்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கும், கலாச்சாரம் காக்கப்படும் என்றெல்லாம் உளறி வரும் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவிலிகள் முதல் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவாளிகள் வரை எல்லாரிடமும் சிறு சலனத்தை ஏற்படுத்த முடிந்தது.


இன்னொரு முக்கியமான சேதி, இந்த இத்துப்போன தமிழன்தான் இந்தி எதிர்ப்பு பேசி நாசமானான், மற்றவர்கள் (தமிழல்லாத மற்ற தென்னிந்திய மாநிலங்கள்) எல்லாம் ஹிந்தி படித்து வளமாக வாழ்கிறார்கள் என்றெண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு - இந்தி ட்விட்டரில் அதிகமாக பங்கெடுத்தவர்கள் கன்னட ட்விட்டர்கள். இவர்கள்தான்  ஹிந்தித் திணிப்பால் அதிகமான பாதிப்படைந்த மாநிலக்காரர்கள். பெரும்பாலும் படித்த இளைஞர்கள்தான் இந்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் ட்விட்டியவர்கள்.

Promote Linguistic Equality: Hindi is Not the National language of India - மொழிச் சமத்துவத்தை பரப்பு - ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அன்று என்பதே இந்த ஃபேஸ்புக் குழுவின் பெயர். இதில் இந்தியா முழுவதுமிருந்தும் சில ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்கள் இணைந்துள்ளனர். இதில்தான் ஹிந்தித் திணிப்பு குறித்தும், "இந்தி"ய அரசின் நடவடிக்கைகள், ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்தும் விமரசனங்களும், விவாதங்களும் நடக்கின்றனர். பிராந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.  இது ஹிந்தி மொழியின் மீது வெறுப்பை வளர்ப்பதற்காகவோ, ஹிந்தி பேசும் மக்களின் மீதான இனவெறியை வளர்ப்பதற்காகவோ இல்லை. தாய்மொழியைக் காக்கும் தற்சார்பு, தற்காப்பு உணர்வின் காரணமாகவே ஹிந்தி மொழி பல்வேறு துறைகளில் பல்வேறு வகைகளில் திணிப்பதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அனைத்து மொழிகளையும் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். ஹிந்தி பேசுவோர்க்கு மட்டும் இருக்கும் சிறப்புரிமை ஆகியவை டிவிட்டரில் வந்த கருத்துக்களில் முதன்மையாக இருந்தன.

பஞ்சாபியர்கள் எப்படி ஹிந்தி பேசியதால் மொழியினை இழப்பார்கள் என்று விளக்கும் படம். நாமே சீக்கியர்களை ஹிந்தி பேசுவோர் என்றுதானே நினைக்கிறோம்.



ஊடகங்களில் இது குறித்து வந்த செய்திகள்

தி ஹிந்து வில் வந்த செய்தி

ஐபிஎன்லைவ் - இல் வந்த செய்தி

பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள் அனைத்தும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் (கன்னடம், தெலுங்கு, மராத்தி) வெளியிட்டவை அடங்கும். 

(படங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்-லிருந்து எடுக்கப்பட்டவை)
Download As PDF
Bookmark and Share

Post Comment

சில உண்மைகள்

ஒரு இணையதளத்தை எதேச்சையாகக் காண நேரிட்டது. அதில் கிடைத்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பொய்யை பொய்யென்று உண்மையுரைப்பது நமது கடமையல்லவா ?

ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்று எல்லோரும் பழி வாங்கினால் உலகில் எல்லோரும் குருடாகிவிடுவார்கள் என்று காந்தி சொன்னதாக அங்கங்கே படிக்க நேர்கிறோம் இல்லையா ! அது காந்தி சொன்னதாக எந்தக் குறிப்பிலும் இல்லை. காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி பேசிய வசனம்தானாம் நாம் காந்தி சொன்னதாக நம்பிக் கொண்டிருப்பது.

பல நாட்களாக இது இணையத்தில் உலா வந்து கொன்டிருக்கின்ற புகைப்படம். இதில் இருப்பது காந்திதான் என்று நானும் நம்பிக் கொண்டிருந்தேன். இதில் நடனமாடுகிறவர் (காந்தி வேடமணிந்த) ஒரு ஆஸ்திரேலிய நடிகராம். சற்று உற்று நோக்கினால் கூட விளங்கி விடும். அந்நபரின் கையைப் பாருங்கள். வலுவான உடல்வாகுடையவர் என்பது புரியும். காந்தி மிகவும் ஒடிசலான உடலுடையவர். காந்தியின் கை படத்திலிருப்பவரின் கையைப் போல் இருக்காது.



காந்தியை விமர்சிப்பவர்கள் அதிகமாக இப்படத்தையும், நேரு எட்வினாவுக்கு சிகரெட் பற்ற வைப்பதையும் சேர்த்துப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் பெண்ணுடன் நடனமாடுவதையும், சிகரெட் பற்ற வைப்பதையும் கொண்டு விமர்சனம் செய்வதும், கேலி செய்து இன்பம் அடைவதும் அவரவர் தரத்தைப் பொறுத்தது.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் ஹாக்கியும் தேசிய விளையாட்டு இல்லையாம். ஆனால் ஹாக்கியை வளர்க்க அதை தேசிய விளையாட்டு ஆக்கினாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை. கிரிக்கெட்டை விடவும் பல மடங்கு சிறந்த விளையாட்டு ஹாக்கி.

Download As PDF
Bookmark and Share

Post Comment

வாட்ஸ்-ஆப் அந்தரங்கக் காணொளிகள் - பகிர்தலும் குற்றமே !

இந்த வாட்ஸ் அப் என்பதை கட்செவிஅஞ்சல் என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கட்செவி அஞ்சலோ மனிதனைப் படுத்தி எடுக்கிறது. குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் செலுத்தி காய்ந்து போயிருந்த நமக்கு, திறன் பேசியுடன் வந்த சீதனமே இந்தக் கட்செவி அஞ்சல். இதில் நாம் குறுஞ்செய்திகள் மட்டுமன்றி, நெடுஞ்செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பவும் இயலும். இது இணைய இணைப்பின் வழி இலவசமாகக் கிடைத்ததால் குறுஞ்செய்தி சேவை நமக்குத் 99 % தேவையில்லாமலே போய்விட்டது. இது ஒரு மக்கள் ஊடகமாக அற்புதமாகப் பயன்படுத்துகின்றனர். சின்னச் சின்ன சாதனைகள், அட போட வைக்கும் கவனிப்பாரற்ற மனிதர்களின் சாகசங்கள் என காணொளிகள் களைகட்டுகின்றன. ஊடகங்களில் வராத செய்திகள் கூட இதில் மிகவேகமாகச் சென்று சேர்கிறது. ஆனால் என்ன ஒன்று திறன்பேசி+வாட்ஸ் அப் + இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

நம் மனிதர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பார்க்கிறோமல்லவா ?  இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக ஆளாளுக்கு ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு கண்டதையும் பகிர்கின்றனர். இதில் நன்மை இல்லாமலும் இல்லை. ஆனால் ஒரு செய்தியின் உண்மைத்தன்மையைப்பற்றி எந்த வித முன்னெச்சரிக்கையும் பொறுப்புமின்றி வெளியிடுகின்றனர். சரி இலவசமாகக் கிடைப்பதால் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமல்லவா ? அதை யார் கேட்கப்போகின்றார்  ? முன்பு ஃபேஸ்புக் பரபரப்பாக இருந்த போது ஒரு செய்தி பொய் எனில் அதை ஒருவர் சொன்னால் எல்லார்க்கும் தெரியும் இன்றோ மூடிய கதவுக்குள் இருக்கும் கட்செவி அஞ்சலில்(Whatsapp) கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைகின்றனர். நான் இதில் நம் மக்கள் எவ்விதம் சீரழிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன்.

இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் பயங்கரவாதிகளின் காணொளிகள் கூட மிக எளிதாக நம்மை வந்தடைகிறது. தலையை வெட்டுவது, அடித்துத் துன்புறுத்துவது, கையை வெட்டுவது, சுட்டுக் கொல்வது என்ற மனித இனத்தின் இழிவை அப்படியே காட்சியாக்கிக் குழந்தைகள் வரை அதை சாதரணமாகக் கொண்டு எவ்வித உணர்ச்சியுமின்றி வந்து நம்மிடம் காட்டுகின்றனர். அவைகளைப் பார்த்தால் நமக்கு ஈரல் குலை நடுங்குகிறது. ஏனெனில் குழந்தைகள்தான் திறன்பேசியை அதிகம் வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலுள்ள டெம்பிள்ரன், சப்வேசர்ஃப் வகை விளையாட்டுக்களில்தான் அவர்கள் திளைத்துக் கிடக்கின்றனர்.

அடுத்து நான் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிட விரும்புவது ஆண்களை, குறிப்பாக இளைஞர்களை. இவர்கள் எவ்வகைக் காணொளிகளை எவ்விதமான குற்ற உணர்ச்சியோ அறவுணர்ச்சியோ இன்றிப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று நான் சொல்லாமலேயே புரிந்திருக்கும். பெண்களின் குளியளறையிலும், கழிவறையிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் கணக்கற்ற வகையில் பரவி வருகின்றன. இதை எல்லா வயது ஆண்களும் ரசித்தும், கேட்டு வாங்கியும், பரப்பியும் வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் பெண்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 7 ஆண்டு சிறை: போலீஸ் எச்சரிக்கை என்று அறிவிப்பு வந்தாலும் அதனால் இது வரை தண்டிக்கப் பட்டவர் யாருமில்லை. ஆனால் பரவும் காணொளிகளுக்கு மட்டும் குறைச்சலில்லை.  இது எப்படி நிற்கும். பரப்புகிறவர் திருந்தினாலொழிய நிற்கப் போவதில்லை. அந்தப் பெண்களின் மனநிலை குறித்து கொஞ்சமாவது மனசாட்சியைக் கொண்டு சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா ?

ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொன்று, தூக்கு தண்டனைக்காகக் காத்திருப்பவனே அந்தப் பெண் மீதுதான் குற்றம் சாட்டுகிறான்(டெல்லி பாலியல் குற்றவாளி முகேஷ் சிங்). ஆக பாலியல் வன்முறை செய்தவனே, கொன்றவனே அதைக் குற்றமாகக் கருதாமல், அப்பெண்ணையே குற்றவாளி ஆக்கும் சமூகத்தில் இது போன்ற நிர்வாணப் படங்களை பரப்பி இன்பம் காண்பவர்கள் ஏற்றுக் கொண்டு நிறுத்தவா போகிறார்கள். ஊர் தவறாமல் சாராயக்கடை இருக்கும்போது கோக் குடிக்காதே உடலுக்குத் தீங்கு என்றால் எள்ளி நகையாடத்தானே செய்வார்கள்.

அவர்கள் ஏன் தங்களைத்தானே குளியலறையில் வைத்து தற்படம் () கைப்படம் (selfie) எடுத்துக் கொள்ள வேண்டும் ? அவர்களாகத்தான் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பியிருப்பார்கள். எனவே இது அவர்களின் தவறு.

இவர்கள் கள்ளக்காதல் செய்யும் எடுத்ததைப் பரப்பினால் என்ன வந்துவிடும், அவர்களே தவறு செய்தவர்கள்தானே அவர்கள் மீது என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது.

இது எல்லார்க்குமே தெரியும். எவனோ ஒருவன் எனக்கு அனுப்பினான் நானும் அனுப்புகிறேன். மற்றதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. நான் அனுப்பாததால் இது பரவாமல் இருக்கப் போகிறதா ?

அவர்கள் ஏன் படுக்கையறையில் இருக்கும் போது உடலுறவு கொள்வதைப் பதிவு செய்ய வேண்டும் இப்போது வருந்த வேண்டும்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் அனுப்புவேன் உனக்கென்ன ?

இப்படியெல்லாம் பதில் வரும். இவையனைத்தையும் ஒரே கேள்வியில் மடக்கி விடலாம். அந்தக் குறிப்பிட்ட வீடியோவிலோ, ஆடியோவிலோ இருக்கும் பெண் உங்களது வீட்டுப் பெண்ணாகவோ, உங்களுக்கு வேண்டிய பெண்ணாகவோ இருந்து விட்டால் என்ன செய்வார்கள். "என்ன" செய்ய வேண்டுமோ அதைத்தானே செய்வார்கள். நம் வீட்டுப் பெண்கள் என்றால் ஒரு நியாயம் தெரியாத பெண் என்றால் ஒரு நியாயமா ? என்றுதான் கேட்கிறேன். தன் வீட்டுப் பெண் பத்தினியாக இருக்க வேண்டும். அடுத்த வீட்டுப் பெண் பரத்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணும் ஆண்கள்தான் திருந்த வேண்டும். இது தவறு என்று ஒவ்வொருவரும் உணரவேண்டும். மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இது நிச்சயம் புரியும்.

சரி அவர்கள் வாதத்தின் படி வைத்துக் கொண்டால், அந்தப் பெண்ணோ ஆணோ குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்குமல்லவா ? அவர்கள் எத்தகைய சங்கடத்தை எதிர் கொள்வார்கள் என்றாவது யோசிக்க வேண்டாமா ? நமது குடும்ப உறுப்பினர் செய்யும் தவறுக்கு நாம் பொறுப்பாக முடியாது, அவரைக் கட்டுப் படுத்தவும் முடியாது. ஆனால் அந்தத் தவறுக்கு நாமும் சேர்ந்தல்லவா பாதிக்கப் படுவோம் ?

இதற்கு முன்பு இணைய வெளியெங்கும் பல்வேறு தளங்களில் இது போன்ற வீடியோக்கள் வெளிவந்தன. சைபர் க்ரைமும் இதற்கு ஒரு தடை போட முடியாமல் திணறின. இன்றும் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இங்கிருந்து எடுக்கப்படும் வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் அயோக்கிய நாதாரிகள் மூலமாக இணையத்தில் ஏற்றப்பட்டு வெளியாகின. இதனால் அவர்களைப் பிடிப்பது இயலாத செயலானது. இன்றோ வாட்ஸ் - அப் மூலமாக இது பல மடங்கு அதிகமாகி விட்டது.

இதை பெண்களின் தவறாக/திமிராக சித்தரிப்பதே தவறானது. ஒருவருக்குத் தெரியாமலே அவரது மடிக்கணினி கேமராவின் மூலமாகவே இதை எடுக்கவும் முடியும். யாருடைய வீட்டின் குளியலறையிலும், படுக்கையறையிலும் ஸ்பை கேமரா வைத்து படம் பிடிக்க முடியும். வீட்டு வேலை செய்பவர், வயரிங் வேலை, ப்ளம்பர், கேபிள் ஆப்ரேட்டர் என்றெல்லாம் சொல்லி வீட்டுக்குள் நுழையும் தெருப்பொறுக்கிப் பன்னாடைகள் இந்தக் கேமராவை ஒளித்து வைத்து எடுக்கின்றனர். எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் வேண்டியவற்றை கறந்து விட்டுப் பின்னர் வீடியோக்களையும் இணையத்தில் ஏற்றி விடுகின்றனர்.

தன்னையே நிர்வாணமாகவோ அரை நிர்வாணமாகவோ படம் எடுத்துக் கொள்பவர்கள் எல்லாரிடமும் அனுப்புவதற்காக எடுப்பதில்லை. திரைப்படம், விளம்பரங்களில் வரும் பெண்களைப் போலவே தங்களை ஒப்பனை, பாவனை செய்து கொள்பவர்கள் தம்மீது கொண்ட குறுகுறுப்பு உணர்வினால் புகைப்படம் எடுப்பர், (அவரவர் படுக்கையறையில், என்னென்ன செய்கிறார்கள் என்று அவரவர்க்குத் தெரியுமல்லவா இதில் என்ன வேடிக்கை இருக்கிறது)

இன்னும் சிலர் விளையாட்டுத்தனமாக ஆபாசமாகப் படம் பிடித்தது எனப் பல வகை வீடியோக்கள் உலாவருகின்றன. பர்தாவுடன் இருக்கும் பெண்கள் கூட இந்த வீடியோக்களில் சிக்கியுள்ளனர்.

உங்கள் வீட்டின் அடுத்த தெருவில் அப்படி ஒரு பெண் இருப்பதே உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவள் வெளியேகூட வந்திருக்க மாட்டாள். ஆனால் அவளுடைய பெயரும் அலைபேசி எண்ணும் அடுத்த ஊரின் பொதுக்கழிவறைச் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் "மேட்டர்" என்ற அடைமொழியுடன். அவள் நண்பனுடன் ஏதாவது பிரச்சனை வந்து விட்டால், அவனும் ஒரு மாதிரியான ஆளாக இருந்தும் விட்டால் மேலே நான் சொன்னபடிதான் நடக்கும்.

அலைபேசியில் பெண்களை வேண்டுமென்றே உடலுறவு, கைமைதுனம் குறித்துப் பேசவைத்து அதைப் பதிவு செய்து எல்லோர்க்கும் பரப்பி அதை ஒரு வைரல்-ஆக மாற்றி பரபரப்பூட்டி மகிழ்கின்றனர். இவர்களை நம்பி தமது அந்தரங்கம், உணர்வுகள், படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களை ஏமாற்றி அவர்கள் மானத்தை வாங்குகின்றனர். ஆனால் பெண்கள்தான் காசுக்காக ஏமாற்றுகிறார்கள் என்று  நடிகர்களும் வசனம் பேசுகிறார்கள். எல்லோரும் அதை வரவேற்று சிரிக்கிறார்கள்.

அது போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்தவர்கள் அதை அழித்து விட்டாலும், அந்த அலைபேசியோ, மெமரி கார்டோ இதற்கென்றே அலையும் நபர்களின் கையில் கிடைத்தால் ரெட்ரைவல், ரிகவரி மென்பொருட்களைப் பயன்படுத்தி, அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் மீட்டு எடுத்து அவைகளைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சராசரிப் பெண்களின் நிலையே இப்படியென்றால் நடிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மாதம் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோக்கள் வருகின்றன. அதை ஊடகங்களே தலைப்பிட்டுப் பரப்பி அவர்களின் மானத்தை வாங்குகின்றன. நடிகை ஆபாசமாக நடிக்கிறாள் என்று அவளுடைய படம், வீடியோ க்ளிப்பிங்க்ஸ் களைப் பார்த்துப்,  பகிர்ந்து பழகிய ஆட்கள், நடிகையாக இல்லாத சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றிப் பரப்பியும், பேசியும் மகிழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு நிர்வாண உடல் மட்டும் போதுமாக இருக்கிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன என்று இருக்கின்றனர். ஏதாவது ஒரு நாள் அவரவர் வீட்டுப் பெண்கள் இதில் மாட்டினால் தெரியும். ஆனால் அப்போது நாம் வருந்துவதைப் போல மற்றவர்கள் வருந்தாமல் வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது பகிராதே எனது குடும்பத்தைப் பாதிக்கிறது என்று சொல்லும் தகுதியையே இழந்திருப்பார்கள். 

இதனால் கொலை, தற்கொலைகள், பணம் பறிப்புகள் எனப் பல நிகழ்வுகளை நாம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் இது போன்ற வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வந்தால் பரப்புவது தவறு என்றோ நாமும் அச்செயலுக்குத் துணை புரிகிறோம் என்றோ யாரும் உணர்வதில்லை. என்னுடைய வேண்டுகோளெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு வரும் எவ்விதமான செய்தியோ, வீடியோ, ஆடியோ- வாக இருந்த போதிலும் அதை மற்றவருக்குப் பகிராதீர்கள். அதை உங்களுக்கு அனுப்பும் நபருக்கும் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். நம்மால் பாலியல் வன்முறை நடப்பதைத் தடுக்க முடியாது, ஆனால் நாம் பாலியல் வன்முறை நடபெறுவதற்குத் துணை புரியாமல் இருக்க முடியும். அதில் பங்கெடுக்காமல் இருக்க முடியும். இது அவரவர் அறவுணர்ச்சி சார்ந்தது. அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று சாக்கு சொல்லிவிட்டு நீங்களும் தவறு செய்ய முடியாது. சாராயக்கடை எல்லா ஊரிலும் இருக்கிறது என்பதற்காக எல்லாரும் குடிப்பதில்லையே, வைராக்கியத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள். ஊரெல்லாம் கறிக்கடை இருக்கிறது என்பதற்காக சைவ உணவுக்காரர்கள் போய் வாங்கிவிடுகிறார்களா ?


Download As PDF
Bookmark and Share

Post Comment

அமெரிக்க முகமூடி அம்பலமானது

அமெரிக்க எப்பேர்ப்பெற்ற குடிநாயக நாடு என்று அனைவருக்கும் தெரியும். ஜனநாயகமா இல்லை பணநாயகமா என்று தற்போது தெளிவாக அம்பலமாகி வருகிறது, இந்தியாவிலும் சிலர் இது போன்ற இணையத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்குக்காக கைது செய்யப்பட்டனர், ஆனால் அது அரசு என்றளவில் இல்லாமல் செல்வாக்குடைய அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தித்தான் கைது செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவிலோ அரசே முன்னின்று இந்த இழிசெயலை நடத்தியுள்ளது. தனிநபர் உரிமைகளில் சாதனை படைத்த நாடு, யாரும் விருப்பம் போலச் செயல்பட எவ்விதத் தடையும் செய்யாத நாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அப்படியான நம்பிக்கை மூட நம்பிக்கையே என்று நிரூபணமாகியுள்ளது.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல அது ஒரு வணிகம் ( USA is not a country it's a business ) என்று ஓர் சொல் உண்டு. அதுதான் எவ்வளவு உண்மை. அமெரிக்கா ஒரு மக்கள் அதிகாரமற்ற நாடு என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. அதற்குக் காரணமானவர் எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க உளவுத்துறை ஊழியர். தனது மனசாட்சி உறுத்தலின் காரணமாக இவர் வெளியிட்ட தகவல் அமெரிக்கர்களின் கண்களைத் திறந்துள்ளது.

அமெரிக்காவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக இராது. ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் அல்லது அமெரிக்க குடிமக்களல்லாத அமெரிக்க ஆதரவாளர்களுக்குத்தான் இது அதிர்ச்சியாக இருந்திருக்கும். அமெரிக்காவை எதிர்ப்பது என்றால் அமெரிக்காவின் 30 கோடிப்பேரை வெறுப்பது என்று பொருள் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம்.
எட்வர்ட் ஸ்னோடன்
அமெரிக்கா குறித்த எளிய உண்மை. அமெரிக்கா என்பது என்ன ? அம்மண்ணின் மைந்தர்களை ஐரோப்பிய வந்தேறிகள் இனக்கொலை செய்து ஆக்ரமித்துக் கொண்ட நிலம். அங்கே ஆப்ரிக்க அடிமைகளின் குருதியில்தான் வளர்ந்து நிற்கிறது வானுயர் கட்டிடங்கள். இதல்லாமல் இரண்டாம் உலகப்போர் தொடங்கி 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவ ஆக்ரமிப்பை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யா பால்டிக் நாடுகளை அச்சுறுத்த நேட்டோ என்ற ராணுவ அமைப்பையும் வைத்திருக்கிறது. 50 உலகின் பல்வேறு நாடுகளில் தனது ராணுவத் தளத்தையும் நிறுவியுள்ளது.  தனது உளவு அமைப்பின் மூலமாக பல நாடுகளின் அரசுகளைக் கவிழ்க்கவும் தனது கைப்பாவை அரசுகளைக் காக்கவும் தனது ராணுவ, தொழில்நுட்ப வலிமைகளைக் கையாள்கிறது.

ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகளை உருவாக்கவும், அல்லது ஒரு நாட்டையே பயங்கரவாதம் என்று சொல்லி ஆக்ரமிக்கவும் செய்யும். தற்போது ஒரு எடுத்துக் காட்டு தான் ஆக்ரமித்துள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லும் அமெரிக்கா உள்நாட்டுப்போர் நடக்கும் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் இரண்டு நாடுகளை ராணுவ ரீதியாக ஆக்ரமித்து நிற்கிறது. 

பிராட்லி மானிங்
இப்பேர்ப்பட்ட கொடிய வெறிபிடித்த சர்வாதிகார நாட்டை ஏன் பலரும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகம் வேறெந்த நாட்டிலும் இல்லை. இது நிச்சயம் உண்மைதான். பல விடயங்களில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத உரிமைகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால் அதுவும் பொய்யென நிருபித்திருக்கிறார் ஸ்னோடன். யார் இவர் ? அமெரிக்க உளவுத்துறையான CIA - இன் ஊழியர். சொந்த அமெரிக்க மக்களையே அமெரிக்க அரசு வேவு பார்த்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள்  என அனைத்தையும் வேவு பார்த்திருக்கிறது. இதைக் காணச் சகிக்காத ஸ்னோடன், இதை அம்பலப்படுத்தினார். இந்த CIA - என்பது என்ன ? அமெரிக்க உளவுத்துறை, உலகில் மற்ற நாடுகளில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் கவனிப்பது, அமெரிக்க நலனுக்கு எதிரான அரசியல் போக்கு உலகின் எந்த நாட்டிலாவது தென்பட்டால் அங்கே மூக்கை நுழைப்பது, உளவாளிகளை அனுப்புவது, இலஞ்சம் கொடுப்பது, கூலிப்படையை அனுப்புவது, தேவைப்பட்டால் ஆட்சிக் கவிழ்ப்புகள், படையெடுப்புகள் வரை நடக்கும். இதில் இருப்பவர்கள் மனசாட்சியை அடக்கம் செய்து விட்டுத்தான் வேலை பார்க்க வேண்டும். அடுத்தவன் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் இந்த வேலையைத்தான் அமெரிக்க ஹாலிவுட் திரைப்படங்கள் நாயகர்களாகவும், தேசபற்றாகவும் சித்தரிக்கின்றன. ஹாலிவுட் படங்கள் சொல்வது உலகத்திலேயே தியாகி அமெரிக்க ராணுவ வீரன், உலகத்திலேயே சிறந்த தேசபக்தன் CIA, FBI உளவாளி.  

ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்தால் மிகவும் பிரபலமான படங்களான, ஜேம்ஸ்பாண்ட் (இங்கிலாந்து உளவாளி), ராம்போ, மிசன் இம்பாஸிபிள் மாதிரியான உளவாளிகள் அல்லது ராணுவ வீரர்களை வியந்து போற்ற வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளில் போய் போரிடுவது அந்நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் வீரமாகவும், திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும், நாயகத்தனமாகவும் சித்தரிக்கப்படும். ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க ராணுவ வீரர்களின் துயரத்தை அலசும் படங்கள் (ஹார்ட் லாக்கர்) , அமெரிக்காவின் பிறநாட்டு ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் ஆர்கோ போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுகளை வெல்கின்றன. இது போன்ற படங்களை ரசிக்கும் நாமும் அறிந்தோ அறியாமலோ அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை ரசித்து அதை ஆதரிக்கிறோம்.

அமெரிக்கா ஈராக்கில் நடத்திய கொடுமைகளை அம்பலமாக்கியது முதன் முதலில் விக்கிலீக்ஸ் என்ற இணையம். அதன் நிறுவனர் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதால், அமெரிக்க அரசால் இன்னும் துரத்தப்பட்டு ஆபத்தான நிலையில்தான் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்கிறார். இன்னொருவர் ப்ரோட்லி மானிங் இவரும் விக்கிலீக்ஸ் க்கு தகவல்கள் - இராணுவ ரகசியத்தை வழங்கியதற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இருவரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதற்காக தண்டனை அனுபவிக்கின்றனர். தற்போது எட்வர்ட ஸ்னோடனும் அது போலவே அமெரிக்க சராசரி மக்களைக் கண்காணிக்கும் படு கீழ்த்தரமான அமெரிக்க அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA - National Security Agency) இணையக் கண்காணிப்பின் மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களைத் திருடியுள்ளது. அமெரிக்கர்களின் அசைவுகளையும் கண்காணித்து வருகின்றது என்பதை அம்பலப்படுத்தி உள்ளார் எட்வர்ட்.

ஹாங்காங்கில் தஞ்சமடைந்து இதை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் எட்வர்ட் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அமெரிக்க அதிபரோ உலக நாடுகளையெல்லாம்  யாரும் எட்வர்ட் ஸ்னோடனுக்கு தஞ்சமளிக்கக் கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். பலநூறு கோடிக்கணக்கான தகவல்கள் பல்வேறு நாடுகளிடமிருந்து திருடப்பட்டுள்ளன. அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட நாடுகளில் ஐந்தாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது என்பது அதிர்ச்சி. என்ன தேசபக்தி அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தியா அமெரிக்காவின் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் எதிர்ப்புத் தெரிவிக்காத நாடு என்று அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்தியாவையும் கண்காணித்திருக்கிறது என்பது என்ன நியாயமோ.

இதற்கு முன்பு உலகையே அதிரவைத்த அமெரிக்க போர்க்குற்றங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸான்ஞ்சே இன்னும் ஈக்வடார் தூதரகத்தில்தான் தஞ்சமடைந்து வாழ்கிறார். எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்யாவின் வானூர்தி நிலையத்திலிருக்கிறார்.

இப்படி அமெரிக்கா சொந்த மக்களையும் நட்பு நாடுகளையும் கூட கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவை ஏதோ ரட்சகனைப் போலவும் சிலர் நம்புகின்றனர். அமெரிக்க உளவுத்துறையோ பாதுகாப்புத் துறையோ பல்வேறு கண்ணுக்கு தெரியாத மென்பொருட்களை வைத்து பல்வேறு தனிநபர்கள், அரசுகள், நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கெனவே அரசல் புரசலாக வெளியான செய்திகள்தான். அரபு வசந்தம், துருக்கி வசந்தம், கிரீஸ்போராட்டம் போன்றவற்றின் தாக்கத்திற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்தது சமூக வலைத்தளங்களே என்பதால் அதையும் கண்காணித்து வருகிறது என்ற செய்தியும் ஏற்கெனவே வெளியானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமெரிக்கா தனிநபர் சுதந்திரத்தில் தலையிடாது என்று மூட நம்பிக்கை உடையவர்களின் கவனத்திற்கு,

சமூக வலைத்தளங்களை வெவ்வேறு போலி முகவரிகளில் வந்து விவாதங்களில் கூட பங்கெடுக்கும் பாமரர்களைப் போலவும் உளவுத் துறையினர் கண்காணிக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ ஆகியோரும் தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களை வழங்கி  உதவியிருக்கின்றன.

சிவலிங்கம் சிவானந்தம் என்ற தமிழர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடித்துக் கொல்லும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வெள்ளை மாளிகையின் விருது பெற்றிருக்கிறார். இதைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். பின்லேடனை உருவாக்கியதே அமெரிக்காவின் சிஐஏ அவரை பயங்கரவாதி என்று அறிவித்து தேடியும், இரு நாடுகளின் மீது படையெடுத்தும், பல மில்லியன் டாலர் செல்வாக்கி அமெரிக்கப் பொருளாதாரமே நாசமாக்கியது. லேடனைத் தேடிக் கொல்வதற்கெல்லாம் தொழில் நுட்பத்தை உருவாக்கியவரெல்லாம் தமிழருக்குப் பெருமை சேர்த்தவராம். இந்த பின்லேடன் பற்றிய கட்டுக்கதையெல்லாம் இன்னும் நம்புவதற்கு ஆளிருக்கிறது. .சரி ஈழப்போர் நடந்த போது இலங்கை அரசுக்கு புலிகளின் நடவடிக்கைகள் பற்றி உளவுத் தகவல்கள் வழங்கிய இரு நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவுமே. இந்தியா எட்டி உதைத்தாலு ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மீதான மூட நம்பிக்கை மாறாது. அதே போலத்தான் அமெரிக்காவின் மீதான் நம்பிக்கையும். புலிகளின் நடவடிக்கைகளை எப்படி அமெரிக்க உளவுத்துறை வேவுபார்த்திருக்கும், அவர்கள் உரையாடல்களைக் கேட்டிருக்கும், சிவலிங்கம் போன்ற தமிழர்கள்தானே உதவியிருப்பார்கள். அவர்களையும் கொண்டாடுவார்களா தமிழர்கள் ? சரி புலிகளின் தகவல்களை அறிய அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளுக்கு உதவிய ஒரு முஸ்லிம் என்று ஒரு செய்தி வருகிறது அதை எப்படி எதிர்கொள்வார்கள் இத் தமிழர்கள்.

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க் போன்றவர்கள் அமெரிக்கனாக இருந்தபோதும் மன்சாட்சியுடன் போலித்தனமான தேசபக்தியையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், அரசின் கொடியமுகத்தை அம்பலப்படுத்தினர். சிலர் அமெரிக்கனாக இல்லாதபோதும் உளவுத்துறைக்குத் துதிபாடுகின்றனர்.    
Download As PDF
Bookmark and Share

Post Comment

போயே விட்டேன் வாங்கியே விட்டேன் !



இன்றுதான் கடைசி நாள் என்றோ ஞாயிற்றுக் கிழமை போன்றே தெரியாதவாறு கூட்டமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நண்பகல் வேளை என்பதாலா அல்லது வாசகர்கள் மொத்தமே அவ்வளவுதான் என்று தெரியவில்லை
 

இம்முறை வாழ்க்கையிலேயே அதிக அளவாக ரூ 1500 க்கு நூல்களை அள்ளி வந்தேன் திருப்பூரில் நடந்த நூல்கள் கண்காட்சியின் இறுதி நாளிலே. இந்த வருடமாவது குறும்படங்கள் பார்க்கலாம். கலை நிகழ்ச்சிகள் காணலாம். சொற்பொழிவுகள் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. சென்ற வருடம் நடந்த கண்காட்சி ஏதோ நேற்றைக்குத்தான் நடந்தது போலிருந்தது ஆனால் அதற்குள் ஒரு வருடம் ஆகி விட்டிருக்கிறது.
 

கண்காட்சிக்குச் சென்று நூல்களை வாங்கலாமா வேண்டாமா என்று எண்ணுமளவுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது. நல்ல வேளையாக சென்று வாங்கி வந்தது நல்லதாகப் போய்விட்டது. பணம் முக்கால்வாசி தீர்ந்து விட்டதாலும், சென்ற வருடம் வாங்கிய நூல்களிலேயே பாதி படிக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதாலும் இம்முறை கொஞ்சம் அதிகமாக வாங்கியும் ஆசை தீராத நிலையிலும் பத்து பதிப்பகங்களுக்குள் நுழையாமல் கூட திரும்பி விட்டேன்.

ரூ 250 க்கும் மேல் நூல்கள் வாங்கினால் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ்கள் தருவார்கள். பட்டப்படிப்பில் வாங்கிய சான்றிதழ்களே வெட்டியாகக் கிடக்கும் போது, இது போன்ற தம்பட்டங்கள் எதற்கென்றுதான் போன வருடமே வாங்கவில்லை. இம்முறையும் வாங்கவில்லை.

வாங்கிய நூல்கள்

அனொனிமா (முகம் மறைத்தவள்) 

ஜெர்மனியில் ரஷ்யப் படைகள் புரிந்த பாலியல் வன்முறைகள் குறித்தது. இது குறித்த கட்டுரையை கீற்றுவில் படித்ததிலிருந்தே வாங்க வேண்டுமென்ற தவிப்பு இருந்தது. இந்நூலைப் பற்றி இருப்பதாகக் கேள்விப்பட்டு வாங்க வேண்டும் என்றேதான் போனேன். இரண்டு பதிப்பகங்களில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இறுதியில் எதிர்பாராவிதமாக எதிர் வெளியீட்டகத்தில் வைத்திருந்தார்கள்.

அன்னி ஃப்ராங்க் டைரிக் குறிப்புகள் 
 
இது பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஜெர்மனியில் நாஜிக்களின் கொடூரத்தை தனது நாட்குறிப்பேட்டில் பதித்த சிறுமியின் குறிப்புக்கள். இதுவும் எதிர் வெளியீடு. இந்த இரண்டு நூல்களின் முக்கியமானவை என்பதால் வாங்கிவிட்டேன்.

அமைதியின் நறுமணம் - ஐரோம் ஷர்மிலாவின் கவிதைகள்

ஐரோம் ஷர்மிளாவுக்கு என்னால் வேறு என்ன கைம்மாறு செய்யமுடியும் ? அவரது கவிதைகளைப் படிப்பதை விட. அவர் மீது கொண்ட மதிப்பினால் வாங்கினேன்.

ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை

இதை சென்ற வருட கண்காட்சியின் போதே எடுத்துப் பார்த்து விட்டு காமிக்ஸ் போன்ற நூல் நூறு ரூபாயாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வேறு இருக்கிறதே என்று அரை மனதுடன் வைத்து விட்டு வந்து விட்டேன். இம்முறை தமிழில் வைத்திருந்தார்கள் வாங்கி விட்டேன்.

சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் இருந்த சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் வாங்கினேன்.

நீ எறும்புகளை நேசிக்கிறாயா ?

வானவில் பறவையின் கதை


இவையெல்லாம் போக குழந்தைகளுக்கான பெயர்கள் என்ற தலைப்பில் மட்டும் மூன்று நூல்களை வாங்கினேன். உடன்பிறப்பின் குழந்தைக்கு பெயரிட வேண்டியிருப்பதால்.

இது போக தலைப்புகள் கொண்டே சிலவற்றை வாங்கினேன். விலையையும் கருத்தில் கொண்டேதான்.

அறியப்படாத தமிழகம் - தொ பரமசிவன்

ஹரப்பா வேதங்களின் நாடா ?

1857

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

சூஃபி - விளிம்பின் குரல்

எங்கெ செல்கிறது கல்வி ?

தமிழர் மறந்த மரபுக் கலைகள்

கோட்சேயின் குருமார்கள்

தலித் முஸ்லிம்

ஆயிஷா

பெட்ரோல் அரசியல்

ஈராக் - வரலாறும் அரசியலும்

இஸ்லாம் - நேற்று இன்று நாளை

பெரியார்  தமிழுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்தாரா ?

அழியட்டும் ஆண்மை

தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் பெரியாரும் ம.பொ.சி.யும்

கமலின் கலப்படங்கள்

ஈரானிய சினிமா


இத்தனையும் அடுத்த வருட கண்காட்சிக்குள் படித்து விட வேண்டும் என்று வழக்கம் போலவே முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம். இம்முறையும் வால்கா முதல் கங்கை வரை நூலை எடுத்துப் பார்த்து விட்டு விலை காரணமாக வைத்து விட்டேன். பின்பு வாங்கிக் கொள்ளலாம் என. இது போல் ஒவ்வொரு முறையும் பல நூல்களை விலை காரணமாகவே வாங்க முடிவதில்லை.

ஒரு பயணக் கட்டுரையோ அல்லது கண்காட்சி குறித்தோ ஒரு கட்டுரை வரையுமளவிற்கு எழுத்தாளுமை இன்னும் எனக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது. பத்து வருடங்களுக்கும் மேலாக பொது மக்கள் திரள் ஊடகம் தவிர பல்வேறு மாத இதழ்களும், நூல்களும், விமர்சனங்களும் இலக்கியங்களும் வாசித்து வருகிறேன். இருப்பினும் எனக்குள் பெரிய அளவில் எழுத்து அளவிலோ சிந்தனை அளவிலோ முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சிறு வயதிலிருந்தே தமிழார்வம் அதிகமாக இருந்தது. அது ஆக்கப் பூர்வமாக  இல்லாமல் வெறும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்ற அளவிலேயே இருந்தது. படிக்க நிறைய நேரமும் ஆர்வமும் இளம் பருவமும் இருந்த போது நூல்கள் வாங்குவதற்குப் போதுமான வாய்ப்பு வசதிகள், பணமும் இருக்க வில்லை. இப்போதும் பணம் ஒன்றும் பெரிதாகப் புழங்க வில்லை. கல்லூரி முடிந்ததிலிருந்தே இணையத்திலேயே அதிகம் வாசிக்கும் நிலையாக இருக்கிறது. பிபிஓ பணிச்சுமை, மன அழுத்தத்தின் காரணமாகவும் வாசிப்பு கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது, எப்போதாவது மட்டுமே வாசிக்க இயலுகிறது.

இருந்தும் எப்படியாவது இதிலிருந்து மீண்டு விடவே எத்தனிக்கிறேன். ஒவ்வொரு நூலையும் படித்து அதைப் பற்றியாவது எழுதி வலைப்பூவை ஒப்பேத்தி விடுவதாகத் திட்டம். அடுக்கி வைக்கப்பட்ட நூல்களின் மேலுள்ள அட்டையில் ஆன்னி ஃப்ராங்க் என்னைப்பார்த்து "நீ படிச்சுக் கிழிச்சுட்டாலும் என்று" என்று கிண்டலாக சிரிப்பதாகத் தோன்றுகிறது.  

Download As PDF
Bookmark and Share

Post Comment

கருத்து சுதந்திரமும் கார்த்தி சிதம்பரமும்


கொள்கைக்கும் செயலுக்கும்தான் எத்தனை தொலைவு. ரவி ஸ்ரீனிவாசன் என்ற் ட்விட்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் ஒரு செய்தியை பகிர்ந்தது மட்டுமே. இது என்ன சைனாவா இல்லை இந்தியாவா என்ற ஐயமே வந்து விட்டது. இந்த செய்திக்குத்தான் வலைப்பூவினரும், கீச்சருமாகிய நாம் பதறியிருக்க வேண்டும். அவர் வெறும் 16 பேரை மட்டுமே பின்தொடர்பாளர்களாக வைத்திருந்தாராம். இப்போது 2000 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.  

ரவி ஸ்ரீனிவாசன்

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் - என்ற வால்டேரின் மேற்கோளை முகப்பில் வைத்து

சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை - என்ற கடமையை அனைவருக்கும் வலியுறுத்தி

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன. என்ற சட்டத்தினை எடுத்துக் காட்டி ஆரம்பிக்கப்பட்ட கருத்து.காம் என்ற இணையதளத்தில் உள்ள வாசகங்கள்.

இந்த இணையதளத்தை கி.பி 2005 ஆம் ஆண்டில் இறுதியில் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கினர். எதற்காக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு அஞ்சும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் போக்க ஒரு அமைப்பு தேவை. அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் வெளியிடும் வகையில் ஒரு அமைப்பைத் தொடங்கினால் என்ன என்று இருவரும் சேர்ந்துபேசியதன் விளைவாக உருவானதே, கருத்து என்ற புதிய அமைப்பு.

அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. 2005 இல் நடிகை குஷ்பு திருமணத்திற்கு முன்னர் உடலுறவு தவறில்லை எனவும், ஆண்கள் மனைவியாக வரும் பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கிற பாணியில் ஒரு கருத்து வெளியிட்டார். இது இந்தியாடுடே வார இதழுக்காக எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்திற்காக எடுக்கப்பட்டது. இது போன்ற புள்ளி விபரங்கள் இந்தியாடுடே வார இதழில் அடிக்கடி, மேல்தட்டு மக்களின் பாலியல் நுகர்வுப் பண்பாட்டை ஆதரித்து ஊக்குவிக்க எழுதப்படுபவை.

குஷ்பு வெளியிட்ட இந்தக் கருத்தை, தினமலரின் தரத்தை விஞ்சும், செய்திகளை 150% சரியாகவும் நேர்மையாகவும் வெளியிடும் நாளிதழான சன் குழுமத்தின் தினகரன் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கற்பில்லையா என்று குஷ்பு சொன்னதால் பரபரப்பு என்று நீட்டி முழக்கி விட்டது. ராமதாஸும் தொல்.திருமாவளவனும் அப்போதுதான் முதல் முதலாக கூட்டணி சேர்ந்திருந்தனர். அப்போது ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிப்பது, திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது(மும்பை எக்ஸ்பிரஸ்) என திரையுலகை எதிர்க்கும் விளம்பரப் போராட்டங்களை நடத்தி வந்தனர். காற்று வாங்கிக் கொண்டிருந்த அவர்களின் அரசியல் களத்திற்கு குஷ்புவின் இக்கருத்து வராது வந்த மாமணியாய் வந்து விழ குஷ்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தமிழ் அரசியல், தமிழ்ப்பெண்களின் கற்பு என்ற உணர்ச்சிகர நிலையில் நடத்தினர். குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பைப் பார்த்து நடிகை சுஹாசின் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று வாய் விட்டு விட்டார். இதன் பின்பு குஷ்புக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட சுஹாசினிக்கு எதிராக அதிகமான போராட்டங்கள் செருப்பு, துடைப்பக்கட்டை, கழுதை ஊர்வலங்கள் நடந்தன. விலங்கு நல வாரியங்கள் அதைக் கண்டித்தனர். குஷ்புவின் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. பின்பு அதே குஷ்பு, ராமதாஸும் திருமாவளவனும் கூட்டணி வைத்திருந்த திமுகவில் சேர்ந்தது முத்தாய்ப்பான நிகழ்வு.

இந்த நிலையில்தான் கருத்து சுதந்திரம் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதன் பின்புதான் கனிமொழியும் கார்த்தியும் இணைந்து கருத்து என்ற அமைப்பைத் தொடங்கினர்.

இதைத் தொடங்கியவ நடுவண் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பற்றி ஒரு மிகச் சாதாரணமான கருத்து ஒன்றைப் பகிர்ந்த குற்றத்திற்காக ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் அன்னா ஹஸாரே இயக்க ஆதரவாளர் போல் தெரிகிறது. அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து பெரிய அளவில் எனக்கு நம்பிக்கை இல்லையெனிலும் இக்கைது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கூடவே கருத்துரிமைக்கும்.

அதிகாலையில் 5: 30 மணியளவில் வீடு வரை சென்று ஸ்ரீனிவாசனைக் கைது செய்ய வேண்டிய அளவுக்கு அவர் என்ன ட்விட்டரில் சொல்லி விட்டார் என்றால் இதுதான்.

"got reports that karthick chidambaram has amassed more wealth than vadra"

கார்த்தி அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் கைது செய்திருக்கிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் எத்தனை தூரம் ? அலட்சியத்தால் சாவு நிகழ்ந்தால் இருவருட தண்டனை அதே நேரம் ட்விட்டர், மின்னஞ்சல் ஆகியவற்றுக்கு 3 வருட தண்டனை ? இந்தச் சட்டம் யாருக்காக வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறதா ? (நன்றி: தி ஹிந்து செய்திகள்)

இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*
இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*
முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 

இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

 

Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்மயி வேறு என்னதான் செய்ய வேண்டும் ?


பெண்கள் மீதான வசைச் சொற்களைக் கண்டு வெம்பியதால் இது குறித்து அழுத்தமாக எழுதத் தோன்றுகிறது. அடிக்கடி இது குறித்து எழுதுகிறேன். அதனால்தான் சின்மயியின் பிரச்சனை குறித்தும் எழுதுகிறேன். எல்லாக் கோணங்களிலும் ஆராய விருப்பமும் இல்லை. பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்ப்பதற்கு மட்டுமே ஒரு சந்தர்ப்பமாகக் கருதி இதைச் சொல்கிறேன். மாட்டிக்கொண்டவர்களை கும்முவதும் மகிழ்வதும் எனக்குப் பிடிக்காது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான ஆதாரம் சரவணக்குமார் என்பவர் மீது மட்டும் இருக்கிறது. ராஜன் முன்பு டிவிட்டரில் சின்மயியிடம் விவாதத்தில் ஈடுபட்டு, அவரை அதிகம் கேலி பேசியதால் எரிச்சலடைந்த சின்மயி அவரை ப்ளாக் செய்துவிட்டார். பின்பு எதுவும் சொல்லவில்லை என்கிறார். ஆனால் சின்மயி தொடர்ந்து வெவ்வேறு முகவரிகளில் வருகிறார்கள் தொல்லை தருகிறார்கள் என்று இதற்கு முன்பே ஒரிரு முறை சொல்லி வந்தார். ராஜன் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையாளர் சின்மயியுடன் பிரபலமானவர்களில் ஒருவராக ராஜனையும்  சேர்த்து எழுதியதால் சின்மயி அப்பத்திரிக்கையாளருடன் சண்டயிட்டார். பின்பு தொடர்ந்து ராஜனால் தொல்லை ஏற்படுவதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை. ராஜன் தனது ஃபாலோயர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனபதற்காக மிகவும் கீழ்த்தரமான கீச்சுக்களை, பதிவுகளை எழுதியுள்ளார். பல அரசியல் தலைவர்களை நடிகர்களை இழிவு செய்துள்ளார்.

ஆனால் சின்மயியை தனிப்பட்ட முறையில் தாக்கி இவ்வாறு எழுதவில்லை சும்மா கிண்டல் மட்டுமே செய்துள்ளார். என்பதில் உறுதியாகத் தெரிகிறது. அதுவும் சின்மயி ப்ளாக் செய்த பிறகு எதுவும் எழுதவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். எழுதியவர்கள் மற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட முடியுமா ? ராஜனை மட்டும் முன்னிலைப்படுத்துவதன் காரணம் புரியவில்லை.  

ஆதாரமும் இல்லைஇது பாரபட்சமான தனிப்பட்ட வெறுப்பாகத் தெரிகிறது. 

3 வருடங்களாக பதிவுலகில் இருப்பதால் அவர் தனிப்பட்ட பெண்கள் மீது பாலியல் அவதூறு செய்ய மாட்டார். சந்தனமுல்லை, சாரு நிவேதிதா விவகாரங்களில் அவர் எழுதிய பதிவுகள் அதற்குச் சான்று. ஆனால் அவரே இவ்வளவு கீழ்த்தரமான ட்வீட்டுகளும், பதிவுகளும் எழுதியது முரண்.

தினத்தந்தி வழக்கம் போல ஈனத்தனமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் கைது என்று படமெல்லாம் போட்டிருக்கிறார்கள். கூகிளிலும் ராஜன் படம் வருகிறது. இதெல்ல்லாம் அதிகபட்சமானது. உலகமகாக் கொலைகாரன்களுக்கே தூக்கு தண்டனை வேண்டாம் என்கிறோம். இது போன்ற வசைபாடல் ஆபாசமாக வர்ணிப்பது என்பதற்கெல்லாம் இவ்வளவு தண்டனை வேண்டாம். சராசரிப் பெண்களையெல்லாம் வன்கலவி செய்தவன்களெல்லாம் நடமாடுகிறார்கள். அதே நேரத்தில் இது போன்ற இணையத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பது பெண்களின் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்த கண்ணியமான காவல்துறை கூடங்குளத்தில் என்ன செய்தது ? .

தன் குழந்தையைத் தேடிச் சென்ற லவீனாவிடம் அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

இது மாதிரி பலரிடம் உதயகுமாருடன் தொடர்புபடுத்தி, பாலியல் ரீதியாக கேள்வி கேட்டிருக்கின்றனர். இது குறித்துப் பல புகார்கள், மனித உரிமை மீறல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன காவல்துறையினர் மீது. இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது.

சைபர் கிரைம் குறித்து 18 பெண்கள் புகாரளித்தும் சின்மயியின் புகார் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தனிப்பட்ட செல்வாக்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவ்வப்போது ஜாதிப் பெருமிதத்துடனும் திமிருடனும் பேசியிருக்கிறார்.

இட ஒதுக்கீடு, மீனவர்கள் மீனைக் கொல்வது, சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என வன்மமாகக் கருத்து வைத்திருக்கிறார்.

புகழ்விரும்பி எக்செட்ரா......

இதெல்லாம் சரியென்று ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் மற்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சின்மயியின் தவறுகளைக் கண்டிக்கும் அதே நேரம் மற்றொன்றையும் கண்டிக்க வேண்டும்.

அவர் பார்ப்பனத் திமிருடன் நடந்து கொண்டார் என்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்துப் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் உட்பட.

ஃபேஸ்புக்கில் பலரும் இந்துத்துவாவாதிகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு போன்ற பகிர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் யாரும் இந்துத்துவாவாதிகளோ பார்ப்பனர்களோ அல்ல. பார்ப்பனப் பெண் மட்டுமல்ல இட ஒதுக்கீடு பற்றி அறியாத எந்தவொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆண், பெண்களின் கருத்தும் சின்மயி கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் படித்ததே இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் என்பதை அறியாமல் இருப்பதால்தான் அப்படிப் பேசுகிறார்கள். சின்மயி பார்ப்பனராக இருப்பதால் அதை வைத்தே அவரை தாக்க முடிகிறதே. இதே வேறு ஜாதியாக இருந்திருந்தால் ?

அதே போல் உதயகுமாரைப்பற்றி இழிவு செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பன இந்துத்த்வாக்களா ?

அதே போல் மீனைக் கொல்வது பாவமில்லையா என்று கேட்டதை, மீனவர்கள் மீனைக் கொல்லும்போது, சிங்களப்படை மீனவர்களைக் கொல்லலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்கு ஒரு ஸ்க்ரின் ஷாட்டை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஆமாம் என்று சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. அதை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

எல்லோரையும் பெண்களையும் தலைவர்களையும் இழிவு படுத்தி இருப்பதை அவர் எதிர்க்கிறார், கண்டிக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்.

திட்டம் போட்டு சிக்க வைத்தார் என்கிறார்கள். அவர் அம்மாவைப்பத்தித் தவறாகப் பேசினால் அவர் கோபப்படக்கூடாதா என்ன ?

அவர் தமிழச்சி என்று சொல்வதை எதிர்க்கிறார்கள். அவர் தெலுங்குப்பெண் என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் தமிழ்நாட்டில்தான் இப்படித் துணிச்சலாகத் தெலுங்கு என்று சொல்லியிருக்க முடியும். அதே  நான் பிராமணப் பெண் என்று சொல்லியிருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள்.

தமிழ்ப் பெண் என்று சொன்னால் அதையும் நக்கலடிக்கிறார்கள்.

இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை நாடினார், அதே போல்தானே அவரை ஆபாசமாகப்பேசியவர்களும் தலித் ஆதரவு, மீனவர் ஆதரவு என்று உணர்ச்சி அரசியலை தனக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு நியாயம் தேடுகிறார்கள். இது மட்டும் தவறில்லையா ?

ஒரு பெண் எதிர்க்கருத்து வைத்தார் என்பதற்காக அதை பாலியல் ரீதியில் வசைபாடுவதை ஆண்கள் மிகச் சாதாரணமாக எடுத்து கொள்வதையும் அதைக் கடந்து சென்று விடுவதையும் தவறே இல்லையெனப்பார்ப்பதும்தான் எனக்கு வலிக்கிறது. அவர் பார்ப்பனப் பெண்ணாகவே இருக்கட்டும் அதற்காக தமிழ்ப்போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர்களை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவது சரியாகுமா ?

படித்தவர்கள் பண்பாளர்கள் நிரம்பிய இணைய, டிவிட்டர், பதிவுலகில் பல அன்பர்களின், அறிவாளர்களின், முற்போக்குவாதிகளின் வன்மத்தையும், வக்கிரத்தையும் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. மலையாளியோ, சிங்களனோ தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தால் ஒருநிலையும் , தமிழன் செய்தால் ஒரு நிலையும் எடுக்கிறார்கள்.

பெண்கள் மட்டுமல்லா பிற அரசியல் தலைவர்களையும் கண்டமேனிக்கு காய்ச்சுகிறார்கள். சில வருடங்களாக வலைப்பூக்களைப் படித்ததிலிருந்தே இது தெரிகிறது.

சரி சின்மயிக்குப் பதிலாக ஜெயலலிதா குறித்த ட்வீட்டுகள் வேறொரு உளவுத்துறையின் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார் ?

களத்தில் போராடும் உதயகுமார் போன்ற தலைவர்கள் அபத்தமாக வாய் விடுவதில்லை. ஆனால் இணையத்தில் அனைவரும் மனம் போன போக்கில் போட்டுத் தாக்குகிறோம் இல்லையா

3 வருடங்கள் முன்பு ஈழப்போர் நடந்த போதுதான் பதிவுலக அறிமுகத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒரு பதிவர் எல்லாளன் என்று பெயர், புலிகளின் செய்திகள் அருமையான மொழிநடையில் உடனுக்குடன் கிடைப்பதால் அதில் படிப்பது வழக்கம். ஜெயலலிதா புலிகளின் மீது வெறுப்பான அறிக்கைகள் வெளியிட்ட காலத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படம் ஒன்று மினிட்ரௌசருடன் இருப்பது போல் வெளியிட்டு, சீலை தூக்கிய சிங்காரி என்பதை அதன் தலைப்பாக வத்திருந்தார்.

கருணாநிதி ஃபேஸ்புக்கில் வந்த போது வசவுகளாகப் போட்டு ஒரே நாளில் அவரை வெளியேற்றினார்கள்.

கனிமொழி ராசாவைப் பற்றி வந்த செய்திகள்

மன்மோகன் சோனியாவை இணைத்து வெளிவரும் கேலிப்படங்கள்

நடிகர் விஜய் குறித்து வருகின்றவை

இதெல்லாம் இணையத் தமிழர்கள் செய்கின்றவைதான். இதுதான் எரிச்சலாக இருக்கிறது. மேலே இருக்கின்ற ஒரு செயலை நாகரீகமாக எதிர்ப்பவர்கள், இன்னொன்றை உறுத்தலின்றிச் செய்கின்றனர்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை வைத்து அரட்டைக் கும்மியடிக்கின்றனர். மற்றவர்களை சொம்படிப்பவன், இணையப் பொரச்சி, அல்லக்கை பட்டங்களை அள்ளி  வீசுகின்றனர்.

இப்படி இவர்கள் செய்தது சரியென்றால் கவிஞர் மீனா கந்தசாமி மாட்டுக்கறித் திருவிழாவை ஆதரித்ததாக சந்தித்த வசைகளும் சரிதான். அவர் தலித் அல்லது தமிழர் என்பதால் அதை மட்டும் எதிர்க்கக் கூடாது சரிதானே. ஏனென்றால் இந்துத்துவாக்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அவரை ஒருவன் Bitch I want to fuck you  என்று ட்வீட்டியிருந்தான். 

நன்றி சவுக்கு
 நீங்கள் என்ன மகத்தான கொள்கைக்காகப் போராடினாலும் பெண்களை பாலியல் ரீதியில் தாக்கும் போது அதன் வீரியம் போய்விடுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணமே தெரிகிறது.

பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள் எனபதே இப்பதிவின் நோக்கம்.

இதைப் போன்ற சிறிய நிகழ்வுகளைப் பெரியதாக்கி இணைய சுதந்திர வெளிக்குப் பூட்டுப் போடவும், கருத்துரிமைக்கு ஆப்பு வைக்கவுமே வழிவகுக்கும். ஏற்கெனவே பல தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனவாம்.

இது போன்ற தனிநபர் தாக்குதல் மட்டுமன்றி "கண்ணியமான" எதிர்க்கருத்தாளர்களும் அரசால் நசுக்கப்படும் போலத் தெரிகிறது.

2 வாரங்களுக்கு முன்புதான் இதே மாதிரி ஒன்றை எழுதினேன்.

http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post_4.html
Download As PDF
Bookmark and Share

Post Comment

நாட்டுப்பற்று எனப்படுவது யாதெனில் ??

நாட்டுப்பற்று என்றால், டெண்டுல்கரின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது, அப்துல்கலாமின் பொன்மொழிகளைப் பகிர்வது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் அதிக இந்தியர்கள் பணிபுர்வது, இந்திய ராணுவத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது, இந்தியா பல்லாயிரம் கோடி செலவில் செயற்கைக் கோளை ஏவினால் பெருமை கொள்வது, கிரிக்கெட்டில் வென்றால் பெருமை கொள்வது, அவ்வப்போது ஜெய் ஹிந்த் போடுவது இவைகளா ?


ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேர்ந்தது. ஒலிம்பிக் அணிவகுப்பின் போது இந்திய அணியினர் நடந்து செல்வது போல இருந்த அதில் சானியா சிரித்தபடி சென்று கொண்டிருந்தார். அதில் நடந்து சென்ற அனைவரின் கையிலும் இந்தியக் கொடி இருந்தது. சானியாவின் கையில் அது இல்லை. இதை வைத்து சானியாவைச் சாடி இருந்தனர். முதலில் இது போட்டோஷாப்பில் வைத்து மாற்றப்பட்ட படம் என்பதால் இது ஒரு பொருட்டாகவே கருதப்பட வேண்டியதில்லை. அப்படியே அவர் கையில் கொடி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிப் போய்விடும் ?


தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்று வருவதால் நாட்டுப்பற்றுணர்வு தூசிதட்டப்பட்டுக் கிளப்பப் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பதக்கம் பெறும் நபர் கொண்டாடப் படுவார். போட்டிகள் முடிந்தவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கண்டுகொள்ளப்பட மாட்டார். அவருக்குத் திறமையிருந்தால் ஏதாவது நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக மாறினால் ஊடகங்களிலும் அந்நிறுவனத்தின் பொருட்கள் விற்கும்  அங்காடிகளிலும் அங்கங்கே அவரது முகத்தைக் காட்டுவார்கள். ஏனென்றால் நாட்டுப் பற்றை வணிகம் செய்யத் தோதானவர்கள் கிரிக்கெட் வீரர்கள்தான்.

இந்த நாட்டுப்பற்றுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்தியாவின் நாட்டுப்பற்று எனப்படுவது என்னவென்றால் முதலில் வருவது பாகிஸ்தானை வெறுப்பது(அதே போர்வையில் முஸ்லிம் வெறுப்பு), சீனாவை வெறுப்பது. அதே பாகிஸ்தானியாக இருந்தால் இந்தியாவை வெறுப்பது பாகிஸ்தானிய தேசப்பற்றாக இருக்கும். (அமெரிக்க தேசபக்தி என்றால் ரஸ்யாவை வெறுப்பது. இலங்கை தேசபக்தி என்றால் தமிழர்களை வெறுப்பது.) சொந்த நாட்டை நேசிப்பதை விட எதிரி எனக் கருதப்படும் நாட்டை வெறுப்பது, சாடுவது, நக்கலடிப்பது நாட்டுப்பற்றாக இருக்கிறது. பிறகு பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளை வெறுப்பார்கள். அதே சமயம் அம்பானியைப் போற்றுவார்கள். ஏனென்றால் அவர் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் என்பார்கள். இது போன்ற பெரும் பணக்காரர்கள் என்றாலே அவர்கள் தாமிருக்கும் நாட்டின் ஏழை பாழைகளை சுரண்டித்தான் சொத்து சேர்க்க முடியும். அரசாங்கத்தையே ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். அமெரிக்காவின் வால்மார்ட் என்றால் சிறிய வணிகர்கள் எத்தனையோ பேரின்  வயிற்றலடித்துத்தான் அவர்கள் ஆதிக்கம் செய்ய முடிகிறது. வால் மார்ட் இந்தியாவிற்கு வந்தால் பல வணிகர்கள் தூக்கில்தான் தொங்க வேண்டும்.

அதே போல்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வந்த பிறகு எத்தனை தள்ளுவண்டிக்காரர்களுக்கு பிழைப்பு போனது என்பது தெரியாது. ஆனால் இவர்கள்தான் முன்மாதிரிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள். இந்தியப்பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கும் இவர்கள் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தியவர்களாகக் கொண்டாடப் படுகிறார்கள்.

அடுத்ததாக கிரிக்கெட் காரர்கள் நாட்டுப் பற்றின் அடையாளமாகக் கொண்டாடப் படுகிறார்கள். முதலில் விளையாட்டுப் போட்டிகள் என்பவையே நட்புணர்வை வளர்ப்பதற்காகத்தான் நடத்தப்படுகின்றன. ஆனால் உண்மையில் எதிரி நாட்டுடன் நடக்கும் போரைப் போலவே சித்தரிக்கப்படுகின்றன. வணிக நோக்கில் திட்டமிட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகள் பிரபலமாக இருப்பதே இப்போலி நாட்டுப்பற்றின் முகத்திரையைக் கிழிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட்டுக்குப் பதிலாக கால்பந்துப் போட்டிகள். கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் ஏதோ இந்தியாவே வென்று விட்டது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டிகள், பிரபஞ்ச அழகிப்போட்டிகள் தவறாமல் வெளிச்சம் கொடுக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இந்திய அழகிக்கு இம்முறை இத்தனாவாது இடமே கிடைத்தது என்று உச் கொட்டுகிறார்கள். இதில் தோற்றதற்கெல்லாம் இந்தியர்களை வருத்தப்பட வைக்கிறார்கள். வென்று விட்டாலோ பெருமைப்படச் சொல்கிறார்கள்.

கிரிக்கெட் பற்றி சொல்லும் போதெல்லாம் எதற்கெடுத்தாலும் உலகிலேயே என்ற சொல்லை முன்னால் போட்டுக் கொள்கிறார்கள். உலகிலேயே யாரும் செய்யாத சாதனையைச் செய்து விட்டார் பெருமைப்படுங்கள் என்கிறார்கள். டெண்டுலகர் சொன்னார். எனது சாதனையை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும். இப்படிச் சொல்வதன் மூலம் தனது இந்தியப் பற்றைக் காட்டிக் கொள்கிறார். ஆனால் இவரே ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்கிறார். நான் இந்தியாவிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று சொல்லவில்லை. எல்லா நாட்டின் நிறுவங்களின் தயாரிப்புக்களையும் விளம்பரம் செய்கிறார். ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் இவரையே ஒருமுறை இந்தியக் கொடியின் நிறத்திலிருந்த கேக்கை வெட்டியதால் இந்தியக் கொடியை அவமானப்படுத்தி விட்டார் என்று பிரச்சனை செய்தார்கள். இரண்டு நடிகர்களை எதிர் துருவங்களாக நிறுத்தி தொடர்ந்து விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான சந்தையை திரைப்பட முதலாளிகள், ஊடகங்கள் அதிகமாக்கி அதன் மூலம் தானும் இலாபமீட்டுகிறார்கள். ஒரு நடிகனின் படம் தோல்வியடைந்தால் எதிர்நடிகனின் ரசிகர்கள் மகிழ்வதும், தன்னுடைய விருப்ப நடிகனின் படம் வென்றால் மகிழ்வதும் அடிப்படையே எந்த ஒரு இல்லாவிட்டாலும் தொடர்ந்து நடக்கிறது.

இந்த நாடுகள் எனப்படுகின்றவையே பிரிட்டிஷ் காரனால் பிரித்தும், சேத்தும் வைக்கப்பட்டுக் கீறப்பட்டக் கோடுகள்தான். இந்த எல்லைகள்தான் நாடுகளாக அறியப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெருமை பேசிக்கொள்கிறார்கள். ஒரு முறை பாகிஸ்தானிய இணையதளமொன்றில் பார்த்தது நினைவிருக்கிறது. சிந்து சம்வெளி நாகரிகம் கண்டறியப்பட்ட பகுதி தற்போது பாகிஸ்தானியர் வசமிருப்பதால், பாகிஸ்தான் நாகரிகம்தான் உலகிலேயே சிறந்தது, பழமையானது என்ற வகையில் எழுதியிருந்தார்கள். இதுமாதிரியான கதைகளை தமிழ்த் தேசியம், இந்துத்துவம் ஆகியவற்றைப் பரப்புகிறவர்களும் தங்கள் நோக்கத்திற்கேறப் வளைத்தும் திரித்தும் பயன்படுத்தி வருகின்றனர். நானும் கொஞ்ச காலம் இந்தப் போலி நாட்டுப் பற்றில்தான் மூழ்கிக் கிடந்தேன். அதாவது ஒரு போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் விளையாடும் போது, ஒரு இந்தியன் பாகிஸ்தான் தோற்க வேண்டுமென நினைத்தால் அது இந்திய தேசபக்தியாகாது, அது பாகிஸ்தான் வெறுப்பு மட்டுமே.

இந்த நாட்டுப்பற்று உண்மையில் கடைப்பிடிக்க முடியாதது. எல்லா நாடுகளுமே பிறரைச் சார்ந்துதான் இருக்கின்றன. இவ்வகையான நாட்டுப்பற்றைப் பின்பற்றுகிறவர்களின்படி பார்த்தால், வெளிநாடுகளுக்குப் பிழைக்கச் செல்கிறவர்கள், படிக்கச் செல்கிறவர்கள், வேலை கிடைத்துச் செல்கிறவர்கள் தேசத்துரோகிகள்தான். ஃபேஸ்புக்கில் இன்னொரு பகிர்வும் உலா வருகிறது, இது 1950 காலத்து ஏகாதிபாத்திய எதிர்ப்பு பாணியிலிருந்தது. அதாவது இந்தியத் தயாரிப்புகளை வாங்குங்கள், வெளிநாட்டு தயாரிப்புக்களை வாங்காதீர்கள் என்று. எடுத்துக்காட்டாக பாரதி ஏர்டெல்லை ஆதரியுங்கள், வோடஃபோனைப் புறக்கணியுங்கள் என்று. சரி அப்படியே இந்தியத் தயாரிப்புக்களை ஆதரித்தாலும், அந்த நிறுவனம், அதன் முதலாளி பணக்காரனாகலாம். சராசரி இந்தியனுக்கு ஒரு நன்மையுமில்லை. இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சியில்லை. அதிருக்கட்டும், இதை அப்படியே வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியத் தயாரிப்புக்களுக்கு எதிராகச் செய்தால் இந்திய தேசபக்தர்கள் என்ன செய்வார்கள்.

ஒரு பொருள் தேவை கருதித்தான் ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று பார்க்க வேண்டுமே தவிர எந்த நாட்டிலிருந்து வருகிறதா என்றா பார்க்க முடியும். புற்று நோய்க்கான மருந்து அமெரிக்காவிலிருந்து வருகிறது. அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வால்மார்ட்டையோ, கோக், பெப்சி மற்றும் நொறுக்குத்தீனி ஆகிய வற்றை ஏற்றுக் கொள்ளாம எதிர்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு மருந்து கிடைக்காத பட்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பின்னைய பொருட்கள், இங்கு ஏற்கெனவே பல பேருக்கு வாழ்வளித்து வரும் தொழில்களை அழித்து, அதைனைச் சார்ந்தவர்களையும் அழித்து, ஒரு புதிய நுகர்வுக் கலாச்சாரத்தை நிறுவி, இயற்கையையும் பாழாக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு தேநீரை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியபோது அவை போதைப் பொருட்கள் என்று கருதி எதிர்க்கப்பட்டன.

எல்லா நாட்டு அரசும் பணக்காரனுக்கு ஆதரவாகவும் ஏழைகளுக்கு எதிராகவும்தான் இருக்கின்றனர். எல்லா நாட்டிலும் ஏழைகள்தான் சிரமப்படுகின்றனர். பட்டினியால் வாடுகின்றனர். எல்லைக் கோடுகள்தான் அவர்களைப் பிரிக்கிறது. நம் நாட்டு ஏழைகள் சிரமப்படக் கூடாது என எந்த நாட்டுப் பணக்காரனும் நினைப்பதில்லை.

நிலைமை இப்படி இருக்க ஒரு கொடியை வைத்து இதைப் பிரச்சனையாக்குகிறவரைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. நம் நாட்டின் தேசிய கீதம் என்று ஒரு பாடல் இருக்கிறது. அதன் பொருள் என்ன தெரியுமா ? அதில் வரும் சில பகுதிகளின் பெயர்கள் இருக்கிறதல்லவா, விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி என்வெல்லாம் வருகின்றன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்த போது அவரை இந்த (விந்திய மலை திராவிட குஜராத்தி மராத்தி) பகுதிகளெல்லாம் வாழ்த்துகின்றன என்ற பொருளில் பாடப்பட்டதுதான் அந்த பாடல், அதுதான் இன்னமும் தேசிய கீதமாக இருக்கிறது.

இந்தப் புகைப்படத்தை வைத்து அவர் இந்தியாவை மதிக்காமல் பாகிஸ்தானியாகிவிட்டார், என்று சொல்ல முனைகிறார்கள். அவர் முஸ்லிம் என்பதால் இந்த வெறுப்பை விதைக்கிறார்கள். சானியா குட்டைப்பாவாடையும், இறுக்கமான பனியனும் அணிந்ததால்தான் பிரபலமானார் என்று சொல்கிறவனுக்கும், சானியாவை போர்ன் புகைப்படங்களில் மார்ஃபிங் செய்தவனும் இந்த நாட்டுப்பற்றுப் புரளியைக் கிளப்புகிறவனும் ஒரே வகையானவர்கள்தான். இந்தக் குப்பையெல்லாம் நாம் புறந்தள்ளுவோம். இந்த மாதிரியான நாட்டுப்பற்றுதான் பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் மகிழ்ச்சியடையச் செய்கிறது. நமக்கு அவ்வளவு நாட்டுப்பற்றெல்லாம் கிடையாது. குண்டு எங்கு வெடித்தாலும் கவலைப்படும் தேசத்துரோகம்தான் என் கட்சி.

அண்ணா ஹஸாரே, அப்துல் கலாம் வகையில் அடுத்த நாட்டுப்பற்றில் முக்கியமான ஒரு பிரபலம், சத்யமேவ ஜயதே அமீர்கான். இவர் பல உண்மைகளைப் பேசினார் தனது நிகழ்ச்சியில், இல்லையென்று சொல்ல வில்லை. அதற்கு ஒரு மிகப்பெரிய வணிக விளம்பர நோக்கங்கள் நிறைந்த நிகழ்ச்சி என்பது சந்தேகமில்லை. இவர் பேசியவற்றில் இரண்டு, குழந்தைகள் பாலியல் வன்முறை, இன்னொன்று தண்ணீர் வளப்பாதுகாப்பு மாதிரியான ஒன்று. அமீர்கான் நினைத்தால் பாலிவுட் காரர்களை துகிலுரிப்பு நடனங்களைக் கைவிடுமாறு கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவையும் பாலியல் வன்முறையைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுத்து தண்ணீர் குறித்தது. இவருக்கெல்லாம் எந்தத் தகுதியும் இல்லை தண்ணீர் குறித்து பேச. காரணம் இந்தியா பாலைவனம் ஆனால் அதற்கு முக்கியக் காரண்மாக இருக்கப்போவது கோக்கும், பெப்சியும்தான் இவர் கோக்கின் தூதுவர் இவருக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது. லகான் என்ற படத்தில் இது போன்ற போலி தேசபக்தியை, வெறியை, உணர்ச்சியைத் தூண்டிக் கல்லாக் கட்டினார். இன்னொரு போலி தேசபக்திப் படம், ரங்தே பசந்தி, பகத் சிங்காக நடித்து தமது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார் அந்தப் படத்தில் அங்கங்கே கோக்கின் மறைமுக விளம்பரங்கள். இவர் நிகழ்ச்சியில் பேசும் பிரச்சனைகளுக்காக பலர் தமது வாழ்க்கையே அர்ப்பணித்துப் பேசியும், போராடியும் இருக்கிறார்கள். ஆனால் இவர் போன்ற நடிகர்கள் பேசினால்தான் கேட்பேன் பீல் பண்ணுவேன் என்று மக்கள் இருக்கிறார்கள். பிரபல நடிகர்கள் சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்று சொன்னால் கூட கன்னத்தில் போட்டுக் கொள்ளும் திரைப்பட பக்தர்கள் இருக்கும் வரை இவர்கள் கொடி பறக்கும்.

அடுத்தவர் ஷாரூக். சக் தே படத்தில் இது போன்ற போலி தேசபக்தி உணர்வைத் தூண்டி பணம் பார்த்தார். கோக் பெப்சி தடை செய்யப்பட்ட பின்பு இவர்தான் அமெரிக்க பெப்சிக்கு ஆதரவாகப் பேசினார். ஆனா அதே அமெரிக்கா இவர் முஸ்லிம் பெயரை வைத்து இவரை அவமானப் படுத்தியது. அதற்காக இவருக்கு உதவி செய்யச் சென்றது யார் ? பெப்சிக்காக இவர்  எதிர்த்து பேசிய இந்திய அரசு. இதுதான் அரசு. இவர்கள் சொல்கிறார்கள் எது நாட்டுப்பற்று எது துரோகம் என்று.  இப்போது நாட்டுப் பற்று என்றால் அது அணு உலையை எதிர்ப்பதுதான். அதை யார் ஆதரிக்கிறார்கள் யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

வெளியே வந்த பூனை - நாம் தமிழர் கட்சியினரின் அடுத்த இலக்கு கீற்று


 தமிழர்களின் முதன்மை எதிரியான திராவிடத்தை எதிர்க்கும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சிக்காரர்கள், அந்தக் கருத்துப்புரட்சியின் முதல் இலக்காகக் கீற்று இணையத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அது கீற்று இணையத்தின் தற்போதைய முகப்பின் "screen shot" ஆகும். அதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்வினையாக பெரியாரியவாதிகளால் வெளியிடப்பட்ட எதிர்ப்புக்கட்டுரைகளாகும். இதை வைத்து தமிழர்க்கு எதிரான திராவிடத்திற்கு கடை விரிக்கிறது கீற்று தளம் என்று சொல்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் வலுவாக இருக்கக் கண்டு அதற்கு பதில் சொல்லாமல் அவதூறு மழையைப் பொழியத் தொடங்கியுள்ளனர்.

கீற்று இணையத்தைப் பற்றி எல்லோர்க்கும் தெரிந்ததுதான். இவர்கள் ரமேசை தெலுங்கர் என்று வசை பாடுகிறார்கள். இதற்குமுன் இவர்கள் கீற்றுவைப் பார்த்ததே இல்லையா என்று தெரியவில்லை. கீற்றுவைப் போல மாற்று அரசியல் கருத்துக்கள் புழங்கிய இணையம் வேறு உண்டா எனத் தெரியவில்லை. மார்க்சிய வாதிகள், பெரியாரியவாதிகள், தமிழ்தேசியவாதிகள், தலித்தியம், இசுலாமியர் எனப் பலவையினரும் தமது கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். அங்கு அதிகமாக வெளியானதே தமிழ் சார்ந்த, தமிழீழம், மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்டுரைகள்தான். கீற்று ரமேசே விடுதலை புலிகளின் ஆதரவாளர்தான், இதனால்தான் தமிழ்தேசியவாதிகள் எழுதிய பல அபத்தமான கட்டுரைகள்,  விடுதலைப் புலிகளை மிகைப்படுத்திப் பேசும் கட்டுரைகள் போன்றவைதான் அங்கே அதிகமாக உலவுகின்றன.

போதாக்குறைக்கு தமிழ்த்தேசியவாதிகள் புகழும் யூத இன எழுச்சி என்ற பெயரில் இசுரேல் ஆதரவுக் கட்டுரைகள் கூட சில அதில் உண்டு. இதைத் தமிழ் இன உணர்வின் பெயரால் கீற்று வெளியிட்டிருந்தது. இதெல்லாமே ஏற்றுக் கொள்ளமுடியாதைவையாகும். என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் இசுரேலை ஆதரிக்கவெல்லாம் நடுநிலையாளர்களால் முடியாது. ஈழ ஆதரவாளார்களினால் ஈழத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக  யூதர்களைப் புகழ்ந்து அவர்களைப் போல ஈழத்தமிழரும் எழுச்சி பெறல் வேண்டும் என்ற நோக்கில் இசுரேல் என்ற மனிதகுலப் பகைவரான ஒரு நாட்டைப் புகழும் கட்டுரை கூட வெளியிடப்பட்டதாக நினைவு. இதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இதில் புலி எதிர்ப்பு என்றும் ஒரு பகுதியும் உள்ளது. ஆனாலும் மற்ற புலி எதிர்ப்பாளர்களின், தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் இணையத்தளங்களில் வெளியிடப்படுவது போன்று கடுமையான விமர்சனங்கள் அதில் இல்லை. நானே ஒரிரு முறை ஐயமுற்றேன் கீற்று இணையத்தில் வெறும் தமிழ்தேசியக் கட்டுரைகளே வெளிவருகின்றன என்று. அதில் சீமானைப் புகழும் கட்டுரைகள் கூட இடம் பெற்றிருந்தன. அப்போதெல்லாம் அவர் தெலுங்கராகத் தெரியவில்லை. ஈழ ஆதரவு, புலி ஆதரவுக் கட்டுரைகள் கீற்று இணையம் அளவுக்கு வந்திருக்குமா வேறு எங்காவது என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.

சீமானும் ஜெயாவுக்கு ஆதரவாக மாறியதிலிருந்து சீமானையோ நாம் தமிழர் கட்சியையோ குறிப்பிட்டு விமர்சித்து பெரிய அளவில் கட்டுரைகளோ யாரும் கீற்றுவில் எழுதியிருக்க வில்லை. தற்போது கட்சியின் ஆவணம் வெளியிடப்பட்ட பின்புதான் அதற்கெதிரான எதிர்கட்டுரைகள் வரத் தொடங்கின. முதலில் மணிசெந்தில் மட்டும் ஒரு எதிர்கட்டுரை வெளியிட்டார். அதற்குப் பின்பு சீமானின் தமிழக அரசியல் இதழில் பேட்டி கொடுத்ததை மறுத்தார். நாங்கள் பெரியாருக்கு எதிரி இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து தூய தமிழ் தேசியம் பேசி கோவை பெரியார்திக தலைவர் தெலுங்கர் என்று சொல்லும் அளவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் யாழ்ப்பாண வேளாள ஜாதி ஆதிக்கம் நிரம்பிய ஈழத்துத் தமிழ்த்தேசியவாதிகளை நினைவூட்டுகிறார்கள். வாழ்க தமிழ் தேசியம்.

எதிர்வினைக்கு பதில் சொல்வதற்கு இயலாமல் கீற்று ரமேசை தெலுங்கர் என்றும், ப்ரியாதம்பியை மலையாளி என்றும் வசைபாடுவது கண்டனத்திற்குரியதாகும்.
 

Download As PDF
Bookmark and Share

Post Comment

வலையுலகம் ஏன் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது ?

தற்போது வலையுலகில் ஒருவித மந்த நிலை நிலவுவது போல் தோன்றுகிறது. இணையத்தில் எழுத்தார்வமும், வாசிப்பார்வமும், தமிழார்வமும் கொண்டோர்க்கு இது மிகவும் கவலை கொள்ளக்கூடியதாகும். இப்போது நிறையப் பேர் புதியதாக எழுத வருகிறார்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் நிறையப் பேர்களை இப்போது காணவில்லை. அவர்கள் வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா என்றும் தெரியவில்லை. சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், ரீடர், பஸ் போன்றவற்றில் மட்டுமே எழுதிவருவதாகவும் கேள்விப்படுகிறோம். இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி சென்றடைய முடியாது என்ற நிலையில் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், சுருக்கிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

திரட்டிகளில் தங்கள் பதிவுகளையும் வலைப்பூக்களையும் இணைத்துக் கொள்ளாதவர்கள் கூட இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் தெரியவில்லை. இது போன்று இணைய வாசிப்புக்காக ஏங்கியவர்களின் பசியைப் போக்கியவைதான் திரட்டிகள். எல்லோருக்கும் எல்லா இணையத்தளங்களின் பெயரையும் முகவரியையும் அறிந்து வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது தெரிந்ததே. எனக்கு ஆனந்த விகடன் மூலமாகவே தமிழ்மணம் அறிமுகமானது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அறிந்தேன். அப்போது திரட்டிகள் வலைப்பூக்கள் என எதுவும் தெரியாது. வெறுமனே இணைப்புகளை சொடுக்குவதன் மூலமே படித்தேன் சில நாட்களாக.

இது போன்று இணையமும் நேரமும் கைவரப்பெற்றும் வலைப்பூக்கள் பற்றி அறியாதவர்கள் திரட்டிகள் மூலமே பல வலைப்பூக்களையும் வாசிக்க இயலும். எல்லாத் தகவல்களையும் பெற்றிட முடியும். மேலும் அவர்கள் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அது அமையும் என்பதே இதன் சிறப்பம்சம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எனக்கு நேரம் என்பது இருந்ததேயில்லை. அதிகம் வாசிப்பதற்கு நேரமில்லை என்ற நிலையிலெல்லாம், தமிழ்மணம் உட்பட எல்லாத் திரட்டிகளிலும் சூடான பதிவுகள் குறையாமல் வந்து கொண்டேயிருந்தன. கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, விமர்சனம், மதம் என அனைத்துத் வகைகளிலும் அல்லது ஒரு சிலவற்றில் மட்டுமாவது மிகவும் பரபரப்பாக இயங்கிய பதிவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்றே தெரியவில்லை. மிகவும் அரிதாக எழுதுகிறார்கள். அல்லது எழுதுவதேயில்லை.

புதிதாக வரும் வலைஞர்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்பது பரவலாகக் காணப்படக் கூடியதாகும். ஏதாவதொரு இணைப்பையோ அல்லது புகைப்படத்தையோ பகிர்ந்து கொண்டவுடன் பத்துப்பேர்கள் வந்து "Like" செய்யவும், அல்லது கருத்துச்சொல்லவும் இது ஒன்றும் ஃபேஸ்புக் அல்ல. எழுதுவது எவ்வளவு சிரமமோ அதே அளவு சிரமமானதுதான் பின்னூட்டமிடுவதும். தமிழில் பதிவு எழுதுவதே அதிகப்படியான சுமை என்னும் நிலையில் நேரமொதுக்கி அடுத்தவர் பதிவைப் படிப்பதற்கும், அதற்கு கைவலிக்க பின்னூட்டம் போடுவதற்கு எல்லோருமே சோம்பேறித்தனம்தான் படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதன் மூலமே நம்மை நாமே வளர்த்துக் கொள்ளமுடியும் என்பது என் கருத்து. எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சிறப்பாக எழுதுகிறவர்கள் நிறையப்பேர்களுக்கு எந்தவொரு பின்னூட்டமும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலரோ ஏற்கெனவே பதிவுலகில் இருந்தவர்கள், அவர்கள் ஏன் அதிகம் பங்களிப்பது இல்லை என்றால் திரைப்படம் சார்ந்த பதிவுகளோ, செய்திகளோ, அச்சு மாறாமல் படியெடுக்கப்பட்டவையோ, நகைச்சுவைக் கும்மிப் பதிவுகளோ மதம் சார்ந்த பதிவுகளோ மட்டுமே எப்போதும் தமிழ்மணத்தின் முகப்பில் முன்னணியில் தெரிகின்றன படிப்பதற்கே விருப்பமில்லை என்கிறார்கள். எல்லாவகையினரும் கலந்து இருப்பதன் மூலமாகத்தான் நிறைய வாசகர்களைச் சென்றடைய முடியும். இது சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும் இதை எழுதக் கூடாது என்றெல்லாம் சொல்லவது நியாயமுமில்லை. அவரவர்க்கு அவரவர் கொள்கைகளுக்காக எழுதுகிறார்கள். எதற்கு எதிராகவும் ஆதரவாகவும் நம்மால் மாற்றுக் கருத்தை வைப்பதற்கு இதுதானே வழிசெய்கிறது. உண்மையிலேயே இது போன்று கவலைப்படுகிறவர்கள் தாங்கள் விரும்பிப் படித்த நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமும், வாக்கும் தவறாமல் போட்டதுண்டா என்பது அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும்.

வலைப்பூக்கள் எழுதும்போதும், படிக்கும்போதும் நம்மையறியாமல் நிறையக் கற்றுக் கொள்கிறோம் தெரிந்தும் கொள்கிறோம். கருத்துக்களில் கொள்கைகளில் நிறைய மாறிவிடுகிறோம். இதன் பொருள் இந்துவாக இருந்து முஸ்லிமாகவோ, முஸ்லிமாக இருந்து கிறித்தவனாகவோ என்ற அள்விற்கு மாற்றம் வந்து விடும் என்பதல்ல. மாறாக சிறு சிறு மாற்றங்கள் நமது பொது அறிவிலும் கேள்வி அறிவுலும் எழுத்திலும் என்று சொல்ல வருகிறேன். மக்கள்திரள் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கும் நம் வலையுலகில் இருக்கும் கருத்துக்கும் எந்தளவு ஒற்றுமையிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியும். அதில் கிடைக்காத செய்திகள் எத்தனையோ இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னோரு வகையில் பார்த்தால் சமூகத்தில் ஒன்றாயிருப்பது, ஒத்த கருத்துக்கள் கொண்ட வேவ்வேறிடங்களிலுள்ள புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. இது போன்ற பல நன்மைகள் வலை உலகில் மட்டுமே சாத்தியம்.

ஆகவே எழுத்தார்வமும், ஆற்றலும் உடையவர்கள் தொடந்து எழுத வேண்டுமென்பதே எனது அவா. நம்ம எழுதி என்னவாகப் போகுது ?, நேரமில்ல ? என்பது போன்ற எண்ணங்கள், வெறுமை, மனச்சோர்வு, இடைவெளி, தேக்கநிலை, வெற்றிடம் என்பது மாதிரியான மனநிலைகள் தோன்றினாலும் தொடர்ந்து சோர்வடையாமல் எழுதுங்கள். எதுவும் எழுதாமல் இருப்பதைவிட எழுதுவது எவ்வளவோ மேலானது.
Download As PDF
Bookmark and Share

Post Comment