பெரும்பான்மை மனநோய் தவிர்ப்போம்


பெரும்பான்மை மனநோய் எப்படி இருக்கிறது. இறைவனைப் போன்று பலவித வடிவங்களில் பலவித நிறங்களிலும், பண்புகளிலும் இருக்கிறது. நம் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குருதியாறு ஓட வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இலங்கையில் பெரும்பான்மை மனநோய் சிங்களப் பேரினவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது அவர்களது மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. மொழியைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. பெரும்பான்மை ஆதிக்க வெறியை சமூக இயல்பாக மாற்றுகிறது. அவர்கள் மீது வன்முறை செலுத்துகிறது. அவர்களை இனப்படுகொலை செய்கிறது. அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கிறது. அவர்களை வாழிடங்களை விட்டு துரத்துகிறது. அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து இன்னும் உயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதிகளாக்கி மொத்த சமூகத்தையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்துகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மனநோய் இந்து மதவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது. அவர்கள் மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. முன்பு நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் இவர்கள் வந்ததால் நாம் நாசமானோம் என்கிறது

பாகிஸ்தானில் உருது திணிக்கப்பட்டதால் வங்க மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு கலகம் மூண்டு தனிநாடாயினர். தனிநாடாக முடியாதோர் அகதிகளாய் அவதியுறுகின்றனர். அரச பயங்கர வாதத்தினால் அல்லல் படுகின்றனர்.

ஈராக்கிலும், பாகிஸ்தானிலும், சிரியாவிலும் பெரும்பான்மை (சன்னி) மனநோயால் குர்துகள், யஸ்திகள், ஷியாக்கள் அல்லல் படுகின்றனர். இனப்படுகொலைக்கு ஆளாகின்றனர். துருக்கி நாட்டிலும் பெரும்பான்மை மனநோய் சிறுபான்மை குர்து இனம் தனிமைப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மை இனமானது அவர்கள் முன்னோர் செய்த தவறுகளுக்கு பொறுப்பாகாது. ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் பிரிவு பின்பற்றும் மதம் மொழி இன்னோர் நாட்டில் வாழும் பெரும்பான்மை பிரிவினர் பின்பற்றுவதாகவும் இருக்கக் கூடும். ஒரு நாட்டிலோ மாநிலத்திலோ பெரும்பான்மை செய்யும் தவறுக்கு மற்றொரு நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதும் இந்த பெரும்பான்மை மனநோய்தான் காரணம்.  அதற்கு அந்த சமூகத்தையே ஒட்டு மொத்தப் பழியும் சுமக்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

இந்தப் பெரும்பான்மை மனநோய்க்கு எந்த வித அடையாளங்களும் இருக்கலாம். மதம், இனம், மொழி அல்லது மூன்றுமாகவும் இருக்கலாம். ஜாதியாகவும் இருக்கலாம். இதில் ஈடுபடுவோர் மிகச்சிலராக இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவரே இருப்பர். பண்பாடு, பிறப்பு, பின்பற்றும் நம்பிக்கைகள் காரணமாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பெயரால் இயக்கம் நடத்துவோர் சிறுபான்மையினருக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமலும், மனசாட்சியை மறைத்துக் கொண்டும் வாழ்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெறி கொள்வதற்கேற்ற பொய்க் காரணங்கள், வரலாறுகள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பெரும்பான்மை மனநோயால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே மக்களாகிய நாம், நாம் பின்பற்றும், நம்பிக்கை கொள்ளும், நேசிக்கும் இன, மத, மொழி காரணமாக அதன் பெயரால் மற்ற சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் ஆதரவளிக்காமல் இருக்க வேண்டும்.

அந்த வன்முறையா நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் அந்த வன்முறையை, வன்முறையை நடத்துகிறவர்களை ஆதரிக்கவே கூடாது. ஏனெனில் பெருங்கொடுமை செய்வோர் தாம்தான் அந்த சமூகத்தையே காக்க வந்தவர் உய்விக்க வந்தவர் போன்ற தோற்றத்தை உருவாக்குவர். சமூகத்தில் மத நல்லிணக்கம் இருப்பதை வெறுத்து வெறுப்பை விதைப்பவர். அதன் மூலம் அரசியல் செய்து தமது நோக்கங்களை நிறைவேற்றுவர்.

இன்று #டிசம்பர் 6

#பாபர் மஸ்ஜித்  பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள். இதை ஜனநாயகம் இந்நாட்டில் தொடர விரும்புவோர் அனைவரும் வெறுக்கப்பட வேண்டிய செயல். நினைவு கூரத்தக்க நாள்.

இதை கொஞ்சம் விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்ள வேண்டும். மதவெறியால், பெரும்பான்மை வெறியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இது எள்ளலாகத் தெரியும். ஆனால் நம்பிக்கை காரணமாக ஊசலாடும் மனங்கள்தான் இங்கே அதிகம் என்பதாலும், இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இங்கே வாழும் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தளம் இடிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். இல்லை முஸ்லிம்கள் எப்போதும் தம் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் இந்துக்கள் மட்டும் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்குக் கொஞ்சம் வரலாறு சொன்னால் போதும்.

எத்தனையோ மன்னர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான் எதிர்களும் இந்து மதம்தான் அவர்கள் படையெடுத்து வென்ற மன்னர்களும் இந்து மதமாக இருந்தாலும் அவர்கள் கட்டிய கோவிலை இடிப்பார்கள், இடித்திருக்கிறார்கள். ஏன் ராஜ ராஜ சோழன் எத்தனை இடங்களை வென்றான் ? அவன் கங்கை கொண்டான் கடாரம் கொண்டான் என்றால் என்ன அங்கே போரும் இனப்படுகொலையும் நடந்திருக்கிறது என்றுதானே பொருள். 800 வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்த போதும், ஆண்ட போது இந்தியாவிலே இந்து மதம்தானே பெரும்பான்மையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 1000 வருடங்களுக்கு மேலாக ஆண்ட போதும் இந்தியாவில் இந்து மதம்தான் பெரிய மதமாக இருக்கிறது. இப்படியிருக்க அவர்களால்தான் இந்து மதத்துக்கு ஆபத்து, இந்துக்களுக்கு ஆபத்து என்பது என்ன வகை தந்திரம்.

இஸ்லாமிய ஆட்சி நடக்கும் மலேசியாவில் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இஸ்லாமிய ஜனநாயகக் குடியரசான பாகிஸ்தானிலும் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் தாடிக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்துக் கோயிலை இடித்திருக்கிறார்களா ? இல்லை அந்நாட்டின் முதன்மையான எதிர்கட்சி ஒன்று அப்படி செய்தால் எப்படி இருக்கும்.

அவ்வளவு எதற்கு இலங்கையில் இருக்கும் இந்துக் கோயில்களை இடித்து புத்த விகாரைகளை கட்டும் சிங்களப் பேரினவாத அரசும், புத்தர் சிலைகளை வைத்து வன்முறை ஊர்வலங்களை நடத்தும் பொதுபல சேனாவை வழிநடத்துவதும் சிறுபான்மைக்கெதிரான பெரும்பான்மை வெறிதான்.

கொஞ்சம் அடையாளம் கடந்து சிந்தித்தால் விளங்கும். தவறு செய்யும் ஒரு சிறு கும்பலே பெரும்பான்மை அடையாளத்தை தனது முகமூடியாக அணிந்து வரும்.
 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

என்னது பாஜக தமிழை ஏற்றுக் கொண்டதா ?

அய்யடா !! இந்திய மக்கள் கட்சி (பிஜேபி) தமிழைப் பெருமைப்படுத்தறாங்களாம். ஏன் இப்போதுதான் தமிழின் பெருமையை புரிந்து கொண்டீங்களாக்கும். சரி இருக்கட்டும். இந்த அறிவிப்பில் ஏதாவது நேர்மை இருக்கிறதா ?

இதுவரை ஹிந்தியை, செங்கிருதத்தை திணித்த போதும், பொய்களை அவிழ்த்து விட்ட போதும் ஒன்றுமே நடக்காதது போன்று கள்ள மௌனம் காத்தவர்களும், தமிழ் வெறியர்களும் சேர்த்து இதை "பாத்தியா பாத்தியா இப்ப என்ன சொல்வ? என்று  கொட்டி முழக்கலாம்.

ஹிந்தி மொழியையே திணிப்பதற்கும், திருக்குறளைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறுபாடு இல்லையா ? 

ஹிந்தி மொழியை நாம் கற்க வேண்டும். பதிலுக்கு அவர்கள் திருக்குறள் பாடமும் திருவள்ளுவர் நாள் விழாவும். நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வரேன் ஊதி ஊதி ரெண்டு பேருந்திங்கலாம்.

இப்படிச் சொன்னால் புரியும், நீங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஹிந்தியில் ஒரு பெரிய அறிஞரின் இலக்கியத்தின் ஒரு பகுதியை பாடமாக வைத்துக் கொள்கிறோம். எப்படி வசதி ?

சரி தமிழல்லாத மற்ற மாநிலங்களில் இது போல் அவர்கள் மொழிக்கும் மொழிசார்ந்த இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா நடுவணரசு ?

ஹிந்தித் திணிப்புக்கு இந்த திருவள்ளுவர் விழாவும் டேலியாகாது என்ற போதும், இது தவறே.

அட ராமா !! இனி இங்க நம்ம இந்தியைத் திட்ற மாதிரி அங்க தமிழையும் வள்ளுவனையும் திட்டுவார்கள். தேவை எல்லா மொழிகளுக்கும் சமத்துவமே.

தமிழைப் புகழ்வதாலோ அடுத்தவன கொண்டாடச் சொல்வதையோ, படிக்கச் சொல்வதையோ ஏற்க  முடியாது. ஒரு மொழி பேசுவோர் மற்றதை கற்பது இயல்பாக நடக்க வேண்டும். நடக்கும். எப்போது ? எல்லா மொழிகளும் சமமாக நடத்தப்படும்போது.

இங்க இந்தித் திணிப்பும் வேண்டாம் அங்க தமிழ் வள்ளுவத் திணிப்பும் வேண்டாம். சம்பந்த சம்பந்தமில்லாமல் எதற்கெடுத்தாலும் அப்படிக் கொண்டாட வேண்டும் இதைக்கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு.

முதலில் உங்கள் ஹிந்தி, சம்ஸ்கிருத  வெறியைக் கைவிடத் தயாரா  ?

ஹிந்தி விசயத்தில் காங்கிரசுக்கு எதிராக நிலைப்பாடு எடுங்களேன் பார்ப்போம்.

ஹிந்திதான் நாட்டின் முக்காவாசிப் பேர் பேசுகிறார் என்றெல்லாம், செங்கிருதம்தான் எல்லாவற்றுக்கும் மேல் என்று நம்பிக்கையுடையவர்களிடம் எல்லா மொழியும் சமமென்று சொல்லுங்களேன். திருந்த வேண்டியது நீங்கதான்.

கால் நூற்றாண்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி பெரிய அளவில் கூட்டம் சேர்க்க இயலவில்லை. தமிழ் இந்துக்கள் வந்தமா சாமி கும்பிட்டமா என்று போனார்கள். இவர்களுடன் இணைந்து ராமன் கோயில் வேண்டுமென்று கலவரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு இவர்களே குண்டு வைத்தும் பார்த்தார்கள். வெறுப்பை விதைக்க முயன்று பார்த்தார்கள். கடைசியாக மோடி அலையில் அள்ளிவிடலாம் என்று நினைத்தார்கள். அதிலும் எதிர்பார்த்தளவு இல்லை. தூய இந்தியா என்ற இவர்களது நகைச்சுவை சுய விளம்பரக் கைப்படம்(செல்ஃபி) எடுத்து ரஜினி கமல் என்று அனைவரையும் டாக் செய்து பார்த்தார்கள். இப்போது ஆண்ட பரம்பரைக் கனவில் திளைக்கும் மேல்ஜாதி வெறிக் கூட்டத்தை வளைக்க ராஜ ராஜ சோழனைக் கொண்டாடி உள்ளே புகப் பார்க்கிறார்கள். அதன் அடுத்த முயற்சியாகத்தான் திருவள்ளுவரைப் புகழ்ந்து தமிழனின் நெஞ்சை நக்கி நஞ்சை விதைக்கப் பார்க்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆர்.எஸ்.எஸ் - இன் கொலைவெறியை மறைக்கும் தினமணி நாளிதழ்

செய்தி விமர்சனத்துக்குப் போகும் முன் ஒரு சிறிய தகவல். 100% கல்விக்குப் பேர் பெற்ற கேரளா மாநிலம் தற்போது மதவெறி இயக்கங்களின் கட்சிகளின் வளர்ச்சிக்கும் அற்புதமான இடமாக இருக்கிறது. கடந்த மாதம் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த RSS  தொண்டர் ஒருவர் அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரவலாக வெளியாகாத செய்தி.  இதே ஒரு முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது இயக்கம் சாராத முஸ்லிமோ செய்திருந்தால் என்னாவாகியிருக்கும். இந்தியா முழுவதும் ஊடகங்களுக்கு ஒரு வாரத்திற்கான பரபரப்புத் தீனி கிடைத்திருக்குமல்லவா ?

இதை வைத்து கேரளாவில் இந்துத் தீவிரவாதம் பயங்கரமாக வளர்ந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. அங்கே குண்டு வைத்துக் கொல்வது சாதாரணம் என்றும் சிலர் ஃபேஸ்புக்கில் பேசிக் கொள்வதையும் கேட்டேன். சிபிஎம் காரர்களும், பாஜகவினரும் வெட்டிக் கொண்டு சாவதும் அவ்வப்போது நடக்கிறது. ((

காந்திக்குப் பதிலாக நேருவைக் கொன்றிருக்க வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ் என்ற அகில இந்திய பயங்கரவாத இயக்கத்தின் கேரளப் பிரிவின் சார்பில் மலையாள மொழியில் வெளியாகும் "கேசரி" என்ற இதழில் வெளியான கருத்து ஆகும். இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது. இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் பெருந்தலைகள் சொதப்பியும், மழுப்பியும் பதில் சொல்லி வருகின்றனர். அப்படி மழுப்பியதில் ஒன்று அதற்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் தொடர்பு இல்லை என்பது. இன்னொன்று காந்தி கொல்லப்பட்டதற்கான காரணமே நேருதானாம். என்ன ? காந்தி ஒரு கோழை. இந்துக்கள் முஸ்லிம்களால் கொல்லப்படக் காரணமானவர். ஆனால் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடும்போது மட்டும் தடுத்தார். முஸ்லிம்கள் கலவரத்தைத் தொடங்கிய போது எதுவும் செய்யவில்லை என்பனவையே வழக்கமாக இவர்கள் பாடும் பல்லவி. அதானே. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் காரன் இல்லை என்று கூட அடித்து விடுபவர்கள்தானே இவர்கள்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய நேருவுக்கு இது தேவைதான்.
 

சரி அது கிடக்கட்டும். நமது தினமணி செய்திருக்கும் ஊழியத்தைப் பாருங்கள். தினமணியை மட்டும் வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அந்த கேசரி இதழில் வெளியான கருத்து என்னவென்றே தெரியாதளவுக்கு மறைத்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர்களின் மறுப்பை மட்டுமே முதன்மைப் படுத்தியுள்ளது. இதைப் படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். ஆஹா இந்த மதச்சார்பின்மை மண்டூகங்கள் மீண்டும் சின்ன விசயத்தைப் பெரிதுபடுத்தி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும், பாஜகவையும், மோடியையும் இழிவு படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்று மனக்குரலைக் கேட்டு புலம்புவார்கள்.

இதில் கடைசிப் பத்தியில் சிந்தனையிலோ செயலிலோ எவ்வித வன்முறையையும் ஆர்.எஸ்.எஸ் கண்டித்தே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம். ஏனெனில் அது அவர்களை இழிவு படுத்தும் செய்தியன்றோ !

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)


சமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் விற்கப்பட்ட அந்நூல் வேறு எதைப் பற்றியகுறிப்புகளுடன் இருக்கப் போகிறது குதிரையைத் தவிர. வேடிக்கை என்னவென்றால், அந்நூலின் முதல் பக்கத்தில் இந்நூல் விற்பனைக்கன்று சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. என்ன சங்கம் விவசாயிகள் மற்றும் குதிரை வளர்ப்போர் சங்கம் திருப்பூர் மாவட்டம்(FARMERS & HORSE BREEDERS ASSOCIATION TIRUPUR DISTRICT). விற்பனைக்கு இல்லை என்று விதித்திருந்தும் எப்படி விற்பனைக்கு வருகிறது ? விலையைக் காட்டிலும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் விதிமுறை தளர்ந்து விடுகிறது. 

அப்படியென்ன ரகசியம் இதில் இருக்கிறது எனில் குதிரை வளர்க்க விரும்புவோர், வாங்க விரும்புவோர், குதிரை வைத்திருப்போர்களுக்கான குறிப்புகள் அடங்கிய நூல்தானிது. சந்தைக்கு வருகிறவரெல்லாம் குதிரை வாங்கவா முடியும், ஒருபாடு பேர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். வருகிறவர்கள் குதிரை வாங்காமல் சந்தைக்குப் போனதற்கான அடையாளமாய், போனால் போகிறதென்று ஒரு சாட்டையையோ அல்லது இது போன்ற ஒரு நூலையோ வாங்கிச் செல்வர் போலிருக்கிறது. 


நூலின் மொழிநடை நூறு வருடங்களுக்கு முந்தியதாகத் இருக்கிறது. குதிரையில் இத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதா என்று தோன்றியது. மேலும் வருணாசிரம தருமம் என்ற ஒரு சமாச்சாரத்தைக் கேட்டிருப்போம். அது மனிதர்களுக்கு மட்டும்தானென்றிருந்தேன், ஆனால் மனிதப் பிறவிகள் குதிரைகளின் பிறப்புக்கும் அப்படியொரு விதியை வகுத்து இருக்கிறார்கள் என்று இந்நூலின் மூலம் அறிந்தேன். இதில் வருண பேதம் என்பது குதிரைகளின் நிறத்தை வைத்து கூடும், கூடாது என்று சில விதிகள் கணித்து வைத்திருக்கிறார்கள். பெண் பார்ப்பதற்கு தேவையான தகுதிகளை விட குதிரை வாங்கும் போது இன்னும் அதிகமானவற்றைப்பார்த்து ஆய்ந்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அந்நூல்.

குதிரை பிறந்த (குட்டி போட்ட) கணத்திலிருந்து அந்த கணிப்புத் தொடங்குகிறது. இன்னின்ன நாட்டில் அல்லது ஊரில் பிறந்த குதிரைகள் இப்படியெல்லாம் இருக்கும், இதனால் அதன் முதலாளிக்கு இலாபமுண்டாகுமா அல்லது கெடுதல் உண்டாகுமா என்றெல்லாம் கணிக்கப்பட்டுள்ளது.

குதிரை எந்த ஊரைச் சார்ந்தது அல்லது நாட்டைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து அதன் வேகம், திறமை, வலிமை குறித்துச் சொல்கிறது இந்நூல். எந்த நேரத்தில் பிறந்தது என்பதைப் பொறுத்து அதை வாங்குகிறவருக்கு, அல்லது வைத்திருப்பவருக்கு ஏற்படும் மாற்றங்கள் - நன்மைகள், தீமைகள் என்று வரையறுக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று - குறிப்பாக சித்திரை மாதத்தில் குதிரை பிறந்தால் அல்லது பிறந்த குதிரையை வைத்திருந்தால், வாங்கினால் அல்லது வளர்ந்த்தால் அந்தக் குதிரைக் காரன் நட்டமடைவான். எனவே பரிகாரமாய அக்குதிரையை பரதேசிகளுக்கு தானமளித்திட வேண்டும் இல்லையெனில் குதிரையின் காதுகளை அறுத்து விட வேண்டுமாம் (:.
                                        
குதிரைகளின் வயதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அதன் பற்களின் நிறத்தை வைத்து முடியுமாம். பற்களின் நிறம் மாறும், ஒவ்வொரு நிறமும் மூன்று வருடங்கள் நிலைக்கும் இவ்வாறு ஒன்பது விதமான நிறங்களிருக்கின்றனவாம். காலிகா, அறளிகா, குளிகா, காஜா, மாக்கா, சிங்கா, ஊலிகா, லங்குனி, மற்றும் பெஸ்தி  ஆகியன குதிரைகளின் பற்களின் நிறங்கள். ஒவ்வொரு நிறத்திற்கு குறிப்பிட்ட வயதாக கணிக்கிறார்கள்.

குதிரை வாங்கும் நபரின் முன்பாக அக்குதிரை லத்தி போட்டால் அது நன்மை தரும் குதிரை, எனவே வாங்கலாமாம், சிறுநீர் கழித்தால் அக்குதிரையை வாங்கக்கூடாதாம்.

அடுத்து குதிரையின் ஜாதியறிவது எப்படி என்று விளக்குகிறார்கள்.

குதிரையை நீரின் (நீர் நிலை) முன் விட்டு அதன் மறுவினையைக் கொண்டு ஜாதி பிரிக்கிறார்கள். பிரம்ம க்ஷத்ரிய வைசிய சூத்திர ஜாதியறிதல் இவ்வாறு ;


பிரம்ம ஜாதி -

நீரைக் கண்டவுடன் கண்வரையில் நீரில் தலையை மூழ்க விட்டு நீரைப் பருகும்.
இந்திரியக் கட்டுப்பாடு, நல்ல குணம், புத்திசாலி, குற்றமற்ற நடை
போரில் முன்செல்லாமல் பின்வாங்கும்

க்ஷத்திரிய ஜாதி -

மூக்கு வெளியே தெரியும் படிக்குத் தண்ணீர் குடிக்கும். கோபமும், பராக்கிரமமும் வாய்ந்தது. பெரிய உருவமுடையது. போரில் தனது எஜமானனைக் காக்கும், எதிரிகளைக் குதறி துவம்சம் செய்யும். போருக்குத் தகுதியானவை

வைசிய ஜாதி -

வாய் பட்டும் படாமலும் நீர் பருகும், நீரைக் கண்டு அஞ்சியே நடக்கும். இயற்கைச் சீற்றம் தாங்கும். ஓய்வில்லாது உழைக்கும் முரட்டு வேலைக்கு ஆனது.. சவாரிக்கும், கீழ்ப்படியவும் ஆகாதது.

சூத்திர ஜாதி -

சவுக்காலடித்தாலொழிய நீரில் கால் வைக்காது. அச்சமும் அயோக்கியத்தனமும் உடையது. எஜமானனைக் கீழே தள்ளி கடித்துக் கொன்று விடும்

இதில் சூத்திர ஜாதிக் குதிரையை மட்டும் வாங்கக் கூடாது. வாங்குவோர் நட்டமடைவர். இன்ன பிற மூன்று ஜாதிக் குதிரைகளையும் வாங்கலாம் அதிலும் வைசிய ஜாதிக்குதிரை கடின வேலைக்கும் மட்டும் உதவும். முதலிரண்டு ஜாதிகளுமே வாங்கத் தக்கவை.. பெருமைக்குரியவை.

குதிரைகளின் சுழியை வைத்தும் சில பண்புகளைக் கணிக்கலாமாம்.

குதிரைகளின் ராசி வகைகள் -  காத்திராசி, பத்தவிராசி, கீரிராசி

என்றெல்லாம் அந்நூல் விவரித்துச் செல்கிறது. வருண பேதமும் இருக்கிறது, இதில் குதிரையின் வண்ணங்களின் கலவையைக் கொண்டு பிரிக்கிறார்கள். வால் மட்டும் வெள்ளை மற்ற இடங்கள் கருப்பு, ஒரு கால் மட்டும் கருப்பு மற்ற பாகங்கள் வெண்மை, அல்லது பிடரி கண் முடிகள் மட்டும் கருப்பு இன்ன பிற இடங்கள் வேறு நிறம் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெயராக வைத்திருக்கிறார்கள். குதிரைகள் இப்படியாக பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டேன். இதிலிருந்து என்ன புரிகிறதோ அதைப் புரிந்து கொள்ளுங்கள் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
                                                                                                           
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

எரிச்சலைக் கிளப்பும் விநாயகர் சதுர்த்தி எதில் சேர்த்தி ?

இந்த விநாயகர் சதுர்த்தி என்று மதவெறியைத் தூண்டும் ஒரு நச்சுக் கலாச்சாரத்தை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் வெற்றிகரமாகப் பரப்பியுள்ளது இந்து முண்ணனி என்ற RSS-இன் ஒரு பிரிவைச் சார்ந்த வன்முறைக் கூட்டம். இந்த இந்து முன்னணி தென்காசியில் தனது அலுவலகத்திற்குத் தானே வெடிகுண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சதி என்று விளம்பரம் தேடியது. விநாயகர் சிலைக்கு செருப்புமாலையை இவர்களே போட்டு விட்டு திக காரர்கள் என்றும் பழி போட்டு பின்பு மாட்டிக் கொண்டது. தமிழகத்தில் மட்டும் மூன்று பாஜக காரர்கள் தம் வீட்டுக்கு தாமே பெட்ரோல் குண்டுகள் வெடிகுண்டுகள் வீசியும் (இந்து இயக்கத் தலைவர்களாகிய) தாம் பயங்கரவாதிகளால் ஆபத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டு விளம்பரம் தேடி மாட்டியுள்ளனர்

இந்த ஊர்வலம் தொடங்கும் இரு வாரங்கள் முன்பிருந்தே இந்த சிலைக்குக் காவல்துறை பாதுகாப்புப் போட வேண்டும். காவல்துறைக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தியையே தடை செய்வார்கள் என்ற அளவுக்கு அவர்களை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள் இந்த நாறிப்போன ஊர்வலத்தை நடத்துகிறவர்கள். ஊர்வலம் செல்லும் போது பல வாகனங்களில் கூச்சலிட்டபடியும் மோளமடித்துக் கொண்டும் செல்வார்கள். சமகாலத்திய குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியபடியும் செல்வார்கள். இதில் எங்கே பக்தி இருக்கிறது ? கலாச்சாரம் இருக்கிறது.


வெள்ளைக்காரன் காலத்தில் ப்ளேக் நோய் பரவுவதைத் தடுக்க எலிகளையெல்லாம் கொல்ல வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதாம், அதை எதிர்த்த திலகர் என்பவர் எலிகளெல்லாம் வியாகனின் வாகனங்கள் அதைக் கொல்லக் கூடாது என்று தொடங்கப்பட்டதே விநாயகர் ஊர்வலம் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். அது இத்தனை ஆண்டுகளில் வெறியாட்டம் போடும் ஊர்வலமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.


கொடும கொடுமன்னு கோவிலுக்குப் போனா அங்கொரு கொடுமை தலைவிரிச்சு ஆடுச்சுன்னு சொல்றதற்கு சரியான உதாரணம் இதுகதான். வட இந்தியக் கலாச்சாரமான காட்டுமிராண்டிக் குத்தாட்டத்தை சகிக்க முடியல. புள்ளையார் ஆண் பெண், வயசு பேதமில்லாம, எல்லார்க்கும் புடிச்ச சாமியாதான் இருந்தாரு. இனி அப்படி இருக்காது. காரணம் இவாதான். எதிர்காலத்தில என்னவெல்லாம் நடக்கும்னு நினைச்சாலே குலைநடுங்குது


வருசா வருசம் ஊர்ல இருக்கற மொத்த சல்லிப் பசங்களும் ஐயப்பனுக்கு மாலை போடறேன்னு சீனைப் போடுவானுங்க பாருங்க. ஆனா விநாயகர் சதுர்த்தின்னு சொல்லிட்டு வரும் இவர்கள் பண்ணும் அக்கப்போருக்கு ஐயப்ப பக்தர்கள் 100 மடங்கு தேவலாம். ஆலயக்கட்டணத்தை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியது, ஆனா விநாயகர் சதுர்த்தி சிலையைக் கரைக்க வசூல்னு நாலு பேர் சேர்ந்தாப்ல கெளம்பி வர்றவன் போறவங்கிட்டையெல்லாம் ஒரு நோட்டெடுத்துட்டுப் போய் நின்னு காசு குடுன்னு நச்ச வேண்டியது.


சாமி கும்பிட வர்றவனெல்லாம் தலை தெறிக்க ஓடற மாதிரி வெறி புடிச்சு கத்த வேண்டியது. விநாயகர் சதுர்த்திக்கு எதுக்குடா ராமன் கோயில் முழக்கமெல்லாம் !! இவனுக கொள்கைக்குக் கூட்டமே வராதுன்னுதான் சிவனேன்னு சாமி கும்பிட கூடற கூட்டத்தையெல்லாம் தன் பக்கம் திருப்ப கூச்சல் போடறானுக. இவனுகளை கொண்டு போய் எந்த பிரச்சனையும் பண்ணாம சேக்கறதுக்குள்ள காவல்துறை கதிகலங்குது. அதிலும் பிள்ளையார் தேவாலயம் மசூதி முன்னால ஊர்வலம் போகும்போது மட்டும்தான் பக்தர்களுக்குக் கொஞ்சம் அருளை கூட்டியே பாலிப்பார். இதுபத்தாதுன்னு இருக்கற சந்து பொந்து முதற்கொண்டு நீதிமன்றம் வரைக்கும் விநாயகர் சிலைகளையும் கோயில்களையும் கட்டி வருகிறார்கள்.


திருப்பூர்ல பாக்கறேன், டவுன்ஹால் புள்ளையார் கோயில் சுவற்றில் பாஜகவின் ஃப்ளக்ஸ் பேனர் தொங்க விட்டிருக்காங்க. கோயில் சுவற்றில் எதுக்கு கட்சி விளம்பரம்கறேன் ?


தினமணி என்ற நாளிதழ் இந்த ஊரில் இந்து முன்னணி சார்பில் இத்தனை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை என்று பல சிறு செய்திகள் வெளியிட்டு இந்து முன்னணிக்கு இலவச விளம்பரம் கொடுக்கிறது. சுற்றுச் சூழல் சீர்கேடுகள் பற்றி பல்வேறு விதமான கட்டுரைகளை தினமணி வெளியிட்டுள்ளது, ஆனால் இந்த விநாயகன் சிலையைக் கரைப்பதால் வரும் சீர்கேடுகள் குறித்து எந்தவொரு கட்டுரையும் வெளியானதா என்று தெரியவில்லை.


இவர்களின் இன்னொரு கோரிக்கை இந்துக்களின் ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கக் கூடாது. அவை இந்துக்களிடம் இருக்க வேண்டும். இந்துக்கள் என்றால் யாரிடம் வரும் என்று சொல்லத் தேவையில்லை. பிறகு அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதெல்லாம் கனவிலும் நடக்காது. கோயில்களின் வரலாறுகளில் மாற்றம் நிகழும், இருக்கும் கொஞ்ச நஞ்சத் தமிழ் வழிபாடும் முழு சமஸ்கிருதமாக மாறும். விநாயகர் சதுர்த்தி போன்ற வன்முறையைத் தூண்டும் ஊர்வலங்களுக்குக் காசு சேர்க்கும் கவலை இருக்காது, கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் "இந்து"க்களே அதற்கு நன்கொடைகளை வாரி வழங்குவார்கள். அப்பாவி இந்துக்களின் பெயரில் இவர்கள் தாண்டவமாடுவார்கள்.


இந்த இந்துத்துவாக்களின் நோக்கமென்னவாம். பிறமதத்தினரெல்லாம் தமது தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டுமாம். உண்மையிலேயே மதத்தின் மீது நாட்டம் கொண்டவர்கள் மதத்தின் தவறை ஒத்துக் கொண்டு, மதத்தை சீர்திருத்த வேண்டும். ஆனால் இவர்கள் செய்வது இருக்கும் கொஞ்ச நஞ்ச சகிப்புத் தன்மையையும் ஒழித்து சீர்கேடுகளான ஜாதியை, வன்முறையை வெறுப்பை அங்கீகரித்து வளர்ப்பதுதான். அதிலும் தேவாலயம், மசூதிகளின் முன்பு வெறிக்கூச்சல் போட்டால் அவன் இந்து மதத்திற்கு மாறுவானா என்ன அறிவாளித்தனம் ?! அங்கே போய் வம்பிழுக்க வேண்டியது, அவனிடம் செருப்படி வாங்க வேண்டியது பின்பு இந்துக்களைத் தாக்கும் பிற மத்ததவர்கள் எங்கே மதச்சார்பின்மை வியாதிகளே, இந்துக்களுக்கு  இந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஒப்பாரி வைக்க வேண்டியது. இவர்கள் இந்துக்களின் காவலர்கள் என்றெல்லாம் இந்துக்கள் நம்பவில்லை. தமிழகத்தில் சராசரி இந்துக்களின் நம்பிக்கையை வெறியாக மாற்றும் நோக்கம் நிறைவேறாது. நாட்டில் அமைதி தவழ வேண்டுமெனில் இது மாதிரியான RSS இயக்கங்களைத் தடை செய்தாலே போதும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஸ்ரீ தமிழ் நாடு


இலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வன்முறை செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கலவரம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் தமிழர்கள் மீது கொடிய கொலை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சிங்களப் பேரினவாத வெறி காரணமாக தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை கொலைகள் ஏவப்பட்டன. அதன் விளைவாக தமது வன்முறையை வெவ்வேறு கொடிய வழிகளில் வெளிப்படுத்திய காட்டுமிராண்டிகள் கொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களின் மார்பகங்களின் மீது ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதித் தனது வெறியைத் தணித்துக் கொண்டனர் என்று படித்திருக்கிறோம்.  இன்றும் ஸ்ரீலங்கா என்ற அந்நாட்டின் பெயர் அதன் இனவாதத்தைப் பறைசாற்றி நிற்கிறது. நிற்க.

தற்போது தமிழகத்தில் எங்கெங்கு காணினும் ஒரு நச்சுக் காளானைக் காண முடிகிறது. வீதிகளெங்கும் நிறைந்திருக்கும் கடைகளின் பெயர்ப்பலகைகளைக் கண்டால் கடைகளின் பெயர்களில் முன்னோ பின்னோ ஒட்டிக் கொண்டிருக்கும் "ஸ்ரீ". குழந்தைக்குப் பெயர் வைப்பதிலிருந்து பெரும் நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது வரையில் ஸ்ரீ என்ற ஒரு எழுத்து இல்லாமல் பெயரையே காண முடிவதில்லை. எல்லாம் சிவமயம் என்று கேட்டிருக்கிறோம். இங்கே எல்லாம் ஸ்ரீ மயமாகி இருக்கிறது. ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் இருந்தால் நன்மை நடக்கும் என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். இந்த மூட நம்பிக்கையைப் பரப்புவதோடு அல்லாமல், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.

இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு வட ஹிந்தியர்கள் 70 வருடங்களுக்கு முன்பே வைத்திருக்கும் பெயர்களைத்தான் வைக்கிறார்கள் தமிழகத்தினர். இன்னும் சில முண்டங்கள் நடிகைகளின் பெயர்களையும் பயங்கரமான ட்ரென்டியாக, ஃபேஷனாகக் கருதி வைக்கிறார்கள். 5 வருடங்களில் அந்த நடிகையே இருக்க மாட்டார். அந்த பெயரும் காணாமல் போகும். எனக்குத் தெரிந்து மட்டும் மூன்று பேர்கள் தங்கள் குழந்தைக்கு ஹன்சிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். எனது நண்பன் ஒருவன் பெயர் கணேஷ்குமார். அவனது அப்பா ஏன் அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினாரென்று பெயர்க்காரணம் சொன்னான். அந்தப் பெயருக்கு வட இந்தியாவில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்குமாம். தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு வேலை தேடிப்போன காலத்தில் உருவான மனநிலை, அவனுக்குப் பிடித்த மாதிரி பெயர் வைத்துக் கொண்டு பல்லிளித்தாள் அவன் உடனே அருள் பாலிப்பானா ? வட இந்தியர்கள் தென்னிந்தியாவுக்கு வேலை தேடி வரும் இக்காலத்திலும் தொடர்கிறது இந்த முட்டாள்தனம். போன தலைமுறைகளில் அதிக அளவில் வைக்கப்பட்ட சுரேஷ், ரமேஷ், தினேஷ், ஷங்கர், ராஜேஷ் போன்ற ஹிந்தித் திரைப்படம் பார்த்து பெயர் வைத்த மூடத்தனத்திலிருந்து இன்றைய தலைமுறையினர் மாறிவிட்டனர். இவர்கள் வைக்கும் பெயர்களைக் கேட்டால் வருங்காலத்தில் பாருங்கள் "நம்மை விட ஹிந்தி மொழியுணர்வு மிக்கவனாக இருப்பவன் தமிழன்" என்று வட இந்தியர்களே தலை சுற்றிக் கீழே விழுவார்கள்.

தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொலைக்காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லும் நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரிந்து விடும். ஜாதியையும் அதன் சடங்குகளை மட்டும் ஒரு அங்குலம் விட்டுக் கொடுக்காமல் பின்பற்றும் தமிழர்கள் தமிழில் பெயர் வைப்பதை மட்டும் இழிவாகக் கருதி சமஸ்கிருதப் பெயர்களை வைக்கின்றனர். கண் தெரியாதவன் இருட்டுக்குள் கருப்புப் பூனையைக் கண்டதாக சொல்வது போல அடுத்த வீட்டுக்காரனைப் பார்த்தே தன்னை ஒப்பிட்டுக் கொண்டு வாழும் இவர்கள் பெயர் வைக்கவும் என்ன ஏதென்றே தெரியாமல் வாயிலேயே நுழையாத பெயரை வைக்கின்றனர்.  கட்டாயமாக ஹ ஷ, ஜ என்ற எழுத்துக்கள்  வழியில் தொடங்கும் பெயரையோ அல்லது அந்த எழுத்துக்களில் ஒன்றாவது பெயரின் இடையிலாவது வந்து விட வேண்டும். ஸ்ரீ என்ற எழுத்தை முன்னர் சேர்த்து வைப்பதில் பெயரியல் விதிகள் இடிக்கிறதா ? ஸ்ரீ நந்தினி /ஸ்ரீ வித்யா என்று வைக்க விரும்பியவர்கள் வித்யா ஸ்ரீ/நந்தினி ஸ்ரீ என்று வைத்துக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது மட்டுமல்ல பெரிய தொழிற்சாலைகளோ, பள்ளி, கல்லூரிகள் தொடங்குகிறவர்களும் முன்பு ஸ்ரீ என்ற எழுத்தை ஏதோ கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்பது போல் சேர்த்துக் கொள்கின்றனர்.

இதையெல்லாம் (முதல் பத்தியை இங்கு தொடர்பு படுத்திக் கொள்ளவும்) பார்க்கும் ஈழத்தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். சிங்களனோ அடடா ஈழத் தமிழனுன்களை விட இவனுகளாகவே நம்ம வழிக்கு வந்துட்டானுகளே என்று இன்ப அதிர்ச்சி அடைவான்.

சரி மனிதர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும்தான் மட்டும்தான் வைக்கிறார்களா என்றால் இல்லை. தங்கள் குலதெய்வங்களுக்கும், இன்ன பிற கடவுளின் பெயருக்கு முன்னரும் ஸ்ரீ என்ற எழுத்தை சேர்த்துக் கொள்கின்றனர். ஏன் கடவுளுக்கே பெயரை மாற்றுகிறோமே அந்த கடவுளிடம்தான் தங்கள் தலையெழுத்தை மாற்றும்படி வழிபாடு செய்கிறார்கள் கடவுளின் பெயரையே மாற்றி வைக்கும் பக்தர்கள். என்னவொரு முரண்நகை. செல்லாண்டியம்மன், கோட்டை மாரியம்மன், பிடாரியம்மன், முத்துமாரியம்மன், அய்யன் என எல்லா அம்மன்களும், ஆத்தாக்களும், அப்பன்களும் தங்கள் திருப்பெயரின் முன் ஸ்ரீயுடன்தான் காட்சி தருகிறார்கள். எல்லாவற்றையும் மீறும் வகையில் தமிழ்க்கடவுள்களான சிவனுக்கும், முருகனுக்கும் கூட ஸ்ரீயைச் சேர்த்தாயிற்று. திருச்செந்தூர் முருகன் பேக்கரி/ட்ராவல்ஸ்/வாட்டர் சப்ளையர்ஸ் என்ற பெயர்களுக்குப் பதிலாக ஸ்ரீ செந்தூர் முருகன் என்று எழுத்துக்களைக் காண நேரிடுகிறது. ஸ்ரீ சிவன் என்ற பெயரைக் கண்டு எங்கே முட்டிக் கொள்வது என்று தோன்றியது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். திருமறைக்காடு வேதாரண்யம் ஆனது போதாதா ?

தமிழ் தனித்தியங்கும் தன்மை பெற்றிருந்தாலும் பிறமொழி சொற்களையும், எழுத்துக்களையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. வடமொழிப்பெயர்கள் தமிழ்த் தன்மையுடன் இருப்பதற்காகத்தான் எடுத்துக்காட்டாக ராம் என்ற பெயரை முன்னர் "இ" சேர்த்தும் இறுதியில் "அன்" விகுதியும் இராமன் சேர்த்துத் தமிழாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தமிழ் வெறுப்பாளர்கள் சாதாரணமாக இருக்கும் சராசரி தமிழ்ப் பெயர்களையுமே கூட செங்கிருத ஒலியமைப்புடன் வரும்படி மாற்றிக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். மிகச் சொற்பமான அளவிலேயே தமிழ் செல்வன், தமிழரசன், தமிழ் செல்வி, தமிழரசி வகையிலான பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த சமஸ்கிருதப் பித்து வெள்ளமெனப் பாய்ந்து பரவி வருகிறது.

ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அதில் நகைச்சுவையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக வைக்கப்படும் "அது நம்மள நோக்கித்தான் வருது", எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க" நீங்க வடக்குப் பக்கம் போங்க" போன்ற வசனங்களை எல்லோரும் பேசிச் சிரித்து மகிழ்கின்றனர். அது மொழிமாற்றம் செய்ததன் குறையல்ல. உண்மையிலேயே ஆங்கிலப் படங்களில் பேசும் வசனமே அதுதான். நமக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவர்கள் என்னமோ பயங்கரமான விஞ்ஞானம் பேசுவதாக நினைத்துக் கொள்கிறோம். அது போலத்தான் இந்த சம்ஸ்கிருதப் பெயர்களும் வெறும் கடவுளின் பெயர்களும், வினைப் பெயர்களும் தான். அது நமக்குப் புரியாத மொழியில் இருப்பதால் அது நமக்கு மிக உயர்ந்ததாகத் தெரிகிறது,

ஸ்ரீ என்பது திரு எனப் பொருள்படும் சம்ஸ்கிருத ஹிந்தி சொல்தானே. இப்போது எல்லோரும் சரிங்க் "ஜி" வாங்க"ஜி" என்று வயது பார்க்காமல் மரியாதை நிமித்தம் சொல்லப்படுவது போல.

ரஜினிகாந்த் பேசும் போது கலைஞர் "ஜி", மோடி"ஜி" என்பாரல்லவா .


அதுவே கமல் போன்றவர்கள் பேசும்போது பாலச்சந்தர் ஐயா "அவர்கள்", சிவாஜி ஐயா அவர்கள் என்பார். 


தொலைக்காட்சி விவாதங்களில் "தலைவர் கலைஞர் அவர்கள்" "புரட்சித் தலைவி அம்மா அவர்கள்" என்பனவற்றின் எளிய வடிவம்தான் ஜி என்பது.

அது போலவே திரு.கருணாநிதி, திரு.வைகோ திரு. நரேந்திரமோடி என்று சொல்வோம் (திருமிகு, திருமின் என்று பெண்பாலுக்கு இடலாம்)


ஹிந்திப் பித்துக்குளிகள் தமிழில் அடிக்கும் சுவரொட்டிகளிலேயே "ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்கள்" வருகை புரிகிறார் என்று போடுவார்கள். வீரத் துறவி "ராமகோபாலன் ஜி" உரையாற்றுகிறார் என்றும் போடுவார்கள்.

குழந்தைக்கு பெயர்வைக்கிறவர்கள் ரொம்ப விவரமாக அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்று கேட்டுத்தானே வைக்கிறார்கள் இல்லையா. ஸ்ரீ - க்கு மட்டும் சும்மா புனிதம் என்று விட்டுவிடுகிறார்களா. ஸ்ரீ க்கு என்ன பொருளென்று வினவினால் திரு என்று வரும். அந்த திரு என்ற சொல்லைத்தான் எல்லாப் பெயர்களுக்கும் மெனக்கெட்டு வைக்கிறார்களா ? ஸ்ரீமதி என்றெல்லாம் வைக்கிறார்களய்யா.

வித்யா விகாஸ் என்று ஒரு பள்ளி இருக்கிறது.  பெயரின் பொருளென்ன. ஒன்றுமில்லை கனவான்களே !


வித்யா - கல்வி (அறிவு, ஞானம், கலை போன்ற பல பொருள்கள் தரும் சொல்) விகாஸ் - வளர்ச்சி, முன்னேற்றம், போன்ற பலபொருள்கள் கல்வி என்ற பொருளும் இதில் அடக்கம்)

 கல்வி வளருமிடம், அறிவு முன்னேற்றம் இவ்வளவுதான் அதன் பொருள். இதையே தமிழில் சொல்லும்போது இவ்வளவுதானா என்று வெத்தாகத் தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தில் வைத்தால் கெத்தாக இருக்கிறது

நமக்குத் தெரியாத ஒன்றை உயர்வாக நினைக்கும் போக்குதான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்

சிவபெருமான் = ஷிவா
பிள்ளையார் = விக்னேஷ், கணேஷ், விநாயக்.. 

(மூர்த்தி என்றால் சிலை, கணேஸ் மூர்த்தி என்றால் வியாகர் சிலை, நாராயண மூர்த்தி என்றால் பெருமாள் சிலை என்று கிண்டல் செய்யலாம். எப்படி அருமையாக இருக்கிறது பாருங்கள்)
காளியாத்தா, கொற்றவை - துர்கா
அம்மன் - அம்பா
கலைமகள் - சரஸ்வதி
திருமால் - விஷ்ணு

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். குமாரன் என்று தமிழ்த்தன்மையுடன் இருந்ததை மாற்றி குமார் என்று வைத்தார்கள். சிவக்குமார் என்ற எனது பெயரை யாராவது ஷிவா- என்று அழைத்தாலோ, shiva என்று எழுதினாலோ எரிச்சலாக இருக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு அதுதான் இயல்பாக இருக்கிறது. நடிகை ஸ்ரேயா-வின் பெயர் உண்மையில் ஸ்ரீயா என்பதுதான். அதை ஊடகப் புண்ணியவான்கள் எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எங்கோ தொடங்கி எங்கோ வந்து விட்டேன். திரும்புகிறேன்.

நீலம், பச்சை, சிவப்பு போன்ற கண்ணைப் பறிக்கும் ஆடை அணிபவர்களை எள்ளி நகையாடும் விடலைகள் அதே நிறத்தில் ஃபேஷன் என்று வரும்போது பெருமிதத்துடன் அணிவதில்லையா அது போலவே பெயர் வைக்கும் நகைச்சுவையும் அரங்கேறுகிறது.

தமிழ் மொழியின் வழியில் வந்த இந்துக்களே இப்படி என்றால் எப்போது கிறித்தவ, இஸ்லாமியர் தமிழில் பெயர் வைக்கத் தொடங்குவது ?.

குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவப் பெயர்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் மதம் சார்ந்த நூல்களை கருத்துக்களை சிறப்பாகத் தமிழ்ப்படுத்தியிருந்தாலும் இஸ்லாமியர் யாரும் (மணவை முஸ்தபா என்ற தமிழறிஞர் தவிர) வைத்த மாதிரி தெரியவில்லை. அப்படிப் பெயர் வைப்பது ஹரம் ஒன்றும் இல்லைதானே. இன்னும் ஏன் அன்பன் என்று இல்லாமல் ஆஷிக், மணிமகள் என்றல்லாமல் ஃபாத்திமா என்றெல்லாம் வைக்கிறீர்கள்.

இப்படியே ஸ்ரீ பைத்தியம் பிடித்து அலையும் தமிழ்நாட்டினர் கொஞ்சகாலத்தில் ஊர்ப்பெயர்களையெல்லாம் ஸ்ரீப்பூர்,  ஸ்ரீநெல்வேலி, ஸ்ரீசெந்தூர் என்று மாற்றுவார்கள். தமிழ் நாட்டின் பெயரையும் ஸ்ரீ தமிழ் நாடு என்று மாற்றுவார்கள் இல்லை ஸ்ரீ நாடு என்றே மாற்றுவார்கள். ஏன் தமிழ் மொழியின் பெயரையுமே ஸ்ரீ தமிழ் என்று அழைப்பார்கள் இல்லை இல்லை ஸ்ரீமிழ் என்றே ஆக்குவார்கள்.

வாழ்க ஸ்ரீ வளர்க ஸ்ரீ !

 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஹிந்தித் திணிப்பு - பாஜகவின் நாடித்துடிப்பு - பின்பு நடிப்பு

மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமல்லவா ? தமிழ்நாட்டில் நாம் சொல்வது தமிழர்கள் உட்பட ஹிந்தி பேசாத மக்களின் மீதான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பேயன்றி, தமிழர்கள் இந்தி மொழி கற்பதை எதிர்ப்பதன்று.


நாட்டின் இருக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக ஒரு இரட்சகர் வருவார் என்றெண்ணிக் காத்திருந்த இந்தியர்கள், நரேந்திர மோடி என்று பெருமாளாக்கப்பட்ட ஈறை நம்பி வாக்களித்து எக்காலத்திலுமில்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தனர்.

அன்னார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் உத்தமபுத்திரர் மஹிந்தரையும் மற்ற நாட்டு அதிபருடன் அழைத்து வந்து ஈழத்தை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கும் பத்தாம்பசலிகளுக்கும், அறிவிலிகளுக்கும் அதிர்ச்சியளித்தார். பாஜகவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு அது பெரிய ஏமாற்றமோ அதிர்ச்சியோ அளிக்காது. ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களுக்கும், வேறு உள்நோக்கங்களுடன் ஆதரித்தவர்களுக்கும் (ஜாதிவெறி/ இந்துத்துவா + ஈழ ஆதரவு என கலந்து கலக்கும் நபர்கள்) அது கசப்பாக இருந்தது. அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற அளவுக்கெல்லாம் நம்பும் ஆட்களும் இருக்கிறார்கள்.

அடுத்து ரயில்வே துறையை தனியார் மயமாக்கம், ரயில் கட்டண உயர்வு என்று அதிரடியாக முதல் மாதங்களிலேயே இந்தியாவையே குஜராத் பாணி "வளர்ச்சியை" நோக்கி நகர்த்தி வருகிறது பாஜக-மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக, RSS - கிளை இயக்கங்கள் படுகொலைகள்(புனே), கலவரங்கள் (சென்னை- பூந்தமல்லி இந்து முன்னணித் தலைவரின் இறுதி ஊர்வலம்) என தங்கள் பாணியில் செயல்பட்டு வருகின்றன.

அடுத்ததாக இந்தியாவிலிருக்கும் அனைத்து நடுவண் அரசு ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை ஆங்கிலத்தில்தான் வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. பின்பு ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே என்று அடக்கி வாசிக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சென்று சிறுவர்களிடம் பேட்டி கண்டு தமிழர்கள் "We want HIndi" என்று வேண்டுவதாகக் கருத்தை உருவாக்கியது. (அது உண்மைதான் எல்லோருக்கும் தேசிய மொழியைக் கற்கவில்லை, இன்னொரு மொழியைக் கற்கவில்லை என்ற வருத்தம்தான்) அதாவது அரசு சட்டமோ அறிவிப்போ கொண்டு வரும் முன்பு இது கருத்தைத் திணித்து அதைப் பொதுக் கருத்து போலவும், தேவை போலவும் ஆக்குவார்கள். ஊடகங்கள் கருத்தைத் திணிப்பார்கள், ஊழல் மன்னர்கள் ஹிந்தியைத் திணிப்பார்கள்.

ஹிந்தியல்லாத மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன் தாளத்தை மாற்றி வாசிக்கத் தொடங்கினர்,

கிரண் ரிஜிஜூ, இந்தியை அனைத்துத் துறைகளிலும் முன்னிறுத்துவதும் மேம்படுத்துவதுமே தங்களது அரசின் முதன்மையான பணி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

.“இந்தி என்பது தேசிய மொழி, இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மொழி. எனவே இந்திக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பது என்பது ஆங்கிலத்தை அவதூறு செய்வதாகாது. எனவே இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்து அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையே. மேலும், இந்தி மொழி என்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, அசாமி, உருது மற்றும் இதர பல்வேறு பிராந்திய மொழிகளின் கூட்டுக்கலவையே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” இந்தி மொழியை அனைத்து இடத்திலும் பரப்ப காந்தி, நேரு, தீனதயாளன் உபாத்யாயா, ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முயற்சி செய்ததாகவும், தங்களது அரசுக்குமுந்தைய அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியை மேம்படுத்த வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்று முக்தார் அப்பாஸ் நக்பி தில்லியில் வெள்ளியன்று கூறினார்.

பாஜகவினர். வெங்கையா நாயுடு குட்டிகரணமடித்து இது மார்ச் 10 நாளே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அறிவித்ததாகும் அதை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்றார்.

இவர்கள் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருக்கு தொலைக்காட்சி விவாதங்களிலோ பாஜக இன்ன பிற ஹிந்தித் திணிப்பு வெறியர்கள், ஹிந்தி வேண்டுமென்ற அறிவுத் தாகமுடையவர்கள் எல்லாம் 1940 களின் வாதங்களயும், இந்துத்துவ-ஹிந்தி வெறியுடனும் கத்திக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போலவே, தொலைக்காட்சியைக் கண்டு தனது அறிவை வளர்க்கும் பாமரத் தமிழர்கள், தமிழை வளர்க்கறானுகளாம் என்று ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களையும், கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் ஹிந்தி மொழியில் உரையாற்றிய மோடி மொழி வாரி மாநிலங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னார். பாரதிய ஜனதாவின் கொள்கையும் அதுதான். இந்நிலையில் இவர்கள் இப்படி கிளப்பியிருப்பது வெறும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்று சமாதானாம் சொல்கிறார்கள். ஹிந்தியை ஆங்கிலம் இரண்டாம் மொழியாக்கி விட்டது, ஆகவே அந்நிய ஆங்கிலத்திலிருந்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காக்க ஹிந்தியை வளர்க்கிறார்களாம். ஹிந்தியை வளர்ப்பதென்றால் ஹிந்தி பேசுகிறவர்களிடமல்லவா செய்ய வேண்டும். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடிப் பேர்களிடமுமல்லவா இவர்கள் திணிக்கிறார்கள். வளர்ப்பு வேறு திணிப்பு வேறு. இவர்கள் promotion என்கிறார்கள். ஆனால் அது  imposition மட்டுமே.

சரி பாகிஸ்தானிகள் பேசும் உருது கூட இவர்கள் பேசும் ஹிந்தி மாதிரியல்லவா இருக்கிறது. எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா ? இல்லை இந்திய தேசபக்தர்கள் வந்தேறி முகலாயரின் வழி வந்த மொழியினை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

சரி இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அல்லது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஹிந்தி தாகம்/மோகம் என்றோர் மாயையைக் கலைப்பதுதான் எனது நோக்கம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்/ பதில்கள்

ஹிந்தியை ஏன் வெறுக்கிறீர்கள்

ஹிந்தியை வெறுக்க வில்லை. ஹிந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஒருவரிடம் போய் ஏர்டெல் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். அவர் என்னிடம் ஏற்கெனவே ஏர்செல் இருக்கிறது என்கிறார். நீங்கள் வந்து அவர் ஏர்டெல்லை ஏன் வெறுக்கிறார் என்று கேட்கிறீர்கள்


கருணாநிதியைக் கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு இந்தப் புகைப்படத்தினை ஹிந்தி ஆதரவாளர்கள் பகிர்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வேறு மொழியினரிடம் அவர்கள் மொழியில் வாக்குப்பிச்சை எடுப்பது எந்த வகையில் தவறு. இதன் மூலம் மக்களுக்கு ஹிந்திக் கல்வியைத் தடை செய்து விட்டு அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். இது ஒன்று தமிழ் வெறியாக இருக்க வேண்டும் இல்லை இந்தி வெறியாக இருக்க வேண்டும். இங்கே நடந்தது கட்டாய ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமேயன்றி, ஹிந்திக் காரர்களைக் கல்லெறிந்து தாக்க வேண்டும் என்ற இனவெறிக் கலவரமல்ல. இதன் மூலம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் ஹிந்தியை வெறுக்க வில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதியை எதற்குத் திட்ட வேண்டுமோ அதற்கு மட்டும் திட்டுங்கள்

தேசிய மொழியை ஏன் கற்க வேண்டாம் எனக் கூப்பாடு ?

ஹிந்தி தேசிய மொழி இல்லை என்பது மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ஹிந்தி அலுவல் மொழி மட்டுமே, மற்ற பிராந்திய மொழிகள் போலத்தான். அரசில் நிறைந்திருக்கும் ஹிந்தி மாநிலத்தவர்களின் ஆதிக்க வெறி காரணமாகத்தான் மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியா முழுதும் பெரும்பான்மையினர் பேசும் மொழியை ஏன் நாம் கற்கக் கூடாது நமக்கு நன்மை பயக்கும்தானே ?


ஹிந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழியும் கிடையாது. இந்தியா முழுதும் பேசப்படும் மொழியும் கிடையாது. மாறாக ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மொழியினரே பெரும்பான்மையாக உள்ளனர். பேசப்படும் ஹிந்தி பேசுகிறவர்களும் ஒரே மாதிரியான ஹிந்தியைப் பேசுவதில்லை. கொஞ்சம் விரிவாக வாசிக்க இங்கு செல்க. 


வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுவோம்தானே ?


தமிழ் நாட்டில் வந்து வேலை செய்யும், குடிவரும் வெளி/வட மாநிலத்தவர் தமக்குத் தமிழ் தெரியவில்லை, பள்ளியிலேயே தமிழ் கற்கவில்லை என்று கவலைப்படுகின்றனரா ?

நான் இங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது என்கிறார்கள். அதெப்படி ஒரிரு நாட்கள் சுற்றுலா சென்றவர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தியை பாடமாக வழங்குவதை புள்ளி விவரமாகச் சொல்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்கிறவர்களுக்காக ஹிந்தியைக் கற்க வேண்டுமெனச் சொன்னால் தமிழ் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செல்லும் சுற்றுலாத்தளமாக ஊட்டி இருக்கிறது, அடுத்து கேரளா இருக்கிறது, கர்நாடகா இருக்கிறது, கோவா இருக்கிறது. எனவே தமிழர்கள் படுகு, மலையாள, கொங்கணி, துளு மொழிகளையும் பாடமாக வைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

ஒரு மொழியாக அரசே வழங்கும்போது கற்கலாமே ?

பல நூறு மொழிகள் பேசப்படும் நாட்டில், நடுவண் அரசு ஒரு மொழிக்கு மட்டும் முகவராக செயல்படுவது ஏற்க முடியாதது. மக்களின் வரிப்பணத்தை வைத்து மொழியை அடுத்தவனிடம் திணிக்கிறது.  ஹிந்தி பேசுகிறவர்கள் வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்று நடுவணரசு எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வட இந்தியாவில் பரப்புமா ?

ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது நமக்கு இழப்புதானே ? ஆம் இழப்புதான். எப்படி ஹிந்திக் காரர்கள் தமிழ் கற்காமல் இருப்பது நமது இழப்போ அது மாதிரிதான் இதுவும். அதற்கு எவ்வளவு கவலைப்பட வேண்டுமோ அது போலத்தான் இதற்கும் கவலைப்படவேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஹிந்திக்கு ஏன் மெனக்கெட்டு வருத்தப்பட வேண்டும். ஜாவா, பெர்ல், C, C++  என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏன் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலத்தவர் எதிர்க்க வில்லை.

தவறு. பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கின்றன. முத்தாய்ப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி எதிர்க்கிறார். கர்நாடகா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக எதிர்ப்பில் இருக்கிறது. தமிழகத்தின் இரு முதன்மைக்கட்சிகளும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத்தின் வழி வந்தவை என்பதால் தமிழகம் முதன்மையில் இருக்கிறது. மேலும் சமஸ்கிருதத்திற்கு ஈடான பழமையும், வளமும் அதன் கலப்பு அதிகமில்லாத தனித்துவமான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்கிருத/ஹிந்தி கலப்பு அதிகம். ஆயிரம் வருட காலமாக சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாறுடைய தமிழ் மொழியைப் பேசும் நான் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்குச் சென்றால் ஹிந்தி தெரியாதா என்று அவமானப்படுத்துகிறார்கள் வெட்கமாக இருக்கிறது

அது காட்டுமிராண்டிகளின் இழிசெயல். நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதற்காக வெள்ளையாக வேண்டும் அழகாக வேண்டும் அப்படியில்லாதது நம் தவறு என்பீர்களா ? மெட்ராஸி என்கிறார்கள், மலையாளிகள் பாண்டிகள் என்கிறார்களல்லவா அது போன்ற இனவெறிதான் அப்படிப் பேசவைக்கிறது. மேலும் ஹிந்தி பேசிகளின் ஆண்டைத்தனம், வட இந்தியனின் தென்னிந்தியா மீதான் இழிவான பார்வை. அதற்கு நீங்கள் குற்ற உணர்வு அடையத் தேவையில்லை. நீ தமிழகம் வரும் போது ஏன் தமிழ் தெரியவில்லை என்று நான் கேட்டால் என்ன சொல்வாயோ அதுதான் இதற்கும் பதில் என்று சொல்வோம். (தென்னிந்தியாவில் மூன்று மொழிகள் செம்மொழியாகியிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா ? அட செம்மொழிகள் என்று கூட வேண்டாம் நான்கு மொழிகள் கோடிக்கணக்கானவர்களால் பேசப்படுவதாவது தெரியுமா)

தமிழ் பேசாத பல மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாழும்போது அவர்கள் மீதும் தமிழகத்தில்  கட்டாயத் தமிழ் சட்டம் என்பது தமிழ்த் திணிப்பு ஆகாதா ?

தமிழகத்தில் கட்டாயத் தமிழ் என்றால் எல்லோர்க்குமே மொழியுரிமை நினைவுக்கு வந்து விடும் என்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களுமே அவரவர் மொழியைக் கட்டாயப்பாடமாகவும், பிறமொழியினர்க்கும் சேர்த்து வைப்பது நியாயமான செயலே. இதன் மூலம் அம்மாநிலத்தில் இருக்கும் பிறமொழியினர் ஒரு மொழியைக் கற்க முடியும். அங்கேயே வசிப்பவர்கள் அம்மொழியைக் கற்பதில் என்ன தவறு, இது பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான். ஆனால் ஹிந்தியை, ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் மீது திணிப்பது வேறு, அந்தந்த மாநிலங்களில் கட்டாயப் பாடமாக வைப்பது வேறு. இதன் மூலம் மட்டுமே பிராந்திய மொழிகளின் பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வாழ்த்துதல்களின் கொண்டாட்டங்களின் உண்மை நோக்கம் என்ன ?


வாழ்த்துக் கூறுதல் என்பது ஒரு நல்ல செயலை எதிர்நோக்கியிருக்குமாறு சொல்வது. நல்ல செயல் நடக்கும் என்று நம்பிக்கை சொல்வது. தேர்வில் தேர்ச்சி அடைவாய், தொழிலில் வெற்றி பெறுவாய், வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதை எல்லோரும் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா என்றால் இல்லை. திருமணத்திற்குச் செல்கிறார்கள் அங்கே எத்தனை பேர் மணமக்களை உள்ளப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள். போகிறார்கள், விருந்து எப்படி இருந்தது என்று பேசுகிறார்கள், சைட்டடிக்கிறார்கள், பெண்கள் மற்ற பெண்களின் உடை, நகை ஒப்பனை குறித்து ஒப்பிடுகிறார்கள். மணமக்களின் உடை, நகை, புறத்தோற்றம், ஒப்பனை குறித்து விவாதிக்கிறார்கள். சீதனம் எத்தனை சொத்து இத்தனை இத்யாதிகள் பற்றிப் பேசுகிறார்கள். கலைகிறார்கள். 

ஆண்கள் பழைய நண்பர்களுடன் இணைந்து சரக்கடிப்பதற்காகவே திருமணத்திற்கு வருகிறார்கள். திருமண "வரவேற்பு" காலையில் நடக்கிறதென்றால் முந்தைய இரவே அடித்த போதை தெளியாமல் மல்லாந்து கிடக்கிறார்கள். எல்லாம் முடிந்து கடைசி பந்தியில் உண்டு விட்டுப் போகிறார்கள். திருமணத்திற்கு வந்து வாழ்த்துவதெல்லாம் அவர்கள் நோக்கமில்லை. 

அனைவரும் வந்து வாழ்த்தினால் மணமக்கள் நன்றாக வாழ்வர் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் அழைக்கபடுகின்றனர். வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வே திருமணம். இவர்கள் இப்படி இருக்கையில் என்ன நடந்து விடுகிறது என்பது புரியவில்லை. எல்லாமே சம்பிரதாயத்திற்காகவும், பகட்டுக்காகவும் எந்திரத்தனமாக நடந்தேறுகிறது. 

இந்த புத்தாண்டு வாழ்த்துக்களும் அப்படித்தான். எல்லாரும் சொல்கிறார்கள் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்த்து பரிமாறிக் கொள்கின்ற நாள் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் நல்லதாகத் தோன்றவில்லை. சரக்கடிப்பதற்கு ஏற்ற நாளாகத்தான் இதை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதுவும் சரியாக 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அல்லது அழைத்து வாழ்த்துச் சொல்வது,  நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போலத்தான். அதை சொல்பவர்களும் மகிழ்கிறார்கள், வாழ்த்து பெறுகின்றவர்களும் மகிழ்கிறார்கள். வாழ்த்தாமல் இருந்து விட்டால் இருவரும் சங்கடப் படுகிறார்கள். 

இரு இணைபிரியா நண்பர்கள் என்ன நினைவு வைத்தா சொல்கிறார்கள். எல்லோருக்கும் செல்பேசியின் காலண்டர், ஃபேஸ்புக்கிலோ நோட்டிஃபிகேசன் வந்து விடுகிறது. டெம்ப்ளேட் செய்தியையோ வாழ்த்தையோ தட்டி விடுகிறார்கள். பிறகு ட்ரீட் ஆரம்பமாகிறது. இதில் அன்பு எங்கே இருக்கிறது. 

புத்தாண்டில் வாழ்த்துத் தெரிவித்தால் அவ்வருடம் முழுதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. வாழ்க்கை ஏற்படுத்தும் துயரங்கள் இவ்வருடத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்னவோ பழைய மாதிரிதான் பெரும்பான்மையினருக்கும் தொடரப் போகிறது. அந்த சில நிமிட மகிழ்ச்சிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா ? 

மற்ற எந்த நாளாக இருந்தாலும் பேருக்கு வீட்டில் கொண்டாடி விட்டு, வெளியில் இரகசியமாய் சரக்கடிப்பார்கள். ஆனால் புத்தாண்டில் மட்டும்தான் சரக்கடித்து விட்டு பொதுவிலேயே ஆட்டம் போடலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. கோவையில் இந்த புது வருடத்தின் முதல் நாள் மட்டும் நான்கரைக் கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. வழக்கத்திற்கு ஒரு நாளில் 3 கோடிக்கு மட்டுமே இருந்த விற்பனை ஒன்றரைக் கோடிக்கு அதிகமாகியிருக்கிறது, இது போன்ற போதையில் சமூகத்தை ஆழ்த்துவதற்குத்தான் ஒரு மண்ணுக்காகாத இந்த பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் பிரபலப்படுத்தப் பட்டு பொதுவாக்கப்படுகின்றன.

ஒரு நல்ல செயலைத் தொடங்கவோ அல்லது தம், தண்ணி, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் ரிசொல்யூசன்களை எடுக்க ஒரு சாக்காக இந்த ஆண்டுப் பிறப்பைச் சொல்லிக் கொள்கிறார்கள். அதை விட நினைப்பவர்கள் உண்மையிலே அதுதான் நோக்கமென்றால் அக்கணமே தொடங்க வேண்டியதுதானே. அதற்கென்ன வேண்டிக் கிடக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. இது ஆங்கிலப் புத்தாண்டே இல்லையாம், லத்தீன் புத்தாண்டு வேறயாம். தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி சமஸ்கிருதத் திணிப்போ அது போல. இப்படி பெயரும் பெயர்க்காரணமுமே எல்லாருக்கும் தவறாகப் பரப்பப் பட்டு கொண்டாடப் படுகிறது. 

யாரோ எப்படியோ கொண்டாடினாலோ மகிழ்ச்சியாக இருப்பதால் நமக்கென்ன வயிற்றெரிச்சல் வந்து விடுகிறது. ஆனால் அப்படியில்லை. இவை நம்மீதும் திணிக்கப்படுகிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது போன்ற கொண்டாட்டங்களிலெல்லாம் நம்மையும் ஈடுபடுத்துகிறார்கள் அல்லது நாமே பங்கெடுக்க வேண்டியதாகிறது. பொங்கள் தவிர தீபாவளி, பிறந்த நாள், ஜனவரி 1 போன்றவறையெல்லாம் கொண்டாடுவது எனக்கு அறவே பிடிக்காது ஆனால் நண்பர்களும், உறவினர்களும் கையை குலுக்கியோ, கைபேசியால் அழைத்து நம் வாயிலிருந்து வாழ்த்தைப் புடுங்கி விடுகிறார்கள். பிடிக்காது, நம்பிக்கையில்லை, விருப்பமில்லை என்று என்ன சொன்னாலும் விடுவதில்லை. இவர்கள் விளக்கம் சொன்னால் மனத்தை வேறு புண்படுவதாகக் கூறுவார்கள். நாளும் புதிதாக நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரிடம் சலிக்காமல் நாம் கொள்கை விளக்கம் அளித்துக் கொண்டா இருக்க முடியும் ?

மனிதர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்வூட்டிக் கொள்ளவும் உற்சாகமாக செயல்படவும் கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் இன்றியமையாத தேவைகள். ஆனால் சமூகத்திற்கும், தனிமனித சீரழிவுக்கும் வழிகொள்ளும் இவ்வகை திடீர் மிகை உணர்ச்சிக் கொண்டாட்டங்கள், காலத்திற்கொவ்வாத மதப் பண்டிகைகள், நுகர்வுப் பண்பாட்டைப் ஊக்குவிக்கும் போலிக் கொண்டாட்டங்கள் என்ன பயனைத் தரும் என்று பார்த்தால் ?? இவைகளைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment