தமிழீழ விடுதலைப்புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழ விடுதலைப்புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மெட்ராஸ் கஃபே - தமிழர்களுக்கு எதிரான விஸ்வரூபம் ?

 

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைக் கண்டால் ஈழப் போரை அடிப்படையாகக் கொண்ட கதைக் களம் போல் தெரிகிறது.  இந்தப் படம் முதலில் ஜாஃப்னா (Jaffna ) என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இலங்கை வரைபடத்தினைப் பின்புலமாகக் கொண்டு நிற்கும் ஜான் ஆப்ரஹாம் இந்திய உளவுத்துறை ஒற்றன். விடுதலைப் புலிகள் கடத்திச் செல்வதாகவும் காட்டுகிறார்கள். ஈழப் போரை மையமாக வைத்து, இந்திய உளவுத்துறையின் நாதாரித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிக்கும் திரைப்படமாக இருக்கும் போல் தெரிகிறது. கிளுகிளுப்புக்காக ஆங்கிலப் படத்தின் பாணியிலேயே ஒரு பெண் நிருபரையும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ போர் (war) படங்களைப் பார்த்திருக்கிறேன், பெரிய அளவில் வருந்த வில்லை. இப்போது ஈழப்போரைப் பின்னனியாகக் கொண்ட ஒர் சண்டைப் படம் வருகிறது அதிலும் இந்திய உளவாளியை நாயகனாகக் கொண்டு எனும்போது உலகமகா எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இப்படித்தானே அந்தந்தப் போரைப் பின்னனியாகக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டைப் பற்றிய ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு கருவியைக் கண்டுபிடித்தார் என்பதற்காக ஒரு தமிழரைப் புகழ்கிறார்கள். ஈழப்போரை நடத்தியது இந்தியாதான் என்று தெரிந்த பின்னும் இன்னும் இந்தியாவை விடாமல் நம்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். மிச்சமிருக்கும் சில லட்சம் தமிழர்களை இந்தியா கொன்றாலும் அவர்கள் இந்தியாவின் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள். நம்மைப் போன்றவர்களால்தான் அதை சகிக்க முடிய வில்லை. அத்தகைய தமிழர்கள் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எப்படி எதிர்ப்பார்கள் அவர்கள் இந்தியாவையும் நம்புகிறவர்கள் அமெரிக்காவையும் ஆதரிப்பவர்களாயிற்றே ?!

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க், அஸாஞ்ஜே என பலரும் அமெரிக்காவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியும் அமெரிக்காவின் ஆதரவை வேண்டித் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். ஒசாமா பின் லேடனைக் கொல்லவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். ஆனால் அமெரிக்காவோ அதற்கு நன்றியாக தமிழர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக தமிழரை அழித்த சிங்களப் பேரினவாத பயங்கரவாத ராணுவத்தினருடன் ராணுவக் கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையான இந்தியா இன்னும் அகதிகளைக் கூட அவமானப்படுத்தியே வருகிறது.

திரிகோணமலையில் சிங்கள - அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி
விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தது ஏனென்றால் அது இஸ்லாமியரைப் புண்படுத்தியது, தாலிபன்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. அமெரிக்காவைப் புகழ்கிறது. அவ்விவகாரத்தில் எனக்கு இப்போதும் அதே நிலைப்பாடுதான். இஸ்லாமியர்களின் தம்மை தீவிரவாதியாக சித்தரிப்பதையும், ஆப்கானியர்களைத் தீவிரவாதியாகவும் அமெரிக்கனை யோக்கியனாகக் காட்டுவதாகவும் எதிர்த்தது நியாயமானதே. 30 வருடங்களாக வல்லரசு நாடுகளின் ராணுவ ஆக்ரமிப்பால் 2 மில்லியன் ஆப்கானியர்கள் கொல்லப்பட்டும், பலர் ஊனமுற்றும், அகதியாகவும் அலைகின்றனர். இதை கேவலப்படுத்தி அமெரிக்காவை ஆப்கானியத் தீவிரவாதிகள் வைக்கும் குண்டு வெடிப்பிலிருந்து காக்கும் அமெரிக்காவைப் போற்றும் படமாகவும் அமெரிக்காவால் ராணுவ ஆக்ரமிப்புக்குள்ளாகியிருக்கும் ஆப்கானியரைக் கேவலமாகவும் காட்டி இருப்பதை எதிர்ப்பது நியாயமானது. ஆனால் இஸ்லாத்தை இழிவு செய்கிறது, இஸ்லாமியரைப் புண்படுத்துகிறது, என்று மத உணர்வு ரீதியாக எதிர்த்துப் படத்தையே தடை செய்யக் கேட்டது தவறே.

விஸ்வரூபம் பற்றிய பதிவில் இஸ்லாமியரின் எதிர்ப்பை கொச்சைப்படுத்துகிற தமிழர்களுக்கு என்று நான் எழுதியது இதுதான், //இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், "இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா ? // அது இப்போது மெட்ராஸ் கஃபே வடிவில் ராணுவத்திற்குப் பதிலாக உளவாளியாக மாறி  சிறு அளவில் உண்மையாகி விட்டது.

இந்த மெட்ராஸ் கஃபே படமும் இந்தியாவை யோக்கிய சிகாமணியாகக் காட்டப்போகிறது. இரு தரப்பும் இலங்கையில் போர் புரிந்தனர் என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் ரசிகர்கள். இந்தியாவிலிருந்து போய் இலங்கையில் நாடு கேட்டால் அவன் சும்மாயிருப்பானா, ராஜீவைக் கொன்ற தீவிரவாதிகளுக்கு இதுதான் சரியான தண்டனை  என்று முற்றுமறிந்த ரசிக சிகாமணிகள் வக்கனை பேசுவார்கள். இந்திய உளவுத்துறை அதிகாரி உயிரைப் பணயம் வைத்து என்ன சாகசம் செய்யப் போகிறாரோ தெரியவில்லை. 

விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாகவும், இந்திய உளவுத்துறை அதிகாரியை கடத்துவதாகவும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல போராளிகளே, இந்திய உளவுத் துறையினரைக் கடத்த மாட்டார்கள் அவர்கள் இந்தியாவின் நண்பர்கள் என்றெல்லாம் சொல்லி அப்படத்தைத் தடை செய்யச் சொல்லி விளம்பரம் தேட மாட்டார்கள் "தமிழர்கள்"  என்று நம்புகிறேன்.

படம் வெளியான பின்பு திரைப்படத் திறனாய்வு (விமர்சனம்) எழுதும் வலைப்பதிவர்கள் இப்படத்தைக் கிழித்துத் தொங்கவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் ராம்போ, ஜேம்ஸ்பாண்ட், மிஷன் இம்பாஸிபிள், இன்னும் பல ராணுவத்தின் பெருமைகளை பீற்றிக் கொள்ளும் படங்கள்  உளவுத்துறை அமெரிக்காவின் பெருமை சொல்பவை. இப்படங்களைப் பார்ப்பவர்கள் உலகிலேயே ஜனநாயகத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்கள் அமெரிக்க ராணுவத்தினர்கள், சிஐஏ எஜென்ட்கள் ஆகியோர்கள் என்றுதான் நம்புவார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். நம் இந்தியப் படங்களில் ராணுவத்தை, காவல்துறையை வைத்து போலி தேசபக்தியைத் தூண்டும் படங்கள் எடுக்கப்படுகின்றதுன . இப்போது டான்கள், கேங்ஸ்டர்கள், மாஃபியாக்கள் போன்ற அயோக்கியர்களை நாயகர்களாகக் காட்டும் இந்தியப் படங்கள் வருகின்றன. அதே போல் உளவுத்துறை,  உளவாளிகள் செய்யும் சாகசங்கள் வரத் தொடங்கி விட்டன. ஏஜென்ட் வினோத், கமோன்டோ, ஏக் தா டைகர்  ஆகியன எடுத்துக்காட்டுகள். அடுத்ததாக இந்த மெட்ராஸ் கஃபே. இந்த உளவுத்துறையினர் எனப்படுகிறவர்கள், இறையாண்மையுடைய இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அந்நாட்டிற்கெதிரான பாதுகாப்புக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள். இறையாண்மையுடைய இலங்கையில் இந்தியா தலையிடாது என்று சொன்னார்கள்.  வாய்கிழியப் பேசினார்கள். இப்போது இந்திய உளவாளியை இலங்கைக்கு அனுப்புவது இலங்கை என்ற நட்பு நாட்டிற்குச் செய்யும் துரோகம். எனவே இந்த இயக்குநர் இந்தியாவை கேவலப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், உளவாளியை அனுப்பி வீரதீர சாகசத்திற்கெல்லாம் இடம் கொடாமல் இலங்கை அரசு இந்திய அரசு மிகச் சிறந்த நட்பு நாடுகளாகவே இருக்கின்றன.பார்ப்போம்.

விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவும் இந்திய உளவாளி என்று இத்திரைப்படம் விமர்சிக்கப்படுகிறது. இதில் ஒன்றும் நடக்காததல்ல. புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய உளவுத்துறையால், இஸ்ரேலிய உளவுத்துறையால்  பயிற்றுவிக்கப்பட்டவர்களே , அது போல் உலகெங்கும் உள்ள் இஸ்லாமிய இயக்கங்களும் அமெரிக்க உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்களே. இவ்வியக்கங்களுக்குள் பல உளவாளிகள் ஊடுருவி போராட்டங்களுக்கு உலை வைத்ததும் ஈழம் வரை நடந்த வரலாறு. இதிலெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது ? ஒரு வேளை இப்போது நாம் எதிர்பார்ப்பது போல இந்திய உளவாளி புலிகளுக்குள் ஊடுருவி ரகசியங்களைக் கறந்து வருவது போலவோ அல்லது பணயக் கைதிகளை மீட்பது போலவோ இருந்தால் நாம் என்னவென்று அதைப் புரிந்து கொள்வது ? இந்திய உளவுத்துறை என்ன செய்யுமோ அல்லது செய்ததோ அதைத்தான் கொஞ்சம் திரைப்பட மசாலாத்தனத்துடன் வேறுவிதமாக படம் காட்டியிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். என்ன சிங்கள ராணுவம் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகள் படத்தில் வரும் அதை சகித்துக் கொள்ள வேண்டும்.

என்ன இதனால் சங்கடப் படப் போகிறவர்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான். எனக்கு இதையெல்லாம் கேட்டு சலித்து விட்டது. 

அமெரிக்காவில் அமெரிக்க அரசை விமர்சித்துக் கூட ஹாலிவுட் படம் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திரம் இந்தியாவில் இல்லை. ரசிகர்களும் அவ்வளவும் பக்குவமானவர்கள் இல்லை. இந்திய இயக்குநர்கள் படமெடுத்தால் இந்தியாவின் பங்கை மறைப்பார்கள், தமிழர்கள் எடுத்தால் புலிகளின் தவறுகளை மறைப்பார்கள். இந்திய அரசை விமர்சித்துப் படமெடுத்தால் படம் தடை செய்யப்படும். புலிகளைப் பற்றி எடுத்தால் தமிழர்கள் எதிர்ப்பார்கள். நடுநிலையுடன் நேர்மையாக படம் எடுக்க இங்கு சூழ்நிலையோ ஆட்களோ இல்லை. தமிழர்கள் இதைத் தடை செய்யக் கோரினால் நமக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். சீமான்களை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

இஸ்லாமியர் ஏன் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப் படுவதை எதிர்க்கின்றனர் என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே போல் தடை செய்ய வேண்டும், வெளியிட வேண்டாம் என்று முரட்டுத்தனமாக செயல்படுவதால் என்ன நேர்ந்தது என்றும் அவர்களிடமிருந்தே தெரிந்தும் கொள்ளலாம். தமிழர்களை இனவெறியர்களாகக் காட்டுவதற்கு வட இந்திய ஆங்கில ஊடகங்களும், சோ ராமசாமிகளும், சுப்ரமணிய சாமிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 
Download As PDF
Bookmark and Share

Post Comment

விடுதலைப்புலிகளின் துரோகம் ??

தற்போது எரிக் சோல்ஹைம் வெளியிட்டிருந்த கருத்தின் மூலம் பிரபாகரனின் தவறான முடிவு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு வழிவகுத்தது என்று தெரியவருகிறது. ஆனால் எரிக் சோல்ஹைம் புலித் தலைவர்கள் சரணடையும் போதும் உடனிருந்தவர். அதன் பின்பும் அவர்கள் கொல்லப்பட்டார்களே. அதனால் இவர் சொன்னது முழுவதும் உண்மை என்றும் சொல்ல முடியாது.

2009 ஆம் ஆண்டில் போர் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஜனவரி மாதம் புலிகளின் தலைநகரான  கிளிநொச்சி வீழ்கிறது சிங்கள ராணுவத்திடம். அங்கிருந்து புலிகள் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்தனர். புலிகளின் தோல்வியானது கிளிநொச்சியின் வீழ்ச்சியின்போதே ஏறக்குறைய முடிவானது. அதுவரையிலும் தற்காப்பு தாக்குதல் நடத்தி வருகிறோம். கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி வந்த புலிகள், 2008 - நவம்பர் மாதம் மாவீரர் நாள் உரையை பிரபாகரன் நிகழ்த்தினார். அதன் பின்பு ஒரு மாதம் வரை கிளிநொச்சியைத் தன் பிடிக்குள் வைத்திருக்க புலிகளால் முடிந்தது.

முல்லைத்தீவில் புலிகள் முடங்கியதும், இராணுவத்தின் தாக்குதல் மிகவும் உச்சத்தில் இருந்தது. உலக அளவில் இலங்கை அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தாமல் அவர்களை வெளியிட வேண்டும் என்றும் இலங்கை அரசு வற்புறுத்தி வந்தது. தமிழகத்திலும் எதிர்ப்பு வலுத்து வந்தது. தீக்குளிப்புகள் நடந்தன. அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பும் என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தன. மனித அழிவுகளை நிறுத்த ஏதாவது செய்யப்படும் என்பது போன்ற  நிலைப்பாடு மேற்கு நாடுகளில் நிலவியது.

இந்நிலையில் எரிக் சோல்ஹைமின் இவ்வாறு கூறியுள்ளார்.

//ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும்.

 ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள்.
//


இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி சரணடைந்திருந்தால் கொல்லப்படாமலிருந்திருப்பார்களா ? உறுதியாகக் கூறமுடியாது. இறுதியில் அனைவரும் வெள்ளைக்கொடியுடன் சரணடந்தவர்கள்தான் கொல்லப்பட்டார்கள். புலிகள் தலைவர்கள் மட்டுமல்ல, இவர்கள் மன்னிப்புக்குரியவர்களாகக் கூறப்பட்ட பல பொதுமக்கள், போரில் ஈடுபடாத புலிகள் எடுத்துக்காட்டாக இசைப்பிரியா போன்றவர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.

புலிகள் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமென இந்தியா உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புலித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும்வரை சரணடையும் முடிவை எடுக்க வில்லை. சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடக்கப்பட்ட பின்னர்தான் போர் ஒரிரு நாளில் பெரும் மக்கள் கூட்டத்தின் பிணங்களின் குவியலுக்குப் பின்னர் முடியும் தறுவாயிலிருந்தது. ஆனால் இந்நிலை ஏற்படும் முன்னரே புலிகள் சரணடைந்தனர், ஆனாலும் அதன் பின்னும் பெரிய அளவிலான படுகொலைகள் நடைபெற்றது. இன்று வரையில் அரசியல் கைதிகள் கொலைகள் நடந்தேறி வருகின்றன.

இந்தப் போர் புலிகளை முற்றிலும் அழிப்பதற்காகவே நடைபெற்றது. இருப்பினும் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகள் புலிகளை காப்பாற்றவும் முயற்சிகள் எடுத்தது போலக் காட்டிக் கொண்டனர். அவர்கள் உண்மையில் புலிகளைக்காக்க விரும்பினார்களா என்பது கேள்விக்குறி. புலிகளைக் காக்க விரும்பினாலும், அது அவர்களுக்குத் தேவையானவரையில்தான். ஒரு வேளை இலங்கை அரசுடன் ஒரு ஒப்புதலுக்கு இவர்கள் வந்த பிறகு அவர்களுக்கு அதோ கதிதான்.  இவர்கள் சொல்லும்படி சரணடைந்திருந்தாலும் புலித்தலைவர் பிரபாகரனுக்கும், பொட்டு அம்மனுக்கும் தூக்குதண்டனைதான் கொடுப்பார்கள். இல்லை அப்படியே கொன்றாலும் கொன்றிருப்பார்கள்.

இப்போது எரிக் சோல்ஹைம் புலிகள் நினைத்திருந்தால் பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்கிறார். இவர் சொன்னது ஜனவரி மாதம் இந்த திட்டம் ஆலோசனையில் இருந்தது என்பது. 2009 ஜனவரி மாதத்தில்தான் கிளிநொச்சி வீழ்ந்தது. புலிகள் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை. தோல்வியை நோக்கியிருந்தாலும் அப்போதும் போராடி மீளும் வாய்ப்பு இருந்தது. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளோ, இந்தியாவோ போரை நிறுத்தும் என்றும் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

புலிகளின் துரோகம்;

புலிகள் இறுதிப்போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர். இறுதியில் முல்லைத்தீவில் முடங்கிய போது இது அதிகமாக இருந்தது. தப்பிச் சென்றவர்களையும், செல்ல முயன்றவர்களையும் கொன்றனர். குழந்தைகளைப் பிடித்துக் கட்டாயமாக போருக்கு அனுப்பினர். இறுதியில் தம் உயிரைக் காக்கவே சரணடைந்தனர். இவையெல்லாம் உண்மை.

புலிகள் ஆரம்பம் முதலே உலகக் கொலைகாரன்களுடன் நட்பு பாராட்டியே வந்துள்ளனர். இந்தியாவிடம்தான் பயிற்சி பெற்றனர். இஸ்ரேலிடமும் பயிற்சி பெற்றனர். சர்வதேசம் என்று இவர்கள் நட்பு பாராட்டிய நாடுகள்தான் உலகின் பலநாடுகளின் மீது படையெடுத்தும், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை நசுக்கியும் வந்துள்ளனர். குறிப்பிட்ட நாட்டின் அரசுகள் தன்னுடன் ஒத்துழைக்காத போது அந்நாட்டு  அரசுக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவும் அளிப்பவைதான் இந்த சர்வதேசம் எனப்படும் ஏகாதிபத்திய வல்லரசுகள்.

புலிகள் இனவிடுதலைக்குப் போராடியதாகச் சொல்லிக் கொண்டாலும் மற்ற பயங்கரவாத இயக்கங்கள் நிகழ்த்திய அத்தனை இழிசெயலையும் பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்தினார்கள் 25 வருடங்களாக, பாசிஸ இயக்கமாகவே நடந்து கொண்டார்கள்

மற்ற இயக்கத் தலைவர்கள் போராளிகள் கொல்லப்பட்டது.

இந்திய உளவுத்துறையிடம் 50 கோடியை வாங்கிக் கொண்டு, அநுராதபுரத்தில், 146 சிங்கள அப்பாவிகளைக் கொன்று குவித்தனர். இதை சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும், அரசைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைப்பதற்காகவும் எனவும் நியாயப்படுத்தினர். அப்பாவிகளின் மீதான புலிகளின் முதல் பயங்கரவாதத் தாக்குதல் இது.

பல பத்தாயிரம் இஸ்லாமியர்களை விரட்டி அவர்கள் சொத்தைக் கொள்ளையடித்தது. தமிழ் இஸ்லாமியப் பிரிவினையை அதிகமாக்கியது இந்த நிகழ்வு.

அரசியல் தலைவர்களைக் கொன்றது, ராஜீவ், ப்ரேமதாஸா, லட்சுமண் கதிர்காமர் போன்றோர் இதன் மூலம் மிகப்பரவலான வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டனர், இதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிப்பாக ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிலேயே தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்றதன் மூலம் புலிகள் எதிர்களுக்கு தங்கத்தட்டில் வைத்து ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டனர். தனக்கான ஆதரவையும் இழந்தனர். இதனால் ஈழத்தின் மீதான் அனுதாபம் மறைந்து, இந்திய ராணுவத்தின், ராஜீவின் கொடூர முகம் மறைக்கப்பட்டு புலிகளின் மீதான வெறுப்பு அதிகரித்தது. பயங்கரவாத முத்திரை ஆழமாக விழுந்தது.

இதெல்லாம் போக சிங்களப் பொதுமக்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தினர். பேருந்து, இரயில், பொது இடங்களில் குண்டு வைத்தல், தற்கொலைத் தாக்குதல், மசூதி, புத்த விகாரைகளின் மீதான தாக்குதல் என எல்லாவற்றையும் செய்தனர். இது போன்ற எல்லாத் தாக்குதலையும் புலிகள்தான் செய்தார்கள் என்று கொள்ள முடியாது.

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ்மக்களை வாக்களிக்க முடியாமல் தேர்தல் புறக்கணிப்பை நிகழ்த்தினர். இதன் மூலமாக சிங்கள இனவெறியர்களை ஆட்சியில் அமர வைத்தனர். ராஜபக்சேவிடம்  பணம் பெற்றுக் கொண்டு தேர்தலைப் புறக்கணித்தனர் புலிகள் என்ற செய்தியும் உண்டு.

போர் தொடங்கிய பின்பு, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரின் மீது நடத்தப்பட்ட (தோல்வியடைந்த)தற்கொலைத்தாக்குதல்.

இதெல்லாமே தமிழீழ விடுதலைக்கு உரம் சேர்ப்பதா அல்லது குழி வெட்டுவதா ?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை புலிகளுக்கு பல கடுமையான எச்சரிக்ககளை விடுத்தனர், சமாதான வழியில் தீர்வுகாண வலியுறுத்தினர். பின்பு புலிகளின் இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதலை வைத்து பயங்கரவாத இயக்கமாக அறிவித்தனர். இலங்கை அரசுக்கு ஆயுதமும் நிதியும் வழங்கினர்.

இதற்குப்பின்னரும் புலிகள் இவர்களை நம்பி இருந்தனர். இந்தியாவுடன் போரை நடத்தியும், ராஜீவைக் கொன்றபிறகும் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் என்றே கூறி வந்தனர். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பின் மீது விமானத் தாக்குதல் நடத்துமளவிற்கு பலம் பெற்றிருந்த புலிகள், இந்திய ராணுவத்தையே எதிர்த்த புலிகள், சிங்கள ராணுவத்திடம் எப்படித் தோற்றுப் போனார்கள் என்பது பெரிய கேள்வி. இலங்கை அரசுக்கு உலக ஆதரவு ஆயுதம் படைகள் இருந்தது உண்மை. ஆனாலும் மிகவும் வலுவான புலிகளுக்கு அதை சமாளிப்பது என்பது முடியாத காரியம் இல்லை.

மரபுச் சமரில் முடியாது என்று தெரிந்த பின்னரும் தொடர்ந்து அதே வழியில் போரிட்டனர். கிளிநொச்சி வீழ்ந்த பிறகும் கரந்தடிப்போர் (கொரில்லாப் போர்) முறைக்கு மாறாமல் தந்திரோபாயப் பின்வாங்கல், தற்காப்புத் தாக்குலை நடத்திக் கொண்டிருந்தனர். கொரில்லாப் போருக்கு மாறாமல், தாக்குதலை நடத்தாமல் யாரோ இழுத்துப்பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர் போலத் தோன்றியது. இதோ தாக்குவார்கள், அதோ தாக்குவார்கள் புலிகள் என்று அனைவரும் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இறுதிவரையிலும் இருந்த இடத்திலிருந்தே போராடி, தானாகவே தோற்று சிங்கள ராணுவத்தின் வேலையை எளிதாக்கினர்.

இதையெல்லாம் புலித்தலைவர்கள் சிந்திக்காமலா இருந்த இடத்திலிருந்தே போரிட்டிருப்பார்கள்.

பிரபாகரனுக்கு அவ்வளவு அதிகாரம் இருந்ததா என்பது குறித்து, மேற்கண்ட செயல்களெல்லாம் பிரபாகரனால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டவைதானா ?  அல்லது வேறு யாருடையே யோசனை அல்லது உத்தரவின் பேரில் இதை செய்தனர் என்பது விடை தெரியாத கேள்வி. பிரபாகரனுக்குப் பின்னாலிருந்த அவரை ஆட்டுவித்தவர்கள் யார் இதெல்லாம் இன்னும் வெளிவராத ரகசியங்கள். இதனால்தான் பிரபாகரன் அதிகமாக முன்னிறுத்தப்படுவதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. பிரபாகரன் பிம்பத்தின் ஒளியில் பல துரோகிகள் ஒளிந்திருக்கிறார்கள். கருணாவை விட இவர்களின் பங்குதான் புலிகளின் தோல்வியை நிர்ணயித்திருக்கும்.

எரிக் சொல்வது போல் சரணடைந்திருந்தாலும் இப்போது நடப்பதுதான் நடந்திருக்கும். எரிக் யாருடைய பேராளராக இருக்கிறார். உலகம் முழுதும் போரை நடத்தும் வல்லரசுகளின் பேராளர். இவர்கள் கண்ணீர் வடிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக அல்ல. 30 வருடப் போர் பல பேருக்கு வணிகமாகியிருக்கிறது. ஆயுதம் வழங்குவதிலிருந்து, அபிவிருத்தித் திட்டங்கள் வரைக்கும். தமிழர்கள், சிங்களர்கள் இந்தியா சீனா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நார்வே எனப் பலர் இவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. நமக்குக் காட்டப்படுவதெல்லாம் பிரபாகரன், ராஜபக்சே இவர்களிருவர்தான். இவர்களின் கைகளால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்தான் (புலத்து) புலிகள். இதற்கு பலி கொடுக்கப்பட்டவர்கள் புலித்தலைவர்கள், போராளிகள் மற்றும் மக்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment