ஹிந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்த வார குமுதத்தின் பாஜக-இந்தி ஜால்ரா


வாரமானால் ஏதோ ஒரு பாஜக தலைவரைப் பற்றி ஒரு ஜால்ரா கட்டுரை எழுதாவிட்டால் குமுத்திற்கு அடங்காது. இல்லையென்றால் பாஜக பட்டையைக் கிளப்பும் ஒரு திட்டத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பாராட்டி எழுதாவிட்டால் குமுதத்தின் ஊடக நேர்மை தாங்காது. சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸில் இருந்து தேர்வு செய்து போடப்படும் படங்களில் கூட பாஜக வராது. மற்ற கட்சித் தலைவர்கள்தான் வருவார்கள்.

ஜால்ரா 1

அன்னையர் தின சிறப்பிதழான இந்த வார குமுதத்தில் அன்னையர் தினத்தைப் பற்றி அதாவது மறைந்த தனாது தாயாரைப் பற்றி பேட்டி கொடுத்திருப்பவர் உத்தமர் பொன்னார். காவிரி மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுத்தும், கர்நாடகாவை விட வறட்சி அதிகமான தமிழகத்தை விட்டு கர்நாடகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்த மோடியை புகழ்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தின் சாலைகளெங்கும் இத்துப் போன இந்தியைத் திணித்து வரும் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் உத்தமசிகாமணி பொன். ராதகிருஷ்ணன். அன்னையர் தினத்தின் புகழ்பாட வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது.



ஜால்ரா 2

அடுத்து ஒரு பக்கம் முழுவதும் மோடியின் படம். அதன் கீழே இந்தியத் தமிழன் என்று கொட்டை எழுத்துக்களில். கட்டுரையின் தலைப்பு மோடியின் ஏக் இந்தியா. என்ன கருமமோ ? என்ன எழவோ ?? இப்போது இந்தியா 500 துண்டுகளாகவா இருக்கிறது ? இனிமேல் ஏக் இந்தியா என்று உருவாக்க வேண்டுமோ ? தமிழ் தொன்மையான மொழி. இந்தியாவின் மொழி வளமைக்குச் சான்றாக பெருமையுடன் அதைக் குறிப்பிடலாம். என்று மோடி ராஷ்ட்ரபதிபவனில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர் உயரதிகாரிகளின் மத்தியில் பேசினாராம். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கப் போகும் மோடியின் கனவுத் திட்டத்தின் வெளிப்பாடே இந்தப் பேச்சாம்.
                                     
                                        
மோடியின் படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது
                           
தமிழ்நாட்டில் பாஜக இந்தியைத் திணிப்பதாக அரசியல் செய்கிறார்களாம். இவர்கள் இந்தியைத் திணிக்கவே இல்லையாம். தார் சட்டியுடன் இந்தியை அழிப்பவர்கள் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லையாம். இவர்கள்தான் கிழிக்கப் போகிறார்களாம். சொல்பவர்கள் பாஜகவின் கலை கலாசார அணியினர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி கலாச்சாரம் இருக்கிறதாம் அதைத் தாண்டி இந்தியா என்று ஒற்றுமையாக நிற்கவேண்டுமாம். இதெல்லாம் இப்போது மட்டும் இந்தியா ஒற்றுமையாக இல்லையா என்று யாராவது  இவர்களிடம் சொல்லவேண்டும். அதாவது மாநிலங்களுக்கு இடையே குறுகிய கால புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது, மாநிலங்களுக்கு இடையே கல்வி, கலாச்சாரச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள் நடத்துவது இதெல்லாம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இதை நடத்தலாமாம். பிரதமர் தான் பதவியேற்ற வருடமான 2014 லேயே இதைத் தொடங்கி விட்டாராம் இப்போது ஹரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா, சட்டீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தத் தொடங்கியாயிற்றாம். 


இதற்கு மேல் ஜால்ராவின் சத்தம் வேண்டுமென்பதால் தமிழருவி மணியனின் ஜால்ராவின் சத்தத்தையும் சேர்த்து ஒலிக்க விட்டிருக்கிறது குமுதம். ஏக் இந்தியா திட்டத்தில் தமிழகமும் இணையவேண்டும். தமிழக்த்தில் இருக்கும் அனைவரும் இந்தியத் தமிழர்கள்தான். பழைய மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டுமாம். அதென்ன மும்மொழித்திட்டம் ? வட இந்தியா இந்தி ஆங்கிலம் அல்லாது வேறொரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அப்போது இங்கே இந்தியை விருப்பப் பாடமாக ஏற்கலாமாம். கேட்கவே புல்லரிக்கிறது. என்ன அழகான எதிர்கால சிந்தனை. என்ன ஒரு நாய்த்தனம் தமிழருவி மணியனுக்கு ? அய்யா இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்காததால்தானே மற்ற மாநிலங்களிலும் இந்தியைத் திணித்து வருகிறார்கள். இந்திக்காரர்கள் இந்தி ஆங்கிலம் தவிர ஒரு தென்னிந்திய மொழியைப் படிப்பார்களாம் நாமும் இந்தியைப் படிக்க வேண்டுமாம். இது நடந்தால் மழை கீழிருந்து மேலே பொழியும். அடி செருப்பால !

இம்மாதிரி வெவ்வேறு மொழிகளைப் படித்து விடுவதால் மாநிலங்களுக்கிடையேயான பிணக்குகள், தண்ணீர் பிரச்சனை தீர்ந்து, சக இனங்களின் சகிப்புத் தன்மை பெருகி மாநிலங்களின் பொருளாதாரம உயரும் அதன் மூலம் தேசமும் உயருமாம். இதெல்லாம் தமிழருவி மணியன் உதிர்த்தவை. இவர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்தவர். ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசுக்கு ஆதரவில்லை என்று தாவியவர். இந்த உத்தமர் இப்போது கறிக்குதவாத மும்மொழிக்கொள்கைக்கு வால்பிடிக்கிறார்.

ஏன் மோடி அரசு இந்தித் திணிப்பை கைவிட்டு இதுமாதிரியான நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் போட்டால் யார் எதிர்க்கப் போகிறார்கள். இந்தியையும் திணித்து விட்டு இது மாதிரி மொக்கைத் திட்டங்களைப் போட்டதைக் கணக்குக் காட்டி இவர்கள் தேசத்திற்காகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள் என்று தூக்கிப்பிடிக்கிறது குமுதம்.
 

இதே குமுதத்தில் தமிழக மாணவர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கும் நீட் தேர்வை ஓரளவுக்கு மிதமாக விமர்சித்து கட்டுரை தீட்டியிருக்கிறது குமுதம். ஆனால் அதில் நீட் தேர்வைக் கொண்டு வந்து இந்திய ஒற்றுமையை நிலைநாட்டிய மாவீரன் என்று மோடியின் படம் அச்சிடப்படவில்லை. மாறாக அழகிய கல்லூரி மாணவிகளின் படத்தை அந்தக் கட்டுரைக்கு அச்சிட்டுள்ளது. ஏன் நீட் தேர்வுக்கு வழிவகுத்து தமிழக மாணவர்களை புதைகுழிக்கு அனுப்பியது பாஜக மோடிதான் என்பது பார்த்தவுடனே விளங்கி விடும். கட்டுரை படிப்பவர்களுக்கு அப்படித் தெரியக்கூடாது, அவர்கள் கோபம் பாஜகவின் மீது போகக்கூடாது என்பதற்காகத்தான் தேர்வு குறித்த கட்டுரை என்ற போர்வையில் மாணவிகளின் புகைப்படம். 


ஆனால் மோடியின் அழகிய படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது. பிள்ளையைக் கிள்ளி விட்ட மாதிரியும் ஆச்சு, தொட்டிலை ஆட்டி விட்டமாதிரியும் ஆச்சு. இந்தியை எதிர்ப்பவர்களை விமர்சித்த மாதிரியும் ஆச்சு மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்று சொன்ன மாதிரியும் ஆச்சு, மத்திய அரசு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உழைக்கிறது என்று சொன்னமாதிரியும் ஆச்சு.

Download As PDF
Bookmark and Share

Post Comment

சில உண்மைகள்

ஒரு இணையதளத்தை எதேச்சையாகக் காண நேரிட்டது. அதில் கிடைத்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பொய்யை பொய்யென்று உண்மையுரைப்பது நமது கடமையல்லவா ?

ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்று எல்லோரும் பழி வாங்கினால் உலகில் எல்லோரும் குருடாகிவிடுவார்கள் என்று காந்தி சொன்னதாக அங்கங்கே படிக்க நேர்கிறோம் இல்லையா ! அது காந்தி சொன்னதாக எந்தக் குறிப்பிலும் இல்லை. காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி பேசிய வசனம்தானாம் நாம் காந்தி சொன்னதாக நம்பிக் கொண்டிருப்பது.

பல நாட்களாக இது இணையத்தில் உலா வந்து கொன்டிருக்கின்ற புகைப்படம். இதில் இருப்பது காந்திதான் என்று நானும் நம்பிக் கொண்டிருந்தேன். இதில் நடனமாடுகிறவர் (காந்தி வேடமணிந்த) ஒரு ஆஸ்திரேலிய நடிகராம். சற்று உற்று நோக்கினால் கூட விளங்கி விடும். அந்நபரின் கையைப் பாருங்கள். வலுவான உடல்வாகுடையவர் என்பது புரியும். காந்தி மிகவும் ஒடிசலான உடலுடையவர். காந்தியின் கை படத்திலிருப்பவரின் கையைப் போல் இருக்காது.



காந்தியை விமர்சிப்பவர்கள் அதிகமாக இப்படத்தையும், நேரு எட்வினாவுக்கு சிகரெட் பற்ற வைப்பதையும் சேர்த்துப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் பெண்ணுடன் நடனமாடுவதையும், சிகரெட் பற்ற வைப்பதையும் கொண்டு விமர்சனம் செய்வதும், கேலி செய்து இன்பம் அடைவதும் அவரவர் தரத்தைப் பொறுத்தது.

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் ஹாக்கியும் தேசிய விளையாட்டு இல்லையாம். ஆனால் ஹாக்கியை வளர்க்க அதை தேசிய விளையாட்டு ஆக்கினாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை. கிரிக்கெட்டை விடவும் பல மடங்கு சிறந்த விளையாட்டு ஹாக்கி.

Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடாதீங்க "ஜி"

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகை - ஜி போடுது கொங்கு நாடு - அதில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நச்சுக் கலாச்சாரமான "ஜி" போட்டுப் பேசுவது பற்றி எழுதியிருந்தேன். ஜி போடுது கொங்கு நாடு என்பதற்குப் பதிலாக ஜி போடுது தமிழ் நாடு என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது கோவைப் பகுதிகளில் மட்டும்தான் இருப்பதாக எண்ணியிருந்தேன். நாம் இருக்கும் பகுதிதானே நம் உலகம். ஆனால் தமிழகம் முழுவதுமே இப்படித்தான் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இனி நானும் வெட்கப்படாமல் ஜி போட்டுப் பேசும் ஒவ்வொருவருடனும்  ஜி போட்டுப் பேசாதீங்க (டா போட்டுப் பேசாதே என்பதைப் போல்) என்று கூறியாக வேண்டும் போல் இருக்கிறது. 

நான் ஈரோட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே இருக்கும் வரை நண்பர்களை அழைப்பதும், நண்பர்கள் என்னை அழைப்பதும் "மாப்ள", "மாப்பி" என்றுதான் இருந்தது. நாங்கள் முடித்த பின்னர் வேலை தேடியலையும் படலம் வந்துவிட முக்கால்வாசிப் பேர் சென்னைக்குப் பொட்டியைக் கட்டினோம். அங்கே போய் இருந்த சில வருடங்களில் இந்த "மாப்பிள்ளை" என விளிப்பது போய் "மச்சான்" என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தோம். அதற்குப் பிறகு என்னாலும் இந்த மாப்பி என்றழைக்கும் பண்பாட்டை மீட்டெடுக்க முடியவில்லை.

வெள்ளுடை மேன்மக்கள் தொடங்கி அம்மா, ஆத்தா, ஆயா என்பவற்றை மாற்றி மூன்றெழுத்துக்  கெட்ட வார்த்தைகளாக அன்றாடம் பயன்படுத்தும் கீழ்மக்கள் வரை வரையறை இல்லாமல் ஜி போட்டுத் தாளிக்கிறார்கள். கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. திரைப்படம், நாளிதழ்கள், வார இதழ்கள், நெடுந்தொடர்கள், நேர்காணல்கள் என எல்லா மக்கள் திரள் ஊடகங்களிலும் இந்தப் பண்பாடு படுவிரைவாகப் பரவி வருகிறது. குறிப்பாக தமிழை தமிழாக எழுத முனையும் இணையத் தமிழர்கள், தமிழை சரியாகப் பேசாதவர்கள், தமிங்கில தத்திகள், தமிழை சரியாக பேச முயலாதவர்கள், இடையிடையே தமிழில் பேசுகிறவர்கள் இப்படி எல்லாத் தரப்பினரும் ஜி போடுகின்றனர். 


ஃபேஸ்புக் - ஐ முகநூல் என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது தவறாயிற்றே. என்ன செய்ய ? இது வரை எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்கு இனிய தமிழாக மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கவில்லை தமிழ்நாட்டினர். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள யாவற்றையும் கிண்டலடித்து மகிழும் தமிழர்கள், கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை நமீதா தமிழில் பேசுவதை கண்டமேனிக்குக் கிண்டலடித்தவர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலைஞர்ஜி என்று அழைத்ததையும் கிண்டலடித்தவர்கள். அதாவது தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால் அதையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் இவர்கள் மட்டும் ஒழுங்காகப் பேச மாட்டார்கள். வெட்டி பந்தாவுக்காக சார் போட்டும், ஜி போட்டும் பேசுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் பாருங்கள் அரைவாசி நடிகர்களின் தாய்மொழி தெலுங்காகவோ, மலையாளமாகவோ இருக்கும். அவர்கள் எவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் மற்ற மொழி பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் ? மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்கள் எத்தனை பேர் ? நமக்கு அடுத்தவர்களை ஓட்டுவதுதான் பிடிக்கும். நமது மொழியையே ஒழுங்காகப் பேசத் தெரியாமல் அடுத்த மொழியை எங்கே கற்பதாம் ?

அணு உலை எதிர்ப்பாளரும், தமிழ்தேசியவாதியுமான சுப. உதயகுமார் அவர்களும் ஃபேஸ்புக் - இல் "ஜி" குறித்துப் பதிந்த நிலைக் கூற்று

 
அடுத்ததாக நமது முதன்மை எதிரிகளான இந்துத்துவவாதிகள் சமீபத்தில் திறந்து வைத்த கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்ட சுவர்(பெரியாருக்குப் பதிலடியாம்). இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் என்று எழுதியிருப்பதை மனதாராப் பாராட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் சுவரொட்டிகளில் கூட பெயருக்குப் பின்னால் "ஜி"யைச் சேர்த்து எழுதுகிறவர்கள். அந்த "ஜி" யை இங்கே பொறிக்காமல் தமிழ் திரு என்று போட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலே ஒரு சின்னம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு இந்தி "ஓம்". தமிழில் கூட ஓம் என்பதை எழுதலாம் என்று இவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா ? அல்லது ஹிந்திதான் "மேல்"  என்று "குறி"ப்பால் உணர்த்த விரும்புகிறார்களா ? 


இவரது பங்காளியான இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் "கோபால்ஜி ஹிந்து முன்னணி" என்றுதான் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார்.  இது என்ன கேலிக் கூத்து ? கருணாநிதியின் ஃபேஸ்புக் பெயர் "கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று எழுதியிருந்தால் எப்படி சிரித்திருப்பார்கள் ? அவரே அவரை அவர்கள் என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்பது போல் ராம கோபாலன்"ஜி" - யே ராமகோபாலன்"ஜி" - யை ராமகோபாலன்"ஜி" என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்கலாம். ஜி ! என்ன ஜி நீங்க இப்படிப் பண்றீங்களே ஜி !

வெளி மாநிலத்தார் யாரேனும் தமிழ்செல்வன் என்றோ தேன்மொழி என்றோ பெயர் வைக்கிறார்களா ? இல்லை டெல்லியில் யாரேனும் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், அண்ணன் அமித் ஷா என்றோ அழைக்கிறார்களா ? தமிழர்களுக்கு மட்டும் என்னத்துக்கு இந்தப் பிழைப்பு ? "அக்கா தமிழிசை அவர்கள்" என்றுதான் வட மாநிலத்தலைவர்களும் கூப்பிட வேண்டும் என்று உங்க தேசியச் செயற்குழுவில் தீர்மானம் போடுங்கள் பார்ப்போம். இல்லை அக்காவையும் உங்கள் வடமாநிலப் பங்காளிகளைப் போல அக்கா"ஜி" என்றோ, தமிழிசை"ஜி" என்றோ அழைக்கப் போகிறீர்களா ? 

அடுத்ததாக நமது மதிப்பு மிக்க "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்ட தினமணி ஆசிரியர் ராகுல்"ஜி" என்று தலைப்பிட்டு தலையங்கமே எழுதி விட்டார். தனது நாளிதழில் எப்படி தமிழ் எழுத்தின் மூலமாகவே ஹிந்தித் திணிப்பை பணிவாகப் பரப்பி வருகிறார் என்பதைப் பாருங்கள். 

தினமணி கடைசிப்பக்கம்  - 09- 05 - 2015
 இப்படியே விட்டால் தமிழை ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும், தமிங்கிலத்துக்கும் இடையே தேடிப்பார்த்தாலும் கிடைக்காது போகும். தயவு செய்து ஜி போட்டுப் பேசாதீர்கள், பேசாதீர்கள். இதையெல்லாம் நம் போன்ற இணையப் போராளிகள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

பிகே - உங்கள் உள்ளத்தை அள்ளாமல் விட மாட்டான்


பிகே - ஆடையில்லாமல் வந்தவன்
அனைத்தையும் கற்றுக் கொண்டவன்
எளிய கேள்விகளால் எள்ளி நகையாடியவன்
கிறுக்குத்தனங்கள் பலவும் செய்தே
கீழ்மைத் தனங்களை எதிர்த்தவன்
சேட்டைகள் செய்தே சேதிகள் பல சொன்னவன்
கடவுள் இல்லை என்று சொல்லாதவன்
மனிதர் படைத்ததே கடவுள்தான் இல்லை என்றவன்
கடவுளைக் கண்டவன்
கண்டபிறகும் விண்டவன்
கடவுளையே மடக்கியவன்
மாற்றுமதத்தானை நேசிக்கச் செய்தவன்
மாற்றுமதத்தையும் விமர்சனம் செய்தவன்
மதமாற்றாமல் மதத்தையே மாற்றியவன்
நம்மையும் காதலிக்கக் கற்பித்தவன்
காதலியின் காதலுக்காகத் தன் காதலை மறைத்தவன்
இறுதி வரை சிரிக்க வைப்பான்
இறுதியில் அழ வைப்பான்
இதயத்தை இதமாக்குவான்
ஆறாம் அறிவை அணைத்துவிட்டு
கொஞ்சம் அவனைப் பாருங்கள்
உங்கள் ஏழாம் அறிவைத் திறந்து வைப்பான்
உங்கள் உறக்கத்தையும் கெடுப்பான்
உள்ளத்தை அள்ளாமல் விட மாட்டான்

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் கோவை அதிர்ந்த போது


தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - இல் வெளியான ஒரு சிறு கட்டுரை. கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு ஹிந்தி எதிர்ப்பு மொழிபோராளியைக் குறித்து சிறு கட்டுரை வெளியிட்டிருந்தது.  அறியப்படாத கொங்கு நாட்டு மொழிப்போர் வீரர்கள் - ஈகியர்கள் குறித்து ஒரு சிறு பதிவாக இருக்கும் என்று மொழிபெயர்த்தேன். பிழை நேர்ந்திருப்பின் வருந்துகிறேன்.

இளங்கீரன் - படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்


தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்னரும், போராட்டக் காரர்களால் ஒரு காவலர் தீ வைத்து எரிக்கப்பட்டதை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கோவையைச் சார்ந்த ஒரு காவலர், தான் ஒடுக்கும் சக்தியாக இருப்பதாக வருந்தி தனது சீருடையையே (காவலர் பதவியைத்) துறந்தார் என்பதை பலர் அறியவில்லை.

மனசாட்சி உறுத்திய அக்காவலர் காளிமுத்து, போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடும்போது தன் கண்களை மூடிக் கொண்டவர். "அவர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் இயக்கத்தின் இரகசிய ஆதரவாளர். அந்நிகழ்வின் பின்னர் தனது பணியை உதறிவிட்டு ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை நடத்தினார் என்று நினைவு கூர்கிறார் இளங்கீரன் எனும் கோவையைச் சேர்ந்த பிரபலமான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர். இவர் பேரூரிலுள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழாசிரியர் பட்டம் படித்துக் கொண்டிருந்தவர். அந்நாளில் நகரமே தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது, அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்தது என்கிறார். பூலைமேடு (இன்று பீளமேடு என்றழைக்கப்படுகிறது) தண்டபாணி என்ற பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டு இறந்தார். மொழிப்போராட்டத்தில் எண்ணிறந்த மாணவர்கள் இறந்ததால் மனமுடைந்த அவர் இம்முடிவைத் தேடிக் கொண்டார்.

ஏ துரைக்கண்ணு என்று அரசுக் கல்லூரி மாணவர் தலைவர், கோவை நகர ஹிந்தி எதிர்ப்பியக்கத்தின் செயலாளராகவும், இளங்கீரன் தலைவராகவும் இருந்தனர். தலைமறைவாக இயங்கிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, நாங்கள் உப்பிலிபாளையத்திலுள்ள காவலர் குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தோம். காவலர் காளிமுத்து தனது இல்லத்தில் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தார்.

தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் மறியல் போராட்டம் செய்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஆயுதப் படைக் காவலர் எனது முடியைப் பிடித்து அடித்து, நான்தான் ரிங் லீடரா என்று கேட்டார். ரிங் லீடர் என்பது அந்நாட்களில் குழுத் தலைவர் என்று பொருள்படும். கோவையில் இராணுவமே வந்திறங்கிய போதும் மாணவர்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிடுகிறார் இளங்கீரன். அந்நாளில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று இப்படித் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம். "சுட்டுத் தள்ளினார்கள்... சப்பாத்தியை ! "(யாரையும் சுடவில்லை என்பதை அப்படிக் கிண்டலடித்ததாம்).

இளங்கீரன் ஒரு கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அது பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களால் எழுதப்பட்ட ஹிந்தித் திணிப்பு-எதிர்ப்பு கவிதைகளின் தொகுப்பாகும். அதன் விலை 25 பைசா. அதன் தலைப்பு "ஜனவரி 26 இல் மானம் கெடும் தமிழர்க்கு"

அந்நூலின் தொகுப்பாசிரியர், துரைக்கண்ணு கீழ்க்கண்டவாறு அணிந்துரை எழுதினார். "எப்போது தோன்றியது என்று கண்டறிய முடியாத பழம்பெருமை வாய்ந்த தமிழ் என்ற மொழி, இந்நாளில் (26.1.1965) இறந்து விடும்". இந்தச் சிறு கவிதைத் தொகுப்பு என்பது கோவை கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்க்கிறோம். என்பதே அதன் சாரமாக இருந்தது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ஏ ராமசாமி என்பவர், இந்திய மொழிகளின் சுதந்திரப் போராட்டம் என்ற தனது நூலில் சொல்கிறார். துரைக்கண்ணுவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் படுகாயமுற்றனர். அதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், அதே நாள் மாலை 6 மணியளவில்
Aya Toofan என்ற ஹிந்திப்படம் திரையிடப்பட்ட நாஸ் திரையரங்கத்தை தீவைத்துக் கொளுத்தினர். அங்கே விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share

Post Comment

குமுதம் அரசுவின் அக்கப்போர் !!


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ஒரு கேள்வி பதிலை குமுதம் அரசு பதில்கள் பிரிவில் வெளியிட்டுள்ளனர். தற்போதைய திருவாய் மலர்ந்தருளிய செய்தி - வேறென்ன ஹிந்தியைப் படிக்க விடாமல் திராவிட இயக்கத்தின் துரோகம் குறித்துத்தான். தமிழர்களைப் படிக்கவிடாமல் செய்தது திராவிட இயக்கங்களின்  துரோகம்தானே என்று ஒரு வாசகி கேட்க, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கும்படி பார்த்துக் கொண்டார்கள் அதுதான் துரோகம் என்று பதிலளித்து இருக்கிறார். திராவிட இயக்கங்களைக் குறை சொல்ல வேறு 100 காரணங்கள் இருக்கின்றன. 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதாகவும்,  ஹிந்தியைப் படிப்பது துரோகம் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடடா என்ன கைங்கரியம். ஹிந்தி திணிப்பதை எதிர்ப்பதும், அல்லது ஹிந்தியைக் கற்பதும் துரோகமாம். தேவைப்படுபவன் கற்றுக் கொள்வதில் யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை, அதே நேரம் கட்டாயத் திணிப்பை எதிர்ப்பதில் நியாயமிருந்தது. இப்போது ஆங்கிலத் தாக்கத்தினால் தமிழ் மொழி குறித்து கவலைப்படும் நாம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது துரோகம் என்று சித்தரிப்பதில் என்ன நேர்மையிருக்கிறதோ அது போலத்தான் இதுவும்.

எத்தனை முறை கரடியைப் போல் கத்தினாலும் தேசிய மொழி ஹிந்தியைக் கற்க விடாமல் செய்தது திராவிட இயக்கம் என்று திரும்பத் திரும்ப முதலிலிருந்த தொடங்குகிறார்கள். இதைப்பார்த்தால்தான் கொதிக்கிறது.

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதைக் கற்காததால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது, ஹிந்தியல்லாத வெறொரு மொழி தெரியாததால் ஏற்படும் தொல்லைகள்தானே ஒழிய வேறொன்றும் தனிச் சிறப்பாக ஏற்படவில்லை. சில இணைப்புகள் தருகிறேன். வேறு ஏதேனும் சிறப்பான கட்டுரைகள் ஹிந்தி திணிப்பு குறித்து இருந்தால் தெரியப்படுத்தவும்





வெட்கம் கெட்டவர்களுக்காக !   (கோவி கண்ணனின் பதிவில் சில இணைப்புக்களும் உள்ளன. )



என்னுடைய பதிவு


Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை இல்லை இல்லவே இல்லை !!


எங்கேயாவது யாராவது திராவிட இயக்கத்தினர் அல்லது தமிழர்கள், தமிழகத் தலைவர்கள் தமிழரை ஹிந்தி கற்பதிலிருந்து தடுத்து விட்டனர் என்று சொன்னால் சுர்ரென்று கொதிப்பு தலைக்கு ஏறிவிடுகிறது. இதே போல் வெறியேற்றும் இன்னொன்று இங்கிருந்து இலங்கைக்குப் போய் நாடு கேட்டால் அவனெப்படிக் கொடுப்பான் ? அவர்கள் தெரியாமல் சொன்னாலும் சரி தெரிந்து சொன்னாலும் சரி. எல்லா இடத்திலும் போய் சொல்லிக் கொண்டிருக்கவா முடியும். என்றாலும் சிலரிடம் புரிந்து கொள்ளும் தன்மையுடையவரிடம் மட்டும், தோன்றுகிறவரிடம் மட்டும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், இருக்கிறோம். இருந்தாலும் பெரிய ஞானமுடையவரெல்லாம் இதை சொல்வதுதான் செரிக்க முடியாததாக இருக்கிறது.

அது என்ன எழவோ தெரியவில்லை. ஹிந்தி வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்கிறார்கள்.  இந்த ஒரு சொல்லில் வரலாற்றைத் திரிப்பது என்று சொல்வது போல இந்த ஒரு வரியில் அத்தனை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி, காக்கையைக் குயிலாக்கி, குயிலை கழுகாக்கி விடுகிறார்கள். 


காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

பாரதியார் தமிழை உயர்த்திப் பாடினார்.

இது போன்ற ஒரு வரியில் வரலாற்றைத் தவறாகப் பரப்புவது போலத்தான் ஹிந்தி தேசிய மொழி என்ற பொய் திரும்பத் திரும்பப் பரப்படுகிறது.

தேசிய மொழியாகிய ஹிந்தியைத் தமிழர்கள் கற்பதை அரசியல் வாதிகளும் மொழி வெறியர்களும் தடுத்து விட்டார்கள் அதனால்தான் தமிழர்கள் முன்னேற முடியவில்லை அல்லது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.

நான் அங்கே போனேன், ஹிந்தி தெரியாமல் தொல்லையாக இருந்தது, இன்னார் கேட்டார் அவமானமாக இருந்தது. அரசியல்வாதிகளை நினைத்து ஆத்திரமாக வந்தது.

இது மாதிரியான பேச்சுக்களை அவ்வப்போது அடிக்கடி கேட்கவும் வேண்டியிருக்கிறது. இதிலெது உண்மை ? இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது. ஹிந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஹிந்தி அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் காரணமாகவும் ஹிந்தி மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரும்பான்மை மொழியாக இருப்பதன் காரணமாகவும்தான். இதில் நடுவண் அரசின் பலதுறைகளில் தனிப்பட்ட முறையில் ஹிந்தி வளர்ப்பு அல்லது திணிப்பதற்கெ அரசே முகவராக செயல்படுகிறது.

மொழி வெறி என்னவென்று பார்ப்போம். தமிழ் வெறியர்கள் ஹிந்தியை கற்பதைத் தடுத்து விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. எது மொழி வெறி. இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகள் 1950 களுக்கு முன்பு இல்லை. அவர்கள் வசதிக்கேற்ப சிலவற்றை பிரித்துக் கொடுத்தும், சேர்த்து விட்டும் சென்றனர். இந்தியாவில் பல தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதும், ஆப்ரிக்க கண்டத்தில் ஆடை கூட அணியாத மனிதர்கள், ஏகே 47 துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மற்ற இனங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு கண்டங்களிலும் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் 500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக இருந்தது. தொடர்ந்து படையெடுப்புக்கள், இறுதியாக முகலாயர், பின்பு ஆங்கிலேயர் ஆகியோர் மொத்தமாக இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஒன்றாக ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

பின்பு 1947 - இல் பிரிட்டிஸ் வெளியேற இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். இந்தத் தலைமையின் கீழ் பல தேசிய இனங்கள் அடிமையாயின. 2 டஜன்க்கும் மேலான மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக ஆங்கிலமும் இருந்தது. ஆங்கில அறிவின் காரணமாகத்தான் பல நாட்டு தத்துவங்களும் சித்தாந்தங்களும் அறிமுகமாயின. ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் பல மொழிகள் பேசியவர்கள் நிறைந்த நாட்டை ஒரு தேசியத்தில் அடைக்க முயன்றார்கள். மற்ற சிறுபான்மை மொழிகளின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள். அன்றைக்கு ஆங்கிலம் இருக்கும் நிலைக்கு பதிலாக ஹிந்தியைத் திணிக்க எத்தனித்தார்கள்.

நாட்டுக்கு "சுதந்திரம்" வாங்கித் தந்த காங்கிரஸில் இருந்தவர்கள் பெரும்பான்மையான தலைவர்கள் ஹிந்தியை தேசிய மொழியாகக் கொண்டவர்கள். ஹிந்தி வெறியர்கள். ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களுக்கு தேசிய மொழியின் பெயரால் ஹிந்தியைத் திணிக்க முயன்றனர். அதை மற்றவர்கள் எதிர்த்தார்கள். தமிழர்கள் அதிகமாக கடுமையாக எதிர்த்தார்கள். இது போன்ற பிரச்சனைதான் கிழக்கு பாகிஸ்தானில் உருதுவைத் திணித்த போது வங்காளிகள் அதை எதிர்த்தனர், வங்கதேசம் உருவானது.

ஹிந்தித் திணிப்பைத்தான் ஹிந்தி எதிர்ப்பு என்றும் ஹிந்தி வெறுப்பு என்றும் திரித்து பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் மீது தம் மொழியைத் திணித்து அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவன் மொழி வெறியனா அல்லது தம் மொழிக்காக போராடுகிறவன் மொழிவெறியனா ? ஹிந்தி வெறியர்கள் என்று யாருமே சொல்லக் காணோம். ஹிந்தி வெறியர்கள்தான் போராட்டத்தை அடக்க மத்திய ரிசர்வ் படைய அனுப்பினார்கள். போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள். ஹிந்தி வெறியன் என்று யாருமில்லையாம். ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி வெறுப்பாளன் பட்டம். சரி இப்படி வைத்துக் கொள்வோம், ஒரு வேளை காங்கிரஸில் தமிழர்கள் அல்லது தமிழ் வெறியர்கள் அதிகமாக இருந்து, தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருந்தால் அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் என்ன நிலை எடுப்பார்களோ அது போலத்தான் இதுவும்

ஹிந்தி கற்றுக் கொள்வதை யாரும் எதிர்க்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. அந்தக் காலத்தில் வட இந்தியர் ஆதிக்கமிருந்ததன் காரணமாக பல அரசுத் தொழில் நிறுவனங்கள் வட இந்தியப் பகுதிகளில் தொடங்கப்பட்டன. அங்கே செல்ல வேண்டிய தேவை தென்னிந்தியர்களுக்கு இருந்தது. அதை வைத்து அக்காலத்தில் ஹிந்தி தெரியாதவர்களை குற்ற உணர்வுக்குள்ளாக்கினர். இந்த உலக மயக் காலத்தில் வட இந்தியர்கள் தென்னிந்தியா நோக்கி பிழைக்க வரும் நிலை இருக்கிறது. இன்னும் வந்து பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது ஒன்று அறியாமை இல்லையென்றால் அயோக்கியத்தனம்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு தெரியவில்லை என்று அந்தந்த மாநிலத்திற்குச் செல்லும்போது எவ்வளவு வருத்தப்படுவோமோ அவ்வளவு வருத்தப்பட்டால் போதுமானது. தேசிய மொழியைக் கற்கவில்லை என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மாண்டரின், உருது அரபி ஆகியவை தெரியவில்லை என்றும் வருத்தப்படலாம் தவறில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் ரொம்பவும் பீற்றிக் கொள்ளத் தேவையில்லை. வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே படும் அவலங்களைக் கண்ட பிறகும் ஹிந்தி தேசிய மொழியைக் கற்காமல் ஏமாந்து விட்டோம் என்று கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். 

படம் - ஃபேஸ்புக்
இன்னொன்று, ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை என்பது வரலாறு. தமிழர்களைப் போலவே மொழி உணர்வுடையவர்கள் வங்காளிகளும் கன்னடர்களும். தற்போது ஸ்ரீதேவி நடித்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படம் வெளியாகவுள்ளது. அதில் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆங்கிலம் தெரியாமல், அமெரிக்காவில் எப்படி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ஹிந்தி தெரியாமல் அமெரிக்கர்கள் இந்தியாவில் எப்படி சமாளிப்பார்களோ அது போலத்தான் என்கிற பாணியில் பதிலளிப்பது போலவும் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் காட்டியிருக்கிறார்கள். ஹிந்தி பேசும் ரசிகர்களிடம் கைத்தட்டலை எதிர்ப்பார்த்தோ அல்லது தமது அறிவின் அடிப்படையிலோ இக்காட்சியை வசனத்தை இயக்குனர் வைத்திருக்கலாம். இது ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களை இழிவு செய்வதாகக் கூறியும், அவ்வசனத்தை நீக்கக் கூறியும், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியன்று எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு கையெழுத்துக்கள் மூலமாக எதிர்ப்புக்குரல் Change - தளத்தில் தொடங்கப்பட்டது.

இதைத் தொடங்கியவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் இல்லை. கன்னடர்கள். அதனால் தமிழர்களைப் போல மொழிவெறியர்கள், திராவிட இயக்கம் தடுத்து விட்டது என்ற வாதமெல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

அந்த இணைப்புக்கள் :- 


இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை என்பதற்கான  ஆவணம்
Download As PDF
Bookmark and Share

Post Comment