கமல் ஹாசனுக்கே தெரியவில்லையா ?

சகிப்புத்தன்மை குறைந்து வருவதல் போன்ற விவகாரங்களுக்காக தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதில்லை; அப்படி ஒப்படைப்பதால் எந்த பயனும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். சகிப்புத்தன்மை குறைந்து வருவதை அறிவுப்பூர்வமாகத்தான் தோற்கடிக்க வேண்டும்  - செய்தி.

கமல் திருப்பித் தருவில்லை என்பதிலெல்லாம் வருத்தமில்லை. அவர் திருப்பித் தந்திருந்தால் அது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கும் என்பது மட்டும் உண்மை. உண்மையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கவனிக்காத, அலட்சியமான போக்கிலேயே இருக்கிறது அவரது பதில். பாவம் அவர் மட்டும் என்ன செய்வார். அவருக்கே கருத்து சுதந்திரம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அவரது படங்களில் நம்பிக்கைகளைக் கிண்டல் செய்வதற்காக நம்பிக்கையாளர்களிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரை எந்தளவு குரூரமாக எள்ளப்படுகிறார். அதுவும் கருத்து சுதந்திரம் அற்ற தன்மை, பிறருடைய பண்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத, தெரியாத அற்பர்களின் சகிப்பின்மைதான். அதன் வேறுவடிவம்தான் இது. இதை எப்படி கமல் அறிவுப்பூர்வமாகத் தோற்கடிப்பது ?

சரி விடயத்திற்கு வருவோம். கமல் அறிவுப்பூர்வமாகத் தோற்கடிக்க வேண்டும் என்கிறார். எப்படி அறிவுப்பூர்வமகாத் தோற்கடிப்பது? எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பி அளிப்பது எவ்வளவு அறிவுப்பூர்வமான செயல். இப்படித் திருப்பி அளித்ததன் மூலம் தாங்கள் உழைத்துப் பெற்ற பெறுமதியை தானே இழக்கத் துணிவது பிறர் துன்பம் கண்டு வெதும்பி தன் இயலாமையைக் காட்டக் கிடைத்த ஒரே ஜனநாயக, அறிவுப்பூர்வமான வழிதானே இந்த விருதைத் திருப்பிக் கொடுத்தல். இது அறிவுப்பூர்வமான செயலன்றி வேறென்ன ஆயுதப் பூர்வமான செயலா ?

இதைப் புரியாத ஓநாய்க் கூட்டம் எழுத்தாளர்களைக் கொக்காணி காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் ராவணன் சீதையத் தூக்கிச் சென்றபோதே திருப்பிக் கொடுக்கவில்லை என்கிற ரீதியில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதையே கமலும் செய்கிறார். கமலுக்குத்தான் இந்தியா என்றால் ரொம்பவும் பிடிக்குமே !! இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைக் கூடவா அறியாமல் இருக்கிறார் ?

இவரது முன்னாள் துணைவரின் படம் ஃபர்ஜானியா ஏன் தடை செய்யப்பட்டது ?

இவரது நண்பர் ஷாருக்கான் கமல் தற்போது சந்தித்து விட்டு வந்தாரே தாக்கரேவின் புதல்வர், அவர்களின் கூட்டத்தினரால் எவ்வாறெல்லாம் ஏசப்படுகிறார் ?  உதாரணத்திற்கு இப்போதும் கூட ஒன்று

ஏன் கமல்ஹாசனுக்குத் தெரியாதா, தான் இயக்கிய முதல் படமான ஹேராமிலேயே , ஏணி மேல் ஏறி முஸ்லிம்களுக்காக இந்துக்களை துப்பாக்கியால் சுட்ட சாகேத் ராமன் கமல்தானே.

அவ்வை சண்முகியில் மாட்டை வெட்டுகிறவனையா நம்மா ஆத்துக்கு சமயக்காரன் என்று கேட்ட மாமனாரிடம், நீங்களும் அதே மாட்டை வெட்டித்தான் தோலை எக்ஸ்போர்ட் பண்றேள் என்ற கேட்ட பாண்டியனும் கமல்தானே ?

கமலுக்கு இதெல்லாம் தெரியாதா ?. ஓ இப்போதுதான் கமல் "உன்னைப் போல் ஒருவன்" என்றாகி "விஸ்வரூபம்" எடுத்துவிட்டார் என்கிறீர்களா ?? சரிதான். 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment