ஆணாதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆணாதிக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாலியல் வன்முறைக்குக் காரணம் பெண்களின் உடை என்பது தவறு

பெண்கள் கவர்ச்சியாக உடலைக் காட்டியவாறு உடை அணிவதால்தான் பாலியல் வன்முறைக் நடக்கிறது என்ரு 101 விழுக்காடுகள் உறுதியான கொள்கையை உடையவர்களுக்கு ஒர் சவால்.


பெண்கள் எந்த வகையில் உடை அணிந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு ஆண்களுக்கு காமம் தோன்றுவது இயல்பே. அதற்காக பாலியல் ரீதியான தாக்குதல், சீண்டலை ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அதை இயல்பாகக் கடந்து செல்வதற்கு ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். 

ஆண்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் பெண்கள் எந்த வித வன்முறையிலும் ஈடுபடுவதில்லை என்பதைப் போலவே ஆண்களும் மாற வேண்டும் என்பதே அறம். கட்டுப்படுத்த முடியாதளவுக்கு காம உணர்வு உந்தித் தள்ளினால் வீட்டுக்குச் சென்று கை மைதுனம் செய்து கொள்ளவும். இதைக் கிண்டலுக்குச் சொல்லவில்லை.  உண்மையாகவே பரிந்துரைக்கிறேன்.

ஒரு பெண் தன்னை செக்ஸியாகக் காட்டிக் கொள்வதாலும் உடை அணிவதாலும் அவள் விருப்பமோ அனுமதியோ இல்லாமல் அவளைத் தொடக்கூடாது அத்து மீறக்கூடாது. விருப்பம் இல்லாத நிலையில் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளுங்கள். விருப்பம் இருந்து இருவர் ஒன்றாக இருக்கும்போது மற்றவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே கண்ணியம்


Download As PDF
Bookmark and Share

Post Comment

பெரியாரியம் பேசுவோரின் சிறியாரியம்

 


பெரியார் சொன்னது என்ன ?

நான் யாருக்குப்பிறந்தாலும் எப்படிப் பிறந்தாலும் அது என் கவலையில்லை. தேவையுமில்லை. நான் தன்மானத்துடன் இருக்கின்றேனா என்பதுதான் தேவை. என்னுடைய பிறப்பின் காரணம் பற்றிப் பேசுகிறவர்கள் முட்டாளும் அயோக்கியனுமே.

இதே பெரியார்தான் இந்து மதம் சுமத்திய சூத்திரப் பட்டம் ஒழியப் போராடினார். சூத்திரன் என்பவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அதாவது தேவடியாப் பையன் என்று மனுதர்மத்தின் கூற்றுக்கு எதிராகப் போராடினார். அவரேதான் பிறப்பிற்கான மூலத்தைப் பற்றியும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்.

நமது கருத்தென்ன,

இங்கே பெரியாரியம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் தனக்கு எதிர்க்கருத்து, எதிர் அரசியல் பேசுவோரை எதிர்க்கவும் திட்டவும் தேவடியாப் பையன் என்று சரளமாகச் சொல்கிறார்கள். இந்து மதம் சுமத்திய சூத்திர இழிவுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்பவர்கள் எப்படி அதையே சொல்லித் தனது எதிரிகளைத் திட்ட முடியும் ? இல்லை முதலில் அப்படிச் சொல்வது எப்படி அவர்களைத் திட்டுவதாகும் அல்லது இழிவு செய்வதாகும் என்று கூற முடியுமா ?

அதிலும் பிறப்பால் பார்ப்பனரான பெண்கள் பெரியாருக்கு எதிரான கருத்துக்களைக் கூறினால் அவர்களையும் ஐட்டம், தேவிடியா என்றெல்லாம் அனைவரும் சொல்கின்றனர். இதற்கெல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒருவேளை பெரியார் தான் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். உன் புத்திக்குச் சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக் கொள் என்று சொன்னதைத்தான் பின்பற்றி அடுத்தவனை தேவிடியா பையன், தேவிடியா என்றெல்லாம் சொல்வது சரி என்று கருதிச் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


Download As PDF
Bookmark and Share

Post Comment

#Metoo எதிர்ப்புப் புரட்சியாளர்கள்

ஒருவர் தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னால் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்று பாருங்கள். 

இப்படிப்பட்ட நகைப்படங்களை உருவாக்கியவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்து சொல்கிறவர்கள்.

மனநோய் முற்றிய அறிவாளிகள்








Download As PDF
Bookmark and Share

Post Comment

அழகு என்று சொல்வதின் அழகின்மை

உங்க ஊர்ல தேன்மொழி கனிமொழினு எவளாவது வாய்க்கால் வரப்புல திரிவா அவளத் தேடித் தேடி லவ் பண்ணு உனக்கெல்லா நான் செட்டே ஆக மாட்டேன். 
                                     
வெள்ளைத்தோல் மலையாளியை வைத்து சராசரி தமிழச்சிகளை கீழாகக் காட்டும். இது அட்லி எழுதிய வசனம். இதை தமிழ்நாட்டில் ரசிக்காதவன் எவன்?  எவள் ? 

இந்த வசனத்தை கொகொட்டிச் சிரித்து மகிழ்ந்த அதே உள்ளங்கள் இயக்குநர் அட்லியின் உருவத்தையும் நிறத்தையும் வைத்து அவரது மனைவியுடன் இருக்கும் படங்களைக் கிண்டலடிப்பதாக நினைத்து தன்னைத்தானே இழிவு படுத்துகின்றனர், அட்லி இந்தப் படத்தில் இந்த வசனத்தின் மூலம் இழிவு செய்தது போல.


இத்தனைக்கும் கனிமொழி என்கிற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு ஆளுமையை வைத்துக் கொண்டே. தேன்மொழி கூட அத்தனை இழிவான பெயரும் இல்லை. 

ஒருவரின் உருவத்தைப் பழிப்பதே மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. ஒரு பொம்பளையக் கிண்டல் பண்ணனும்னா அது மொக்க ஃபிகர் இல்லைன்னா ஆன்ட்டின்னு சொன்னா முடிஞ்சது. ஒரு நகைச்சுவைத் துணுக்குக்கு சிரிப்பதை வைத்தோ,  ஒரு மீமை பகிர்வதை வைத்தோ, ஒரு கருத்தை விரும்புவதை வைத்தோ கூட நாம் நிறவெறியர்கள் என்பதை நிரூபித்து விடலாம். இப்ப நாமெல்லாம் ஒரு நிறவெறியர்கள் என்பதற்கான சிறிய உதாரணங்கள். 

நமக்கு எதிரிகள் என்பதற்காகவே தமிழிசையை பரட்டை என்று மீம் போடுவது, அதைப் பரப்புவது. 

திராவிடக் கட்சியின் குலக்கொழுந்து உதயநிதி சாக்கடை சந்தானத்துடன் ஒரு சராசரி தமிழச்சியைப் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியாடா த்தூ என்றெல்லாம் உளறுவதைப் பார்த்து நாம் சிரிக்கவில்லையா ?. 

நடிக்க வந்த புதிதில் அதே உதயநிதியின் பழைய புகைப்படத்தைப் போட்டு காசிருந்தா காக்காவும் மயிலாகும் என்று தமிழர்கள் ஃபேஸ்புக்கில் தங்களது நகைச்சுவை உணர்வைக் காட்டினார்கள். 

ராஜகுமாரன் படத்துல வர்ற கவுண்ட மணி, செந்தில், வடிவேல் மற்றும் தங்கச்சி மணிமேகலை காட்சி. அதை எல்லாம் என்ன நியாயம்னு நினைச்சு சிரிச்சோம் நாமல்லாம்.

சுமாரான, அழகில்லாத ஆண்கள் எல்லாரும் அழகான பெண்ணை காதலிக்க, திருமணம் செய்ய நினைப்பார்கள். அதே இன்னொருவன் அழகான பெண்ணின் காதலனாகவோ, கணவனாகவோ இருந்தால் எலுமிச்சப்பழத்தைக் காக்கா கவ்விடுச்சு, இவன் மூஞ்சிக்கெல்லாம் இந்த ஃபிகர் ஓவர் என்று நினைப்பார்கள். 

தன்னைச் சார்ந்த பெண்கள் என்றால் குணங்களைப் பற்றிப் பேசுவார்கள் ஆண்கள். தன்னை சாராத பெண்களைக் குறித்த சராசரி ஆண்களின் உளவியல் என்ன ?. என்னுடைய கணிப்பு இரண்டே இரண்டுதான்.

அழகான பெண்ணைப் பார்த்தால், ஆகா இவளைக் கட்டிக்க எவனுக்குக் குடுத்து வச்சிருக்கோ ?

திருமணமானவராக இருந்தால் நம்ம பொண்டாட்டி இது மாதிரி இல்லையேன்னு ஏக்கமும் திருமணமாகதவராக இருந்தால் இந்த மாதிரி ஒருத்திதான் நமக்கு வரணும்னும் இருக்கும்.

அழகாக இல்லாத பெண்ணைப் பார்த்தால். த்தூ ! இதையெல்லாம் எவன் பார்ப்பான் ? கட்டுவான் ? 

ஆக நமது உளவியல் அழகை வைத்து ஒருவரை குறிப்பா பெண்களை எடை போடுவதுதான். இது கொடிய மனநோய்தான். நாமேதான் சிரமப்பட்டு மாற்றிக் கொள்ள வேண்டும். 

ஒருவரை அழகு என்பதாலேயே இன்னொருவரை அழகில்லாதவர் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறோமே இது தவறில்லையா ? மாற்ற முயல்வோம்.
x
Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்தப் பெண் தலை குனியவில்லை !!

 

இரண்டு காணொளிகளையும் கண்டிருந்தால் யார் மீது தவறு என்று புரியும் . நான் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதில்லை. இஸ்லாமியப் பெண்மணியில் ஒரு இடுகையை பதிந்திருந்தார்கள். அதில் இக்காணொளியை மையப்படுத்தி இருந்தது. அதில் பின்னூட்டமிட்டிருந்த சிலர் இதனால் இஸ்லாமிய சமூகத்திற்குத் தலை குனிவு என்று பொருள்படும்படி எழுதியிருந்தார்கள். நான் அதை மறுக்கிறேன்.



இந்த நிகழ்ச்சியின் இக்குறிப்பிட்ட பெண் பங்கு கொண்ட இரு காணொளிகளையும் கண்டேன். ஸீ தமிழ் தொலைக்காட்சி மிகச் சிறப்பாக பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்து அடுத்தவன் பிரச்சனையைப் பற்றிப் பேசித் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளும் நபர்களின் தினவெடுத்த மூளைக்குத் தீனி போடவும், கலாச்சாரக் காவலர்கள் கரித்து கொட்டவும் ஏற்ற் வகையில் எரிச்சலைக் கிளப்பும் பின்னணி இசையுடன் ஒளிபரப்புகிறார்கள். 

இதில் இருப்பது என்னவென்று எல்லோர்க்கும் புரிந்திருக்கும். முஸ்லிம் பெண் இந்து ஆண் இருவரும் காதலித்திருக்கிறார்கள். இப்போது பெண் கருவுற்றிருக்கிறாள். ஆணோ அவளை ஏற்க முடியாது சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை புகார் கொடுத்துக் கொள் என்கிறான். அவள் அழுது கெஞ்சுகிறாள். அவன் மீது புகார் கொடுப்பதற்கல்ல, சேர்ந்து வாழத்தான் இங்கு வந்தேன், அவனை வரவைத்தேன் என்கிறாள். அவனோ அவள் இவ்வளவு அவமானப்படுத்திய பிறகு சேர்ந்து வாழமுடியாது என்கிறான். அவன் திருமணம் செய்துகொள்வதுதான் தீர்வு, இல்லையெனில் அவன் மீது புகார் அந்தப் பெண் கொடுத்தால் அதை ஆதரிப்போம் என்கிறார் லட்சுமி.

உண்மையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பது அந்த ஆண்தான். ஆண்கள்தான் இதற்குத் தலை குனியவேண்டும். அந்தப் பெண் தலை நிமிர்ந்துதான் நிற்கிறாள். தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கேட்டுத் தலை நிமிர்ந்துதானே நிற்கிறாள். இதில் என்ன தவறு ?  இதை ஏன் அப்பெண்ணுக்குத் தலை குனிவு என்று சொல்ல வேண்டும். அவனிடம் கெஞ்சிக் கேட்டதாலா ? அவனைப் போன்றவனிடம் போய்க் கெஞ்சுவது பெண்ணுக்குத் தலை குனிவுதான். அவள் கேட்ட கேள்விகளுக்கு எதுவுமே சரியான பதில் அவனிடமிருந்து வரவில்லை, அவமானப்படுத்திவிட்டாள் என்கிறான். அவளோ அவனது அண்ணன் இருப்பதால்தான் புகாரளிக்க துணிச்சலாகச் சொல்கிறான் என்கிறாள். அவன் பேந்தப் பேந்த முழிப்பதும் அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்புவதும் அவன் பொய் சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.

ஆக மொத்தம் இவனுக்குக் கசந்து விட்டதால் மொன்னைக் காரணத்தைச் சொல்லி இவளை வேண்டாமென்கிறான். அவள் அவனுடன் வாழ்வதுதான் வேண்டும், புகாரளிக்க விருப்பமில்லை என்கிறாள். அவன் பொய் பேசுகிறவன் என்பதை ஏற்கெனவே தெரிந்துதான் காதலித்தேன் என்கிறாள். என்னை கேட்டால் இவனிடமெல்லாம் கெஞ்சுவது அவளது தன்மானத்திற்கும், பண்புக்கு இழுக்கு என்றுதான் கூறுவேன். அவன் வந்து  கெஞ்சினால் கூட இவள் ஒத்துக் கொள்ளக் கூடாது. இவனைத் தூக்கியெறிந்து விட்டு வாழவேண்டும். வாழ்க்கை விரைவில் அவளுக்கோர் நல்வழிகாட்டும். அவளைப் பார்த்தால் பக்குவப்பட்டவளாகவே தெரிகிறது.

பெண்கள் என்றாலே காதலித்து ஏமாற்றுகிறவர்கள் என்று குறுந்தகவல் அனுப்புகிறவர்கள், ஒரே சமயத்தில் இரண்டு மூன்று ஃபிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டே "வேணாம் மச்சா வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு" என்று நிலைத்தகவல்கள் போட்டு "லைக்"கள் வாங்கும் அறிவாளிகளுக்கு இந்தப் பெண்ணின் காதல் சமர்ப்பணம். இது பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

பெண் காதலிக்க மறுத்ததற்காக அமிலத்தை ஊற்றுவது, பாலியல் வன்முறையை ஏவுவது, கொலை செய்வது என்று வெறியாட்டம் போடும் ஆண்களுக்கு நடுவில் காதலுக்காக இரந்து நிற்கும் இவள் பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

ஆண்கள் எல்லாம் தியாகிகள் என்பது போலவும் பெண்கள் என்பவர்கள் பொழுது போக்கவும், பணத்துக்காகவும், ஊர்சுற்றுவதற்காகவும்  மட்டுமே காதலிப்பதாக நடிக்கிறார்கள் என்று அயோக்கிய நடிகன் பேசும் குப்பை வசனத்துக்காகவும் காது வரை சிரித்து மகிழும் ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்.

இதை வைத்து காதலிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வோர்க்கும் சமர்ப்பணம்.

ஆண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மேட்டர் முடிச்சியா, கை வச்சிட்டியா என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதே ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினால் அவளே ஒரு மேட்டர், கெட்டுப் போனவள், சோரம் போனவள் என்று சொல்வார்கள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம். பெண்களைக் குற்றவாளியாக்கும் ஆண்களின் இரட்டை நாக்கு. ஆண்கள் கலவி செய்தால் அது வெற்றி, அதையே பெண்கள் செய்தால் அது தோல்வி. நல்ல மதிப்பீடு.

ஆண்கள் தாங்கள் அயோக்கியர்களாக இருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பெண்கள் ஏன் அயோக்கியனையே காதலிக்கிறார்கள், அவர்களையே விரும்புகிறார்கள் என்று எரிச்சல்படுவார்கள்.
இப்போது இந்தப் பெண்ணுக்கு  இந்த சமூகத்திடம் கெட்ட பெயர், அல்லது இந்த சமூகமே காறித் துப்புகிறது என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். இந்த நிகழ்ச்சியின் போது இந்தப் பெண்ணுடைய தங்கையும் யாரையோ காதலிப்பதாக அவன் சொல்லி விட்டான். இதனால் அந்தப் பெண்ணுக்கும் கெட்ட பெயர். இங்கு இந்த சமூகம் என்ன சொல்கிறதென்றால், ஒரு பெண் காதலித்தால் அவள் களங்கப்பட்டவள். இதெல்லாம் இந்த சமூகம் வைத்திருக்கும் மதிப்பீடுகள்.

நான் மனித உணர்வுகளுக்குத்தான் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜாதி, மதம் போன்ற மாயக் காரணங்களுக்கல்ல. மனிதனுக்குத்தான் மதமே தவிர, மதத்துக்காக மனிதனல்ல. அந்த வகையில் காதல் என்பது மனித உணர்வுகளில் ஒன்று. நான் காதலை ஆதரிக்கிறேன். அதுதான் பெரிய சவால். இதில்தான் ஆபத்தும் அதிகம், அதிக கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்

ஒன்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதாலேயே அது சரியானது என்றாகிவிடுமா ? இல்லை ஒன்றை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே அது தவறானதாகிவிடுமா? நான் அநீதியான இந்த சமூகத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது வைக்கும் அளவுகோலையும் மதிப்பதில்லை. இந்த சமூகம் எதை மதிக்கிறது என்று சொன்னால் ஒரு பெண் படிக்கிறாள், வேலைக்குப் போகிறாள். திருமணம் செய்யும் வயது வருகிறது. பின்பு வேலையையும் விட்டு விட்டு பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குச் சென்று கணவனுக்கும்  அவன் வீட்டினர்க்கும் பணிவிடை செய்து வாழ வேண்டும். 


எத்தனை பவுன் நகை, எத்தனை பணம், சீதனமாக என்னென்ன கொடுத்தார்கள். என்பதைப் பற்றி சமூகத்தினர் தமக்குள் பேசிக்கொள்வர். பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் எப்படி, அழகு எப்படி குடும்பம் எப்படி என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும்.  இதுதான் இந்த சமூகம் மெச்சத்தக்க குணம் என்று எதைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிதான் பெண்கள் இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் கூடாது. நடந்தால் கொலை கூட நடக்கும்.  இப்படி ஜாதிவாரியாக சீதனம், நகை என்று என்ற தலையை அடகு வைத்து கடன் வாங்கி வணிகத்தைத்தான் நடக்கும் திருமணம் சமூகம் கொண்டாடுகிறது. ஜாதிக்காரன் என்பதற்காக கொஞ்ச நஞ்சம் சீதனம் கொடுக்கல் வாங்கலில் குறைந்தால் கூட திருமணம் நடப்பது பிரச்சனை ஆகிறது. இப்படிப் பெரும்பான்மையான திருமணங்கள் நடந்தாலும், சீதனத்திற்காக மருமகளைக் கொடுமை, கொலை செய்வது வரை நடக்கிறது. இப்படி நடக்கும் திருமணங்கள் கூட சில நேரம் தோல்வியில் முடிகின்றன. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், திருமணமே தவறு திருமணமே வேண்டாம் என்று கூட வேண்டாம் சீதனம் தருவது தவறு என்று கூட பெரிய அளவில் மாற்றத்தைக் காணோம். திருமணம் என்ற சடங்கு அல்லது வணிகம் சமூகத்தின் முழு ஆதரவுடன் ஆரவாரமாக நடந்து வருகிறது.

அனைவரது ஆதரவு, பொருளாதாரச் சிக்கலின்றி நடக்கும் திருமணங்களிலேயே இத்தனை பிரச்சனையிருக்கும்போது, பக்குவமும், அனுபவமும் இல்லாத இரண்டு பேர் எல்லோரையும் எதிர்த்து நடக்கும் காதல் திருமணங்களில் இன்னும் சிக்கல்களும், சவால்களும், போராட்டமும் அதிகம் தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒழுக்கங்கெட்டவர்கள், ஓடுகாலிகள், குடும்ப மானத்தை வாங்கியவர்கள் என்ற பட்டப்பெயர்கள் சமூகத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கும். இப்படி இருக்கிறது நிலைமை. காதலிப்பவர்களெல்லாம் பெற்றோரை ஏமாற்றுகிறவர்கள், மானத்தை வாங்குகிறவர்கள் என்றெல்லாம் ஏசுகிறார்கள். பெற்றோர் நடத்தி வைக்கும் வணிகத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் ஆணும் பெண்ணும் தன்மானமற்றவர், உணர்ச்சியற்றவர்கள் என்று கருதலாமா ?

யாரும் நம்மை 20 வருடம் பெற்று வளர்த்துக் காப்பாற்றும் பெற்றோரை ஏமாற்றியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தெரியாமல் ஊர் சுற்றுவதில்லை,  வேறு மத, ஜாதிக்காரனைக் கட்டிக் கொண்டு ஓடுவதில்லை. நான் இன்னாரைக் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொல்லுமளவுக்கு பக்குவப்பட்டவர்களாகவா பெற்றோர் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உயிருக்காவது உத்தரவாதமிருக்கிறதா ? காதலென்றாலே கல்லைப் போட்டுக் கொல்லுமளவிற்கு ஜாதி வெறியும், மதவெறியும் பிடித்து இருக்கிறார்கள். தலையை வெட்டிக் கொல்கிறார்கள்., கழுத்தை நெரிக்கிறார்கள், நஞ்சை ஊட்டுகிறார்கள். எரித்தும் கொல்கிறார்கள். கட்டாயத் திருமணம் விருப்பமில்லாம செய்விக்கிறார்கள். காதலை ஏற்றுக் கொள்வது போல் நடித்து வீட்டுக்கு வரவைத்துக் கொல்கிறார்கள். இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பிரித்து விட முயற்சிக்கிறார்கள். இப்படி எழவெடுத்த எதற்கும் பயனில்லாத ஜாதியைக் கட்டிக் கொண்டுதான் வெறிகொண்டு அலையும் பெற்றோர்கள் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். காதலிப்பவர்கள் தவறு செய்கிறார்களாம், பெற்றோரை ஏமாற்றுகிறார்களாம்.

தனிப்பட்ட மனிதர்களின் திருமணத்தில் கூட மதமும், ஜாதியும்தான் போலி கௌரவம், குடும்பமானம் என்ற பெயரில் மூக்கை நுழைக்கிறது. அதற்காக பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தையும் நிராகரிக்கிறார்கள் பெற்றோர். ஒரு வேளை பெற்றோர் சம்மதித்தாலும் கூறுகெட்ட ஜாதி, மத, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கூறு கெட்ட சமூகம் அதை தடுக்கிறது.

எல்லோரும் முகம் சுளிக்கும் இன்னொன்று, இவர்கள் வீட்டிலேயே திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டார்கள், அவள் கருவுற்றாள் என்பது. இது தவறாகவே இருக்கட்டும். நானும் இதைத் தவிர்க்கவே சொல்கிறேன். இருப்பினும் இதை ஒரு உலக மகாக் குற்றமாகச் சொல்வதால் இந்தப்புனிதத்தையும் கேள்வி கேட்க வேண்டும்.  வீட்டிலேயே இக்கூத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பார்கள். இதே வெளியில் போய் செய்திருந்தாலும் வெளியே போய்க் கூத்தடித்திருக்கிறார்கள் என்பார்கள். சரி இப்போது திருமணத்தில் என்ன நடக்கிறது ? யாரென்றே பேசிப் பழகாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். இப்போது அலைபேசியின் புண்ணியத்தால் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்கிறது. அதே 10 வருடங்கள் முன்னால் என்ன நடந்தது ? யாரென்று தெரியாத ஒருவருடன் திருமணம் செய்த பிறகு அன்றிரவு உடலுறவு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அவருடன் குடும்பம் நடத்த வேண்டும். அந்த நபருக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஏனெனில் இது பெற்றோர் உற்றார் பணம் செய்து ஊரைக் கூட்டி செலவு செய்து வைத்த திருமணம், புனிதமானது. பேசாமல் கொள்ளாமல் உடலுறவு கொண்டுவிட்டு அடுத்த நாளிலிருந்து பேசிப் பழகிக் கொள்ளலாம். வாழ்ந்து கொள்ளலாம். இந்த அசிங்கத்தை ஒன்றும் உறுத்தலில்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் 7 வருடங்கள் நன்கு பழகி புரிந்து காதலித்தவர்கள் செய்தால் அதைக் காறித் துப்புகிறார்கள். நன்றாக இருக்கிறது.

என்ன இருந்தாலும் பெண் இதை ஒத்துக் கொள்ளலாமா ? இப்போது அவள்தானே அவமானப்பட்டு நிற்கிறாள். பெண் பலவீனமானவள் என்பதால் தானே ஒரு ஆண் அவளிடம் அன்பைக் காட்டி தேனொழுகப் பேசி உடலுறவுக்கும் சம்மதிக்க வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம் 


பெற்றோரும் சமூகமும் சேர்ந்து, திருமணம் செய்து கொண்டு கணவனுக்கு ஒத்தாசையாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை கலாச்சாரம் என்றும் நம்ப வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம். 

இதை மட்டும் பெண் இதை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா ?  இல்லையே அதுதான் பெண்களுக்கு நல்லது என்றுதானே போதிக்கிறார்கள். இரண்டையும் நம்பித்தான் அவள் செயல்படுகிறாள். இதில் ஒன்றை மட்டும் குறை சொன்னால் எப்படி?

ஒரு பெண் கருவுற்றால் அது அவளது "தவறோ" அல்லது அவளுக்கு மட்டுமே "பொறுப்பு" என்று ஆகாது. அதை செய்த ஆணுக்கும் அதில் பாதி பங்கு உண்டும். ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறாள் என்றால் அது அவள் மட்டும் செய்யும் தவறல்ல. அதற்குக் காரணமான அந்த ஆணும்தான் அதற்குப் பொறுப்பாவான். அது போலத்தான் இதுவும். குழந்தை பெண்ணின் வயிற்றில் இருப்பதால் மட்டும் அவள் களங்கமானவள், தன்னையே இழந்து விட்டாள், கற்பு போச்சு, கண்ணியம் போனது என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்புகளே. அவைகள் சொற்பிழைகள், கருத்துப் பிழைகள். பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லும் தந்திரம்.

5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள் என்று செய்தி வருகிறது. 5 வயது சிறுமிக்கு கற்பு எங்கே இருக்கிறது என்று தோண வேண்டாமா ? அது மாதிரிதான் இதுவும் பெண்ணுக்கு மட்டும் எப்படி கண்ணியம் கற்பு எல்லாம் அழிகிறது, மானம் போகிறது இந்தப் போலிக் கற்பித்தத்தைச் செய்த சமூகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். பெண்களின் உணர்வை மதிக்காத இந்த சமூகத்தை ஏன் நாம் மதிக்க வேண்டும். கற்பு, கண்ணியம், பாதுக்காப்பு, குடும்ப மானம் என்று எல்லா எழவையும் பெண்களின் மீது சுமத்தி அவர்களை அலைக்கழிக்கும் சமூகத்தின் தூற்றுதலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்.

இந்தக் கற்பு, ஆணாதிக்கம் பற்றித் தெரிந்தவரே அதை எதிர்க்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணைக் காரணம் காட்டி, நான் அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி ஆயிட்டியே, மானம் போச்சே, வாழ்க்கை போச்சே என்கிற பாணியில் பேசுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறாள். இதில் அவளது மானமோ, கண்ணியமோ எதுவும் போகவில்லை. காதலிக்கும் பெண்களை இழிவாகப் பேசுகிறவர்கள்தான் கண்ணியமில்லாதவர்கள். அப்படி மானம் போனது என்று சொல்கிறவர்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்கட்டும். அவள் தலைகுனியவில்லை. தேவையுமில்லை.

காதலிக்கும் பெண்களே !!

ஆண்கள் எச்சரிக்கை
சமூகம் எச்சரிக்கை
கண்ணியம் எச்சரிக்கை
தூற்றுதல் எச்சரிக்கை
கற்பிதங்கள் எச்சரிக்கை
Download As PDF
Bookmark and Share

Post Comment

விநோதினிக்கு அஞ்சலி - ஆணாதிக்கத்துக்கு எப்போது அஞ்சலி செலுத்துவது ?

விநோதினி இறந்து விட்டாள். கொல்லப்பட்டுவிட்டாள். மிகவும் கொடிய வதையை அனுபவித்துவிட்டு இறந்து விட்டாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனும் தன்னைப்போலவே துன்பத்த்தை அனுபவிக்க வேண்டும் என்ற இறுதி ஆசையுடன் உயிரை விட்டு விட்டாள். 


டெல்லி கொடூரத்தால் இறந்த ஜோதியைப் போலவே விநோதினியும் நான் வாழவேண்டும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் வாழக்கூடாது என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். தாம் அனுபவித்த கொடிய இன்னலிலிருந்து வெடித்த ஆத்திரம்தான் அது.

ஒரு வேளை ஜோதி உயிர் பிழைத்திருந்தாலோ, அவளது சிறுகுடல் பாதிக்கப்பட்டதால், நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்திருக்க முடியும். விநோதினிக்கோ பார்வையே பறிபோய் விட்டது. வன்முறையை எதிர்கொண்ட போதே அவர்கள் பாதி செத்து விட்டார்கள். மீதியும் மருத்துவர்களின் தோல்வியில் போனது.

இந்த கேடுகெட்ட வெறிபிடித்த உலகத்தில் பிறந்ததால் ஆயிரமாயிரம் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களின் எடுத்துக் காட்டுகள்தான் ஜோதி சிங் பாண்டேக்களும், விநோதினிகளும்.

பாலியல் வன்முறையும், ஆணாதிக்க வெறியும் சேர்ந்து பழிவாங்கிய உயிர்கள், ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை முறைதான் வெட்கப்படுவதும், வேதனைப்படுவதும் ?

இனிமேல் மரண தண்டனை எதிர்த்துப் பேசவும் வெட்கமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து விட்டு, இனி விநோதினிகள், ஜோதிகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே கவலைப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பது, அவர்களை உணர்வுடையவர்களாகக் கருதாததே ஆகும். அவர்களை வெறும் பொருளாகவே காண்கிறார்கள் ஆண்கள். இதற்கு ஆணாதிக்க சிந்தனையே முதற்காரணமாகும். இதை போற்றி வளர்க்கும் சமூகமும் அதை ஊற்றி வளர்க்கும் ஊடகங்கள், வணிகங்கள், சடங்குகள் என அனைத்துமே இதற்கான காரணிகளே ஆகும்.

 ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)


பாலியல் வன்முறையாகட்டும், அமிலம் ஊற்றுவதாகட்டும், அல்லது கருணைக் கொலையாகட்டும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆணாதிக்க உணர்வு மட்டுமே. பாலியல் வன்முறை என்பது கலவி அல்லது உடலுறவு என்பதை மட்டும் கொண்டு உடைதான் காரணம் நடத்தை தான் காரணம் என்று அளவிடக் கூடாது. அது ஆதிக்க உணர்வு வன்முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

இவை வெவ்வேறு மத கலாச்சார சமூகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஒரு ஆண் தன் மகள் கீழ்ஜாதிக்காரனை மணந்து கொண்டதால் பெற்ற மகளென்றும் பாராமல் கொல்கிறான். அவளது உயிரை விட தனது, கௌரவம் என்று தான் நம்பும் ஜாதிப்பெருமை அவன் கண்ணை மறைக்கிறது. அதற்காக மகளைக் கொன்ற தந்தை என்ற பட்டத்தை சுமக்கவும் பெருமிதத்துடன் கொல்கிறான். ஜாதிகள் நிறைந்த இந்து மதத்தில் மட்டுமல்ல, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் போன்ற முஸ்லிம்கள் சமூகத்திலும், சீக்கிய சமூகத்திலும் கேள்விப்படுகிறோம். இதில் பெண் ஒருவனை மணக்க் விரும்புவது அவர்கள் குடும்பத்திற்கு இழுக்கு என்று கருத வைப்பது எது ? தான் சொன்னவனை, தகுதிக்கு உட்பட்டவனாகக்கருதும் ஒருவனை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று பெண்ணின் உரிமையை மறுக்கும் ஆணாதிக்கம். அதற்காக பெற்றவளென்றும் பாராமல் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை.

அடுத்து அமிலம் ஊற்றும் அசிங்கம் பிடித்த எண்ணங்கள் ஏன் வருகின்றன. இது போன்று அமிலத் தாக்குதலுக்குப் பெரும்பாலும் பெண்களே ஆளாகின்றனர். பெரும்பாலும் திருமணமாகாத இளம்பெண்கள். செய்கிறவர்கள் இளைஞர்கள். இவர்களிருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் தகராறா இருக்கப்போகிறது, காதல், பாலியல் உறவு, திருமணம் உறவுச் சிக்கல் அரிதாக வேறு பிரச்சனைகள். இதில் முக்கியமானது காதல், ஒரு பெண் காதலிக்கும் உரிமைக்கு அப்பா என்ற ஆண் குடும்பம், கௌரவம் என்ற ஆணாதிக்கக் கருத்தியல்களால் எதிர்க்கும் அதே நிலையில், ஒரு ஆண் தன்னைக் காதலிக்காத பெண் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் அவள் மீது அமிலத்தை ஊற்றுகிறான். அவளுக்குத் தன்னை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ கூட உரிமை இருப்பதாக எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லது ஆணாதிக்கம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. கொலை செய்வதில் இருக்கும் வக்கிரத்தை விடப் பல மடங்கு கொடூரமானதும், கேவலமானதுமான  பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி அவள் தனது தன்னம்பிக்கையாகக் கருதும் அழகைச் சிதைப்பதில் இன்பமடைகிறது இந்து கருமாந்தரங்கள்.

தெருவில் போகும் தனக்கு தொடர்பில்லாத உரிமையில்லாத ஒரு பெண் தனியாளாக இருப்பதால் சீக்கியடிப்பதும், கேலி பேசுவதும் உரிமை நினைக்கும் ஆணாதிக்க ஓநாய்கள், இரவு நேரமென்றால் அவளை வன்புணர்ந்து கூடப் பாடம் கற்பிக்க தனக்கு அதிகாரமிருப்பதாய் நினைப்பது எத்தகைய கேவலமான மனநோய்.

சமூகத்தின் தாக்கமின்றி வெளியில் வாழும் ஒரு மனிதனுக்குப் பெண் மீது எத்தகைய கண்ணோட்டம் இருக்கிறதோ அதே கண்ணோட்டம்தான் ஒரு சிறந்த பண்பட்ட குடும்பத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. ஒரு இளைஞனோ, சிறுவனோ பெண்கள், பாலியல் குறித்த கருத்துக்களை சமூகத்திலிருந்தே, ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே கற்கிறான். அவை என்ன கற்பிக்கின்றனவென்று நமக்குத் தெரியும். பாலியல் குறித்த அறிவியல் கண்ணோட்டமின்றி அவை வெறும் கிளுகிளுப்பாகவும், அருவருப்பானதாகவும், பெண்களுக்கு ஒழுக்கக் கேடாகவும், ஆண்கள் மறைவாக அன்பவித்துக் கொள்ளவும் ஏற்றவாறே இருக்கிறது.

திரைப்படங்களை இதற்கு ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். திரைப்படங்கள் நம்மை நேரடியாகத் தாக்குவதில்ல. அதை நாம் அப்படியே பின்பற்றுவதில்லை. ஆனால் எல்லா வகையிலும் நம்மை ஆக்ரமித்திருக்கிறது. ஏன் தமிழ்மணத்திலேயே பெருமாலும் திரைப்படம், அதனைச் சார்ந்த செய்திகள்தான்.

திரைப்படப் பாடல்கள், நடிகர்கள், வசனங்கள், பட்டப் பெயர்கள் எல்லா இடத்திலும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

திரைப்படத்தில் என்னத்தைக் காட்டுகிறார்கள் பெண்களைப் பற்றி.

பெண்கள் திரைப்படத்தில் வருவதே ஆண்கள்/ நாயகர்களால் காதலிக்கப்படுவதற்குத்தான், அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும், அழுவதும், சிரிப்பதும், துடிப்பதும், ஓடுவதும் காதலுக்காகவே/காதலனுக்காகவே/

காதலன் என்பவன் அயோக்கியனாக இருந்தாலும், அவனிடமிருந்து ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடித்து அவனைக் காதலிப்பாள்

அவளைக்கவர்வதற்காக நாயகன்/ என்ன பொறுக்கித்தனம் செய்தாலும் அது நாயகத்தனமாகவே சித்தரிக்கப்படுகிறது. அவன் அவளைத் துரத்தலாம், கடத்தலாம், துன்புறுத்தலாம், புணரலாம், ஏன் கொலை செய்யக் கூட முயலலாம். இது பருத்தி வீரன், பாலாவின் அனைத்துப் படங்களும், தனுஸ், சிம்பு, கார்த்தி படங்கள். புதிய பாதை மூவேந்தர்.

பெண்களைக் கேலி செய்யும் ஈவ் டீஸிங், உடலைக் கிண்டல் செய்வது என்பது போல பெண்களைக் கிண்டல் செய்வது, மேலும் கீழும் தொட்டு விளையாடுவது, உரசுவது, இடிப்பது, உடைகளை பிடித்து இழுப்பது போன்ற பாடல்கள் சிவாஜி, மகோராமச்சந்திரன் காலத்திலிருந்து மாஸ்டர் மகேந்திரன் காலம் வரை தொடரும் பாரம்பரியம். அது நகைச்சுவையாம். பெண்கள் மீது ஒழுக்கத்தை வலியுறுத்தவும் தயங்குவதில்லை.

பாடல் காட்சிகள் பாதி செமிபோர்ன். இடுப்பில் முத்தம் கொடுப்பது, மார்பில் முகத்தை மோதுவது, மொத்த உடலையும் மோப்பம் பிடிப்பது தடவுவது இன்னும் பலதும்.

விவேக், விஜய், சிம்பு, தனுஷ், சந்தானம் வகையறாக்கள் சொல்லும் பெண்களுக்கான வியாக்கியானங்களை எல்லாம் ஆண்களுக்கு தம் ஆணாதிக்க அரிப்பை சொறிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் கொடுக்கின்றன. பீயை மிதிச்சது போல முகத்தைச் சுளித்துக் கொண்டு சந்தானம் "மச்சா இந்தப் பொண்ணுங்க இருக்காளுங்களே" என்று தொடங்கினான் என்றால் பெண்கள் உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினால் அந்தக் கருத்தைக் கேள்விகளின்றி நாம் ஏற்றுக் கொண்டோமென்றுதானே பொருள்.

கொல்றா அவள, வெட்றா அவள, கொலவெறி வகைப் பாடல்களெல்லாம் ஆண்களைத் தியாகியாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும், வெறுப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்கின்றன. காதல் தோல்விப் பாடல்கள் என்றால் காதலியை நோக்கிப் பாடுவதாக இல்லாமல் "பெண்கள் என்றால் பொய்யா" என்று மொத்தப் பெண்களையே கேள்வி கேட்கிறதே. வெறுப்பைக் காட்டுகிறதே

அதே நேரம் ஆண்களின் பொறுக்கித் தனத்தைக் கொண்டாடுகிறது.

பெண்களிடமிருது ஒதுங்கியிருக்கும் ஆண் சமூகம் இது போன்ற திரைப்படங்களிலிருந்து எதைக் கற்கும் ? பெண்கள் என்றால் காதலிக்க, செக்ஸ், ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு என்னதான் இவை சொல்கின்றன.

பாலியலிலிருந்து எல்லாவற்றையும் தேவைப்படும் ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படையாக விவாதிப்பதே ஒரே வழியாக இருக்கும். பெற்றோர்க்கு தனது மகன் தம்மடிப்பதோ, தண்ணியடிப்பதோ எப்படித் தெரிவதில்லையோ அது போலவே அவன் பொது இடங்களில் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

என் மகன் ஒரு போதும் திருட மாட்டான், கொலை செய்ய மாட்டான் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கை. அது பெரும்பான்மையாக உண்மையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறான், தன் தங்கை, அக்கா, அம்மா வயதிலிர்க்கும் பிற பெண்கள் மீது அவன் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால், ஒவ்வொரு அம்மாவும் நொந்து போவாள்.

பெண்கள் மீதான ஆண்கள் கொண்டிருக்கும் கருத்துகளே வன்முறைகளுக்கு மூலமாகக் கருதுகிறேன். பெண்குழ்ந்தைகளை வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதையும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும். என் மகனால் எந்தப் பெண்ணுக்கும் துன்பம் நேராது என்று நம்பிக்கையுடன் சொல்லும்படி வளர்க்க வேண்டும்.

இந்த விநோதினி காதலிக்க மறுத்ததால் மட்டுமல்ல, ஏற்கெனவே இவர்களிருவரும் காதலர்களாக இருந்தவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். காதலர்களாக இருந்தாலும் ஒரு நபருக்குப் பிடிக்க வில்லை என்றால் விலகிவிடுவதுதான் முறை அது கசப்பாக இருந்தாலும். விநோதினி செய்தது தவறில்லையா என்றால், எத்தனையோ ஆண்கள் வயிற்றில் புள்ளையைக் கொடுத்து விட்டு கம்பி நீட்டுகிறார்கள். பெண்கள் என்ன அமிலத்தையா ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஊற்றுவதென்றால் எத்தனை ஆண்கள் மீது ஊற்ற வேண்டும்.

டெல்லி வன்புணர்வுக்காக வாழ்க்கையிலேயே முதன்முறையாக பாலியல் வன்முறைக்கு எதிராக வாயைத் திறந்தவர்கள், உச் கொட்டி விட்டுப் பின்னர் இவளுங்க ஒழுங்கா இருந்தாத்தான ? என்று வெறியேற்றுகிறார்கள். கணவனாக இருந்தாலும் பெண் விருப்பமின்றி உடலுறவு கூடாது என்பதுதான் நியாயம். பெண் ஆபாசமாய் உடையணிந்தால் வன்முறை செய்யலாம் என்று உரிமை கோரும் மனநோயாளிகளுக்கு இதுதான் பதில்.

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான கருத்துக்களையும் இயன்ற வழியிலெல்லாம் எதிர்க்க வேண்டும். ஒரு கருத்து சமூக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்பொது ஏனென்றால் அது வன்முறைகளையும் குற்றங்களையும் நியாயப்படுத்தும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

திருந்தித் தொலையுங்கள்

குமுதம் என்ற வார இதழில் வரும் அரசு பதில்கள் நான் விரும்பிப் படிக்கும் ஒரு பகுதி. அதில் பதிலளிப்பவர் உலக அளவிலான பல துறைகள் சார்ந்தும் பதிலளிப்பார். அதே நேரம் ஒரு குப்பைக்கும் ஆகாத நடிகைகள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிப்பார். அதை நான் விமர்சிக்க விரும்புகிறேன். காரணம் பெண்களைக் கிண்டல் செய்வது எனக்கு அருவருப்பானது. தனக்குத் தெரியாத, உறவுமில்லாத ஒட்டுமில்லாத ஒரு பெண்ணை ஒரு பெண் என்ற காரணத்திற்காகவே தனது அரிப்பை சொறிய ஒரு ஆண் செய்யும் கிண்டல் பற்றி நான் சொல்ல வருவது.

டெல்லி பாலியல் வன்முறை தொடங்கும் முன் ஜோதியையும் அவளது நண்பனையும் கிண்டல் செய்து பின்னர் ஜோதி சண்டை போட்ட பின்னரே தொடங்கியது. எனவே இந்த ஈவ் டீஸிங் என்பது ஒரு குற்றம் என்று சொல்ல வருகிறேன். மேலும் இதை செய்பவர்கள் இது ஒரு தவறு என்பதைக் கூட உணர்வதில்லை. அதையே இவர்கள் தனக்கு வேண்டிய பெண்களை இது போன்று விமர்சிக்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

டெல்லி பாலியல் வன்முறைக்கு எதிராக பல இளம் பெண்களும் ஆண்களும் தெருவுக்கு வந்ததை நாம் அறிவோம். ஒரு போராட்டம் மும்பை கேட் அருகே நடந்த போது போராட்டம் நடத்திய இளம் பெண்களைப் பார்த்து இரண்டு ஆண்கள் விசில் அடித்தார்களாம். என்ன புதுமையென்றால் அந்த ஆண்களும் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட வந்தவர்களாம். எப்படியிருக்கிறது பாருங்கள் கதை.

இன்னொரு உதாரணம் நச்சென்று புரியவைக்கும் இதன் இரு வேறு பரிமாணங்களை.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக இருக்கும் புகழேந்திக்கு ஒரு அழைப்பு தொலைபேசியில் வரும். ஒரு இளம் பெண் தலையில் வழியும் குருதியைத் துடைத்து கொண்டு அழுது கொண்டே இங்க ஈவ் டீஸிங் தொல்ல தாங்க முடியல சார் என்பாள். நாயகன் சென்று அந்தப் பொறுக்கிகளை அடித்து நொறுக்கி உள்ளாடையுடன் "பெண்கள் நம் கண்கள்" என்று சொல்லிக் கொண்டேமுட்டி போட்டு நடக்கச் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றுவார். இது பெண்களைக் கேலி செய்தவர்களுக்கு எதிரான ஒரு அறச்சீற்றக் காட்சி.

பாய்ஸ் படத்தில், 5 விடலை நாயகர்களும் அறிமுகப் பாடல்களில் தூள் கிளப்புவார்கள். ரங்கநாதன் தெருவில் தன் அம்மாவின் வயதுள்ள பெண்களை பின்னால் உரசுவார்கள், வேண்டுமென்றே இடிப்பார்கள். குழந்தையைத் தூக்கும் சாக்கில் முலையில் உரசுவார்கள். மிகவும் சிரித்த முகத்துடன் இதையெல்லாம் செய்வார்கள்.

பின்பு பலத்த எதிர்ப்புக்களின் பின்பு இக்காட்சிகள் நீக்கப்பட்டன. நடப்பதைத்தானே காட்டியிருக்கிறார் என்று பலர் விளக்கம் நியாயம் சொன்னார்கள். அந்தப் படம் பார்க்கும் வரை அது மாதிரி நடப்பது எனக்குத் தெரியாது என்பதையும் சொல்லிக்கிறேன். நடப்பதைக் காட்டலாம் அதை ஒரு நாயகத்தனமாகக் காட்டியது தவறு. முதல்வன் படத்தில் வரும் ஈவ் டீஸிங்க் கூட நடப்பதுதான் அதை எப்படி தவறாகக் காட்டினார். அதை விடக் கேவலமாக இதை ஒரு குறும்பைப்போலவும், தமாசாகவும் நாயகத்தன்மையாகக் காட்டியது என்ன நியாயம். இதை எஸ் ஜே சூர்யாவோ சிம்புவோ, தனுசோ செய்திருந்தால் பரவாயில்லை. சமூகப்பிரச்சனையை மையமாகக் கொண்டு படமெடுக்கும் இயக்குநர் என்று சொல்லப்பட்ட ஷங்கரின் புத்தியே இப்படி கோணலாக இருக்கிறதென்றால் மற்ற ஆண்களுக்கு எப்படியிருக்கும்.

பாலியல் வன்முறைகளின் ஒரு வகைதான் ஈவ் டீஸிங்  என்பதும். பெண்களைக் கேலி செய்வது. எப்படிப் பார்ப்பது, எப்படிக் கமென்ட் அடிப்பது என்பனவற்றையும் சொல்லிக் கொடுப்பவை ஊடகங்கள். முக்கியமானது திரைப்படம். அடுத்ததாக வருகின்றவைதான் குமுதம் போன்ற இதழ்களில் வரும் இது போன்ற கண்டு பிடிப்புகள், விவரிப்புகள். கேட்டால் நக்கலடிக்கத் தோன்றும்தான். ஆனாலும் இதுதான் உண்மை. பெண்களின் அழகைக் கிண்டல் செய்வது, உடல் அசைவுகளை, உடல் பாகங்களைக் கிண்டல் செய்வது, உடையைக் கிண்டல் செய்வது என எல்லாமே இதில் அடங்கும். இதை மிகவும் சிறப்பாக செய்வது அரசுவின் பாணி. என்ன இவர் அதிகமாக நடிகைகளை வர்ணிப்பார். அவ்வப்போது  பொதுவிலும் பெண்களைக் கிண்டல் செய்வார்.

என்ன காரணம் என்றால் பெண்களைக் கிண்டல் செய்வது ஆண்களின் பிறப்புரிமை. அது அழகான பொழுது போக்கு. அது தவறில்லை என்ற எண்ணம். இதை செய்கிறவன் பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் பழைய கற்பிதம். நல்லவன், வல்லவன், க்யூட் பாய்ஸ், ஸ்மார்ட் பாய்ஸ், அறிவிலி, அறிவாளன் என்ற எந்த பேதமுமில்லை. பின்நவீனத்துவம் பேசுகிற ஆண்களிலிருந்து பொம்பளப் பொறுக்கிகள் வரைக்கும், வயசு வந்த விடலைகளிலிருந்து நாடி நரம்பெல்லாம் ஆடிப்போன கெழ போல்டுகள் வரை இதுதான் வழக்கம்.

இதைத்தான் பாலியல் வன்முறை செய்கிறவனும் நினைக்கிறான். பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், கிண்டலடிக்கலாம் என்று எண்ணுகிற ஆண் ஒரு கலாச்சார அடிப்படைவாத, மத அடிப்படைவாத ஆண் போலவே பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். கலாச்சார, மதவாதிகள் ஒழுக்கம் பற்றிப் பேசுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அவன் ஒரு சில கட்டுப்பாடுகள், கொள்கைகளாவது வைத்திருக்கிறான். ஆனால் சைட்டடிப்பதையும், ஈவ் டீஸிங் செய்வதையும் மட்டுமே தொழிலாகக் கொண்டவர்களும் ஒழுக்கத்தைப் பேசுகிறார்கள் என்பது எரிச்சலோ எரிச்சல்.

எனது எரிச்சலுக்குக் காரணம் போனவாரம் குமுதத்தில் அரசு பதில்களில் ஒரு கேள்வி ?

நயன்தாரா தமன்னா (வேறு யாரோ நினைவில்லை) எந்த நடிகைக்கு போலிஸ் அதிகாரி வேடம் நன்றாக இருக்கும் ?

 அரசு சொல்கிறார். ஏன் நடிகர்கள் நெஞ்சைத் தூக்கிக் கொண்டு நடப்பது பிடிக்கவில்லையா ?.

இன்னொரு கேள்வி:

நான் நிர்வாணமாகச் சென்றாலும் என்னை வன்புணர யாருக்கும் உரிமை  இல்லை என்கிறாரே பிரியங்கா சோப்ரா ?

அரசு : நம் வீடு என்றாலும் பாத்ரூமிற்கு கதவு இருக்கிறது என்பதை பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் உணர வேண்டும்.

மேலே முதல் கேள்வியில் பெண்களின் உடலைக் கிண்டல் செய்யும் கருத்து இது ஒரு செக்ஸிஸ்ட் ஜோக்தான். ஏன்னா அது சும்மா ஜாலிக்கு. எது பெரிசு எது சிறிசு இப்படியெல்லாம் சொல்வது ஃபன். இரண்டாம் கேள்வியில் அபச்சாரம் அபச்சாரம் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் அறிவுரை சொல்கிறது. நூல் முழுக்கவும் கவர்ச்சிப்படங்களைப் போட்டுக் கொண்டு கண்ட கமெண்டுகளையும் எழுதிக் கொண்டு விற்பனையாகும் இது போன்ற இதழ்களே பெண்களை, பெண் உடலை ஒரு மாஸ்ட
ர்பேசன் ஆப்ஜெக்ட் ஆக்கிவிட்டு, பெண்களுக்கு அறிவுறைகளையும் அள்ளி வழங்குகின்றார்கள்.


 ஸ்ரீயாவின் பிகினி படத்தையும் பிரசுரித்துகொள்ள வேண்டியது, கீழே அய்யோ இதுக்கு இன்னும் ட்ரெஸ்ஸே போடத்த் தெரில என்ற கமெண்ட்டையும் போட்டுக் கொண்டு யோக்கியனாக காட்டிக் கொள்ள வேண்டியது. அவ்வப்போது பெண்களுக்கு அட்வைஸ் மழை.

இந்த மனநிலையில்தான் எல்லா ஆண்களும் இருக்கிறார்கள். தாம் செய்யும் பொறுக்கித்தனத்தை எல்லோரும் இயல்பாகக் கருதுகிறார்கள். பெண்கள் கருத்துச் சொன்னால் பாதுகாப்பின் அவசியம் பற்றிப்பேசுவார்கள். டெல்லியின் வீரத்தலைமகன் ஆண்மையின் சின்னம் ராம்சிங் சொன்னது தனியாக இரவில் வந்த பெண்ணுக்குப் பாடம் புகட்ட நினைத்தேன். அதே கருத்தைத்தான் எல்லோரும் வழிமொழிகிறார்கள்.

ஆணாதிக்க அல்பைகள் ஒழுங்காக உடையணியவும், அந்த பெண் ஏன் தனியாகப் போனாள், இரவில் போனாள் என்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அதற்கெதிராக போராடிய இளம் பெண்கள் என்னை எப்படி உடையணிய வேண்டும் என்று சொல்லாதே, பாதிக்கப்பட்டவளைக் குற்றவாளியாக்காதே, உடை அணிவது என் உரிமை என்ற பொருள் தரும் கருத்துக்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்ததை ஊடகங்கள் வழியாகக் கண்ட ஆண்களுக்குப் பொறுத்துக்க முடிய வில்லை. அது போன்றதுதான் அரசுவின் இரண்டாவது பதில். இந்த வாரம் குமுதத்தில் ஒரு கேள்வி பதில்

எந்த நடிகை காலில் டாட்டூ குத்தியிருக்கிறார் ?

அரசு: நான் கால்களைப் பார்ப்பதில்லை.

இன்னொரு கட்டுரை கீற்றுவில் படித்தேன். அதில் வன்னி அரசு என்பவர்  திரைப்படங்கள் தாக்கத்தின் காரணமாக பெண்களைக் குறிப்பிடும் ஃபிகர் என்ற சொல்லைப் பற்றி எழுதியிருந்தார். அதில் அழகில்லாத பெண்களை ஆண்கள் கிண்டல் செய்யும் ஒரு சொல் அட்டு ஃபிகர் என்பதாகும். இந்த அட்டு என்ற சொல் "Hut" என்ற குடிசையைக் குறிக்கும் சொல்லிலிருந்தே வந்திருக்கும். "Hut Figure" என்று குடிசையில் வாழும் தலித் பெண்களை இழிக்கப் பயன்படுத்திய சொல்லே இது போன்று மாறியிருக்கலாம் என்கிறார். அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் அழகில்லாத பெண்களை ஆண்கள் என்ன சொல்கிறார்கள். மொக்க ஃபிகரு, அட்டு ஃபிகரு, சப்பை ஃபிகரு, டம்மி பீசு இவைகள் போக மேல்ஜாதி ஆண்கள் சொல்வது சக்கிலிச்சி மாதிரியே இருக்கா, கொறத்தி மாதிரி, பறச்சி மாதிரி என்று சொல்வார்கள். இதெல்லாம் "ஜாதிகள் இல்லாத" நகரத்தில் கம்பியூட்டர் யூத்கள் கூடப் பேசுகிறார்கள். எனவே அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம்.

என்ன ஃபிகர் என்று சொல்வதை விடவும், ஃபிகர் என்று சொல்வதே தவறு என்கிறேன். புறத்தோற்றத்தை வைத்து கிண்டலடிப்பது, ஜாதியைச் சொல்லிக் கிண்டலடிப்பது என்று வந்தாலும் இது அனைத்தும் பெண்களைக் கிண்டலடிக்கும் ஆணாதிக்க மனநோயே ஆகும். இதைத் தவறென்று எண்ணுவதற்குக் கூட ஆண்களுக்கு மனம் வருவதில்லை. புரிந்தவர்கள் திருந்திக் கொள்ளுங்கள், அடுத்தவரையும் திருத்துங்கள். திருந்தாதவர்கள் திருந்தித் தொலையுங்கள்.

இன்னொரு விசயம் டெல்லி பாலியல் நிகழ்வில் பலபேர் ஜோதி தனியாக சென்றதாகவும், இரவில் சென்றதாகவும், காதலனுடன் சென்றதாகவும், உல்லாசமாக இருந்ததாகவும் அடித்து விடுகிறார்கள். அவர்கள் செல்ல வருவது அவர்கள் இருவரும் "அது" செய்வதற்காகவே வெளியில் திரிந்து விட்டு வந்தார்கள் அவர்கள் மீதும் குறிப்பாக அந்தப் பெண்ணின் மீது தவறு இருக்கிறது. அதாவது சுருக்கமாக ஜோதி கற்பில்லாதவள், ஒழுக்கமற்றவள்.

அவர்கள் சென்றது நள்ளிரவிலல்ல, 9 மணி வாக்கில்தான். திரைப்படத்திற்குத்தான் சென்றிருக்கிறார்கள். அவள் தன்னிடம் திருமண ஆசை குறித்துச் சொல்லவில்லை எனவும், அந்தப் பையன் வேறு ஜாதி என்பதால் அதற்கு வாய்ப்பில்லை, அவள் படிப்பில்தான் ஆர்வமாக இருந்தாள் எனவும் ஜோதியின் தந்தை குறிப்பிட்டிருந்தார். தன் மகள் மீது தவறு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜோதியைக் குதறியதில் அந்த 6 பிசாசுகள் தவிர்த்து, பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்பவர்கள் அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பவர்கள் ஏனென்றால் குற்றவாளி ராம்சிங்கின் கருத்தைத்தான் அவர்களும் சொல்கிறார்கள்.

அந்த நண்பன் காதலனாக இருந்தாலும், அவர்கள் கலவி செய்யத்தான் வெளியே சுற்றி விட்டு வந்திருந்தாலும் கூட எனது நிலையில் எந்த மாற்றமுமில்லை. ஜோதி சிங் பாண்டே குற்றமற்றவள்தான். சொக்கத் தங்கம்தான். 

அந்தப் பொறுக்கி *@#$%^%^% யை சிறுவன் என்று சொல்லி வெளியில் விடக்கூடாது. இதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையே இவனுக்கும் முடிந்தால் இன்னும் கூடுதலாகவும் பரிந்துரைக்கலாம்.

அடுத்ததாக கமலஹாசன் ஷ்ருதிக்கு முத்தம் கொடுப்பதை பெரிய கலாச்சாரா அதிர்ச்சியாக சித்தரிக்கிறார்கள். பெற்றவன் மகளுக்கு முத்தம் கொடுப்பதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதி விளக்கம் தர வேண்டியிருக்கிறதே. காதல் குற்றம், முத்தம் குற்றம் நல்ல கலாச்சாரம். இந்த கலாச்சாரம் சீரழவு குறித்து விமர்சிப்பவர்கள் நம்முடைய கலாச்சாரா வரலாற்றையும், ஜாதியையும் வைத்தே சொல்லி விடலாம் எவ்வளவு அருமையான கலாச்சாரம் என்று. 


 கூடுதல் தகவலாக கமல் தனது 49 பிறந்த நாளின் போது விருமாண்டி படம் வெளியாகும் முன்பு , மேடையிலேயே வைத்து நடிகை காந்தி மதி கமலுக்கு முத்தம் கொடுக்க, கமலும் திருப்பி முத்தம் பல கொடுத்தார். அதையும் விமர்சிக்கலாம்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆகையினால் பெண்ணுடலை சிதைக்கிறோம்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ இரவில் சுற்றுவது எனக்கு உறுத்துகிறது
நீ உடலைக் காட்டுவது எனக்கு விறைக்கிறது

உன்னை இடிப்பதென்னுரிமை
இரவு விடுதிக்குச் செல்வது உனதுரிமை என்றால்
உன்னை உரசுவது எனதுரிமை
ஊர்சுற்றுவது உனதுரிமை என்றால்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ எதிர்த்துப் பேசியதால் எனக்குக் கோபம் வந்தது
உன்மேல் அமிலம் ஊற்றியது என் குற்றமல்ல
நீ காதலை மறுத்ததால் எனக்கு எனக்கு வெறி வந்தது
மகளாய் இருந்தாலும் உன்னை வெட்டுவது என் குற்றமல்ல
நீ மாற்றானை காதலித்ததால் என் மானம் போனது

நீ ஏமாந்ததற்கு நான் பொறுப்பல்ல
இசைந்ததால் உன்னை மென்புணர்ந்தேன்
மறுத்தால் வன்புணர்வேன்

என் கண்கள் உன்னை மேய்வதற்கு நான் காரணமல்ல
நீ தெருவில் நடப்பதே காரணம்
நீ வயதுக்கு வராத சிறுமியாய் இருப்பது என் குற்றமல்ல
மதுவில் மயங்கியிருந்த என்னிடம் சிக்கியதே உன் குற்றம்

நாங்கள் இச்சை தீர்க்க உங்களைப் புணரவும்
மானம் காக்க உங்களைக் கொல்லவும்
வரம் பெற்றவர்கள்

எங்கள் கொண்டாட்டத்தை காஸநோவா 
என்று சிறுமைப்படுத்திக் கொண்டோம்
உங்கள் திண்டாட்டத்தையோ தேவடியா
என்று பெருமைப்படுத்தினோம்

நீங்கள் பாதுகாப்பாய் இருக்க கற்பை உங்களுக்காக
விட்டுக் கொடுத்திருக்கிறோம் நாங்கள்
கால்களுக்கிடையில் வைத்து காத்துக் கொள்ளுங்கள்
என்றாவதொருநாள் என்னினத்தைச் சார்ந்த ஒருவன்
உங்கள் உயிரை எடுத்தாவது அதை அழிக்கும் வரையில்

யான் கற்றதன் சாரம் இதுவே
எங்களால் மாற்றவியலாததாகும்
ஆம் இயற்கையாக
நீங்கள் பெண்கள் நாங்கள் ஆண்கள் 

ஆகையினால் வன்கலவி செய்கிறோம்
எம்மைப் பிறப்பித்த உம் உறுப்பை சிதைப்பதில்
உம்மீதான எம் உரிமையை
நாங்கள் உயிர்ப்பிக்கிறோம்


Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்மயி - ராஜன் வழக்கு ஆதரவு எதிர்ப்பு மற்றும் சில குழப்பங்கள்


சென்ற பதிவின் நீட்சியாகவே இதை எழுதுகிறேன். முந்தைய நிலையில் எந்த மாற்றமுமில்லை. ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் எந்த நிபந்தனையும், ஐயமுமில்லை. இன்னும் வினவு கட்டுரை ஏன் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை. ராஜன் அதிகப்படியான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நிரூபிக்கப் படாத குற்றத்திற்காக. அதனால் அவர் விடுதலையாக வேண்டுமென்பது குறித்து எந்தத் தயக்கமுமில்லாமல் நாம் கோர முடியும். குழலி, விமாலாதித்த மாமல்லன், சவுக்கு ஆகியோரின் கட்டுரைகள் நேர்மையாகத் தெரிகிறது நான் படித்தவைகளில். 


இதில் பல தவறான கருத்துக்கள், தகவல்கள் இடம்பெறவும் வாய்ப்புண்டு, அதற்கு என் அறியாமைதான் காரணம் விருப்பு வெறுப்பு எதுவுமிருக்காது. 


மற்றபடி ஃபேஸ்புக் விவாதத்தில் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோர் சின்மயிக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதிலிருந்து இது இன்னும் வேறு வழியில் போய் அவர்கள் அணி எதிரணியும் கருத்து மோதலில் இறங்கியுள்ளன. லீனா மணிமேகலை-ஷோபா சக்தி கூட்டணி அவர்கள் எதிர்ப்பவர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்து என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. ஜெயமோகன் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. அவர் இந்துத்துவாவை தத்துவ ஞானம் என்று எழுதுகிறார். அதற்கு பதிவர்கள் சிலர் கடுமையான எதிர் வினையை வைப்பார்கள் என்பது மட்டுமே எனது புரிதல். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். நியாயமாக எழுதிய சில கருத்துக்களோடும் தொடர்பில்லாமல் 15 இலட்ச ரூபாய் கைதானவர்களைக் காக்க வசூலித்திருக்கிறார் என்று அவதூறு செய்திருக்கிறார். அடுத்து சாருநிவேதிதா ஏன் இக்கைதை ஆதரித்தார் என்றால், ராஜன் எப்போது
ம் அவரது பதிவை எடுத்து வரிக்கு வரி கீழ்த்தரமாக நக்கலடித்து வெளியிடுவார் எப்போது அந்தக் கடுப்பில் எதிர்வினையை வைத்திருக்கிறார். இதை சின்மயி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தமிழச்சி எழுதிய சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை என்ற கட்டுரை சின்மயி அறிந்திருக்க வில்லை போல.

சின்மயி பல பொய்களைச் சொல்லியிருக்கிறார். அவர் பூர்விகம் உட்பட. அவர் மொத்தம் மூன்று வகையான வழக்குகளைப்போட்டிருக்கிறார். மந்திர மூர்த்தி என்பவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டது, ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய ஆறு பேர்கள் மீது, வேறொரு தயாரிப்பாளர் பணம் கொடுக்காதது குறித்து என. இதில் ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய இரண்டு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள்.

இது இப்போதைய நிலவரம். ராஜன் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். தமிழ் வளம் மிக்க கவிதைகள் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாமியார்கள் எதிர்ப்பு, அன்னா ஹஸாரே போராட்டத்தில் பங்கெடுத்தது, மேலும் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்த மீனவர் படுகொலை எதிர்ப்பு, மே 18 போராட்டம் இது குறித்தெல்லாம் எழுதியுள்ளார். இது அனைத்து பொதுநலம் சார்ந்து எழுதப்பட்டது. மற்றபடி திரைப்பட விமர்சனம், கிண்டல் பதிவுகள், சாருநிவேதிதாவைத் தழுவி எழுதப்பட்ட நக்கல்கள். அவ்வளவே அவர் பின்னூட்டங்களில் நக்கல் இருக்கும், சில அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். குறிப்பாக இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் கீழ்த்தரமானவை. விமர்சனம் செய்யலாம் இந்த மொழி வெறுப்பை வளர்க்கும். சிபி செந்தில் குமார் மனைவியிடம் பேட்டி எடுப்பது போல ஒரு பதிவு ஒரு சிலருக்கு அது ஆபாசமாகத் தெரியும். ஆனால் அது அவரது மனைவியைக் கிண்டல் செய்வது போல எழுதப்பட்டதல்ல அவர் மனைவி சிபி செந்தில் குமாரை திட்டும் பாணியில் எழுதப்பட்ட நக்கல். ஆனாலும் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நண்டு நொரண்டு, ருத்ரன் போன்றவர்களின் தளத்தில் மரியாதையாகவும், பின்னூட்டமிட்டிருக்கிறார். பல பேரை மரியாதையின்றி நக்கலடித்திருக்கிறார். உதாரணமாக ஏதோ ஒரு பார்ப்பன எதிர்ப்பு பின்னூட்டத்திற்கு பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படிச் சொன்னார். பெருசு சரியாத்தாஞ் சொல்லிருக்கு. என்று. இப்படி. சுருக்கமாக மிகுந்த பண்புடனும், மொழியாளுமையுடனும் பேசுவார், எடுத்தெறிந்தும் பேசுவார் கோயம்புத்தூர் குறும்பு எனும் பொருள்பட.

முக்கியமாக பதிவுலகில் அதிகமாக விவாதிக்கப்பட்ட, சந்தனமுல்லை விவகாரத்திலும், சாருநிவேதிதா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பதிவெழுதியவர் ராஜன். அதனால் அவரை செக்ஸிஸ்ட் என்றோ ஆணாதிக்க வாதி என்றோ சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வரம்பு மீறி வசவியதன் மூலமாக ராஜனின் மேற்கண்ட இயல்புகளை ஏற்றுக் கொள்ள, அந்த ட்வீட்களைப் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.

இதனால் ராஜன் சின்மயி என்ற ஒரு பெண் மீது பாலியல் ரீதியில் பேசியிருக்க மாட்டார் என்று 99% நம்பலாம். அந்த 1 % ஜெயலலிதா உட்பட மற்ற பெண்கள் மீதான கருத்துக்களுக்காக. சின்மயி மீது ராஜனின் பாலியல் வசை தொடர்பான ட்வீட் ஒன்றும் இதுவரை இல்லை. இருக்கவும் முடியாது.

மேலும் பெண்கள் மீது சென்டிமென்ட் அதிகமென்பதால், ரேவதி, ஆதிரை (ராஜனின் மனைவி, குழந்தை) என்ற இரு பெண்களுக்காக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பது சின்மயி என்ற பெண்மணியின் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்.

மேலும் குழந்தையைக் குதறிக் கொன்ற கொலைகாரன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதையே எதிர்த்த நாம் இந்த அபத்தமான குற்றச்சாட்டிற்காக தனிப்பட்ட உத்தரவின் பேரில் சென்று கடமையைச் செய்ததைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

சின்மயி தரப்புப் பொய்கள்:

சின்மயி சொல்வது போலி ஐடிகள் மூலம் இழிவு செய்கிறார்கள் அதை எனக்கு டாக் செய்து ராஜனுடைய ட்விட்டருக்கும் அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார். இதை ராஜன் என்று எப்படி முடிவு செய்தார் இதைத்தான் ராஜனும் தனது பதிவில் கேட்டிருந்தார். அவர்கள் செய்த அவதூறுக்காக ராஜனை ஏன் குறிக்க வேண்டும் என்பது புரியவில்லை.

இதற்கு சின்மயி பதிலெதிவும் சொன்னதாகத் தெரியவில்லை.

ராஜனின் பணி பறிபோகுமளவிற்கு அவர் என்னவகை மன ரீதியான உளைச்சலுக்கு சின்மயியை உண்டாக்கினார் என்பது கேள்விக்குறி.

அதிகாரம் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அரை நாளில் கைது செய்யப்பட்டது குறித்து சொல்லத் தேவையில்லை. செய்யாத குற்றத்துக்கு பணி பறிப்பு, மன உளைச்சல் உட்பட சமூகத்தில் அவர் எதிர்காலம் உட்பட சின்மயி உலை வைத்திருக்கிறார். என்ன ஒரு கொடிய மனப்பான்மை.

ராஜனது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிடில் வரதட்சணை வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்குக்களைப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களைப் பழிவாங்கும் பெண்களில் ஒருவராகப் போகிறார் சின்மயி.

முதலில் நடந்த ட்விட்டர் உரையாடலில் சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன சின்மயிக்கு மீனா கந்தசாமி, தியாகு, ஏழர ஆகியோர் எடுத்துச் சொல்கின்றனர். மீனா தாழ்ந்தவர்களல்ல தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். ஏழர அமெரிக்காவிலும், ஸ்ரீலங்காவிலும் போய் சோகால்ட் ரேஸிசம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். இதன் மூலம் சின்மயி  புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனாலும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு டிவீட்டுகிறார். இது உணர்ச்சி வசப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ராஜ்மௌலியின் தாழ்த்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் குறித்து டிவீட்டுகிறார்.. இதற்காக எதிர்ப்பு வருகிறது என்று முன்பே அறிந்திருந்தும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்புக்காக பல டிவீட்டுகளை பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்ப்பன வெறியாகவே கருத முடியும் சின்மயி.

பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதையெல்லாம் சைபர் கிரைம் காரர்கள் நேர்மையுடன் தேடி எடுத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில்தான் சின்மயியின் நேர்மையை நம்மால் அறவிட முடியும்.

மேலும் வேறொரு பத்திரிக்கையாளர் ராம் இவர் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜனவரியிலிருந்து தமிழில் தன்னைத் தாக்கி தமிழில் பல ட்வீட்கள் வந்ததாகச் சொல்லும் சின்மயி ஏன் வந்தது என்று சொல்ல வில்லை. ஒரு வேளை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களால் வந்திருக்கலாம்

ஹையங்கார் என்பது நீங்கள் நகைச்சுவைக்குப் போட்டதாக உங்கள் மற்ற டிவீட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.

மேலே நான் எனக்குத் தெரிந்த வரையிலெல்லாம் ராஜன் மீதான் நியாயத்தைச் சொல்லிவிட்டேன். உடனடியாக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில், அவர் பணியும் திரும்ப வழங்கப்பட வேண்டுமென்பதில் (வேலையில்லாமையின் சுமையை நன்கு அறிந்தவன் நான்) எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ராஜன் தரப்புப் பொய்கள்:

தன்மீது வந்த அவதூறு ட்விட்டர்களை ப்ளாக் செய்திருக்கிறார். வெவேறு ஐடிக்களில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

சின்மயி #TNFisherman இல் சேராததற்குக் காரணத்தை சொல்லியிருக்கிறார். அதில் அவரால் ப்ளாக் செய்யப்பட்டவர்கள் இருப்பது மட்டுமல்லாமல், பல தலைவர்கள் கேவலமான முறையில்  விமர்சிக்கப்பட்டிருந்ததால் அதில் தன் பெயரும் இணைக்க விருப்பமில்லை எனவும் தனிப்பட்ட முறையில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்கு தமிழர்களுக்கு எதிரானவள் சின்மயி என்று தன்னை இழிவு செய்தார்கள் என்கிறார். சின்மயி.

#அசிங்கப்பட்டாள்சின்மயி

வந்த காரணம்: சின்மயி ராஜன் மீது வன்மம் கொண்டதற்காக ராஜனும் மற்றவர்களும் சொல்லும் ஒரு காரணம் மஹேஸ்மூர்த்தி என்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிருபர் பிரபலங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் மக்களைக் கவர்ந்த பொழுதுபோக்காளர்கள் என்ற பட்டியலில் நான்காவாதாக சின்மயியும், ஐந்தாவதாக ராஜன் லீக்ஸ் - ஐயும் குறிப்பிட்டிருந்தார். இதனால் சின்மயி ராஜனின் பெயரை நீக்கச் சொல்லி மகேஸிடம் சண்டை போட்டார் என்கிறார்கள். இது முழுவதும் உண்மையல்ல.

சின்மயி அவருடன் சண்டையிடக் காரணம் வேறு. அதில் ஷ்ரேயா கோஷல், சின்மயி ஆகியோரை (ப்ளாக், ட்விட்டர் முகவரிகளை) ப்ளாக்கர்கள், ட்விட்டர்கள் வகையில் வரிசைப்படுத்தியிருந்தார் மகேஸ்மூர்த்தி. ஷ்ரேயா கோஷல் தனது பெயரில் இருந்த இணையத்தளம் தன்னுடைய சொந்தத்தளமல்ல தனது ரசிகர்களால் நடத்தப்படுகிறது என்று மகேஸ் மூர்த்திக்கு மென்கடிதம் எழுதினார். பின்பு ஷ்ரேயாவின் ப்ளாக்கை அந்தக்கட்டுரையிலிருந்து மகேஸ் நீக்கிவிட்டார். சின்மயிக்குக் கொடுத்திருந்த வரையரறையில் சின்மயி பாடகர் எனற முறையில் பிரபலமானவர் என்பதை விட ட்விட்டரில் எழுதி பிரபலமானவர் என்று எழுதியிருந்தார். இதைத்தான் சின்மயி எதிர்த்தார். அதே போல் ராஜனை விட 10 மடங்கு அதிகம் வாசிக்கப்படும் மதன் கார்க்கி, வைரமுத்து ஆகியோரின் தளத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருக்கிறார். மகேஸ் அது என்னுடைய சொந்தக் கட்டுரை அதனால் நீக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். (ராஜனை நீக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும், பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகவும் மகேஸ் சொல்கிறா. சின்மயி அழிக்க வில்லை என்கிறார்.) அந்தக் கட்டுரையின் கருத்துரைகளைப்படித்தால் தெரியும் அது ஒரு தவறாக எழுதப்பட்ட கட்டுரை, ராஜனே சொல்லியிருக்கிறார் 7 படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கும் தன்னை எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை என.

தன்னைப் பற்றி பாடகராக இல்லாமல் ப்ளாக்கில் பிரபலமானவர் என்பதை சின்மயி ஏன் எதிர்க்கக் கூடாது ? இதில் சின்மயியின் வன்மம், பிரபலம் என்ற திமிர் இருக்கிறதா ? இதில் சின்மயியின் பேச்சைக் கேட்டு அதை நீக்காததால் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்று அவரைக் கிண்டலடித்திருக்கிறார்கள் இங்கே ராஜன் சின்மயி தன் மீது வெறுப்புடன் இருப்பதால்தான் அதை எதிர்த்ததாகத் தவறாகப்புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அசிங்கப்பட்டாள்சின்மயி# என்று டாக் தொடங்கி கிண்டலடித்திருக்க வேண்டும். அந்த டாக் உடன் ராஜனுட மற்றவர்களின் சின்மயி மீது தொடுத்த ஆபாச ட்வீட்களுக்கும் சேர்த்து ராஜன் மீது சின்மயிக்கு ஐயம் வந்திருக்க வேண்டும். இது என் கணிப்பு. ராஜன் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் இது பெண் மீதான தாக்குதல்தான்.

இன்னொன்று சின்மயி மீனவர்கள் மீனைக் கொல்வதால், சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்லலாம் என்று சொன்னார் என்பது மிகப்பெரிய பொய். வேறொரு சந்தர்ப்பத்தில் சின்மயி மீன்களைக் கொல்றது மட்டும் பாவமில்லையா என்று கேட்டதை ராஜன் சும்மா கிண்டலுக்கு டிவிட்டியதே "மீனவர்கள் மீன்வர்களைக் கொல்கிறார்கள். அதனால் சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்கிறது" என்ற அந்த டிவிட். அது உண்மையல்ல. ஆனால் அதை ஃபோட்டோ ஷாப் செய்து உண்மை என்று பரப்பி விட்டார்கள். அதை இங்கே விமலாதித்த மாமல்லன் பதிவில் காணலாம். என்ன வக்கிரமான எண்ணம் இது ? இதை இன்னும் பலர் நம்புகின்றனர். பரப்புகின்றனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா அது உண்மையா இல்லையா என்று கேட்காமலேயே தமிழர்கள் முகத்தில் காறித்துப்பிய சின்மயியை கண்டிக்கிறேன் என்று போட்டு விட்டார். இப்படி சின்மயி தமிழர்களுக்கு எதிரானவர் என்று கருத்து பரப்பப்பட்டது.

இன்னொன்று அதை உண்மையா என்பதை தமிழ் மான் என்பவர் கேட்க, (இல்லை என்பதை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்லணுமா என்ற பொருள்பட) உங்களுக்கு தனியா டாக் பண்ணி சொல்லணுமா என்று கேட்டிருக்கிறார். தன் மீது தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று ஒரு  சின்மயி போட்டிருந்த போஸ்ட்டின் கீழே இதை அவர் கேட்டார். இல்லை என்பதைத்தான் சின்மயி அப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் பல இடங்களில் இதைக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தவறாகப்புரிந்து கொண்டு சின்மயி ஆமாம் என்று சொன்னாதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பல பேருக்கு டாக் பண்ணி விட்டார் அவர். அவர் புகாரளித்ததே தான் மீனவர்கள், தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் சித்தரிக்கிறார்கள் என்றுதான். அதைத்தானே இன்னும் செய்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இவர் சொன்னது உண்மை, ஆனால் மீனவர்கள் குறித்து சொல்லப்பட்டது முழுப்பொய். ஒரு கொலை செய்தவன் மீது 3 கொலை செய்ததாகச் சொல்வது போல.. ராஜன் மீது சொல்லப்பட்ட அவதூறு போன்றதே இதுவும். இருப்பினும் இருவரும் சமமல்ல என்பதும் சரிதான்.  எப்படி ராஜனின் சில ட்வீட்களை மட்டும் வைத்து அவரது இயல்பைத் தீர்மானிக்க முடியாதோ அது போலத்தான் சின்மயிக்கும். இணைய ஊடகங்களும், தினத்தந்தி போலத்தான் இது போன்ற பொய்ப்பரப்புரைகள் சின்மயி மனிதநேயமற்றவர் என்ற பிம்பத்தை காலத்திற்கும் ஊன்றி விடும். அதனால் இந்தப் பொய்யை நம்பக்கூடாது

பெண்கள் மீதான வன்மம்

அதே நேரம் இன்னொன்றையும் நான் முக்கியமாகப் சொல்ல வேண்டியுள்ளது. ராஜனுக்கு ஆதரவு பெருகி இருப்பதால், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல், பெண்களை இழிவு செய்கிறவர்கள், பெண்ணியம் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்கிறவர்கள், கற்பு வேண்டும் இல்லையென்றால் நீதி கிடைக்காது, பெண்கள் கிண்டல் செய்வது என்னுரிமை, அவள் மட்டும் யோக்கியமா என்ற கருத்துக் கொண்டவர்களெல்லாம் கிடைத்த சந்தில் சின்மயி மீது வன்மத்துடன்  ராஜனை ஆதரிக்கிறேன் என்று கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களின் கருத்துக்கள் சின்மயியின் பின்புலம், அவரது பழிவாங்கும் வெறி, பொய் ஆகியவைகளைத் தவிர்த்து, சின்மயி ஒரு பெண் என்ற ரீதியில் மட்டும் இழிவு செய்கிறார்கள். இது சின்மயி அல்லாத வேறு எந்தப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக காவல்துறையை நாடி இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவையாகும். சின்மயி ஓவரா சீன்போடறா என்பது போலவும், கற்பில்லாதவள் நீதி கேட்கக்கூடாது என்ற கருத்துக்களை இவர்கள் சொல்கிறார்கள்.

ஆண்களால் பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்கு பெண்களின் தவறான கருத்தே காரணம் என்ற ஆபத்தான கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துள்ள பேர்வழிகளை ராஜனே எதிர்த்திருப்பார். என் அம்மா, சகோதரிகள், உறவினர் பெண்கள் அனைவருமே இது போன்ற கருத்துக்களை வெளியிடக்கூடியவர்கள். கிராமத்திலிருக்கும் உயர்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் அனைவரின் இயல்பும் இது. இது தவறுதான் என்றாலும் பாலியல் தாக்குதலுக்கு இது ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நண்பனொருவனின் தந்தையார் திகவில் இருந்தவர் அவன் வீட்டிலும் இதே நிலைதான்.

மீனா பார்ப்பனீய எதிர்ப்பு பேசியதால் பாலியல் ரீதியான மொழியில் தாக்கப்பட்டார், சின்மயி பார்ப்பனியம் பேசியதால் தாக்கப்பட்டார். இதே போல் ஃபேஸ்புக்கில் நிலவுமொழி செந்தாமரை என்ற பெண்ணும் ஜாதி எதிர்ப்புக்காகத் தாக்க்ப்பட்டார். இப்படிப் பல பேர் காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர்கள் பெண் என்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் இங்கே சின்மயியை இழித்தவர்கள் கோபத்தில் கொந்தளித்ததாகத் தெரியவில்லை, அவரைக் கிண்டல் செய்ய ஒரு டாக் ஆரம்பித்து அதில் கண்டபடி செய்திருக்கிறார்கள். இதில் தாழ்த்தப்பட்ட, அறியாதோரின் அடித்தட்டு மக்களின் வசவு மொழியன்று நான் கண்டது, முற்போக்குவாதிகளின் ஆணாதிக்க வன்மம் மட்டுமே.

அப்படிப்பார்த்தால், சிங்கள மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஜெவைக் கண்டித்து வரைந்த கார்ட்டூன் சரி. கனிமொழி ஊழல் செய்ததால் அவர் மீதான கருத்துக்கள் சரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். போர் நடந்தால் மக்கள் சாவது இயற்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா ஈழ்த்தாயாக மாற்றப்பட்டார்.
எல்லோரிடமிருந்து பெரிய பாலியல் ரீதியான தாக்குதல் வரவில்லை. அது போல ஆபாசமாக சின்மயியை ஏசாமல் இருந்திருந்தால் அவருக்கு எதிராக கேட்டிருக்கலாம். ஆபாசமாகப் பேசிவிட்டு அதை நியாயப்படுத்த தலித், தமிழ் என உணர்ச்சி அரசியலின் பின்னர் ஒளியக்கூடாது.

ராஜன் மட்டுமே சின்மயி மீது பாலியல் மொழியில் தாக்குதல் செய்யவில்லை தவிர மற்றவர்கள் செய்திருக்கிறார்கள். ராஜனின் நண்பர்களாக இருந்தவர்கள் இது போலப்பேசியதற்கான ட்விட்டுகள் இருக்கின்றன. இதற்காக ராஜனைக் குற்றவாளியாக்கியது மன்னிக்க முடியாதுதான்.

அவரது பதிவிலும் இது போல் சிலர் பின்னூட்டமிடுவார்கள். அதுபோலவே ட்விட்டரிலும் சிலர் இருப்பார்கள் போலத் தெரிகிறது. இவைகளெல்லாம் கோபத்தில் வெளிப்பட்ட உணர்ச்சியில் தெரியாமல் வெளிவந்த கெட்ட வார்த்தைகள் அல்ல. பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கும் மதிப்பீட்டில் வருகின்றவை. அதனால்தானே அம்மாவை கடலைக்கு யூஸ் பண்ணிக்கலாம் என்று பேச வைக்கிறது. திரைப்படங்களில் பார்த்தால், நாயகனின் அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசினால் அவன் கொந்தளித்து சண்டை போடுவது போலவும், நாயகியின் தங்கையையோ, அம்மாவையோ பற்றிப் பேசுவது நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (எ.கா ஃபிகரோட சேர்ந்து அவ அம்மாவையும் உசார் பண்ணிருப்பேன் வகையில்)

இது போன்றவர்களைச் சிரிக்க வைப்பதற்காக ராஜன் எழுதியிருக்கிறார் என்பது என்ன முரண் நகை. ஜெயலலிதாவின் கார்ட்டூனைக் கண்டித்த கையோடு அதை நையாண்டி செய்தது மட்டுமே உலகிற்குத் தெரிந்திருக்கிறது என்பது வேதனை.

இந்த வழக்கு மிகவும் சிக்கலாக எந்தப்பக்கம் சாய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் பெண்ணின் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்காக பெண்ணை ஆதரிப்பதா இல்லை அதிகார வர்க்கத்தினால், பழிவாங்கப்பட்ட பாமரனா என்றால் அப்பாவியின் பக்கம்தான் நிற்கத் தோன்றுகிறது. I support Rajan (with conditions apply). ராஜனின் விடுதலையை மட்டும் தீவிரமாக ஆதரிக்கிறேன். அவர் ஆதரவாளரின் கருத்துக்களை எதிர்க்கிறேன்.

இருப்பினும் சின்மயி ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற நிலையில் அவர் மீதும் கரிசனம் உண்டு.
Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்மயி வேறு என்னதான் செய்ய வேண்டும் ?


பெண்கள் மீதான வசைச் சொற்களைக் கண்டு வெம்பியதால் இது குறித்து அழுத்தமாக எழுதத் தோன்றுகிறது. அடிக்கடி இது குறித்து எழுதுகிறேன். அதனால்தான் சின்மயியின் பிரச்சனை குறித்தும் எழுதுகிறேன். எல்லாக் கோணங்களிலும் ஆராய விருப்பமும் இல்லை. பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்ப்பதற்கு மட்டுமே ஒரு சந்தர்ப்பமாகக் கருதி இதைச் சொல்கிறேன். மாட்டிக்கொண்டவர்களை கும்முவதும் மகிழ்வதும் எனக்குப் பிடிக்காது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான ஆதாரம் சரவணக்குமார் என்பவர் மீது மட்டும் இருக்கிறது. ராஜன் முன்பு டிவிட்டரில் சின்மயியிடம் விவாதத்தில் ஈடுபட்டு, அவரை அதிகம் கேலி பேசியதால் எரிச்சலடைந்த சின்மயி அவரை ப்ளாக் செய்துவிட்டார். பின்பு எதுவும் சொல்லவில்லை என்கிறார். ஆனால் சின்மயி தொடர்ந்து வெவ்வேறு முகவரிகளில் வருகிறார்கள் தொல்லை தருகிறார்கள் என்று இதற்கு முன்பே ஒரிரு முறை சொல்லி வந்தார். ராஜன் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையாளர் சின்மயியுடன் பிரபலமானவர்களில் ஒருவராக ராஜனையும்  சேர்த்து எழுதியதால் சின்மயி அப்பத்திரிக்கையாளருடன் சண்டயிட்டார். பின்பு தொடர்ந்து ராஜனால் தொல்லை ஏற்படுவதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை. ராஜன் தனது ஃபாலோயர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனபதற்காக மிகவும் கீழ்த்தரமான கீச்சுக்களை, பதிவுகளை எழுதியுள்ளார். பல அரசியல் தலைவர்களை நடிகர்களை இழிவு செய்துள்ளார்.

ஆனால் சின்மயியை தனிப்பட்ட முறையில் தாக்கி இவ்வாறு எழுதவில்லை சும்மா கிண்டல் மட்டுமே செய்துள்ளார். என்பதில் உறுதியாகத் தெரிகிறது. அதுவும் சின்மயி ப்ளாக் செய்த பிறகு எதுவும் எழுதவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். எழுதியவர்கள் மற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட முடியுமா ? ராஜனை மட்டும் முன்னிலைப்படுத்துவதன் காரணம் புரியவில்லை.  

ஆதாரமும் இல்லைஇது பாரபட்சமான தனிப்பட்ட வெறுப்பாகத் தெரிகிறது. 

3 வருடங்களாக பதிவுலகில் இருப்பதால் அவர் தனிப்பட்ட பெண்கள் மீது பாலியல் அவதூறு செய்ய மாட்டார். சந்தனமுல்லை, சாரு நிவேதிதா விவகாரங்களில் அவர் எழுதிய பதிவுகள் அதற்குச் சான்று. ஆனால் அவரே இவ்வளவு கீழ்த்தரமான ட்வீட்டுகளும், பதிவுகளும் எழுதியது முரண்.

தினத்தந்தி வழக்கம் போல ஈனத்தனமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் கைது என்று படமெல்லாம் போட்டிருக்கிறார்கள். கூகிளிலும் ராஜன் படம் வருகிறது. இதெல்ல்லாம் அதிகபட்சமானது. உலகமகாக் கொலைகாரன்களுக்கே தூக்கு தண்டனை வேண்டாம் என்கிறோம். இது போன்ற வசைபாடல் ஆபாசமாக வர்ணிப்பது என்பதற்கெல்லாம் இவ்வளவு தண்டனை வேண்டாம். சராசரிப் பெண்களையெல்லாம் வன்கலவி செய்தவன்களெல்லாம் நடமாடுகிறார்கள். அதே நேரத்தில் இது போன்ற இணையத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பது பெண்களின் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்த கண்ணியமான காவல்துறை கூடங்குளத்தில் என்ன செய்தது ? .

தன் குழந்தையைத் தேடிச் சென்ற லவீனாவிடம் அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

இது மாதிரி பலரிடம் உதயகுமாருடன் தொடர்புபடுத்தி, பாலியல் ரீதியாக கேள்வி கேட்டிருக்கின்றனர். இது குறித்துப் பல புகார்கள், மனித உரிமை மீறல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன காவல்துறையினர் மீது. இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது.

சைபர் கிரைம் குறித்து 18 பெண்கள் புகாரளித்தும் சின்மயியின் புகார் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தனிப்பட்ட செல்வாக்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவ்வப்போது ஜாதிப் பெருமிதத்துடனும் திமிருடனும் பேசியிருக்கிறார்.

இட ஒதுக்கீடு, மீனவர்கள் மீனைக் கொல்வது, சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என வன்மமாகக் கருத்து வைத்திருக்கிறார்.

புகழ்விரும்பி எக்செட்ரா......

இதெல்லாம் சரியென்று ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் மற்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சின்மயியின் தவறுகளைக் கண்டிக்கும் அதே நேரம் மற்றொன்றையும் கண்டிக்க வேண்டும்.

அவர் பார்ப்பனத் திமிருடன் நடந்து கொண்டார் என்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்துப் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் உட்பட.

ஃபேஸ்புக்கில் பலரும் இந்துத்துவாவாதிகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு போன்ற பகிர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் யாரும் இந்துத்துவாவாதிகளோ பார்ப்பனர்களோ அல்ல. பார்ப்பனப் பெண் மட்டுமல்ல இட ஒதுக்கீடு பற்றி அறியாத எந்தவொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆண், பெண்களின் கருத்தும் சின்மயி கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் படித்ததே இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் என்பதை அறியாமல் இருப்பதால்தான் அப்படிப் பேசுகிறார்கள். சின்மயி பார்ப்பனராக இருப்பதால் அதை வைத்தே அவரை தாக்க முடிகிறதே. இதே வேறு ஜாதியாக இருந்திருந்தால் ?

அதே போல் உதயகுமாரைப்பற்றி இழிவு செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பன இந்துத்த்வாக்களா ?

அதே போல் மீனைக் கொல்வது பாவமில்லையா என்று கேட்டதை, மீனவர்கள் மீனைக் கொல்லும்போது, சிங்களப்படை மீனவர்களைக் கொல்லலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்கு ஒரு ஸ்க்ரின் ஷாட்டை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஆமாம் என்று சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. அதை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

எல்லோரையும் பெண்களையும் தலைவர்களையும் இழிவு படுத்தி இருப்பதை அவர் எதிர்க்கிறார், கண்டிக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்.

திட்டம் போட்டு சிக்க வைத்தார் என்கிறார்கள். அவர் அம்மாவைப்பத்தித் தவறாகப் பேசினால் அவர் கோபப்படக்கூடாதா என்ன ?

அவர் தமிழச்சி என்று சொல்வதை எதிர்க்கிறார்கள். அவர் தெலுங்குப்பெண் என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் தமிழ்நாட்டில்தான் இப்படித் துணிச்சலாகத் தெலுங்கு என்று சொல்லியிருக்க முடியும். அதே  நான் பிராமணப் பெண் என்று சொல்லியிருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள்.

தமிழ்ப் பெண் என்று சொன்னால் அதையும் நக்கலடிக்கிறார்கள்.

இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை நாடினார், அதே போல்தானே அவரை ஆபாசமாகப்பேசியவர்களும் தலித் ஆதரவு, மீனவர் ஆதரவு என்று உணர்ச்சி அரசியலை தனக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு நியாயம் தேடுகிறார்கள். இது மட்டும் தவறில்லையா ?

ஒரு பெண் எதிர்க்கருத்து வைத்தார் என்பதற்காக அதை பாலியல் ரீதியில் வசைபாடுவதை ஆண்கள் மிகச் சாதாரணமாக எடுத்து கொள்வதையும் அதைக் கடந்து சென்று விடுவதையும் தவறே இல்லையெனப்பார்ப்பதும்தான் எனக்கு வலிக்கிறது. அவர் பார்ப்பனப் பெண்ணாகவே இருக்கட்டும் அதற்காக தமிழ்ப்போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர்களை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவது சரியாகுமா ?

படித்தவர்கள் பண்பாளர்கள் நிரம்பிய இணைய, டிவிட்டர், பதிவுலகில் பல அன்பர்களின், அறிவாளர்களின், முற்போக்குவாதிகளின் வன்மத்தையும், வக்கிரத்தையும் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. மலையாளியோ, சிங்களனோ தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தால் ஒருநிலையும் , தமிழன் செய்தால் ஒரு நிலையும் எடுக்கிறார்கள்.

பெண்கள் மட்டுமல்லா பிற அரசியல் தலைவர்களையும் கண்டமேனிக்கு காய்ச்சுகிறார்கள். சில வருடங்களாக வலைப்பூக்களைப் படித்ததிலிருந்தே இது தெரிகிறது.

சரி சின்மயிக்குப் பதிலாக ஜெயலலிதா குறித்த ட்வீட்டுகள் வேறொரு உளவுத்துறையின் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார் ?

களத்தில் போராடும் உதயகுமார் போன்ற தலைவர்கள் அபத்தமாக வாய் விடுவதில்லை. ஆனால் இணையத்தில் அனைவரும் மனம் போன போக்கில் போட்டுத் தாக்குகிறோம் இல்லையா

3 வருடங்கள் முன்பு ஈழப்போர் நடந்த போதுதான் பதிவுலக அறிமுகத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒரு பதிவர் எல்லாளன் என்று பெயர், புலிகளின் செய்திகள் அருமையான மொழிநடையில் உடனுக்குடன் கிடைப்பதால் அதில் படிப்பது வழக்கம். ஜெயலலிதா புலிகளின் மீது வெறுப்பான அறிக்கைகள் வெளியிட்ட காலத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படம் ஒன்று மினிட்ரௌசருடன் இருப்பது போல் வெளியிட்டு, சீலை தூக்கிய சிங்காரி என்பதை அதன் தலைப்பாக வத்திருந்தார்.

கருணாநிதி ஃபேஸ்புக்கில் வந்த போது வசவுகளாகப் போட்டு ஒரே நாளில் அவரை வெளியேற்றினார்கள்.

கனிமொழி ராசாவைப் பற்றி வந்த செய்திகள்

மன்மோகன் சோனியாவை இணைத்து வெளிவரும் கேலிப்படங்கள்

நடிகர் விஜய் குறித்து வருகின்றவை

இதெல்லாம் இணையத் தமிழர்கள் செய்கின்றவைதான். இதுதான் எரிச்சலாக இருக்கிறது. மேலே இருக்கின்ற ஒரு செயலை நாகரீகமாக எதிர்ப்பவர்கள், இன்னொன்றை உறுத்தலின்றிச் செய்கின்றனர்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை வைத்து அரட்டைக் கும்மியடிக்கின்றனர். மற்றவர்களை சொம்படிப்பவன், இணையப் பொரச்சி, அல்லக்கை பட்டங்களை அள்ளி  வீசுகின்றனர்.

இப்படி இவர்கள் செய்தது சரியென்றால் கவிஞர் மீனா கந்தசாமி மாட்டுக்கறித் திருவிழாவை ஆதரித்ததாக சந்தித்த வசைகளும் சரிதான். அவர் தலித் அல்லது தமிழர் என்பதால் அதை மட்டும் எதிர்க்கக் கூடாது சரிதானே. ஏனென்றால் இந்துத்துவாக்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அவரை ஒருவன் Bitch I want to fuck you  என்று ட்வீட்டியிருந்தான். 

நன்றி சவுக்கு
 நீங்கள் என்ன மகத்தான கொள்கைக்காகப் போராடினாலும் பெண்களை பாலியல் ரீதியில் தாக்கும் போது அதன் வீரியம் போய்விடுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணமே தெரிகிறது.

பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள் எனபதே இப்பதிவின் நோக்கம்.

இதைப் போன்ற சிறிய நிகழ்வுகளைப் பெரியதாக்கி இணைய சுதந்திர வெளிக்குப் பூட்டுப் போடவும், கருத்துரிமைக்கு ஆப்பு வைக்கவுமே வழிவகுக்கும். ஏற்கெனவே பல தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனவாம்.

இது போன்ற தனிநபர் தாக்குதல் மட்டுமன்றி "கண்ணியமான" எதிர்க்கருத்தாளர்களும் அரசால் நசுக்கப்படும் போலத் தெரிகிறது.

2 வாரங்களுக்கு முன்புதான் இதே மாதிரி ஒன்றை எழுதினேன்.

http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post_4.html
Download As PDF
Bookmark and Share

Post Comment

பாலினப்படுகொலை: பிறக்காமல் போன 160 மில்லியன் பெண்கள்


"இவ்வுலகிலிருந்து100  மில்லியனுக்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை" என்று  கூறி  1990  இல்  அதிர்ச்சியை   ஏற்படுத்தினார்  நோபல்  பரிசு  பெற்ற  அறிஞரான  அமர்த்தியா  சென்.  பொருளாதார  வளர்ச்சி  பெண்களின்  எண்ணிக்கையைக்  குறைத்திருப்பதாக  எழுதிய  அமர்த்தியா  சென்  இருப்பினும்  பெண்களின்  எண்ணிக்கை  எப்படிக்  குறைந்தது  என்பது  குறித்துத்  தெளிவாக  அவர்  விளக்கவில்லை. அமர்த்தியா சென் இதற்கான காரணிகளாக ஊட்டச்சத்துக் குறைபாடு, வறுமை, கல்வியின்மை எனற வகையிலேயே விளக்கியிருந்தார். மிக முக்கியக் காரணியாக இருந்த ஒன்றைக் குறிப்பிடவில்லை, இதை  மாரா விஸ்டெண்டால்  (Mara Hvistendahl)  என்பவர்,  தன்னுடைய  "Unnatural Selection: Choosing Boys Over Girls, and the Consequences of a World Full of Men"  என்ற  நூலில்  விளக்கியுள்ளார்.  உலகில்  அதிகமான  ஆண்குழந்தைகள்  பிறந்து  இறக்கின்றன.  இயற்கையாகவே  இது  நடக்கிறது.  இயல்பான  பிறப்பு  விகிதம்  என்பது,  100  பெண்குழந்தைகளுக்கு  103  -  106  பெண்குழந்தைகள்  வரையில்  பிறப்பதாக  இருந்தது.  ஆனால்  சமீப  வருடங்களில்  இது  மாறி  அதிகமான  பெண்குழந்தைகளின்  இறப்பு  அதிகமாகியிருக்கிறது.  இதற்குக்  காரணம்  பாலினப்படுகொலை (gendercide).  அதாவது  பெண்குழந்தைகளைக்  கருவிலேயே  கலைத்து  விடுவதாகும்.  எடுத்துக்காட்டாக  சீனாவில்  ஆண்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதமானது  125:  100  என்ற  நிலைக்கு  நெருங்குகிறது.  2005  -  இல்  எடுக்கப்பட்ட  கணக்கீடுகளின்படி  ஆண்பெண்  பிறப்பின்  சமன்பாடு  மோசமான  நிலையில்  இருக்கும்  5  நாடுகள்  சீனா,  தென்கொரியா,  அஸர்பெய்ஜான்,  ஆர்மீனியா  மற்றும்  ஜார்ஜியா.  2010  இல்  எடுக்கப்பட்ட  புள்ளிவிபரங்களின்  படி  இவ்வாறு  பிறக்காமல்  போன  பெண்கள்  இந்தியா,  சீனாவில்  மட்டும்  85  விழுக்காடுகள்  இருக்கலாம்.



கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிந்து  கொள்ள  தாய்க்கு  அனுமதியில்லையென்ற  போதிலும்  மருத்துவர்கள்  இதில்  குறுக்கு  வழியில்  உதவுகின்றனர்.  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  ஆய்வும்,  (கருவானது  பெண்ணாக  இருக்கும்  பட்சத்தில்) அதனைத்  தொடர்ந்த  கருக்கலைப்பும்  ஆசியக்  கண்டத்தில்  மட்டும்  160  மில்லியன்  பெண்களை  அழித்துள்ளது.  இந்தத்  தகவல்  2005  இல்  எடுக்கப்பட்ட  புள்ளி  விவரத்தின்  அடிப்படையில்  அமைந்ததாகும்.  அமெரிக்காவிலுள்ள மொத்தப் பெண்களின்  எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகமாகும்.

இதன்  மூலகாரணமாக  விளங்குபவை  பெண்குழந்தையைக்  காட்டிலும்  ஆண்குழந்தை  பெறுவதை  விரும்பும்  கட்டுப்பெட்டித்தனமான  பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க  ஆசிய  சமூக  பண்பாட்டுக்  காரணிகளே.  ஆணாதிக்கப் பாதிப்பு நிறைந்த இந்தியாவில்  வரதட்சிணை  எனும்  மணக்கொடை  பெண்குழந்தை  பெற்றுக்  கொள்வதை  சிரமமாகக்  கருதுகிறது.  இந்து, கிறித்தவம், புத்தம், என அனைத்து சமயங்களிலும் இதுவே நிலை. சீனாவில்  பிறப்பிக்கப்பட்ட  ஒரு  குழந்தைத்  திட்டத்தின்  பின்பு சீனர்கள் பெண்குழந்தைகளைக் கலைத்து விட்டு ஆண்குழந்தையை பெற்றுக் கொள்ளவதில் ஆர்வம் காட்டினர்.

உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாரா  விஸ்டென்டால் சிலிர்க்க  வைக்கும்  காரணங்களை  தனது  நூலில்  கூறுகிறார்.  இவர்  விருது  பெற்ற  அறிவியல்  இதழாளர்.  ஆசியாவில்  9  நாடுகளில்  பயணித்துள்ள  இவர்  இந்நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதம்  குறைவாக  இருப்பதற்கான  காரணங்களை  ஆராய்ந்து  அதன்  மூலகாரணங்களை  கண்டறிந்து  தனது  நூலில்  எழுதியுள்ளார்.  ஆசியாவில்  பாலினத்  தேர்வு (sex selection)  நடப்பது  நாம்  நினைப்பது  போல்  அவ்வளவு  சாதாரணமாகவோ இயல்பாகவோ  இல்லை  என்று  குறிப்பிடும்  மாரா  இதற்காக  மேற்குலகைக் குற்றம்  சாட்டுகிறார்.  அவர்கள்  ஏன்  அதைச்  செய்தார்கள்  என்ற  காரணத்தையும்  அவரே  விளக்கியும்  விடுகிறார்.
மாரா  விஸ்டென்டால்
மேற்குலகின் உதவி

மேற்குலக அரசுகளும், மனித வள மேம்பாட்டு (philanthropic)  நிறுவனங்களும்  இதற்குப்  பெருமளவில்  உதவின.  1950  களிலேயே  மூன்றாமுலக  நாடுகள்  கருக்கலைப்பை  சட்டப்பூர்வமாக்கியதுடன்  அதற்காதரவாக  அமெரிக்கப்  பணத்தின்  உதவியுடன்  பரப்புரையும்  செய்யத்  துவங்கின.   (ஃபோர்டு  அறக்கட்டளை,  உலக  வங்கி,  ராக்ஃபெல்லர்  அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் இதில் உதவின ) பனிப்போர்க்காரர்களான  குடியரசுக்  கட்சியினரும்  மக்கள்  தொகைப்பெருக்கம் காரணமாக அதிகமான எண்ணிக்கையிலான பசித்த வயிறுகள் கம்யூனிசத்தை நோக்கித் திரும்பும் அபாயம் இருப்பதால், பொதுவுடமைத்  தத்துவம்  வளர  வழிவகுத்துவிடுமென்று  நம்ப,  இடதுசாரி  விஞ்ஞானிகளும்,  இயக்கங்களும்  "பெண்களின்  தேவை (
பெண்களின் உரிமை)"  என்றும்,  "எதிர்கால  மனித  வளத்துக்கு  அல்லது  மனிதன்  உலகில்  நிலைத்திருப்பதற்கும்"  கருக்கலைப்பை  இன்றியமையாததாகக்  கருதினர்.  இப்படியாக மாற்றுக் கொள்கைகைக் காரர்களாக இருந்த பொதுவுடமைவாதிகளும் தனியுடமைவாதிகளும் பெண்களின் "பிறக்கும் உரிமைக்கு" ??!  எதிராக கொள்கை ரீதியாக ஒன்றானார்கள்.  இது  போன்ற  மக்கள்  தொகை  கட்டுப்பாட்டு ஆதரவாளர்களின் மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்தும்  ஒரு கோரிக்கையாக முன்வைத்தது  பாலினத்  தேர்வையே.  இதன் மூலம் பெண்கள் குறைவான எண்ணிக்கையில் வைத்திருக்கும் சமூகம் குறைவான மக்கள் தொகையையே  பெறும்  என்று  கணக்கிட்டிருந்தார்கள்.

பனிப்போர்  காலத்தில்  தொடங்கப்பட்ட  மக்கள்  தொகைக்  கட்டுப்பாட்டு  இயக்கங்களின்  மூலமாக,  அதிகமாக  குழந்தைகள்  பிறப்பதும்  அவர்கள்  பசியுடன்  வளர்வதும்  அவர்கள்  கம்யூனிசத்தில்  ஈர்க்கப்பட்டு  விடுவார்கள்  என்று  அஞ்சினார்கள்.  இந்த  அச்சுறுத்தலின்  காரணமாக விளைந்த கொள்கைகளால் இந்தியா,  சீனா,  தென்கொரியா  ஆகிய  ஆசிய  நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதத்தைக்  குறைத்தது.  இதற்கான  ஆதாரங்களையும்  மாரா  கூறுகிறார்.  பல  நிறுவனங்கள்  மக்கள்  தொகையைக்  குறைப்பதற்கான  ஒருவழியாகவே  கருக்கலைப்பை  ஊக்குவித்தனர்.  மேற்குலகின்  பணத்தைக்கொண்டு  இதற்காக  மிகப்பெரும்  வலைப்பின்னல்  உருவாக்கப்பட்டது.   குடும்பக்கட்டுப்பாட்டு  ஆலோசகர்களும்,  மருத்துவர்களும்  பெண்களை  அமினோ  சிண்டிசிஸ்  ஆய்வினை  மேற்கொள்ளுமாறு  ஊக்கப்படுத்தினார்கள்.


அமினோசென்டிசிஸ் (பனிக்குட துளைப்பு) என்ற ஆய்வானது, கருவறையிலிருந்து பெறப்பட்ட ஒரு திரவத்தை ஆய்ந்து அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தையின் உடல்நலத்தினை உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆனால் இந்தியாவிலோ அமினோசென்டிசிஸ் கருவின் பாலியலை உறுதி செய்யும் (Sex Determination) நோக்கத்திற்காகவே அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தி வந்த  மருத்துவ நிறுவனனங்கள், வெளிப்படையான விளம்பரங்களுடனேயே இதை செய்தன. இதற்கெதிரான சட்டமோ கட்டுப்பாடுகளோ இருந்திருக்கவில்லை. இந்த ஆய்வு நடத்துவதற்கு ஆகும் செலவு ரூ 500 என்ற நோக்கில் இம்மருத்துவ நிறுவனங்களின் விளம்பர வாசகங்கள் இவ்வாறு இருந்தன. "எதிர்காலத்தின் செலவு 50,000-ஐ  விட தற்போதைய செலவு 500 சிறந்தது" (“Better 500 now than 50,000 later”) அதாவது எதிர்காலத்தில் (பெண்ணின்) திருமணத்திற்கு ரூ 50000 செலவு செய்வதைக் காட்டிலும் தற்போது ரூ 500 செலவில் அமினோசென்டிசிஸ் ஆய்வை செய்து, பெண்குழந்தையாக இருப்பின் அதைக் கலைத்து செலவை மிச்சப்படுத்துங்கள் என்றன அவ்விளம்பர வாசகங்கள். இவ்வாறு ஒரு சிசு நோய்க்குறியீட்டுடன் இருந்தால் அதைக் கலைத்து விடுவது நல்லது என்பதைப் போலவே சிசு பெண்ணாக இருப்பதால் கலைத்துவிடலாம் தவறில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது.

அதனால்  இந்தியாவில்,  பெண்  சிசுக்கொலைகள்  அதாவது  கருக்கலைப்புகள் அரசு  மருத்துவமனைகளில்  வெளிப்படையாகவே  நடைபெற்றது.  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிய  உதவியதுடன்,  பெண்குழந்தையாக  இருப்பின்  அதைக்  கலைக்கவும்  செய்தார்கள்.  மேலும்  இந்தியாவில்  மிகப்பெரும்  மருத்துவ  நிறுவனமான  அகில  இந்திய  மருத்துவக்  கழகம்  (AIIMS)  இதில்  முன்னணியில்  இருந்தது.  இதன்  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  சோதனைகளை  அதிகப்படுத்துவதன்  மூலம்  மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்த  முடியும்  என்ற  கருத்தைப்  பரப்பினார்கள்.  இதையே  இன்னும்  கொஞ்சம்  தெளிவாகச்  சொன்னால்  மக்கள்  தொகைக்  கட்டுப்பாடு  என்ற  பெயரில்  பெண்சிசுக்களைக்  கலைத்தனர்.  பாலினத்தேர்வு  (sex determintion) பற்றி 1970  களின்  பின்பகுதியில்தான் இந்தியப்  பெண்ணியவாதிகள்    எதிர்ப்புக்குரல்  எழுப்பத்  தொடங்கினர்.  ஆனால்  அதற்கு  முன்னதாகவே  பெருமளவிலான  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இதன்  மூலமாக  பெண்குழந்தைகள்  பிறப்பானது  குறைக்கப்பட்டிருந்தது.  அகில்  இந்திய  மருத்துவக்  கழகத்தில்  மட்டும்  ஏறக்குறைய  100000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இந்தியர்களின்  வரிப்பணமும்  மேற்குலகின்  பணமும்  இதற்கு  உதவின.

1978 - இல் ஒரு நிகழ்வு, டெல்லியிலுள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையிலுள்ள மகப்பேறு தளத்திற்கு ஒரு மருத்துவ மாணவர் செல்கிறார்.
தன் வாயில் உள்ளங்கை அளவிலான ஒரு சதைத் துண்டைக் கவ்வியவாறு பூனையொன்று, அவரைக்  கடந்து செல்கிறது, ஆரம்பத்தில் பூனையின் வாயிலிருப்பது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் பின்பு அவர்  அறுவைசிகிச்சைக்கான கருவிகள் வைக்கப் பயன்படும் தட்டில் சிதைக்கப்பட்ட சிசுவும் இரத்தத்துடன் வைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறார் பின்பு புரிந்து கொண்டு அதிர்ச்சியுடன் அங்கிருந்த செவிலியரிடம் அதை ஏன் முறையாக அடக்கம் செய்யவில்லை என்று கேட்கிறார். அதற்கு அவர் அது பெண்சிசு என்று பதிலளித்தாராம். பெண்சிசுக்கள் கலைக்கப்படுவது மிகவும் இயல்பாகவும் சாதாரண நிகழ்வாகவும் இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

மேலும்  மேற்கு  செய்த  அடுத்த  கொடுமை  வறுமை  சூழ்ந்த  பகுதிகளில்  வாழும்  ஏழைகளுக்கு  பணம்  வழங்கப்பட்டு  குடும்பக்கட்டுப்பாடு  செய்தது.  இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலத்தில் மட்டும்கட்டாய  குடும்பக்  கட்டுப்பாட்டு  அறுவை  சிகிச்சைகள்  ஒருவருடத்தில்  மட்டும்  அரசாங்கத்தால்  ஏறக்குறைய  6  மில்லியன்  ஏழை  இந்தியர்களுக்கு  நடத்தி  முடித்தது.  இது  நாஜிக்கள்  யூதர்களுக்கு  நிகழ்த்தியதை  விட  15  மடங்கு  அதிகமாகும்.


இக்காலங்களிலெல்லாம்  பெண்கள்  பிறப்பு  விகிதம்  தொடர்ந்து  குறைந்து  கொண்டேயிருந்தது.  1970  களின்  இறுதியிலிருந்து  மருத்துவ  மனைகளும்  (clinic)  கருவின்  பாலினச்  சோதனையை  நடத்துவதை  விளம்பரமாகவே  செய்யத்  தொடங்கின.  பஞ்சாப்பிலிருந்து  இது  டெல்லி  ஹரியானா  போன்ற  மாநிலங்களுக்கும்  பரவியது.  1978  லிருந்து  1983  வரையிலான  காலப்பகுதியில்  மட்டும்  78000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டன.  கருவை  அறியும்  சோதனைகளின்  மூலமாகவே  பெண்குழந்தைகளின்  விகிதம்  மோசமான  அளவுக்குக்  குறைந்து  போனது.


இவை  மட்டுமல்ல,  1960  களின்  இறுதியிலும்,  1970  களின்  தொடக்கங்களிலும்,  செல்வாக்கும்  மிக்க  அமெரிக்க  நிபுணர்கள்  கல்வியில்  இதைத்  திணிக்க,  அரசாங்கத்தால்  நிகழ்த்தப்படும்  கருத்தரங்களிலும்  கலந்து  கொண்டு இதை  வலியுறுத்தினார்கள்.  1969  இல்  பாலினத்  தேர்வு  என்பதை  உலகிற்கான  முக்கியமான  திட்டமாக  அமெரிக்க  அரசாங்கத்தால்  அறிவிக்கப்பட்டது. இதன்  முக்கியமான  அம்சம்  பிறப்பு  விகிதத்தைக்  கட்டுப்படுத்துவது.

பாலியல்  சமநிலையின்மையினால்  ஏற்படும்  சமூக  சீரழிவுகள்  :

ஆணாதிக்க  உலகில்  இயல்பாகவே  இருக்கும்  குடும்ப  வன்முறை,  சமூக  வன்முறை, குடும்பப் பெருமை சீர்குலைவு போன்றவற்றை எதிர்கொண்ட பெண்களும் தாம் பெண்குழந்தை பெறுவதைவிரும்பவில்லை.  அமெரிக்க  வாழ்  ஆசிய  சமூகத்தைச்  சார்ந்த  பெண்களிடம்  இது  அதிகமாக  இருக்கிறது. ஆசிய நாடுகளில் பெண் சிசுவைக் கலைக்க விரும்பும் பெண்கள் எழைகளல்ல, மாறாக மெத்தப்படித்தவர்களான மேட்டுகுடி வர்க்கத்தினராவர். நவீன பொருட்களை விரைவாகவும் எளிதாகவும் நுகரும் திறனுள்ள வசதியான பெண்களே பெண் சிசுக் கலைப்பை அதிகமாக செய்கிறார்கள். 





இது   போன்ற   பிறப்பு   விகிதக்   குறைபாட்டினால்   பெண்களின்  எண்ணிக்கை  கணிசமாகக்   குறைந்து   விட துணை   கிடைக்காத   ஆண்களின்   எண்ணிக்கை   அதிகரிக்கிறது.   தென்கொரியாவில்   2008   இல்   நடந்த   திருமணங்களில்   11%   ஆண்கள்   வெளிநாட்டிலிருந்தே   மணப்பெண்ணையே   தேர்ந்தெடுத்துள்ளனர்   என்பதே   இதற்கு உதாரணம்.   மேலும்   சமூக   வன்முறையும்   பெண்துணை   கிடைக்காத   ஆண்களால்   அதிகரிக்கிறது.   இன்னும்   கவலைக்குரியதாக   பெண்கள்   மீதான   வன்முறையை   இன்னும்   பல   மடங்குகளாக   அதிகரிக்கிறது.   இந்த ஆண் பெண் விகிதாச்சாரமானது வன்முறையில் பெரும்பங்கு வகிப்பதாக வாதிடுகிறார் மாரா. இதன் ஆதாரமாக அவர் சீனாவிலுள்ள மாகாணங்களில் எங்கெல்லாம் பாலின விகிதம் சமச்சீரின்றி உள்ளதோ அங்கெல்லாம் வன்முறை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். பெண்களின் விகிதம் குறைவாக இருப்பதால் திருமண நடப்பதே உறுதியில்லாத நிலமையில் உள்ள குறைவான வருவாயைக் கொண்டுள்ள ஆண்களால் வன்முறை அதிகரிக்கிறது என்கிறார். இதனால் வன்முறைக்குக் காரணமாக இருப்பது பாலின விகிதாச்சாரக் குறைவேயன்றி வருமானக் குறைவு மட்டும் அல்ல என்கிறார். 



தற்போது வளர்ந்த நாடுகளிலுள்ள ஆண்கள் ஏழை நாடுகளிருந்து பெண்களை திருமணம் செய்திருப்பது அதிகரித்திருக்கிறது. இதனால் வியட்நாமில் மணப்பெண்களை, பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகம் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பெண்களுக்கான கிராக்கி ஏற்பட்டு அவர்களின் மதிப்பு கூடி இருப்பது அவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. பெண்களின் தேவை காரணமாக அவர்கள் கடத்தப்படுவது, விற்கப்படுவது, கட்டாயத் திருமணம், வேறு நாடுகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது, விருப்பமில்லாத திருமணத்தை ஏற்றுக்கொள்வது, விபச்சாரத்தில் தள்ளப்படுவது, பாலியல் அடிமைகளாக சிக்கிக் கொள்வது என்று அவர்களின் தலையிலேயே விடிகிறது.


 மாரா  எழுதுகிறார்,  "ஆண்களால்  நிறைந்த  இவ்வுலகில்  தைவா
ன்  முதல்  தென்கொரியா  ஹரியானா  வரையிலும்  பெண்துணை  கிடைக்காத  ஆண்களால்  பெண்கள்   மீதான  வன்முறையை  அதிகரிக்கவே  செய்யும்.    பெண்கள்  சகோதர உறவுடைய  ஆண்களை  மணந்து  கொள்ளும்  கலாச்சார நிலை வரும். பாலின ஒடுக்குமுறை (ஆணாதிக்கம்) காரணமாக பெண்களின் விகிதம் குறைந்திருக்கிறது என்று அமர்த்தியா சென் கூறுவதை மறுக்கும் மாரா பெண்கள் உரிமையின்றி வாழும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் பெண் விகிதம் ஓரளவு சமமாக இருப்பதைக் காட்டுகிறார். உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தம்முடைய நோக்கம் கருக்கலைப்புக்கு எதிரான மதவாத, பழமைவாத அமைப்புகளின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது என்று தனது அரசியலை தெளிவுபடுத்தியிருந்தாலும் அதை முன்னெடுப்பதில் மாராவுக்கு சிக்கல் நிரம்பியிருக்கிறது. ஏனெனில் கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை என்ற நிலையில் கருக்கலைப்பைத் தடை செய்யக் கோரவும் முடியாது. கருக்கலைப்பை தடை செய்யக்கோரினால் அது பெண்ணியத்திற்கு பல ஆண்டுகள் போராடிப் பெற்ற பெண்ணுரிமையை  இழக்கும் வகையில் ஒரு பெருமிழப்பாகும். இதற்காக பெண்குழந்தைகள் கருவில் சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் இயலாது என்ற நிலையில் மாரா அல்ட்ரா சவுண்ட் ஆய்வின் போது கருவின் பாலினத்தை அறியும் ஆய்வைத் தடை செய்யவும், அதற்காக தண்டனை விதிப்பதை நடைமுறைப் படுத்துவதையும், பெண் சிசுவைக்  கலைக்க விரும்பும் பெண்களிடம் முறையான காரணத்தை அறியவும் அதிக சிரத்தை எடுக்கவும் மருத்துவர்கள் முன்வரவேண்டும் என்பதையும் மட்டுமே செய்ய வேண்டுமென பரிந்துரைக்கிறார்.

நன்றி Times of India


Progressive என்ற இணைய வானொலிக்கு மாரா விஸ்டெண்டால் நேர்காணல்:



Download As PDF
Bookmark and Share

Post Comment