கலாம் சிலையில் மதத்திணிப்பு

ராமேஸ்வரத்தை அடுத்த பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் 15  கோடி ரூபாய் செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதில் அவருக்குப் பக்கத்தில் பகவத் கீதையையும் சேர்த்து சிலையில் வடித்திருக்கிறார்கள். இதை விடக் கேவலம் உண்டா ? அவர் வீணை வாசிப்பார் அதனால் கையில் வீணை சரி. அவர் பகவத் கீதையில் இருந்து மேற்கோள் காட்டுவார் அதனால் கீதையை சிலையில் வடித்தது சரியா ? அவர் என்ன சாகும் வரை கீதையையா பிரச்சாரம் பண்ணினார் ? மாணவர்களிடம் கல்வி குறித்துதானே பேசினார். 

அவரைப் பற்றி நினைத்தால் என்ன நினைவுக்கு வருகிறது. குழந்தைகள், கல்வி, இந்தியா, வல்லரசு, போக்ரான் அணுகுண்டு இத்யாதிகள். இப்பேர்ப்பட்டவரின் சிலை அருகில் ஒரு மதத்தைச் சார்ந்த நூல் எதற்கு ? அறிவியலுக்கும் மத நூலுக்கும் என்ன தொடர்பு. அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் (ஓரளவிற்கு அனைவரும் ஏற்கக்கூடிய மதச்சார்பற்ற)திருக்குறள் கூட அங்கே வைத்திருக்கத் தேவையில்லை. இதற்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு. இந்த பகவத் கீதை எல்லா இந்துக்களின் புனித நூலும் அல்ல. இந்து மதத்திலிருக்கும் ஒரு புனித நூல். அது பைபிள் போன்றதோ, குரான் போன்றதோ அன்று. இந்து மதம் பன்மைத்தன்மை வாய்ந்தது இதுதான் இந்து மதம் இது இந்து மதம் இல்லை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பழக்கவழக்கங்களைக் கொண்டது. ஆனால் அதன் பன்மைத் தன்மையை மறுத்து இஸ்லாமிய, கிறித்தவ, பௌத்த மத பாணியில் கொண்டு சென்று இந்து மத ஆட்சியை அமைக்க முயல்பவர்கள் இந்துத்துவாவாதிகள். 
    
                                  

அவர் உயிருடன் இருக்கும் போது இந்துமத சாமியாரின் கீழ் அமர்ந்திருந்தது, கோல்வால்கர் சிலையில் வணக்கம் வைத்தது போன்றவை பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியாகியது. அதன் மூலம் இந்துமதவாதிகள் அவரை தங்களுடையவராகக் காட்டிக் கொண்டனர். குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகளை மறைத்து வேடம் போடவே பாஜக பிறப்பால் இஸ்லாமியரான அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அவரை பிரபலமும் ஆக்கியது. அவர் பெரும்பான்மையான இந்தியர்களால் போற்றுதலுக்கு உரியவரானார். அவரை மக்கள் பாஜவின் அடையாளமாகப் பார்க்கவில்லை. எந்த மதமும் சாராதவராகவே இருந்தார் மக்களின் பார்வையில், ஆனால் இந்த பகவத் கீதையை அவர் அருகில் வைத்தது மதத் திணிப்பாகவே கொள்ளப்படும். இறந்த பிறகும் ஒரு மனிதனுக்கு மதம் திணிக்கப்படுகிறது. 

இதைப் பலரும் கண்டித்தனர். பின்பு அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம் என்பவர் கலாம் சிலையருகில் குரானையும், பைபிளையும்(ஒரு முஸ்லிம் பைபிளையும் சேர்த்து எடுத்துக் கொள்வது உண்மையில் பாராட்டத்தக்கதே) வைத்தார். உடனே இந்து மக்கள் கட்சி என்ற முட்டாள் மதவெறிக்கட்சியினர் வந்து அவர் மீது புகார் கொடுத்தனர். இந்து மதம் இழிவு படுத்தப்பட்டது என்கின்றனர். இந்த முட்டாள்களுக்கு ஒரு முஸ்லிம் சிலைக்கு முன்னர் பகவத் கீதையை வைத்தது தவறாகப்படவில்லை. ஆனால் குரானையும் பைபிளையும் வைத்தது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது என்கிறார்கள். ஒரு மதச்சார்பற்றவர் சிலை என்றால் எந்த நூலையும் வைக்கக்கூடாது இல்லையென்றால் எல்லா நூலையும் வைக்க வேண்டும்தானே அதுதான் நியாயம். மதவெறியர்கள் ஆளும் நாட்டில் இது போன்ற சில்லரைப் பிரச்சனைகளை வைத்தும் கலவரம் செய்ய முடியும், மக்களைக் குழப்ப முடியும். மதவெறியைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கவும் முடியும். கொடுமை !

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் முஸ்லிம் தொப்பி அணிவது, தர்காவிற்குச் செல்வது, நோன்புக் கஞ்சி குடிப்பது, ரம்ஜான் பிரியாணியை அருந்துவது போன்றவை மதச்சார்பின்மையாகப் பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க ஒரு முஸ்லிமின் அருகில் பகவத் கீதையை வைப்பதை ஏன் மதச்சார்பின்மையாக, மத நல்லிணக்கமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி வருகிறது. இந்துக்கள் அவர்களாக விரும்பிச் செய்வது. அத்வானி முஸ்லிம் குல்லாவை மாட்டியிருக்கிறார். மோடியே முஸ்லிம்களுடன் கையை ஏந்தியவாறு நின்றிருக்கிறார். ஜெயலலிதா நின்றிருக்கிறார். இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். சரி மோடிக்கு சிலை வைக்கும்போதோ, அத்வானிக்கு சிலை வைக்கும்போதோ, வல்லபாய் படேலுக்குச் சிலை வைக்கும்போதோ பக்கத்தில் குரானை வைத்து விட்டு அது முஸ்லிம்களைப் போல அ அவர்கள் நடந்திருக்கிறார்கள், எனவே இப்படிச் சிலை வைப்பது மதச்சார்பின்மையின் அடையாளம் என்றால் அதை ஒத்துக் கொள்ள முடியுமா ? முடியாதல்லவா. மேலும் இப்போது நடப்பது இந்துத்துவா ஆட்சி என்பதாலும், ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி போன்றவற்றை வெறித்தனமாகத் திணிக்கும் அரசாக இருக்கும் காரணத்தாலும்தான் இதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜாதியத்தின் போலிப் பெருமை

கட்செவி அஞ்சலில் எனக்கு ஒரு படம் வந்திருந்தது. அதில் கவுண்டர்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் சொல்லியிருந்ததை திரைச்சொட்டு(screenshot) எடுத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் கருத்து அபத்தத்தின் உச்சம். அதை பரப்புகிறவர்கள் ஜாதிப்பிரியர்கள், ஜாதிவெறியர்கள், ஜாதிவிரும்பிகள், ஜாதித்துதிபாடிகள் மொத்தத்தில் ஜாதிகள். தங்களது ஜாதியை ஒருவர் பெருமையாகச் சொன்னால் எந்த ஜாதிக்குதான் இனிக்காது சொல்லுங்கள்.  இதுதான் எனக்கு வந்த புகைப்படச் செய்தி. இதில் ஏதாவது அடிப்படை உண்மை இருக்கிறதா ? இதைப் பரப்புகிறவர்கள் நோக்கம் என்ன ? இதில் இருப்பதை எப்படி நம்புகிறார்கள். இதை நம்புவது அவர்களின் நம்பிக்கைக்கே எதிரானது அன்றோ ? ஜாதி என்றாலே தன்னைச் சார்ந்த கூட்டத்தை மட்டுமே நம்மவர்கள், நம்ம சனம், நம்மாளுங்க என்றெல்லாம் குழுவாகச் சிந்திப்பது மட்டுமல்லாமல் பிற ஜாதிகளை கீழாகப் பார்ப்பதுதான் ஜாதியம். அவர்களில் சில ஜாதிகளை இழிவாக அடிமைகளைப் போல் நடத்துவதுதான் ஜாதியம்.

                               

கொங்கு பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தனிப்பெருமிதம் உண்டு. ஜாதிப் பெருமிதம்தான். கோவை மரியாதைக்குப் பெயர் பெற்றது என்ற பொய்யும் அப்படி வந்ததுதான். கோயம்பத்தூரில் சந்திப்பவர்களில் என் ஜாதியையும் குலத்தையும் கேட்காதவர்கள் குறைவு. அங்கே ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கூட ஜாதிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இளைஞர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எங்கோ பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்பம் போன்ற உயர்ந்த பணிகளில் இருப்பவர் முதல் தமது விவசாயத் தொழிலில் ஈடுபடுகிற இளைஞர்கள் வரை எல்லாரும் கவுண்டன், கொங்கு, இதுமாதிரியான பெயருடைய கட்செவி அஞ்சல்(வாட்ஸப்) குழுவில் இருப்பார்கள். மற்ற ஜாதியினரைக் இவர்களுக்குள் குறிப்பிட்டுப் பேசுகிற போது, அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதை விட அவர்களின் ஜாதிப் பெயரைத்தான் சொல்வார்கள். தேவர் சொன்னார், நாடார் கேட்டார், முதலியார் வரக் காணமே, செட்டியார் எங்கே இப்படியெல்லாம் சொல்வார்கள்.  கோவையைத் தாண்டிய பகுதிகளில் இவையெல்லாம் மிகவும் சாதாரணம். ஏன் கோவையைச் சொல்கிறேனென்றால் கோயம்பத்தூரை வைத்துத்தான் மரியாதையை அடையாளப்படுத்துகிறார்கள்.

கொங்கு பகுதி மட்டும்தான் திராவிடக் கட்சிகளின் ஆட்சியினால் இல்லாமல் உழைப்பால் உயர்ந்த பகுதியாம். அதாவது கவுண்டர்கள் கடுமையாக உழைத்ததால்தான் கொங்கு பகுதி முன்னேறியதாம். அங்கே இருக்கும் மற்ற ஜாதியினர் கூடத்தான் கடுமையாக உழைத்தார்கள். கவுண்டர்களின் தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்து அவர்களின் முன்னேற்றத்திற்குக் காரணமானவர்கள் கூட வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலிருந்தும், முன்னேறாத பகுதிகளிலிருந்து வந்தும் பலர் (திருப்பூர் போன்ற பகுதிகள்) கொங்கு பகுதியை தமது உழைப்பினால் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெருமையை மட்டும் ஒரு பிரிவினர் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கட்டும் வரியை இவர்களுக்கு இல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் ஒதுக்குவதால் இவர்கள் தனி மாநிலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஆண்டபரம்பரை தனிநாடு கேட்கவில்லை என்பதுதன் காரணம் தனி. அப்படி ஒரு தனிமாநிலம் ஜாதியின் பேரில் அமைந்தால் அது எத்தகு கொடுமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு கொங்கு இளைஞனின் குமுறல்
இவர்கள் மற்ற ஜாதிகளுக்கு இணக்கமானவர்களாம், ஒற்றுமையைப் பேணுகிறவர்களாம். அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இணக்கமும் பண்பானவர்களாயும் இருப்பவர்களாக ஜெயமோகன் போன்றவர்களும்   சொல்வார்கள். ஆமாம் ரொம்ப இணக்கமானவர்கள், கவுண்டர்களும் அவர்கள் வீட்டு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பெரியப்பா, தாத்தா வயது பெரியவர்களாக இருந்தாலும் பெயர் சொல்லியும் வாடா போடா என்றுதான் அழைப்பார்கள். தங்கள் தோட்டங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு கொட்டாங்கச்சி (அ) தேங்காத்தொட்டியில் தண்ணீர்/தேநீர் கொடுப்பார்கள். அதை எருமை மாடு கட்டப்படும் கட்டித்தாரையின் கூரையில் சொருகி வைத்திருப்பார்கள். இல்லையென்றால் இவர்கள் ஊற்றுவதை இரண்டு கைகளால் ஏந்தி வாயில் வைத்துக் கொண்டே தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் வாசலில்/கட்டாந்தரையில் உட்கார வைத்துத்தான் சோறு போடுவார்கள். அவர்கள் வீட்டில் சாவு நடந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் வந்து இழவு வீட்டுக்காரர்களின் காலில் விழுந்து எழவு கேட்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர் வீட்டில் எழவானால் அதற்கும் தாழ்த்தப் பட்டவர்களே சென்று துண்டை ஏந்தி அவர்கள் தருவதை வாங்க வேண்டும். புழங்கற ஜாதியில்லையென்றால் இதுதான் இன்றும் கொங்கில் நடந்து வருகின்றது. இவர்களின் வட்டார வழக்குதான் தமிழிலேயே சிறந்தது போலவும், மரியாதைக்குரியது என்றும் எல்லோரும் நம்புவது என்னவொரு முரண்நகை. ஏனுங்க என்று இனிமையாக விளித்ததால் மட்டுமே அவர்கள் பண்பாளர் என்று நம்பிவிடாதீர்கள். ஜாதி என்ற அடையாள நம்பிக்கைதானே இதையெல்லாம் நியாயப்படுத்துகிறது.

ஜாதிக்குப் புதுப்புது விளக்கங்கள் கொடுக்கப்படும் காலம் இது. ஜாதியை இனம் என்பது, இனக்குழு என்பது, ஜாதியே பண்பாடு என்பது, ஜாதியை இனமீட்பு என்பது முதல், ஜாதிக்குத் தனி மாநிலங்கள், தனி நாடுகள் கேட்கும் காலம் இது. அதனால்தான் ஜெயமோகனும் இப்படி அடித்து விடுகிறார். இதை அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். கவுண்டர்கள் மட்டும்தான் மற்ற ஜாதிக்கு இணக்கமானவர்களா ? மற்ற ஜாதியினர்கள் இணக்கமானவர்கள் இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், இதைக் கவுண்டர்களே நம்ப மாட்டார்கள். இணக்கமானவர்கள் என்றால், இவர்கள் பட்டியல் ஜாதியினர்க்கு இணக்கமானவர்களா ? அவர்களை சமமாக நடத்துவார்களா ? மனிதர்களாக மதிப்பவர்களா ? என்பதற்கு ஒரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இன்னொரு திரைச்சொட்டு பதில் சொல்லும். இதைக் கூறியவர் ஒரு கல்லூரி மாணவர். இதன் வாயிலாக ஒரு ஜாதியைக் குறித்து அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, பிற ஜாதியிடம் காட்டும் ஜெயமோகன் சொல்லும் அந்த "இணக்கம்" என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனக்கு வந்த ஒரு புகைப்படத்தையும், கிடைத்த ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளேன் இதைக் காண்பவர்கள் ஜாதியைக் குறித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். 

                               

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment