சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சீமானுக்கு ஒரு சலாம் - சீமான் பாராட்டப்பட வேண்டியவரே !


எனக்கு சீமானின் இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். நேர்மையானதும் கூட. இதை வைத்து சீமான் கைது செய்யப்படக் கூடும், பலவித அடக்கு முறைகளை எதிர்கொள்ளக் கூடும். கலைஞர் ஆட்சியில் மட்டுமே எல்லாரும் வீரம் பேசுகிறார்கள் ஜெவிடம் பம்மி விடுகிறார்கள் என்று பொதுவாக நம்புகிறோம். ஆனால் ஜெவின் ஆட்சி நடக்கும் போது இப்படி ஒரு தலைவரை வரவைத்து பேச வைத்திருப்பது துணிச்சலான செயலே.

அதே நேரம் யாசின் மாலிக் என்ற தாடி வைத்த முஸ்லிம் மனிதனைப் பார்த்தவுடன் இஸ்லாமோஃபோபியா விஸ்வரூபம் எடுத்துவிட்டதைப் பலரிடம் காண முடிகிறது. இது ஈழத்துக்கு எதிராக இந்தியாவைத் திருப்பி விடும் என்றும் அஞ்சுகிறார்கள். இதற்கு மேலும் இந்தியா ஈழத்துக்கு செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன ?

யாசின் மாலிக் ஒரு "தீவிரவாதியோ" தீவிரவாத இயக்கத் தலைவரோ கிடையாது. ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கம் மட்டுமே. அங்கு இருக்கும் ராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அரசியல் உரிமைக்காகவும் போராடுகிற இயக்கம் மட்டுமே. தமிழ்நாட்டில் கூட தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறிவித்துக் கொண்டு சிறு சிறு இயக்கங்கள் இயங்குகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை தேசிய வியாதிகள் நினைவூட்டிக் கொள்ளவும்.

யாசின் மாலிக்
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று பீதியைக் கிளப்பி, சீமானை குற்றவாளிக் கூண்டில் தள்ள முனைகிறவர்கள், சிங்கள ராணுவமே இந்திய இறையாண்மைய மதிப்பதில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளவும். அந்த சிங்கள ராணுவம் இந்திய இறையாண்மையை மதிக்காத போதும் அவர்களுக்கு இறையாண்மையுடைய இந்தியா பயிற்சி அளிக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். இறையாண்மையுடைய இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று சொல்லிக் கொண்டதையும் நினைவூட்டிக் கொள்ளவும். தற்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தேசபக்தர்கள் சிலிர்த்து எழுந்த போதும், சீனப் பிரதமர் இந்தியாவிற்கு மிகவும் சாதாரணமாகவே வந்து போகிறார்.

காஷ்மீருக்கு சீனா தனி விசா கொடுத்ததை எதிர்ப்பவர்கள், சீனாவின் எதிரியான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதையும் எதிர்க்க வேண்டும், வங்கதேசப் பிரிவினை பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது, திபெத் சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவுக்கு மட்டும்தான் இறையாண்மையா ? இல்லை இந்தியர் என்பதால் இந்த பாரபட்சமா ? அவரவர்க்கு அவரவர் இறையாண்மை. இதில் இந்தியர்கள் மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக மட்டும் நடக்கலாமா? அங்கெல்லாம் அடக்கு முறை நடக்கிறது என்பது பதிலென்றால் காஷ்மீரிலும் அதுதானே நடக்கிறது. மற்ற நாடுகளின் அடக்குமுறைகளை எதிர்ப்பேன், அதே அடக்குமுறை இந்தியாவில் நடந்தால் தேசப்பற்றின் பெயரால் ஆதரிப்பேன். இதுதான் இங்கே நிலைப்பாடு. 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கொலைகாரர்களால் டெல்லியில் வாழ்ந்த 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் சீக்கியர் அமைப்புகள் இலண்டனில் தமிழினப்படுகொலையைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம். சீக்கியர்களின் ஆதரவாவது தமிழர்கள் ஏற்கிறார்களா  இல்லை இந்திரா காந்தியைக் கொன்ற பிரிவினைவாத காலிஸ்தான் சீக்கிய பயங்கரவாதிகளின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்கிறீரா ?
இங்கு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், தேசப்பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு ஒருவர் தீவிரவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஈ காக்காவுக்குக் கூட துரோகம் செய்யாத கூடங்குளம் உதயகுமார் கூட கிறித்தவர் என்ற காரணத்தை வைத்து அவரைக் கொல்ல வேண்டும் என்று வெறியேறிப் பேசும் தேசபக்தர்கள் இருக்கிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள் யார் யாரென்றால் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இந்து மக்கள் கட்சியினர். இந்தியாவையே அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கும் இவர்கள் இந்திய இறையாண்மையைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. இந்து மக்கள் கட்சியின் கொள்கை தெரிந்ததுதான், அவர்கள் தனது கடமையைச் செய்கிறார்கள் அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன்.

எனக்கு என்ன கசப்பென்றால் இதை விமர்சிக்கும் ஈழ ஆதரவாளர்கள். ஈழத் தமிழர்கள் அடைய வேண்டிய உரிமைகளின் நியாயத்தை அறிந்த இவர்களுக்கு காஷ்மீர் அடைய வேண்டிய நியாயம் தெரியவில்லை. ஈழத் தமிழர் உரிமை பற்றிப் பேசும் போது புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களைப் பேசாத வாய்கள், காஷ்மீர் என்று வந்து விட்டால் அங்கிருந்து விரட்டப்பட்ட இந்து பண்டிட்களைப் பற்றிச் சொல்லி, தீவிரவாதப் பட்டம் கட்டி கொச்சைப்படுத்துகிறார்கள். இந்து- முஸ்லிம் நல்லிணக்கத்தின் இலக்கணமாய் விளங்கிய காஷ்மீர் நடக்கக் கூடாததெல்லாம் நடந்து இஸ்லாமியர்-பிரிவினைவாதம்-தீவிரவாதம் என்று செல்லரித்துப் போன காரணங்களைச் சொல்லி எதிர்க்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் உலகத்தின் மிக மோசமான தீவிரவாத இயக்கம் என்று உலகத்தால் வர்ணிக்கப்பட்ட புலிகளையும் ஆதரிக்கிறார்கள். அது எப்படி ஒருவர் ஈழத்தை ஆதரித்துக் கொண்டு காஷ்மீரை எதிர்க்க முடியும். நான் இரண்டும் ஒரே பிரச்சனை என்று சொல்லவில்லை. ஆனால் போர், நில ஆக்ரமிப்பு என்பதைத் தவிர இரு பக்க மக்களுமே ராணுவ அடக்கு முறைகளை நாளும் எதிர்கொள்கிறவர்கள்தானே. தமிழனுக்கு வந்தால் குருதி காஷ்மீரிக்கு வந்தால் தக்காளி சட்னியா ? ஏன் ஈழத்தமிழர்கள் தங்களை யூதர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளவில்லையா ?

தமிழ்நாட்டிலிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள், தமிழரல்லாத மற்ற இந்தியர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை எப்படிப் பார்ப்பார்கள். இங்கிருந்து போய் இன்னொருவனிடம் தனிநாடு கேட்டால் அவன் சும்மா இருப்பானா? ஈழத் தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதைக் கூடத் தெரியாத மண்டைகளுக்கு இதுதான் உண்மை என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் உயிரே போய்விடுகிறது. அதே போல் பொதுப் புத்தியில், காஷ்மீர் என்பது எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது  காஷ்மீர் இந்தியாவைச் சார்ந்தது, பாகிஸ்தான் துண்டாட நினைக்கிறது, காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதைத் தாண்டி உண்மை என்னவென்று அறிய எவரும் விரும்புவதில்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்று எதுகை மோனையாகப் பேசுமளவிற்கு வரலாறு திரிந்துள்ளது. உண்மையை விளக்கினால் தேசத் துரோகியாக்கி விடுகிறார்கள். அவர்கள் ஏன் நம்மைப் போல அமைதியாக வாழ்ந்து கிரிக்கெட்டை ரசிக்காமல் தெருவில் ராணுவத்திற்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள் என்று சிந்திப்பதே இல்லை.  


தமிழர்கள் இனப்படுகொலையை சந்தித்தவர்கள் சம உரிமை மறுக்கப்பட்டவர்கள், ஆனால் காஷ்மீரிகள் சிறப்பு அதிகாரமுடையவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு உரிமை காஷ்மீர்க்கு மட்டும் ஏன் இருக்கிறது என்று கேட்க வேண்டுமல்லவா ? அதில்தான் காஷ்மீர் ஏமாற்றப்பட்ட வரலாறே இருக்கிறது. பாகிஸ்தான் படைகள் நுழைந்த போது காஷ்மீரைக் காக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டது. இந்தியா ஆக்ரமிப்பு நோக்கத்துடன் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளப்படாது என்றும், அவர்கள் ஆளும் அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்றும் உறுதிமொழியுடன்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது.

காஷ்மீரிகள் ஜம்முவின் குடிகள், நாம் இந்தியக் குடிகள் என்பது போல

காஷ்மீருக்கு தனிக் கொடி உண்டு

தனி அரசமைப்புச் சட்டம் உண்டு
காஷ்மீர் கொடி
இப்படிப் பல உரிமைகள் 1957 இல் இந்திய அரசாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவையே. பல வருடங்கள் முடிந்த பின்னரும், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இழுத்தடித்தாலேயே அவர்கள் போராட வேண்டியதாயிற்று. மேலும் ராணுவம், துணை ராணுவம், ஊர்க்காவல் படை என ராணுவத்தின் மூஞ்சியிலேயே 20 வருடங்களுக்கும் மேலாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

பின்பு உரிமைகளின்றி அடக்குமுறையும், புறக்கணிப்பும் தொடர்ந்த பின்னரே விடுதலைப் போராட்டம் தொடங்கியது 1980களின் பிற்பகுதிகளில். ராணுவ நடவடிக்கைகள் காரணமாக 70000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வீதியில் சோதனைகள், கைதுகள், கடத்தல், காணாமல் போதல் என்ற ராணுவத்தின் கொடுமைகள் நாளும் நடக்கின்றன.

அமர்நாத் பனிலிங்கத்தை வணங்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்களே அந்தக் குகையைக் கண்டு பிடித்தவரே ஒரு முஸ்லிம். யாத்திரை செல்கிறவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகளைச் செய்கிறவர்களும் முஸ்லிம்களே. எனவே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி இருப்பவர்கள் ஏன் இந்தியாவை எதிர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாமா ? போராட்டம் நடக்கும் இடங்களில் அதை சிதைக்க இனவாதம், மதவாதம் தூண்டப்படுவது எல்லா அரசுகளும் செய்வதுதான். காஷ்மீரிலும் அதுதான் நடந்தது.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ராணுவத்தினர் மீது கல்லை விட்டு எறிகிறார்களே ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ? இராணுவத்தின் கண்காணிப்பில் வாழும் கொடுமையைப் புரிந்து கொள்ள வேண்டாமா ?

காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் பலவும் இந்நிலைதான் நிலவுகின்றன. மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒன்று போதும் இந்திய ராணுவத்தின் யோக்கியதைக்கு, ஈழத்திற்கு இசைப்பிரியா என்றால், மணிப்பூரில் மனோரமா தேவி, காஷ்மீரில் நிலோஃபர் ஜான் என எல்லா இடத்திலும் ஒரே வகையான வன்முறைகள்.

ஐரோம் ஷர்மிளா ஏன் 12 வருடங்களாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் ? என்றெல்லாம் யோசிக்காமல் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் என்று ஒரே அடியில் கொச்சைப் படுத்துகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ?

இந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே அவர் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரானவர், கமல் ஹாசன் என்ற தனது பெயர் தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் (இந்துவா அல்லது முஸ்லிமா) என்ற குழப்பத்தை மற்றவர்க்க்கு ஏற்படுத்துவதை பெருமையாகக் கருதிகிறவர். ஷாருக் கான் தனது இஸ்லாமியப் பெயரால் அமெரிக்க விமானத்துறை அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனது பெயரை அரபி ஒலியுடன் இருக்குமாறு மாற்றிக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு மனிதாபிமானமுடையவர் தனது விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவினால் ஆக்ரமிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவைக் காக்கும் இந்தியனாக நடித்தார் என்பது எத்தகைய முரண்நகை. அப்படித்தான் இருக்கிறது சிலருடைய கருத்து. நான் இந்தியன் எனவே இந்தியா என்ன செய்தாலும் அது தவறில்லை நான் தேசபக்தியின் காரண்மாக ஆதரிப்பேன். நான் தமிழன் எனவே புலிகள் என்ன செய்தாலும் ஆதரிப்பேன் என்ற கொள்கையெல்லாம் எனக்கில்லை.

அது போலவே ஈழத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு இரங்குகிறவர்கள், யாசின் மாலிக்கின் வருகையை எதிர்ப்பது எந்த வகையில் சேர்த்தி ? இவருக்காக ஆதரவு தரும் முஸ்லிம்களைக் கண்டு இவர்கள் முகம் சுளிக்கிறார்கள். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாத, பிரிவினைவாத, இறையாண்மைக்கு எதிரானவர்களை ஆதரிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஈழத் தமிழர் துன்பம் பற்றிப் பேசினால் புலி பயங்கரவாதம் பற்றிப் பேசும் சோ வைப் போலவே நடந்து கொள்கிறார்கள். காஷ்மீரிகள் துன்பம் என்பது மற்ந்து பிரிவினைவாதம் மட்டுமே முன் தெரிகிறது.
 

புலிகளை நாம் ஆதரிப்பதை மற்ற மாநிலத்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமர் ராஜீவைக் கொன்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் தமிழர்கள்  என்றுதானே நினைப்பார்கள்.

யாசின் மாலிக்கை அழைத்து வருவது இந்தியாவை ஈழத்துக்கு எதிராகத் திருப்பாதா ? இப்போது இந்தியா ஈழத்தை எப்படிப்பார்க்கிறது ? இந்தியாவின் இறையாண்மை மேல் மதிப்புடையவர்கள் ஈழம் பற்றியே பேசக் கூடாது என்றுதான் இந்தியா சொல்கிறது, கருணாநிதி டெசோ மாநாடு அறிவித்தவுடன் சிதம்பரம் ஓடி வந்து ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்றும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் சொல்லவில்லையா ? ஈழ அகதிகள் தமிழகத்தில் எப்படி நடத்தப் படுகின்றனர் ?

5 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சீமான் போர் நிறுத்தம் கோரி, தமிழ்த் திரை இயக்குநர்கள் கலந்து கொண்ட பட்டினி போராட்டத்தில் உரையாற்றினார். அவரது உரை பரந்த வரவேற்பைப் பெற்றது. அவரது கருத்துக்களை காங்கிரஸ், பாஜகவினர் பலரும் எதிர்த்தனர். அதற்குப் பின்பு அவர் பல முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றார். பலரது ஆதரவையும் பெற்றார். ஈழ ஆதரவுப் போராட்டங்களினாலேயே அவர் பலருக்கும் பிடித்தவரானார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது பலத்த விமர்சனத்துக்குள்ளானார். பின்பு திமுகவை மட்டுமே எதிர்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்ட போது இந்திய இறையாண்மையைக் காக்க செயல் படுவோம் என்ற வரிகளுக்கும், திராவிட எதிர்ப்புக்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். இஸ்லாமியர்களையும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். பின்னும் ஜாதிக் கூட்டங்கள்லெல்லாம் கலந்து கொண்டார். இனவெறியனாக நடந்து கொண்டார்.
அதற்கெல்லாம் பதிலாக இது அமைந்துள்ளது இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் ஒரு நேர்மையான செயலைச் செய்திருக்கிறார். இதற்கு தனக்கு பலத்த எதிர்ப்பு வரும், சிறை செல்லவும் நேரிடும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்.

வழக்கமாக ஈழத் தமிழர்க்காக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பார்கள், இங்கு காஷ்மீரிலிருந்து முஸ்லிம்கள் தலைவர் ஒருவர் ஆதரவு சொல்கிறார். இவர்கள் பிரிவினைவாதியின் ஆதரவு தேவையில்லை என்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசிய இந்தியாவின் ஆதரவும், போருக்கு பணம் வழங்கிய மேற்கு நாடுகளின் ஆதரவும் மட்டுமே வேண்டும் என்கிறார்கள். 

இந்தியத் தலைவர்கள் இறையாண்மையுள்ள நாட்டில் தலையிட முடியாது என்கிறார்கள் ஆனால் காஷ்மீரின் இறையாண்மையில் மட்டும் தலையிடுகிறார்கள். காஷ்மீரிகள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளாலும் ஆக்ரமிக்கப்பட்டவர்கள். 5 இலட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் காஷ்மீரைக் காவல் காத்து வருகின்றனர். இதை வைத்து காஷ்மீர் மக்களை போலி என்கவுன்டரில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் செய்ய பல நூறு கோடிகள் செலவிடப் படுகின்றன. அதே நேரம் அடிப்படை உரிமைகள் வாழ்வாதாரம், வேலை என அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து அவர்கள் போராடினால் அது தேசபக்தர்களுக்கு பொறுக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

வெளியே வந்த பூனை - நாம் தமிழர் கட்சியினரின் அடுத்த இலக்கு கீற்று


 தமிழர்களின் முதன்மை எதிரியான திராவிடத்தை எதிர்க்கும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் நாம் தமிழர் கட்சிக்காரர்கள், அந்தக் கருத்துப்புரட்சியின் முதல் இலக்காகக் கீற்று இணையத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அது கீற்று இணையத்தின் தற்போதைய முகப்பின் "screen shot" ஆகும். அதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்வினையாக பெரியாரியவாதிகளால் வெளியிடப்பட்ட எதிர்ப்புக்கட்டுரைகளாகும். இதை வைத்து தமிழர்க்கு எதிரான திராவிடத்திற்கு கடை விரிக்கிறது கீற்று தளம் என்று சொல்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் வலுவாக இருக்கக் கண்டு அதற்கு பதில் சொல்லாமல் அவதூறு மழையைப் பொழியத் தொடங்கியுள்ளனர்.

கீற்று இணையத்தைப் பற்றி எல்லோர்க்கும் தெரிந்ததுதான். இவர்கள் ரமேசை தெலுங்கர் என்று வசை பாடுகிறார்கள். இதற்குமுன் இவர்கள் கீற்றுவைப் பார்த்ததே இல்லையா என்று தெரியவில்லை. கீற்றுவைப் போல மாற்று அரசியல் கருத்துக்கள் புழங்கிய இணையம் வேறு உண்டா எனத் தெரியவில்லை. மார்க்சிய வாதிகள், பெரியாரியவாதிகள், தமிழ்தேசியவாதிகள், தலித்தியம், இசுலாமியர் எனப் பலவையினரும் தமது கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். அங்கு அதிகமாக வெளியானதே தமிழ் சார்ந்த, தமிழீழம், மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்டுரைகள்தான். கீற்று ரமேசே விடுதலை புலிகளின் ஆதரவாளர்தான், இதனால்தான் தமிழ்தேசியவாதிகள் எழுதிய பல அபத்தமான கட்டுரைகள்,  விடுதலைப் புலிகளை மிகைப்படுத்திப் பேசும் கட்டுரைகள் போன்றவைதான் அங்கே அதிகமாக உலவுகின்றன.

போதாக்குறைக்கு தமிழ்த்தேசியவாதிகள் புகழும் யூத இன எழுச்சி என்ற பெயரில் இசுரேல் ஆதரவுக் கட்டுரைகள் கூட சில அதில் உண்டு. இதைத் தமிழ் இன உணர்வின் பெயரால் கீற்று வெளியிட்டிருந்தது. இதெல்லாமே ஏற்றுக் கொள்ளமுடியாதைவையாகும். என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் இசுரேலை ஆதரிக்கவெல்லாம் நடுநிலையாளர்களால் முடியாது. ஈழ ஆதரவாளார்களினால் ஈழத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக  யூதர்களைப் புகழ்ந்து அவர்களைப் போல ஈழத்தமிழரும் எழுச்சி பெறல் வேண்டும் என்ற நோக்கில் இசுரேல் என்ற மனிதகுலப் பகைவரான ஒரு நாட்டைப் புகழும் கட்டுரை கூட வெளியிடப்பட்டதாக நினைவு. இதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இதில் புலி எதிர்ப்பு என்றும் ஒரு பகுதியும் உள்ளது. ஆனாலும் மற்ற புலி எதிர்ப்பாளர்களின், தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் இணையத்தளங்களில் வெளியிடப்படுவது போன்று கடுமையான விமர்சனங்கள் அதில் இல்லை. நானே ஒரிரு முறை ஐயமுற்றேன் கீற்று இணையத்தில் வெறும் தமிழ்தேசியக் கட்டுரைகளே வெளிவருகின்றன என்று. அதில் சீமானைப் புகழும் கட்டுரைகள் கூட இடம் பெற்றிருந்தன. அப்போதெல்லாம் அவர் தெலுங்கராகத் தெரியவில்லை. ஈழ ஆதரவு, புலி ஆதரவுக் கட்டுரைகள் கீற்று இணையம் அளவுக்கு வந்திருக்குமா வேறு எங்காவது என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.

சீமானும் ஜெயாவுக்கு ஆதரவாக மாறியதிலிருந்து சீமானையோ நாம் தமிழர் கட்சியையோ குறிப்பிட்டு விமர்சித்து பெரிய அளவில் கட்டுரைகளோ யாரும் கீற்றுவில் எழுதியிருக்க வில்லை. தற்போது கட்சியின் ஆவணம் வெளியிடப்பட்ட பின்புதான் அதற்கெதிரான எதிர்கட்டுரைகள் வரத் தொடங்கின. முதலில் மணிசெந்தில் மட்டும் ஒரு எதிர்கட்டுரை வெளியிட்டார். அதற்குப் பின்பு சீமானின் தமிழக அரசியல் இதழில் பேட்டி கொடுத்ததை மறுத்தார். நாங்கள் பெரியாருக்கு எதிரி இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து தூய தமிழ் தேசியம் பேசி கோவை பெரியார்திக தலைவர் தெலுங்கர் என்று சொல்லும் அளவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் யாழ்ப்பாண வேளாள ஜாதி ஆதிக்கம் நிரம்பிய ஈழத்துத் தமிழ்த்தேசியவாதிகளை நினைவூட்டுகிறார்கள். வாழ்க தமிழ் தேசியம்.

எதிர்வினைக்கு பதில் சொல்வதற்கு இயலாமல் கீற்று ரமேசை தெலுங்கர் என்றும், ப்ரியாதம்பியை மலையாளி என்றும் வசைபாடுவது கண்டனத்திற்குரியதாகும்.
 

Download As PDF
Bookmark and Share

Post Comment

தமிழ்த்தேசியத்திடமிருந்து பிரிக்க முடியாத இந்திய இறையாண்மை !!

திராவிட எதிர்ப்புக்கு மறுப்பு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர் என்றாலே பலருக்குப் பிடிப்பதில்லை என்கிற பாணியில் புலம்பலும், காழ்ப்பும் நிரம்பிய வகையில் பதிலடி வருகிறது. தமிழுணர்வை திராவிட வெறியர்கள் எதிர்த்து நிற்பதைப் போல காட்டுகிறார்கள். பெரியாரியத்தை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள், ஜாதிவெறியர்கள் எதிர்க்கிறார்கள், மதவாதிகள் எதிர்க்கிறார்கள் அந்தோ மறத்தமிழர்களும் எதிர்க்கிறார்கள்.

தற்போது நாம் தமிழர் இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட கட்சி செயல்திட்டத்தில் இந்திய இறையாண்மையை காக்க வேண்டும் என்ற உறுதிமொழி வெளியிடப்பட்டத்தைத் தொடர்ந்து அக்கட்சியின் மீது பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போலவே நாம் தமிழர் கட்சியும் திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, பின்பு திராவிட எதிர்ப்பு இறுதியாக வேறு வழியின்றி பெரியார் எதிர்ப்புடன் முடித்து பெரியார் தமிழினத் துரோகி என்ற முழக்கத்தின்படியே தமது திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதில் பார்ப்பனியம் என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பனர் என்ற சொல்லுக்கு ஆய்வாளர் என்று புதிய அருஞ்சொற்பொருளும் தரப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆரியம், பார்ப்பனீயம் என்ற வடமொழிச் சொற்களுக்கு மாறாக மனுவியம் என்பதைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது நாம் தமிழர் இயக்கம். செய்திகளை வெளியிட்ட பின்பு முன்னுக்குப் பின் முரணாகத் தற்போது சீமான் தமிழக அரசியல் இதழுக்கு பேட்டி வழங்கவேயில்லை என்று மறுத்திருக்கிறார்.

தமிழர் விடுதலைக்காக போராடக் கிளம்பிய கட்சியினர் ஏன் இந்திய இறையாண்மையக் காப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இந்திய இறையாண்மையைக் காப்பதற்குத்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பொதுவாக ஈழத்தமிழர் விடுதலை தனித் தமிழ்நாடு என்றாலே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று போட்டுக் கொடுக்க தினமலர், பேராயக் கட்சி என்று பலர் இருக்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டிலிருக்கும் எந்தத் தமிழ்தேசியக் கட்சியும் இந்திய இறையாண்மையைக்காப்பதாகக் கூறவில்லையே என்று எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். நாம் தமிழர் இயக்கத் தமிழர் சீமானை மேடையேற்றி அவரை அறிமுகப்படுத்திய பெரியார் திகவினர். ஈழப்போரின் போது தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டது. இவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தனர். இப்போது பெரியார் ஈழத்தந்தை செல்வாவுக்ககு ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கைவிரித்ததை வைத்து திராவிடத்தால் ஏதும் முடியாது ஏய்த்துவிட்டதாக என்று சொல்கின்றனர். சுவாரசியமாக இவர்கள் சிங்களத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். பேசாமல் பார்ப்பனியத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் சிங்கள இனவாதிகள் தம்மை ஆரியர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள்.

கேட்டுக் கேட்டு சலித்துபோன பழைய வாதங்களே மீண்டும் கேரளாவிலோ ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எவனும் திராவிடன் என்று சொல்வதில்லை என்று, இதற்கென்ன சொல்வது, பெரியார் அன்றே சொல்லி விட்டார் இவர்களுக்கு எந்த சுயமரியாதையும் இல்லை என்று, இவர்களெல்லாம் பார்ப்பனியத்திற்கு அடிமையானவர்கள் என்று. அவர்கள் திராவிடன் என ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பார்ப்பனியத்திற்கு அடிமையான அவர்கள் தயாரில்லை. ஏன் 60 வருடங்களாக போராடியே தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஒத்துக் கொண்டார்கள், அங்கே விழிப்புணர்ச்சி ஊட்ட யாரும் பெரியார்போலப் பிறக்க வில்லை. கன்னடராக இருந்தாலும் தமிழர்களுக்குப் போராடியதால்தான் பெரியார் இன்னும் பெரியாராகிறார்.

தற்போதுள்ள தமிழ்தேசிய வாதிகள் வைக்கும் எந்த வாதமும் மராட்டிய இனவெறியன், இந்துத்துவாவாதி பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோரின் இனவாத வன்முறை அரசியலுக்கும் எந்தளவும் மாறியதில்லை, கூடவே வாட்டாள் நாகராஜ் என்ற தலைவரும்தான். தமிழ்நாட்டிலுள்ள பிற மொழியினர் மீதான் வெறுப்புணர்வை வளர்ப்பது, வந்தேறிகள் வாழ்கிறார்கள் தமிழர்கள் வீழ்கிறார்கள் என்பது, இவர்களின் அரசியலுக்கு அவ்வப்போது ஈழத்தமிழர்களை இழுத்து பச்சாதாபம் தேடிக்கொள்வது என்று தொடர்கிறார்கள். தமிழ்தேசியவாதிகளில் பல வகையினர்  இருக்கிறார்கள். சமனியவாதிகள்(சோஷலிஷ்டுகள்) தொடங்கி இனவாதிகள், மத அடிப்படைவாதிகள் வரை. இவர்களுக்குள் பல வேறுபாடுகள், இவர்களுக்குள் எந்த கருத்து மோதல்களும் காணோம். உதாரணத்துக்கு ஒன்று. பொதுவில் (தமிழக) தமிழ்தேசியம் இந்தியாவை ஒத்துக் கொள்ளாது. அதன் கொள்கை தனித் தமிழ்நாடு, தனி ஈழம். அதே ஈழத் தமிழ்தேசியம் இத்தனை பட்ட பின்பும் இந்தியாவை தந்தை நாடு என்கிறது, தமிழீழம் அமைவது ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதை விட இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று இந்தியாவின் காலைச் சுற்றி வருகிறது. இதெல்லாம் ஏன் பேசப்படுபொருளாகவில்லை ? பெரியாரியமல்லாத தமிழ்தேசியம் என்ன கொள்கையை வைத்திருக்கும் என்பதற்கு ஈழத்தமிழ்த்தேசியமே உதாரணம். இலைங்கையிலிருந்தாலும் தமிழ்தேசியம் கடல் தாண்டி பார்ப்பன இந்தியாவின் காலில் விழும்.

சீமான்

சீமான் வெறும் உணர்ச்சிவயப்படும் மனிதராகத்தான் இருந்தார். தமிழுணர்வாளர்கள் அனைவராலும் கருணாநிதி வெறுக்கப்படக் காரணமாக இருந்தது, ஈழபோர்தான். ஆனால் ஈழப்போரின்போது நடந்த தேர்தலில் திமுக விற்கு எதிராகவும், அதிமுகவிற்கு ஆதரவாகவும் இருந்த சீமான், தேர்தல் முடிந்தவுடன் ஏதோ ஒரு வார இதழுக்கு வழங்கிய பேட்டியில் இப்படிக் கூறியிருந்தார். நம்மை எதிரி சுற்றி வளைத்துவிட்டால் கையில் கிடைப்பதை நாம் ஆயுதமாகப் பயன்படுத்துவதுபோலத்தான் நாங்கள் அதிமுகவை ஆதரித்தோம், ஆனால் கலைஞர்தான் தலைவர் என்பதில் மாற்றமில்லை, இப்போதும் என் அலுவலகத்தில் திமுக கொடியைக் காணலாம் என்றார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேசினார். அப்படியே அம்மா ஆதரவாளராக மாறிவிட்டார்.

10 வருடங்கள் இருக்கலாம் நானும் என்னுடைய நண்பனும் ஈரோட்டில் பெரியார் வாழ்க்கையைப் பற்றி ஒரு படம் திரையிட இருந்தார்கள். அந்தத் திரைப்படம் ஞாநி இயக்கியதாகும். அந்தத் திரைப்படம் தொடங்கும் முன் சீமானின் உரையைக் காண நேர்ந்தது. அதில் பார்ப்பனிய, தீண்டாமை எதிர்ப்பு, பகுத்தறிவு தன்மான சீமான்தான் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வாசகம் இன்னும் நினைவிலிருக்கிறது. நண்பர்களே !! ஒரு சினிமாக்காரன் வந்து இங்கு பகுத்தறிவு பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். சினிமா என்பது எனது தொழில். இங்கே நான் உங்களில் ஒருவனாக உணர்வுடன் வந்திருக்கிறேன். எனக்கு சினிமாத் தொழில் இல்லையென்றால் கள்ளச் சாராயம் காய்ச்சுவேன். (தொழில் கொண்டு பார்க்க வேண்டாம் உணர்வு கொண்டு பார்க்கவும்) என்று சொன்னார். கூட்டத்தில் கைதட்டல் அதிகமாக இருந்தது. இதற்கும் அவர் இப்போது நடந்து கொள்வதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

இதே போலத்தான் ஒருமுறை தமிழீழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை ஆதரிப்போம் ஆனால் காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம் என்றார். பிரபாகரன் படம்போட்ட சட்டையுடன் போய் பசும்பொன்தேவரின் விழாவில் கலந்து கொண்டு ஏன் தேவரைப் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்றார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தார் என்றார். மற்ற திராவிட எதிர்ப்பாளர்களின் கேட்டுக் கேட்டுக் சலித்துப் போனதையே இவரும் பேசுகிறார்.

திராவிட எதிர்ப்பு

திராவிட எதிர்ப்பு என்றாலே கருணாநிதியை விமர்சிக்க வேண்டியது கருணாந்தி, திமுகவின் தவறையெல்லாம் திராவிடத்தின் தவறாகவும் பெரியாரே மூலகாரணம் என்பதைப் போல பேச வேண்டியது இறுதியில் பெரியார் எதிர்ப்பில் முடிக்க வேண்டியது. திராவிடத்தால்தான் தமிழன் வீழ்ந்தான் என பிதற்ற வேண்டியது.

ஃபேஸ்புக்கில் கருணாநிதியின் பெயர் தட்சிணாமூர்த்தி, அவர் ஒரு தெலுங்கு வந்தேறி தமிழின் வெறுப்பாளர் என்ற ரீதியிலெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பகுத்தறிவு கருணாநிதி மஞ்சத் துண்டு அணிவது இந்து மதப் பண்டிகைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது பற்றியெல்லாம் எல்லோரும் கருணாநிதியைக் குதறி எடுப்பவர்கள், ஒரு கன்னடப் பார்ப்பனர் எப்படி திராவிடக் கட்சியில் தலைவராக இருக்கலாம் என்று ஒருவரும்  கேட்பதேயில்லை. அதுதான் தமிழக நாளிதழ்கள் தமிழர்களின் மண்டையில் திணித்திருக்கும் கருத்தின் தன்மை. முன்னாள் இன்னாள் பேராயக் கட்சியினர் என அனைவரும் தினமணியில் எழுதுவார்கள் என்ன பிரச்சனையென்றாலும் அதிலே நாலுவரியாவது கருணாநிதிதான் இதற்கெல்லாம் காரணம் என்ற பெயரில் எழுதுவார்கள், அப்படியே சந்தடி சாக்கில் திராவிடக் கட்சிகள் என்று பன்மையில் எழுதிவிட்டு திராவிடக்கட்சிகள் என்றாலே கருணாநிதி என்ற பெயர் வரும்படி பார்த்துக் கொள்வார்கள். இதில் கருணாநிதியை மட்டுமே கொள்கை ரீதியில் விமர்சிப்பார்கள், ஜெயலலிதாவை அப்படி விமர்சிக்க மாட்டார்கள் வெறும் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல் என பொதுவில் மட்டுமே விமர்சிப்பார்கள்.

தினமணி, தினமலர் ஞாநி என அனைவரும் இவ்வகையினரே. இம்மாதிரியானவர்கள் திராவிடக் கட்சிகளை அதிகம் திறனாய்வு (விமர்சனம்) செய்வார்கள், அதே நேரம் அதிமுகவின் பழ.கருப்பையா தினமணியில் எழுதுவார், அவர் இதுவரையில் எழுதியது கருணாநிதி எதிர்ப்புதான் அதேபோல் கருணாநிதியை வைத்து கொள்கையையும் நடத்தையையும் ஒப்பிட்டு எழுதுவார். ஆனால் தான் சார்ந்திருக்கும் திராவிடக் கட்சியைப் பற்றி நெல்லை கண்ணன், பழ. நெடுமாறன் இன்னும் பலர் எழுதுவதை கண்டுகொள்ள மாட்டார். இங்கு கருணாநிதியை நல்லவராக்கும் என்று சொல்லவில்லை. கருணாநிதியின் பெயரால் திராவிட வெறுப்பை ஊட்டும் விதத்தைச் சொன்னேன். அதற்கேற்றார்போல் கருணாநிதியும் அவரது பாதந்தாங்கி வீரமணியும் நோபால்களாக வீசுகிறார்கள். அதை அரசியலே தெரியாத பச்சைப் பிள்ளைகள் கூட சிக்ஸராக்குகிறார்கள். இதற்கெல்லாம் கருணாநிதியே காரணம்.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அதிகம் போராட வேண்டும் கொள்கைப் பிடிப்பு வேண்டும். காசு பார்க்க முடியாது. இருப்பதிலேயே எளிதானது, கருணாநிதி எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, இந்திய இறையாண்மை, ஈழத்தமிழர் என்பது இன்னும் இலாபம் தரும், அரசியல் செல்வாக்கை உயர்த்தும் என்பது நிலவரமாக இருக்கிறது. திராவிடம் மட்டுமல்ல, மார்க்சியம், தமிழ்த்தேசியம், தலித்தியம் என என்ன கொள்கையானாலும் மக்கள் அமைப்புகளிலிருந்து தேர்தல் அரசியலுக்குச் சென்றாலே அது யாருக்குப் பயனளிக்கும் என்பது வெள்ளிடை மலை.
Download As PDF
Bookmark and Share

Post Comment