ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திஷாவும், பார்வதியும் நம்ம ரங்கராஜும் பின்னே ஜாதிப் பெயரும்

திஷா பாண்டே என்ற நடிகையை நினைவிருக்கிறதா ? தமிழ்படம் என்ற படத்தில் அறிமுகமானவர். கீரிப்புள்ள என்ற படத்திலும் நடித்திருந்தார். அவர் தனது ஜாதிப்பெயரைத் துறந்து திஷா என்ற பெயரிலேயே தொடர்வதாகக் கூறியிருக்கிறார். இது 2013 லேயே வெளியான செய்தி. ஒரு நடிகை தனது பெயரை மாற்றிக் கொள்வதெல்லாம் ஒரு பொருட்படுத்தக் கூடிய செய்தியா என்ன ? ஆம். இது பொருட்படுத்திச் சொல்லக்கூடிய செய்திதான். அதுவும் தமிழ்நாட்டில் சொல்ல வேண்டிய செய்திதான். ஒரு நடிகை பெயரை மாற்றிக் கொள்வது அதிசயமான செய்தி இல்லைதான். 

தமிழ்நாட்டில் லக்ஷ்மி ராய் என்ற நடிகை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். அனுஷா ஐயர், ஜனனி ஐயர் என்று பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருக்கின்றனர். இவையல்லாமல் மேனன், நாயர், ரெட்டி, முகர்ஜி, சாட்டர்ஜி, என்றெல்லாம் கூட பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருந்தனர், இருக்கின்றனர். இவர்களை மன்னித்து விடலாம். ஆனால் ஜாதிப் பெயரைப் பின்னால் போடும் பழக்கமே இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்து அனுஜா ஐயர், ஜனனி ஐயர் என்று ஜாதியைப் பின்னால் பிதுக்கிக் காட்டும் பிறவிகளை என்ன சொல்ல. தொலைகிறது நான் சொல்ல வந்தது இந்த நடிகைகளைப் பற்றியதல்ல. திஷா பாண்டே பெயரை மாற்றிக் கொண்டாரல்லவா ? அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இன்றியமையாததாக இருக்கிறது.

திஷா
பெயருக்குப் பின்னால் ஜாதிப்பெயரே போடாத தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, என்னென்னவோ சித்தாந்தங்களைத் துணைக்கழைத்தும், குறிப்பிட்ட சித்தாந்தங்களை எதிர்த்துக்கொண்டும் சிலர் ஜாதியைப் பெயருக்குப் பின்னால் வேண்டுமென்றே போட்டு ஜாதிப்பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஜாதிப்பெயரைப் பின்னால் போடுவதை எந்தவித உறுத்தலுமின்றி செய்து கொண்டிருக்கும் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒருவர், அதுவும் நடிகை அதுவும் ஒரு இளம்பெண் செய்திருப்பது பாராட்ட வேண்டிய செயலன்றோ ! அதுவும் தான் திஷா பாண்டே என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் திஷா என்றழைக்கப்படுவதை, ஏன் விரும்பினார் என்று கூறுகிறார். "நான் ஜாதியின் பெயரால் அறியப்படுவதைக் காட்டிலும், இந்தியர் என்றழைக்கப்படுவதையே விரும்புகிறேன்". இதன் மூலம் ஜாதியைப் பெயராகச் சுமப்பதை அவமதித்து அதை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் ஜாதியை வெறுத்துக் கொண்டே ஜாதிப்பெயரைச் வேறு வழியில்லாமல் சுமப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. எல்லோராலும் அதை இவர்களைப் போல் துறந்து விட முடிவதில்லை.

பார்வதி
அடுத்து இன்னொரு நடிகையைப் பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டோம். அவர் ஒரு முறை ஊடகத்திற்களித்த பேட்டியில் கூறினார். தான் ஜாதிப்பெயருடன் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றும், ஜாதிப்பெயருடன் தனது பெயர் அறியப்படுவது குறித்து தான் வருந்துவதாகவும், ஜாதிய அடையாளம் தனக்குத் தேவையில்லை எனவும், அதனை விரும்பவில்லை எனவும், ஒருவரின் அடையாளத்தின் மூலமாக ஜாதிதான் அறியப்படுகிறது எனில் அது தனக்குத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே பார்வதி நாயர் என்று இன்னொரு நடிகை இருப்பதால்தான் ஊடகங்கள் இருவரையும் வேறுபடுத்திக்காட்ட ஜாதிப்பெயரைப் பயன்படுத்தியதால் இப்படி ஆகிவிட்டது என்றும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். 

ஒரு நடிகைக்கு இவ்வளவு நேர்மையாக சிந்திக்க வருமா ? வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்த நடிகைகள் தனக்குப் பின்னால் ஐயர் என்று கொடுக்கை சேர்த்துக் கொண்டு கொக்கரிக்கும்போது இவர்களைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. சரி இவர்களிருவரையும் விடுவோம். நம் தமிழ்நாட்டில் பிரபலமான ஒருவர் இருக்கிறார். 

ரங்கராஜ் பாண்டேதான் அவர். இவரது பூர்வீகம் என்ன ? பிஹார் மாநிலத்தைச் சார்ந்தவராம். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இந்த நேர்மையான "நடுநிலை" விவாதி, (சமீப வருடங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயவினால் நடுநிலை என்றால் அதிமுக கட்சியை விமர்சனம் செய்யாத ஜென் நிலை; சமூக ஆர்வலர் என்றால் RSS காரர் என்றும் தமிழ் பேசும் இணையம் பொருள் கண்டறிந்துள்ளது) பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போதே 32 பக்கக் கையெழுத்து இதழை நடத்தினாராம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைக் பட்டம் பெற்றாராம். 1999 ஆம் ஆண்டு முதலே, தினமலர் என்ற ஒப்பற்ற நேர்மையான நாளிதழில் சேர்ந்து விட்டாராம். நாளிதழில் வரும் டவுட் தனபாலு என்ற பகுதியிலும் எழுதியவராம், அவ்வப்போது உரத்த சிந்தனையும் எழுதுவாராம். தன்னுடன் விவாதம் செய்பவர்களை பொறுமை இழக்க வைத்து, இவரை திரு. பாண்டே அவர்களே என்று கூறவைத்து இன்பம் கண்டு வருகிறார். தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மூவர் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) விடுதலையை வேண்டி தீக்குளித்து வீரச்சாவடைந்த செங்கொடி என்ற பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாக எழுதியவர் இவர்தான் என்றும் கேள்விப்பட்டேன்.

ரங்கராஜ்
என்னுடைய ஐயம் என்னவென்றால்,  வேறு மாநிலத்தவர்கள் ஜாதிப்பெயரை வைத்திருப்பது இப்போதும் கூட வாடிக்கையாகத்தானே இருக்கிறது என்றாலும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இங்கு அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கும் இந்த நபர், இங்கே இருக்கும் பண்பாட்டை அறிந்து கொள்ளாமலா இருப்பார். ஜாதிப் பெயரைப்பின்னால் சேர்த்துக் கொள்ளாத தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தனது ஜாதிப் பெயரை இன்னும் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறார். வட இந்திய உடைகளை அணிந்துதான் தனது நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார். இவரைப் பார்த்து இன்னும் சிலரும் இதையே பின்பற்றுகின்றனர். ஜாதிப் பெயரைத் துறக்க வேண்டும் என்று ஒரு நடிகைக்கு இருக்கும் சிறிய பொறுப்பு, நேர்மை கூட இல்லாத இவருக்கு எதற்கு இந்த புரட்சி வேடம்.  

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆர்.எஸ்.எஸ் - இன் கொலைவெறியை மறைக்கும் தினமணி நாளிதழ்

செய்தி விமர்சனத்துக்குப் போகும் முன் ஒரு சிறிய தகவல். 100% கல்விக்குப் பேர் பெற்ற கேரளா மாநிலம் தற்போது மதவெறி இயக்கங்களின் கட்சிகளின் வளர்ச்சிக்கும் அற்புதமான இடமாக இருக்கிறது. கடந்த மாதம் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த RSS  தொண்டர் ஒருவர் அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரவலாக வெளியாகாத செய்தி.  இதே ஒரு முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது இயக்கம் சாராத முஸ்லிமோ செய்திருந்தால் என்னாவாகியிருக்கும். இந்தியா முழுவதும் ஊடகங்களுக்கு ஒரு வாரத்திற்கான பரபரப்புத் தீனி கிடைத்திருக்குமல்லவா ?

இதை வைத்து கேரளாவில் இந்துத் தீவிரவாதம் பயங்கரமாக வளர்ந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. அங்கே குண்டு வைத்துக் கொல்வது சாதாரணம் என்றும் சிலர் ஃபேஸ்புக்கில் பேசிக் கொள்வதையும் கேட்டேன். சிபிஎம் காரர்களும், பாஜகவினரும் வெட்டிக் கொண்டு சாவதும் அவ்வப்போது நடக்கிறது. ((

காந்திக்குப் பதிலாக நேருவைக் கொன்றிருக்க வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ் என்ற அகில இந்திய பயங்கரவாத இயக்கத்தின் கேரளப் பிரிவின் சார்பில் மலையாள மொழியில் வெளியாகும் "கேசரி" என்ற இதழில் வெளியான கருத்து ஆகும். இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது. இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் பெருந்தலைகள் சொதப்பியும், மழுப்பியும் பதில் சொல்லி வருகின்றனர். அப்படி மழுப்பியதில் ஒன்று அதற்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் தொடர்பு இல்லை என்பது. இன்னொன்று காந்தி கொல்லப்பட்டதற்கான காரணமே நேருதானாம். என்ன ? காந்தி ஒரு கோழை. இந்துக்கள் முஸ்லிம்களால் கொல்லப்படக் காரணமானவர். ஆனால் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடும்போது மட்டும் தடுத்தார். முஸ்லிம்கள் கலவரத்தைத் தொடங்கிய போது எதுவும் செய்யவில்லை என்பனவையே வழக்கமாக இவர்கள் பாடும் பல்லவி. அதானே. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் காரன் இல்லை என்று கூட அடித்து விடுபவர்கள்தானே இவர்கள்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய நேருவுக்கு இது தேவைதான்.
 

சரி அது கிடக்கட்டும். நமது தினமணி செய்திருக்கும் ஊழியத்தைப் பாருங்கள். தினமணியை மட்டும் வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அந்த கேசரி இதழில் வெளியான கருத்து என்னவென்றே தெரியாதளவுக்கு மறைத்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர்களின் மறுப்பை மட்டுமே முதன்மைப் படுத்தியுள்ளது. இதைப் படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். ஆஹா இந்த மதச்சார்பின்மை மண்டூகங்கள் மீண்டும் சின்ன விசயத்தைப் பெரிதுபடுத்தி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும், பாஜகவையும், மோடியையும் இழிவு படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்று மனக்குரலைக் கேட்டு புலம்புவார்கள்.

இதில் கடைசிப் பத்தியில் சிந்தனையிலோ செயலிலோ எவ்வித வன்முறையையும் ஆர்.எஸ்.எஸ் கண்டித்தே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம். ஏனெனில் அது அவர்களை இழிவு படுத்தும் செய்தியன்றோ !

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share

Post Comment

கண்டு கொள்ளப்படாத மகளிர் கிரிக்கெட்


தற்போது மகளிர்க்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. அது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஏனோ ? கிரிக்கெட் நடிகர்கள் ஆடினால் கூட கொஞ்ச பேர் பார்க்கிறார்கள், ஏன் நடிகைகள் கூட ஆடினால் பார்க்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் மட்டும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதுவும் கிரிக்கெட்டின் மிகப்பெரும் சந்தையான தெற்காசியாவில் கூட பெண்கள் கிரிக்கெட் மிகப்பெருமளவில் போணியாகவில்லை.

இந்த நிலையில் இப்போது ஆண்களும் பெண்களும் கலந்து விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கப்போகிறார்கள். ஏன் அப்படியாவது பிரபலப்படுத்தலாமென்றா ? சும்மா கிளுகிளுப்பாகவாவது பார்க்க வைத்துவிடமுடியுமென்றா ?

பெண்கள் கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்தேன், ஆண்கள் அளவுக்கு துடிப்பாக இல்லையென்றாலும், பெண்கள் ஒரு வித நளினத்துடனும், மிதமான பரபரப்புடனும் நன்றாகவே விளையாடினார்கள். சிலருக்கு இன்னும் பேட்டிங் வரவில்லை. இறங்கி ( ஓரடி முன் வைத்து) அடிக்கும் போது முழங்கை வளைந்து, மண்வெட்டியில் வெட்டுவது போல் அடித்தார்கள் சிலர்.

பெண்கள் விளையாடும் விளையாட்டிலேயே கிரிக்கெட் மட்டுமே விளம்பரத்திற்கு உதவாத உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள். மினி ஸ்கர்ட், மினி ட்ரொஸர் மாதிரியான உடைகளை அணிந்து இதை விளையாட முடியாது என்பதால்தான் ரசிகர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லையா ?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் தனிநபராக ஓட்டங்கள் அதிகம் அடித்தது ஒரு பெண் - பெலிண்டா கிளார்க் 229*


ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி நியூஸிலாந்து - 459

இதில் எதிராக ஆடிய பாகிஸ்தான் 47 ஓட்டங்கள் மட்டுமே பதிலுக்கு எடுக்க முடிந்தது, 408 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி. அல்லது நியூஸி வெற்றி.

இது இரண்டுமே ஆண்கள் கிரிக்கெட் "சாதனை"யை விட அதிகம். இது இரண்டுமே 1997 இல் செய்யப்பட்ட சாதனைகள்.

ஆஸி பெண்கள் அணி 6 முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இதையெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டில் எப்போதுமே முறியடிக்க முடியாது. பார்ப்போம்.

எல்லிஸ் அலெக்ஸாண்ட்ரா பெர்ரி

இந்தச் சிறுமி ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருப்பவர் கால்பந்து அணியிலும் இருப்பவர். தமது 16 ஆம் அகவையில் நுழைந்தார் ஆஸ்திரேலியாவின் கால்பந்து அணியிலும், கிரிக்கெட் அணியிலும் ஒரு சேர. கால்பந்து உலகக் கோப்பையிலும் பங்கெடுத்திருக்கிறார், கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இருக்கிறார். இந்த மாதிரி கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு சேரக் கலந்து கொண்டவரென இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கடந்த முறை ஆஸி வென்ற போது இவரது பங்கு குறிப்பிடத் தகுந்தது. 


(தற்போது குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப். அவர் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம்)

மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர் அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றவர் என்ற பெருமையப் பெற்றதோடு, அரை நூற்றாண்டு காலம் அதிக பதக்கங்களை வென்ற சாதனையை வைத்திருந்த ரஷ்யாவின் (முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்) ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸ் லாட்டினினாவின் சாதனையையும் முறியடித்தார். இதில் லாரிஸ் லாட்டினினா இரு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமெ பங்கேற்றவர், அதிலும் ஒரு போட்டியில் பங்கேற்ற போது அவர் கர்ப்பமாக இருந்தார். மைக்கேல் பெல்ப்ஸ் மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

இது மாதிரி சாதனைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலே போகின்றன.

இப்படி மிகப்பெரும் சாதனைகளைப் பெண்கள் படைக்குமளவிற்கு திறமை இருக்கும்போது அவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த டென்னிஸ் போட்டிகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் மாடலாகவும் இருக்கின்றனர். ஷரபோவா வருடத்திற்கு 70 கோடிகள் வரை விளம்பர மாடலாகவே சம்பாதிக்க முடிகிறது. விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பெரிய நிறுவனங்கள் இவர்களின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காகவே புதுப் புது பிரபலங்களை உருவாக்குகின்றனர்.


அதே நேரம் ஆண்களின் கிரிக்கெட் எவ்வளவு மெனக்கெட்டு பரப்பப் படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பெரிய நடிகர்களுக்கு இணையான செலிபிரிட்டிகளாக இருக்கிறார்கள். எல்லா விளம்பரங்களிலும் வருகிறார்கள். நடிகைகளுடன் கிசு கிசு எழுதுமளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் தகுதி கிரிக்கெட் வீரர்கள் என்பது மட்டுமே.

இவர்கள் தேசத்தின் மானத்தைக் காப்பவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதே தேசபக்தி என்ற அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பப் படுகிறது என்று பார்த்தால்,

வரும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னார் நீக்கப்பட்டார், இன்னார் தேர்வு செய்யப்பட்டார், இன்னாருக்கு வாய்ப்பில்லை

இந்திய அணி நாளை போட்டி நடக்கு இடத்திற்குப் போய் சேருகிறது.

இந்திய வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி இன்று வெற்றி பெறுமா ?

வெற்றி பெறுவோம் கேப்டன் நம்பிக்கை.

கிரிக்கெட் போட்டியை வர்ணிப்பதுதற்குத்தான் தொலைக்காட்சிச்செய்திகள் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

போட்டி முடிந்தவுடன் வெற்றிக்குக் காரணம், தோல்விக்குக் காரணம் குறித்த அலசல்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கூட வெளிவருகின்றன. 



கிரிக்கெட் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாம் நல்ல நகைச்சுவைகளே.

"அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை" என்பதற்கு முன்னால் எவையெவையெல்லாம் இணைக்கப்பட முடியும் பாருங்கள்.

இந்த வருடத்தில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இந்த அணிக்கு எதிராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது விக்கெட்டிற்கு "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஒரே நாளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது இன்னிங்க்ஸில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஃபாலோ ஆன் பெற்றும் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இரண்டாவது பேட்டிங்கில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

குறைந்த நேரத்தில் அல்லது பந்துகளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

அணித்தலைவராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

விக்கெட் கீப்பராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

பந்து வீச்சாளராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இப்படியாக நகைச்சுவைகள் தொடரும் நீளம் கருதி நிறுத்துகிறேன். இவயெல்லாம் போட்டித் துளிகள் அல்லது ஹைலைட்ஸ் என்று பெட்டிச் செய்தியில் போட்டு விளையாட்டுச் செய்தியின் பக்கங்களை நிரப்புவார்கள்


கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் அதே நேரம்  இன்னொரு புறத்தில் மற்ற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. வெறும் பெட்டிச் செய்திகளில் மட்டும் வெளிப்படுகின்றன. சொந்தக் காசையும், முயற்சியும் செய்து உயிரைக் கொடுத்துப் பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கில் எவனாவது பதக்கம் வாங்கினால் அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் "இந்தியர்கள்" பெருமைப்பட்டுக் கொண்டு மீண்டும் அவர்களை மறந்து விடுவார்கள். ஏன் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வாங்க முடியவில்லை என்று விவாதிப்பார்கள். கிரிக்கெட்டைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். ஐபிஎல்லை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.

ஆளுக்குப் பத்துக்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற போதும், மகேஷ் பூபதியும், லியாண்டரும் பெரிய அளவில் கொண்டாடப் படவில்லை. சானியா மட்டுமே டென்னிசின் அடையாளமாக இருக்கிறார். அவர் பிரபலமானதும் டென்னிஸ் என்ற விளையாட்டின் காரணமாக அல்ல. ஏதாவது ஒரு (வெப்பமான பெண் - அதாவது) ஹாட் கேர்ள் கிடைக்க வேண்டு ஊடகங்களுக்கு ஊதிப் பெருக்கிவிடுவார்கள். அதே நேரம் உயிரைக் கொடுத்து விளையாடும் சாய்னா நேவாலை பெரிய அளவில் ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

விளையாட்டாக இருந்தாலும், அழகு + செக்ஸி மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது போலும். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 20/20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்ரீலங்காவின் சியர் லீடர்ஸ் பற்றி கிரிக்கெட்+தேச பக்தர்கள் பலரும் தமது சங்கடத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அழகாக இல்லை. பாமர ரசிகர்கள் மொக்கை ஃபிகரெல்லாம் எவன்டா சீர்லீடர்ஸா போட்டான் என்று அலுத்துக் கொண்டனர். நிலைத்தகவல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.

விளையாட்டுபோட்டிகளில் எதற்கு சீர் லீடர்ஸ்கள் வந்து குட்டைப்பாவாடையில் ஆட வேண்டும், கேமராக்கள் பாவாடைக்குக் கீழிருந்து படம் பிடிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளே தேசபக்தர்கள் பார்ப்பது, தேசபக்தி பொங்கி வழிந்தோடும் போது, எதற்கு இந்தக் கிளுகிளுப்பு வேண்டிக் கிடக்கிறது. தேசபக்தி பேசும் அர்ஜுன் படங்களில் குத்தாட்டம் இருப்பது போல என்று கொள்வோம்.

டிடி ஸ்போர்ட்ஸில் உயரம் தாண்டும் போட்டிகள் போட்டிருந்தார்கள். ஒரு ஈரானியப் பெண்ணைக் காட்டினார்கள். அவர் பர்தா போன்றதொரு ஆடையை அணிந்து அது தலையிலிருந்து விழாமல் இருக்க ஒரு பேன்டையும் கட்டியிருந்தார். கை முழுவதும் மறைக்கும் ஆடை. அதே நேரம் இன்னொரு ஐரோப்பியப் பெண் ஏறக்குறைய இரு துண்டு ஆடை அல்லது பிகினி என்ற அளவிற்கு அணிந்திருந்தார். உடலை மறைப்பது ஒத்துக் கொள்ளக்கூடியது, மணிக்கட்டுவரையும், தலையையும் மறைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதெல்லாம் என்னளவில் ஒத்துக் கொள்ள முடியாது. என்னைக் கேட்டால் இந்த பர்தா, பிகினி இரண்டுமே விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒத்து வராதது.

மத்திய கிழக்கு அல்லது இஸ்லாமிய நாட்டுப்பெண்கள் பெரும்பாலும் இதை அணிந்துதான் விளையாட வேண்டியிருக்கிறது. மற்ற நாட்டினர் நீச்சலுடை மாதிரி, அல்லது பிகினி மாதிரி அணிகிறார்கள். இதற்குத் தயங்கியே இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் பெண்கள் இது போன்ற போட்டிகளில் சேரத் தயங்குவார்கள் போல் தெரிகிறது.

நன்றி : ஹஃபிங்க்டன் போஸ்ட்
இந்த உடைகளை வடிவமைப்பவர்கள், விதிமுறையாளர்கள் எல்லாம் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் போட்டிகளில் பெண்களுக்கு வசதிப்படி வடிவமைப்பார்களா அல்லது ஆண்கள் ரசிக்கும்படி வடிவமைப்பார்களா என்று சொல்ல வேண்டியதில்லை. சில நாட்களுக்கு முன்பு, ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குட்டைப் பாவாடை மட்டுமே அணிய வேண்டும் என்று விதியை மாற்றினார்கள். அதற்கு பாகிஸ்தான், எகிப்து நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதெல்லாம் எதற்கு ? ஏன் ட்ரௌசர் அணிந்து விளையாடினால் என்ன கெட்டு விடும்.

ஆண்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கும்போது அணியும் ஆடைகளுக்கும் பெண்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். ஆண்கள் உடைகளால் அவர்கள் சிரமப்படுவதேயில்லை. அதே நேரம் பெண்களைக்கவனித்தால் ?? அதென்ன விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் அணியும் உடைகள் முழங்கால் வரையில் அல்லது தொடை வரையாவது மூடியிருக்கும்படியும், பெண்கள் என்றால் புட்டத்தில் பாதியை மட்டும் மறைக்கும்படியும் இருந்தால் அதன் காரணம் என்ன ?

எந்த உடை பற்றியும் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இதையெல்லாம் சொல்லக் கூடாதுதான். ஆனால் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில்தான் சீர்லீடர்ஸ், கடற்கரைக் கைபந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே பெண்களை ஆடை அவிழ்ப்பு செய்விக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து ஆண்கள் அள்ளித் தெளிக்கும் கருத்துக்களுக்காகத்தான், திரைப்படங்கள், விளம்பரங்கள், இசைக் காட்சிகள், நடனக் காட்சிகள் இவைகளில் பெண்கள் காட்டப்படும் விதத்திலிருந்தே இந்த விளையாட்டுப் போட்டிகளில் காட்டப்படுவதையும் இணைத்துப் பார்க்க நேரிடுவதால் இதையெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.  பெண்கள் உடை பற்றிப் பெரிய விவாதத்திற்கெல்லாம் கூட போக வேண்டியதில்லை. ஆண் வீரர்கள் அணிந்து விளையாடுவதையே பெண்கள் அணிந்தால் வேலை முடிந்தது. அதற்காகத்தான் பெண்கள் கிரிக்கெட் பற்றிச் சொல்ல வந்தேன்.

இன்னொன்றையும் சொல்ல மறந்தேன். சானியாவாகட்டும், சாய்னாவாகட்டும் அல்லது ஷரபோவாவாக இருக்கட்டும். பந்தை ஆக்ரோஷமாகத் திருப்பி அனுப்புகிறார் என்ற விவரிப்புடன் தினமணி, தினமலர், தினத்தந்தி உட்பட பெரும்பான்மை நாளிதழ்கள் வெளியிடும் புகைப்படங்களில் அவர்களது மேலுடை சற்றே உயர்ந்து தொப்புள் தெரிகிற மாதிரிதான் இருக்கிறது. இல்லையென்றால் பாவாடை பறக்கிற மாதிரித்தான் இருக்கிறது. இதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். இது இயல்பாக நடக்கிறதா ? வேறு போஸே கிடைக்கவில்லையா ? பாவாடை பறப்பதை ஸ்னாப் ஷாட் எடுத்துத்தான் போட வேண்டுமா கனவான்களே ?  பெண்களை செக்ஸியாகத்தான் உடை அணிய வேண்டும் என்று திணிப்பதாலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதைப் பார்ப்பதற்கென்றே பலரும் இப்போட்டிகளைக் காண்கின்றனர். பெண்கள் பங்கேற்கும் உலக அழகிப் போட்டியளவிற்கு, உலக அழகன் போட்டி பிரபலமாகவில்லை. கடற்கரைக் கைப்பந்துப் போட்டிகளில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் போட்டி பிரபலமாகவில்லை. இதெல்லாம் அதன் எதிர் விளைவுகள்தான். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டியும், பிரபஞ்ச அழகிப் போட்டியும் நடக்கும் போதெல்லாம், செய்திகளில் சொல்லப்படுவது என்னவென்றால், இந்திய அழகிக்கு இத்தனாம் இடமே கிடைத்தது, இந்திய அழகி ஏமாற்றம். இதற்கெல்லாம் இந்தியர்கள் வருத்தப்பட வேண்டுமாம்.




இப்படியாக பெண்கள் என்றால் ரசிப்பதற்கே என்ற நிலை இருக்கும் வரை, அதை வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் வரை திறமையைக் காட்டி வென்ற பெண்களை விட உடலைக் காட்டிய பெண்களே வெற்றி பெற்ற பெண்களாக வலம் வருவர்.

சன்னி லியோன், பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா, வீணா மாலிக் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று நமக்கு நாளும் நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

குமுதம் திருந்தாது !!


ஒரு நடிகையின் படத்தைப் போடுவதற்கு ஏதாவது ஒரு கருத்தோ அல்லது கிசு கிசுவோ அல்லது பயோடேட்டாவோ போடுவார்கள்.

ஆனால் ஒரு பொம்பள இறந்தால் கூட அவள் சின்ன வயசுல ஜட்டியுடன் இருக்கும் படத்தைப் போடுமளவிற்கு தரம் தாழ்ந்த அச்சு இதழ்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு வேளை பிணம் நிர்வாணமாக இருந்து விட்டால் அதையும் வெளியிடத் தயங்குவதில்லை இவர்கள்.

இவர்கள் வெளியிடும் செய்திகள் திரைப்பட நடிகர்களைக் குறித்ததாக இருப்பின் முடிக்கும் போது ஆம் ஆம் என்றுதான் முடிப்பார்கள். சொல்லிவிட்டாராம், பேசிவிட்டாராம், முடித்துவிட்டாராம் என்று ஒரே ராம் புராணாமாக இருக்கும். இப்படிச் சொன்னால்தான் கிசு கிசு பரவும்.

அதற்கு தற்போதைய உதாரணம்; தோழர் காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் படத்தை விடவும் தெலுங்குப் படத்தில்தான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். பாரதிராஜா உணர்ச்சி வசப்பட்டு, காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று அவரது எதிர்வினையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியில் பாரதிராஜா வின் படத்தையும், கூடவே ஒரு நடுநிலை கருத்துச் சொன்ன ஜனனியின் புகைப்படத்தையு சிறிய அளவில், பிரசுரித்து விட்டு, காஜலின் சேலை விலகி வயிறு தெரியுமாறு இருக்கும் செக்ஸியான படத்தையும் போட்டிருக்கிறார்கள். நான் படம் பாடல்கள் பார்ப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டதால், எது எந்தப் படம் என்பது குறித்த பொது அறிவு குறைவு. ஆனால் காஜலின் அந்தப்புகைப்படம் தெலுங்குப் படத்தில் வருவதாக இருக்கலாம். ஒரு வேளை இதைத்தான் தெலுங்குப் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

எனக்கு என்ன ஐயமென்றால், இங்கே தமிழர்களைக் கேவலப்படுத்திய காஜல் மீது ஆத்திரம் வரவேண்டுமா அல்லது காஜலின் புகைப்படத்தைப் பார்த்து வேறெதாவது உணர்ச்சி வர வேண்டுமா? அந்த உணர்ச்சி வந்த பின் ஏதாவது நடக்க வேண்டுமா? என்ன விரும்புகிறது குமுதம்.

இதே பதிவு கொஞ்ச நாளுக்கு முன்புதான் எழுதினேன் எந்த மாற்றமுமில்லாமல். குமுதம் அப்படியேதான் இருக்கும். எனக்கு மீண்டும் பல முறை இதே பதிவை எழுதவைக்கும். 

குமுதம் ரிப்போர்ட்டர் என்ற புலனாய்வு வார இதழ் குஷ்புவையும், முகவையும் பெரியார் மணியம்மையாகச் சித்தரித்து நூறாவது தடவையாக தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படியெல்லா
ம் யோசிப்பதற்கு, வெளியிடுவதற்கு, இது போன்ற நடிகைகளின் செக்ஸியான படங்களைப் போட்டு இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை நாட்டு நடப்புக்கு இணையான செய்திகளாக்குவதும்தான் காரணம். இறுதியில் அஃசல் குருவின் தூக்குத் தண்டனையை ஆதரித்து தனது பொது மனசாட்சியைக் காட்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, ஆர்யா தமிழ் ரசிகர்களைக் கேவலப்படுத்தியது மாதிரியான தமிழகத்தின் மானம் காக்கும் முக்கியமான செய்திகளைச்சொல்வது பிரச்சனையைக் கிளப்புவது. இப்படியாக குமுதம் கிளப்பிய பிரச்சனைதான் ஜெயராம் கருத்த தமிழ்ப் பொண்ணு என்று தனது பணிப்பெண்ணை வர்ணித்ததை, தமிழர்களைக் கேவலப்படுத்தி விட்டதாகத் திரித்து பிரச்சனையாக்கியது.

ஆனால் இது வெளியிடும் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்களாக இருக்க மாட்டார்கள், வட இந்திய, மலையாளப் பெண்களின் படங்களை மட்டுமே வெளியிடும் ஏனென்றால் அவர்கள்தான் பெருந்தன்மையாக உடையணிபவர்கள், குமுதத்திற்கு அந்த மாதிரியான படங்கள்தான் தேவை. என்னதான் ஃபாரின் பிகர்ஸ் பார்த்தாலும், நம்ம ஊரு ஃபிகருகளை சைட்டடிப்பதுதான் சுகமே என்று கருதும் வாசகர்களும் இருப்பதால், அப்பப்ப ஏதாவதொரு கல்லூரியில் சென்று 10 கல்லூரி மாணவிகளின் கருத்துக்கள் என்று இந்தியா முன்னேற்றமோ அல்லது, பிடித்த நடிகர்கள் குறித்த கருத்துக்களை விவாதங்கள் என்று போட வேண்டியது வெறும் படங்களைப் போடக்கூடாதல்லவா இதென்ன வலைப்பூவா இல்லை ஃபேஸ்புக்கா வெறும் பொம்பளப் படங்களை பகிரவும், வெளியிடவும் ஒரு நியாயம் வேண்டாமா. ஏதாவது மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் ஆசியா, அல்லது ஏதாவதொரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், அவர் சென்னையைச் சேர்ந்த சுத்தத் தமிழ்ப் பெண் என்று பல பேரைப் போட்டிருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் தமிழ்ப் பெண்கள் என்றுதான் தெரியவில்லை.

சிறுகதையில் கூட வரையப்படும் படங்களில், முந்தானை நூல் மாதிரிதான் சுருண்டு கிடக்கும், ரவிக்கை தாழ்வாகவும் இருக்கும் நடுவில் ஒரு கோட்டை தவறாமல் வரைந்திருப்பார்கள். தொப்புளையும் வரைந்திருப்பார்கள், யார்தான் உலகத்தில் அப்படியெல்லாம் சேலை கட்டுவார்களோ தெரியவில்லை. சுடிதாராக இருந்தால் நன்றாக உடலைக் கவ்விப் பிடித்து வடிவைக் காட்டும்படி இறுக்கமாக இருக்கும். க்லீவேஜ் நிச்சயம்.

விளையாட்டு வீராங்கனகளின் படங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஸ்போர்டி அல்லது மினி ட்ரொசர் மாதிரியான உடைகளுடன் இருக்கும் படங்கள் போடுகிறார்கள். இதை தவறானதாக சொல்ல வில்லை. குமுதத்தின் வாசகர்களாக இருப்பவர்களுக்கு குமுதம் எதனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து கிசுகிசுக்களை மானாவாரியாகப் பரவவிடுவது, ஏதாவதொரு படத்தில் பிகினியில் நடித்தைப் படமாகப் போடுவது, இல்லை செய்தியாக முடியாவிட்டால் இரு அனுமானமாகவாவது போடுவது. இதையெல்லாம் படிக்கும் காணும் குமுதம் வாசகனுக்குப் பெண்ணைப் பார்த்தாலே சைட்டடிக்கவும், மார்க் போடவும், அளவெடுக்கவும், கேலி செய்யவும், கமெண்ட் அடிக்கவும்தான் கற்றுக் கொடுக்கிறது. அந்த மன்நிலையுள்ளவன் சானியாவையோ சாய்னாவையோ, தீபிகா பல்லிகலையோ அல்லது வேறு யாராவது விளையாட்டு வீராங்கனையையோ பற்றிய செய்திகளையும், புகைப்படத்தையும் வெளியிடும்போது அவைகளை என்ன கோணத்தில் பார்ப்பான் என்று குமுதம்தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பிரச்சனையை சில நாட்களுக்கு முன்பு கிளப்ப முயன்றது குமுதம். நடிகை சுஹாசினி சொன்னார். கதாநாயகன் முடிவெட்டாமல், சவரம் பண்ணாமல் எப்படி இருந்தாலும் கதாநாயகி மட்டும் அனுஷ்கா மாதிரி அழகாக இருக்கிறார்கள். எங்களுக்கு மட்டும் அழகான ஹீரோக்களைப் பார்க்கணுன்னு ஆசையிருக்காதா ? எம்ஜிஆர், கமல், அரவிந்த் சாமிக்கு அப்பறம் ஹேண்ட்சம் ஆன ஹீரோக்களையே பாக்க முடியல என்று சொல்லியிருந்தாராம். அதை அப்படியே தமிழ்ப்படங்களில் அவர் சொன்னதையே செய்து கொண்டிருக்கும் சில் இயக்குநர்கள், நடிகர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தை வாங்கி அதை, சுஹாசினிக்கு எதிராகப் பொங்கும் தமிழ் ஹீரோக்கள் என்று ஒரு பிரச்சனையாக சித்தரிக்க முயன்றது. அப்புக் குட்டி, தருண்கோபி, விதார்த், இன்னும் யாரோ இருவர். இவர்களெல்லாம் சொன்னது சுஹாசினி அப்படியெல்லாம் சொல்லியிருக்கக்கூடாது, தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் சராசரியான தோற்றம் கொண்டவர்கள்தான் என்ற பொருளில் என்று சொல்லி வருத்தப்பட்டிருந்தார்கள். இதில் யார் சொன்னது சரி தமிழ் திரை ரசிகர்கள் எல்லாரும் சொல்வதைத்தான் சுஹாசினி சொன்னார். இந்த நடிகர்கள் எல்லாம் சராசரியான ஆணின் தோற்றம் அல்லது பொறுக்கியாக இருக்கும் ஒருவன் அந்த வட்டாரத்திலேயே அழகான கதாநாயகியைக் காதலிப்பதாக அல்லது ஆசைபடுவதாகக் காட்டி அந்தக் காதலை வெற்றி பெற வைத்து ஆண்களை பரவசப்படுத்தும் கதைகளை எடுப்பவர்கள் அல்லது நடிப்பவர்கள். இதை என்னவோ பெரிய சண்டையாக கோர்த்து விட முயன்றது குமுதம்.

குமுதம் கிளப்பி விட்டு கதையெழுத நினைத்த பல கிசுகிசுக்கள் பிசுபிசுத்துப் போயின. காஜல் - கார்த்தி காதல், விஷால்- ரீமா காதல், மாதவன் - பூஜா காதல், சித்தார்த்- ஷ்ருதி காதல், இருப்பதிலேயே மிகவும் மோசமாக எழுதப்பட்ட கிசு கிசு கமல் - சிம்ரன் காதல்தான். குமுதம் மட்டுமல்லா எல்லா இதழ்களும் செய்தன.. அதை விடவும் கேவலமாக எழுதப்பட்டது ஷ்ருதி ஹாசன் - தனுஸ் காதல்தான். அதற்கு ஷ்ருதி மறுப்பு வெளியிட்டு அதையே குமுதம் வெளியிடுமளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியது குமுதம். நன்கு காசு பார்த்த கிசுகிசுக்கள் நயன் - பிரபுதேவா, நித்யானந்தா - ரஞ்சிதா.

ரஜினி படையப்பா படம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நடித்த பாபா படம் தோல்வி அடைந்திருந்த நிலையில் ரஜினி படத்தில் மீண்டும் நடிப்பாரா அல்லது நிறுத்தி விடுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ரஜினி இமயமலைக்குக் கீது சென்று விட்டால் ஏதாவது கதை கிதை எழுதி காசுபாக்க முடியாது, எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் விஜய்யா விக்ரமா,தனுசா என்ற முக்கியமான பிரச்சனையை எழுப்பியது. இப்படியாக குமுதத்தின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை.

அரசியல் ரீதியான விமர்சனத்தில், இப்படி பாலியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகை நியாயமென்று தெரியவில்லை. இதற்கு முன்பு கனிமொழி-ராசாவை இணைத்து நகைச்சுவைக்காகக் பேசப்படும் கிசுகிசுக்கள், மன்மோகச் சோனியாவை இணைத்துப் பேசப்படும் கிசுகிசுக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

குமுதம் மட்டுமல்ல தினகரன், நக்கீரன், தினத் தந்தி, தினமலர் என்ற எதுவும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் முதலிடம் தினகரனுக்கே. கடந்த திமுக ஆட்சியின் போது தினகரனில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சோபனுடன் இணைந்து வாழ்ந்த (Living together) ஜெயலலிதாவின் யோக்கியதையைப் பாரீர் என்று திராவிட அறிவாளிகளுக்கே உரிய தரத்துடன் வெளியிட்டிருந்தது. இதுதான் இவர்களின் யோக்கியதையே.
Download As PDF
Bookmark and Share

Post Comment

விநோதினிக்கு அஞ்சலி - ஆணாதிக்கத்துக்கு எப்போது அஞ்சலி செலுத்துவது ?

விநோதினி இறந்து விட்டாள். கொல்லப்பட்டுவிட்டாள். மிகவும் கொடிய வதையை அனுபவித்துவிட்டு இறந்து விட்டாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனும் தன்னைப்போலவே துன்பத்த்தை அனுபவிக்க வேண்டும் என்ற இறுதி ஆசையுடன் உயிரை விட்டு விட்டாள். 


டெல்லி கொடூரத்தால் இறந்த ஜோதியைப் போலவே விநோதினியும் நான் வாழவேண்டும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் வாழக்கூடாது என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். தாம் அனுபவித்த கொடிய இன்னலிலிருந்து வெடித்த ஆத்திரம்தான் அது.

ஒரு வேளை ஜோதி உயிர் பிழைத்திருந்தாலோ, அவளது சிறுகுடல் பாதிக்கப்பட்டதால், நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்திருக்க முடியும். விநோதினிக்கோ பார்வையே பறிபோய் விட்டது. வன்முறையை எதிர்கொண்ட போதே அவர்கள் பாதி செத்து விட்டார்கள். மீதியும் மருத்துவர்களின் தோல்வியில் போனது.

இந்த கேடுகெட்ட வெறிபிடித்த உலகத்தில் பிறந்ததால் ஆயிரமாயிரம் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களின் எடுத்துக் காட்டுகள்தான் ஜோதி சிங் பாண்டேக்களும், விநோதினிகளும்.

பாலியல் வன்முறையும், ஆணாதிக்க வெறியும் சேர்ந்து பழிவாங்கிய உயிர்கள், ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை முறைதான் வெட்கப்படுவதும், வேதனைப்படுவதும் ?

இனிமேல் மரண தண்டனை எதிர்த்துப் பேசவும் வெட்கமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து விட்டு, இனி விநோதினிகள், ஜோதிகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே கவலைப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பது, அவர்களை உணர்வுடையவர்களாகக் கருதாததே ஆகும். அவர்களை வெறும் பொருளாகவே காண்கிறார்கள் ஆண்கள். இதற்கு ஆணாதிக்க சிந்தனையே முதற்காரணமாகும். இதை போற்றி வளர்க்கும் சமூகமும் அதை ஊற்றி வளர்க்கும் ஊடகங்கள், வணிகங்கள், சடங்குகள் என அனைத்துமே இதற்கான காரணிகளே ஆகும்.

 ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)


பாலியல் வன்முறையாகட்டும், அமிலம் ஊற்றுவதாகட்டும், அல்லது கருணைக் கொலையாகட்டும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆணாதிக்க உணர்வு மட்டுமே. பாலியல் வன்முறை என்பது கலவி அல்லது உடலுறவு என்பதை மட்டும் கொண்டு உடைதான் காரணம் நடத்தை தான் காரணம் என்று அளவிடக் கூடாது. அது ஆதிக்க உணர்வு வன்முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

இவை வெவ்வேறு மத கலாச்சார சமூகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஒரு ஆண் தன் மகள் கீழ்ஜாதிக்காரனை மணந்து கொண்டதால் பெற்ற மகளென்றும் பாராமல் கொல்கிறான். அவளது உயிரை விட தனது, கௌரவம் என்று தான் நம்பும் ஜாதிப்பெருமை அவன் கண்ணை மறைக்கிறது. அதற்காக மகளைக் கொன்ற தந்தை என்ற பட்டத்தை சுமக்கவும் பெருமிதத்துடன் கொல்கிறான். ஜாதிகள் நிறைந்த இந்து மதத்தில் மட்டுமல்ல, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் போன்ற முஸ்லிம்கள் சமூகத்திலும், சீக்கிய சமூகத்திலும் கேள்விப்படுகிறோம். இதில் பெண் ஒருவனை மணக்க் விரும்புவது அவர்கள் குடும்பத்திற்கு இழுக்கு என்று கருத வைப்பது எது ? தான் சொன்னவனை, தகுதிக்கு உட்பட்டவனாகக்கருதும் ஒருவனை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று பெண்ணின் உரிமையை மறுக்கும் ஆணாதிக்கம். அதற்காக பெற்றவளென்றும் பாராமல் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை.

அடுத்து அமிலம் ஊற்றும் அசிங்கம் பிடித்த எண்ணங்கள் ஏன் வருகின்றன. இது போன்று அமிலத் தாக்குதலுக்குப் பெரும்பாலும் பெண்களே ஆளாகின்றனர். பெரும்பாலும் திருமணமாகாத இளம்பெண்கள். செய்கிறவர்கள் இளைஞர்கள். இவர்களிருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் தகராறா இருக்கப்போகிறது, காதல், பாலியல் உறவு, திருமணம் உறவுச் சிக்கல் அரிதாக வேறு பிரச்சனைகள். இதில் முக்கியமானது காதல், ஒரு பெண் காதலிக்கும் உரிமைக்கு அப்பா என்ற ஆண் குடும்பம், கௌரவம் என்ற ஆணாதிக்கக் கருத்தியல்களால் எதிர்க்கும் அதே நிலையில், ஒரு ஆண் தன்னைக் காதலிக்காத பெண் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் அவள் மீது அமிலத்தை ஊற்றுகிறான். அவளுக்குத் தன்னை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ கூட உரிமை இருப்பதாக எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லது ஆணாதிக்கம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. கொலை செய்வதில் இருக்கும் வக்கிரத்தை விடப் பல மடங்கு கொடூரமானதும், கேவலமானதுமான  பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி அவள் தனது தன்னம்பிக்கையாகக் கருதும் அழகைச் சிதைப்பதில் இன்பமடைகிறது இந்து கருமாந்தரங்கள்.

தெருவில் போகும் தனக்கு தொடர்பில்லாத உரிமையில்லாத ஒரு பெண் தனியாளாக இருப்பதால் சீக்கியடிப்பதும், கேலி பேசுவதும் உரிமை நினைக்கும் ஆணாதிக்க ஓநாய்கள், இரவு நேரமென்றால் அவளை வன்புணர்ந்து கூடப் பாடம் கற்பிக்க தனக்கு அதிகாரமிருப்பதாய் நினைப்பது எத்தகைய கேவலமான மனநோய்.

சமூகத்தின் தாக்கமின்றி வெளியில் வாழும் ஒரு மனிதனுக்குப் பெண் மீது எத்தகைய கண்ணோட்டம் இருக்கிறதோ அதே கண்ணோட்டம்தான் ஒரு சிறந்த பண்பட்ட குடும்பத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. ஒரு இளைஞனோ, சிறுவனோ பெண்கள், பாலியல் குறித்த கருத்துக்களை சமூகத்திலிருந்தே, ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே கற்கிறான். அவை என்ன கற்பிக்கின்றனவென்று நமக்குத் தெரியும். பாலியல் குறித்த அறிவியல் கண்ணோட்டமின்றி அவை வெறும் கிளுகிளுப்பாகவும், அருவருப்பானதாகவும், பெண்களுக்கு ஒழுக்கக் கேடாகவும், ஆண்கள் மறைவாக அன்பவித்துக் கொள்ளவும் ஏற்றவாறே இருக்கிறது.

திரைப்படங்களை இதற்கு ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். திரைப்படங்கள் நம்மை நேரடியாகத் தாக்குவதில்ல. அதை நாம் அப்படியே பின்பற்றுவதில்லை. ஆனால் எல்லா வகையிலும் நம்மை ஆக்ரமித்திருக்கிறது. ஏன் தமிழ்மணத்திலேயே பெருமாலும் திரைப்படம், அதனைச் சார்ந்த செய்திகள்தான்.

திரைப்படப் பாடல்கள், நடிகர்கள், வசனங்கள், பட்டப் பெயர்கள் எல்லா இடத்திலும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

திரைப்படத்தில் என்னத்தைக் காட்டுகிறார்கள் பெண்களைப் பற்றி.

பெண்கள் திரைப்படத்தில் வருவதே ஆண்கள்/ நாயகர்களால் காதலிக்கப்படுவதற்குத்தான், அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும், அழுவதும், சிரிப்பதும், துடிப்பதும், ஓடுவதும் காதலுக்காகவே/காதலனுக்காகவே/

காதலன் என்பவன் அயோக்கியனாக இருந்தாலும், அவனிடமிருந்து ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடித்து அவனைக் காதலிப்பாள்

அவளைக்கவர்வதற்காக நாயகன்/ என்ன பொறுக்கித்தனம் செய்தாலும் அது நாயகத்தனமாகவே சித்தரிக்கப்படுகிறது. அவன் அவளைத் துரத்தலாம், கடத்தலாம், துன்புறுத்தலாம், புணரலாம், ஏன் கொலை செய்யக் கூட முயலலாம். இது பருத்தி வீரன், பாலாவின் அனைத்துப் படங்களும், தனுஸ், சிம்பு, கார்த்தி படங்கள். புதிய பாதை மூவேந்தர்.

பெண்களைக் கேலி செய்யும் ஈவ் டீஸிங், உடலைக் கிண்டல் செய்வது என்பது போல பெண்களைக் கிண்டல் செய்வது, மேலும் கீழும் தொட்டு விளையாடுவது, உரசுவது, இடிப்பது, உடைகளை பிடித்து இழுப்பது போன்ற பாடல்கள் சிவாஜி, மகோராமச்சந்திரன் காலத்திலிருந்து மாஸ்டர் மகேந்திரன் காலம் வரை தொடரும் பாரம்பரியம். அது நகைச்சுவையாம். பெண்கள் மீது ஒழுக்கத்தை வலியுறுத்தவும் தயங்குவதில்லை.

பாடல் காட்சிகள் பாதி செமிபோர்ன். இடுப்பில் முத்தம் கொடுப்பது, மார்பில் முகத்தை மோதுவது, மொத்த உடலையும் மோப்பம் பிடிப்பது தடவுவது இன்னும் பலதும்.

விவேக், விஜய், சிம்பு, தனுஷ், சந்தானம் வகையறாக்கள் சொல்லும் பெண்களுக்கான வியாக்கியானங்களை எல்லாம் ஆண்களுக்கு தம் ஆணாதிக்க அரிப்பை சொறிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் கொடுக்கின்றன. பீயை மிதிச்சது போல முகத்தைச் சுளித்துக் கொண்டு சந்தானம் "மச்சா இந்தப் பொண்ணுங்க இருக்காளுங்களே" என்று தொடங்கினான் என்றால் பெண்கள் உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினால் அந்தக் கருத்தைக் கேள்விகளின்றி நாம் ஏற்றுக் கொண்டோமென்றுதானே பொருள்.

கொல்றா அவள, வெட்றா அவள, கொலவெறி வகைப் பாடல்களெல்லாம் ஆண்களைத் தியாகியாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும், வெறுப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்கின்றன. காதல் தோல்விப் பாடல்கள் என்றால் காதலியை நோக்கிப் பாடுவதாக இல்லாமல் "பெண்கள் என்றால் பொய்யா" என்று மொத்தப் பெண்களையே கேள்வி கேட்கிறதே. வெறுப்பைக் காட்டுகிறதே

அதே நேரம் ஆண்களின் பொறுக்கித் தனத்தைக் கொண்டாடுகிறது.

பெண்களிடமிருது ஒதுங்கியிருக்கும் ஆண் சமூகம் இது போன்ற திரைப்படங்களிலிருந்து எதைக் கற்கும் ? பெண்கள் என்றால் காதலிக்க, செக்ஸ், ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு என்னதான் இவை சொல்கின்றன.

பாலியலிலிருந்து எல்லாவற்றையும் தேவைப்படும் ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படையாக விவாதிப்பதே ஒரே வழியாக இருக்கும். பெற்றோர்க்கு தனது மகன் தம்மடிப்பதோ, தண்ணியடிப்பதோ எப்படித் தெரிவதில்லையோ அது போலவே அவன் பொது இடங்களில் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

என் மகன் ஒரு போதும் திருட மாட்டான், கொலை செய்ய மாட்டான் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கை. அது பெரும்பான்மையாக உண்மையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறான், தன் தங்கை, அக்கா, அம்மா வயதிலிர்க்கும் பிற பெண்கள் மீது அவன் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால், ஒவ்வொரு அம்மாவும் நொந்து போவாள்.

பெண்கள் மீதான ஆண்கள் கொண்டிருக்கும் கருத்துகளே வன்முறைகளுக்கு மூலமாகக் கருதுகிறேன். பெண்குழ்ந்தைகளை வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதையும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும். என் மகனால் எந்தப் பெண்ணுக்கும் துன்பம் நேராது என்று நம்பிக்கையுடன் சொல்லும்படி வளர்க்க வேண்டும்.

இந்த விநோதினி காதலிக்க மறுத்ததால் மட்டுமல்ல, ஏற்கெனவே இவர்களிருவரும் காதலர்களாக இருந்தவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். காதலர்களாக இருந்தாலும் ஒரு நபருக்குப் பிடிக்க வில்லை என்றால் விலகிவிடுவதுதான் முறை அது கசப்பாக இருந்தாலும். விநோதினி செய்தது தவறில்லையா என்றால், எத்தனையோ ஆண்கள் வயிற்றில் புள்ளையைக் கொடுத்து விட்டு கம்பி நீட்டுகிறார்கள். பெண்கள் என்ன அமிலத்தையா ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஊற்றுவதென்றால் எத்தனை ஆண்கள் மீது ஊற்ற வேண்டும்.

டெல்லி வன்புணர்வுக்காக வாழ்க்கையிலேயே முதன்முறையாக பாலியல் வன்முறைக்கு எதிராக வாயைத் திறந்தவர்கள், உச் கொட்டி விட்டுப் பின்னர் இவளுங்க ஒழுங்கா இருந்தாத்தான ? என்று வெறியேற்றுகிறார்கள். கணவனாக இருந்தாலும் பெண் விருப்பமின்றி உடலுறவு கூடாது என்பதுதான் நியாயம். பெண் ஆபாசமாய் உடையணிந்தால் வன்முறை செய்யலாம் என்று உரிமை கோரும் மனநோயாளிகளுக்கு இதுதான் பதில்.

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான கருத்துக்களையும் இயன்ற வழியிலெல்லாம் எதிர்க்க வேண்டும். ஒரு கருத்து சமூக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்பொது ஏனென்றால் அது வன்முறைகளையும் குற்றங்களையும் நியாயப்படுத்தும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கற்பழிப்பு என்ற சொல்லின் பொருள்தான் என்ன ?

தற்போது  டெல்லி நிகழ்வு பரபரப்பான பேசப்படு பொருளாகியிருப்பதால் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வரை எல்லா இடத்திலும் கற்பழிப்பு என்ற சொல்லைக் காணவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது. எல்லோரும் சொல்லி  வைத்த மாதிரி கற்பழிப்பு கற்பழிப்பு என்று எழுதித் தள்ளுகிறார்கள். அதன் பொருள்தான் என்ன ? ஒரு சொல்லின் பொருள் தவறு என்று தெரிந்த பின்னும் இன்னும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன ? அறியாமையா இல்லை அலட்சியமா ?

ஒரு சொல்லில் மூலம் வரலாற்றையெ மாற்றிச் சொல்லி விட முடியும். பல உதாரணங்கள் இதற்குக் குறிப்பிடலாம்.

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு - ஆரியரும் படையெடுத்துத்தானே வந்தார்கள் ?

கொலம்பஸ் அமெரிக்காவைக் "கண்டுபிடித்தார்" - அது அங்கேதானே இருந்தது பிறகென்ன கண்டு பிடிப்பது. இந்த கவர்ச்சியான செய்தியில் கொலம்பஸ் என்ற கொலைகாரன் வரலாறு வரை பல செய்திகள் மறைக்கப்படுகின்றன.

அன்னை இந்திரா காந்தி - இவரது உண்மையான பெயர் இந்திரா கான் என்று இருந்திருக்க வேண்டும். இவர் மணந்தது ஒரு பார்சி முஸ்லிமை. இவரது கான் என்ற (முஸ்லிம்) குடும்பப் பெயர் இந்தியாவை ஆள்கின்ற குடும்பத்திற்கு வரக்கூடாது என்பதற்காக காந்தி தனது பெயரை விட்டுக்கொடுத்தார்.

அடுத்து அண்ணல் காந்தியடிகள் மஹாத்மா காந்தியடிகள் என்று பல இடங்களில் பெயர் சொல்லி புகழ்கிறார்கள். காந்தியை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர், ஜாதியை ஒழிக்கப் பாடுபட்டவர் என்றும் பல பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணியாக எடுத்துக் காட்டுகிறார்கள். மராட்டியத்தைச் சேர்ந்த ஜாதி எதிர்ப்பாளர் ஜோதிராவ் பூலே என்பவரைத்தான் முதன் முதலில் மகாத்மா என்று அழைத்தனர். அதே போல் அம்பேத்கர் அண்ணல் என்று அழைக்கிறோம். இவர்களது பட்டப்பெயரை காந்திக்குத் தாரை வார்த்து விட்டதால் மேற்கண்டவர் யாரேன்றே எவருக்கும் தெரியாது. அதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளுக்குப் போராடிய பல போராளிகளை இருட்டடிப்பு செய்கின்றனர்.

ஜப்பானில் அணு குண்டு வீசியதை மறக்கடிக்க கொண்டாடப்படும் உலக நட்பு நாள்.

இப்படிப் பலவாறு சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது கற்பழிப்புக்கு வருவோம்.

                                                         

இதைத் தெரிந்துதான் பயன்படுத்துகிறீர்களா இல்லை அறியாமலா ? நான் சொல்வது பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, வன்கலவி, வல்லாங்கு என்று பல சொற்கள் இருக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து கற்பழிப்பு என்றே எல்லாரும் சொல்கின்றனர்.

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று எழுதுவது தேவையில்லாததும், தவறானதும் ஆகும். ஆனால் ஆர்வத்தினால் அப்படி எழுதுகின்றனர். இதை மட்டும் ஏன் இப்படி ? இன்னொன்று பெண்களை ஃபிகர் என்றுதான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் போய் கற்பழிப்பு என்று சொல்ல வேண்டாமே என்று சொல்ல சலிப்பாக இருக்கிறது.

இந்த கற்பு என்பதே பெண்களை அடக்கி வைத்து ஆண்கள் ஊர்மேய்வதற்கு உருவான ஒரு கருத்து. இதை இன்னும் பயன்படுத்துவதன் உள்நோக்கம் என்ன ? ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் போது அவளை ஒரு விபத்தைச் சந்தித்தவளாகவே நடத்த வேண்டும் அல்லாது களங்கப்பட்டவள் என்ற குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடாது. ஒரு வெறிநாய் கடித்து விட்டால் ஏற்படும் பரிதாப உணர்ச்சி மட்டுமே ஏற்பட வேண்டும். அய்யய்யோ வாழ்க்கையே போச்சே என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.

முதலில் கற்பு என்றால் என்ன ? அதை எப்படி அழிக்க முடியும். கன்னித்தன்மை பறிபோனதைச் சொல்கிறார்களா ? கன்னித்தன்மை போனால் அது எப்படி கற்பழிப்பாகக் கருத முடியும். சரி பருவமடையாத குழந்தைகள் கூட வன்முறைக்கு ஆளாகிறார்கள் அதை எப்படி கற்பழிப்பு என்று சொல்கிறார்கள். கற்பு என்பது மனம் தொடர்பானது என்று கதை சொல்வார்கள். குழந்தைகளுக்கு பாலியல் குறித்தும் அதன் ஒழுக்கும் நேர்மை கலாச்சாரம், கற்பு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. பிறகெப்பப்படி பாலியல் வன்முறையின் போது அவர்களின் கற்பு அழியும்.

கற்பு, ஒழுக்கம், நடத்தை, கள்ளக்காதல் எனப் பல சொற்களும் பெண்களைக் குறிவைத்தே எழுதப்படுகின்றன. இந்த டெல்லி நிகழ்வு பெரிய பரபரப்பானதால், பலரும் உச் கொட்டினார்கள். இதில் நாளும் பார்வைகளாலும், பேச்சுக்களாலும் பெண்களை வன்முறை செய்து வரும் பலரும் இதைப் பற்றி பேசினார்கள் கோபப்பட்டார்கள்.

என்னுடைய நட்பு வட்டாரத்தில் ஒரு உள்ளம் இனிமே அந்தப் பொண்ணு வாழ்றதே வேஸ்ட்(மானம் போயிடுச்சாம் எல்லாருக்கும் தெரிஞ்சிரிச்சாம்) என்று திருவாய் மலர்ந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பாதிப்பேராவது இப்படித்தான் நினைத்திருப்பார்கள். இப்படிச் சொல்ல வைப்பது என்ன வகையான மனப்பான்மை. கற்பழிப்பு என்ற கருத்துப் பொதிந்த சொல்லை பயன்படுத்துவதும் ஒரு காரணமில்லையா ?

ஆணுக்கும் கற்பு உண்டு என்று காளை மாட்டில் பால் கறக்கச் சொல்கிறார்கள். குப்புசாமி கற்பழிக்கப்பட்டார் என்று செய்தியைத் தலைப்பாகப் போட்டால் எல்லாரும் சிரிப்பானுகளா இல்லையா ? பிறகெதற்கு இந்த நோக்காடு ?

மாற்றுத்திறனாளர்களை ஊனமுற்றவர் என்றும், திருநங்கைகளை அலி என்றும் எழுதுங்களேன் பார்ப்போம், அதை மட்டும் பக்குவமாக மாற்றிக் கொண்டு எழுதும்போது இதை எழுதுவதற்கு மட்டும் ஏன் வலிக்கிறது.

ஏதோ ஒரு இடத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் பட்டியல் பார்த்தென் அதில் பெண்களுக்கான பெயர்களில் கற்பு என்று இருந்தது.

கற்பழிப்பு என்று எழுதுவதை நிறுத்துவது அவ்வளவு கடினமா என்ன ? நிறுத்துங்களேன். எத்தனை முறைதான் மெனக்கெட்டுச் சொல்வது.
Download As PDF
Bookmark and Share

Post Comment