சடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுமனை புகுவிழா மந்திரம் ஓதுவது ஜாதித் தீட்டைக் கழிக்கவே

இந்து மதம் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை வழிபாடு விடயத்தில், ஆனால் சடங்குகளை பெரும்பான்மையினர் விடாபபிடியாகக் கடைப்பிடிக்கின்றனர். இது போன்ற சடங்குகளில் ஜாதியைக் காப்பாற்றும், குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு செய்யும் மனிதத்திற்கே ஊறு செய்யும் விதிகள் அடங்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு இன்றியமையாத சடங்கு புதுமனை புகுவிழா அல்லது புண்ணியாச்சினை. 

பெரும்பாலும் வீடு கட்டுமானப் பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கைப்பட்ட கால்பட்ட இடம் என்பதால் அவர்களின் உழைப்பினால் விளைந்த வீடே ஆயினும் அவர்களைக் கேவலப்படுத்தும் சடங்கினை நடத்தியே புது வீட்டுக்குள் குடியேறுகிறார்கள் வீட்டின் சொந்தக்காரர்கள். இதில் இந்த ஜாதிதான் என்றில்லாம் எல்லா ஜாதியினரும் செய்யும் சடங்காகும். இந்தச் சடங்கு சக மனிதனைக் கேவலப்படுத்துவதோடல்லாமல் உழைப்பையும் இழிவு செய்கின்றது. 

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."

(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)

இதைத் தெரிந்தேதான் மேல்ஜாதிக்காரர்கள் பார்ப்பனரை அழைத்து ஹோமம் வளர்த்தி புகுமனை புதுவிழா நடத்தி ஜாதித் தீட்டைக் கழிக்கிறார்கள். இது என் வீட்டிலும் நடந்தது. எனக்கு நேரிடையாகவே அனுபவமும் இருக்கிறது. சடங்குகளின் மீதுள்ள வெறுப்பினால் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத நான், இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று வருந்தினேன். 

எனது உறவினர்கள் இது போன்றதொரு புண்ணியாச்சினைக்குச் சென்று விட்டு வந்தார்கள்.

"எங்கு சென்றீர்கள்" என்றேன்.

குறிப்பிட்ட உறவினரின் பெயரைச் சொல்லி அவரது வீட்டுக்கு என்று குறிப்பிட்டார்கள்.

"அவர்கள் புது வீடு கட்டியிருக்கிறார்களா ?"  என்று கேட்டேன்.

"இல்லை பழைய ஊட்டைத்தான் கொஞ்சம் இடித்து கட்டியிருக்கியிருக்கிறார்கள்"

"அப்பறமேன் ? பழைய வீட்டுக்கு எதுக்கு புண்ணியாச்சினை ?" என்று கேட்டேன்.

"ஆமா சக்கிலியன் பறையனெல்லாம் வீட்டுக்குள்ள வந்து வேலை பாத்திருக்கான் அதான் புண்ணியாச்சினை பண்ணாங்க" என்று பதில் சொன்னார். பதில் சொன்ன உறவினர் ஒரு பெண். 
x
Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்தப் பெண் தலை குனியவில்லை !!

 

இரண்டு காணொளிகளையும் கண்டிருந்தால் யார் மீது தவறு என்று புரியும் . நான் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதில்லை. இஸ்லாமியப் பெண்மணியில் ஒரு இடுகையை பதிந்திருந்தார்கள். அதில் இக்காணொளியை மையப்படுத்தி இருந்தது. அதில் பின்னூட்டமிட்டிருந்த சிலர் இதனால் இஸ்லாமிய சமூகத்திற்குத் தலை குனிவு என்று பொருள்படும்படி எழுதியிருந்தார்கள். நான் அதை மறுக்கிறேன்.



இந்த நிகழ்ச்சியின் இக்குறிப்பிட்ட பெண் பங்கு கொண்ட இரு காணொளிகளையும் கண்டேன். ஸீ தமிழ் தொலைக்காட்சி மிகச் சிறப்பாக பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்து அடுத்தவன் பிரச்சனையைப் பற்றிப் பேசித் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளும் நபர்களின் தினவெடுத்த மூளைக்குத் தீனி போடவும், கலாச்சாரக் காவலர்கள் கரித்து கொட்டவும் ஏற்ற் வகையில் எரிச்சலைக் கிளப்பும் பின்னணி இசையுடன் ஒளிபரப்புகிறார்கள். 

இதில் இருப்பது என்னவென்று எல்லோர்க்கும் புரிந்திருக்கும். முஸ்லிம் பெண் இந்து ஆண் இருவரும் காதலித்திருக்கிறார்கள். இப்போது பெண் கருவுற்றிருக்கிறாள். ஆணோ அவளை ஏற்க முடியாது சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை புகார் கொடுத்துக் கொள் என்கிறான். அவள் அழுது கெஞ்சுகிறாள். அவன் மீது புகார் கொடுப்பதற்கல்ல, சேர்ந்து வாழத்தான் இங்கு வந்தேன், அவனை வரவைத்தேன் என்கிறாள். அவனோ அவள் இவ்வளவு அவமானப்படுத்திய பிறகு சேர்ந்து வாழமுடியாது என்கிறான். அவன் திருமணம் செய்துகொள்வதுதான் தீர்வு, இல்லையெனில் அவன் மீது புகார் அந்தப் பெண் கொடுத்தால் அதை ஆதரிப்போம் என்கிறார் லட்சுமி.

உண்மையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பது அந்த ஆண்தான். ஆண்கள்தான் இதற்குத் தலை குனியவேண்டும். அந்தப் பெண் தலை நிமிர்ந்துதான் நிற்கிறாள். தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கேட்டுத் தலை நிமிர்ந்துதானே நிற்கிறாள். இதில் என்ன தவறு ?  இதை ஏன் அப்பெண்ணுக்குத் தலை குனிவு என்று சொல்ல வேண்டும். அவனிடம் கெஞ்சிக் கேட்டதாலா ? அவனைப் போன்றவனிடம் போய்க் கெஞ்சுவது பெண்ணுக்குத் தலை குனிவுதான். அவள் கேட்ட கேள்விகளுக்கு எதுவுமே சரியான பதில் அவனிடமிருந்து வரவில்லை, அவமானப்படுத்திவிட்டாள் என்கிறான். அவளோ அவனது அண்ணன் இருப்பதால்தான் புகாரளிக்க துணிச்சலாகச் சொல்கிறான் என்கிறாள். அவன் பேந்தப் பேந்த முழிப்பதும் அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்புவதும் அவன் பொய் சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.

ஆக மொத்தம் இவனுக்குக் கசந்து விட்டதால் மொன்னைக் காரணத்தைச் சொல்லி இவளை வேண்டாமென்கிறான். அவள் அவனுடன் வாழ்வதுதான் வேண்டும், புகாரளிக்க விருப்பமில்லை என்கிறாள். அவன் பொய் பேசுகிறவன் என்பதை ஏற்கெனவே தெரிந்துதான் காதலித்தேன் என்கிறாள். என்னை கேட்டால் இவனிடமெல்லாம் கெஞ்சுவது அவளது தன்மானத்திற்கும், பண்புக்கு இழுக்கு என்றுதான் கூறுவேன். அவன் வந்து  கெஞ்சினால் கூட இவள் ஒத்துக் கொள்ளக் கூடாது. இவனைத் தூக்கியெறிந்து விட்டு வாழவேண்டும். வாழ்க்கை விரைவில் அவளுக்கோர் நல்வழிகாட்டும். அவளைப் பார்த்தால் பக்குவப்பட்டவளாகவே தெரிகிறது.

பெண்கள் என்றாலே காதலித்து ஏமாற்றுகிறவர்கள் என்று குறுந்தகவல் அனுப்புகிறவர்கள், ஒரே சமயத்தில் இரண்டு மூன்று ஃபிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டே "வேணாம் மச்சா வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு" என்று நிலைத்தகவல்கள் போட்டு "லைக்"கள் வாங்கும் அறிவாளிகளுக்கு இந்தப் பெண்ணின் காதல் சமர்ப்பணம். இது பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

பெண் காதலிக்க மறுத்ததற்காக அமிலத்தை ஊற்றுவது, பாலியல் வன்முறையை ஏவுவது, கொலை செய்வது என்று வெறியாட்டம் போடும் ஆண்களுக்கு நடுவில் காதலுக்காக இரந்து நிற்கும் இவள் பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

ஆண்கள் எல்லாம் தியாகிகள் என்பது போலவும் பெண்கள் என்பவர்கள் பொழுது போக்கவும், பணத்துக்காகவும், ஊர்சுற்றுவதற்காகவும்  மட்டுமே காதலிப்பதாக நடிக்கிறார்கள் என்று அயோக்கிய நடிகன் பேசும் குப்பை வசனத்துக்காகவும் காது வரை சிரித்து மகிழும் ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்.

இதை வைத்து காதலிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வோர்க்கும் சமர்ப்பணம்.

ஆண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மேட்டர் முடிச்சியா, கை வச்சிட்டியா என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதே ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினால் அவளே ஒரு மேட்டர், கெட்டுப் போனவள், சோரம் போனவள் என்று சொல்வார்கள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம். பெண்களைக் குற்றவாளியாக்கும் ஆண்களின் இரட்டை நாக்கு. ஆண்கள் கலவி செய்தால் அது வெற்றி, அதையே பெண்கள் செய்தால் அது தோல்வி. நல்ல மதிப்பீடு.

ஆண்கள் தாங்கள் அயோக்கியர்களாக இருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பெண்கள் ஏன் அயோக்கியனையே காதலிக்கிறார்கள், அவர்களையே விரும்புகிறார்கள் என்று எரிச்சல்படுவார்கள்.
இப்போது இந்தப் பெண்ணுக்கு  இந்த சமூகத்திடம் கெட்ட பெயர், அல்லது இந்த சமூகமே காறித் துப்புகிறது என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். இந்த நிகழ்ச்சியின் போது இந்தப் பெண்ணுடைய தங்கையும் யாரையோ காதலிப்பதாக அவன் சொல்லி விட்டான். இதனால் அந்தப் பெண்ணுக்கும் கெட்ட பெயர். இங்கு இந்த சமூகம் என்ன சொல்கிறதென்றால், ஒரு பெண் காதலித்தால் அவள் களங்கப்பட்டவள். இதெல்லாம் இந்த சமூகம் வைத்திருக்கும் மதிப்பீடுகள்.

நான் மனித உணர்வுகளுக்குத்தான் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜாதி, மதம் போன்ற மாயக் காரணங்களுக்கல்ல. மனிதனுக்குத்தான் மதமே தவிர, மதத்துக்காக மனிதனல்ல. அந்த வகையில் காதல் என்பது மனித உணர்வுகளில் ஒன்று. நான் காதலை ஆதரிக்கிறேன். அதுதான் பெரிய சவால். இதில்தான் ஆபத்தும் அதிகம், அதிக கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்

ஒன்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதாலேயே அது சரியானது என்றாகிவிடுமா ? இல்லை ஒன்றை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே அது தவறானதாகிவிடுமா? நான் அநீதியான இந்த சமூகத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது வைக்கும் அளவுகோலையும் மதிப்பதில்லை. இந்த சமூகம் எதை மதிக்கிறது என்று சொன்னால் ஒரு பெண் படிக்கிறாள், வேலைக்குப் போகிறாள். திருமணம் செய்யும் வயது வருகிறது. பின்பு வேலையையும் விட்டு விட்டு பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குச் சென்று கணவனுக்கும்  அவன் வீட்டினர்க்கும் பணிவிடை செய்து வாழ வேண்டும். 


எத்தனை பவுன் நகை, எத்தனை பணம், சீதனமாக என்னென்ன கொடுத்தார்கள். என்பதைப் பற்றி சமூகத்தினர் தமக்குள் பேசிக்கொள்வர். பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் எப்படி, அழகு எப்படி குடும்பம் எப்படி என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும்.  இதுதான் இந்த சமூகம் மெச்சத்தக்க குணம் என்று எதைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிதான் பெண்கள் இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் கூடாது. நடந்தால் கொலை கூட நடக்கும்.  இப்படி ஜாதிவாரியாக சீதனம், நகை என்று என்ற தலையை அடகு வைத்து கடன் வாங்கி வணிகத்தைத்தான் நடக்கும் திருமணம் சமூகம் கொண்டாடுகிறது. ஜாதிக்காரன் என்பதற்காக கொஞ்ச நஞ்சம் சீதனம் கொடுக்கல் வாங்கலில் குறைந்தால் கூட திருமணம் நடப்பது பிரச்சனை ஆகிறது. இப்படிப் பெரும்பான்மையான திருமணங்கள் நடந்தாலும், சீதனத்திற்காக மருமகளைக் கொடுமை, கொலை செய்வது வரை நடக்கிறது. இப்படி நடக்கும் திருமணங்கள் கூட சில நேரம் தோல்வியில் முடிகின்றன. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், திருமணமே தவறு திருமணமே வேண்டாம் என்று கூட வேண்டாம் சீதனம் தருவது தவறு என்று கூட பெரிய அளவில் மாற்றத்தைக் காணோம். திருமணம் என்ற சடங்கு அல்லது வணிகம் சமூகத்தின் முழு ஆதரவுடன் ஆரவாரமாக நடந்து வருகிறது.

அனைவரது ஆதரவு, பொருளாதாரச் சிக்கலின்றி நடக்கும் திருமணங்களிலேயே இத்தனை பிரச்சனையிருக்கும்போது, பக்குவமும், அனுபவமும் இல்லாத இரண்டு பேர் எல்லோரையும் எதிர்த்து நடக்கும் காதல் திருமணங்களில் இன்னும் சிக்கல்களும், சவால்களும், போராட்டமும் அதிகம் தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒழுக்கங்கெட்டவர்கள், ஓடுகாலிகள், குடும்ப மானத்தை வாங்கியவர்கள் என்ற பட்டப்பெயர்கள் சமூகத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கும். இப்படி இருக்கிறது நிலைமை. காதலிப்பவர்களெல்லாம் பெற்றோரை ஏமாற்றுகிறவர்கள், மானத்தை வாங்குகிறவர்கள் என்றெல்லாம் ஏசுகிறார்கள். பெற்றோர் நடத்தி வைக்கும் வணிகத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் ஆணும் பெண்ணும் தன்மானமற்றவர், உணர்ச்சியற்றவர்கள் என்று கருதலாமா ?

யாரும் நம்மை 20 வருடம் பெற்று வளர்த்துக் காப்பாற்றும் பெற்றோரை ஏமாற்றியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தெரியாமல் ஊர் சுற்றுவதில்லை,  வேறு மத, ஜாதிக்காரனைக் கட்டிக் கொண்டு ஓடுவதில்லை. நான் இன்னாரைக் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொல்லுமளவுக்கு பக்குவப்பட்டவர்களாகவா பெற்றோர் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உயிருக்காவது உத்தரவாதமிருக்கிறதா ? காதலென்றாலே கல்லைப் போட்டுக் கொல்லுமளவிற்கு ஜாதி வெறியும், மதவெறியும் பிடித்து இருக்கிறார்கள். தலையை வெட்டிக் கொல்கிறார்கள்., கழுத்தை நெரிக்கிறார்கள், நஞ்சை ஊட்டுகிறார்கள். எரித்தும் கொல்கிறார்கள். கட்டாயத் திருமணம் விருப்பமில்லாம செய்விக்கிறார்கள். காதலை ஏற்றுக் கொள்வது போல் நடித்து வீட்டுக்கு வரவைத்துக் கொல்கிறார்கள். இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பிரித்து விட முயற்சிக்கிறார்கள். இப்படி எழவெடுத்த எதற்கும் பயனில்லாத ஜாதியைக் கட்டிக் கொண்டுதான் வெறிகொண்டு அலையும் பெற்றோர்கள் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். காதலிப்பவர்கள் தவறு செய்கிறார்களாம், பெற்றோரை ஏமாற்றுகிறார்களாம்.

தனிப்பட்ட மனிதர்களின் திருமணத்தில் கூட மதமும், ஜாதியும்தான் போலி கௌரவம், குடும்பமானம் என்ற பெயரில் மூக்கை நுழைக்கிறது. அதற்காக பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தையும் நிராகரிக்கிறார்கள் பெற்றோர். ஒரு வேளை பெற்றோர் சம்மதித்தாலும் கூறுகெட்ட ஜாதி, மத, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கூறு கெட்ட சமூகம் அதை தடுக்கிறது.

எல்லோரும் முகம் சுளிக்கும் இன்னொன்று, இவர்கள் வீட்டிலேயே திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டார்கள், அவள் கருவுற்றாள் என்பது. இது தவறாகவே இருக்கட்டும். நானும் இதைத் தவிர்க்கவே சொல்கிறேன். இருப்பினும் இதை ஒரு உலக மகாக் குற்றமாகச் சொல்வதால் இந்தப்புனிதத்தையும் கேள்வி கேட்க வேண்டும்.  வீட்டிலேயே இக்கூத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பார்கள். இதே வெளியில் போய் செய்திருந்தாலும் வெளியே போய்க் கூத்தடித்திருக்கிறார்கள் என்பார்கள். சரி இப்போது திருமணத்தில் என்ன நடக்கிறது ? யாரென்றே பேசிப் பழகாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். இப்போது அலைபேசியின் புண்ணியத்தால் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்கிறது. அதே 10 வருடங்கள் முன்னால் என்ன நடந்தது ? யாரென்று தெரியாத ஒருவருடன் திருமணம் செய்த பிறகு அன்றிரவு உடலுறவு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அவருடன் குடும்பம் நடத்த வேண்டும். அந்த நபருக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஏனெனில் இது பெற்றோர் உற்றார் பணம் செய்து ஊரைக் கூட்டி செலவு செய்து வைத்த திருமணம், புனிதமானது. பேசாமல் கொள்ளாமல் உடலுறவு கொண்டுவிட்டு அடுத்த நாளிலிருந்து பேசிப் பழகிக் கொள்ளலாம். வாழ்ந்து கொள்ளலாம். இந்த அசிங்கத்தை ஒன்றும் உறுத்தலில்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் 7 வருடங்கள் நன்கு பழகி புரிந்து காதலித்தவர்கள் செய்தால் அதைக் காறித் துப்புகிறார்கள். நன்றாக இருக்கிறது.

என்ன இருந்தாலும் பெண் இதை ஒத்துக் கொள்ளலாமா ? இப்போது அவள்தானே அவமானப்பட்டு நிற்கிறாள். பெண் பலவீனமானவள் என்பதால் தானே ஒரு ஆண் அவளிடம் அன்பைக் காட்டி தேனொழுகப் பேசி உடலுறவுக்கும் சம்மதிக்க வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம் 


பெற்றோரும் சமூகமும் சேர்ந்து, திருமணம் செய்து கொண்டு கணவனுக்கு ஒத்தாசையாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை கலாச்சாரம் என்றும் நம்ப வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம். 

இதை மட்டும் பெண் இதை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா ?  இல்லையே அதுதான் பெண்களுக்கு நல்லது என்றுதானே போதிக்கிறார்கள். இரண்டையும் நம்பித்தான் அவள் செயல்படுகிறாள். இதில் ஒன்றை மட்டும் குறை சொன்னால் எப்படி?

ஒரு பெண் கருவுற்றால் அது அவளது "தவறோ" அல்லது அவளுக்கு மட்டுமே "பொறுப்பு" என்று ஆகாது. அதை செய்த ஆணுக்கும் அதில் பாதி பங்கு உண்டும். ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறாள் என்றால் அது அவள் மட்டும் செய்யும் தவறல்ல. அதற்குக் காரணமான அந்த ஆணும்தான் அதற்குப் பொறுப்பாவான். அது போலத்தான் இதுவும். குழந்தை பெண்ணின் வயிற்றில் இருப்பதால் மட்டும் அவள் களங்கமானவள், தன்னையே இழந்து விட்டாள், கற்பு போச்சு, கண்ணியம் போனது என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்புகளே. அவைகள் சொற்பிழைகள், கருத்துப் பிழைகள். பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லும் தந்திரம்.

5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள் என்று செய்தி வருகிறது. 5 வயது சிறுமிக்கு கற்பு எங்கே இருக்கிறது என்று தோண வேண்டாமா ? அது மாதிரிதான் இதுவும் பெண்ணுக்கு மட்டும் எப்படி கண்ணியம் கற்பு எல்லாம் அழிகிறது, மானம் போகிறது இந்தப் போலிக் கற்பித்தத்தைச் செய்த சமூகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். பெண்களின் உணர்வை மதிக்காத இந்த சமூகத்தை ஏன் நாம் மதிக்க வேண்டும். கற்பு, கண்ணியம், பாதுக்காப்பு, குடும்ப மானம் என்று எல்லா எழவையும் பெண்களின் மீது சுமத்தி அவர்களை அலைக்கழிக்கும் சமூகத்தின் தூற்றுதலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்.

இந்தக் கற்பு, ஆணாதிக்கம் பற்றித் தெரிந்தவரே அதை எதிர்க்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணைக் காரணம் காட்டி, நான் அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி ஆயிட்டியே, மானம் போச்சே, வாழ்க்கை போச்சே என்கிற பாணியில் பேசுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறாள். இதில் அவளது மானமோ, கண்ணியமோ எதுவும் போகவில்லை. காதலிக்கும் பெண்களை இழிவாகப் பேசுகிறவர்கள்தான் கண்ணியமில்லாதவர்கள். அப்படி மானம் போனது என்று சொல்கிறவர்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்கட்டும். அவள் தலைகுனியவில்லை. தேவையுமில்லை.

காதலிக்கும் பெண்களே !!

ஆண்கள் எச்சரிக்கை
சமூகம் எச்சரிக்கை
கண்ணியம் எச்சரிக்கை
தூற்றுதல் எச்சரிக்கை
கற்பிதங்கள் எச்சரிக்கை
Download As PDF
Bookmark and Share

Post Comment

திருமணச் சந்தையின் நிலவரம் அச்சமாக இருக்கிறது - இவர்கள் இப்படித்தான் - 3

என்னவாகப் போகிறது தெரியவில்லை. எதிர்காலத்தில் திருமணத்திற்கான சடங்குகளும் செலவுகளும் மிகப் பெரிய அளவில் பரிணமிக்கப்போகின்றன என்பது  மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மாப்பிள்ளை வீட்டினரின் பேராசை தெரிந்த்த கதைதான். தற்போது அது முன்னேறி பெண் வீட்டுக்காரர்கள் ஆட்டம் போடத் துவங்கியுள்ளனர்.

பெரும்பான்மையான பெண்கள் இன்னும் 50 வருடம் பின்னோக்கியே வாழவேண்டிய சூழலில் வசதியும் வாய்ப்பும் ஓரளவு வாய்க்கப் பெற்றவர்களோ, தமக்குக் கிடைத்த வாய்ப்பை வேறுவழியில் பயன்படுத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான வழக்குகளை தவறாகப் பயன்படுத்துகிறவர்கள், பாலியல் வன்முறை வழக்குகளைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்கள் என பட்டையைக் கிளப்புகின்றனர். இதே போல் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளையயும் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதையே சாக்காக வைத்து இது போன்ற வரதட்சிணைக் கொடுமை, தீண்டாமை, பாலியல் வன்முறை வழக்குகளெல்லாமே பொய்யாக சித்தரிக்கப்படுபவை என்று சொல்லி வருவதையும் நாம் காண்கிறோம்.

தற்போது கணவர் சங்கம் வைத்து ஆண்கள் உரிமைக்காகப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்தது திருமணம் அதன் செலவு குறித்து. இப்போது நடுத்தரக் குடும்பங்களில் மாப்பிள்ளை பார்ப்பவர்கள் மிகப் பெரிய தகுதிகளை எதிர்பார்க்கின்றனர். பெண்கள் குறைந்த பட்சம் இரண்டு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் கணக்கு வேறு. இவர்கள் திருமணம் செய்து வைப்பதற்காகவே வளர்க்கப்படுகின்றனர். திருமணம் நடக்கும் வரை சும்மாயிருக்க வேண்டாமே என்று படிக்க வைக்க அனுப்பப்படுகின்றனர்.

படித்த முடித்தவுடன், ஏற்ற துணை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் படித்ததைக் கொண்டு ஒரு பணியைத் தேடிக்கொள்ளவும் முடியாது. கல்யாணம் ஆகப்போற பொண்ணு வேலைக்கு ஏன் போக வேண்டும் என்றுதான். இவர்களுக்குப் படிப்புச் செலவு, திருமணம், நகை, சீதனம், இன்ன பிற பொருட்கள், சீமந்தம், குழந்தை பிறந்தால் ஆகும் செலவு என ஏகப்பட்ட சடங்குகள். செலவுகள். இதையெல்லாம் செய்து முடிக்க ஆகும் செலவு நிச்சயம் கடன் வாங்காமல் முடியாது அதை அடைக்க ஆகும் பல வருடங்கள் இல்லையென்றால் பரம்பரை சொத்து கொஞ்சம் விற்க வேண்டும். இதெல்லாம் பெண்கள் பக்கப் பிரசச்சனைகள்.

ஆண்களுக்கு வேறு பிரச்சனை. பாதிப்பேருக்கு நிரந்தர வேலையே தொழிலோ இல்லை. எல்லா நடுத்தரப் பெற்றோரும் அதிகமாக எதிர்ப்பார்க்கத் தொடங்கி விட்டனர். முன்பெல்லாம் வரதட்சணை என்ற சொல் எல்லாரையும் அச்சுறுத்தும். தற்போது பெண் வீட்டுக்காரர்களின் விதிமுறைகள் மூச்சு முட்ட வைக்கிறது. 

50000 சம்பளம், சொந்த வீடு, சொத்து என அவர்களின் நிலைக்கேற்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் நிலைத்தகவல் போட்டிருந்தார்கள் இப்படி, வரதட்சணை கேட்பது தவறு ! ஆனால் சொந்த வீடு கார், ஒரு இலட்சம் சம்பளம் உள்ள பையன் வேண்டும் என கேட்பது தவறில்லையா என. அது உண்மைதான் கிட்டத்தட்ட.

போதாக்குறைக்கு ஜாதகம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்கள். ஜோதிடர்களுக்கும், தரகர்களுக்கும் செமயான வணிகம் அது. யார் இது வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்று பார்த்தால், 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்காமலே திருமணம் செய்து வாழ்ந்து காட்டிய இன்றைய பெற்றோர்தான். பல நவீன சடங்குகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஒழித்துக் கட்ட வேண்டிய ஜாதகம், சீதனம் என தேவையில்லாத காலத்திற்கொப்பாத பெண்ணடிமைச் சடங்குகளையெல்லாம் இன்னும் கட்டிக் கொண்டு அழுகின்றனர்.  படித்த பெண்களே இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அலட்டிக் கொண்டாலும் யாரும் கேட்பதாயில்லை. அதை நினைக்காமலிருந்தால் மனச்சுமை படத் தேவையில்லை அவ்வளவே.

முன்பு இலையில் அருந்தியது போய் பஃபே முறைக்கு மாறிவிட்டார்கள். பிளாஸ்டிக் டம்ளருக்கு மாறியாகிவிட்டது. இனி இலை மட்டும்தான் மிச்சம். அதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தொடங்கினாலும் இன்னும் நவீனமாகிவிடும். ஆனாலும் ஜாதிக்குள் திருமணம், தாலிகட்டுவது, காரை சீதனமாகக் கொடுப்பது, அதை திருமண வரவேற்பிலேயே முன்னாடி நிற்க வைத்து ஒரு காட்டு காட்டுவது என்று நடந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் சொந்த ஜாதியில் பெண் கிடைக்காவிட்டால் வேறு ஜாதியில் பெண் எடுப்பதும் நடக்கிறது. மேலே போய் மலையாள நாட்டில் போய் வெள்ளைத் தோல் பெண்கள் எடுத்து வரும் மறத் தமிழர்கள் இருக்கிறார்கள். அதே போல், ஜாதகம் பொருந்தவில்லை எனினும், இரண்டு வீட்டினருக்கும் பிடித்துப் போய்விட்டால் திருமணம் நடந்து விடுகிறது. ஜாதகத்தைக் கண்டுகொள்வதில்லை. இல்லையென்றால் இன்னொரு ஜோசியத்தைப் பார்த்து ஏதாவது ஒரு பரிகார பூஜையை நடத்தி விட்டால் போச்சு. ஜாதகம் என்பதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கே. இன்னும் சில ஜோதிடர்கள் இரண்டு பேரை சேர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கபடி மாற்றியும் கொடுத்து விடுகிறார்கள். இப்படித் தேவைப்பட்டால் எந்த சம்பிரதாயத்தையும் சடங்கையும் மாறி செய்கின்றனர். ஆனால் அதே ஒரு பருவமடைந்த வேறு ஜாதியில் ஆணும் பெண்ணும் தனிப்பட்ட முறையில் மனமொன்றித் திருமணம் செய்வதை மட்டும் எதிர்க்கின்றனர்.

3 என்ற படத்தில் பாடல் பார்த்தேன். அதில் நாயகன் நாயகிக்கு சாராயக் கடையில் வைத்து தாலிகட்டுவான். இது  போன்றதுதான் சடங்குகளும். காதலனும், காதலும் ஒன்றாக மதுக்கடைக்குச் செல்வது வரை ஜாலி, என்டெர்டெயின்மென்ட் என்று எடுத்துக்கொள்வார்கள், அதே திருமணம் என்றால் தாலியைத்தான் கட்ட வேண்டும் என்ற கற்பிதம் இருக்கிறதே அதுதான், நம்மாளுகள் தேவையில்லாத சடங்கை விடுவதில்லை ஆனால் நாகரீகம் என்ற பெயரில் சீரழிவை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள்.

என்து உறவினர் சொன்ன ஒரு செய்தியைக் கேட்ட பின்னர்தான் இதை எழுதத் தோன்றியது. தெரிந்த இரு குடும்பத்தினர் பற்றிச் சொன்னார். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று இப்போதுதான் 4 -வது படிக்கிறது. அதற்கு இப்போதே 80 பவுன் தங்கநகை வாங்கி வைத்து விட்டார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகும்போது, 200 சவரன் போட வேண்டுமென்பதினை இலக்காக வைத்திருக்கிறார்களாம். இன்னொருவரின் வீட்டில் இதே கதைதான் ஆனால் பெண் குழந்தை பிறந்த உடனே வாங்கிச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

தங்கம் விற்கும் விலைக்கு யாரும் அடிபட்டதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ஆட்டம்தான் போடுகிறார்கள். ஆமா சீதனம் வாங்கிறது தப்பா இல்லையா என்ற விவாதமெல்லாம் போயே போச்சு. பெண்ணடிமைத்தனம் என்று அதிகமாகப் பேசுகிறோம். ஆணுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது திருமணத்தில். ஒரு ஆண் தான் விரும்பியபடி வேறு ஜாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றோரிடம் வாங்கிவிட முடிகிறதா ? இன்னும் முக்கால்வாசிப்பேர் ஜாதியை விட மாட்டார்கள். எனக்கு வரதட்சணை வாங்க விருப்பமில்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ?

பொண்ணப் பெத்தவனெல்லாம் இனித் துண்டப் போட்டுட்டு போக வேண்டியதுதான் -

இனியெல்லாம் பசங்களுக்குப் பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்தான் -

இவையிரண்டும் திருமணச் சந்தையின் இருவேறு துருவங்கள்

என்னவோ புலம்பனும்னு தோணியது அவ்வளவுதான்.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment