விநாயகர் சதுர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் சதுர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வினை செய்த விநாயகர் சதுர்த்தி

சற்றே நானும் தினமலர் பாணியில் ஒரு தலைப்பை முயன்று பார்த்தேன். விநாயகர் சதுர்த்தியை வைத்து வினை விதைக்க முயன்றவர்களுக்கு வினை தீர்க்கப்பட்டிருக்கிறது. விநாயகர் வினை தீர்ப்பாரா ? அதாவது கொலைகாரனை காவல்துறையிடம் சிக்க வைப்பாரா ? 

பரவலாக ஒரு சொல்வடை உண்டு. எதிரியை விட துரோகிதான் தீயவன். விநாயகர் சதுர்த்தியை வைத்து தமிழகத்தில் நடத்தப்படும் அரசியல். எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்து மதத்தை விமர்சிப்பது என்பது மதவாதத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் எதிரான குரல். இது எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டில் நிலவும் மூடத்தனத்திற்கு எதிரான குரல். இங்கே பெரும்பான்மை மதமான இந்து மதத்திற்கு எதிராக எழுகிறது, ஏனெனில் பெரும்பான்மை இந்து மதத்திலிருந்தே இறைமறுப்பாளர்கள் உருவாகின்றனர் அவர்கள் தமது மதத்தால் பாதிக்கப்படுவாலும், தமது மதத்தவர் மூடத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற முனைப்பிலிருந்தும் உருவாகிறது. ஏன் என் மதத்தை மட்டும் விமர்சிக்கிறாய் என்பது எவ்வளவு அபத்தமான கேள்வியென்றால், நீ ஏன் உன் மதக் கடவுளை மட்டும் வணங்குகிறாய் என்ற கேள்வியே இதன் பதில். சரி உங்கள் நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் உங்கள் எதிரியாகவே இருக்கட்டும். உங்கள் மதத்தை காக்கிறோம், கலாச்சாரத்தைக் காக்கிறோம் என்பவர்களின் அருகதையைப் பார்க்கலாம். 

குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து குரல் எழுப்பப்படும்போதெல்லாம் அது அதிகமாகக் கேட்கும் குற்றச்சாட்டு. என்னவோ இந்துக்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது போலவும், தமது வீடுகளில் விநாயகர் படத்தை வைத்து வணங்குவதற்குக் கூட அரசு தடை செய்வது போலவும் மதவெறி ஏற்றி விடப்படுகிறது. 

இவ்வருடத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது கிடைத்த இரண்டு நெகிழ்ச்சியான புகைப்படங்கள். 

யாரை எதிர்த்து ஊர்வலம் நடக்கிறதோ அவர்களே தன்முனைப்பாக கலந்து கொண்டது கலவர வெறியர்களுக்கு தொண்டையைக் கவ்வியிருக்கும். இனி அடுத்தது என்ன கேட்பார்கள் ? ஏன் முஸ்லிம்கள் சும்மாதான் வருவார்களா ஆட மாட்டார்களா மோளம் அடிக்க மாட்டார்களா ? சிலையை தூக்க மாட்டார்களா ? வணங்க மாட்டார்களா ? அதானே ?

அவசரத்துக்கு வேற வண்டி கிடைக்கல. பாய் வண்டிதான் கிடைச்சது என்று கொண்டு போகிறார்கள். இவர்களுக்கோ இல்லை இந்த வாடகை வண்டிக்கார்களுக்கோ இன்னும் கலவர நஞ்சு பாயவில்லை என்று நிம்மதியடையலாம்

மற்ற மதத்தை வம்புக்கு இழுத்து கலவரம் செய்யும் நோக்கம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தியின் நோக்கம் பல்வேறு வீடியோக்களால் அவ்வப்போது அம்பலப்படுகிறது.  பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்கள் காவல்துறையின் முன்னிலையிலேயே கற்களால் கடைகளைத் தாக்குவது, விநாயகர் சிலையின் அடியிலே அமர்ந்து மது அருந்துவது ஆகிய வீடியோக்கள் இவ்வருட விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சங்கள். ஒரிரு வருடங்களுக்கு முன்னர் சிலை வைக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார் அது பெரிய அளவில் பரபரப்பாகவில்லை. ஊரும் மறந்து விட்டது. 



தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் உள்ளூர் வேலையில்லா உத்தமர்கள் அனைவரும் வெவ்வேறு குழுக்களாக அல்லது RSS- இன் ஏதாவது ஒரு பெயரில் ஒரு குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு வீடு வீடாகவும் கடை கடையாகவும் சென்று எல்லாருடைய உயிரையும் வாங்கி பணம் வசூலிப்பர். சில இடங்களில் மிரட்டல் செய்தும் "நன்கொடை" பெறப்படும். பணம் தராத கடை உரிமையாளர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுப் பின்னர் ஏதாவது ஊர்வலத்தின் போது கல்வீசித் தாக்கப்படும் இல்லையெனில் சூறையாடப்படும் அபாயமும் உண்டு. இவர்களுக்குள் போட்டி மோதல் இருக்கும். எந்தக் குழு எவ்வளவு பெரிய சிலை வைக்கிறது என்கிற போட்டி எப்போதும் இருக்கும். இதற்கு பெயர் இந்துக்களின் எழுச்சி விழா. கடைசி நாளில் விநாயகர் சிலை கரைப்பு என்ற பெயரில் பல பத்து வாகனங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டு ஊரே மலம் கழித்து சாக்கடை நீரால் நிரம்பியிருக்கும் குளங்களில் கொண்டு போய் விநாயகர் சிலைகளைக் கரைப்பார்கள். இதற்கு காவல்துறை காவல்காத்து நிற்கும். 

இவர்களின் நோக்கமே மதக் கலவரத்தினைத் தூண்ட வேண்டும் என்பதால் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. தொடர்ந்து காவலுக்கு ஆட்களை நிறுத்துகிறது. எனவே இவர்களின் மதக்கலவரத்தைத் தூண்டும் திட்டம் தோல்வியடைகிறது. நீதிமன்றமும் இவர்களுக்கு சில இடங்களில் மற்ற மத்தவர் செறிந்து வாழும் இடங்களில் ஊர்வலம் செல்வதை மறுக்கிறது. இதன் காரணமாகத்தான் ஹெச். ராஜா என்ற மகாத்மா ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று பொங்கினார். 

எடுத்துக்காட்டாக தற்போது கோவையில் நடந்த ஒரு கொலை பற்றிப் பார்ப்போம். விநாயகர் சதுர்த்திக்கு வசூலான தொகையில் கிடா விருந்து வைத்து இருக்கிறார்கள் அதில் நடந்து வரவு செலவுத் தகராறில் ஒருவர் கண்ணாடி புட்டியால் குத்தி இன்னொருவர் இறந்து விட்டார். விநாயகர் சதுர்த்திக்கி இவர்கள் இந்துக்களிடம் பெற்ற பணத்தில் இவர்கள் கறியும் மதுவும் உண்டு களிக்கின்றனர் என்றால், விநாயகர் சிலை வைக்க என்று நம்பி காசைக் கொடுத்து இதைக் கொண்டாடும் இந்துக்கள்தான் இளிச்சவாயர்களா ? இப்படித்தால் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி வசூல் ராஜாக்கள் கும்மியடிக்கிறார்கள் போலும். 


//கோவை நல்லாம்பாளையம் பகுதியை சார்ந்த இளைஞகள் விநாயகர் சதுர்த்திக்காக பல இடங்களில் பணம் வசூல் செய்து விழாவை கொண்டாடியுள்ளனர். பின்னர் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது வசூலான மீதி பணத்தில் கடந்த 30ம் தேதி பாஜக வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர். விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக உறுப்பினர் நாகராஜ் என்பவரை, குடி போதையில் இருந்த  பாஜக இளைஞர் அணி  நல்லாம்பாளையம் பகுதி தலைவர் குட்டி (எ) கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை சக நண்பர்கள் மீட்டு கோவையில் உள்ள  கே.ஜி.மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த  நாகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்து ஆலாந்துறை போலிசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும், தலைமறைவான பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் கந்தசாமிக்கு ஆலாந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.//

இன்னும் ஒரு செய்தி.

பாஜகவின் தேசியச் செயலாளர் அமித் ஷா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசும் போது பொய்த்தகவலைகளைப் பரப்புவதை வெளிப்படையாகவே (எதிர்ப்பதைப் போல் பேசி ஜாடைமாடையாக அதை வரவேற்றுள்ளார்). வரும் தேர்தலில் சமூக வலைத்தளங்களை வைத்தே வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் இவர் கட்சியினர் இப்படிச் செய்வது அதிசயமோ ஆச்சரியமோ பட வைப்பதில்லை. அறியாத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் பாருங்கள். 

ஆதார இணைப்பு
https://www.thequint.com/news/politics/amit-shah-real-fake-can-make-messages-viral

இன்னுமோர் முக்கியமான செய்தி

சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

http://goodnewstamil.com/hindu-munnai-people-arrested-for-stone-throwing-to-vijayanagar-statue/


இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின் நோக்கத்தை அப்பட்டமாகக் காட்டியுள்ளது ஒரு கொலை. அது என்ன நோக்கம் விநாயகர் சதுர்த்திக்கு அந்தந்த வட்டாரங்களில் பிள்ளையார் சிலை வைக்க வேண்டி பணத்தை வசூல் செய்து, ஒரு சிலையை வைத்து விட்டு மீதிக்காசில் கும்பல் கும்பலாக குடித்து கூத்தடிப்பதுதான். அதுவும் வசூல் அதிகமாக இருந்தால் கிடா வெட்டி கறியும் மதுவுமாக வெறியாட்டம். அற்புதமான வளர்ச்சி.

இங்கே இரண்டு பாஜகவினர் இடையேயான மோதலால் எதுவும் நிகழவில்லை. இதுவே கொலை செய்தவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இக்கொலைக்குக் காரணம் மதப்பிரச்சனை இல்லை வெறும் பணப் பிரச்சனை என்றாலும் கொன்றவர் முஸ்லிமாக இருந்தால் அது மதப்பிரச்சனை ஆக்கப்பட்டிருக்கும். இதனால்தான் விநாயகர் சதுர்த்தி என்ற அயோக்கியத்தனம் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை தங்கள் நம்பிக்கையின் பெயரால் பயங்கரவாத்தை வளர்க்கும் ஒரு தீயவர் கூட்டம் என்பதை இந்துக்கள் புரிந்து கொள்வார்களா ? 

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share

Post Comment

எரிச்சலைக் கிளப்பும் விநாயகர் சதுர்த்தி எதில் சேர்த்தி ?

இந்த விநாயகர் சதுர்த்தி என்று மதவெறியைத் தூண்டும் ஒரு நச்சுக் கலாச்சாரத்தை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தில் வெற்றிகரமாகப் பரப்பியுள்ளது இந்து முண்ணனி என்ற RSS-இன் ஒரு பிரிவைச் சார்ந்த வன்முறைக் கூட்டம். இந்த இந்து முன்னணி தென்காசியில் தனது அலுவலகத்திற்குத் தானே வெடிகுண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சதி என்று விளம்பரம் தேடியது. விநாயகர் சிலைக்கு செருப்புமாலையை இவர்களே போட்டு விட்டு திக காரர்கள் என்றும் பழி போட்டு பின்பு மாட்டிக் கொண்டது. தமிழகத்தில் மட்டும் மூன்று பாஜக காரர்கள் தம் வீட்டுக்கு தாமே பெட்ரோல் குண்டுகள் வெடிகுண்டுகள் வீசியும் (இந்து இயக்கத் தலைவர்களாகிய) தாம் பயங்கரவாதிகளால் ஆபத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டு விளம்பரம் தேடி மாட்டியுள்ளனர்

இந்த ஊர்வலம் தொடங்கும் இரு வாரங்கள் முன்பிருந்தே இந்த சிலைக்குக் காவல்துறை பாதுகாப்புப் போட வேண்டும். காவல்துறைக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தியையே தடை செய்வார்கள் என்ற அளவுக்கு அவர்களை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள் இந்த நாறிப்போன ஊர்வலத்தை நடத்துகிறவர்கள். ஊர்வலம் செல்லும் போது பல வாகனங்களில் கூச்சலிட்டபடியும் மோளமடித்துக் கொண்டும் செல்வார்கள். சமகாலத்திய குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியபடியும் செல்வார்கள். இதில் எங்கே பக்தி இருக்கிறது ? கலாச்சாரம் இருக்கிறது.


வெள்ளைக்காரன் காலத்தில் ப்ளேக் நோய் பரவுவதைத் தடுக்க எலிகளையெல்லாம் கொல்ல வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதாம், அதை எதிர்த்த திலகர் என்பவர் எலிகளெல்லாம் வியாகனின் வாகனங்கள் அதைக் கொல்லக் கூடாது என்று தொடங்கப்பட்டதே விநாயகர் ஊர்வலம் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். அது இத்தனை ஆண்டுகளில் வெறியாட்டம் போடும் ஊர்வலமாக இந்துத்துவா வன்முறையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.


கொடும கொடுமன்னு கோவிலுக்குப் போனா அங்கொரு கொடுமை தலைவிரிச்சு ஆடுச்சுன்னு சொல்றதற்கு சரியான உதாரணம் இதுகதான். வட இந்தியக் கலாச்சாரமான காட்டுமிராண்டிக் குத்தாட்டத்தை சகிக்க முடியல. புள்ளையார் ஆண் பெண், வயசு பேதமில்லாம, எல்லார்க்கும் புடிச்ச சாமியாதான் இருந்தாரு. இனி அப்படி இருக்காது. காரணம் இவாதான். எதிர்காலத்தில என்னவெல்லாம் நடக்கும்னு நினைச்சாலே குலைநடுங்குது


வருசா வருசம் ஊர்ல இருக்கற மொத்த சல்லிப் பசங்களும் ஐயப்பனுக்கு மாலை போடறேன்னு சீனைப் போடுவானுங்க பாருங்க. ஆனா விநாயகர் சதுர்த்தின்னு சொல்லிட்டு வரும் இவர்கள் பண்ணும் அக்கப்போருக்கு ஐயப்ப பக்தர்கள் 100 மடங்கு தேவலாம். ஆலயக்கட்டணத்தை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியது, ஆனா விநாயகர் சதுர்த்தி சிலையைக் கரைக்க வசூல்னு நாலு பேர் சேர்ந்தாப்ல கெளம்பி வர்றவன் போறவங்கிட்டையெல்லாம் ஒரு நோட்டெடுத்துட்டுப் போய் நின்னு காசு குடுன்னு நச்ச வேண்டியது.


சாமி கும்பிட வர்றவனெல்லாம் தலை தெறிக்க ஓடற மாதிரி வெறி புடிச்சு கத்த வேண்டியது. விநாயகர் சதுர்த்திக்கு எதுக்குடா ராமன் கோயில் முழக்கமெல்லாம் !! இவனுக கொள்கைக்குக் கூட்டமே வராதுன்னுதான் சிவனேன்னு சாமி கும்பிட கூடற கூட்டத்தையெல்லாம் தன் பக்கம் திருப்ப கூச்சல் போடறானுக. இவனுகளை கொண்டு போய் எந்த பிரச்சனையும் பண்ணாம சேக்கறதுக்குள்ள காவல்துறை கதிகலங்குது. அதிலும் பிள்ளையார் தேவாலயம் மசூதி முன்னால ஊர்வலம் போகும்போது மட்டும்தான் பக்தர்களுக்குக் கொஞ்சம் அருளை கூட்டியே பாலிப்பார். இதுபத்தாதுன்னு இருக்கற சந்து பொந்து முதற்கொண்டு நீதிமன்றம் வரைக்கும் விநாயகர் சிலைகளையும் கோயில்களையும் கட்டி வருகிறார்கள்.


திருப்பூர்ல பாக்கறேன், டவுன்ஹால் புள்ளையார் கோயில் சுவற்றில் பாஜகவின் ஃப்ளக்ஸ் பேனர் தொங்க விட்டிருக்காங்க. கோயில் சுவற்றில் எதுக்கு கட்சி விளம்பரம்கறேன் ?


தினமணி என்ற நாளிதழ் இந்த ஊரில் இந்து முன்னணி சார்பில் இத்தனை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை என்று பல சிறு செய்திகள் வெளியிட்டு இந்து முன்னணிக்கு இலவச விளம்பரம் கொடுக்கிறது. சுற்றுச் சூழல் சீர்கேடுகள் பற்றி பல்வேறு விதமான கட்டுரைகளை தினமணி வெளியிட்டுள்ளது, ஆனால் இந்த விநாயகன் சிலையைக் கரைப்பதால் வரும் சீர்கேடுகள் குறித்து எந்தவொரு கட்டுரையும் வெளியானதா என்று தெரியவில்லை.


இவர்களின் இன்னொரு கோரிக்கை இந்துக்களின் ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கக் கூடாது. அவை இந்துக்களிடம் இருக்க வேண்டும். இந்துக்கள் என்றால் யாரிடம் வரும் என்று சொல்லத் தேவையில்லை. பிறகு அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதெல்லாம் கனவிலும் நடக்காது. கோயில்களின் வரலாறுகளில் மாற்றம் நிகழும், இருக்கும் கொஞ்ச நஞ்சத் தமிழ் வழிபாடும் முழு சமஸ்கிருதமாக மாறும். விநாயகர் சதுர்த்தி போன்ற வன்முறையைத் தூண்டும் ஊர்வலங்களுக்குக் காசு சேர்க்கும் கவலை இருக்காது, கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் "இந்து"க்களே அதற்கு நன்கொடைகளை வாரி வழங்குவார்கள். அப்பாவி இந்துக்களின் பெயரில் இவர்கள் தாண்டவமாடுவார்கள்.


இந்த இந்துத்துவாக்களின் நோக்கமென்னவாம். பிறமதத்தினரெல்லாம் தமது தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டுமாம். உண்மையிலேயே மதத்தின் மீது நாட்டம் கொண்டவர்கள் மதத்தின் தவறை ஒத்துக் கொண்டு, மதத்தை சீர்திருத்த வேண்டும். ஆனால் இவர்கள் செய்வது இருக்கும் கொஞ்ச நஞ்ச சகிப்புத் தன்மையையும் ஒழித்து சீர்கேடுகளான ஜாதியை, வன்முறையை வெறுப்பை அங்கீகரித்து வளர்ப்பதுதான். அதிலும் தேவாலயம், மசூதிகளின் முன்பு வெறிக்கூச்சல் போட்டால் அவன் இந்து மதத்திற்கு மாறுவானா என்ன அறிவாளித்தனம் ?! அங்கே போய் வம்பிழுக்க வேண்டியது, அவனிடம் செருப்படி வாங்க வேண்டியது பின்பு இந்துக்களைத் தாக்கும் பிற மத்ததவர்கள் எங்கே மதச்சார்பின்மை வியாதிகளே, இந்துக்களுக்கு  இந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஒப்பாரி வைக்க வேண்டியது. இவர்கள் இந்துக்களின் காவலர்கள் என்றெல்லாம் இந்துக்கள் நம்பவில்லை. தமிழகத்தில் சராசரி இந்துக்களின் நம்பிக்கையை வெறியாக மாற்றும் நோக்கம் நிறைவேறாது. நாட்டில் அமைதி தவழ வேண்டுமெனில் இது மாதிரியான RSS இயக்கங்களைத் தடை செய்தாலே போதும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment