விளம்பரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளம்பரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண்டு கொள்ளப்படாத மகளிர் கிரிக்கெட்


தற்போது மகளிர்க்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. அது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஏனோ ? கிரிக்கெட் நடிகர்கள் ஆடினால் கூட கொஞ்ச பேர் பார்க்கிறார்கள், ஏன் நடிகைகள் கூட ஆடினால் பார்க்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் மட்டும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதுவும் கிரிக்கெட்டின் மிகப்பெரும் சந்தையான தெற்காசியாவில் கூட பெண்கள் கிரிக்கெட் மிகப்பெருமளவில் போணியாகவில்லை.

இந்த நிலையில் இப்போது ஆண்களும் பெண்களும் கலந்து விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கப்போகிறார்கள். ஏன் அப்படியாவது பிரபலப்படுத்தலாமென்றா ? சும்மா கிளுகிளுப்பாகவாவது பார்க்க வைத்துவிடமுடியுமென்றா ?

பெண்கள் கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்தேன், ஆண்கள் அளவுக்கு துடிப்பாக இல்லையென்றாலும், பெண்கள் ஒரு வித நளினத்துடனும், மிதமான பரபரப்புடனும் நன்றாகவே விளையாடினார்கள். சிலருக்கு இன்னும் பேட்டிங் வரவில்லை. இறங்கி ( ஓரடி முன் வைத்து) அடிக்கும் போது முழங்கை வளைந்து, மண்வெட்டியில் வெட்டுவது போல் அடித்தார்கள் சிலர்.

பெண்கள் விளையாடும் விளையாட்டிலேயே கிரிக்கெட் மட்டுமே விளம்பரத்திற்கு உதவாத உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள். மினி ஸ்கர்ட், மினி ட்ரொஸர் மாதிரியான உடைகளை அணிந்து இதை விளையாட முடியாது என்பதால்தான் ரசிகர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லையா ?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் தனிநபராக ஓட்டங்கள் அதிகம் அடித்தது ஒரு பெண் - பெலிண்டா கிளார்க் 229*


ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி நியூஸிலாந்து - 459

இதில் எதிராக ஆடிய பாகிஸ்தான் 47 ஓட்டங்கள் மட்டுமே பதிலுக்கு எடுக்க முடிந்தது, 408 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி. அல்லது நியூஸி வெற்றி.

இது இரண்டுமே ஆண்கள் கிரிக்கெட் "சாதனை"யை விட அதிகம். இது இரண்டுமே 1997 இல் செய்யப்பட்ட சாதனைகள்.

ஆஸி பெண்கள் அணி 6 முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இதையெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டில் எப்போதுமே முறியடிக்க முடியாது. பார்ப்போம்.

எல்லிஸ் அலெக்ஸாண்ட்ரா பெர்ரி

இந்தச் சிறுமி ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருப்பவர் கால்பந்து அணியிலும் இருப்பவர். தமது 16 ஆம் அகவையில் நுழைந்தார் ஆஸ்திரேலியாவின் கால்பந்து அணியிலும், கிரிக்கெட் அணியிலும் ஒரு சேர. கால்பந்து உலகக் கோப்பையிலும் பங்கெடுத்திருக்கிறார், கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இருக்கிறார். இந்த மாதிரி கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு சேரக் கலந்து கொண்டவரென இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கடந்த முறை ஆஸி வென்ற போது இவரது பங்கு குறிப்பிடத் தகுந்தது. 


(தற்போது குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப். அவர் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம்)

மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர் அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றவர் என்ற பெருமையப் பெற்றதோடு, அரை நூற்றாண்டு காலம் அதிக பதக்கங்களை வென்ற சாதனையை வைத்திருந்த ரஷ்யாவின் (முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்) ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸ் லாட்டினினாவின் சாதனையையும் முறியடித்தார். இதில் லாரிஸ் லாட்டினினா இரு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமெ பங்கேற்றவர், அதிலும் ஒரு போட்டியில் பங்கேற்ற போது அவர் கர்ப்பமாக இருந்தார். மைக்கேல் பெல்ப்ஸ் மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

இது மாதிரி சாதனைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலே போகின்றன.

இப்படி மிகப்பெரும் சாதனைகளைப் பெண்கள் படைக்குமளவிற்கு திறமை இருக்கும்போது அவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த டென்னிஸ் போட்டிகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் மாடலாகவும் இருக்கின்றனர். ஷரபோவா வருடத்திற்கு 70 கோடிகள் வரை விளம்பர மாடலாகவே சம்பாதிக்க முடிகிறது. விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பெரிய நிறுவனங்கள் இவர்களின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காகவே புதுப் புது பிரபலங்களை உருவாக்குகின்றனர்.


அதே நேரம் ஆண்களின் கிரிக்கெட் எவ்வளவு மெனக்கெட்டு பரப்பப் படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பெரிய நடிகர்களுக்கு இணையான செலிபிரிட்டிகளாக இருக்கிறார்கள். எல்லா விளம்பரங்களிலும் வருகிறார்கள். நடிகைகளுடன் கிசு கிசு எழுதுமளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் தகுதி கிரிக்கெட் வீரர்கள் என்பது மட்டுமே.

இவர்கள் தேசத்தின் மானத்தைக் காப்பவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதே தேசபக்தி என்ற அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பப் படுகிறது என்று பார்த்தால்,

வரும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னார் நீக்கப்பட்டார், இன்னார் தேர்வு செய்யப்பட்டார், இன்னாருக்கு வாய்ப்பில்லை

இந்திய அணி நாளை போட்டி நடக்கு இடத்திற்குப் போய் சேருகிறது.

இந்திய வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி இன்று வெற்றி பெறுமா ?

வெற்றி பெறுவோம் கேப்டன் நம்பிக்கை.

கிரிக்கெட் போட்டியை வர்ணிப்பதுதற்குத்தான் தொலைக்காட்சிச்செய்திகள் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

போட்டி முடிந்தவுடன் வெற்றிக்குக் காரணம், தோல்விக்குக் காரணம் குறித்த அலசல்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கூட வெளிவருகின்றன. 



கிரிக்கெட் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாம் நல்ல நகைச்சுவைகளே.

"அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை" என்பதற்கு முன்னால் எவையெவையெல்லாம் இணைக்கப்பட முடியும் பாருங்கள்.

இந்த வருடத்தில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இந்த அணிக்கு எதிராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது விக்கெட்டிற்கு "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஒரே நாளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது இன்னிங்க்ஸில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஃபாலோ ஆன் பெற்றும் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இரண்டாவது பேட்டிங்கில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

குறைந்த நேரத்தில் அல்லது பந்துகளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

அணித்தலைவராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

விக்கெட் கீப்பராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

பந்து வீச்சாளராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இப்படியாக நகைச்சுவைகள் தொடரும் நீளம் கருதி நிறுத்துகிறேன். இவயெல்லாம் போட்டித் துளிகள் அல்லது ஹைலைட்ஸ் என்று பெட்டிச் செய்தியில் போட்டு விளையாட்டுச் செய்தியின் பக்கங்களை நிரப்புவார்கள்


கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் அதே நேரம்  இன்னொரு புறத்தில் மற்ற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. வெறும் பெட்டிச் செய்திகளில் மட்டும் வெளிப்படுகின்றன. சொந்தக் காசையும், முயற்சியும் செய்து உயிரைக் கொடுத்துப் பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கில் எவனாவது பதக்கம் வாங்கினால் அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் "இந்தியர்கள்" பெருமைப்பட்டுக் கொண்டு மீண்டும் அவர்களை மறந்து விடுவார்கள். ஏன் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வாங்க முடியவில்லை என்று விவாதிப்பார்கள். கிரிக்கெட்டைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். ஐபிஎல்லை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.

ஆளுக்குப் பத்துக்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற போதும், மகேஷ் பூபதியும், லியாண்டரும் பெரிய அளவில் கொண்டாடப் படவில்லை. சானியா மட்டுமே டென்னிசின் அடையாளமாக இருக்கிறார். அவர் பிரபலமானதும் டென்னிஸ் என்ற விளையாட்டின் காரணமாக அல்ல. ஏதாவது ஒரு (வெப்பமான பெண் - அதாவது) ஹாட் கேர்ள் கிடைக்க வேண்டு ஊடகங்களுக்கு ஊதிப் பெருக்கிவிடுவார்கள். அதே நேரம் உயிரைக் கொடுத்து விளையாடும் சாய்னா நேவாலை பெரிய அளவில் ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

விளையாட்டாக இருந்தாலும், அழகு + செக்ஸி மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது போலும். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 20/20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்ரீலங்காவின் சியர் லீடர்ஸ் பற்றி கிரிக்கெட்+தேச பக்தர்கள் பலரும் தமது சங்கடத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அழகாக இல்லை. பாமர ரசிகர்கள் மொக்கை ஃபிகரெல்லாம் எவன்டா சீர்லீடர்ஸா போட்டான் என்று அலுத்துக் கொண்டனர். நிலைத்தகவல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.

விளையாட்டுபோட்டிகளில் எதற்கு சீர் லீடர்ஸ்கள் வந்து குட்டைப்பாவாடையில் ஆட வேண்டும், கேமராக்கள் பாவாடைக்குக் கீழிருந்து படம் பிடிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளே தேசபக்தர்கள் பார்ப்பது, தேசபக்தி பொங்கி வழிந்தோடும் போது, எதற்கு இந்தக் கிளுகிளுப்பு வேண்டிக் கிடக்கிறது. தேசபக்தி பேசும் அர்ஜுன் படங்களில் குத்தாட்டம் இருப்பது போல என்று கொள்வோம்.

டிடி ஸ்போர்ட்ஸில் உயரம் தாண்டும் போட்டிகள் போட்டிருந்தார்கள். ஒரு ஈரானியப் பெண்ணைக் காட்டினார்கள். அவர் பர்தா போன்றதொரு ஆடையை அணிந்து அது தலையிலிருந்து விழாமல் இருக்க ஒரு பேன்டையும் கட்டியிருந்தார். கை முழுவதும் மறைக்கும் ஆடை. அதே நேரம் இன்னொரு ஐரோப்பியப் பெண் ஏறக்குறைய இரு துண்டு ஆடை அல்லது பிகினி என்ற அளவிற்கு அணிந்திருந்தார். உடலை மறைப்பது ஒத்துக் கொள்ளக்கூடியது, மணிக்கட்டுவரையும், தலையையும் மறைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதெல்லாம் என்னளவில் ஒத்துக் கொள்ள முடியாது. என்னைக் கேட்டால் இந்த பர்தா, பிகினி இரண்டுமே விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒத்து வராதது.

மத்திய கிழக்கு அல்லது இஸ்லாமிய நாட்டுப்பெண்கள் பெரும்பாலும் இதை அணிந்துதான் விளையாட வேண்டியிருக்கிறது. மற்ற நாட்டினர் நீச்சலுடை மாதிரி, அல்லது பிகினி மாதிரி அணிகிறார்கள். இதற்குத் தயங்கியே இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் பெண்கள் இது போன்ற போட்டிகளில் சேரத் தயங்குவார்கள் போல் தெரிகிறது.

நன்றி : ஹஃபிங்க்டன் போஸ்ட்
இந்த உடைகளை வடிவமைப்பவர்கள், விதிமுறையாளர்கள் எல்லாம் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் போட்டிகளில் பெண்களுக்கு வசதிப்படி வடிவமைப்பார்களா அல்லது ஆண்கள் ரசிக்கும்படி வடிவமைப்பார்களா என்று சொல்ல வேண்டியதில்லை. சில நாட்களுக்கு முன்பு, ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குட்டைப் பாவாடை மட்டுமே அணிய வேண்டும் என்று விதியை மாற்றினார்கள். அதற்கு பாகிஸ்தான், எகிப்து நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதெல்லாம் எதற்கு ? ஏன் ட்ரௌசர் அணிந்து விளையாடினால் என்ன கெட்டு விடும்.

ஆண்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கும்போது அணியும் ஆடைகளுக்கும் பெண்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். ஆண்கள் உடைகளால் அவர்கள் சிரமப்படுவதேயில்லை. அதே நேரம் பெண்களைக்கவனித்தால் ?? அதென்ன விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் அணியும் உடைகள் முழங்கால் வரையில் அல்லது தொடை வரையாவது மூடியிருக்கும்படியும், பெண்கள் என்றால் புட்டத்தில் பாதியை மட்டும் மறைக்கும்படியும் இருந்தால் அதன் காரணம் என்ன ?

எந்த உடை பற்றியும் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இதையெல்லாம் சொல்லக் கூடாதுதான். ஆனால் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில்தான் சீர்லீடர்ஸ், கடற்கரைக் கைபந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே பெண்களை ஆடை அவிழ்ப்பு செய்விக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து ஆண்கள் அள்ளித் தெளிக்கும் கருத்துக்களுக்காகத்தான், திரைப்படங்கள், விளம்பரங்கள், இசைக் காட்சிகள், நடனக் காட்சிகள் இவைகளில் பெண்கள் காட்டப்படும் விதத்திலிருந்தே இந்த விளையாட்டுப் போட்டிகளில் காட்டப்படுவதையும் இணைத்துப் பார்க்க நேரிடுவதால் இதையெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.  பெண்கள் உடை பற்றிப் பெரிய விவாதத்திற்கெல்லாம் கூட போக வேண்டியதில்லை. ஆண் வீரர்கள் அணிந்து விளையாடுவதையே பெண்கள் அணிந்தால் வேலை முடிந்தது. அதற்காகத்தான் பெண்கள் கிரிக்கெட் பற்றிச் சொல்ல வந்தேன்.

இன்னொன்றையும் சொல்ல மறந்தேன். சானியாவாகட்டும், சாய்னாவாகட்டும் அல்லது ஷரபோவாவாக இருக்கட்டும். பந்தை ஆக்ரோஷமாகத் திருப்பி அனுப்புகிறார் என்ற விவரிப்புடன் தினமணி, தினமலர், தினத்தந்தி உட்பட பெரும்பான்மை நாளிதழ்கள் வெளியிடும் புகைப்படங்களில் அவர்களது மேலுடை சற்றே உயர்ந்து தொப்புள் தெரிகிற மாதிரிதான் இருக்கிறது. இல்லையென்றால் பாவாடை பறக்கிற மாதிரித்தான் இருக்கிறது. இதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். இது இயல்பாக நடக்கிறதா ? வேறு போஸே கிடைக்கவில்லையா ? பாவாடை பறப்பதை ஸ்னாப் ஷாட் எடுத்துத்தான் போட வேண்டுமா கனவான்களே ?  பெண்களை செக்ஸியாகத்தான் உடை அணிய வேண்டும் என்று திணிப்பதாலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதைப் பார்ப்பதற்கென்றே பலரும் இப்போட்டிகளைக் காண்கின்றனர். பெண்கள் பங்கேற்கும் உலக அழகிப் போட்டியளவிற்கு, உலக அழகன் போட்டி பிரபலமாகவில்லை. கடற்கரைக் கைப்பந்துப் போட்டிகளில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் போட்டி பிரபலமாகவில்லை. இதெல்லாம் அதன் எதிர் விளைவுகள்தான். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டியும், பிரபஞ்ச அழகிப் போட்டியும் நடக்கும் போதெல்லாம், செய்திகளில் சொல்லப்படுவது என்னவென்றால், இந்திய அழகிக்கு இத்தனாம் இடமே கிடைத்தது, இந்திய அழகி ஏமாற்றம். இதற்கெல்லாம் இந்தியர்கள் வருத்தப்பட வேண்டுமாம்.




இப்படியாக பெண்கள் என்றால் ரசிப்பதற்கே என்ற நிலை இருக்கும் வரை, அதை வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் வரை திறமையைக் காட்டி வென்ற பெண்களை விட உடலைக் காட்டிய பெண்களே வெற்றி பெற்ற பெண்களாக வலம் வருவர்.

சன்னி லியோன், பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா, வீணா மாலிக் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று நமக்கு நாளும் நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

அதிர வைத்த ஆவணப்படம் !! - பரப்புரை (Propaganda )

சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தைக் காண நேர்ந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஆவணப்படம் வட கொரியாவைச் சேர்ந்தது. வடகொரியா என்பது இணையத்திலேயே கிட்டத்தட்ட எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளாத நாடாகவே இருக்கிறது. எந்த செய்தியும் அங்கிருந்து அடிக்கடி கேள்விப்பட முடிவதில்லை. அணு குண்டு ஆய்வு, அல்லது ஏவுகணை ஆய்வு அது குறித்த வெற்றி தோல்வி என்பதைத் தவிர வேறெந்த செய்திகளும் கிடைத்த பாடில்லை. அதன் அதிபர் இறந்த செய்தியையே உலகிற்கு இரண்டு நாள் கழிந்துதான் அறிவித்தார்கள். அவ்வளவு ஊடக் கெடுபிடிகள் நிறைந்தது.

அது இரும்புத்திரை நாடு, அடக்குமுறை உச்சத்தில் இருக்கும் நாடு, இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு, பசி பட்டினி நிறைந்த நாடு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சுருக்கமாக அது ஒரு பொதுவுடமை நாடு என்று ஊடகங்கள் வாயிலாக அறியப் பெற்றோம்.

அந்த நாட்டைக் குறித்து மேற்கண்ட செய்திகளை உண்மையாக்கும் ஆவணப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அந்நாடே ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அது மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளைப் பற்றி விளக்குகிறது. இதை விடாமல் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது முதல் ஒரு சில நிமிடங்களிலேயே. அது மிகவும் தீர்க்கமாக மேற்கத்திய நாடுகள் செய்யும் அட்டூழியங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறது.

வட கொரியாவின் ஆவணப்படம் என்பதற்காக அது கம்யூனிசப் பெருமைகளைச் சொல்லவில்லை. அதன் அதிபரை அங்கங்கே புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் 2 முறை அவைகளும் வருகின்றன. அது அவ்வளவு மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவில்லை உறுத்தவில்லை. நம்மை மட்டுமே அமெரிக்காவால் அடக்க முடியவில்லை என்று வட கொரியாவையும் அதிபரையும் மக்களையும் புகழ்கிறது. இறக்கும் வரை இவர்களை எதிர்த்துப் போரிடுவோம் என்று சூளுரைக்கிறது. இங்கு கேட்கும் போலிதேசபக்திக் கூச்சலை விட இது எவ்வளவோ மேலானது.

விளம்பரங்கள் ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் அமெரிக்கர்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று காட்டிய விதம் அருமை. மேலும் இது வரலாற்றுச் செய்திகளை போகிற போக்கில் தொடர்பு படுத்தி பல விசயங்களைப் புரிய வைக்கிறது. தற்போதைய வரலாறு முதல் கொலம்பஸ் வரை. பிரிட்டனும் அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் இணைந்து புரிந்த புரியும் வரலாற்றுச் கொடுமைகளைப் புரியவைக்கிறது.

எடுத்துக்காட்டாக,

தன்னை வரவேற்ற மக்களைக் கொலம்பஸ் கொன்று குவித்தது

அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கப்போவதை அறிந்திருந்தும் அதை அனுமதித்தது

ஹிட்லருடனான ராக்பெல்லர், ஸ்காட்லாந்து வங்கி ஆகியோரின் அறக்கட்டளை தொடர்பு

அமெரிக்க உளவு நிறுவனமான் CIA நாஸி விஞ்ஞானிகளை வைத்து நடத்திய ஆய்வுகள்

பாலஸ்தீனம் திருடப்பட்ட வரலாறு

9/11 தாக்குதலின் போது எந்த தாக்குதலும் இல்லாமலே விழும் ஒரு கட்டிடம்

ஜப்பானின் மீதான அணுகுண்டுத் தாக்குதல்

கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கன் உட்பட 37 நாடுகளின் மீதான நேரடியான மறைமுகமான தாக்குதல்

மக்கள் தொகைக் கட்டுப்படுத்தும் திட்டம்

மேலும் சிறப்பம்சமாக நான் காண்பது மதத்தை பயன்படுத்தி மக்களை மயக்கி வைத்திருப்பது என்பதையும் காட்டியது.

பிரபலங்கள் எனப்படும் செலிபிரிட்டிகளை உருவாக்கி மாயையை ஏற்படுத்துதல் செலிபிரிட்டிகள் என்பவர்கள் எந்த ஒரு திறமையுமில்லாதவர்கள் என்று உரைக்கிறது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் முக்கியமாக தென்கொரியாவில் இருக்கின்றவை

எனப் பல செய்திகளைச் சொல்கிறது.

மொத்தமாக இப்படம் 1% பேர் எப்படி மற்ற 99% பேர்களை மயக்கி அவர்களை ஆள்கிறார்கள் என்று விளக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதை இன்னும் யூட்யூப்பில் விட்டு வைத்திருப்பது இன்னொரு ஆச்சரியம்

பார்க்கும் சில படங்களையும் இது போன்ற கருத்துச் செறிவுடைய படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. எச்சரிக்கை மனதைப் பாதிக்கும் காட்சிகளைக் கொண்டது. இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

தோல்வியைத் திணிக்கும் கல்வியும் சமூகமும்

பன்னிரண்டாம் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து நடப்பவை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க பேட்டி கொடுக்கின்றனர். தமது இலட்சியத்தைப் பற்றிக் கூறுகின்றனர். வழக்கம் போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகத் தேர்ச்சி என்ற வசனத்தை பதினைந்து வருடங்களாகக்(!!?) கேட்கிறேன். ஒவ்வொரு வருடமும் என்ன நடக்கிறதோ அதுதான் இப்போதும் நடக்கிறது, இனி வரும் வருடங்களிலும் இதுதான் எந்த மாற்றமுமின்றி நடக்கப்போகிறது. ஊடகங்களுக்கு இதை வைத்து எவ்வளவு செய்திகளை உருவாக்க முடியுமோ அந்தளவுக்கு செய்திகள் குவிந்து கிடைக்கின்றன. சாதனையாளர்களின் பேட்டிகள், பள்ளிகளின் பெருமைகள், மாணவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அர்ப்பணிப்பு வெற்றி இரகசியம், தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைகள், வயது, வறுமை உடல் ஊனத்தை வென்று அதிக மதிப்பெண் குவித்த மாணவர்கள் என இதைச் சுற்றிய செய்திகள் ஏராளம்.

இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதுதான் புரியவில்லை. இதே அளவு பரபரப்பு 10 வகுப்புத் தேர்வு முடிவுக்கும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் வாழ்க்கையிலேயே இதுதான் மிகப்பெரியது போலவும் இது முடிந்தால் போதும் வாழ்க்கையிலேயே வெற்றி பெற்றது போலவும் ஊதிப் பெருக்கி வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும், நகரத்திலும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் படத்தை பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். சரி அவர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் தேவைதான். அதற்காக இப்படி அதகளப்படுத்தினால் ?? இது தோல்வியடைந்த மாணவர்கள் மீது எவ்வகையான அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது குறித்து பில்டப் காரர்கள் கவலை கொள்வதேயில்லை.

இப்படி மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுப்பவர்கள், இது போன்ற அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்து என்னவாகிறார்கள் என்று கவலைப்படுகிறார்களா ?  அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் சிலர் கல்லூரிப் படிப்பே தேற முடியாமல் போகிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா ? தெரியாதா ? தேர்வு முடிவு வெளியானவுடன் கல்வியாளர்கள் அது இது என்று யோசனை சொல்கிறார்கள். இப்படி மாய்ந்து மாய்ந்து படித்தவர்கள் எத்தனை பேர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றார்கள் என்பது தெரியுமா ? அல்லது தற்போது பேட்டி கொடுத்தது போல கலெக்டரானவர்கள், மருத்துவரானவர்கள் எத்தனை பேர். இந்த பில்டப் பற்றிச் சொல்லப்போனால் ஐபிஎல் போட்டிகளுக்குக் கிடைக்கும் போலி விளம்பரத்திற்கு ஒப்பானது.

ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நல்ல கற்பித்தலுக்கும் "திறமையான மாணவர்களை" தயாரித்து அனுப்புவதிலும் முன்னணியில் இருக்கின்றன. ஊத்தங்கைரையில் ஒரு பள்ளி இருக்கிறது. அது நல்ல பெயரெடுத்த பள்ளியாம். 10 வகுப்பு முடிவு வெளியான அன்று அதிகாலையிலேயே பெற்றோர்கள் அப்பள்ளியில் விண்ணப்பம் வாங்கக் காத்துக் கிடப்பார்களாம். அதில் சேரவும் பத்தாம் வகுப்பில் மிகப்பிரமாதமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. அதாவது பெயர் பெற்ற பள்ளிகள் என்றால் ஏற்கெனவே நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை எடுத்து அவர்களை சக்கையாகப் பிழிந்து அதிக மதிப்பெண் வாங்க வைப்பது அவர்களின் "திறமையாம்." நாமக்கல் மாவட்டம் கல்விக்குப் பெயர் போனது, அங்குள்ள வித்யா விகாஸ் ((கல்வி நிலையம் என்பதன் சம்ஸ்கிருதம்தான் வித்யாவிகாஸ்) (பெரிய வித்யாசமான பேரெல்லாம் கிடையாது)). அங்கும் இப்படித்தான் பள்ளியின் வெளியே 11 ஆம் வகுப்பு விண்ணப்பம் வாங்குவதற்கு வரும் பெற்றோர்களால் கொண்டுவரப்பட்டு சாலையோரங்களில் அனைத்து ரகமான பெரிய விலையுயர்ந்த கார்களைக் காண முடியும். 

இது போன்ற பள்ளிகளில் கற்பித்தல் என்பது உயர்ந்த தரத்தில் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பணம் வேண்டுமே படிப்பதற்கு, இல்லையெனில் 90 % மதிப்பெண்கள் வேண்டும் எத்தனை பேரால் முடியும். இந்த மனப்பாடக் கல்வி மீதே நமக்கு நூறு விமர்சனங்கள் உள்ளன. இந்தியனை அடிமைப்படுத்த மெக்காலே செயல்படுத்திய கல்வித்திட்டம், போதாக்குறைக்கு சிபிஎஸி, சமச்சீர் ஆங்கிலோ இந்தியன் என பலவகையான பாடங்கள். இதில் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள், ஆங்கில வழி தமிழ் வழி என இத்தனை முரண்பாடுகள். தனியார் பள்ளிகள் பெருகிய பின்பு இப்போதெல்லாம் 9 வகுப்பும், 11 ம் வகுப்பும் அந்த பாடத்தின் தேர்வுகளும் செல்லாக் காசுகளாகிவிட்டன. ஏறக்குறைய ஒன்றைரை வருடங்கள் படித்த பின்புதான் 10 ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடக்கின்றன. இதில் பல பள்ளிகளில் மாணவர்கள் பிட்டடித்துத்தான் மதிப்பெண் பெறுகிறார்கள்.

பிட்டடிக்க முடியாதவர்கள் தோல்வியடைகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள். பெற்றோர்களால்தான் இவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தம் பிள்ளை தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ குறைந்து விட்டாலோ தமது மரியாதை கெட்டுவிட்டதைப் போலவும், குடி முழுகிவிட்டதைப் போலவும் கருதிக் கொள்கிறார்கள். இந்தப் படிப்பு என்பது எல்லோருக்கும் வராது என்பதுதான் எதார்த்தம். கடும் முயற்சி செய்தால் ஓரளவு மாறும், அதுவும் எல்லோருக்கும் சாத்தியம் என்பதில்லை. என்னதான் முக்கினாலும் சிலருக்கு வரவே வராது. எனக்கு கணிதம் என்றால் வேப்பங்காய், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எனக்கு மாரடைப்பு வருமளவுக்கு மன அழுத்ததைக் கொடுத்தது. இந்த நிலையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லை படித்தால்தான்  நல்ல வேலை கிடைக்கும் என்று மூட நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் அங்கங்கே வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றால் அங்கே காத்துக் கிடக்கும், ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கும். அப்படியே வேலை கிடைத்தாலும் எல்லோருக்கும் 5 இலக்க ஊதியம் கிடைக்காது. இத்தனை படிச்சிட்டும் இவ்வளவு குறைச்சலாத்தான் சம்பளம் குடுக்கிறானா ? அப்பறமெதுக்கு அந்த வேலைக்குப் போற ? என்று வக்கனை பேசவும் சொந்தக் காரரும், நண்பரும் வருவார்கள்.

பல பெற்றோர்க்கு வேறென்ன ஆசையென்றால், பையன் படித்து பட்டம் வாங்கினால் அதை வைத்து நிறைய சீதனம் பெறலாம் என்ற கணக்கில் இருக்கிறார்கள். பையன் இத்தனை படித்திருக்கிறான் பெண்ணுக்கு இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்க திட்டம் வைத்திருக்கிறார்கள். இதை ஏன் பையனின் பெற்றோரை மட்டும் சொல்கிறேனென்றால் பெரும்பான்மையாக பெண்கள் தேறிவிடுகிறார்கள். ஆண்கள் அப்படியில்லை அவர்களுக்குத்தான் இப்பிரச்சனை. எனக்குத் தெரிந்து பல பேர் சீதனம் பெறுவதற்காகவே இரு பட்டங்களைப் படித்து முடிக்க வேண்டும் என திட்டம் போட்டு படிக்கிறார்கள். எம்பிஏ என்பது கவர்ச்சிகரமான பட்டமாக திருமணச்சந்தையில் இருக்கிறது. கன்யாகுமரியைச் சேர்ந்த என் நண்பனொருவன் BSc, MSc, MBA, என மூன்று பட்டங்களைப் படித்து விட்டான். அவனுக்கு படிப்பெல்லாம் வராது எல்லாம் பேப்பர் சேஸிங்தான். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சீதனமாகக் கிடைக்கும் என்கிறான். அதற்குப் புகழ்பெற்றதுதான் கன்யாகுமரி மாவட்டம் !!

திருமண அழைப்பிதழில் போடுவதற்கென்றே சிலர் அஞ்சல் வழியில் படிக்கிறார்கள். எப்படியென்றால் ஒரு விண்ணப்பத்தை வாங்கிவிட வேண்டியது அதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க வேண்டியது. அவ்வளவுதான் டிகிரி வாங்கியாச்சு. மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காருன்னு கேட்டால் சொல்லிக்கலாம். எல்லோரும் சான்றிதழைக் கேட்க மாட்டார்கள். அப்படியில்லையென்றால் இருக்கவே இருக்கிறது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கொஞ்சம் காசு கொடுத்தால் டிகிரியை வாங்கிவிடலாம். பல தடைகளைக் கடந்து நேர்மையாகத் தேர்வு எழுதும் மனிதர்கள் இருக்கும் ஊரில்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பட்டம், படிப்பு என்ற போலித்தனத்திற்கு இருக்கும் பகட்டுதான் காரணம். ஜாதிப்பெருமை போல பெரிய படிப்பு படித்தவர்க்கு திருமணச் சந்தையில் இருக்கும் வணிக மதிப்புத்தான் காரணம். நடுத்தர, பணக்காரர்களின் போலித்தனமான வெட்டி பந்தாதான் இதன் மூலம்.

பெற்றோர்களின் பேராசைக்கு ஒரு அளவேயில்லை. என்னுடைய சித்தி மகள் 1150 - க்கும் மேல் வாங்கிவிட்டாள். இருப்பினும் அவளது பெற்றோர்க்கு இன்னும் 20 மதிப்பெண்கள் கூட வாங்கியிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்களாம். எதற்கு வெளியே பேசி பெருமையடித்துக் கொள்ளத்தான். அவள் 1195 வாங்கினால் கூட கலெக்டருக்கோ அல்லது மேற்படிப்போ படிக்க வைக்கப் போவதில்லை திருமணந்தான் செய்து வைக்கப்போகிறார்கள் இருந்தாலும் இப்படி ஒரு நப்பாசை. இப்படித்தான் ஒவ்வொரு பெற்றோருக்கும் மதிப்பெண் மீதான் மோகம் இருக்கிறது.

இப்படியிருக்கையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களைத் தேற்றுகிறேன் என்று அதிக மதிப்பெண் வாங்கியவர்களை சிறுமைப்படுத்துவதும் கண்டிக்கத் தக்கது. வருடக்கணக்காக உயிரைக் கொடுத்துப் படித்து மதிப்பெண் வாங்கியவர்களை மனப்பாடம் பண்ணி வாந்தியெடுப்பவர்கள், சொந்தமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் சொல்வது அறிவீனமானது. இதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது, பாராட்டாமலும் இருக்க முடியாது.

கல்வி என்பது நல்ல வியாபாரமாக இருக்கிறது. இதனால் கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளின் பேரால் கொட்டி பெரும் பணக்காரர்களால் கல்வி நிலையங்களை நடத்த முடிகிறது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும் இதுதான் நிலை. எத்தனை மதிப்பெண் பெற்றாலும் பணம் கட்டாமல் படிக்க முடியாது. சிலரைத் தவிர்த்து. எங்கள் கல்லூரியிலிருந்து இத்தனை பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில கல்லூரிகள் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவங்களுடன் ஒப்பதம் போட்டுக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் பெயருக்கு வளாகத்தேர்வை நடத்துவார்கள், அனைவருக்கும் வேலை கிடைக்கும், அல்லது யாரையும் எடுக்காமலும் போகலாம். அல்லது அனைவரையும் வேலைக்கு எடுத்துவிட்டு சில மாதங்களில் பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லி.  வெளியேற்றிவிடலாம் ஆனால் கல்லூரிகள் விளம்பரம் செய்து கொள்ளும் எங்கள் கல்லூரியில் சென்ற வருடம் இத்தனை பேருக்கு வேலைக்கு இடம்(placement) பெற்றுத் தந்தோம் என்று. எப்படி எல்லோருக்கும் வேலை தருவார்கள் என்றா கேட்கிறீர்கள், படிப்புக்கும் வேலைக்கும் பெரிய தொடர்புகள் இருப்பதில்லை என்ன படித்தாலும் 6 மாதப் பயிற்சி பின்பு வேலை அவ்வளவுதான். நாடகம் முடிந்தது. இப்படித்தான் இருக்கிறது நிலவரம் இந்த ஆட்டத்தில் திறமைக்கு நிச்சயம் மதிப்புண்டு, நல்வாய்ப்புக்கும்(Luck) இடம் உண்டு ஆனால் எல்லா இடத்திலும் இது நடக்காது சிலருக்கு கிடைக்காது சிலருக்குக் கிடைக்கும் இதுதான் இந்த சமத்துவ உலகில் நடப்பது.

அதனால் புதிதாக எதுவும் நான் சொல்வதற்கில்லை. தேர்வில் வெற்றி பெற்றால் வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையா ரொம்ப நல்லது, நாம் யாருக்கும் அடிமை வேலை பார்க்கத் தேவையில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள், உலகம் இன்னும்  பெரியது. தாழ்வு மனப்பான்மையில் உழல வேண்டாம். நமது தோல்விக்கு நாம் மட்டுமே காரணமல்ல. நாம் குற்றவாளியோ மற்றவர்கள் புண்ணியவான்களோ இல்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

இன்னும் சில எண்ணங்கள்




சமீபத்தில் இரு தற்கொலை செய்திகள் கேட்டு வருந்தினேன். 

முதலாவது இலங்கைத் தமிழர்க்கு நேர்ந்த துயரம் கேட்டு ஒரு இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தற்கொலை செய்து கொண்டார். இப்பேர்ப்பட்ட மனிதர்களும் நம்முடன் வாழ்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு துணிந்துவிட்டவர்கள் கொஞ்சம் வாழ்ந்தால் இன்னும் எத்தனையோ செயல்களைச் செய்ய முடியும். உயிருக்கே துணிந்தவரகள், வேறு எதைத்தான் செய்யத் துணியமாட்டார்கள். வாழவே தகுதியில்லாத, வாழவே கூடாத கொலைகாரர்களெல்லாம் மகிழ்ச்சியாக பவனிவரும் வேளையில் நீங்கள் ஏன் சாகவேண்டும். இவர்கள் சாவதால் தன்னலவாதிகளான அரசியல் தலைவர்கள் மாலை போட்டு இரங்கல் தெரிவித்தும் பயன் பெறுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டுமே தற்கொலை செய்துகொள்வதும், இரங்கல் தெரிவிப்பதுமே தொழிலாகிப் போனது. பொறியியல் முடித்து, வேலையில் இருந்தவர், இப்படி தற்கொலை செய்வதால் இலங்கைத் தமிழர்களுக்கு என்னதான் விடிந்துவிடும் ? உங்கள் குடும்பத்தினர் சிக்கல் இன்னும் அதிகமாகும். மற்றபடி துரும்பைக் கூட நகர்த்த முடியாது. இதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களது ஈகத்தை கொச்சைப்படுத்துவதாக பொருளில்லை. போர் நடந்த போது முத்துக்குமார் தொடங்கி 17 பேர்வரையில் தீக்குளித்து தம்மை மாய்த்துக் கொண்டார்கள். அது போர்நடந்த சூழலி உணர்ச்சிகரமாக இருந்ததெனக் கொள்ளலாம். இதில் கேவலம் அவர்களது ஈகமும் தன்னலவாதக் கட்சிகள் எவ்விதம் தமது லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் எனபதையும் நாம் கண்டோம். இது போல் தற்கொலை செய்து கொள்ள அரசியல் கட்சிகள் அப்பாவிகளைத் தூண்டுவதாகவும் தெரிகிறது.




இரண்டாவது, கோவையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தவறாக வந்த அழைப்பில் தொடங்கி, அலைப்பேசியிலேயே காதலை வளர்த்துள்ளார். பேசிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாக இருந்ததாம். பின்பொருநாள் இருவரும் சந்தித்துள்ளனர், முதன்முறையாக. அப்போது குரல் இனிமையாக இருந்ததை வைத்து ஆளும் அழகாக இருப்பாள் என்று கணக்குப் போட்டிருந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண் அழகாக இல்லையென்பதைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறார். இதை நண்பர்களிடமும் சொல்லிப்புலம்பியிருக்கிறார். பின்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம். என்ன அபத்தமிது ? காதலி அழகாக இல்லை என்பதற்காக தற்கொலை செய்வதா ?  என்னதான் சொல்வது இதற்கு ? அழகை விமர்சிக்கலாமா வேண்டாமா தெரியவில்லை. இருந்தாலும் சிலவற்றைச் சொல்லவேண்டும்.

அழகை மட்டுமே நேசிப்பது காதலா ? ஒரு பெண்ணுடன் பழகினால்தான் (அவள் So called அழகாக இல்லாவிட்டாலும்) அவள் அழகியாகத் தெரியும் அதிசயம் தெரியும். இது என்னுடைய சொந்த அனுபவம் கூட. ஆண்களுக்கோ கண்களுக்கு அழகாக இருந்தால்தான் பழகுவதற்கே விரும்பும் மனநோய். உருவம் பார்த்துத்தான் நட்பு கொள்ளலாமா என்றே சிந்திக்கிறார்கள். ஒரு பெண்ணை மதிப்பிட வைத்திருக்கும் ஒரே சொல் அவள் அழகற்றவள். ஆண்களின் மொழியில் அல்லது வழக்கு  மொழியில் சொல்லப் போனால அட்டு ஃபிகர், மொக்க ஃபிகர், சப்ப ஃபிகர். இப்படியாக போகிறது கதை. 

பெண்ணை அழகாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கமாகவே கருதமுடியும். ஆணாதிக்கமென்றால் என்ன ? தான் (ஆண்) எப்படியெல்லாம் இருக்கத் தேவையில்லையோ வேண்டியதில்லையோ அப்படியெல்லாம் இருக்க வேண்டுமென பெண்ணை எதிர்பார்ப்பது. அது போல்தான் அழகும். ஆணுக்கு அழகு தேவையில்லை ( வேறு எதுதான் தேவை? ஒன்றுமே தேவையில்லை என்றுதானே நினைக்கிறார்கள்) , பெண் மட்டும் அழகாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். இந்த என்னமோ சொல்வாங்களே மென்மை, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, மசிரு, மட்ட என்பதைப் போல அவைகளையெல்லாம் தள்ளி பெண்களுக்கான மதிப்பீடுகளில் இந்த அழகு முதலிடம் பிடித்திருக்கிறது. 

அழகு என்றால்தான் என்ன ? முதலில் வருவது சிவப்பு நிறம். இதிலேயே பாதிபேர் வரமாட்டோம். நல்ல முகவெட்டு, சீரான பல்வரிசை, அளவான உயரம், உடல்வாகு. இது எல்லோர்க்கும் அமையாது. யாரும் வேண்டுமென்றோ அழகில்லாமல் பிறக்க விரும்பவில்லை. என்ன செய்வது ? பிறந்த உருவத்துடன்தான் வாழமுடியும். நாட்டில் பாதிப்பேர் அழகில்லாமல்தான் இருக்கிறார்கள். எல்லோரும் திருமணம் செய்து கொண்டுதான் வாழ்கிறார்கள்.

சரி அப்படியே அழகா இருந்தாலும் நாள் முழுவது இருந்து கொஞ்சிக்கொண்டே இருக்கமுடியுமா ? அழகாக இருப்பதால் ஊரில் இருக்கும் நாய்களெல்லாம் நோட்டமிடும். அந்த அழகு எத்தனை நாளைக்குத்தான் இருக்கும் ? திருமணம், குழந்தை என்றான பிறகு குண்டாகி அழகே போய்விடுகிறது. எல்லோரும் மோனிகா பெலுச்சியில்லையே ! பிறகென்ன செய்வது ? ஆண்கள் வேறு அழகிகளைத் தேடத் தொடங்குகிறார்கள். சில நயன்தாராக்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காக !. 

எல்லா ஆண்களும் தன்னுடைய துணை அழகாக இருக்க வேண்டுமென பேராசைப்படுகிறார்கள். காரணம் அவர்கள் அழகான பெண்களை மட்டுமே பெண்களாக மதிக்கிறார்கள். அழகில்லாத பெணகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.(அழகான பெண்களையும் மனிதர்களாக மதிப்பதில்லை ஃபிகராக அதாவது துய்க்கப்பட வேண்டிய பொருளாக மட்டுமே கருதுகிறார்கள்.) அழகில்லாத பெண்களை காதலிப்பவர்களை காதலிப்பவர்களை மணந்து கொண்டவர்களை இவர்கள் கேலி செய்கிறார்கள். 

சில வக்கிரங்கள்

உம்மூஞ்சிக்கு சரியான ஜோடிதான்டா அது.

இதெல்லாம் ஒரு ஃபிகர்னு சுத்திட்டிருக்கியேடா ?

உனக்கு டேஸ்ட்டே இல்லையாடா? 

சத்தியமா சூப்பரா இருக்குதுடா நம்புடா 

இந்த ஃபிகருக்குத்தான் இத்தனை பில்டப்பு குடுத்தியா ?

இவ பின்னாடிதான் இத்தன நாள் அலஞ்சியா?

இதே மறைமுகமாக பேசினால்...

யப்பா அவன் ரொம்ப பெரிய மனசுக்காரன்டா! எப்படித்தான் அந்த மூஞ்சிகூட குடும்பத்த நடத்துறானோ ?

அடத்தூ சரியான அட்டு அது. பாத்தாலே வாந்தி வந்திரும் அது கூட போய் .

ரெண்டும் அழகோ அழகு கொஞ்சிக்கறதப் பாத்தா எட்டி ஒதக்கலாம்னு இருக்கும். 

இன்னும் சிலர் சாலையில் செல்வோர்க்கெல்லாம் ஜோடிப்பொருத்தம் பார்த்து விமர்சனம் செய்வார்கள்.

ஆணும் பெண்ணும் நடந்து சென்றால் உடனே ஒரு கருத்துச் சொல்லாவிட்டால் இவர்களுக்கு அடங்காது. அவர்கள் அண்ணன் தங்கையாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம், உறவினராக இருக்கலாம், காதலராகவோ, இணையர்களாகவோ இருக்கலாம்.

அந்த ஆண் அழகற்றவனாக இருந்தால் என்ன சொல்வார்கள். 

இந்த மூஞ்சிக்கேல்லாம் எப்பேர்ப்பட்ட ஃபிகர் கிடைச்சிருக்கு பாரு!

அந்த பெண் அழகில்லாமல் இருந்தால் 

இதெல்லாம் ஒரு மூஞ்சினு தள்ளிட்டுப் போறாம் பாரு!

இது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை அதிகமானது. வெள்ளையானவர்களின் அருகிலிருந்து புகைப்படம் எடுத்துக்ககொள்ளும்போதோ (ஒரு புகைப்படத்தினைப் பார்த்து அப்படியே ப்ளாக் அண்ட் வொய்ட் படம்பார்த்த மாதிரி இருக்குடா! என்றார்கள்) அல்லது நண்பியுடன் நடந்து போகும்போதோ எந்த கருமம் என்ன நினைக்குமோ என்றெல்லாம் கவலைப்படத் தோன்றுகிறது. 


ஒரு நண்பன் சொன்னான். வெளி நாட்ல சர்வே எடுத்தாங்களாம். அதில நெறயா பொண்ணுங்க கருப்பா இருக்கற ஆணைத்தான் பிடிக்கும்ணு சொன்னாங்களாம்." இதில் அவன் சொன்ன "பொண்ணுங்க" என்பதன் பொருள் அழகான பெண்கள். அவர்கள் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும், இவன் கருப்பாக இருக்கும் பெண்களை இவனுக்கு பிடிக்காததால்தான் அழகான பெண்கள் கருப்பான தன்னை விரும்பவேண்டுமென நினைக்கிறான். வெளிநாடுகளில் வெள்ளை ஆண்கள் நீக்ரோ பெண்களை மணப்பதோ இவன் கண்களுக்கு அதிசயமாகத் தெரியவில்லை. அதற்காக அங்கு நிறபேதம் இல்லை என்று சொல்ல வரவில்லை. இவனது மனப்பான்மைக்குக் காரணம் அவன் மட்டுமல்ல. சமூகத்தில் அழகானவர்க்கு கிடைக்கும் அங்கீகாரமும்தான் காரணம். அதனால்தான் வரப்போகும் மனைவி கருப்பாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். 

பெரும்பாலும் அழகான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள், காதலிக்கிறார்கள். சராசரி பெண்களெல்லாம் காதலிக்கப்படுவதில்லை. இவர்கள் எப்படிக் காதலிக்கத் தொடங்குகிறார்கள் என்று பார்த்தால், போகவர பெண்களையெல்லாம் சைட்டடிக்க வேண்டியது அதிலொரு ஃபிகரை வட்டம் கட்டி, அதை இலக்காக வைத்து, மடக்க வேண்டியது. பின்பு அவளை அவனவன் தராதரத்திற்கு ஏற்ப காதலிப்பதோ, திருமணம் செய்துகொள்வதோ, அல்லது நட்பு பாராட்டுவதோ, கடலை போட்டு பொழுதைப்போக்குவதோ, அல்லது அனுபவித்துவிட்டு கழட்டிவிடுவதோ நடக்கிறது. 

அழகாக இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எத்தனை என்று அவர்களுக்குத்தான் வெளிச்சம். சாலையில் நடந்தால் அனைவரது கண்களும் வன்கலவிக்கு ஒப்பாக மொய்க்கும். பேருந்துகளிலும், நெரிசல்களிலும் புட்டங்களும், மார்புகளும் கசக்கப்படும். ஆண்களின் கலைக்கண்ணோட்ட விமர்சனத்துக்கு ஆளாகும். பொது இடங்களில் பார்க்கும் பெண்களையெல்லாம் இப்படித்தான் பார்க்க வேண்டுமென்பது ஆணுரிமையாகக் கருதுகிறார்கள் (தங்களுடைய ஃபிகர்கள் ரசிக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை). பெண்களும் இதை ஆண்களின் இயலபே அப்படித்தான் என்று சாதாரணமாகக் கருதி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவதையெல்லாம் கொஞ்சம் கேட்டால் அழுதே விடுவார்கள், ஏன்தான் அழகாய் இருக்கிறோமென்று. 

இது சில சமயம் ஆண்களுக்கும் நேர்கிறது பெண்கள் அளவுக்கல்ல என்றாலும். வழக்கம் போல இதற்கும் நான் திரைப்படங்கள், விளம்பரங்கள், ஊடகங்களையே சாடும் சடங்கையே நடத்த வேண்டியிருக்கிறது. இந்த விளம்பரங்கள்தான் பெண்களை அழகாகவே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றன. 6 வாரங்களில் "சிவப்பழகு" நிறமேன்மை போற்றும் "ஃபேர் அண்ட் லவ்லி" மாதிரியான அழகுசாதனப்பொருட்களின் விளம்பரஙகள் சக்கை போடு போடுகின்றன. இது போன்ற முகப்பூச்சு, சோப், வாசனைத் திரவிய விளம்பரங்களில் அழகான பெண்களை சிரிக்கவைத்து காட்டுகிறார்கள். இதைப் பயன்படுத்தினால் அழகாகலாம் என்கிறார்கள். என்ன கொடுமையிது ? உண்மையில் ஒப்பனையில்லாமல் இவர்கள் எப்படியிருப்பார்கள் என்பது அவர்களது ஒப்பனைக்கலைஞர்களுக்கே தெரியும். இது போன்ற விளம்பரத்தில் சிவப்புநிறமில்லாத அசினும், ப்ரியாமணியும் நடிக்கிறார்கள். ரஜினியும், விஷாலும் நடிக்கட்டும் நான் நம்புகிறேன்.

தமிழ்ப்படங்களைக் காணுமளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை, இருப்பினும் சில நேரம் பார்க்க வேண்டிய கட்டாயத்தினால் சிலவற்றைப்பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்தீங்கனா வேலைக்குப்போகாம ஊர்சுத்துறவன், தண்ணியடிச்சுட்டு ரவுசு பண்றவன், காத்தாடி உடறவன், சாவக்கட்டுக்குப் போறவன், பொம்பளப் பொறுக்கி இந்தமாதிரியான ஆண்களையெல்லாம் நயன், தப்ஸி, சமந்தா, தமன்னா, காஜல் மாதிரியான முழங்கைகள் கூட சிவந்திருக்கும் வெள்ளைத்தோல் பணக்கார அழகிகள் தேடி வந்து காதலிப்பார்களாம், அறிவுரை கூறித் தேற்றுவார்களாம். அட ராமா !

இது போன்ற மனநிலையில் வாழும் ஆண்களுக்கு இந்தத் மாதிரியான படங்கள் மிகவும் பிடிக்கின்றன. நமக்குத்தான் நடக்காது படத்திலாவது பார்க்கலாம் என்று தேற்றிக் கொள்கிறார்கள். இதில் குறிப்பிடத்தகுந்த விடயம் என்னவென்றால் இதில் நாயகிகள் அனைவரும் அழகாக இருப்பார்கள். நாயகர்கள் மட்டும் சராசரியாக இருப்பார்கள். அப்படியிருந்தும் அவர்கல் பெரிய இடத்து பணக்கார ஃபிகர்களை மடக்குவதே சாதனையாக ரசிகனால் வியந்து பார்க்கப்படுகிறது. அதே நேரம் சராசரி பெண்கள் இந்த அழகிகளுடன் தோழியாக வந்து நாயகியின் அழகு இன்னும் அதிகமாகக் காட்டப்படுகிறது. இதல்லாமல் அழகற்ற பெண்களை வைத்து சில அயோக்கியர்கள் செய்யும் நகைச்சுவை அருவருப்பின் உச்சம், சந்தானம், விவேக், கவுண்டமணி, வடிவேலு போன்றவரகளெல்லாம் மேலை நாடுகளில் இருந்திருந்தால் நிறவெறிக் கருத்துக்கும், மாற்றுத் திறனாளிகளைக் கிண்டலடித்தற்கும் வழக்கே தொடுத்திருப்பார்கள்.

இவர்கள்தான் இப்படியென்றால் தபூசங்கர் பாணியில் 

"உன் கண்ணில் உள்ளதடி மின்சாரம்
நீ ஆக வேண்டுமடி என் சம்சாரம்
பொன்னகை எதற்கடி எனக்கு
உன் புன்னகை போதுமடி "

என்றெல்லாம் காதல் கவிதை எழுதுகிறவர்களும் பழைய ருஷ்ய பெண்களின் ஓவியங்கள், ஜப்பானிய, சீனத்து இளம்பெண்கள், வெள்ளைக்கார இளைஞிகளை, அல்லது அனுஷ்கா போன்ற அப்போதய பிரபல நாயகிகளின் புகைப்படங்களைப் போடுகிறார்கள். இந்தக் கவிதைகளை நானும் ரசிக்கிறேன். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இவையெல்லாம் காதலியின் உடல் வனப்பை, அழகை கவிதையாக, ஓவியமாக, வாசனையாக மிகைப்படுத்திப் போற்றுவதாகவே, காதலியை, காதலை போற்றாமல் உள்ளன, அதற்கு அந்த புகைப்படங்கள் சாட்சி சொல்கின்றன. இப்படியும் ஒரு பார்வை இருக்கிறது என்று சொல்ல வருகிறேன். (கவிதை குத்துமதிப்பாக எழுதினேன் உண்மையில் யாராவது எழுதியிருந்தால் பொறுத்துக் கொள்ளவும் சுட்டினால் நீக்கி விடுகிறேன்.)

இப்படியாக பெண்ணின் அழகே எல்லா இடத்திலும் முதன்மைப்படுத்தப்படுகிறது. அழகில்லாததாலேயெ பெண்களின் திருமணமும் நடக்காமல் தள்ளிப்போகிறது.  அதனால்தான் இந்த "அழகு' என்ற சொல்லே எனக்கு ஆபாசமாகத் தெரிகிறது. (அழகானவரகள் மன்னிக்க எனக்கு வேறு வழியில்லை). இந்த அழகு பற்றிய மயக்கமெல்லாம் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்காது. அழகான பெண்ணை காதலித்து மணந்தவர்கள், காதலிப்பவர்கள் காதலிக்குத் தெரியாமல் இன்னொரு ஃபிகரிடம் வழிவதும், மடக்குவதற்கும் எத்தனிப்பதும் இயல்பாகவே இருக்கிறது. காதலிக்கும் போது கையை அறுத்துக் கொண்டவரகள், பல் பேருடன் சண்டை போட்டவரகள், வீட்டினருடன் போராடித் திருமணம் செய்தவர்கள் இப்படியாக அனைத்து நண்பர்களையும் நானறிவேன். அனைவரும் மனைவிக்குத் தெரியாமல், இன்னொரு ஃபிகருடன் "நட்பை" வைத்துக் கொண்டுள்ளார்கள், கொள்ள விரும்புகிறார்கள். இதற்குத்தான் பெண்கள் அழகாக இருக்க வேண்டுமென ஆண்கள் விரும்புகிறார்கள். பெண்கள் அழகாக இருக்க வேண்டியதும் இல்லை, அழகாக இருப்பதும் அவரக்ள் கையில் இல்லை என்ற நடைமுறை எதார்த்தத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டும் ஆண்களும் சரி பெண்களும் சரி. எனவே அழகென்பதே உருவத்தில் (மட்டும்)  அன்று, பண்பில், அன்பில் கூட காணமுடியும் என எல்லோரும் சொல்வதையே சொல்லி முடிக்கிறேன். 
Download As PDF
Bookmark and Share

Post Comment