வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)


சமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் விற்கப்பட்ட அந்நூல் வேறு எதைப் பற்றியகுறிப்புகளுடன் இருக்கப் போகிறது குதிரையைத் தவிர. வேடிக்கை என்னவென்றால், அந்நூலின் முதல் பக்கத்தில் இந்நூல் விற்பனைக்கன்று சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. என்ன சங்கம் விவசாயிகள் மற்றும் குதிரை வளர்ப்போர் சங்கம் திருப்பூர் மாவட்டம்(FARMERS & HORSE BREEDERS ASSOCIATION TIRUPUR DISTRICT). விற்பனைக்கு இல்லை என்று விதித்திருந்தும் எப்படி விற்பனைக்கு வருகிறது ? விலையைக் காட்டிலும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் விதிமுறை தளர்ந்து விடுகிறது. 

அப்படியென்ன ரகசியம் இதில் இருக்கிறது எனில் குதிரை வளர்க்க விரும்புவோர், வாங்க விரும்புவோர், குதிரை வைத்திருப்போர்களுக்கான குறிப்புகள் அடங்கிய நூல்தானிது. சந்தைக்கு வருகிறவரெல்லாம் குதிரை வாங்கவா முடியும், ஒருபாடு பேர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். வருகிறவர்கள் குதிரை வாங்காமல் சந்தைக்குப் போனதற்கான அடையாளமாய், போனால் போகிறதென்று ஒரு சாட்டையையோ அல்லது இது போன்ற ஒரு நூலையோ வாங்கிச் செல்வர் போலிருக்கிறது. 


நூலின் மொழிநடை நூறு வருடங்களுக்கு முந்தியதாகத் இருக்கிறது. குதிரையில் இத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதா என்று தோன்றியது. மேலும் வருணாசிரம தருமம் என்ற ஒரு சமாச்சாரத்தைக் கேட்டிருப்போம். அது மனிதர்களுக்கு மட்டும்தானென்றிருந்தேன், ஆனால் மனிதப் பிறவிகள் குதிரைகளின் பிறப்புக்கும் அப்படியொரு விதியை வகுத்து இருக்கிறார்கள் என்று இந்நூலின் மூலம் அறிந்தேன். இதில் வருண பேதம் என்பது குதிரைகளின் நிறத்தை வைத்து கூடும், கூடாது என்று சில விதிகள் கணித்து வைத்திருக்கிறார்கள். பெண் பார்ப்பதற்கு தேவையான தகுதிகளை விட குதிரை வாங்கும் போது இன்னும் அதிகமானவற்றைப்பார்த்து ஆய்ந்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அந்நூல்.

குதிரை பிறந்த (குட்டி போட்ட) கணத்திலிருந்து அந்த கணிப்புத் தொடங்குகிறது. இன்னின்ன நாட்டில் அல்லது ஊரில் பிறந்த குதிரைகள் இப்படியெல்லாம் இருக்கும், இதனால் அதன் முதலாளிக்கு இலாபமுண்டாகுமா அல்லது கெடுதல் உண்டாகுமா என்றெல்லாம் கணிக்கப்பட்டுள்ளது.

குதிரை எந்த ஊரைச் சார்ந்தது அல்லது நாட்டைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து அதன் வேகம், திறமை, வலிமை குறித்துச் சொல்கிறது இந்நூல். எந்த நேரத்தில் பிறந்தது என்பதைப் பொறுத்து அதை வாங்குகிறவருக்கு, அல்லது வைத்திருப்பவருக்கு ஏற்படும் மாற்றங்கள் - நன்மைகள், தீமைகள் என்று வரையறுக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று - குறிப்பாக சித்திரை மாதத்தில் குதிரை பிறந்தால் அல்லது பிறந்த குதிரையை வைத்திருந்தால், வாங்கினால் அல்லது வளர்ந்த்தால் அந்தக் குதிரைக் காரன் நட்டமடைவான். எனவே பரிகாரமாய அக்குதிரையை பரதேசிகளுக்கு தானமளித்திட வேண்டும் இல்லையெனில் குதிரையின் காதுகளை அறுத்து விட வேண்டுமாம் (:.
                                        
குதிரைகளின் வயதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அதன் பற்களின் நிறத்தை வைத்து முடியுமாம். பற்களின் நிறம் மாறும், ஒவ்வொரு நிறமும் மூன்று வருடங்கள் நிலைக்கும் இவ்வாறு ஒன்பது விதமான நிறங்களிருக்கின்றனவாம். காலிகா, அறளிகா, குளிகா, காஜா, மாக்கா, சிங்கா, ஊலிகா, லங்குனி, மற்றும் பெஸ்தி  ஆகியன குதிரைகளின் பற்களின் நிறங்கள். ஒவ்வொரு நிறத்திற்கு குறிப்பிட்ட வயதாக கணிக்கிறார்கள்.

குதிரை வாங்கும் நபரின் முன்பாக அக்குதிரை லத்தி போட்டால் அது நன்மை தரும் குதிரை, எனவே வாங்கலாமாம், சிறுநீர் கழித்தால் அக்குதிரையை வாங்கக்கூடாதாம்.

அடுத்து குதிரையின் ஜாதியறிவது எப்படி என்று விளக்குகிறார்கள்.

குதிரையை நீரின் (நீர் நிலை) முன் விட்டு அதன் மறுவினையைக் கொண்டு ஜாதி பிரிக்கிறார்கள். பிரம்ம க்ஷத்ரிய வைசிய சூத்திர ஜாதியறிதல் இவ்வாறு ;


பிரம்ம ஜாதி -

நீரைக் கண்டவுடன் கண்வரையில் நீரில் தலையை மூழ்க விட்டு நீரைப் பருகும்.
இந்திரியக் கட்டுப்பாடு, நல்ல குணம், புத்திசாலி, குற்றமற்ற நடை
போரில் முன்செல்லாமல் பின்வாங்கும்

க்ஷத்திரிய ஜாதி -

மூக்கு வெளியே தெரியும் படிக்குத் தண்ணீர் குடிக்கும். கோபமும், பராக்கிரமமும் வாய்ந்தது. பெரிய உருவமுடையது. போரில் தனது எஜமானனைக் காக்கும், எதிரிகளைக் குதறி துவம்சம் செய்யும். போருக்குத் தகுதியானவை

வைசிய ஜாதி -

வாய் பட்டும் படாமலும் நீர் பருகும், நீரைக் கண்டு அஞ்சியே நடக்கும். இயற்கைச் சீற்றம் தாங்கும். ஓய்வில்லாது உழைக்கும் முரட்டு வேலைக்கு ஆனது.. சவாரிக்கும், கீழ்ப்படியவும் ஆகாதது.

சூத்திர ஜாதி -

சவுக்காலடித்தாலொழிய நீரில் கால் வைக்காது. அச்சமும் அயோக்கியத்தனமும் உடையது. எஜமானனைக் கீழே தள்ளி கடித்துக் கொன்று விடும்

இதில் சூத்திர ஜாதிக் குதிரையை மட்டும் வாங்கக் கூடாது. வாங்குவோர் நட்டமடைவர். இன்ன பிற மூன்று ஜாதிக் குதிரைகளையும் வாங்கலாம் அதிலும் வைசிய ஜாதிக்குதிரை கடின வேலைக்கும் மட்டும் உதவும். முதலிரண்டு ஜாதிகளுமே வாங்கத் தக்கவை.. பெருமைக்குரியவை.

குதிரைகளின் சுழியை வைத்தும் சில பண்புகளைக் கணிக்கலாமாம்.

குதிரைகளின் ராசி வகைகள் -  காத்திராசி, பத்தவிராசி, கீரிராசி

என்றெல்லாம் அந்நூல் விவரித்துச் செல்கிறது. வருண பேதமும் இருக்கிறது, இதில் குதிரையின் வண்ணங்களின் கலவையைக் கொண்டு பிரிக்கிறார்கள். வால் மட்டும் வெள்ளை மற்ற இடங்கள் கருப்பு, ஒரு கால் மட்டும் கருப்பு மற்ற பாகங்கள் வெண்மை, அல்லது பிடரி கண் முடிகள் மட்டும் கருப்பு இன்ன பிற இடங்கள் வேறு நிறம் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெயராக வைத்திருக்கிறார்கள். குதிரைகள் இப்படியாக பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டேன். இதிலிருந்து என்ன புரிகிறதோ அதைப் புரிந்து கொள்ளுங்கள் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
                                                                                                           
Download As PDF
Bookmark and Share

Post Comment

வாசிப்பு - கமலின் கலப்படங்கள்


எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். கமலின் ரசிகர்களைப் போலவே அவர் குறித்த உண்மைகள் தெரியாத வரையில் அவர் எனக்கொரு அதிசயமாகவே இருந்தார். சகலகலா வல்லவர் என்ற பிம்பம் அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தாலும் அது எந்தளவுக்கு உண்மை என்பது அவர் பல படங்களின் கதைகளையும், காட்சிகளையும் திருடி அல்லது தழுவி எடுத்திருப்பதைக் கொண்டு முடிவு செய்து கொள்ளலாம்.  அதை செய்ததற்காக அவர் வெட்கமோ வருத்தமோ அடையவில்லை. ஒரு முறை பேட்டியில் கூறினார் எனது சிப்பிக்குள் முத்து திரைப்படத்திலிருந்துதான் ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தை எடுத்தார்கள் (உண்மையா ?). நாம் அவர்களிடமிருந்து காப்பியடிக்கிறோம், அவர்கள் நம்மிடமிருந்து அடிக்கிறார்கள் என்று சொன்னார்.

அவர் மீதான போலிக் கற்பிதங்கள் உடைந்தும் பிரமிப்புகள் அகன்ற பின்னும், அவரது கவிதைகள், வசனங்களில் வரும் சிறிய நகைச்சுவைத் துணுக்குகள் என்று பல விடயங்களில் இன்னும் கமல்ஹாசனை எனக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. மகனை மட்டும் திரைப்படத்தில் களமிறக்கி விடுவது, மகள் என்றால் மணமுடித்துக் கொடுப்பது என்றிருக்கும் நிலையில் தனது மகளையும் திரைத்துறைக்கு அனுமதிக்கும் துணிச்சலும் நேர்மையும் உள்ள சில நடிகர்களில் கமலும் ஒருவர். நடிகன் என்பதைத் தாண்டி, பாடல், கதை, வசனம், இயக்கம் என்று மற்ற இடங்களிலும் தனது முத்திரையைப்பதித்தவர். யாரென்றாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அதுவும் கலைஞன், படைப்பாளி என்றால் விமர்சனம் நேர்மையென்றால் ஏற்றுக் கொண்டு மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் அதுதான் அழகு. என்ன நமக்குப் பிடித்தவர் என்பதால் விமர்சனம், உண்மை எல்லாம் கசக்கத்தான் செய்யும்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். "எனது பெயரைச் சொல்லும்போது பத்மஸ்ரீ கமல் என்று சொல்லாதீர்கள், பத்மஸ்ரீ  விருது வாங்கியவர்கள் அதை பெயருடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடாது என்று விருது வாங்கியவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்". இதே கமல்தான் தனது பெயருக்கும் முன்பு உலகநாயகன் என்றும் மனசாட்சியில்லாமல் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்தப் பெயருக்கு நிச்சயம் தகுதியில்லாதவரே.

உலகத் திரைப்படங்களிலின் கதைகளை எடுத்து தனது பெயரில் போட்டுக் கொள்வது, அதை மற்றவர்கள் புகழ்வதை ஏற்றுக் கொள்வது என்ன வகையான மனநிலை என்பது தெரியவில்லை. குறைந்த பட்சம் நன்றி கூட எழுத்துப்பூர்வமாகப் போடாமல் தனது பெயரில் போட்டுக் கொள்வதெல்லாம்.... !!

கமல்ஹாசனை யாருக்கெல்லாம் பிடிக்கிறது, யாருக்கெல்லாம் பிடிக்காது. பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள்தான் அதிகமிருப்பார்கள். கடவுள் இல்லையென்று சொல்வதால் பிடிக்காது, உதட்டு முத்தம் கொடுப்பதால் பிடிக்காது. இந்து மதத்தை கிண்டல் செய்வதால் பிடிக்காது. இஸ்லாமியர் மீதான காழ்ப்புச் சித்தரிப்புகளால் அவர்களுக்குப் பிடிக்காது. திருமணமின்றி இணைந்து வாழ்வதால் பிடிக்காது. இதில் சில பிடிக்காதுகள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் மீதான தனிநபர் வெறுப்பிலிருந்து வருவதால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவேண்டியதில்லை. அதெல்லாம் மனநோயாளிகள் பிதற்றல் என்று கடந்து விடலாம்.

ஆனால் அவர் மீது அறிவாளர் (Intellectual) முத்திரை குத்தப்படுவதால், பிம்பம் கட்டமைக்கப்படுவதால் அவர் மீதான கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தரமான படங்கள், உலகத்தரத்தில் திரைப்படம் என்றெல்லாம் அவரே முன்னிலைப்படுத்திக் கொண்ட கருத்து என்பதால் இன்னும் அவசியமாகிறது. 

கமலின் கலைலப்படங்கள்
 
கமல் மீதான நேர்மையான, அதே நேரம் மிகவும் கடுமையான, எள்ளலும் நிறைந்த விமர்சனத்துடன் ஒரு நூலைப் படிக்க நேர்ந்தது. கமலின் கலப்படங்கள் என்ற இந்த நூலை இப்போதுதான் படித்தேன், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 


தமிழில் தரமான படங்கள் வரவேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் B.R. மகாதேவன். இவர் இந்த நூலுக்கு முன்பே மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவையும் திரைப்படக் கலைஞர்கள், படைப்புகளின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களே என்று தெரிய வருகிறது. ஒரு திரைப்படத்தைத் விமர்சனம் செய்ததோடு அல்லாமல் அந்தத் திரைப்படம் இப்படி இருந்திருக்கலாம் என்று அதற்கு மாற்றான கதையையும் இவர் எழுதியிருக்கிறார்.

கமல் நடிப்பு மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று பங்களிப்பு செய்த திரைப்படங்களான, ஹேராம், விருமாண்டி, தேவர் மகன், அன்பே சிவம், குணா, குருதிப் புனல் ஆகிய ஆறு படங்களின் விமர்சனத்தையும், அப்படங்களுக்கு தான் திரைக்கதையாசிரியராக இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்றும் ஒரு கதையையும் சில காட்சிகளையும் சற்றே மாற்றியும் எழுதியிருப்பது சிறப்பாக இருக்கிறது. அட  இப்படியும் கூட எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. என்ற ஏக்கமும் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு

விருமாண்டி படத்தில் நெப்போலியன் எதிரியிடம் தனியாகப்போய் மாட்டிக் கொண்டும், கையில் துப்பாக்கியிருந்து அரிவாளுடன் இருப்பவனை சுடுவார், அடுத்த தோட்டாவை லோட் செய்வதற்குள் பசுபதி வெட்டிக் கொன்று விடுவார். கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு  அரிவாள் வைத்திருப்பவனிடம் மாட்டிக் கொள்வதா ? துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கலாமே ... என்று ஒரு காட்சியில் இருக்கும் அபத்தத்தை விமர்சிப்பது முதல்

ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவனே காவல்துறையின் கைதியாக  இருக்கும்போதும், இரண்டாம் நிலையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல், தீவிரவாத இயக்கத்தை அழிக்கவே முடியாதா என்று குருதிப் புனலின் கதையின் அடிப்படையையே கெள்வி கேட்கும் வரையில் ..

கமல்ஹாசனின் திரைப்படங்கள் பல மொழிப் படங்களின் திருட்டு என்பதோடல்லாமல், பல இடங்களில் தமிழ்த் திரைப்படங்களின், தமிழ் நாயகர்களின் அபத்தமான வழமைகளிலிருந்து வேறுபட்டதில்லை என்று சொல்கிறது. நேற்று வந்தவர்களெல்லாம் தரமான படங்கள் கொடுக்க முடிந்தபோதும், திரைப்படத் துறையில் அரை நூற்றாண்டாக இருக்கும் கமலால் ஏன் முடியவில்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது.

எல்லாவகையிலும் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படத்தை அல்லது கதையை எப்படிப் பார்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும், அல்லது இயக்க வேண்டும் என்ற ஒரு கோணத்தை ஏற்படுத்துகிறது இந்நூல். திரைப்பட விரும்பிகள், விமர்சகர்கள் படிக்க வேண்டிய நூல். முக்கியமாக திரைப்படம் விமர்சனம் எழுதுகிறவர்கள், கமல் ரசிகர்கள் படிக்க வேண்டிய நூல்.

நூலின் பெயர்:
கமலின் கலைலப்படங்கள்
160 பக்கங்கள்
விலை ரூ 120

ஆசிரியர்
B.R. மகாதேவன்.

நிழல் வெளியீடு
ப.திருநாவுக்கரசு,
31/48, ராணி அண்ணாநகர்,
சென்னை - 600 0078
கைப்பேசி 94444-84868
மின்னஞ்சல் : arasunizhal@gmail.com

Download As PDF
Bookmark and Share

Post Comment