பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்கள் எதை இழக்கிறார்கள் ?

பொதுவாக ஆணாகட்டும் பெண்ணாகட்டும் இருவருக்குமே வேறுபாடுகளின்றி விரும்பியதைப் பெற இயலாமலும், பெற்றதைக் காத்துக் கொள்ள இயலாமலும் இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை. குழந்தையாக இருப்பதிலிருந்து பார்த்தால் ஊர்சுற்ற, விளையாட ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் சுதந்திரம் பெண் குழந்தைகளுக்கு இல்லை. நகர்ப்புறத்திலிருக்கும் வசதியான வீட்டுப் பெண்கள் சிலர் விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பான்மையான நடுத்தரக் குடும்பங்களில் வீட்டில்தான் அடைந்து கிடக்கின்றனர். பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சியைத் தவிர்த்து (தற்போது)அவர்களுக்கென்று வேறு எல்லைகள் எதுவுமில்லாததால் கவனம் செலுத்தில் படிக்கவும் இந்த சமூகக் காரணி வழிவகுக்கிறது.

இப்படியாக இருக்கையில் எனக்கு சுற்றத்திலிருக்கும் பெண்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. எனது வீட்டிலிருந்து எனது உறவினர்கள், நண்பர்கள் அறிந்தவர்கள் என எங்கு பார்த்தாலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலைதான். யாராவது பேசிக்கொண்டிருந்தால் இப்படியான பேச்சை அடிக்கடி கேட்கவியலும். குழந்தைகள் எப்படிப் படிக்கிறாங்க என்று ஒருவர் கேட்டால் மற்றொருவரின் பதில் இப்படி இருக்கும். பொண்ணு நல்லாப் படிக்கறா ஆனா பையன் கொஞ்சம் சுமார்தான் என்பார்கள். விதிவிலக்காக சில இடங்களில் இது மாறுபடும்

நாமும் வருடந்தோறும் கேட்கிறோம் வழக்கம்போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர் என்று. ஆனால் அத்தனை பேர் தேர்ச்சி பெறுகிறார்களே படிக்கும்போது இலட்சியத்துடன் இருந்த பெண்கள் அனைவரும் என்னவாகிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எல்லோரும் திருமணம் முடிந்து இல்லத்தரசிகளாகவே மாறிவிடுகின்றனர். சொற்பமான எண்ணிக்கையிலேயே வேலைக்குப் போகின்றனர். அவர்களில் சிலரும் குழந்தை பிறந்த பிறகு வேலைக்குச் செல்வதை நிறுத்தியும் விடுகின்றனர்.

இப்போது நான் சொல்ல வந்தது எனது சுற்றத்திலிருக்கும் பெரும்பான்மையான பெண்குழந்தைகளின் வரலாறு எப்படியிருக்கின்றதென்றால், அவர்கள் சிறுமியாக இருப்பதிலிருந்தே நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். ஆனால் பத்தாவது முடித்த பிறகு அவர்கள் முதல் பிரிவான அறிவியலில் சேராமல் மூன்றாம் பிரிவான வணிகவியலில்தான் சேர்வார்கள். விரும்பி சேர்வது வேறுவகை, இந்த விரும்பல் என்பது ஒருவகை கட்டாயம். ஏனென்றால் முதலாவதாக அவர்கள் பொறியியல் படிக்கப்போவதில்லை, காரணம் அது நான்கு வருடம். செலவு அதிகம். கல்யாணம் பண்ணப்போற பெண்ணுக்கு பொறியியல் எதற்கு என்ற கணக்குதான். பெண்களின் எல்லை எதுவாக இருக்கிறதென்று பார்த்தால் 20 வயதுகளில் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது பெற்றோருக்கு. அதற்கு மூன்று வருட பட்டப்படிப்புதான் சரியாக வரும். மீறிப்போனால 22 அல்லது 23 தான் அதிகபட்சம், அதுவரை மாப்பிள்ளை சிக்காவிட்டால் முதுகலைப் பட்டமும் படிக்க வாய்ப்புண்டு. படிக்கும்போதே நல்ல வரன் அமைந்துவிட்டாலோ படிப்புக்கு முழுக்குதான். திருமணமே முடிந்தாயிற்று பின்பெதற்கு படிப்பெல்லாம் என்றுதான் எண்ணுகிறார்கள்.

முன்பு இளவயதில் திருமணம் தேவையில்லை என்றே நினைத்திருந்தேன், ஆனால் எவ்வளவு விரைவாக திருமணம் நடக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடப்பது நல்லது என்று தற்போது தோன்றுகிறது. ஆண்களின் பணியோ மாறுவதில்லை. சரி திருமணமாகிவிட்டால் பெண்ணின் வாழ்க்கையானது இல்லத்தரசி என்ற அளவில் சுருங்கி விடுகிறது. அவள் 15 வருடக் கல்வித் தகுதியானது திருமண அழைப்பிதழில் போடுவதற்காக மட்டும் என்ற அளவில் மாறிவிடுகிறது. அதற்குப் பிறகு கல்விக்கும் அவளுக்குமான தொடர்பே இல்லாமல் போய்விடுகிறது. பின்பு குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதுதான் அது ஓரளவுக்கு உதவுகிறது.

வேலையில்லாமல் சிங்கியடித்து, தகுதியான வேலையும் ஊதியமும் இல்லாமல் சிங்கியடிக்கும் சொந்த அனுபவம் காரணமாக பேசாம பெண்கள் திருமணம் செய்து கொண்டு இருப்பது பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கும் என்பது எனது ஒரு எண்ணமாக இருந்தாலும், வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கின்ற பெண்களுக்கு அது சாத்தியப் பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நிலவரம் எப்படி இருக்கிறது என்றால் வேலை பார்க்கும் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு வேலையை விட்டு விடும் நிலைதான் இருக்கிறது. தன்னை விட மேலான வேலையிலிருக்கும் ஆணைத் திருமணம் செய்து கொண்டால், கணவரின் பணியிடம் வேறிடமென்றால் பெண் வேலையை விட வேண்டியிருக்கிறது.

இதுவரை நான் பல தனியார் நிறுவனங்களில் (சேவைத்துறை, மென்பொருள்துறை) கண்டிருக்கிறேன், நான் பணிபுரியும், பணிபுரிந்த இடங்களிலும் கண்டிருக்கிறேன். பெண்களைத்தான் அதிகமாக வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது எளிது திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் திருமணத்திற்குப் பின்பு வேலைக்கு வருபவர்கள் மிகச் சிலரே. இதற்காக ஆண்கள் அவர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள். இவளுக 2 வருசம் வேலைக்கு வந்துட்டு, பெரிய வேலையிலிருக்கறவனாப் பாத்துக்  கல்யாணம் பண்ணிட்டுப் போறதுக்கு வராம இருந்தால் 2 பசங்களுக்கு வேலை கிடைக்கும்ல என்கிறார்கள். பெண்கள் வாழ்க்கையின் அடுத்தபடி திருமணமாக இருக்கிறது, ஆண்களுக்கு வேலைக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம். எனச் சொல்கிறார்கள் அது உண்மையாக இருந்தாலும் இப்படிப் பேசுவதற்கு இவர்களுக்கு உரிமையோ நேர்மையோ அதிகாரமோ இல்லை. அது தலைவிதியாக இருப்பதால்தான் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.

படிக்கும் நாட்களில் பழக்கப்பட்ட வாசகமொன்று நினைவுக்கு வந்தது, பெண்கள் ஏன் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து கொள்வார்களாம் ஆண்கள் புரிந்து படிப்பார்களாம். இது ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. எனது தங்கை ஒருத்தி துணைப்பாடத்தில் வரும் சிறுகதையே மனப்பாடம் செய்துதான் எழுதுவாள். அப்படியே மனப்பாடம் செய்தாலும் கணக்குப்பாடத்தில் தேறமுடியாதே, சரி கல்வியே மனப்பாடக் கல்விதான் அதை எப்படிச் செய்தால் என்ன. மனப்பாடம் செய்து எழுதுவதாலோ அல்லது அதிக மதிப்பெண் பெரும் பெரும்பான்மையான மாணவர்கள் வெறும் திறமையற்றவர்கள் சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளுமல்ல. சரி அப்படியே அவர்கள் மனப்பாடம் செய்து படித்தாலும் வேலைக்கு எடுப்பவர்கள் அதிகமாக மாணவிகளையே எடுப்பது ஏன்.

சிரமப்பட்டு படித்து பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்து, அல்லது நல்ல வேலை கிடைத்தும் திருமணத்தின் பின்பு அதை துக்கியெறிய வேண்டிய நிலையும் வருகிறது. அதற்குப் பின்பு சமையல் குழந்தை வளர்ப்பு என்று குண்டுச் சட்டியில் சுழலும் சலிப்புத் தட்டும் வாழ்க்கையை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டி வருகிறது. என்னுடன் 12 ம் வகுப்பில் படித்த ஒரு மாணவிதான் எங்கள் வகுப்பில் முதலாக வருவாள். அவள் ஒரு பேருந்து நடத்துனரின் மகள். மருத்துவம் படிப்புக்கேற்ற வகையில் திறமையும் மதிப்பெண்ணும் பெற்றிருந்தாள். அவள் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவளென்பதால் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்துவிடும் நிலையும் இருந்தது. ஆனால் அவளது அப்பாவோ ஒரு வேளை மருத்துவம் படித்தால் மாப்பிள்ளை கிடைக்காது என்று சொல்லி அவளது தந்தை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டார்.

என்னுடைய உறவினரில் ஒரு பெண் இருக்கிறாள் அவள் தற்போதுதான் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கு எம்பிஏ படித்து விட்டு கொஞ்ச நாள் வேலைக்குப் போக வேண்டுமென்பது விருப்பமாக இருக்கிறது. அந்தக் கொஞ்ச நாள் ஏனென்றால் அதற்குப் பிறகு திருமணம் பின்பு அவ்வளவுதான் என்பது அவளது விதியாக இருக்கிறது. தற்போது ஒரு உறவினர் வீட்டுத் திருமணம் வருகிறது. திருமணத்தின்போது நான் சேலை கட்ட மாட்டேன், சுடிதார்தான் போடுவேன் என்கிறாள். காரணம் ஜீன்ஸ் அணிவதை ஏற்குமளவுக்கு பெரியவர்கள் பக்குவப்படவில்லை. சுடிதார் என்றால் பிரச்சனையில்லை. சேலை கட்டினால் பெரிய பெண்ணாகத் தெரிவாள். (போதாக்குறைக்கு அழகாக வேறு இருப்பதால்) திருமணத்திற்கு வரும் யாராவது பார்த்து பெண்கேட்டு தூதுவிடுவார்கள், எப்போது என்று காத்திருக்கும் பெற்றோரும்  பேசி முடித்து விடுவார்கள், பிறகு எம்பிஏ கூட படிக்க முடியாது என்று அச்சப்படுகிறாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெண்களின் சிறு சிறு ஆசைகளும் பெரிய ஆசைகளும் கூட நிறைவேறும் வாய்ப்புகள் இப்படி இருக்கிறது .
Download As PDF
Bookmark and Share

Post Comment

தோல்வியைத் திணிக்கும் கல்வியும் சமூகமும்

பன்னிரண்டாம் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து நடப்பவை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க பேட்டி கொடுக்கின்றனர். தமது இலட்சியத்தைப் பற்றிக் கூறுகின்றனர். வழக்கம் போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகத் தேர்ச்சி என்ற வசனத்தை பதினைந்து வருடங்களாகக்(!!?) கேட்கிறேன். ஒவ்வொரு வருடமும் என்ன நடக்கிறதோ அதுதான் இப்போதும் நடக்கிறது, இனி வரும் வருடங்களிலும் இதுதான் எந்த மாற்றமுமின்றி நடக்கப்போகிறது. ஊடகங்களுக்கு இதை வைத்து எவ்வளவு செய்திகளை உருவாக்க முடியுமோ அந்தளவுக்கு செய்திகள் குவிந்து கிடைக்கின்றன. சாதனையாளர்களின் பேட்டிகள், பள்ளிகளின் பெருமைகள், மாணவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அர்ப்பணிப்பு வெற்றி இரகசியம், தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைகள், வயது, வறுமை உடல் ஊனத்தை வென்று அதிக மதிப்பெண் குவித்த மாணவர்கள் என இதைச் சுற்றிய செய்திகள் ஏராளம்.

இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதுதான் புரியவில்லை. இதே அளவு பரபரப்பு 10 வகுப்புத் தேர்வு முடிவுக்கும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் வாழ்க்கையிலேயே இதுதான் மிகப்பெரியது போலவும் இது முடிந்தால் போதும் வாழ்க்கையிலேயே வெற்றி பெற்றது போலவும் ஊதிப் பெருக்கி வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும், நகரத்திலும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் படத்தை பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். சரி அவர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் தேவைதான். அதற்காக இப்படி அதகளப்படுத்தினால் ?? இது தோல்வியடைந்த மாணவர்கள் மீது எவ்வகையான அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது குறித்து பில்டப் காரர்கள் கவலை கொள்வதேயில்லை.

இப்படி மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுப்பவர்கள், இது போன்ற அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்து என்னவாகிறார்கள் என்று கவலைப்படுகிறார்களா ?  அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் சிலர் கல்லூரிப் படிப்பே தேற முடியாமல் போகிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா ? தெரியாதா ? தேர்வு முடிவு வெளியானவுடன் கல்வியாளர்கள் அது இது என்று யோசனை சொல்கிறார்கள். இப்படி மாய்ந்து மாய்ந்து படித்தவர்கள் எத்தனை பேர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றார்கள் என்பது தெரியுமா ? அல்லது தற்போது பேட்டி கொடுத்தது போல கலெக்டரானவர்கள், மருத்துவரானவர்கள் எத்தனை பேர். இந்த பில்டப் பற்றிச் சொல்லப்போனால் ஐபிஎல் போட்டிகளுக்குக் கிடைக்கும் போலி விளம்பரத்திற்கு ஒப்பானது.

ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நல்ல கற்பித்தலுக்கும் "திறமையான மாணவர்களை" தயாரித்து அனுப்புவதிலும் முன்னணியில் இருக்கின்றன. ஊத்தங்கைரையில் ஒரு பள்ளி இருக்கிறது. அது நல்ல பெயரெடுத்த பள்ளியாம். 10 வகுப்பு முடிவு வெளியான அன்று அதிகாலையிலேயே பெற்றோர்கள் அப்பள்ளியில் விண்ணப்பம் வாங்கக் காத்துக் கிடப்பார்களாம். அதில் சேரவும் பத்தாம் வகுப்பில் மிகப்பிரமாதமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. அதாவது பெயர் பெற்ற பள்ளிகள் என்றால் ஏற்கெனவே நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை எடுத்து அவர்களை சக்கையாகப் பிழிந்து அதிக மதிப்பெண் வாங்க வைப்பது அவர்களின் "திறமையாம்." நாமக்கல் மாவட்டம் கல்விக்குப் பெயர் போனது, அங்குள்ள வித்யா விகாஸ் ((கல்வி நிலையம் என்பதன் சம்ஸ்கிருதம்தான் வித்யாவிகாஸ்) (பெரிய வித்யாசமான பேரெல்லாம் கிடையாது)). அங்கும் இப்படித்தான் பள்ளியின் வெளியே 11 ஆம் வகுப்பு விண்ணப்பம் வாங்குவதற்கு வரும் பெற்றோர்களால் கொண்டுவரப்பட்டு சாலையோரங்களில் அனைத்து ரகமான பெரிய விலையுயர்ந்த கார்களைக் காண முடியும். 

இது போன்ற பள்ளிகளில் கற்பித்தல் என்பது உயர்ந்த தரத்தில் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பணம் வேண்டுமே படிப்பதற்கு, இல்லையெனில் 90 % மதிப்பெண்கள் வேண்டும் எத்தனை பேரால் முடியும். இந்த மனப்பாடக் கல்வி மீதே நமக்கு நூறு விமர்சனங்கள் உள்ளன. இந்தியனை அடிமைப்படுத்த மெக்காலே செயல்படுத்திய கல்வித்திட்டம், போதாக்குறைக்கு சிபிஎஸி, சமச்சீர் ஆங்கிலோ இந்தியன் என பலவகையான பாடங்கள். இதில் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள், ஆங்கில வழி தமிழ் வழி என இத்தனை முரண்பாடுகள். தனியார் பள்ளிகள் பெருகிய பின்பு இப்போதெல்லாம் 9 வகுப்பும், 11 ம் வகுப்பும் அந்த பாடத்தின் தேர்வுகளும் செல்லாக் காசுகளாகிவிட்டன. ஏறக்குறைய ஒன்றைரை வருடங்கள் படித்த பின்புதான் 10 ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடக்கின்றன. இதில் பல பள்ளிகளில் மாணவர்கள் பிட்டடித்துத்தான் மதிப்பெண் பெறுகிறார்கள்.

பிட்டடிக்க முடியாதவர்கள் தோல்வியடைகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள். பெற்றோர்களால்தான் இவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தம் பிள்ளை தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ குறைந்து விட்டாலோ தமது மரியாதை கெட்டுவிட்டதைப் போலவும், குடி முழுகிவிட்டதைப் போலவும் கருதிக் கொள்கிறார்கள். இந்தப் படிப்பு என்பது எல்லோருக்கும் வராது என்பதுதான் எதார்த்தம். கடும் முயற்சி செய்தால் ஓரளவு மாறும், அதுவும் எல்லோருக்கும் சாத்தியம் என்பதில்லை. என்னதான் முக்கினாலும் சிலருக்கு வரவே வராது. எனக்கு கணிதம் என்றால் வேப்பங்காய், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எனக்கு மாரடைப்பு வருமளவுக்கு மன அழுத்ததைக் கொடுத்தது. இந்த நிலையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லை படித்தால்தான்  நல்ல வேலை கிடைக்கும் என்று மூட நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் அங்கங்கே வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றால் அங்கே காத்துக் கிடக்கும், ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கும். அப்படியே வேலை கிடைத்தாலும் எல்லோருக்கும் 5 இலக்க ஊதியம் கிடைக்காது. இத்தனை படிச்சிட்டும் இவ்வளவு குறைச்சலாத்தான் சம்பளம் குடுக்கிறானா ? அப்பறமெதுக்கு அந்த வேலைக்குப் போற ? என்று வக்கனை பேசவும் சொந்தக் காரரும், நண்பரும் வருவார்கள்.

பல பெற்றோர்க்கு வேறென்ன ஆசையென்றால், பையன் படித்து பட்டம் வாங்கினால் அதை வைத்து நிறைய சீதனம் பெறலாம் என்ற கணக்கில் இருக்கிறார்கள். பையன் இத்தனை படித்திருக்கிறான் பெண்ணுக்கு இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்க திட்டம் வைத்திருக்கிறார்கள். இதை ஏன் பையனின் பெற்றோரை மட்டும் சொல்கிறேனென்றால் பெரும்பான்மையாக பெண்கள் தேறிவிடுகிறார்கள். ஆண்கள் அப்படியில்லை அவர்களுக்குத்தான் இப்பிரச்சனை. எனக்குத் தெரிந்து பல பேர் சீதனம் பெறுவதற்காகவே இரு பட்டங்களைப் படித்து முடிக்க வேண்டும் என திட்டம் போட்டு படிக்கிறார்கள். எம்பிஏ என்பது கவர்ச்சிகரமான பட்டமாக திருமணச்சந்தையில் இருக்கிறது. கன்யாகுமரியைச் சேர்ந்த என் நண்பனொருவன் BSc, MSc, MBA, என மூன்று பட்டங்களைப் படித்து விட்டான். அவனுக்கு படிப்பெல்லாம் வராது எல்லாம் பேப்பர் சேஸிங்தான். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சீதனமாகக் கிடைக்கும் என்கிறான். அதற்குப் புகழ்பெற்றதுதான் கன்யாகுமரி மாவட்டம் !!

திருமண அழைப்பிதழில் போடுவதற்கென்றே சிலர் அஞ்சல் வழியில் படிக்கிறார்கள். எப்படியென்றால் ஒரு விண்ணப்பத்தை வாங்கிவிட வேண்டியது அதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க வேண்டியது. அவ்வளவுதான் டிகிரி வாங்கியாச்சு. மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காருன்னு கேட்டால் சொல்லிக்கலாம். எல்லோரும் சான்றிதழைக் கேட்க மாட்டார்கள். அப்படியில்லையென்றால் இருக்கவே இருக்கிறது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கொஞ்சம் காசு கொடுத்தால் டிகிரியை வாங்கிவிடலாம். பல தடைகளைக் கடந்து நேர்மையாகத் தேர்வு எழுதும் மனிதர்கள் இருக்கும் ஊரில்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பட்டம், படிப்பு என்ற போலித்தனத்திற்கு இருக்கும் பகட்டுதான் காரணம். ஜாதிப்பெருமை போல பெரிய படிப்பு படித்தவர்க்கு திருமணச் சந்தையில் இருக்கும் வணிக மதிப்புத்தான் காரணம். நடுத்தர, பணக்காரர்களின் போலித்தனமான வெட்டி பந்தாதான் இதன் மூலம்.

பெற்றோர்களின் பேராசைக்கு ஒரு அளவேயில்லை. என்னுடைய சித்தி மகள் 1150 - க்கும் மேல் வாங்கிவிட்டாள். இருப்பினும் அவளது பெற்றோர்க்கு இன்னும் 20 மதிப்பெண்கள் கூட வாங்கியிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்களாம். எதற்கு வெளியே பேசி பெருமையடித்துக் கொள்ளத்தான். அவள் 1195 வாங்கினால் கூட கலெக்டருக்கோ அல்லது மேற்படிப்போ படிக்க வைக்கப் போவதில்லை திருமணந்தான் செய்து வைக்கப்போகிறார்கள் இருந்தாலும் இப்படி ஒரு நப்பாசை. இப்படித்தான் ஒவ்வொரு பெற்றோருக்கும் மதிப்பெண் மீதான் மோகம் இருக்கிறது.

இப்படியிருக்கையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களைத் தேற்றுகிறேன் என்று அதிக மதிப்பெண் வாங்கியவர்களை சிறுமைப்படுத்துவதும் கண்டிக்கத் தக்கது. வருடக்கணக்காக உயிரைக் கொடுத்துப் படித்து மதிப்பெண் வாங்கியவர்களை மனப்பாடம் பண்ணி வாந்தியெடுப்பவர்கள், சொந்தமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் சொல்வது அறிவீனமானது. இதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது, பாராட்டாமலும் இருக்க முடியாது.

கல்வி என்பது நல்ல வியாபாரமாக இருக்கிறது. இதனால் கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளின் பேரால் கொட்டி பெரும் பணக்காரர்களால் கல்வி நிலையங்களை நடத்த முடிகிறது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும் இதுதான் நிலை. எத்தனை மதிப்பெண் பெற்றாலும் பணம் கட்டாமல் படிக்க முடியாது. சிலரைத் தவிர்த்து. எங்கள் கல்லூரியிலிருந்து இத்தனை பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில கல்லூரிகள் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவங்களுடன் ஒப்பதம் போட்டுக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் பெயருக்கு வளாகத்தேர்வை நடத்துவார்கள், அனைவருக்கும் வேலை கிடைக்கும், அல்லது யாரையும் எடுக்காமலும் போகலாம். அல்லது அனைவரையும் வேலைக்கு எடுத்துவிட்டு சில மாதங்களில் பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லி.  வெளியேற்றிவிடலாம் ஆனால் கல்லூரிகள் விளம்பரம் செய்து கொள்ளும் எங்கள் கல்லூரியில் சென்ற வருடம் இத்தனை பேருக்கு வேலைக்கு இடம்(placement) பெற்றுத் தந்தோம் என்று. எப்படி எல்லோருக்கும் வேலை தருவார்கள் என்றா கேட்கிறீர்கள், படிப்புக்கும் வேலைக்கும் பெரிய தொடர்புகள் இருப்பதில்லை என்ன படித்தாலும் 6 மாதப் பயிற்சி பின்பு வேலை அவ்வளவுதான். நாடகம் முடிந்தது. இப்படித்தான் இருக்கிறது நிலவரம் இந்த ஆட்டத்தில் திறமைக்கு நிச்சயம் மதிப்புண்டு, நல்வாய்ப்புக்கும்(Luck) இடம் உண்டு ஆனால் எல்லா இடத்திலும் இது நடக்காது சிலருக்கு கிடைக்காது சிலருக்குக் கிடைக்கும் இதுதான் இந்த சமத்துவ உலகில் நடப்பது.

அதனால் புதிதாக எதுவும் நான் சொல்வதற்கில்லை. தேர்வில் வெற்றி பெற்றால் வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையா ரொம்ப நல்லது, நாம் யாருக்கும் அடிமை வேலை பார்க்கத் தேவையில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள், உலகம் இன்னும்  பெரியது. தாழ்வு மனப்பான்மையில் உழல வேண்டாம். நமது தோல்விக்கு நாம் மட்டுமே காரணமல்ல. நாம் குற்றவாளியோ மற்றவர்கள் புண்ணியவான்களோ இல்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

தற்கொலையை நோக்கித் தள்ளப்படும் தமிழ்வழி மாணவர்கள் - ஆங்கில வழியில் படிப்பது தவறா ?

சமீபத்தில் நடந்த இரு தற்கொலைகள் நடந்தன. அது வெளிச்சம் பெற்றதற்குக் காரணம் தற்கொலை செய்து கொண்ட இருவரும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள். எவ்வளவு சூடாக வெளிவந்ததோ அதே வேகத்துடன் மறக்கப்பட்டும் விட்டது. 

இவ்விரு தற்கொலைகள் என்னை அதிகமாக பாதிக்கக் காரணம் தமிழ்வழியில் படித்ததால் கல்லூரியில் படிக்க முடியவில்லை என்று தற்கொலை செய்தவர்கள்; இவ்விருவருமே நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்ததினால்தான் மாநிலத்திலேயே முதல் நிலையிலிருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றார்கள். அவர்கள் தற்கொலைக்குக் காரணமாக சொல்லப்படும் காரணங்களில்  அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள், அதனால் ஆங்கிலப்புலமை குறைவு காரணமாக கல்வியை சரியாகக் கற்க முடியாமலும், சக மாணவர்களின் கிண்டலினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதே என்னை மிகவும் பாதித்தது, காரணம் நானும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டு தோற்றிருக்கிறேன். 

மேலும் இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் அவருக்கும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால் ஆங்கிலத்தில் படிக்க சிரமம் என்பதை ஒரு காரணமாக சொன்னார்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.  காதல் தோல்வி, பகடி வதை (Ragging) போன்ற காரணங்களும் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மூவர்

முதலில் வருபவர் இரு வருடங்கள் முன்பு தற்கொலை செய்து கொண்ட ஜோதி.  அவர் எடுத்த மதிப்பெண்கள்

10 (S.S.L.C) - 475/500 

12 (H.S.L.C) - 1115/1200 
ஜோதி
அடுத்ததாக மணிவண்ணன்.  இவர் தனித்துவமான ஒரு மாணவராக இருந்திருக்கிறார். அவரைப்பற்றித் தெரிந்து கொள்ள இதைப் படிக்கவும். 10 வதில் 461 மதிப்பெண்கள். +2 வில் 1159. ஆனால் மூன்று வருடங்களில் பொறியியலில் 26 பாடங்களில் அரியர் வைத்திருந்திருக்கிறார்.  



மூன்றாவது தைரிய லக்ஷ்மி என்ற மாணவி எடுத்த மதிப்பெண்கள் குறித்த செய்திகள் எனக்குத் தெரியவில்லை. அவர் எழுதிய கடிதம்   அவரது பிரச்சனையைச் சொல்கிறது. அவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பவர் என்பதால் எப்படியும் 1100 க்கும் மேல் எடுத்திருப்பார்.

     
       
 இதில் முதல் இருவருமே வழக்கமாக நாம் கேள்விப்படும் சிரமம் நிறைந்த 
பின்புலம், வறுமை எனபனவற்றைத் தாண்டி தமது கல்வியில் சிறந்து 
விளங்கினார்கள். குறிப்பாக மணிவண்ணன். +2 வில் 1167 என்பதெல்லாம் சராசரி மாணவர்களால் முடியவே முடியாது. மனப்பாடம் செய்தாலும் முடியாது.

இவர்கள் மூவரின் தற்கொலைகளுக்கும்
காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனை, பகடி வதை என்று சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்வழியில் படித்ததால்தான் தாழ்வு மனப்பான்மையாலும் கல்வி குறித்த அச்சத்தினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. எனவே அக்காரணத்தை முன்னிலைப்படுத்தி எழுதுகிறேன். கிராமப்புறத்திலிருந்து சென்ற இவர்களுக்கு சென்னை கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கும்.

சரி இப்போது தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் கல்லூரியில் எதிர்கொள்ளும் பிரச்சனை என்று பேசத் தொடங்கினால் வரும் கருத்துக்கள்

1. தாய்மொழியில் படிப்பதுதான் அறிவு வளர வழிவகுக்கும், எல்லாத் துறையிலும் சிறந்து விளங்குகிறவர்கள் அனைவரும் தமது பள்ளிக் கல்வியை தாய்மொழியில் கற்றவ
ர்களே

2. ஆங்கிலம் எனபது அறிவின் அடிப்படையல்ல வெறும் மொழி மட்டுமே

3. துறை சார்ந்த அறிவு இருந்தால் போதும் ஆங்கில அறிவு அவசியமன்று

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல.

5. நான் தமிழ்வழியில்தான் படித்தேன், கல்லூரியில் ஆங்கில வழியில் படித்தவர்களை விட நான்தான் அதிக மதிப்பெண் பெற்றேன்.

இப்படியாக பல கருத்துக்கள் வருகின்றன. அடுத்ததாக ஆங்கில வழி குறித்த விமர்சனமாக வருகின்றன

1. பெற்றோர்களின் ஆங்கில மோகம்

2. ஆங்கிலம் மேன்மைபடுத்தப்பட்டு தமிழைத் தாழ்வு படுத்துகிறது

3. ஆங்கில வழியில் படித்தவர்களை விட தமிழ் வழியில் படித்தவர்கள் தெளிவானவர்கள்

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் தெளிவில்லாதவர்கள், மனப்பாடம் செய்து வாந்தியெடுப்பவர்கள்


5. அவர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியாது

இப்படியாக பலவிதமான கருத்துக்கள். முதலிலிருந்து வருகிறேன். சுருக்கமாக இக்கருத்துக்கள் யாரைச் சார்ந்து இருக்கின்றன என்று பார்த்தால் ஆங்கில வழியில் படித்த சராசரி மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சிறந்து விளங்கும் மாணவர்களையும் ஒப்பிட்டது போல இருக்கிறது. ஆங்கில வழியில் படித்த சிறந்த மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சராசரி மாணவர்களையும் இதே போல் ஒப்பிட்டுப் பார்த்தால் மேலே சொன்ன கருத்துக்கள் அத்தனையும் மாறி விடும்.


 முதல் கருத்து, தாய்மொழியில் படித்து அறிவு பெற்று பின்பு ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே அதிகம் என்பது, இதில் ஒரு வகுப்பில் 40 பேர் இருக்கிறார்கள் எனில், அதில் 5 பேர் மட்டுமே சிறந்த மாணவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கழித்துக் கட்டப்படுகிறாரகள். இதில் தமிழ் வழியாக இருக்கும் பட்சத்தில் அந்த 5 பேரில் ஒருவர் திணறி விடுவார். மேலே தற்கொலை செய்து கொண்டவர்களின் மதிப்பெண்களைப் பாருங்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களே இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, சராசரி மாணவரகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஆனால் சிலர் மிக எளிதாக அதை எதிர்கொண்டு பழகி விடுகிறார்கள் பெரும்பான்மையினரால் அது முடிவதில்லை. யாராவது நான் தமிழ்வழியில் படித்தேன் இப்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நான் நிபுணத்துவம் பெற்று விட்டேன் என்றால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள். எனக்கு வெற்றி பெற்றவர்கள் குறித்துப் பிரச்சனையில்லை. இதைப் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். தோல்வியடைபவர்கள் குறித்தே கவலை. மீதப்பேர்கள் உங்களைப்போல் வெற்றி பெற முடியாததற்கு ஆங்கிலப் போதாமைதான் காரணம். எத்தனை பேர் பொறியியல் படிக்கிறார்கள் வெளிவருகிறவர்கள் முக்கால்வாசிப்பேர் தகுதிக் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் அதற்கு ஒரு காரணம் இந்த எழவெடுத்த ஆங்கிலம்.

ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமே என்பதற்குப் பதில்: அந்த வெறும் மொழி நமக்குத் தெரியவில்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி. ஆனால் நம் கல்விமுறை அதை மொழியாகக் கற்பிப்பதில்லை. அதை ஒரு பாடமாகத்தான் கற்பிக்கிறது. கட்டுரைகள், மனப்பாடக் கவிதைகள் இரண்டையுமே தமிழ் வழி மாணவர்கள் மனப்பாடம் செய்துதான் எழுத வேண்டியுள்ளது. அதனால் மொழியறிவு என்பது தமிழ் வழி மாணவர்க்கு இன்னும் தொலைவிலிருக்கிறது. மேலும் ஒரு மொழியைக் கற்க வேண்டுமெனில் முதலில் அதில் நான் பேசுவதற்கும், கேட்டுப் புரிந்து கொள்வதற்கும் ஏற்கெனவே அதிகம் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நமக்கு அந்த வாய்ப்பில்லை. ஆங்கில வழியில் படிப்பவர்கள் குறைந்த பட்சமாக மொழியுடன் 10 வருடங்களாக அறிமுகமிருப்பதால் கல்லூரிக்குச் செல்லும் போது பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை. ஒரு மொழியைக் கற்க வயது தடையில்லை. ஆனால் எப்போது மொழியைக் கற்பது 17 வயது வரை உயர்நிலைக் கல்வி கற்று பின்பு தொழிற்கல்வி கற்கும்போதா ? சரி மொழியைக் கற்பதா இல்லை பாடத்தைக் கற்பதா ? கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் எழுதிய தடியான நூல்களை நாம் கற்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும் அதை செய்ய அதிகப் படியான ஆங்கிலப் புலமை வேண்டும், இந்த நேரத்தில் உட்கார்ந்து ஆங்கிலத்தை எங்கே கற்பது ?

துறை சார்ந்த அறிவு போதும் ஆங்கில அறிவு அவசியமன்று என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கணிதம், கணிணி அறிவியல்,  தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் போன்ற துறைகள், ஓரளவுக்கு மொழிப்புலமை அவசியப்படாதவை. மேலும் துறைசார்ந்த அறிவுடன் ஆங்கிலப்புலமையும் சேர்ந்து  இருப்பவர்தான் துறை சார்ந்த அறிவுமட்டும் கொண்டவரை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மருத்துவம், அறிவியல் துறைகள் இதில் சேராது. இதில் படிப்பவர்கள் நிச்சயம் திணறுவார்கள்.

பெற்றோர்களின் ஆங்கில மோகம் என்பது மிகப்பெரும் பொய். இதை எல்லோரும் அடிக்கடி சொல்கிறார்கள். இது அறியாமையா இல்லை அயோக்கியத்தனமா ? "என்னை ஏன் ஆங்கில வழியில் சேர்க்கவில்லை? " என்று நான் இன்னும்கூட அப்பாவிடமும் உறவினரிடமும் கேட்பதுண்டு. நான் கல்லூரியில் சேர்ந்தபின்பு பட்ட அவதியினால், நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் சொல்வது இதையே "தயவு செஞ்சு குழந்தையை தமிழ் வழியில் சேர்த்து விடாதீர்கள்". 


பெற்றோர்கள் என்பவர்கள் யார் ? கல்வி கிடைக்கப்பெறாதவர்கள். தம் குழந்தைகளாவது நன்றாக வரட்டும் என்றுதானே ஆங்கில வழியில் சேர்க்க அலைகிறார்கள். தனியார் பள்ளிகளில் தரம் அதிகம் என்று நம்புவது பிழைதானென்றாலும் அதற்கு அவர்கள் மட்டுமே காரணமா ? கல்வி அளிப்பதிலிருந்து அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டது, தனியார் பள்ளிகள் ஊர்தோறும் கட்டப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் இலட்சணம் அனைவருக்குக்குமே தெரியும். அரசுப் பள்ளி ஆசிரியர்களே கூட அங்கு தமது பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புவதில்லை. பெற்றோர் தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் சேர்ப்பது ஆங்கில மோகத்தினாலல்ல, அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையினால்தான் இதை என்னவோ வரதட்சிணை கேட்கும் பெற்றோரின் பேராசை, குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கும் மாயையைப் போல் சித்தரிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இன்னொன்று தமிழ்ச் சூழலில் தமிழ் குறித்த எதுவுமே உணர்ச்சிகரமாக மாறிவிடுகிறது. தமிழ் வழிக்கல்வி குறித்த விவாதமும்தான். தமிழில் பேசுவது இழிவு ஆங்கிலம் பேசுவது உயர்வு என்பது மாயை என்ற கருத்தை பாமரர்களிலிருந்து மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயர்தான் வைப்பேன் என்று அடம் பிடித்த கமல் வரை எல்லோரும் கூறுகிறார்கள். வெத்து பந்தாவுக்கு சிலர் பேசிக் கொள்வதை வேண்டுமானால் இதற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வேலைவாய்ப்பு முகாம், நேர்காணல் என்று எங்கு போனாலும் ஆங்கிலமே அடிப்படை, ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கௌரவக் குறைச்சல். பெருமை என்பதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் ஆங்கிலப் புலமை அடிப்படைத் தகுதிகளில் ஒன்று என்று விளங்கும். தமிழில் பேசவேண்டும் என்பது மற்ற துறைகளில் இருக்கும் தமிழின் அளவுதான் சமூகத்திலும் எதிரொளிக்கும். இதை ஊடகம் கலைத்துறை, கல்வித்துறை என அனைத்திலும் தமிழ் மகுடம் சூடும்போது நிகழும் அதை விட்டு தனிப்பட்ட நபரின் தவறாகப் பார்ப்பது எவ்வகையிலும் உதவாது. மாறாக எதிரிவிளைவையே ஏற்படுத்தும். தமிழில் பேசு என்று கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத இளைஞனிடம் சொல்வதற்கு  என்ன நேர்மை இருக்கிறது. இதை அவர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தைக் கேளுங்கள் தமிழ் வழியில் பயின்றதற்காக வருந்துகிறீர்களா இல்லை பெருமப் படுகிறீர்களா என்று. முதலில் நம் தமிழகம் ஒன்றும் ஜப்பானோ, ஃப்ரான்சோ, ஜெர்மனியோ அல்ல. குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசால் வழங்கப்பட்ட உரிமைகளைக் கூட இங்கு சாதிக்க வில்லை என்பது கசப்பான உண்மை. அங்கு மருத்துவமே தமிழில் கற்பிக்கப்படுகிறது என்றும் கேள்விப்பட்டேன். இங்கு பொறியியல் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்கிலத்தில் கற்பவர்களுடன் ஒப்பிடும்போது அதன் தரம் குறித்து எனக்கு மனநிறைவில்லை. நேர்காணல் என்று வரும்போது முதல் சுற்றிலேயே தமிழ் வழி மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள். தற்பொது தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு படித்து முடித்துவிட்டு வந்து வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. 

சற்றே சிந்தித்தால் விளங்கும், நீல நிற பாவாடை தாவணிகளும், காக்கிக் கால் சட்டையும், வெள்ளைச் சட்டையும் கொண்ட அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், நகர்ப்புறங்களில் கழுத்துபட்டை இறுக்க வாகனங்களில் செல்லும் வெள்ளைத் தோல் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஆங்கிலக் கல்வியும் சம அறிவைக் கொண்டதென்றா கருத முடியும் ? இதில் ஆங்கில வழியிலேயே
ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்சி என பல வகைகள் இருக்கின்றன. சமச்சீர் கல்வியும் மிகவும் எளிமையாக உள்ளதாகவே புலம்புகிறார்கள்.

தமிழகம் இந்தியாவின் அடிமை. இந்தியா அமெரிக்காவிற்கு அடிமை. இங்கு ஆங்கிலம்தான் சோறு போடும். தமிழ் வழியில் கற்று விட்டு கல்லூரியில் சென்று அவர்கள் படும் சிரமங்கள் எத்தனை என்று அவர்களுக்குத்
தான் தெரியும். நேர்காணலில் பட்ட அவமானங்கள் அவர்களுக்கு தமிழ் மீதான வெறுப்பைத்தான்  வரவழைத்திருக்கும். தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை, ஆங்கில எழுத்துக்கள் தார்பூசி அழிப்பது என்பதெல்லாம் எள்ளி நகையாடப் பட வேண்டியவை. தமிழை வளர்க்கும் ஆக்கப்பூர்வமான வழிகள் ஆயிரம் இருக்கின்றன. குறைந்த பட்சம் கல்வித் துறையில் தமிழ் மொழியைப் படித்தவர்க்காவது வேலை வாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பணிகள், கல்லூரிகளில் தமிழில் இல்லை பின்பு பள்ளியில் மட்டுமே தமிழில் கல்வியை வைப்பது யாருக்காக. தமிழ் வழியில் படிப்பவர்க்கு ஆங்கிலம் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் கல்லூரியில் அல்ல, மூன்றாம் வகுப்பிலிருந்தே. இதெல்லாம் நடக்கவா போகிறது. அதற்கு முதலில் கல்வி முழுமையுமே அரசாங்கத்தின் பொறுப்பில் வர வேண்டும். தரமான சமமான இலவசக் கல்வி அனைவருக்கும் கற்பிக்கப் பட வேண்டுமென்பதே என நிலைப்பாடு. என்னுடைய வலைப்பூவின் பெயரும், புனைப்பெயருமே என்னுடைய தமிழ் ஆர்வக்கோளாறுக்குச் சான்று பகரும்மென்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய சொந்த அனுபவத்தில் எனக்கு ஆங்கிலப் போதாமைதான் எதிரி, எனக்கு  விருப்பமான துறையில், வெற்றி பெற முடியாமல் கல்வியைக் கூட முறையாகக் கற்க விடாமல் செய்தது.  எனவே என் குழந்தையை தமிழ் வழியில் கல்வி கற்க வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. தமிழ் பெயர் வைப்பது தமிழைக் கற்பிப்பது, தமிழுணர்வு ஊட்டுவது என்பதெல்லாம் இதில் சேராது. இது சரிதானென்று எல்லோர்க்கும் என்னால் பரிந்துரைக்கவும் முடியவில்லை. யாராவது தமிழ் வழியில் சேர்க்க விரும்பினால் வாழ்த்துக்கள் !! அக்குழந்தை தமிழ் வழியில் கற்று நிபுணத்துவம் பெற்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலையில் இடம் பெற்றுப் படிக்க முடியாமல் தற்கொலைகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கல்வி இருக்கின்றதென்றால் இன்னும் பல ஆயிரக் கணக்கான பள்ளி கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைத்துப் பார்த்தால் புரியும் இது எவ்வளவு பெரிய பிரச்சனை என்று. தற்கொலை செய்தவர்கள் கோழைகளல்ல பலிகள். நான் தமிழ் வழிக்கல்விக்கு ஆதரவளிக்க மாட்டேன்
Download As PDF
Bookmark and Share

Post Comment

தேர்வில் காப்பியடித்தலும் சுயவிமர்சனமும்

திருவண்ணாமலையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு பிட் வழங்கிக் கொண்டிருந்த போது பிடித்து விட்டார்கள். பள்ளியிலுள்ள நகலெடுக்கும் இயந்திரத்திலேயே தயாரிக்கப்பட்ட துண்டுக் காகிதங்களுடன். இதென்ன பெரிய செய்தியா ?. நிறைய இடங்களில் நடப்பதுதானென்றாலும் கேள்விப்படுபவர்களுக்கு புதிதெனில் அதிர்ச்சியும் உண்டாகும். இதைக் கேட்டு ஆத்திரப்படக்கூடும். அந்த ஆசிரியர்களைத் திட்டக் கூடும். எப்பாடு பட்டாவது அனைத்து மாணவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்யாவிட்டால் பள்ளி நிர்வாகம் அவர்களை ஒரு வழியாக்கி விடும். 100% தேர்ச்சி அடையும் பள்ளி என விளம்பரம் செய்து நன்கொடை வாங்க முடியாது. வாங்கும் சில ஆயிரம் சம்பளத்துக்கு வருடம் முழுவதும் கத்தினாலும் மண்டையில் ஏறாத மரமண்டைகளை என்ன செய்வதாம் ? வருடம் முழுவதும் திட்டினாலும் தேர்வு நேரத்தில்தான் இது போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெய்வமாகத் தெரிவார்கள். அவர்கள் தன்மானத்தை விட்டு பிட்டுக் கொண்டு வந்து தராவிட்டால் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர் முக்காட்டைப் போட்டிருப்போம். 

அந்த எழவை மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதால் என்ன அறிவு வரப்போகிறது ? என்ன படித்தாலும் கல்லூரியில் படிக்கப் போவதற்கும் அல்லது வேலை கிடைத்துப் போனாலும் அல்லது எதிர்கால வாழ்க்கையிலும் அது என்ன வகையில் பயன்படப் போகிறது அந்த ஏட்டு படிப்பு ? என்ன படித்தாலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். இல்லையென்றால் சேவைத்துறை அதற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு மட்டும் தேவை. பிறகு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்கள் ? தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை வேறு செய்கிறார்கள். பிட்டடித்து சிக்கினாலும் தற்கொலை முயற்சி. தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, புறக்கணிப்பு என எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுத்தால்தான் கல்வி, மனப்பாடம் செய்து எழுதினால் மதிப்பெண், etc கிடைக்கும் உலகில் பிட்டடித்து தேறிட எண்ணுவது இயல்புதான்.

நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் சுமாராகப் படிப்பேன். தேர்வு எழுதும் போது வருகின்ற கண்காணிப்பாளர் கொஞ்சம் பெரிய மனதுக்காரராக இருந்தால் எழுதி முடித்த தாளை தேர்வு அறையிலேயே பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது வழக்கம். ஒரு அறையில் ஒருவர் இருவர் நன்றாகப் படிப்பவராக இருந்தால் போதும். ஒரு மதிப்பெண் வினாக்கள் எப்படியாவது ஏறக்குறைய அனைத்து விடைகளும் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு பரிமாறப்படும். முடிந்தால் எல்லாருக்கும் விடைத்தாளை அனுப்பி அனைவரும் எழுதியவுடன் திரும்ப கைக்கு வந்து விடும். 10 ஆம் வகுப்பில் அறிவியல்தான் மிகவும் சிரமாமானது 12 வருடங்களுக்கும் முன்பாக. கேள்வித்தாளை வாங்கியவுடன் எல்லோருக்கும் கிழிந்து விட்டது. மிகவும் கடினமாக இருந்தது. (நான் வழக்கமாக 80 மதிப்பெண் வாங்கியது கூட இல்லை. ஆனால் 90 க்கும் மேலாக பொதுத்தேர்வில் எடுக்க வேண்டுமென சூளுரை எடுத்திருந்தேன் அது முடியாது எனத் தெரிந்தும்) எனக்கு ஒரு 60 வரை மட்டுமே வரும் என்று புரிந்தது. மற்றவர்க்கோ 30 கூட வராது. பிற்பாடு துண்டுக்காகிதங்களில் விடையை எழுதி அனுப்பி வைத்து ஆசிரியர்கள் மற்ற தேர்வில்லாத மாணவர்கள் உதவினார்கள். எனது தாளை வாங்கியெழுதிய நண்பன் மிகவும் சென்டிமென்டாக எனது புகைப்படத்தை வாங்கியும் வைத்துக் கொண்டான். 10 ஆவது படிக்கும் போது 10 வகுப்பு பொதுத்தேர்வுதான் உலகமகா சிரமம் என்று நினைப்பது இயல்புதானே. (இப்போது ஒரு பதிவு எழுதி பின்னூட்டம் வாங்குவது சிரமம்) எனக்கோ சிரிப்பாக இருந்தது.

அடுத்து பிட்டை தேர்வறைக்கு எடுத்துச் செல்லும் நுட்பம்தான். உள்ளாடை, உள் பாக்கெட் எனப் பலவகையில் எடுத்துச் செல்வோம். சிலர் பேண்ட்டில் காலின் உள்புறமாக தொடைப்பகுதியில் தையல் இருக்குமல்லவா அங்கே ஒரு 7 செமீ அளவு கிழித்து விட்டு உள்ளாக ஒரு பாக்கெட்டைத் தைத்து அதில் அள்ளிக் கொண்டு போனார்கள். சிலர் தேர்வு அறைக்குள்ளேயே முதல் நாளிலேயே சென்று தமது இருக்கையின் கீழாக் கத்தையாக செல்லே டேப்பைக் கொண்டு ஒட்டினார்கள். எனக்கு பிட்டடுக்கும் அளவு துணிச்சல் கிடையாது. சிறு குற்ற உணர்வும் உண்டு. கண்காணிப்பாளர் கண்டிப்பாக இல்லாத பட்சத்தில் ஒரு சில முறை செய்தேன். மற்ற எல்லாப் பாடங்களிலும் ஏறக்குறைய 70 % வரை மதிப்பெண்கள் பெற முடிந்த என்னால் கணிதத்தில் தேறுவதே மிகவும் சிரமம். நல்ல வேளையாக என்னுடைய நண்பி நான் எட்டிப் பார்த்து எழுதும் தொலைவில் இருந்தாள். அவள் புண்ணியத்தில்தான் நான் பிழைத்தேன். இல்லையென்றால் கூவியிருக்கும். அந்தக் கணிதத்திற்குத்தான் நான் (இன்னொரு நண்பனும்) பிட் கொண்டு சென்றது நல்ல வேளையாக அந்தக் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். அதற்கு முன்பு ஒரு முறை பிட் எடுத்துச் சென்று தேர்வு அறைக்கு நுழையும் முன்பாகவே வெளியே வீசி விட்டேன். வீரம்தான் !!

இன்னுமிரண்டு நண்பர்கள் வேறொரு தேர்வு அறையில் நடந்த நிகழ்வு இது. தமது விடைத்தாளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் எழுதிய விடையை மற்றவன் பார்த்து எழுதிக் கொள்வது. ஒருவர் முதலில் 2 மதிப்பெண் வினாக்களும், மற்றவர் 1 மதிப்பெண் அல்லது 5 மதிப்பெண் வினாக்களையும் எழுதுவது (சரியான விடைகள்தான் துண்டுக் காகிதங்களைப் பார்த்துத்தான், ஒரு அறையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்த்து எழுத அனுமதிப்பார்கள் கண்காணிப்பாளர்கள் அதற்கு மேல அவர்களுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்) பின்பு அவருக்கே தெரியாமல் நாங்களாக நுட்பமாக எழுதிக் கொள்ள வேண்டும்). இப்படியாக இருக்கும்போது விடைத்தாளை மாற்றிக் கொண்டவர்கள் இரண்டு பேர். இதில் விடைத்தாளைக் கொடுத்தவனும் மறந்து விட்டான், வாங்கியவனும் மறந்து விட்டான். பறக்கும் படை வந்தால் எப்போதும் ஏதாவது ஒரு அறையில் இருக்கும் ஒரு சிலரின் விடைத்தாளை வாங்கி ஆய்வு செய்வார்கள், ஏதேனும் மாற்றிக் கொண்டிருக்கிறார்களா அல்லது துண்டுக் காகிதமேனும் வைத்திருக்கிறார்களா என்று. அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தும் விட்டார்கள். பின்பு அறிவுரை சொல்லி விட்டுப்போனார்கள். இது போன்ற ஈரமான மனிதர்கள் இருப்பதால்தான் எத்தனையோ  மாணவர்கள் (மக்குகள்) 10 வதாவது தேற முடிந்தது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று என்கவுன்டர் ஆதரவாளர்கள் போல் யாராவது வாதாட முற்பட்டால் என்னிடம் அதற்கு விடையில்லை. காசு கொடுத்தால் கல்வி, 8 வகையான பள்ளிக்கல்விகள், ஆங்கில, தமிழ்வழி, மனப்பாடக் கல்வி, தேவையற்ற பாடச்சுமை, மன அழுத்தம், சமூக அங்கீகாரம், வேலையின்மை என கல்வித்துறையில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன. அதை விட்டு விட்டு இதை ஒரு பெரிய பிரச்சனையாக்குவது பார்வைக் குறைபாடு மட்டுமே.

இறுதியாக சுயவிமர்சனம். அந்தத் தேர்வுகளின் போதுதான் வேண்டா வெறுப்பாக சாமி கும்பிட்டேன். நீ இருந்தா என்னைக் காப்பாத்து புள்ளையாரப்பா என்று. கேள்வித்தாள் எளிமையாக வரவேண்டுமென வேண்டுதலில்லை. மாறாக தேர்வறைக்கு வரும் கண்காணிப்பாளர் கண்டிப்பானவராக இருக்கக் கூடாதென்றுதான் கடவுளை வேண்டினோம். இப்படியெல்லாம் காப்பியடித்து  வந்த நான் கல்லூரியில் நன்கு அனுபவித்தேன். இரு பட்டங்களை வாங்கும் முன்பு ஒரு வருடம் வீணாக்கி மொத்தம் 11  அரியர்கள். வேலை கிடைக்காமல் தெருத்தெருவாக அலைந்தும் பெரிதாக ஒன்றும் நடக்க வில்லை. 

இது நியூட்டனின் மூன்றாம் விதியாக இருக்கலாம். என்னுடைய புகைப்படத்தை நன்றியுணர்வுடன் வாங்கிக்கொண்ட என்னுடைய நண்பன் 12 வதுடன் படிப்பை நிறுத்திக் கொண்டான். இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுக் கவுன்சிலர் ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.  நான் வாங்கும் சம்பளத்தைக் கேட்டு அவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறான்.
Download As PDF
Bookmark and Share

Post Comment