கற்பழிப்பு என்ற சொல்லின் பொருள்தான் என்ன ?

தற்போது  டெல்லி நிகழ்வு பரபரப்பான பேசப்படு பொருளாகியிருப்பதால் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வரை எல்லா இடத்திலும் கற்பழிப்பு என்ற சொல்லைக் காணவும் கேட்கவும் வேண்டியிருக்கிறது. எல்லோரும் சொல்லி  வைத்த மாதிரி கற்பழிப்பு கற்பழிப்பு என்று எழுதித் தள்ளுகிறார்கள். அதன் பொருள்தான் என்ன ? ஒரு சொல்லின் பொருள் தவறு என்று தெரிந்த பின்னும் இன்னும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன ? அறியாமையா இல்லை அலட்சியமா ?

ஒரு சொல்லில் மூலம் வரலாற்றையெ மாற்றிச் சொல்லி விட முடியும். பல உதாரணங்கள் இதற்குக் குறிப்பிடலாம்.

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு - ஆரியரும் படையெடுத்துத்தானே வந்தார்கள் ?

கொலம்பஸ் அமெரிக்காவைக் "கண்டுபிடித்தார்" - அது அங்கேதானே இருந்தது பிறகென்ன கண்டு பிடிப்பது. இந்த கவர்ச்சியான செய்தியில் கொலம்பஸ் என்ற கொலைகாரன் வரலாறு வரை பல செய்திகள் மறைக்கப்படுகின்றன.

அன்னை இந்திரா காந்தி - இவரது உண்மையான பெயர் இந்திரா கான் என்று இருந்திருக்க வேண்டும். இவர் மணந்தது ஒரு பார்சி முஸ்லிமை. இவரது கான் என்ற (முஸ்லிம்) குடும்பப் பெயர் இந்தியாவை ஆள்கின்ற குடும்பத்திற்கு வரக்கூடாது என்பதற்காக காந்தி தனது பெயரை விட்டுக்கொடுத்தார்.

அடுத்து அண்ணல் காந்தியடிகள் மஹாத்மா காந்தியடிகள் என்று பல இடங்களில் பெயர் சொல்லி புகழ்கிறார்கள். காந்தியை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர், ஜாதியை ஒழிக்கப் பாடுபட்டவர் என்றும் பல பிரச்சனைகளுக்கு சர்வரோக நிவாரணியாக எடுத்துக் காட்டுகிறார்கள். மராட்டியத்தைச் சேர்ந்த ஜாதி எதிர்ப்பாளர் ஜோதிராவ் பூலே என்பவரைத்தான் முதன் முதலில் மகாத்மா என்று அழைத்தனர். அதே போல் அம்பேத்கர் அண்ணல் என்று அழைக்கிறோம். இவர்களது பட்டப்பெயரை காந்திக்குத் தாரை வார்த்து விட்டதால் மேற்கண்டவர் யாரேன்றே எவருக்கும் தெரியாது. அதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளுக்குப் போராடிய பல போராளிகளை இருட்டடிப்பு செய்கின்றனர்.

ஜப்பானில் அணு குண்டு வீசியதை மறக்கடிக்க கொண்டாடப்படும் உலக நட்பு நாள்.

இப்படிப் பலவாறு சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது கற்பழிப்புக்கு வருவோம்.

                                                         

இதைத் தெரிந்துதான் பயன்படுத்துகிறீர்களா இல்லை அறியாமலா ? நான் சொல்வது பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, வன்கலவி, வல்லாங்கு என்று பல சொற்கள் இருக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து கற்பழிப்பு என்றே எல்லாரும் சொல்கின்றனர்.

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று எழுதுவது தேவையில்லாததும், தவறானதும் ஆகும். ஆனால் ஆர்வத்தினால் அப்படி எழுதுகின்றனர். இதை மட்டும் ஏன் இப்படி ? இன்னொன்று பெண்களை ஃபிகர் என்றுதான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் போய் கற்பழிப்பு என்று சொல்ல வேண்டாமே என்று சொல்ல சலிப்பாக இருக்கிறது.

இந்த கற்பு என்பதே பெண்களை அடக்கி வைத்து ஆண்கள் ஊர்மேய்வதற்கு உருவான ஒரு கருத்து. இதை இன்னும் பயன்படுத்துவதன் உள்நோக்கம் என்ன ? ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் போது அவளை ஒரு விபத்தைச் சந்தித்தவளாகவே நடத்த வேண்டும் அல்லாது களங்கப்பட்டவள் என்ற குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடாது. ஒரு வெறிநாய் கடித்து விட்டால் ஏற்படும் பரிதாப உணர்ச்சி மட்டுமே ஏற்பட வேண்டும். அய்யய்யோ வாழ்க்கையே போச்சே என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.

முதலில் கற்பு என்றால் என்ன ? அதை எப்படி அழிக்க முடியும். கன்னித்தன்மை பறிபோனதைச் சொல்கிறார்களா ? கன்னித்தன்மை போனால் அது எப்படி கற்பழிப்பாகக் கருத முடியும். சரி பருவமடையாத குழந்தைகள் கூட வன்முறைக்கு ஆளாகிறார்கள் அதை எப்படி கற்பழிப்பு என்று சொல்கிறார்கள். கற்பு என்பது மனம் தொடர்பானது என்று கதை சொல்வார்கள். குழந்தைகளுக்கு பாலியல் குறித்தும் அதன் ஒழுக்கும் நேர்மை கலாச்சாரம், கற்பு இதெல்லாம் என்னவென்றே தெரியாது. பிறகெப்பப்படி பாலியல் வன்முறையின் போது அவர்களின் கற்பு அழியும்.

கற்பு, ஒழுக்கம், நடத்தை, கள்ளக்காதல் எனப் பல சொற்களும் பெண்களைக் குறிவைத்தே எழுதப்படுகின்றன. இந்த டெல்லி நிகழ்வு பெரிய பரபரப்பானதால், பலரும் உச் கொட்டினார்கள். இதில் நாளும் பார்வைகளாலும், பேச்சுக்களாலும் பெண்களை வன்முறை செய்து வரும் பலரும் இதைப் பற்றி பேசினார்கள் கோபப்பட்டார்கள்.

என்னுடைய நட்பு வட்டாரத்தில் ஒரு உள்ளம் இனிமே அந்தப் பொண்ணு வாழ்றதே வேஸ்ட்(மானம் போயிடுச்சாம் எல்லாருக்கும் தெரிஞ்சிரிச்சாம்) என்று திருவாய் மலர்ந்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பாதிப்பேராவது இப்படித்தான் நினைத்திருப்பார்கள். இப்படிச் சொல்ல வைப்பது என்ன வகையான மனப்பான்மை. கற்பழிப்பு என்ற கருத்துப் பொதிந்த சொல்லை பயன்படுத்துவதும் ஒரு காரணமில்லையா ?

ஆணுக்கும் கற்பு உண்டு என்று காளை மாட்டில் பால் கறக்கச் சொல்கிறார்கள். குப்புசாமி கற்பழிக்கப்பட்டார் என்று செய்தியைத் தலைப்பாகப் போட்டால் எல்லாரும் சிரிப்பானுகளா இல்லையா ? பிறகெதற்கு இந்த நோக்காடு ?

மாற்றுத்திறனாளர்களை ஊனமுற்றவர் என்றும், திருநங்கைகளை அலி என்றும் எழுதுங்களேன் பார்ப்போம், அதை மட்டும் பக்குவமாக மாற்றிக் கொண்டு எழுதும்போது இதை எழுதுவதற்கு மட்டும் ஏன் வலிக்கிறது.

ஏதோ ஒரு இடத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் பட்டியல் பார்த்தென் அதில் பெண்களுக்கான பெயர்களில் கற்பு என்று இருந்தது.

கற்பழிப்பு என்று எழுதுவதை நிறுத்துவது அவ்வளவு கடினமா என்ன ? நிறுத்துங்களேன். எத்தனை முறைதான் மெனக்கெட்டுச் சொல்வது.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஆகையினால் பெண்ணுடலை சிதைக்கிறோம்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ இரவில் சுற்றுவது எனக்கு உறுத்துகிறது
நீ உடலைக் காட்டுவது எனக்கு விறைக்கிறது

உன்னை இடிப்பதென்னுரிமை
இரவு விடுதிக்குச் செல்வது உனதுரிமை என்றால்
உன்னை உரசுவது எனதுரிமை
ஊர்சுற்றுவது உனதுரிமை என்றால்


உன்னை வன்புணர்ந்தது என் குற்றமல்ல
நீ எதிர்த்துப் பேசியதால் எனக்குக் கோபம் வந்தது
உன்மேல் அமிலம் ஊற்றியது என் குற்றமல்ல
நீ காதலை மறுத்ததால் எனக்கு எனக்கு வெறி வந்தது
மகளாய் இருந்தாலும் உன்னை வெட்டுவது என் குற்றமல்ல
நீ மாற்றானை காதலித்ததால் என் மானம் போனது

நீ ஏமாந்ததற்கு நான் பொறுப்பல்ல
இசைந்ததால் உன்னை மென்புணர்ந்தேன்
மறுத்தால் வன்புணர்வேன்

என் கண்கள் உன்னை மேய்வதற்கு நான் காரணமல்ல
நீ தெருவில் நடப்பதே காரணம்
நீ வயதுக்கு வராத சிறுமியாய் இருப்பது என் குற்றமல்ல
மதுவில் மயங்கியிருந்த என்னிடம் சிக்கியதே உன் குற்றம்

நாங்கள் இச்சை தீர்க்க உங்களைப் புணரவும்
மானம் காக்க உங்களைக் கொல்லவும்
வரம் பெற்றவர்கள்

எங்கள் கொண்டாட்டத்தை காஸநோவா 
என்று சிறுமைப்படுத்திக் கொண்டோம்
உங்கள் திண்டாட்டத்தையோ தேவடியா
என்று பெருமைப்படுத்தினோம்

நீங்கள் பாதுகாப்பாய் இருக்க கற்பை உங்களுக்காக
விட்டுக் கொடுத்திருக்கிறோம் நாங்கள்
கால்களுக்கிடையில் வைத்து காத்துக் கொள்ளுங்கள்
என்றாவதொருநாள் என்னினத்தைச் சார்ந்த ஒருவன்
உங்கள் உயிரை எடுத்தாவது அதை அழிக்கும் வரையில்

யான் கற்றதன் சாரம் இதுவே
எங்களால் மாற்றவியலாததாகும்
ஆம் இயற்கையாக
நீங்கள் பெண்கள் நாங்கள் ஆண்கள் 

ஆகையினால் வன்கலவி செய்கிறோம்
எம்மைப் பிறப்பித்த உம் உறுப்பை சிதைப்பதில்
உம்மீதான எம் உரிமையை
நாங்கள் உயிர்ப்பிக்கிறோம்


Download As PDF
Bookmark and Share

Post Comment

கருத்து சுதந்திரமும் கார்த்தி சிதம்பரமும்


கொள்கைக்கும் செயலுக்கும்தான் எத்தனை தொலைவு. ரவி ஸ்ரீனிவாசன் என்ற் ட்விட்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் செய்த குற்றம் ஒரு செய்தியை பகிர்ந்தது மட்டுமே. இது என்ன சைனாவா இல்லை இந்தியாவா என்ற ஐயமே வந்து விட்டது. இந்த செய்திக்குத்தான் வலைப்பூவினரும், கீச்சருமாகிய நாம் பதறியிருக்க வேண்டும். அவர் வெறும் 16 பேரை மட்டுமே பின்தொடர்பாளர்களாக வைத்திருந்தாராம். இப்போது 2000 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.  

ரவி ஸ்ரீனிவாசன்

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் - என்ற வால்டேரின் மேற்கோளை முகப்பில் வைத்து

சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை - என்ற கடமையை அனைவருக்கும் வலியுறுத்தி

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன. என்ற சட்டத்தினை எடுத்துக் காட்டி ஆரம்பிக்கப்பட்ட கருத்து.காம் என்ற இணையதளத்தில் உள்ள வாசகங்கள்.

இந்த இணையதளத்தை கி.பி 2005 ஆம் ஆண்டில் இறுதியில் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் இணைந்து உருவாக்கினர். எதற்காக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு அஞ்சும் சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் போக்க ஒரு அமைப்பு தேவை. அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் வெளியிடும் வகையில் ஒரு அமைப்பைத் தொடங்கினால் என்ன என்று இருவரும் சேர்ந்துபேசியதன் விளைவாக உருவானதே, கருத்து என்ற புதிய அமைப்பு.

அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. 2005 இல் நடிகை குஷ்பு திருமணத்திற்கு முன்னர் உடலுறவு தவறில்லை எனவும், ஆண்கள் மனைவியாக வரும் பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கிற பாணியில் ஒரு கருத்து வெளியிட்டார். இது இந்தியாடுடே வார இதழுக்காக எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்திற்காக எடுக்கப்பட்டது. இது போன்ற புள்ளி விபரங்கள் இந்தியாடுடே வார இதழில் அடிக்கடி, மேல்தட்டு மக்களின் பாலியல் நுகர்வுப் பண்பாட்டை ஆதரித்து ஊக்குவிக்க எழுதப்படுபவை.

குஷ்பு வெளியிட்ட இந்தக் கருத்தை, தினமலரின் தரத்தை விஞ்சும், செய்திகளை 150% சரியாகவும் நேர்மையாகவும் வெளியிடும் நாளிதழான சன் குழுமத்தின் தினகரன் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கற்பில்லையா என்று குஷ்பு சொன்னதால் பரபரப்பு என்று நீட்டி முழக்கி விட்டது. ராமதாஸும் தொல்.திருமாவளவனும் அப்போதுதான் முதல் முதலாக கூட்டணி சேர்ந்திருந்தனர். அப்போது ரஜினி திரைப்படங்களில் சிகரெட் குடிப்பது, திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது(மும்பை எக்ஸ்பிரஸ்) என திரையுலகை எதிர்க்கும் விளம்பரப் போராட்டங்களை நடத்தி வந்தனர். காற்று வாங்கிக் கொண்டிருந்த அவர்களின் அரசியல் களத்திற்கு குஷ்புவின் இக்கருத்து வராது வந்த மாமணியாய் வந்து விழ குஷ்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தமிழ் அரசியல், தமிழ்ப்பெண்களின் கற்பு என்ற உணர்ச்சிகர நிலையில் நடத்தினர். குஷ்புவுக்கு வந்த எதிர்ப்பைப் பார்த்து நடிகை சுஹாசின் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று வாய் விட்டு விட்டார். இதன் பின்பு குஷ்புக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட சுஹாசினிக்கு எதிராக அதிகமான போராட்டங்கள் செருப்பு, துடைப்பக்கட்டை, கழுதை ஊர்வலங்கள் நடந்தன. விலங்கு நல வாரியங்கள் அதைக் கண்டித்தனர். குஷ்புவின் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. பின்பு அதே குஷ்பு, ராமதாஸும் திருமாவளவனும் கூட்டணி வைத்திருந்த திமுகவில் சேர்ந்தது முத்தாய்ப்பான நிகழ்வு.

இந்த நிலையில்தான் கருத்து சுதந்திரம் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதன் பின்புதான் கனிமொழியும் கார்த்தியும் இணைந்து கருத்து என்ற அமைப்பைத் தொடங்கினர்.

இதைத் தொடங்கியவ நடுவண் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பற்றி ஒரு மிகச் சாதாரணமான கருத்து ஒன்றைப் பகிர்ந்த குற்றத்திற்காக ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் அன்னா ஹஸாரே இயக்க ஆதரவாளர் போல் தெரிகிறது. அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து பெரிய அளவில் எனக்கு நம்பிக்கை இல்லையெனிலும் இக்கைது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கூடவே கருத்துரிமைக்கும்.

அதிகாலையில் 5: 30 மணியளவில் வீடு வரை சென்று ஸ்ரீனிவாசனைக் கைது செய்ய வேண்டிய அளவுக்கு அவர் என்ன ட்விட்டரில் சொல்லி விட்டார் என்றால் இதுதான்.

"got reports that karthick chidambaram has amassed more wealth than vadra"

கார்த்தி அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியதும் கைது செய்திருக்கிறது.

சொல்லுக்கும் செயலுக்கும் எத்தனை தூரம் ? அலட்சியத்தால் சாவு நிகழ்ந்தால் இருவருட தண்டனை அதே நேரம் ட்விட்டர், மின்னஞ்சல் ஆகியவற்றுக்கு 3 வருட தண்டனை ? இந்தச் சட்டம் யாருக்காக வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறதா ? (நன்றி: தி ஹிந்து செய்திகள்)

இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*
இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*
முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 

இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

 

Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்மயி - ராஜன் வழக்கு ஆதரவு எதிர்ப்பு மற்றும் சில குழப்பங்கள்


சென்ற பதிவின் நீட்சியாகவே இதை எழுதுகிறேன். முந்தைய நிலையில் எந்த மாற்றமுமில்லை. ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் எந்த நிபந்தனையும், ஐயமுமில்லை. இன்னும் வினவு கட்டுரை ஏன் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை. ராஜன் அதிகப்படியான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நிரூபிக்கப் படாத குற்றத்திற்காக. அதனால் அவர் விடுதலையாக வேண்டுமென்பது குறித்து எந்தத் தயக்கமுமில்லாமல் நாம் கோர முடியும். குழலி, விமாலாதித்த மாமல்லன், சவுக்கு ஆகியோரின் கட்டுரைகள் நேர்மையாகத் தெரிகிறது நான் படித்தவைகளில். 


இதில் பல தவறான கருத்துக்கள், தகவல்கள் இடம்பெறவும் வாய்ப்புண்டு, அதற்கு என் அறியாமைதான் காரணம் விருப்பு வெறுப்பு எதுவுமிருக்காது. 


மற்றபடி ஃபேஸ்புக் விவாதத்தில் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோர் சின்மயிக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதிலிருந்து இது இன்னும் வேறு வழியில் போய் அவர்கள் அணி எதிரணியும் கருத்து மோதலில் இறங்கியுள்ளன. லீனா மணிமேகலை-ஷோபா சக்தி கூட்டணி அவர்கள் எதிர்ப்பவர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்து என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. ஜெயமோகன் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. அவர் இந்துத்துவாவை தத்துவ ஞானம் என்று எழுதுகிறார். அதற்கு பதிவர்கள் சிலர் கடுமையான எதிர் வினையை வைப்பார்கள் என்பது மட்டுமே எனது புரிதல். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். நியாயமாக எழுதிய சில கருத்துக்களோடும் தொடர்பில்லாமல் 15 இலட்ச ரூபாய் கைதானவர்களைக் காக்க வசூலித்திருக்கிறார் என்று அவதூறு செய்திருக்கிறார். அடுத்து சாருநிவேதிதா ஏன் இக்கைதை ஆதரித்தார் என்றால், ராஜன் எப்போது
ம் அவரது பதிவை எடுத்து வரிக்கு வரி கீழ்த்தரமாக நக்கலடித்து வெளியிடுவார் எப்போது அந்தக் கடுப்பில் எதிர்வினையை வைத்திருக்கிறார். இதை சின்மயி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தமிழச்சி எழுதிய சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை என்ற கட்டுரை சின்மயி அறிந்திருக்க வில்லை போல.

சின்மயி பல பொய்களைச் சொல்லியிருக்கிறார். அவர் பூர்விகம் உட்பட. அவர் மொத்தம் மூன்று வகையான வழக்குகளைப்போட்டிருக்கிறார். மந்திர மூர்த்தி என்பவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டது, ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய ஆறு பேர்கள் மீது, வேறொரு தயாரிப்பாளர் பணம் கொடுக்காதது குறித்து என. இதில் ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய இரண்டு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள்.

இது இப்போதைய நிலவரம். ராஜன் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். தமிழ் வளம் மிக்க கவிதைகள் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாமியார்கள் எதிர்ப்பு, அன்னா ஹஸாரே போராட்டத்தில் பங்கெடுத்தது, மேலும் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்த மீனவர் படுகொலை எதிர்ப்பு, மே 18 போராட்டம் இது குறித்தெல்லாம் எழுதியுள்ளார். இது அனைத்து பொதுநலம் சார்ந்து எழுதப்பட்டது. மற்றபடி திரைப்பட விமர்சனம், கிண்டல் பதிவுகள், சாருநிவேதிதாவைத் தழுவி எழுதப்பட்ட நக்கல்கள். அவ்வளவே அவர் பின்னூட்டங்களில் நக்கல் இருக்கும், சில அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். குறிப்பாக இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் கீழ்த்தரமானவை. விமர்சனம் செய்யலாம் இந்த மொழி வெறுப்பை வளர்க்கும். சிபி செந்தில் குமார் மனைவியிடம் பேட்டி எடுப்பது போல ஒரு பதிவு ஒரு சிலருக்கு அது ஆபாசமாகத் தெரியும். ஆனால் அது அவரது மனைவியைக் கிண்டல் செய்வது போல எழுதப்பட்டதல்ல அவர் மனைவி சிபி செந்தில் குமாரை திட்டும் பாணியில் எழுதப்பட்ட நக்கல். ஆனாலும் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நண்டு நொரண்டு, ருத்ரன் போன்றவர்களின் தளத்தில் மரியாதையாகவும், பின்னூட்டமிட்டிருக்கிறார். பல பேரை மரியாதையின்றி நக்கலடித்திருக்கிறார். உதாரணமாக ஏதோ ஒரு பார்ப்பன எதிர்ப்பு பின்னூட்டத்திற்கு பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படிச் சொன்னார். பெருசு சரியாத்தாஞ் சொல்லிருக்கு. என்று. இப்படி. சுருக்கமாக மிகுந்த பண்புடனும், மொழியாளுமையுடனும் பேசுவார், எடுத்தெறிந்தும் பேசுவார் கோயம்புத்தூர் குறும்பு எனும் பொருள்பட.

முக்கியமாக பதிவுலகில் அதிகமாக விவாதிக்கப்பட்ட, சந்தனமுல்லை விவகாரத்திலும், சாருநிவேதிதா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பதிவெழுதியவர் ராஜன். அதனால் அவரை செக்ஸிஸ்ட் என்றோ ஆணாதிக்க வாதி என்றோ சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வரம்பு மீறி வசவியதன் மூலமாக ராஜனின் மேற்கண்ட இயல்புகளை ஏற்றுக் கொள்ள, அந்த ட்வீட்களைப் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.

இதனால் ராஜன் சின்மயி என்ற ஒரு பெண் மீது பாலியல் ரீதியில் பேசியிருக்க மாட்டார் என்று 99% நம்பலாம். அந்த 1 % ஜெயலலிதா உட்பட மற்ற பெண்கள் மீதான கருத்துக்களுக்காக. சின்மயி மீது ராஜனின் பாலியல் வசை தொடர்பான ட்வீட் ஒன்றும் இதுவரை இல்லை. இருக்கவும் முடியாது.

மேலும் பெண்கள் மீது சென்டிமென்ட் அதிகமென்பதால், ரேவதி, ஆதிரை (ராஜனின் மனைவி, குழந்தை) என்ற இரு பெண்களுக்காக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பது சின்மயி என்ற பெண்மணியின் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்.

மேலும் குழந்தையைக் குதறிக் கொன்ற கொலைகாரன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதையே எதிர்த்த நாம் இந்த அபத்தமான குற்றச்சாட்டிற்காக தனிப்பட்ட உத்தரவின் பேரில் சென்று கடமையைச் செய்ததைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

சின்மயி தரப்புப் பொய்கள்:

சின்மயி சொல்வது போலி ஐடிகள் மூலம் இழிவு செய்கிறார்கள் அதை எனக்கு டாக் செய்து ராஜனுடைய ட்விட்டருக்கும் அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார். இதை ராஜன் என்று எப்படி முடிவு செய்தார் இதைத்தான் ராஜனும் தனது பதிவில் கேட்டிருந்தார். அவர்கள் செய்த அவதூறுக்காக ராஜனை ஏன் குறிக்க வேண்டும் என்பது புரியவில்லை.

இதற்கு சின்மயி பதிலெதிவும் சொன்னதாகத் தெரியவில்லை.

ராஜனின் பணி பறிபோகுமளவிற்கு அவர் என்னவகை மன ரீதியான உளைச்சலுக்கு சின்மயியை உண்டாக்கினார் என்பது கேள்விக்குறி.

அதிகாரம் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அரை நாளில் கைது செய்யப்பட்டது குறித்து சொல்லத் தேவையில்லை. செய்யாத குற்றத்துக்கு பணி பறிப்பு, மன உளைச்சல் உட்பட சமூகத்தில் அவர் எதிர்காலம் உட்பட சின்மயி உலை வைத்திருக்கிறார். என்ன ஒரு கொடிய மனப்பான்மை.

ராஜனது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிடில் வரதட்சணை வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்குக்களைப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களைப் பழிவாங்கும் பெண்களில் ஒருவராகப் போகிறார் சின்மயி.

முதலில் நடந்த ட்விட்டர் உரையாடலில் சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன சின்மயிக்கு மீனா கந்தசாமி, தியாகு, ஏழர ஆகியோர் எடுத்துச் சொல்கின்றனர். மீனா தாழ்ந்தவர்களல்ல தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். ஏழர அமெரிக்காவிலும், ஸ்ரீலங்காவிலும் போய் சோகால்ட் ரேஸிசம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். இதன் மூலம் சின்மயி  புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனாலும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு டிவீட்டுகிறார். இது உணர்ச்சி வசப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ராஜ்மௌலியின் தாழ்த்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் குறித்து டிவீட்டுகிறார்.. இதற்காக எதிர்ப்பு வருகிறது என்று முன்பே அறிந்திருந்தும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்புக்காக பல டிவீட்டுகளை பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்ப்பன வெறியாகவே கருத முடியும் சின்மயி.

பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதையெல்லாம் சைபர் கிரைம் காரர்கள் நேர்மையுடன் தேடி எடுத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில்தான் சின்மயியின் நேர்மையை நம்மால் அறவிட முடியும்.

மேலும் வேறொரு பத்திரிக்கையாளர் ராம் இவர் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜனவரியிலிருந்து தமிழில் தன்னைத் தாக்கி தமிழில் பல ட்வீட்கள் வந்ததாகச் சொல்லும் சின்மயி ஏன் வந்தது என்று சொல்ல வில்லை. ஒரு வேளை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களால் வந்திருக்கலாம்

ஹையங்கார் என்பது நீங்கள் நகைச்சுவைக்குப் போட்டதாக உங்கள் மற்ற டிவீட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.

மேலே நான் எனக்குத் தெரிந்த வரையிலெல்லாம் ராஜன் மீதான் நியாயத்தைச் சொல்லிவிட்டேன். உடனடியாக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில், அவர் பணியும் திரும்ப வழங்கப்பட வேண்டுமென்பதில் (வேலையில்லாமையின் சுமையை நன்கு அறிந்தவன் நான்) எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ராஜன் தரப்புப் பொய்கள்:

தன்மீது வந்த அவதூறு ட்விட்டர்களை ப்ளாக் செய்திருக்கிறார். வெவேறு ஐடிக்களில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

சின்மயி #TNFisherman இல் சேராததற்குக் காரணத்தை சொல்லியிருக்கிறார். அதில் அவரால் ப்ளாக் செய்யப்பட்டவர்கள் இருப்பது மட்டுமல்லாமல், பல தலைவர்கள் கேவலமான முறையில்  விமர்சிக்கப்பட்டிருந்ததால் அதில் தன் பெயரும் இணைக்க விருப்பமில்லை எனவும் தனிப்பட்ட முறையில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்கு தமிழர்களுக்கு எதிரானவள் சின்மயி என்று தன்னை இழிவு செய்தார்கள் என்கிறார். சின்மயி.

#அசிங்கப்பட்டாள்சின்மயி

வந்த காரணம்: சின்மயி ராஜன் மீது வன்மம் கொண்டதற்காக ராஜனும் மற்றவர்களும் சொல்லும் ஒரு காரணம் மஹேஸ்மூர்த்தி என்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிருபர் பிரபலங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் மக்களைக் கவர்ந்த பொழுதுபோக்காளர்கள் என்ற பட்டியலில் நான்காவாதாக சின்மயியும், ஐந்தாவதாக ராஜன் லீக்ஸ் - ஐயும் குறிப்பிட்டிருந்தார். இதனால் சின்மயி ராஜனின் பெயரை நீக்கச் சொல்லி மகேஸிடம் சண்டை போட்டார் என்கிறார்கள். இது முழுவதும் உண்மையல்ல.

சின்மயி அவருடன் சண்டையிடக் காரணம் வேறு. அதில் ஷ்ரேயா கோஷல், சின்மயி ஆகியோரை (ப்ளாக், ட்விட்டர் முகவரிகளை) ப்ளாக்கர்கள், ட்விட்டர்கள் வகையில் வரிசைப்படுத்தியிருந்தார் மகேஸ்மூர்த்தி. ஷ்ரேயா கோஷல் தனது பெயரில் இருந்த இணையத்தளம் தன்னுடைய சொந்தத்தளமல்ல தனது ரசிகர்களால் நடத்தப்படுகிறது என்று மகேஸ் மூர்த்திக்கு மென்கடிதம் எழுதினார். பின்பு ஷ்ரேயாவின் ப்ளாக்கை அந்தக்கட்டுரையிலிருந்து மகேஸ் நீக்கிவிட்டார். சின்மயிக்குக் கொடுத்திருந்த வரையரறையில் சின்மயி பாடகர் எனற முறையில் பிரபலமானவர் என்பதை விட ட்விட்டரில் எழுதி பிரபலமானவர் என்று எழுதியிருந்தார். இதைத்தான் சின்மயி எதிர்த்தார். அதே போல் ராஜனை விட 10 மடங்கு அதிகம் வாசிக்கப்படும் மதன் கார்க்கி, வைரமுத்து ஆகியோரின் தளத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருக்கிறார். மகேஸ் அது என்னுடைய சொந்தக் கட்டுரை அதனால் நீக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். (ராஜனை நீக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும், பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகவும் மகேஸ் சொல்கிறா. சின்மயி அழிக்க வில்லை என்கிறார்.) அந்தக் கட்டுரையின் கருத்துரைகளைப்படித்தால் தெரியும் அது ஒரு தவறாக எழுதப்பட்ட கட்டுரை, ராஜனே சொல்லியிருக்கிறார் 7 படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கும் தன்னை எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை என.

தன்னைப் பற்றி பாடகராக இல்லாமல் ப்ளாக்கில் பிரபலமானவர் என்பதை சின்மயி ஏன் எதிர்க்கக் கூடாது ? இதில் சின்மயியின் வன்மம், பிரபலம் என்ற திமிர் இருக்கிறதா ? இதில் சின்மயியின் பேச்சைக் கேட்டு அதை நீக்காததால் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்று அவரைக் கிண்டலடித்திருக்கிறார்கள் இங்கே ராஜன் சின்மயி தன் மீது வெறுப்புடன் இருப்பதால்தான் அதை எதிர்த்ததாகத் தவறாகப்புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அசிங்கப்பட்டாள்சின்மயி# என்று டாக் தொடங்கி கிண்டலடித்திருக்க வேண்டும். அந்த டாக் உடன் ராஜனுட மற்றவர்களின் சின்மயி மீது தொடுத்த ஆபாச ட்வீட்களுக்கும் சேர்த்து ராஜன் மீது சின்மயிக்கு ஐயம் வந்திருக்க வேண்டும். இது என் கணிப்பு. ராஜன் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் இது பெண் மீதான தாக்குதல்தான்.

இன்னொன்று சின்மயி மீனவர்கள் மீனைக் கொல்வதால், சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்லலாம் என்று சொன்னார் என்பது மிகப்பெரிய பொய். வேறொரு சந்தர்ப்பத்தில் சின்மயி மீன்களைக் கொல்றது மட்டும் பாவமில்லையா என்று கேட்டதை ராஜன் சும்மா கிண்டலுக்கு டிவிட்டியதே "மீனவர்கள் மீன்வர்களைக் கொல்கிறார்கள். அதனால் சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்கிறது" என்ற அந்த டிவிட். அது உண்மையல்ல. ஆனால் அதை ஃபோட்டோ ஷாப் செய்து உண்மை என்று பரப்பி விட்டார்கள். அதை இங்கே விமலாதித்த மாமல்லன் பதிவில் காணலாம். என்ன வக்கிரமான எண்ணம் இது ? இதை இன்னும் பலர் நம்புகின்றனர். பரப்புகின்றனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா அது உண்மையா இல்லையா என்று கேட்காமலேயே தமிழர்கள் முகத்தில் காறித்துப்பிய சின்மயியை கண்டிக்கிறேன் என்று போட்டு விட்டார். இப்படி சின்மயி தமிழர்களுக்கு எதிரானவர் என்று கருத்து பரப்பப்பட்டது.

இன்னொன்று அதை உண்மையா என்பதை தமிழ் மான் என்பவர் கேட்க, (இல்லை என்பதை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்லணுமா என்ற பொருள்பட) உங்களுக்கு தனியா டாக் பண்ணி சொல்லணுமா என்று கேட்டிருக்கிறார். தன் மீது தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று ஒரு  சின்மயி போட்டிருந்த போஸ்ட்டின் கீழே இதை அவர் கேட்டார். இல்லை என்பதைத்தான் சின்மயி அப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் பல இடங்களில் இதைக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தவறாகப்புரிந்து கொண்டு சின்மயி ஆமாம் என்று சொன்னாதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பல பேருக்கு டாக் பண்ணி விட்டார் அவர். அவர் புகாரளித்ததே தான் மீனவர்கள், தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் சித்தரிக்கிறார்கள் என்றுதான். அதைத்தானே இன்னும் செய்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இவர் சொன்னது உண்மை, ஆனால் மீனவர்கள் குறித்து சொல்லப்பட்டது முழுப்பொய். ஒரு கொலை செய்தவன் மீது 3 கொலை செய்ததாகச் சொல்வது போல.. ராஜன் மீது சொல்லப்பட்ட அவதூறு போன்றதே இதுவும். இருப்பினும் இருவரும் சமமல்ல என்பதும் சரிதான்.  எப்படி ராஜனின் சில ட்வீட்களை மட்டும் வைத்து அவரது இயல்பைத் தீர்மானிக்க முடியாதோ அது போலத்தான் சின்மயிக்கும். இணைய ஊடகங்களும், தினத்தந்தி போலத்தான் இது போன்ற பொய்ப்பரப்புரைகள் சின்மயி மனிதநேயமற்றவர் என்ற பிம்பத்தை காலத்திற்கும் ஊன்றி விடும். அதனால் இந்தப் பொய்யை நம்பக்கூடாது

பெண்கள் மீதான வன்மம்

அதே நேரம் இன்னொன்றையும் நான் முக்கியமாகப் சொல்ல வேண்டியுள்ளது. ராஜனுக்கு ஆதரவு பெருகி இருப்பதால், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல், பெண்களை இழிவு செய்கிறவர்கள், பெண்ணியம் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்கிறவர்கள், கற்பு வேண்டும் இல்லையென்றால் நீதி கிடைக்காது, பெண்கள் கிண்டல் செய்வது என்னுரிமை, அவள் மட்டும் யோக்கியமா என்ற கருத்துக் கொண்டவர்களெல்லாம் கிடைத்த சந்தில் சின்மயி மீது வன்மத்துடன்  ராஜனை ஆதரிக்கிறேன் என்று கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களின் கருத்துக்கள் சின்மயியின் பின்புலம், அவரது பழிவாங்கும் வெறி, பொய் ஆகியவைகளைத் தவிர்த்து, சின்மயி ஒரு பெண் என்ற ரீதியில் மட்டும் இழிவு செய்கிறார்கள். இது சின்மயி அல்லாத வேறு எந்தப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக காவல்துறையை நாடி இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவையாகும். சின்மயி ஓவரா சீன்போடறா என்பது போலவும், கற்பில்லாதவள் நீதி கேட்கக்கூடாது என்ற கருத்துக்களை இவர்கள் சொல்கிறார்கள்.

ஆண்களால் பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்கு பெண்களின் தவறான கருத்தே காரணம் என்ற ஆபத்தான கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துள்ள பேர்வழிகளை ராஜனே எதிர்த்திருப்பார். என் அம்மா, சகோதரிகள், உறவினர் பெண்கள் அனைவருமே இது போன்ற கருத்துக்களை வெளியிடக்கூடியவர்கள். கிராமத்திலிருக்கும் உயர்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் அனைவரின் இயல்பும் இது. இது தவறுதான் என்றாலும் பாலியல் தாக்குதலுக்கு இது ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நண்பனொருவனின் தந்தையார் திகவில் இருந்தவர் அவன் வீட்டிலும் இதே நிலைதான்.

மீனா பார்ப்பனீய எதிர்ப்பு பேசியதால் பாலியல் ரீதியான மொழியில் தாக்கப்பட்டார், சின்மயி பார்ப்பனியம் பேசியதால் தாக்கப்பட்டார். இதே போல் ஃபேஸ்புக்கில் நிலவுமொழி செந்தாமரை என்ற பெண்ணும் ஜாதி எதிர்ப்புக்காகத் தாக்க்ப்பட்டார். இப்படிப் பல பேர் காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர்கள் பெண் என்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் இங்கே சின்மயியை இழித்தவர்கள் கோபத்தில் கொந்தளித்ததாகத் தெரியவில்லை, அவரைக் கிண்டல் செய்ய ஒரு டாக் ஆரம்பித்து அதில் கண்டபடி செய்திருக்கிறார்கள். இதில் தாழ்த்தப்பட்ட, அறியாதோரின் அடித்தட்டு மக்களின் வசவு மொழியன்று நான் கண்டது, முற்போக்குவாதிகளின் ஆணாதிக்க வன்மம் மட்டுமே.

அப்படிப்பார்த்தால், சிங்கள மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஜெவைக் கண்டித்து வரைந்த கார்ட்டூன் சரி. கனிமொழி ஊழல் செய்ததால் அவர் மீதான கருத்துக்கள் சரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். போர் நடந்தால் மக்கள் சாவது இயற்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா ஈழ்த்தாயாக மாற்றப்பட்டார்.
எல்லோரிடமிருந்து பெரிய பாலியல் ரீதியான தாக்குதல் வரவில்லை. அது போல ஆபாசமாக சின்மயியை ஏசாமல் இருந்திருந்தால் அவருக்கு எதிராக கேட்டிருக்கலாம். ஆபாசமாகப் பேசிவிட்டு அதை நியாயப்படுத்த தலித், தமிழ் என உணர்ச்சி அரசியலின் பின்னர் ஒளியக்கூடாது.

ராஜன் மட்டுமே சின்மயி மீது பாலியல் மொழியில் தாக்குதல் செய்யவில்லை தவிர மற்றவர்கள் செய்திருக்கிறார்கள். ராஜனின் நண்பர்களாக இருந்தவர்கள் இது போலப்பேசியதற்கான ட்விட்டுகள் இருக்கின்றன. இதற்காக ராஜனைக் குற்றவாளியாக்கியது மன்னிக்க முடியாதுதான்.

அவரது பதிவிலும் இது போல் சிலர் பின்னூட்டமிடுவார்கள். அதுபோலவே ட்விட்டரிலும் சிலர் இருப்பார்கள் போலத் தெரிகிறது. இவைகளெல்லாம் கோபத்தில் வெளிப்பட்ட உணர்ச்சியில் தெரியாமல் வெளிவந்த கெட்ட வார்த்தைகள் அல்ல. பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கும் மதிப்பீட்டில் வருகின்றவை. அதனால்தானே அம்மாவை கடலைக்கு யூஸ் பண்ணிக்கலாம் என்று பேச வைக்கிறது. திரைப்படங்களில் பார்த்தால், நாயகனின் அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசினால் அவன் கொந்தளித்து சண்டை போடுவது போலவும், நாயகியின் தங்கையையோ, அம்மாவையோ பற்றிப் பேசுவது நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (எ.கா ஃபிகரோட சேர்ந்து அவ அம்மாவையும் உசார் பண்ணிருப்பேன் வகையில்)

இது போன்றவர்களைச் சிரிக்க வைப்பதற்காக ராஜன் எழுதியிருக்கிறார் என்பது என்ன முரண் நகை. ஜெயலலிதாவின் கார்ட்டூனைக் கண்டித்த கையோடு அதை நையாண்டி செய்தது மட்டுமே உலகிற்குத் தெரிந்திருக்கிறது என்பது வேதனை.

இந்த வழக்கு மிகவும் சிக்கலாக எந்தப்பக்கம் சாய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் பெண்ணின் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்காக பெண்ணை ஆதரிப்பதா இல்லை அதிகார வர்க்கத்தினால், பழிவாங்கப்பட்ட பாமரனா என்றால் அப்பாவியின் பக்கம்தான் நிற்கத் தோன்றுகிறது. I support Rajan (with conditions apply). ராஜனின் விடுதலையை மட்டும் தீவிரமாக ஆதரிக்கிறேன். அவர் ஆதரவாளரின் கருத்துக்களை எதிர்க்கிறேன்.

இருப்பினும் சின்மயி ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற நிலையில் அவர் மீதும் கரிசனம் உண்டு.
Download As PDF
Bookmark and Share

Post Comment