கசக்கும் கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கசக்கும் கல்லூரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தற்கொலையை நோக்கித் தள்ளப்படும் தமிழ்வழி மாணவர்கள் - ஆங்கில வழியில் படிப்பது தவறா ?

சமீபத்தில் நடந்த இரு தற்கொலைகள் நடந்தன. அது வெளிச்சம் பெற்றதற்குக் காரணம் தற்கொலை செய்து கொண்ட இருவரும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள். எவ்வளவு சூடாக வெளிவந்ததோ அதே வேகத்துடன் மறக்கப்பட்டும் விட்டது. 

இவ்விரு தற்கொலைகள் என்னை அதிகமாக பாதிக்கக் காரணம் தமிழ்வழியில் படித்ததால் கல்லூரியில் படிக்க முடியவில்லை என்று தற்கொலை செய்தவர்கள்; இவ்விருவருமே நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்ததினால்தான் மாநிலத்திலேயே முதல் நிலையிலிருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றார்கள். அவர்கள் தற்கொலைக்குக் காரணமாக சொல்லப்படும் காரணங்களில்  அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள், அதனால் ஆங்கிலப்புலமை குறைவு காரணமாக கல்வியை சரியாகக் கற்க முடியாமலும், சக மாணவர்களின் கிண்டலினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதே என்னை மிகவும் பாதித்தது, காரணம் நானும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டு தோற்றிருக்கிறேன். 

மேலும் இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் அவருக்கும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால் ஆங்கிலத்தில் படிக்க சிரமம் என்பதை ஒரு காரணமாக சொன்னார்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.  காதல் தோல்வி, பகடி வதை (Ragging) போன்ற காரணங்களும் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மூவர்

முதலில் வருபவர் இரு வருடங்கள் முன்பு தற்கொலை செய்து கொண்ட ஜோதி.  அவர் எடுத்த மதிப்பெண்கள்

10 (S.S.L.C) - 475/500 

12 (H.S.L.C) - 1115/1200 
ஜோதி
அடுத்ததாக மணிவண்ணன்.  இவர் தனித்துவமான ஒரு மாணவராக இருந்திருக்கிறார். அவரைப்பற்றித் தெரிந்து கொள்ள இதைப் படிக்கவும். 10 வதில் 461 மதிப்பெண்கள். +2 வில் 1159. ஆனால் மூன்று வருடங்களில் பொறியியலில் 26 பாடங்களில் அரியர் வைத்திருந்திருக்கிறார்.  



மூன்றாவது தைரிய லக்ஷ்மி என்ற மாணவி எடுத்த மதிப்பெண்கள் குறித்த செய்திகள் எனக்குத் தெரியவில்லை. அவர் எழுதிய கடிதம்   அவரது பிரச்சனையைச் சொல்கிறது. அவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பவர் என்பதால் எப்படியும் 1100 க்கும் மேல் எடுத்திருப்பார்.

     
       
 இதில் முதல் இருவருமே வழக்கமாக நாம் கேள்விப்படும் சிரமம் நிறைந்த 
பின்புலம், வறுமை எனபனவற்றைத் தாண்டி தமது கல்வியில் சிறந்து 
விளங்கினார்கள். குறிப்பாக மணிவண்ணன். +2 வில் 1167 என்பதெல்லாம் சராசரி மாணவர்களால் முடியவே முடியாது. மனப்பாடம் செய்தாலும் முடியாது.

இவர்கள் மூவரின் தற்கொலைகளுக்கும்
காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனை, பகடி வதை என்று சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்வழியில் படித்ததால்தான் தாழ்வு மனப்பான்மையாலும் கல்வி குறித்த அச்சத்தினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. எனவே அக்காரணத்தை முன்னிலைப்படுத்தி எழுதுகிறேன். கிராமப்புறத்திலிருந்து சென்ற இவர்களுக்கு சென்னை கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கும்.

சரி இப்போது தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் கல்லூரியில் எதிர்கொள்ளும் பிரச்சனை என்று பேசத் தொடங்கினால் வரும் கருத்துக்கள்

1. தாய்மொழியில் படிப்பதுதான் அறிவு வளர வழிவகுக்கும், எல்லாத் துறையிலும் சிறந்து விளங்குகிறவர்கள் அனைவரும் தமது பள்ளிக் கல்வியை தாய்மொழியில் கற்றவ
ர்களே

2. ஆங்கிலம் எனபது அறிவின் அடிப்படையல்ல வெறும் மொழி மட்டுமே

3. துறை சார்ந்த அறிவு இருந்தால் போதும் ஆங்கில அறிவு அவசியமன்று

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல.

5. நான் தமிழ்வழியில்தான் படித்தேன், கல்லூரியில் ஆங்கில வழியில் படித்தவர்களை விட நான்தான் அதிக மதிப்பெண் பெற்றேன்.

இப்படியாக பல கருத்துக்கள் வருகின்றன. அடுத்ததாக ஆங்கில வழி குறித்த விமர்சனமாக வருகின்றன

1. பெற்றோர்களின் ஆங்கில மோகம்

2. ஆங்கிலம் மேன்மைபடுத்தப்பட்டு தமிழைத் தாழ்வு படுத்துகிறது

3. ஆங்கில வழியில் படித்தவர்களை விட தமிழ் வழியில் படித்தவர்கள் தெளிவானவர்கள்

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் தெளிவில்லாதவர்கள், மனப்பாடம் செய்து வாந்தியெடுப்பவர்கள்


5. அவர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியாது

இப்படியாக பலவிதமான கருத்துக்கள். முதலிலிருந்து வருகிறேன். சுருக்கமாக இக்கருத்துக்கள் யாரைச் சார்ந்து இருக்கின்றன என்று பார்த்தால் ஆங்கில வழியில் படித்த சராசரி மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சிறந்து விளங்கும் மாணவர்களையும் ஒப்பிட்டது போல இருக்கிறது. ஆங்கில வழியில் படித்த சிறந்த மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சராசரி மாணவர்களையும் இதே போல் ஒப்பிட்டுப் பார்த்தால் மேலே சொன்ன கருத்துக்கள் அத்தனையும் மாறி விடும்.


 முதல் கருத்து, தாய்மொழியில் படித்து அறிவு பெற்று பின்பு ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே அதிகம் என்பது, இதில் ஒரு வகுப்பில் 40 பேர் இருக்கிறார்கள் எனில், அதில் 5 பேர் மட்டுமே சிறந்த மாணவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கழித்துக் கட்டப்படுகிறாரகள். இதில் தமிழ் வழியாக இருக்கும் பட்சத்தில் அந்த 5 பேரில் ஒருவர் திணறி விடுவார். மேலே தற்கொலை செய்து கொண்டவர்களின் மதிப்பெண்களைப் பாருங்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களே இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, சராசரி மாணவரகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஆனால் சிலர் மிக எளிதாக அதை எதிர்கொண்டு பழகி விடுகிறார்கள் பெரும்பான்மையினரால் அது முடிவதில்லை. யாராவது நான் தமிழ்வழியில் படித்தேன் இப்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நான் நிபுணத்துவம் பெற்று விட்டேன் என்றால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள். எனக்கு வெற்றி பெற்றவர்கள் குறித்துப் பிரச்சனையில்லை. இதைப் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். தோல்வியடைபவர்கள் குறித்தே கவலை. மீதப்பேர்கள் உங்களைப்போல் வெற்றி பெற முடியாததற்கு ஆங்கிலப் போதாமைதான் காரணம். எத்தனை பேர் பொறியியல் படிக்கிறார்கள் வெளிவருகிறவர்கள் முக்கால்வாசிப்பேர் தகுதிக் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் அதற்கு ஒரு காரணம் இந்த எழவெடுத்த ஆங்கிலம்.

ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமே என்பதற்குப் பதில்: அந்த வெறும் மொழி நமக்குத் தெரியவில்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி. ஆனால் நம் கல்விமுறை அதை மொழியாகக் கற்பிப்பதில்லை. அதை ஒரு பாடமாகத்தான் கற்பிக்கிறது. கட்டுரைகள், மனப்பாடக் கவிதைகள் இரண்டையுமே தமிழ் வழி மாணவர்கள் மனப்பாடம் செய்துதான் எழுத வேண்டியுள்ளது. அதனால் மொழியறிவு என்பது தமிழ் வழி மாணவர்க்கு இன்னும் தொலைவிலிருக்கிறது. மேலும் ஒரு மொழியைக் கற்க வேண்டுமெனில் முதலில் அதில் நான் பேசுவதற்கும், கேட்டுப் புரிந்து கொள்வதற்கும் ஏற்கெனவே அதிகம் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நமக்கு அந்த வாய்ப்பில்லை. ஆங்கில வழியில் படிப்பவர்கள் குறைந்த பட்சமாக மொழியுடன் 10 வருடங்களாக அறிமுகமிருப்பதால் கல்லூரிக்குச் செல்லும் போது பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை. ஒரு மொழியைக் கற்க வயது தடையில்லை. ஆனால் எப்போது மொழியைக் கற்பது 17 வயது வரை உயர்நிலைக் கல்வி கற்று பின்பு தொழிற்கல்வி கற்கும்போதா ? சரி மொழியைக் கற்பதா இல்லை பாடத்தைக் கற்பதா ? கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் எழுதிய தடியான நூல்களை நாம் கற்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும் அதை செய்ய அதிகப் படியான ஆங்கிலப் புலமை வேண்டும், இந்த நேரத்தில் உட்கார்ந்து ஆங்கிலத்தை எங்கே கற்பது ?

துறை சார்ந்த அறிவு போதும் ஆங்கில அறிவு அவசியமன்று என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கணிதம், கணிணி அறிவியல்,  தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் போன்ற துறைகள், ஓரளவுக்கு மொழிப்புலமை அவசியப்படாதவை. மேலும் துறைசார்ந்த அறிவுடன் ஆங்கிலப்புலமையும் சேர்ந்து  இருப்பவர்தான் துறை சார்ந்த அறிவுமட்டும் கொண்டவரை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மருத்துவம், அறிவியல் துறைகள் இதில் சேராது. இதில் படிப்பவர்கள் நிச்சயம் திணறுவார்கள்.

பெற்றோர்களின் ஆங்கில மோகம் என்பது மிகப்பெரும் பொய். இதை எல்லோரும் அடிக்கடி சொல்கிறார்கள். இது அறியாமையா இல்லை அயோக்கியத்தனமா ? "என்னை ஏன் ஆங்கில வழியில் சேர்க்கவில்லை? " என்று நான் இன்னும்கூட அப்பாவிடமும் உறவினரிடமும் கேட்பதுண்டு. நான் கல்லூரியில் சேர்ந்தபின்பு பட்ட அவதியினால், நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் சொல்வது இதையே "தயவு செஞ்சு குழந்தையை தமிழ் வழியில் சேர்த்து விடாதீர்கள்". 


பெற்றோர்கள் என்பவர்கள் யார் ? கல்வி கிடைக்கப்பெறாதவர்கள். தம் குழந்தைகளாவது நன்றாக வரட்டும் என்றுதானே ஆங்கில வழியில் சேர்க்க அலைகிறார்கள். தனியார் பள்ளிகளில் தரம் அதிகம் என்று நம்புவது பிழைதானென்றாலும் அதற்கு அவர்கள் மட்டுமே காரணமா ? கல்வி அளிப்பதிலிருந்து அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டது, தனியார் பள்ளிகள் ஊர்தோறும் கட்டப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் இலட்சணம் அனைவருக்குக்குமே தெரியும். அரசுப் பள்ளி ஆசிரியர்களே கூட அங்கு தமது பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புவதில்லை. பெற்றோர் தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் சேர்ப்பது ஆங்கில மோகத்தினாலல்ல, அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையினால்தான் இதை என்னவோ வரதட்சிணை கேட்கும் பெற்றோரின் பேராசை, குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கும் மாயையைப் போல் சித்தரிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இன்னொன்று தமிழ்ச் சூழலில் தமிழ் குறித்த எதுவுமே உணர்ச்சிகரமாக மாறிவிடுகிறது. தமிழ் வழிக்கல்வி குறித்த விவாதமும்தான். தமிழில் பேசுவது இழிவு ஆங்கிலம் பேசுவது உயர்வு என்பது மாயை என்ற கருத்தை பாமரர்களிலிருந்து மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயர்தான் வைப்பேன் என்று அடம் பிடித்த கமல் வரை எல்லோரும் கூறுகிறார்கள். வெத்து பந்தாவுக்கு சிலர் பேசிக் கொள்வதை வேண்டுமானால் இதற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வேலைவாய்ப்பு முகாம், நேர்காணல் என்று எங்கு போனாலும் ஆங்கிலமே அடிப்படை, ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கௌரவக் குறைச்சல். பெருமை என்பதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் ஆங்கிலப் புலமை அடிப்படைத் தகுதிகளில் ஒன்று என்று விளங்கும். தமிழில் பேசவேண்டும் என்பது மற்ற துறைகளில் இருக்கும் தமிழின் அளவுதான் சமூகத்திலும் எதிரொளிக்கும். இதை ஊடகம் கலைத்துறை, கல்வித்துறை என அனைத்திலும் தமிழ் மகுடம் சூடும்போது நிகழும் அதை விட்டு தனிப்பட்ட நபரின் தவறாகப் பார்ப்பது எவ்வகையிலும் உதவாது. மாறாக எதிரிவிளைவையே ஏற்படுத்தும். தமிழில் பேசு என்று கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத இளைஞனிடம் சொல்வதற்கு  என்ன நேர்மை இருக்கிறது. இதை அவர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தைக் கேளுங்கள் தமிழ் வழியில் பயின்றதற்காக வருந்துகிறீர்களா இல்லை பெருமப் படுகிறீர்களா என்று. முதலில் நம் தமிழகம் ஒன்றும் ஜப்பானோ, ஃப்ரான்சோ, ஜெர்மனியோ அல்ல. குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசால் வழங்கப்பட்ட உரிமைகளைக் கூட இங்கு சாதிக்க வில்லை என்பது கசப்பான உண்மை. அங்கு மருத்துவமே தமிழில் கற்பிக்கப்படுகிறது என்றும் கேள்விப்பட்டேன். இங்கு பொறியியல் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்கிலத்தில் கற்பவர்களுடன் ஒப்பிடும்போது அதன் தரம் குறித்து எனக்கு மனநிறைவில்லை. நேர்காணல் என்று வரும்போது முதல் சுற்றிலேயே தமிழ் வழி மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள். தற்பொது தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு படித்து முடித்துவிட்டு வந்து வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. 

சற்றே சிந்தித்தால் விளங்கும், நீல நிற பாவாடை தாவணிகளும், காக்கிக் கால் சட்டையும், வெள்ளைச் சட்டையும் கொண்ட அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், நகர்ப்புறங்களில் கழுத்துபட்டை இறுக்க வாகனங்களில் செல்லும் வெள்ளைத் தோல் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஆங்கிலக் கல்வியும் சம அறிவைக் கொண்டதென்றா கருத முடியும் ? இதில் ஆங்கில வழியிலேயே
ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்சி என பல வகைகள் இருக்கின்றன. சமச்சீர் கல்வியும் மிகவும் எளிமையாக உள்ளதாகவே புலம்புகிறார்கள்.

தமிழகம் இந்தியாவின் அடிமை. இந்தியா அமெரிக்காவிற்கு அடிமை. இங்கு ஆங்கிலம்தான் சோறு போடும். தமிழ் வழியில் கற்று விட்டு கல்லூரியில் சென்று அவர்கள் படும் சிரமங்கள் எத்தனை என்று அவர்களுக்குத்
தான் தெரியும். நேர்காணலில் பட்ட அவமானங்கள் அவர்களுக்கு தமிழ் மீதான வெறுப்பைத்தான்  வரவழைத்திருக்கும். தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை, ஆங்கில எழுத்துக்கள் தார்பூசி அழிப்பது என்பதெல்லாம் எள்ளி நகையாடப் பட வேண்டியவை. தமிழை வளர்க்கும் ஆக்கப்பூர்வமான வழிகள் ஆயிரம் இருக்கின்றன. குறைந்த பட்சம் கல்வித் துறையில் தமிழ் மொழியைப் படித்தவர்க்காவது வேலை வாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பணிகள், கல்லூரிகளில் தமிழில் இல்லை பின்பு பள்ளியில் மட்டுமே தமிழில் கல்வியை வைப்பது யாருக்காக. தமிழ் வழியில் படிப்பவர்க்கு ஆங்கிலம் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் கல்லூரியில் அல்ல, மூன்றாம் வகுப்பிலிருந்தே. இதெல்லாம் நடக்கவா போகிறது. அதற்கு முதலில் கல்வி முழுமையுமே அரசாங்கத்தின் பொறுப்பில் வர வேண்டும். தரமான சமமான இலவசக் கல்வி அனைவருக்கும் கற்பிக்கப் பட வேண்டுமென்பதே என நிலைப்பாடு. என்னுடைய வலைப்பூவின் பெயரும், புனைப்பெயருமே என்னுடைய தமிழ் ஆர்வக்கோளாறுக்குச் சான்று பகரும்மென்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய சொந்த அனுபவத்தில் எனக்கு ஆங்கிலப் போதாமைதான் எதிரி, எனக்கு  விருப்பமான துறையில், வெற்றி பெற முடியாமல் கல்வியைக் கூட முறையாகக் கற்க விடாமல் செய்தது.  எனவே என் குழந்தையை தமிழ் வழியில் கல்வி கற்க வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. தமிழ் பெயர் வைப்பது தமிழைக் கற்பிப்பது, தமிழுணர்வு ஊட்டுவது என்பதெல்லாம் இதில் சேராது. இது சரிதானென்று எல்லோர்க்கும் என்னால் பரிந்துரைக்கவும் முடியவில்லை. யாராவது தமிழ் வழியில் சேர்க்க விரும்பினால் வாழ்த்துக்கள் !! அக்குழந்தை தமிழ் வழியில் கற்று நிபுணத்துவம் பெற்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலையில் இடம் பெற்றுப் படிக்க முடியாமல் தற்கொலைகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கல்வி இருக்கின்றதென்றால் இன்னும் பல ஆயிரக் கணக்கான பள்ளி கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைத்துப் பார்த்தால் புரியும் இது எவ்வளவு பெரிய பிரச்சனை என்று. தற்கொலை செய்தவர்கள் கோழைகளல்ல பலிகள். நான் தமிழ் வழிக்கல்விக்கு ஆதரவளிக்க மாட்டேன்
Download As PDF
Bookmark and Share

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 5


கல்லூரியில் படிப்பை முடித்து வெளியே வந்ததும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு வேலையில் அமரும் வரை தலைவலிதான். அதுவும் நமது நணபர்களில் ஒவ்வொருவராக வேலை கிடைத்துச் செல்லச் செல்ல மன அழுத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டே செல்லும். உயிர்நுட்பவியல் படித்தவர்களுக்கு இந்த அனுபவமிருக்கும்.  கல்லூரியில் படிக்கிற காலத்திலெல்லாம் நண்பர்கள், உறவினர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என பலரும் "நீங்க எதப் பத்திப் படிக்கிறீங்க ?, படிச்சா எந்த மாதிரியான வேலை கிடைக்கும் ?" போன்ற கேள்விகளுக்கு முகம் கொடுத்திருப்பார்கள். நானும்தான். சும்மாவாச்சும் எதையாவது சொல்லித் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது மருந்து கம்பெனியில் வேல கிடைக்கும் என்று அள்ளிவிட்டு சமாளித்து வந்தேன்.

உண்மையில் என்ன வேலைகளில் சேரமுடியும், அல்லது கிடைக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.படிக்கிறவர்கள் மட்டுமல்ல் பாடம் நடத்துகிற விரிவுரையாளர்களாலேயே சொல்ல முடியாது. அவர்களே வேறு வேலை கிடைக்காமல்தான் இங்கு வந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் வேறென்ன சொல்ல முடியும் ?. நான் இளநிலை மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது, அதற்கு முந்தைய வருடம்தான் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு விரிவுரையாளராகச் சேர்ந்திருந்தார். அவர் அப்போதுதான் முடித்தவர் என்பதால் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசவும் பழகவும் ஏதுவாக இருந்தது. அப்பவெல்லாம் பல்கலைக்கழக்த்தில் படித்தவர் என்றால், பெரிய அறிவாளியாகவும் இருக்க வேண்டும், படிக்கும்போதே வேலை கிடைத்து விடுமென்றும் நம்பிய காலம். ஏன் சார் இந்த வேலைக்கு வந்தீங்க ? என்று கேட்டேன். அவர், " என்னடா பண்றது, வீட்ல சும்மா இருக்க முடியல. வண்டிக்குப் பெட்ரோல் போடவாவது காசு வேணும்ல? என்றார். 


கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு இந்த நிலையென்றால், பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் எங்களைக்காட்டிலும் சிரமப்பட்டுப்படித்திருப்பார்கள், செலவும் கூடுதலாகவே செல்வாகியிருக்கும். அவர்களுக்கும் இதே நிலைதான். பலபேர் இப்படிப் புலம்புவார்கள். "பேசாமப் பொண்ணாப் பொறந்திருக்கலாண்டா. படிப்ப முடிச்சமா, கல்யாணத்தப் பண்ணி வ்ச்சிருவாங்க. இப்படித் தெருத்தெருவா அலைய வேணாம்". 


பல நூற்றுக்கணக்கான அறிவியல் இளையர்களும் (BSc), அறிவியல் நிறைஞர்களும் (MSc) எல்லா மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், படிப்பை முடித்த கையோடு, பெட்டியுடன் வந்திறங்கி டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூர், ஓசூர், சென்னை, கோவை போன்ற நகரங்களிலும், சிறுநகரங்களிலும் வாடகைக்கு அறைகளைப் பிடித்தும், நண்பர்களுடன் ஒண்டிக்கொண்டும், உறவினரின் வீட்டில் இருந்துகொண்டும்,  resume - ஐக் கையில் கொண்டு தெருதெருவாக முட்டிதேய நடந்து கொண்டிருக்கிறார்கள். இது எந்தவொரு பட்டதாரிகளுக்கும், படிப்புகளுக்கும் பொருந்தும். வேலை வாய்ப்புக் கண்காட்சியில் அரைகிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையில் காத்திருந்து நொந்து நூலாகிவிட்டு ஏண்டா படித்தோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இதெல்லாம் அவநம்பிக்கையூட்டவோ, குழப்பவோ சொல்லவில்லை. மொத்தமாக வேலை ஒன்றுமே கிடையாது என்பதும் இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. பல பேருக்கு சிரமமாகத்தான் உள்ளது. இதுதான் நிலை என்பது ஓரளவிற்கு எல்லொருக்கும் தெரிந்ததுதான். அதனால் உயிர்நுட்பவியல் போன்ற படிப்புகளில் சேரவிரும்புகிறவர்கள் ஒன்று பண வசதியுடைவராக இருப்பவர்களானால் வெளிநாடு சென்றுவிடுவார்கள், இல்லை மிகவும் நன்றாகப் படிப்பவர்கள் ஏதாவது ஆராய்ச்சிக் கல்வியில் சேர வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கிடைத்து விடும். குடும்பச் சுமையில் பங்கெடுக்க வேண்டிய நடுத்தர மாணவர்கள் பிரமாதமாகப் படிக்கவும் இயலாமல்  அல்லது பணவசதியுமில்லாமல் அதிக நாட்களுக்கு அப்பாவின் காசில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாக வேண்டும். என்து சொந்தக் கருத்து என்னவென்றால் , இது போன்றவர்கள் இளநிலைப் பட்டம் முடித்தவுடன் வேலை தேடத்தொடங்குவதுதான் சிறந்தது. 

இதை ஏன் கூறுகிறேனென்றால் அதிகம் வேலைவாய்ப்பை வழங்கும் துறைகள்  தகவல் தொழில்நுட்பத்துறையும், அதை சார்ந்தியங்கும், சேவைத்துறையும் தான். இவற்றில் பெரும்பாலானவை தமது வேலைக்குத் தேவையான  தகுதியாக ஒரு இளநிலைப் பட்டத்தையே அளவுகோலாக வைத்துள்ளனர். சில நேர்காணல்களில் என்னை வெளியேற்றியதற்குக் காரணம் என்னுடைய முதுகலைப் பட்டமே. ஏனென்றால்  கூடுதல் தகுதியாம் (over qualification ). இன்னும் சில இடங்களில் நீங்கள் உயிர்நுட்பவியல் படித்தவர்கள். வேறு நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிடுவீர்கள். அதனால் உங்களை நம்பி வேலை கொடுக்க முடியாது என்றும் சொன்னார்கள். அதாவது நான் சும்மா தற்போதைக்கு இதுல சேர்ந்திட்டு வேற "நல்ல" வேலை கிடைத்துச் சென்று விடுவேனாம். வேலை தரமுடியாது என்பதைக் காட்டிலும் இந்தக் காரணம் ரொம்பவே மோசமான உறுத்தலாக இருந்தது.

அதனால்தான் சொல்கிறேன். இளநிலை படித்தவுடன் வேலை தேடத் துவங்கினால் ஒரிரு வருடங்களுக்குள் எதாவதில் நுழைந்து நிலைத்து விடலாம். ஆனால் பின்பொருநாளில் நாம் படிக்காமல் விட்டு விட்டோமென்று வருந்தக் கூடாது. யாரையும் குற்றம் சொல்லக்கூடாது. வேலை பார்த்துக் கொண்டே இன்னும் விருப்பமிருந்தால் தொலைதூரக் கல்வியில் படிக்கலாம். ஏனெனில் கையில் காசைப் பார்த்துவிட்டு பின்பு வேலையை விட்டுவிட்டு படிப்பதற்கெல்லாம் மனம் வராது. நாம் வேலை தேடும் வரையில்தான் நமது பட்டத்திற்கு மதிப்பு. ஒரு இடத்தில் வேலையில் சேர்ந்துவிட்டால் பின்பு வேலை அனுபவச் சான்றிதழுக்குத்தான் மதிப்பு. அதுதான் உங்களது தகுதியைச் சொல்லும்.  

Download As PDF
Bookmark and Share

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 4


உயிர்நுட்பவியல் போன்ற அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவருக்கான வேலைவாய்ப்புகள் குறித்துப் பார்ப்போம்.

1 . இந்தியாவில PHD
இந்தியாவில நீங்கள் PHD  தொடர வேண்டும் என முடிவெடுத்தால் ஆபத்து அதிகம். IIT போன்ற சிறந்த அரசு கல்வி நிறுவனங்களில் கிடைத்தால் தாராளமாகத் தொடரலாம். அல்லது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒரு சில கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களில் JRF, SRF போன்றவற்றில் இடம் கிடைத்தால் நிலைத்துக் கொள்ளும் சாத்தியம் உண்டு. இதற்கு சிறந்த மதிப்பெண் சராசரியும், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவும் வேண்டும். மற்றபடி நான் கேள்விப்பட்டவரையில் பல்கலைக்கழகங்களில் PHD செய்பவர்கள் மூக்கால் அழுகிறார்கள். சிலர் 5 வருடங்களுக்கு மேலாகியும் முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இந்தப்பக்கம் தலைவைத்துப் படுத்துவிடக்கூட வேண்டாமென்று எச்சரிக்கிறார்கள். மரபியலில் (Genetics) PHD முடிக்க 8 வருடங்கள் ஆகும் என்றும் கேள்விப்பட்டேன். இதில்லாமல் வழிகாட்டியின் (Guide) இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டும், கண்ணியமற்ற முறையில் நடத்துவார்கள் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள். உளஅரசியலையும் சமாளித்தாக வேண்டும். என்னுடைய கல்லூரி விரிவுரையாளருக்குத் தெரிந்த பேராசிரியரொருவருக்கு PHD  மாணவராக சேரவேண்டுமெனில் மகிழுந்து (Car)  ஓட்டத் தெரிந்திருக்க வேண்டுமாம்.

2. வெளிநாடுகளில் மேற்கல்வி, ஆராய்ச்சியைத் தொடர்வது ;

நீங்கள் வசதியானவராக இருந்தால் மேலைநாடுகளில் ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உள்ளதைக்காட்டிலும் அதிகம். வெளிநாடு செல்லும் எண்ணமிருந்தால் இளநிலைப் பட்டம் பெற்றவுடன் சென்றுவிடுவது நல்லது. நீங்கள் முதுநிலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அங்கே சென்று மீண்டும் ஒரு முறை முதுநிலைப்பட்டம் படிக்க வேண்டும். இங்கே 2 வருடங்களை வீணாக்க வேண்டாம்.

அல்லது நேரடியாக ஆராய்ச்சிக்கல்வியில் இடம் பெறவேண்டுமானால் முதுகலைப்பட்டம் பெற்ற பின்பு நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஆராய்ச்சி குறித்து ஒரு அறிக்கையை உருவாக்க வேண்டும். அதில ஆராய்ச்சியின் தலைப்பு, நோக்கம், செய்முறை குறித்த வெள்ளோட்டமான விளக்கங்கள் இருக்க வேண்டும். இதை நீங்கள் மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சிகள் எந்த கல்வி, ஆராய்ச்சி நிறுவங்கள் வழங்குகின்றன என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களிடம் அனுப்ப வேண்டும். உங்களது திட்டம் அவர்களுக்குப் பிடித்திருந்தால் உங்களை அள்ளிக் கொள்வார்கள். Stipend உடன் ஆராய்ச்சியையும், கல்வியையும் தொடரலாம். இதில் நன்கு பதிப்பெண்கள் பெற்றிருந்தவர்கள்,  வருடக்கணக்காக படித்து தமது அறிவைப் பெருக்கியும் விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெயருக்காக விண்ணப்பித்து அதிர்ஸ்டவசமாக இடம் கிடைத்தவர்களும் இருக்கிறார்கள்.

3. கல்லூரி விரிவுரையாளராவது;

பெரும்பாலானோரின் கடைசிப் புகலிடமாகவும், பலரின் விருப்பமான தேர்வாகவும் இருக்கிறது கல்லூரி விரிவுரையாளர் பணி. நிறைய தனியார் கல்லூரிகளில் எப்போதும் பணியிடம் காத்திருக்கும். ஓரளவு பாடம் குறித்த அறிவும், ஆங்கிலமும் இருந்தால் போதுமானது. இவைகளில்லாமலும் மாவாட்டிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. சிரமமின்றி வேலையும் கிடைக்கும். ஊதியம் ரூ 6000 முதல் 8000 வரை கிடைக்கும். ஊதிய உயர்வு இருக்காது. ஒரு வேளை நீங்கள் துறைத்தலைவராக (HOD) உயரும்போது கிடைக்கும். ஒரு நாளைக்கு 3 அல்லது 5 வகுப்புகள் இருக்கும். வாரவிடுமுறை, பருவத்தேர்வு விடுமுறை என அனைத்து வகையான விடுமுறை நாட்கள் உண்டு. இருட்டும் முன்பே வீட்டுக்கும் போய்விடலாம். இது பெண்களால் பெரிதும் விரும்பப்படும் பணியாக இருக்கிறது.  மாணவர்கள் எதாவது ஐயம் கேட்டால் சமாளிக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். அப்படியே பகுதி நேர PHD செய்யலாம்.

இவையல்லாமல் பொதுவான வேலைவாய்ப்புகள் என்று பார்த்தால்,

Medical Transcription
Medical Representative
Medical Coding
Pharma  நிறுவங்களில் Marketing Executive

போன்ற பணிகள் உள்ளன. மேலும் சில உயிர்நுட்பவியல், இரசாயன நிறுவனங்கள், ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், வேதிப்பொருகள், இரசாயனத் திரவங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு outsourcing செய்யும் சேவைத்துறை நிறுவனங்களில் வேலை கிடக்கும் வாய்ப்புகள் உண்டு.

பயோகான் போன்ற பெரும் நிறுவனங்களில் ஏறக்குறைய ரூ 9௦௦௦௦ வரை செலுத்தி பயிற்சி கொடுத்து வேலையும் கொடுக்கும் ஒரு திட்டம் இருந்தது. இது போன்ற நிறுவனங்களில் ரூ 3௦௦௦௦ - 50000 வரை கொடுத்து வேலைக்குச் சேர்கிறார்கள். சம்பளம் ரூ 6௦௦௦ வரையில் கிடைக்கும். வேலைப்பளு தாங்காமல் ஓடியும் போய்விடுகிறார்கள். இது போன்று முன்பணம் வாங்காமல் வேலைக்குச் சேர்க்கும் சில நிறுவனங்கள் நமது சான்றிதழ்களைக் கேட்கிறார்கள் கூடவே ஓரிரு வருட கட்டாய ஒப்பந்தமும் போட்டுக்கொள்ள வேண்டும்.ஒப்பந்தக் காலம் முடிந்து அவர்களின் விருப்பப்படிதான் நாம் தொடர்ந்து வேலை செய்வதும் அல்லது வெளியேறுவதும் நடக்கும்.   சட்டப்படி ஒப்பந்தம் கோரக்கூடாது எனினும் வேலையில்லாப்பட்டதாரிகளின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 
Download As PDF
Bookmark and Share

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 3



ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கிய கதைதான் இந்த படிப்புகள், அவை தரும் வேலைவாய்ப்புகள் குறித்த விளம்பரங்கள். இது போலத்தான் உயிர்நுட்பவியலும் விளம்பரப்படுத்தப்பட்டது. கொஞ்சம் அதிகமாக மேலே போய் தகவல்தொழில்நுட்பத்துறைக்கு அடுத்த அளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை என்ற்வாறு செய்திகள் நிரம்பி வழிந்தன. பல்மருத்துவர், பலகாரக்கடைக்காரர் எனப் பலதரப்பட்ட மனிதர்களும் "நல்ல கோர்ஸ் எடுத்திருக்கீங்க தம்பி" என்று கூறியதிலிருந்தே எந்தளவிற்கு இது போய்ச்சேர்ந்திருந்தது என்பதையும் கண்டேன். ஆனால் படிக்கிற காலத்திலேயே இதெல்லாம் தேறாது என்பதைக் கண்டுகொண்டோம். 

நான் இரண்டாமாண்டு படித்தபோது, முதுகலைப்பட்டம் முடித்து பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த senior ஒருவர் "75% வச்சிருக்கேன். வேல ஒண்ணுமே இல்லடா. தயவு செஞ்சு வேற எதாவது படிச்சுத் தொலைங்க" என்று புலம்பிச் சென்றுவிட்டார். போதாக்குறைக்குக் கல்வி ஆலோசகரான ஒருவர் வந்து எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை அளிக்கும் உயர்கல்வி குறித்த ஆலோசனை வகுப்பொன்றை நடத்தி, உயிர்நுட்பவியல் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது, எனவே வேறுபடிப்புகளைத் தேர்வு செய்யுங்கள் என்று குண்டைப் போட்டுவிட்டுச் சென்று விட்டார். இளங்கலையில் life science  படித்த் சிலர் MBA - வை தேர்ந்தெடுத்துத் தப்பிவிட்டார்கள்.

அடுத்த கூத்து, இள்நிலை (BSc) தாவரவியல் (Botany) பிரிவில் படிப்பதற்கு அதிகம் பேர் சமீபகாலங்களில் ஆர்வம் காட்டாததினால், சென்னை மாநிலக்கல்லூரியிலும், கிறித்தவக் கல்லூரியிலும் சில பாடங்களில் மட்டும் மாற்றங்கள் செய்துவிட்டு தாவர உயிரியியல் மற்றும் தாவர உயிரிநுட்பவியல் (Plant Biology & Plant Biotechnology)  என்று மாற்றி வைத்துவிட்டார்கள். 

பொதுவாக life science  பயிலும் மாணவர்களுக்கு இளங்கலை கல்லூரிக்காலங்களில் PHD  ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டுமென்ற ஆவல் இருக்கும். பின்பு முதுகலைப் பட்டம் முடிப்பதற்குள் அது போய்விடும். காரணம் PHD மாணவர்களின் அனுபவங்களைக் கண்டும் கேட்டும் பயந்து விடுவார்கள். ஏதாவது பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டப் படிப்பில் இடம் கிடைத்தால் அது எதிர்காலத்தில் ஆராய்ச்சி, அல்லது வேலைகளில் சேர்வதற்கு முன்னுரிமை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தோம். அதுவும் ஒருவிதமான உண்மையற்ற கருத்துதான் என்று பின்னாட்களில் நண்பர்களின் அனுபவத்தினால் சொல்லக்கேட்டேன். 


நம் நாட்டில் PHD  ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டுமென்றால் ஒரு அனுபவம் வாய்ந்த பேராசிரியர் நமக்கு வழிகாட்டியாக (guide) இருக்க வேண்டும். அவர் பல்கலைக்கழகத்திலோ அல்லது அரசு, தனியார் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்தால் நன்று. அவருக்குக் கீழேயே நமது ஆராய்ச்சியைத் தொடங்கலாம். இது போன்ற நிறுவங்களில்தான் JRF ( Junior Research Fellow ), SRF(Senior Research Fellow) மற்றும்  PHD  மாணவர்களுக்கான் உதவித்தொகையும் கிடைக்கும். வேலை பார்த்துக்கொண்டே மேற்படிப்பைத் தொடர்வது போல. இது போன்ற வாய்ப்புகள் குறைந்தபட்ச்மாக் நாம் பல்கலைக்கழகத்தில் முத்கலைப்பட்டப் படிப்பில் இடம் பெற்று அதிலேயே முடித்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்களில் தேர்ச்சி பெற வேண்டும். 


உயிர்நுட்பவியல் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகளில் மிகவும் மதிப்பு வாய்ந்தது டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வாகும். இந்தியா முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதை எழுதுவார்கள். வெவ்வேறு மாநிலங்களிலுள்ள பல்வேறு பல்கலைக்கழக்ங்களில் சில் இடங்கள் மட்டும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 இடங்களும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் 3 இடங்களும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் இந்தியா முழுக்க முப்பது இடங்கள் மட்டுமே, நுழைவுத்தேர்வு இந்திய அளவில் பல்லாயிரம் பேர்கள் எழுதுவார்கள். அத்ற்கு ரூ. 1000 வரை செலவாகும்

அடுத்ததாக் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வுகள் இரு பிரிவாக நடக்கும். பல்கலைக்கழக்த்தின் சார்பாகவும், மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் என இருவேறு தேர்வுகள் நடக்கும். இரண்டிலும் 20 இடங்கள் மட்டுமே. இதற்கும் ஏறக்குறைய ஆயிரம் பேர் வரையில் எழுதுவார்கள். அறிவியல் பிரிவில் இத்தனை பேர் போட்டியிடும் படிப்பு உயிர்நுட்பவியல் மட்டுமே ! அடுத்ததாக பாரதியார் பல்கலைகழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி  அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்ற வரிசையில் நுழைவுத்தேர்வுகளில் போட்டி இருக்கும். இவைகளில் பெரிய மனிதர்களின் பரிந்துரைகளின் மூலம் இடங்களைப் பிடித்து விடுவார்கள், வெறும் கண்துடைப்பிற்காக நுழைவுத்தேர்வுகளை நடத்துகிறார்கள் என்ற செவிவழிச்செய்தியும் உண்டு. 

இதற்கு மேலும் இதையெல்லாம் தாண்டி இதில் இடம் கிடைக்க 80 - 85 % அளவிலான மதிப்பெண் சராசரியாக இருக்க வேண்டும். துறைசம்பந்தமான நுட்பமான அறிவும் கொண்டிருக்க வேண்டும். நுழைவுத்தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற வேண்டும். 
Download As PDF
Bookmark and Share

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 2

பள்ளியில் படிக்கிற காலத்தில் மருத்துவமோ, விவசாயமோ அல்லது ஏதாவதொரு அறிவியல் தொடர்பான துறைகளில் மேற்படிப்பு தொடரவேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. மேனிலைப்பள்ளியில் உயிரியியல், கணிதம் பிரிவில் படித்தேன்( 1 st group ).  கணிதம் சுட்டுப்போட்டாலும் வராது என்பதாலும் உயிரியல் எனக்கு விருப்பமான பாடம் என்பதாலும், பொறியியலில் சேர்வதைத் தவிர்த்துவிட்டு கலை அறிவியல் கல்லூரிகளில் ஏதாவ்தொன்றில் உயிர்நுட்பவியல் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

கல்லூரிகளில் சேர்வதெனில் ஓரளவாவது தரமான, பரவலாக அறியப்பட்ட கல்லூரிகளில் படிப்பது நல்லது என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு ஓரளவிற்கு இவ்விதி பொருந்தும். அவைகளில் ஒரு சில மட்டுமே வளாகத்தேர்வுக்கு பெரிய நிறுவனங்களைக் கொண்டு வருகின்றன. கலை அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு(MBA, MCA தவிர்த்து) படிப்பு தொடர்பான வேலைவாய்ப்பும், நிறுவனங்களும் அரிது ஆகையால் எந்தக் கல்லூரியில் படித்தாலும் பெரிய வேறுபாடில்லை.ஆனாலும் மொத்தமாக நிராகரிக்க முடியாதபடி சில கல்லூரிகளில் சேவைத்துறை (BPO), அழைப்பு நடுவம்(Call Center) ஆகியவற்றுக்கான வேலைவாய்ப்புகளுக்கான சில கல்லூரிகளில் நேர்முகத் தேர்வுகளும் நடக்கின்றன.

சென்னையில் லயோலா, மாநிலக் கல்லூரி, கிறித்தவக்கல்லூரி, திருச்சியில் செயின்ட் ஜோசப், பிஷப் ஹீபர், கோவையில் பூசாகோ (PSG) போன்ற சில கல்லூரிகளில் படிப்பது வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறமுடியும், நமது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இயலும், அங்கு படிப்பதே ஒரு பெருமைஎன்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன். ஒரளவிற்கு இது உண்மை. இவைகளில் சேர்வது மிகவும் கடினம், மிக அதிக மதிப்பெண்கள் அல்லது பெரிய புள்ளிகளின் பரிந்துரை (நன்கொடையும்) தேவை. மேற்படி சமாச்சாரங்கள் நமக்கு உதவாதென்பதால் அடுத்த சுற்றில் ஓரளவு பெரிய பெயர் பெற்ற கல்லூரியில் சேர்ந்து விடத் தீர்மானித்தேன். பொதுவாக இவைகளில்தான் ஆய்வகங்கள் வசதிகளுடன் இருக்கும்.  ஊர்ப்பக்கம், கிராமத்திலிருந்து வரும் பெற்றோர்கள், மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் பிரம்மாண்டக் கட்டிடங்களிலேயே பிரமித்து விடுவார்கள், சேரவும் முனைவார்கள். இது போன்ற கல்லூரி நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் பெரும் தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக, பினாமிகளாக, இருப்பார்கள். சில சமயம் முன்னாள் சாராய வணிகர்களாக, கட்டப்பஞசாயத்துக்காரர்களாகவும் இருப்பார்கள். இதனால்தான் பணம் வெள்ளமெனப் பாய்ந்து அறக்கட்டளைகளையும், கல்லூரிகளையும் நிறுவியிருப்பார்கள். இவர்களின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் கட்டிடங்கள் அமெரிக்க, ஐரோப்பியப் பலகலைககழகங்களுக்கு நிகராகக் காணப்படும்.

முதன் முதலில் சேர்வதற்காக நான் கல்லூரிக்குள் செல்லும் போது வாயிற்காவலர், “இங்கே எல்லாமே இருக்கும் போங்க, குழந்தையை LKG -ல சேர்த்தா PHD முடிக்கிற வரைக்கும் எல்லா வசதியும் இருக்குது” என்று சொல்லியனுப்பினார். பெரிய படிப்புனு எல்லாரும் சொல்றாங்க, மதிப்பெண் பத்தாது என்று சொன்னாலோ, 40 பேர் முன்னாடி ஏதாவது நேர்காணல் வைத்து ஆங்கிலத்தில் கேள்வி எதுவும் கேட்டு விட்டாலோ என்ன செய்வது என்று அச்சத்துடனேயே சென்றேன்.  அப்படி எதுவும் நடக்கவில்லை. உள்ளே சென்றபோது சுடச்சுட வெவ்வேறு படிப்புகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. மதிப்பெண் எவ்வளவு என்று கூடக் கேட்கவில்லை. சேர்க்கை முடியப்போகிறது, நாளைக்கு வந்தால் கூட இடம் கிடைக்காது என்கிற பாணியில் பேசினார்கள். பிறகென்ன தயக்கம் சேர்வதற்கு? சேர்ந்தாயிற்று.

சேர்ந்த பின்புதான் தெரிந்தது, அதே வசனத்தை (சேர்க்கை முடியப்போகிறது, நாளைக்கு வந்தால் கூட இடம் கிடைக்காது) பலரிடம் சொல்லியிருக்கிறார்கள். வகுப்பில் 40 வதாக சேர்ந்தவரிடமும் அதே வசனம் பேசியிருக்கிறார்கள், அவனுக்குப் பிறகு 50 பேரைச் சேர்த்துவிட்டார்கள். அவ்வருடம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 91. கல்லூரி வேலைநாள் தொடங்கும் முன்பே நாளைக்கே  சேர்க்கை முடிந்து விடும் என்றவர்கள் கல்லூரி தொடங்கி சில மாதங்கள் வரையும் சேர்த்துக் கொண்டே இருந்தார்கள். கேரளாவிலிருந்து நிறையப் பேர் வந்திருந்தனர்.கட்டிடங்களின் பிரம்மாண்டமும், ஆய்வகங்களின் மினுமினுப்புமே அவர்களையும் ஈர்த்திருக்கக்கூடும். அதுதான் காரணம் என்று அவர்களே பின்னாட்களில் சொன்னார்கள். அம்மாணவர்களின் அப்பாவோ, சிற்றப்பாவோ, மாமாவோ ஏதோவொரு கல்விக்கண்காட்சியில் இக்கல்லூரியின் prospectus - ஐ வாங்கிப் பார்த்தார்கள். பின்பு இதிலேயே சேர்ந்து விடுமாறு வலியுறுத்தினார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

கேரளா மாணவர்களினால்தான் பல தமிழகக் கல்லூரிகளின் வண்டியே ஓடுகிறது. கேரளக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் தமிழகத்துடன் ஒப்பிடும்போது மிகவும் மோசம். எனவே அவர்கள் இங்கு படிக்க விரும்புகிறார்கள்.  ஓரளவு வசதியுள்ள நடுத்தரவர்க்கத்தினரின் பிள்ளைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டில்தான் படிக்கின்றனர். இவர்கள் தவிர ஆந்திர, வட இந்திய மாணவர்களும் உள்ளனர். வட இந்திய மாணவர்களைச் சேர்க்க சில கல்லூரிகளின் நிர்வாகங்கள் தத்தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் கொடுத்து முகவர்களாகவும் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 10 வருடங்களில்தான் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வரத்துவங்கினார்கள். நான் சேர்ந்தபோது மணிப்பூரிலிருந்து மாணவர்கள் கூட்டமாக வந்திருந்தார்கள். அவர்களை அமுக்கக் கல்லூரியின் முகவர்கள் மிகப்பெரும் கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். அக்கல்லூரி ஈரோட்டிற்கு அருகிலுள்ளது. இதை சென்னையிலிருந்து 10 நிமிட பேருந்துப் பயணத்தில் சென்றுவிடலாம் என்பதாக அளந்திருக்கிறார்கள். இவர்களும் சென்னைக்குப் பக்கத்தில்தானெ என்று நம்பிவந்து விட்டார்களாம். எப்படி இணையத்தில் கூட தேடிச் சரிபார்க்காமல் வந்தார்களோ?

இப்படி கோழி அமுக்குவது போல் ஆட்களை வளைத்து வளைத்துப் போடுவதால்தான் தொடர்ந்து பல கிளைகளையும் தொடக்குகிறார்கள். தனியார் கல்லூர்க்ளின் அறக்கட்டளைகள் பலவும் பள்ளி தொடங்கி கலை அறிவியல், பொறியியல்,   பல் மருத்துவம், பாலிடெக்னிக், ஐடிஐ, ஆசிரியர் பயிற்சிப்பள்ளி என மருத்துவம் தவிர்த்து அனைத்துப் துறைக்கல்வியையும் "வழங்குகின்றன". வருடம் முழுக்க புதுபுதுக் கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன. சென்னையிலுள்ள SRM  கல்லூரி வட இந்தியாவில் புகழ் பெற்றதைத் தொடர்ந்து அங்கும் (டெல்லி) ஒரு கிளை தொடங்கப்பபட்டது.

Download As PDF
Bookmark and Share

Post Comment

உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 1

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? இதை தேர்ந்தெடுத்துப் படித்தால் எதிர்காலம் நன்றாக  இருக்கும் என்ற விளம்பரங்கள் மலிந்துவிட்ட நிலையில் பெரும்பான்மையான பட்டப்படிப்புகள் கல்வி நிறுவனங்களின்  வெறும் வணிக நோக்கத்திற்காகவே இருப்பதாகவே தோன்றுகிறது. அதில் ஒன்று உயிரிநுட்பவியல் அல்லது உயிரித்தொழில் நுட்பவியல் என்ற சொல்லுக்குக் கவர்ச்சி அதிகம். எங்கள் பள்ளியில், கல்லூரியில் படித்தால் தரமான கல்வி வளமான எதிர்காலம் என்று கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவங்களைப் போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்ற அளவில் கல்வி வணிகப் பொருளாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை பணத்தைக் கொட்டியழுது படித்து முடித்தும் வேலையில்லாமல் போவது. அது குறித்து எனது அனுபவத்திலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. 
  
உயரகல்வியில் மருத்துவம், பொறியியல் தவிர்த்து அதிகம் பேர் படிப்பது அல்லது படித்தது (குறிப்பிடத்தக்க அளவில் கடந்த 10 வருடத்தில்) கணினி அறிவியல் தொடர்பான பிரிவுகள், அறிவியல் துறைகள் எனக் கொண்டால் அதில் முதலில் வருவது உயிரிநுட்பவியல் (Biotechnology ). இந்தப் படிப்பு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. இந்த உயிரிநுட்பவியல் பிரிவில் பயின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் வேலைவாய்ப்புகளின் அவர்களுக்கு இடஒதுக்கீடு தருமளவில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லா கிராமங்களிலும் ஒர் உயிரிநுட்பவியல் பட்டதாரி இருக்கக்கூடும்.

மருத்துவம், பொறியியல் பயில இடம் கிடைக்காதவர்கள், படிக்க விரும்பாதவர்கள், அல்லது அதிகம் செலவு செய்து படிக்க முடியாதவர்களின் புகலிடமாக இருக்கிறது உயிரிநுட்பவியல்.  சில காலமாகவே உயிரிநுட்பவியல் இந்தியாவில் எதிர்காலத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கிவிடும் எனும் கருத்துக்கள் பரப்பபட்டன. கல்லூரிகளின் விளம்பரங்கள் தமது கல்வி நிலையங்களில் உயிரிநுட்பவியல் துறை சிறந்த உள்கட்டமைப்புடைய நவீன ஆய்வகங்களுடன் கொண்டுள்ளது என்று காட்டிக் கொள்வதில் கவனமாக இருந்தன. ஊடகங்கள் அவ்வப்போது உயிரிநுட்பவியல் மூலம் வரப்போகும் வேலைவாய்ப்புகளைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டன. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்திற்கு அடுத்தளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக உயிரிநுட்பவியல் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் உயிரிநுட்பவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் வளர்ந்த நாடுகளில் மட்டுமே குறிப்பிட்ட அளவில் இருகிறது. இந்தியாவில் மிகச்சிறு அளவிலேயே இருகிறது. 


பெங்களூரு நகரில்தான்  உயிரிநுட்பவியல் நிறுவனங்கள் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கில் உள்ளன.  சென்னை , ஹைதராபாத், டெல்லி போன்ற மற்ற பெருநகரங்களில் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் உள்ளன. இவை  மென்பொருள், சேவைத்துறை நிறுவங்களில் நடப்பதுபோல் அதிகளவான நேர்காணல்களை நடத்துவதில்லை.இவைகளில் சேர்வதற்கு முன் அனுபவம் தேவை. மேலும் தக்க நபர்களின் பரிந்துரையும் தேவை. சில சிறிய நிறுவனங்களில் சேர இயலும் ஆனால் ஊதியம் என்று பார்த்தால்  பெரிய அளவில் கிடைக்காது, ரூ 3000 தொடங்கி 6000 வரையில் இருக்கும். இது போன்ற ஆய்வகங்களில் வருடக்கணக்கில் இருந்தாலும் பத்தாயிரத்தைப் பார்க்க முடியாது. நேர்முகத்தேர்வுக்காக செல்லும் போது சில நிறுவனங்களின் வாயிற்காவலாளியே "உயிரிநுட்பவியல் பட்டதாரிகளுக்கு தற்போதைக்கு தேவையில்லை" என்று திருப்பியனுப்பியதும் உண்டு. வேலைவாய்ப்புத் தகவல்களைத் தரும் சில இணையத்தளங்களில் சில நிறுவனங்களின் நேர்முகத்தேர்விற்கான் தகுதிகள் என்ற இடத்தில் "உயிரிநுட்பவியல் பட்டதாரிகள் தவிர", உயிரிநுட்பவியல் பட்டதாரிகள் தேவையில்ல" (biotech graduates are not required) என்ற வாசகங்களும் இருந்ததுண்டு. 


மேற்படி முதுகலைப்பட்டம் பெற்ற பின்பும் வேலை கிடைக்காமல் இருப்பதொன்றும் புதிதில்லைதான். ஆனால் உயிரிநுட்பவியல் படிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம். அனைத்துக் கல்லூரிகளிலும் உயிரிநுட்பவியல் பிரிவில் படிப்பிற்கான கட்டணமே அதிகம். சில கல்லூரிகளில் கட்டாய நன்கொடையும் உண்டு. 5 வருடங்கள் முன்பு நான் படிக்கும் போதே இளங்கலைப்பட்டம் முடிக்கவே ஒரு இலட்சத்திற்கும் மேலாக செலவானது. முதுகலைப் பட்டத்திற்கோ பருவக் கட்டணமாக குறைந்தபட்சம் 20000 தொடங்கி 50000 வரையில் கல்லூரிகளைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். இது தவிர ஒவ்வொரு வருடமும் ஆய்வகத்தில் உடைந்த கண்ணாடிக் குடுவைகள் , பயன்படுத்திய இரசாயனத் திரவங்கள் ஆகியவற்றுக்காக ஆயிரக்கணக்கில் அபராதம் பெறப்படும்.

எத்தனை செலவு செய்து படித்தாலும் வேலைக்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இது உயிரிநுட்பவியல் மட்டுமன்றி உயிர்த்தகவலியல்,  உயிரிவேதியியல், நுண்ணுயிரியியல்   போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.   
Download As PDF
Bookmark and Share

Post Comment