தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 18 ஈழத்தமிழ் இன அழிப்பு நினைவு நாள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்து 10 வருடங்கள் கழித்து, இன்று இன்னொரு சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்கள் மேல் கலவரங்கள் தொடங்கியிருக்கும் நிலையில்,

த்து வருடங்களுக்கு முன்னர் நினைத்துப் பார்த்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. அப்போதுதான் இணையம் பயன்படுத்துவது அறிமுகமாயிருந்தது. பணிக்குச் சேர்ந்த புதிதில் வேலையை முடிக்க முடியாமல், ஈழப்போரின் செய்திகளைக் காண ஆர்வம் மிகுதியால் இடையிடையே தமிழ்மணம், புதினம், பதிவு, தமிழரங்கம், வினவு உட்பட பல இணையத் தளங்களில் படித்து நொந்து போய் இருந்த காலம். 

போர் நின்றால் போதும் என்ற நல்ல செய்திக்காக ஏங்கி ஏங்கி பல்வேறு வகையான போரின் பேரழிவைக் காட்டும் புகைப்படங்களும் மக்களின் துயரங்களும் இடம்பெயர்வுகளும் கையறு நிலையும் தமிழ்நாட்டில் இருந்த நம்மைப் போன்றவர்களின் நிம்மதியையே பறித்தன. மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கின. புலிகள் ஏதேனும் திருப்பு முனையை ஏற்படுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மனம் மாறி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய நடக்காது என்று தெரிந்து போனது. 

வரலாறும், அவர்களின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்ததால், உணர்ச்சிவயப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளனாக/எதிர்ப்பாளனாக இல்லாத போதும், புலிகளை அழிக்க முடியாது என்ற பெரும் நம்பிக்கை இருந்த போதே, போரின் போக்கானது புலிகள் இல்லாமல் ஆக்கப்படுவார்கள் என்று உள்ளுணர்வு மூலம் சொல்லிக்கொண்டே இருந்தது.  இதை என்னுடைய பாமரத் தமிழ் மனம் ஏற்காமல் இறைஞ்சிக் கொண்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பெருமிதமாகவே அவர்களின் குற்றங்களைத் தாண்டி ஏற்றி வைத்து இருந்தேன். 

பொதுமக்களின் அழுகையும், குழந்தைகளின் குதறப்பட்ட உடல்களும், படுகாயமடைந்த மனிதர்களும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும், புலிகளின் படுதோல்வியும் விரக்தியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. இனி ஈழம் என்னவாகுமே என்ற கேள்வியும் வாட்டியது. 

போரின் கொடுந்துயரை நமக்குக் கொடுத்தன. ஈழப்போர் முடிந்தும், 6 மாத காலம் வரை அரைப் பைத்தியம் பிடித்த நிலைதான் இருந்தது. அதற்குப் பிறகும் மேன் மேலும் வந்து கொண்டிருந்த மோசமான செய்திகள் இராணுவத்தால் கொலை செய்யப்படும் வீடியோக்கள் என துயரம் அதிகரிக்கச் செய்யும் நிகழ்வுகளாகவே இருந்தன. 

                                           

ஆர்க்குட் இல் இருந்து சேமித்த சில புகைப்படங்களைப் பகிரத் தோன்றியது.      

                                            

ஈழப்போரின் இறுதி நாட்களில் முல்லைத் தீவுக்குள் தோல்வியின் விளிம்பிலிருந்த புலிகளை அழிக்கும் போர்த் திட்டத்தைப் பற்றிப் பார்வையிட வந்திருந்த வேற்று நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், வங்கதேசம், மாலத்தீவுகள், இந்தியா, பாகிஸ்தான்) பாதுகாப்பு ஆலோசகர்கள். இதில் இந்தியா பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக சிங்கள இராணுவத்தினரின் திட்டத்தை கவனிக்கின்றனர். 

புலிகளும் மக்களும் உடல் சிதறிச் செத்த பல புகைப்படங்களால் நான் அடைந்த அதிர்ச்சியைக் காட்டிலும், இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் என்று பகைவர்களாக இருக்கும் நாடுகள் எப்படியெல்லாம் ஒன்றாகின்றனர் என்று அதிர்ச்சியடைந்தேன். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் இப்புகைப்படங்கள் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
#Justice4TamilGenocide
Download As PDF
Bookmark and Share

Post Comment

விடுதலைப்புலிகளின் துரோகம் ??

தற்போது எரிக் சோல்ஹைம் வெளியிட்டிருந்த கருத்தின் மூலம் பிரபாகரனின் தவறான முடிவு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு வழிவகுத்தது என்று தெரியவருகிறது. ஆனால் எரிக் சோல்ஹைம் புலித் தலைவர்கள் சரணடையும் போதும் உடனிருந்தவர். அதன் பின்பும் அவர்கள் கொல்லப்பட்டார்களே. அதனால் இவர் சொன்னது முழுவதும் உண்மை என்றும் சொல்ல முடியாது.

2009 ஆம் ஆண்டில் போர் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஜனவரி மாதம் புலிகளின் தலைநகரான  கிளிநொச்சி வீழ்கிறது சிங்கள ராணுவத்திடம். அங்கிருந்து புலிகள் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்தனர். புலிகளின் தோல்வியானது கிளிநொச்சியின் வீழ்ச்சியின்போதே ஏறக்குறைய முடிவானது. அதுவரையிலும் தற்காப்பு தாக்குதல் நடத்தி வருகிறோம். கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி வந்த புலிகள், 2008 - நவம்பர் மாதம் மாவீரர் நாள் உரையை பிரபாகரன் நிகழ்த்தினார். அதன் பின்பு ஒரு மாதம் வரை கிளிநொச்சியைத் தன் பிடிக்குள் வைத்திருக்க புலிகளால் முடிந்தது.

முல்லைத்தீவில் புலிகள் முடங்கியதும், இராணுவத்தின் தாக்குதல் மிகவும் உச்சத்தில் இருந்தது. உலக அளவில் இலங்கை அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தாமல் அவர்களை வெளியிட வேண்டும் என்றும் இலங்கை அரசு வற்புறுத்தி வந்தது. தமிழகத்திலும் எதிர்ப்பு வலுத்து வந்தது. தீக்குளிப்புகள் நடந்தன. அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பும் என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தன. மனித அழிவுகளை நிறுத்த ஏதாவது செய்யப்படும் என்பது போன்ற  நிலைப்பாடு மேற்கு நாடுகளில் நிலவியது.

இந்நிலையில் எரிக் சோல்ஹைமின் இவ்வாறு கூறியுள்ளார்.

//ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும்.

 ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.

அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள்.
//


இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி சரணடைந்திருந்தால் கொல்லப்படாமலிருந்திருப்பார்களா ? உறுதியாகக் கூறமுடியாது. இறுதியில் அனைவரும் வெள்ளைக்கொடியுடன் சரணடந்தவர்கள்தான் கொல்லப்பட்டார்கள். புலிகள் தலைவர்கள் மட்டுமல்ல, இவர்கள் மன்னிப்புக்குரியவர்களாகக் கூறப்பட்ட பல பொதுமக்கள், போரில் ஈடுபடாத புலிகள் எடுத்துக்காட்டாக இசைப்பிரியா போன்றவர்கள் கூட கொல்லப்பட்டார்கள்.

புலிகள் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமென இந்தியா உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புலித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும்வரை சரணடையும் முடிவை எடுக்க வில்லை. சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடக்கப்பட்ட பின்னர்தான் போர் ஒரிரு நாளில் பெரும் மக்கள் கூட்டத்தின் பிணங்களின் குவியலுக்குப் பின்னர் முடியும் தறுவாயிலிருந்தது. ஆனால் இந்நிலை ஏற்படும் முன்னரே புலிகள் சரணடைந்தனர், ஆனாலும் அதன் பின்னும் பெரிய அளவிலான படுகொலைகள் நடைபெற்றது. இன்று வரையில் அரசியல் கைதிகள் கொலைகள் நடந்தேறி வருகின்றன.

இந்தப் போர் புலிகளை முற்றிலும் அழிப்பதற்காகவே நடைபெற்றது. இருப்பினும் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகள் புலிகளை காப்பாற்றவும் முயற்சிகள் எடுத்தது போலக் காட்டிக் கொண்டனர். அவர்கள் உண்மையில் புலிகளைக்காக்க விரும்பினார்களா என்பது கேள்விக்குறி. புலிகளைக் காக்க விரும்பினாலும், அது அவர்களுக்குத் தேவையானவரையில்தான். ஒரு வேளை இலங்கை அரசுடன் ஒரு ஒப்புதலுக்கு இவர்கள் வந்த பிறகு அவர்களுக்கு அதோ கதிதான்.  இவர்கள் சொல்லும்படி சரணடைந்திருந்தாலும் புலித்தலைவர் பிரபாகரனுக்கும், பொட்டு அம்மனுக்கும் தூக்குதண்டனைதான் கொடுப்பார்கள். இல்லை அப்படியே கொன்றாலும் கொன்றிருப்பார்கள்.

இப்போது எரிக் சோல்ஹைம் புலிகள் நினைத்திருந்தால் பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்கிறார். இவர் சொன்னது ஜனவரி மாதம் இந்த திட்டம் ஆலோசனையில் இருந்தது என்பது. 2009 ஜனவரி மாதத்தில்தான் கிளிநொச்சி வீழ்ந்தது. புலிகள் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை. தோல்வியை நோக்கியிருந்தாலும் அப்போதும் போராடி மீளும் வாய்ப்பு இருந்தது. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளோ, இந்தியாவோ போரை நிறுத்தும் என்றும் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

புலிகளின் துரோகம்;

புலிகள் இறுதிப்போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர். இறுதியில் முல்லைத்தீவில் முடங்கிய போது இது அதிகமாக இருந்தது. தப்பிச் சென்றவர்களையும், செல்ல முயன்றவர்களையும் கொன்றனர். குழந்தைகளைப் பிடித்துக் கட்டாயமாக போருக்கு அனுப்பினர். இறுதியில் தம் உயிரைக் காக்கவே சரணடைந்தனர். இவையெல்லாம் உண்மை.

புலிகள் ஆரம்பம் முதலே உலகக் கொலைகாரன்களுடன் நட்பு பாராட்டியே வந்துள்ளனர். இந்தியாவிடம்தான் பயிற்சி பெற்றனர். இஸ்ரேலிடமும் பயிற்சி பெற்றனர். சர்வதேசம் என்று இவர்கள் நட்பு பாராட்டிய நாடுகள்தான் உலகின் பலநாடுகளின் மீது படையெடுத்தும், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை நசுக்கியும் வந்துள்ளனர். குறிப்பிட்ட நாட்டின் அரசுகள் தன்னுடன் ஒத்துழைக்காத போது அந்நாட்டு  அரசுக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவும் அளிப்பவைதான் இந்த சர்வதேசம் எனப்படும் ஏகாதிபத்திய வல்லரசுகள்.

புலிகள் இனவிடுதலைக்குப் போராடியதாகச் சொல்லிக் கொண்டாலும் மற்ற பயங்கரவாத இயக்கங்கள் நிகழ்த்திய அத்தனை இழிசெயலையும் பயங்கரவாதத் தாக்குதலையும் நடத்தினார்கள் 25 வருடங்களாக, பாசிஸ இயக்கமாகவே நடந்து கொண்டார்கள்

மற்ற இயக்கத் தலைவர்கள் போராளிகள் கொல்லப்பட்டது.

இந்திய உளவுத்துறையிடம் 50 கோடியை வாங்கிக் கொண்டு, அநுராதபுரத்தில், 146 சிங்கள அப்பாவிகளைக் கொன்று குவித்தனர். இதை சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காகவும், அரசைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைப்பதற்காகவும் எனவும் நியாயப்படுத்தினர். அப்பாவிகளின் மீதான புலிகளின் முதல் பயங்கரவாதத் தாக்குதல் இது.

பல பத்தாயிரம் இஸ்லாமியர்களை விரட்டி அவர்கள் சொத்தைக் கொள்ளையடித்தது. தமிழ் இஸ்லாமியப் பிரிவினையை அதிகமாக்கியது இந்த நிகழ்வு.

அரசியல் தலைவர்களைக் கொன்றது, ராஜீவ், ப்ரேமதாஸா, லட்சுமண் கதிர்காமர் போன்றோர் இதன் மூலம் மிகப்பரவலான வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டனர், இதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிப்பாக ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிலேயே தற்கொலைத் தாக்குதல் நடத்திக் கொன்றதன் மூலம் புலிகள் எதிர்களுக்கு தங்கத்தட்டில் வைத்து ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டனர். தனக்கான ஆதரவையும் இழந்தனர். இதனால் ஈழத்தின் மீதான் அனுதாபம் மறைந்து, இந்திய ராணுவத்தின், ராஜீவின் கொடூர முகம் மறைக்கப்பட்டு புலிகளின் மீதான வெறுப்பு அதிகரித்தது. பயங்கரவாத முத்திரை ஆழமாக விழுந்தது.

இதெல்லாம் போக சிங்களப் பொதுமக்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தினர். பேருந்து, இரயில், பொது இடங்களில் குண்டு வைத்தல், தற்கொலைத் தாக்குதல், மசூதி, புத்த விகாரைகளின் மீதான தாக்குதல் என எல்லாவற்றையும் செய்தனர். இது போன்ற எல்லாத் தாக்குதலையும் புலிகள்தான் செய்தார்கள் என்று கொள்ள முடியாது.

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் தமிழ்மக்களை வாக்களிக்க முடியாமல் தேர்தல் புறக்கணிப்பை நிகழ்த்தினர். இதன் மூலமாக சிங்கள இனவெறியர்களை ஆட்சியில் அமர வைத்தனர். ராஜபக்சேவிடம்  பணம் பெற்றுக் கொண்டு தேர்தலைப் புறக்கணித்தனர் புலிகள் என்ற செய்தியும் உண்டு.

போர் தொடங்கிய பின்பு, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரின் மீது நடத்தப்பட்ட (தோல்வியடைந்த)தற்கொலைத்தாக்குதல்.

இதெல்லாமே தமிழீழ விடுதலைக்கு உரம் சேர்ப்பதா அல்லது குழி வெட்டுவதா ?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை புலிகளுக்கு பல கடுமையான எச்சரிக்ககளை விடுத்தனர், சமாதான வழியில் தீர்வுகாண வலியுறுத்தினர். பின்பு புலிகளின் இவ்வகையான பயங்கரவாதத் தாக்குதலை வைத்து பயங்கரவாத இயக்கமாக அறிவித்தனர். இலங்கை அரசுக்கு ஆயுதமும் நிதியும் வழங்கினர்.

இதற்குப்பின்னரும் புலிகள் இவர்களை நம்பி இருந்தனர். இந்தியாவுடன் போரை நடத்தியும், ராஜீவைக் கொன்றபிறகும் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் என்றே கூறி வந்தனர். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கொழும்பின் மீது விமானத் தாக்குதல் நடத்துமளவிற்கு பலம் பெற்றிருந்த புலிகள், இந்திய ராணுவத்தையே எதிர்த்த புலிகள், சிங்கள ராணுவத்திடம் எப்படித் தோற்றுப் போனார்கள் என்பது பெரிய கேள்வி. இலங்கை அரசுக்கு உலக ஆதரவு ஆயுதம் படைகள் இருந்தது உண்மை. ஆனாலும் மிகவும் வலுவான புலிகளுக்கு அதை சமாளிப்பது என்பது முடியாத காரியம் இல்லை.

மரபுச் சமரில் முடியாது என்று தெரிந்த பின்னரும் தொடர்ந்து அதே வழியில் போரிட்டனர். கிளிநொச்சி வீழ்ந்த பிறகும் கரந்தடிப்போர் (கொரில்லாப் போர்) முறைக்கு மாறாமல் தந்திரோபாயப் பின்வாங்கல், தற்காப்புத் தாக்குலை நடத்திக் கொண்டிருந்தனர். கொரில்லாப் போருக்கு மாறாமல், தாக்குதலை நடத்தாமல் யாரோ இழுத்துப்பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர் போலத் தோன்றியது. இதோ தாக்குவார்கள், அதோ தாக்குவார்கள் புலிகள் என்று அனைவரும் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இறுதிவரையிலும் இருந்த இடத்திலிருந்தே போராடி, தானாகவே தோற்று சிங்கள ராணுவத்தின் வேலையை எளிதாக்கினர்.

இதையெல்லாம் புலித்தலைவர்கள் சிந்திக்காமலா இருந்த இடத்திலிருந்தே போரிட்டிருப்பார்கள்.

பிரபாகரனுக்கு அவ்வளவு அதிகாரம் இருந்ததா என்பது குறித்து, மேற்கண்ட செயல்களெல்லாம் பிரபாகரனால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டவைதானா ?  அல்லது வேறு யாருடையே யோசனை அல்லது உத்தரவின் பேரில் இதை செய்தனர் என்பது விடை தெரியாத கேள்வி. பிரபாகரனுக்குப் பின்னாலிருந்த அவரை ஆட்டுவித்தவர்கள் யார் இதெல்லாம் இன்னும் வெளிவராத ரகசியங்கள். இதனால்தான் பிரபாகரன் அதிகமாக முன்னிறுத்தப்படுவதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. பிரபாகரன் பிம்பத்தின் ஒளியில் பல துரோகிகள் ஒளிந்திருக்கிறார்கள். கருணாவை விட இவர்களின் பங்குதான் புலிகளின் தோல்வியை நிர்ணயித்திருக்கும்.

எரிக் சொல்வது போல் சரணடைந்திருந்தாலும் இப்போது நடப்பதுதான் நடந்திருக்கும். எரிக் யாருடைய பேராளராக இருக்கிறார். உலகம் முழுதும் போரை நடத்தும் வல்லரசுகளின் பேராளர். இவர்கள் கண்ணீர் வடிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக அல்ல. 30 வருடப் போர் பல பேருக்கு வணிகமாகியிருக்கிறது. ஆயுதம் வழங்குவதிலிருந்து, அபிவிருத்தித் திட்டங்கள் வரைக்கும். தமிழர்கள், சிங்களர்கள் இந்தியா சீனா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நார்வே எனப் பலர் இவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. நமக்குக் காட்டப்படுவதெல்லாம் பிரபாகரன், ராஜபக்சே இவர்களிருவர்தான். இவர்களின் கைகளால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள்தான் (புலத்து) புலிகள். இதற்கு பலி கொடுக்கப்பட்டவர்கள் புலித்தலைவர்கள், போராளிகள் மற்றும் மக்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கறுப்பு ஜூலை - நிமலரூபனின் வடிவில் இன்னும் தொடரும் ஈழத்தின் சோகம்

நான் பிறந்ததிலிருந்தே இதுவரையிலும் எந்த ஒரு நல்ல செய்தியும் கேள்விப்பட வில்லை. போர் முடிந்த மூன்று வருடங்களிலோ ஒரே வகையான செய்திகளை மட்டுமே கேட்க இயலுகிறது.

தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும்.

இந்தியா வலியுறுத்தும்.

தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் திரும்பப் பெற மாட்டாது.

சிங்களர் குடியேற்றம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விளக்கம் கோரி மக்கள் போராட்டம்

வெள்ளை வாகனத்தில் அடையாளம் தெரியாதவரால் கடத்தல்

இராணுவக் கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து ஏதாவது ஒரு கெழடு இலங்கைக்குப் பயணம், தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வலியுறுத்தல்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா நலத்திட்ட உதவி

மேற்கண்ட செய்திகள்தானே திரும்பத் திரும்பக் காண முடிகிறது. போர்க்குற்றம் ஆ ஊ எனப் பூச்சாண்டி காட்டியவர்கள், ஆவணப்படம் எடுத்தவர்கள், ஐநாவில் முறையிட்டவர்கள் மகிந்தவை விருந்தினராக அழைக்கின்றனர்.

29 வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகத்தில் உச்சத்தை ஈழம் சந்தித்தது. போர் முடிந்து 3 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் அவர்களது வாழ்வில் எந்த ஒரு வசந்தமும் வரவில்லை. சொல்லப்போனால் 29 வருடங்களுக்கு முன்பு அல்லது கலவரத்தின் பின் போர் தொடங்கிய பின்பு நடந்த கைதுகள் காட்டிக் கொடுப்புகள், சித்ரவதைகள், கொட்டடிக் கொலைகள் இன்னும் தொடருகின்றன. போர் மட்டும் இல்லை. சிங்களப் பேரினவாதம் இன்னும் வளர்ந்து தமது கோரப்பசிக்கு சிறுபான்மையினரை விழுங்கி வருகிறது.

எங்கும் இராணுவ ஆட்சியே நடக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 650 பேர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இதில் லலித், குகன் முக்கியமானவர்கள். சிங்கள இராணுவமே இதில் ஈடுபடுகிறது. ஆக்ரமிக்கப்பட்ட தமிழ் நிலங்களில் புதிது புதிதாக புத்தர் சிலைகளும், சிங்கள ராணுவமும் குடியேற்றப்படுகின்றனர். இஸ்லாமியரின் பள்ளிவாசல்கள் புத்த பிக்குகளின் தலைமையில் இடிக்கப்படுகின்றன.


தற்போது புலி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபன் என்ற இளைஞனின் கதை குட்டிமணி, ஜெகனின் கொலைகளை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் சிங்களர் தரப்பிலிருந்தும் சிலர் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் என்பது மட்டுமே நம்பிக்கை அளிக்கும் செய்தியாகும். 
இத்தனை பிரச்சனைகளை சிறுபான்மையினர் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இந்தியா தமிழீழம் என்ற கோரிக்கையை, விடுதலைப் புலிகளின் பேரால் தடை செய்திருப்பது என்ன வகை நியாயம் என்பது நன்றாகவே புரிகிறது. இதற்குக் கருணாநிதியைச் சாடிப் பயனில்லை. 


Download As PDF
Bookmark and Share

Post Comment

டெசோ மாநாட்டுக்கு முன்னர் தமிழ் ஈழத்துக்கு இந்தியா விதித்த தடை !!


இது கருணாநிதிக்கு சோதனைக்காலம். பேசாமல் இந்த மாநாட்டை அறிவிக்காமலே இருந்திருக்கலாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்றே இதையும் நடத்தி சரிந்திருக்கும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு (Tamil Eelam Supporters Organisation) மாநாட்டை அறிவித்தார். ஆனால் கெடுவாய்ப்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீட்டித்த அமைச்சகம், அதோடு நில்லாமல் தமிழீழம் என்ற கோரிக்கையோ கருத்தோ கூட இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்திருக்கிறது. 

இதற்குப் பின்னர் பேட்டியளித்த கருணாநிதி தமிழீழக் கோரிக்கை வைக்கப்படாது என்று கூறிவிட்டார். மற்ற கேள்விகளும் மடக்கி மடக்கி கேட்கப்பட, எல்லாவற்றுக்கும் சமாளிப்பாகப் பதில் அளித்திருக்கிறார். ஒரு வேளை கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருந்தால் மத்திய அரசுக்கு எதிராக கருணாநிதி மாநாடு என்று தினமலர் தலைப்புச் செய்தியில் தீட்டு தீட்டென்று தீட்டித் தள்ளியிருக்கும்.

இதற்குப் பின்னர் வழக்கம் போலவே கருணாநிதி காய்ச்சி எடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து கருணாநிதி மட்டும் குறி வைத்து குதறப்படுகிறார். இப்படிக் கருணாநிதியைக் கேவலபடுத்துகிறவர்கள் உண்மையில் ஈழத்திற்கு ஆதரவான நிலையின் காரணமாக செய்கிறார்கள் என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்த மாநாடே  பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைய, இந்திய அரசுக்குகோரிக்கை வைப்பதற்காகத்தான் நடத்தப் போவதாகக் கருணாநிதி கூறியிருந்தார். 

அப்படியிருக்க இந்திய அரசே தமிழீழம் என்ற கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்து அதைத் தடை செய்தும் விட்டது. இதற்காக ஈழ ஆதரவாளர்கள் உண்மையில் இந்தியாவின் மீதுதானே கோபப்பட வேண்டும். அதுதானே நியாயம். இதற்கு கருணாநிதியைத் திட்டி என்ன செய்யப்போகிறோம். ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறவர்கள் அனைவருமே தமது தன்னல அடிப்படையிலேயே செய்கிறார்கள்.  இதில் கருணாநிதி மட்டும் விதிவிலக்கா என்ன ? 

இந்தியாவையும், அமெரிக்காவையும் ஈழத்தில் தலையிடச் சொல்லும் இவர்கள் கருணாநிதியை மட்டும் எதிர்க்கிற காரணம்தான் என்ன ? கோட்சே தமிழ்ஈழத்தை ஆதரித்தால் ஆதரிப்போம், காந்தி எதிர்த்தால் அவரை எதிர்ப்போம் என்ற சீமான் கருணாநிதியை ஏன் ஆதரிக்க மறுக்கிறார். ஜெயலலிதாவை பெரிதாக விமர்சிக்கும் திராணியற்ற இவர்கள் கருணாநிதியைப் போட்டுத்தாக்கிக் கொண்டே இருப்பதேன். தமிழர்க்காக கட்சி தொடங்கிய சீமானும் இந்திய இறையாண்மையைக் காப்பதாகத்தானே அறிக்கையில் சொன்னார். அப்படியிருக்க கருணாநிதி மட்டும் எப்படி இந்தியாவை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.  தற்போது சிறைநிரப்பும் போராட்டம் நடத்தி கெத்துக் காட்டியுள்ள திமுகவினர் பெரிய எழுச்சியை உருவாக்கி விடுவார்கள் என்று அஞ்சி, திமுக மாநாட்டின் எழுச்சிக்கு பயந்துதான் அரசு தமிழீழத்தைத் தடை செய்தது என்று சொல்லலாமல்லவா ?

தமிழீழத் தடையின் காரணமாக இனிமேல் ஈழத்தைப் பற்றிப் பேசினாலே குற்றம் என்று கூறி சிறையில் அடைப்பார்கள். தமிழீழம், தனித் தமிழ்நாடு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதற்காக இந்தியாவை எதிர்க்குமளவிற்கு தமிழர்களுக்கு தெம்பு இருக்கிறதா ?; ஈழத்தமிழர்களை நிம்மதியாக வாழவிட தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் சும்மா இருந்தாலே போதும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கத்தான் இந்தியாவும் இலங்கையும் போரை நடத்தினார்களா ? இவர்கள் திரும்பத் திரும்ப இந்தியாவை வலியுறுத்துவதன் நோக்கம்தான் என்ன ? போரை நடத்த ஆயுதமும் பணமும், உளவுத் தகவலும் வழங்கிய உலக நாடுகள் போர் முடிந்த பின்பு போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் பொருளாதார ஆதிக்க நோக்குடன்தான் இலங்கையைத் தம்பக்கம் திருப்ப நெருக்கடி கொடுக்கிறார்களே அன்றி தமிழர்கள் நலனோ போர்க்குற்றமோ அவர்களின் இலக்கு இல்லை. 

போர் நடந்த போது இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது என்று கூறி போரை நிறுத்தாத இந்தியா தற்போது தமிழீழம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று சொல்கிறது. அதனால்தான் அதைத் தடை செய்திருக்கிறது என்று கூறுகிறது. இப்போதுதான் முறைப்படி தடையை அறிவித்திருந்தாலும், இதற்கு முன்பிருந்தே தமிழீழம் என்றதை இந்தியாவோ அதன் அரசியல் கட்சிகளோ ஆதரித்ததோ இல்லை. முன்பு புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததே இலங்கை அரசைப் பணியவைக்கத்தான். விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் முரண்பட்டபோது 25 வருடங்களுக்கு முன்பே இந்திய ஈழப்போர் மூண்டது. பின்பு 3 வருடங்களுக்கு முன்பு அதற்காகத்தான் கொடிய போரை ஏவி விடுதலைப் புலிகளை அழித்தது. இன்று வரை தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் இந்திய எதிர்ப்பு பேசுகிறார்கள், காந்தி சிலையை உடைக்கிறார்கள். இந்தியாவிடமிருந்து எதிர்வினையே இல்லை. 

யாரோ சொன்னார்கள் தமிழீழம் அமைவதை இலங்கை அனுமதித்தாலும் இந்தியா அனுமதிக்காது என்று. அதுதான் உண்மை. இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இன விடுதலையை இந்தியா அனுமதிக்கவே செய்யாது. இந்தியாவே பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருக்கிறது. இதில் காஷ்மீர், சில வடகிழக்கு மாநிலங்களில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவராகத்தான் இருக்கின்றனர். இவர்களுக்கென்று மற்ற மாநிலங்களுக்கு இருப்பதை காட்டிலும் சலுகை சட்டங்கள் உள்ளன. இம்மாநிலங்களில் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்பு நடைபெறுகிறது. ஒரு வேளை இந்திய ஆதரவுடன் இலங்கையில் தனிநாடு அமைகிற பட்சத்தில் இம்மாநிலங்கள் பற்றி எரியும். இது இந்தியா தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

சீனாவிற்கு எதிரி என்ற நிலையிலிருந்தே தலாய் லாமாவை இந்தியா ஆதரித்து வருகிறது. அதற்கு பதிலடியாக சீனா காஷ்மீருக்கு தனி விசா அளிக்கிறது. அதே எதிரி என்ற நிலையில்தான் வங்க தேசத்தையும் உருவாக்கியது. ஆனால் இலங்கையோ ஒரு சீனாவையும் பாகிஸ்தானையும் ஒத்ததல்ல. அது கிட்டத்தட்ட இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ளது போலத்தான். இலங்கை மசியாமல் போக்குக் காட்டியதால்தான் விடுதலைப்புலிகளை ஆதரித்தது, புலிகள் தமக்கு ஒத்துவராத போது அவர்கள் மீதும் போர் தொடுத்தது. 

உலகமயக் காலமான இன்று நாடுகளின் எல்லைகளே கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி வருகின்றன. இந்நிலையில் தனி ஈழமே தமிழ்நாடோ எந்தளவு சாத்தியமென்று தெரிந்தும் இன்னும் அதையே பேசி வருகின்றனர். தெற்கு சூடான் அது வேறுகதை. சொல்லப்போனால் விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே தமிழ் ஈழம் சிற்சில குறைகளுடன் அமைந்தேதான் விட்டது. அதற்கு அங்கீகாரம் மட்டும்தான் இல்லாமலிருந்தது. தனிநாட்டைப் போலவே பல நிறுவனங்களையும் நடத்திவந்தது புலிகள் இயக்கம். போரினால் அனைத்தும் அழிக்கப்பட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டதை நான் சதாம் உசேனும், முவம்மர் கடாஃபியும் அழிக்கப்பட்டதைப் போலவே பார்க்கிறேன். என்ன அவர்கள் இறையாண்மை உடைய ஒரு நாட்டின் அதிபர்களாக இருந்தவர்கள். பிரபாகரனோ அங்கீகாரமில்லாத நாட்டின் அதிபர் என்பதே எனது கணிப்பு. 

இராஜீவோ, இந்திரா காந்தியோ, ம.கோ. இராமச்சந்திரனோ உயிருடனிருந்திர்ந்தாலும் தமிழீழம் அமைந்திருக்காது. ஏனென்றால் அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இது தெரிந்தும் சிலர் நம்பாதது மாதிரியே நடிக்கிறார்களா அல்லது அவர்களுக்கு புரிவதே இல்லையா என்பது அவர்களுக்கு வெளிச்சம். இப்படி கருணாநிதி எதிர்ப்பாளர்கள் யாரும் தமிழ் ஈழத்தைத் தடை செய்த இந்தியாவின் மீது கோபப்படாமல் கருணாநிதியை மட்டும் இந்திய இறையாண்மையை மீறச் சொல்கிறார்கள்
Download As PDF
Bookmark and Share

Post Comment