தலித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜாதி



இந்துக்களே இந்துவைக் கொன்றிருக்கிறார்கள்
தமிழர்களே தமிழனைக் கொன்றிருக்கிறார்கள்
திராவிடர்களே திராவிடனைக் கொன்றிருக்கிறார்கள்

எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
எவனையும் தலைவனாகக் கொள்ளுங்கள்
மதத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்
எவ்விறையையும் வழிபடுங்கள்
எக்கேடும் கெட்டுப்போங்கள்
ஜாதி மட்டும் மாறாதீர்கள்
மாறினாலும் மாற முயன்றாலும்
மரணிப்பீர்கள்

எத்தகு தீயதும் ஜாதியால் அரவணைக்கப்படும்
எத்தகு புனிதமும் ஜாதிமாறினால் அழிக்கப்படும்

எனது விந்து எங்கும் ஊர்மேயலாம்
எந்த ஜாதியின் பிறப்புறுப்பிலும்
நீந்த்திச் செல்லலாம் கருமுட்டையுடனும்
வினைபுரியலாம் ஆயினும்
அது எனது ஜாதியின் மகவையே தரும்

உனது கருப்பை பிறனின் விந்தை சுமக்கலாகாது
அது எனது ஜாதியின் விந்தை மட்டும்
சுமக்கவே பணிக்கப்பட்டது
இப்புனித நியமங்களின் படியே வாழ உனக்குண்டு உரிமை
இதற்குள்ளாக நீ மகிழ்ந்து கொள்ளவும்
உமிழ்ந்து கொள்ளவும்

இதிலிருந்து வெளியே சென்று நீ காதல் கொண்டால்
நாங்கள் அவன் உயிர் கொல்வோம் உன்னை மீளவும் கொள்வோம் அன்றேல்
உன்னையும் கொல்வோம்
நீ என் வித்துதான்
அதனாலென்ன
நான் வாழ்வது ஜாதியால்
ஜாதி வாழ்வது என்னால்

Download As PDF
Bookmark and Share

Post Comment

சிற்றரசு, இளவரசன் மற்றும் பலர் :((

இப்போது இளவரசன் தற்கொலை செய்துவிட்டதால் எனக்கு பெரிய துக்கமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஜாதியப்பேச்சுக்களையும், சடங்குகளையும் இன்ன பிற எழவுகளையும் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவன். ஜாதிக்கு எதிராக எதையும் இது வரையில் செய்ததில்லை. அதனால் இது போன்ற நிகழ்வுகள் இப்படியும் இருப்பார்களா ஜாதி வெறிபிடித்த மனிதர்கள் என்று அதிர்வதில்லை. ஜாதி வெறி பிடித்தவர்கள் நினைப்பதை விடவும் மோசமானவர்கள்.

அவர்களுக்கு பெற்ற மகளின் உயிரை விடவும் ஜாதிக் பெருமிதம் மேன்மையானது. ஜாதியப் பெருமை என்று இல்லாதவொன்றைக் காப்பாற்றுவதாகக் கருதிக் கொண்டு கொலைகாரனாக மாறவும் துணிவு தருவதே ஜாதியம். மகள் தாலியறுத்தாலும் வாழ்க்கையே போனாலும், பரவாயில்லை என்று கருதுகிறார்கள்.

ஆதிக்க ஜாதிக்காரப் பெண் தலித்தை மணந்தால் கொலை, அதே தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் அருந்ததிய ஆணைத் திருமணம் செய்தாலும் கொலை இப்படிப்போகிறது ஜாதியத்தின் கதை. 


2008 ஆம் ஆண்டு சோமனூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு என்பவர் தன்னுடன் வேலை பார்த்த தொழிலாளியான கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து எதிர்ப்புக்களுக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். பின்பு சில முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு, இறுதியாக தலை நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் சிற்றரசு. அவரது மனைவியிடம் அப்போது கைக்குழந்தையும் இருந்தது. அந்தப் பெண்ணின், குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைக் கூட நினைத்துப் பாராமல் கொலை செய்தனர் கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதிக்காரர்கள். 


இப்போது இளவரசன்  பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். (இது தற்கொலை என்று இன்னும் நான் நம்பவில்லை என்ற போதிலும்) இவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற போதிலும் காதலர்களைப் பிரிப்பதில் ஜாதி வென்று விட்டது. ஜாதியத்தால் கொலையுண்டவர்களில் இவர்களிருவரும் அதிகமான குற்றவுணர்ச்சியையும், பாதிப்பையும் ஏற்படுத்தினர். 


 தற்கொலையாகட்டும், கொலையாகட்டும் ஜாதியம்தான் காரணமாக இருக்கிறது. ஆதிக்க ஜாதிக் கட்சிகளுக்கு இருக்கும் தலித்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவது இரண்டு காரணங்களுக்காக.

வன்கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது. (எதிர்த்தரப்பினர் ஆதிக்க ஜாதியாக இருக்கும் பட்சத்தில் வேறு பிரச்சனைகளுக்காக தன் மீது ஆதிக்க ஜாதிக்காரர் வன்கொடுமை செய்தார் என்று புகாரளிப்பது)

பெண்களை காதலித்து விட்டுச் சென்று, பின்பு பெற்றோரிடம் பேரம் பேசி பணம் பறிப்பது.

இது இரண்டும் உண்மைகள். இந்தக் கட்டப் பஞ்சாயத்துக்குத் துணை நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். இக்காரணங்களைக் கொண்டே வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஆதிக்க ஜாதிக் கட்சியினர் கோருகின்றனர். கலப்புத் திருமணங்களை எதிர்க்க வேண்டும் சட்டம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒரு படி மேலே போய் பெண்களுக்கு சொத்துரிமை கூடாது என்கின்றனர். இதை வைத்து ஜாதிய உணர்வைத் தூண்டி வாக்கு வங்கி அரசியலுக்கு ஆதாயம் தேடுகின்றனர். எனவே நாம் ஆதிக்க ஜாதிக் கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது இந்த தலித் அடையாள அரசியல் செய்யும் தலித்  கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது.

முன்பொரு முறை இதே போல் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.  வன்னிய பெண், தலித் ஆண் கலப்புமண தம்பதியர் வலுக்கட்டாயமாக நஞ்சு ஊட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். பாமக அன்புமணி அப்போதைய நடுவண் அமைச்சராக இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஒரே கூட்டணியில் இருந்தனர். கொல்லப்பட்ட தலித் ஆணின் தந்தை தனது மகன் கொல்லப்பட்டதற்காக வன்னியர் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு வழக்குக் கொடுத்தவரை வற்புறுத்தினர் விசி கட்சியினர். காரணம் அவர்களிருவரும் ஒரே கூட்டணியிலிருந்தனர். இக்கொலையை முதன்முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததும் விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்களே அதை திரும்பப் பெறக் கோரினர். இதுதான் தலித் கட்சிகளின் உண்மை முகம். (கடலூர் மாவட்டம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு)
 
தற்கொலை செய்து கொண்டதன் மூலம், நாடகத் திருமணம் என்ற அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இளவரசன் என்ற இளைஞன்.

காதல் என்பது பொய், பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள் என்று சாடும் பெற்றோர்களுக்கு, பெற்றோருக்கு பயந்துதானே காதலர்கள் ஓடிப்போய்த் திருமணமும், திருட்டுக் கல்யாணமும் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடமிருந்து உயிருக்குப் பயந்தும் ஓடிப் போக வேண்டியுள்ளது.

காதலுக்காக காதலித்தவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காதலித்து ஜாதிப் பெருமையைக் குலைத்த காரணத்திற்காக பெற்றோர்களே பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறார்கள். எது உயர்ந்தது காதலா ?  ஜாதியா ?
Download As PDF
Bookmark and Share

Post Comment

உயர்த்தப்பட்டவன்


அவன் கால்கள் பதிந்ததால் அந்த மண்ணை நான் விலக்கி வைக்கவில்லை
அவன் கைகள் களை பறித்ததால் அந்தத் தாவரத்தை நான் சமைத்துண்ணாமல் இருக்கவில்லை
எங்கோ அவன் கைகள் பட்டு வரும் பணத்தைத் தொடுவதற்கும் நான் கூச்சப்படவில்லை
அவன் அறுத்து வெட்டித் தந்த ஆட்டை தின்பதற்கும் எனக்கு கசக்கவில்லை
அவன் நுரையீரல் தொட்டதால் காற்றை நான் சுவாசிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை
அவன் உழைப்பில் விளைந்ததை நான் ஏற்றுக் கொள்ள மறுத்ததில்லை
இருப்பினும் அவனை நான் மனிதனாக மதித்ததில்லை
வீட்டிற்கு அருகில் அனுமதித்ததில்லை
பெரியப்பா வயது மனிதனாகிலும் அவனை டேய் என்றேயழைப்பேன்
அதட்டும் தொனியிலேயே நலம் விசாரிப்பேன்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்
காட்டை விற்றுக் கள்ளைக் குடித்தாலும்
நான் குடியானவனே, குடிகாரனில்லை
ஏர் பிடித்த பரம்பரையைச் சார்ந்தவன் ஏற்றம் பெற வேண்டும்
ஏரைப் பிடிக்காமலேயே !
அவன் மட்டும் எனக்கு குடைபிடிக்க வேண்டும்
ஏனென்றால் நான் உயர்த்தப்பட்டவன்

Download As PDF
Bookmark and Share

Post Comment