திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தினமணி அடடே மதி - கேலிச்சித்திரமே கேலியாக இருக்கிறதே அடடே எரிச்சல் குறி !

நன்றி -தினமணி(23-042015)
இது இரு நாட்களுக்கு முந்தைய (23-042015) தினமணியின் கேலிச்சித்திரத்தில் அடடே மதி வரைந்தது. ஒரு கேலிச்சித்திரத்தில் இவ்வளவு நீளமான வசனத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இதில் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று யாராவது கூற முடியுமா ? இல்லை இதில் நேர்மை இருக்கிறதா ?

இந்த அடடே மதி எத்தகைய நேர்மையாளர் என்று தெரியுமா ? வாரத்தில் மூன்று நாட்கள் கருணாநிதியை நக்கலடிப்பார். இரண்டு நாட்கள் ராகுல் காந்தியை நக்கலடிப்பார். மீதி இரண்டு நாட்களும் வேறு ஏதாவது பொதுவான விடயங்கள் குறித்தும் நக்கலடிப்பார். இப்போது இவருக்கு இன்னொருவர் கிட்டியிருக்கிறார் அவர் அரவிந்த் கேஜ்ரிவால். இன்னும் புரியவில்லையா ? ஏன் அவர்களை விமர்சிக்க உரிமையில்லையா  என்று கேட்கிறீர்களா ? நிச்சயம் இருக்கிறது. ஆனால் இந்த விமர்சன அளவுகோலை மற்ற கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் வைக்காத இந்த தினமணி ஒரு நடுநிலை நாளிதழ் என்ற போர்வையில் வெளிவந்துகொண்டிருந்தாலும், இது மறைமுகமாக அதிமுக - பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கும். இதுவரை "மக்களின் முதல்வர்" குறித்தோ நரேந்திர மோடி குறித்தோ ஒரு நக்கலும் அடடே மதியில் வராது. வந்தால் கூட போனால் போகிறதென்று ஏனோதானோவென்றுதான் வரும். இல்லையென்றால் மோடியைப் பாராட்டி மட்டும் வரும்.

நம் நாட்டில் அதிகாரத்திலுள்ள கட்சிகளல்லாமல் எதிர்கட்சிகளைக் குறித்து மட்டும் விமர்சனம் செய்து வாழ்க்கையை ஓட்டும் ஆட்கள் இவர்கள். அதே காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தால் "நேர்மையாக" விமர்சிப்பார்கள். ஆளும் கட்சியின் நிர்வாகச் சீரழிவு குறித்துக் கூட அடக்கியே வாசிக்கிறார்கள். இவர்கள் ஊடகம் நடுநிலை என்று சொல்வதற்குப் பதிலாக அக்கட்சியின் ஊதுகுழல் என்று வைத்துக் கொள்ளலாமே. எதற்கு இந்த உத்தம வேடம். உண்மை, விடுதலை எல்லாம் திராவிடர் கழகம் வெளியிடும் நாளிதழ்கள் என்று தெரியும், நமது எம்ஜிஆர், முரசொலி ஆகியவை முறையே அதிமுக, திமுக - வின் வெளியீடுகள் என்றும் எல்லார்க்கும் தெரியும். அதனால்தான் அவைகளைக் கட்சிக்காரர்கள் சிலர் தவிர யாரும் வாங்குவதில்லை. ஆனால் தினமலர், தினமணி போன்றவையெல்லாம் நடுநிலை என்ற பெயரில் வந்து குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் ஜால்ரா தட்டுவதற்குப் பெயர் என்ன ? தினமலராவது அவ்வப்போது விமர்சனம் செய்கிறது. தினமணியோ மூச்சே விடுவதில்லை.

ஓ காதல் கண்மணி படத்திற்கு ஓகே வீரமணி என்று பெயர் வைத்திருக்கலாம் என்று நக்கலடிக்கிறார். இவர் படத்தை எடுத்த மணி ரத்னம் மீது வெறுப்பைக் கக்காமல் வீரமணியை வாருகிறார். இதில் இவர் சொல்வதிலாவது உண்மை இருக்கிறதா ? வீரமணி சேர்ந்து வாழ்தலையா பரப்பி வருகிறார். அதை(Living together) அவர் ஏற்றுக் கொண்டாலும் சுயமரியாதைத் திருமணம் என்று திருமணத்தைத்தான் வேறு பாணியில் செய்து வைக்கிறது திராவிடர் கழகம். என்ன அதில் தாலிதான் இல்லையே தவிர திருமணம் என்றுதானே சொல்கிறார்கள். இதே தினமணி இதழில் ஞாயிற்றுக் கிழமைதோறும் தமிழ்மணி என்று ஒரு பக்கம் ஒதுக்கி தமிழ்மொழி வளர்ச்சி பற்றியும் சங்க இலக்கியம் பற்றியும் எழுதி வருகிறார்கள். அதில் சங்க இலக்கியத்தில் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் தலைவன் தலைவி காதல், பிரிவாற்றாமை, உடன்போக்கு (இன்றைய மொழியில் சொன்னால் ஓடிப் போவது) பற்றிய பாடல்களையெல்லாம் கூட இலக்கியம் என்று வெளியிடுகிறார்கள். இதை வைத்து நான் சொல்லலாமல்லவா? தினமணி ஆசிரியர் சேர்ந்து திருமணம் இல்லாமல் வாழும் (லிவிங் டுகெதர்) முறையை தினமணி நாளிதழ் பரப்புகிறது என்று.

அதற்கும் மேலாக இந்தக் கேலிச்சித்திரமே ஒரு மொக்கை. அதான் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்தல் என்றாலே எல்லார்க்கும் புரியுமே. அப்புறமெதற்கு இச் கொடுப்பது, தாம்பத்ய உறவு கொள்வது, என்றெல்லாம் நீட்டி முழக்குவானேன்.  ஏன் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் கூட தாலி கட்டாமல் தானே திருமணம் செய்கிறார்கள். உங்களுக்கு விமர்சிக்க வரவில்லை என்றால், காரணம் இல்லையென்றால் விட்டு விடுங்களேன் அடடே மதி ! மணிரத்னத்தை விமர்சனம் செய்ய மனமில்லாமல் வீரமணியை ஓட்டிக் கொண்டிருக்கிறார். வீரமணி உடைத்தால் பொன்சட்டி , மணிரத்னம் உடைத்தால் மண்சட்டியோ ?!!
Download As PDF
Bookmark and Share

Post Comment