போயே விட்டேன் வாங்கியே விட்டேன் !



இன்றுதான் கடைசி நாள் என்றோ ஞாயிற்றுக் கிழமை போன்றே தெரியாதவாறு கூட்டமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நண்பகல் வேளை என்பதாலா அல்லது வாசகர்கள் மொத்தமே அவ்வளவுதான் என்று தெரியவில்லை
 

இம்முறை வாழ்க்கையிலேயே அதிக அளவாக ரூ 1500 க்கு நூல்களை அள்ளி வந்தேன் திருப்பூரில் நடந்த நூல்கள் கண்காட்சியின் இறுதி நாளிலே. இந்த வருடமாவது குறும்படங்கள் பார்க்கலாம். கலை நிகழ்ச்சிகள் காணலாம். சொற்பொழிவுகள் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. சென்ற வருடம் நடந்த கண்காட்சி ஏதோ நேற்றைக்குத்தான் நடந்தது போலிருந்தது ஆனால் அதற்குள் ஒரு வருடம் ஆகி விட்டிருக்கிறது.
 

கண்காட்சிக்குச் சென்று நூல்களை வாங்கலாமா வேண்டாமா என்று எண்ணுமளவுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது. நல்ல வேளையாக சென்று வாங்கி வந்தது நல்லதாகப் போய்விட்டது. பணம் முக்கால்வாசி தீர்ந்து விட்டதாலும், சென்ற வருடம் வாங்கிய நூல்களிலேயே பாதி படிக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதாலும் இம்முறை கொஞ்சம் அதிகமாக வாங்கியும் ஆசை தீராத நிலையிலும் பத்து பதிப்பகங்களுக்குள் நுழையாமல் கூட திரும்பி விட்டேன்.

ரூ 250 க்கும் மேல் நூல்கள் வாங்கினால் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ்கள் தருவார்கள். பட்டப்படிப்பில் வாங்கிய சான்றிதழ்களே வெட்டியாகக் கிடக்கும் போது, இது போன்ற தம்பட்டங்கள் எதற்கென்றுதான் போன வருடமே வாங்கவில்லை. இம்முறையும் வாங்கவில்லை.

வாங்கிய நூல்கள்

அனொனிமா (முகம் மறைத்தவள்) 

ஜெர்மனியில் ரஷ்யப் படைகள் புரிந்த பாலியல் வன்முறைகள் குறித்தது. இது குறித்த கட்டுரையை கீற்றுவில் படித்ததிலிருந்தே வாங்க வேண்டுமென்ற தவிப்பு இருந்தது. இந்நூலைப் பற்றி இருப்பதாகக் கேள்விப்பட்டு வாங்க வேண்டும் என்றேதான் போனேன். இரண்டு பதிப்பகங்களில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இறுதியில் எதிர்பாராவிதமாக எதிர் வெளியீட்டகத்தில் வைத்திருந்தார்கள்.

அன்னி ஃப்ராங்க் டைரிக் குறிப்புகள் 
 
இது பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஜெர்மனியில் நாஜிக்களின் கொடூரத்தை தனது நாட்குறிப்பேட்டில் பதித்த சிறுமியின் குறிப்புக்கள். இதுவும் எதிர் வெளியீடு. இந்த இரண்டு நூல்களின் முக்கியமானவை என்பதால் வாங்கிவிட்டேன்.

அமைதியின் நறுமணம் - ஐரோம் ஷர்மிலாவின் கவிதைகள்

ஐரோம் ஷர்மிளாவுக்கு என்னால் வேறு என்ன கைம்மாறு செய்யமுடியும் ? அவரது கவிதைகளைப் படிப்பதை விட. அவர் மீது கொண்ட மதிப்பினால் வாங்கினேன்.

ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை

இதை சென்ற வருட கண்காட்சியின் போதே எடுத்துப் பார்த்து விட்டு காமிக்ஸ் போன்ற நூல் நூறு ரூபாயாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வேறு இருக்கிறதே என்று அரை மனதுடன் வைத்து விட்டு வந்து விட்டேன். இம்முறை தமிழில் வைத்திருந்தார்கள் வாங்கி விட்டேன்.

சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் இருந்த சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் வாங்கினேன்.

நீ எறும்புகளை நேசிக்கிறாயா ?

வானவில் பறவையின் கதை


இவையெல்லாம் போக குழந்தைகளுக்கான பெயர்கள் என்ற தலைப்பில் மட்டும் மூன்று நூல்களை வாங்கினேன். உடன்பிறப்பின் குழந்தைக்கு பெயரிட வேண்டியிருப்பதால்.

இது போக தலைப்புகள் கொண்டே சிலவற்றை வாங்கினேன். விலையையும் கருத்தில் கொண்டேதான்.

அறியப்படாத தமிழகம் - தொ பரமசிவன்

ஹரப்பா வேதங்களின் நாடா ?

1857

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

சூஃபி - விளிம்பின் குரல்

எங்கெ செல்கிறது கல்வி ?

தமிழர் மறந்த மரபுக் கலைகள்

கோட்சேயின் குருமார்கள்

தலித் முஸ்லிம்

ஆயிஷா

பெட்ரோல் அரசியல்

ஈராக் - வரலாறும் அரசியலும்

இஸ்லாம் - நேற்று இன்று நாளை

பெரியார்  தமிழுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்தாரா ?

அழியட்டும் ஆண்மை

தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் பெரியாரும் ம.பொ.சி.யும்

கமலின் கலப்படங்கள்

ஈரானிய சினிமா


இத்தனையும் அடுத்த வருட கண்காட்சிக்குள் படித்து விட வேண்டும் என்று வழக்கம் போலவே முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம். இம்முறையும் வால்கா முதல் கங்கை வரை நூலை எடுத்துப் பார்த்து விட்டு விலை காரணமாக வைத்து விட்டேன். பின்பு வாங்கிக் கொள்ளலாம் என. இது போல் ஒவ்வொரு முறையும் பல நூல்களை விலை காரணமாகவே வாங்க முடிவதில்லை.

ஒரு பயணக் கட்டுரையோ அல்லது கண்காட்சி குறித்தோ ஒரு கட்டுரை வரையுமளவிற்கு எழுத்தாளுமை இன்னும் எனக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது. பத்து வருடங்களுக்கும் மேலாக பொது மக்கள் திரள் ஊடகம் தவிர பல்வேறு மாத இதழ்களும், நூல்களும், விமர்சனங்களும் இலக்கியங்களும் வாசித்து வருகிறேன். இருப்பினும் எனக்குள் பெரிய அளவில் எழுத்து அளவிலோ சிந்தனை அளவிலோ முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சிறு வயதிலிருந்தே தமிழார்வம் அதிகமாக இருந்தது. அது ஆக்கப் பூர்வமாக  இல்லாமல் வெறும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்ற அளவிலேயே இருந்தது. படிக்க நிறைய நேரமும் ஆர்வமும் இளம் பருவமும் இருந்த போது நூல்கள் வாங்குவதற்குப் போதுமான வாய்ப்பு வசதிகள், பணமும் இருக்க வில்லை. இப்போதும் பணம் ஒன்றும் பெரிதாகப் புழங்க வில்லை. கல்லூரி முடிந்ததிலிருந்தே இணையத்திலேயே அதிகம் வாசிக்கும் நிலையாக இருக்கிறது. பிபிஓ பணிச்சுமை, மன அழுத்தத்தின் காரணமாகவும் வாசிப்பு கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது, எப்போதாவது மட்டுமே வாசிக்க இயலுகிறது.

இருந்தும் எப்படியாவது இதிலிருந்து மீண்டு விடவே எத்தனிக்கிறேன். ஒவ்வொரு நூலையும் படித்து அதைப் பற்றியாவது எழுதி வலைப்பூவை ஒப்பேத்தி விடுவதாகத் திட்டம். அடுக்கி வைக்கப்பட்ட நூல்களின் மேலுள்ள அட்டையில் ஆன்னி ஃப்ராங்க் என்னைப்பார்த்து "நீ படிச்சுக் கிழிச்சுட்டாலும் என்று" என்று கிண்டலாக சிரிப்பதாகத் தோன்றுகிறது.  

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்