சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அழகு என்று சொல்வதின் அழகின்மை

உங்க ஊர்ல தேன்மொழி கனிமொழினு எவளாவது வாய்க்கால் வரப்புல திரிவா அவளத் தேடித் தேடி லவ் பண்ணு உனக்கெல்லா நான் செட்டே ஆக மாட்டேன். 
                                     
வெள்ளைத்தோல் மலையாளியை வைத்து சராசரி தமிழச்சிகளை கீழாகக் காட்டும். இது அட்லி எழுதிய வசனம். இதை தமிழ்நாட்டில் ரசிக்காதவன் எவன்?  எவள் ? 

இந்த வசனத்தை கொகொட்டிச் சிரித்து மகிழ்ந்த அதே உள்ளங்கள் இயக்குநர் அட்லியின் உருவத்தையும் நிறத்தையும் வைத்து அவரது மனைவியுடன் இருக்கும் படங்களைக் கிண்டலடிப்பதாக நினைத்து தன்னைத்தானே இழிவு படுத்துகின்றனர், அட்லி இந்தப் படத்தில் இந்த வசனத்தின் மூலம் இழிவு செய்தது போல.


இத்தனைக்கும் கனிமொழி என்கிற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு ஆளுமையை வைத்துக் கொண்டே. தேன்மொழி கூட அத்தனை இழிவான பெயரும் இல்லை. 

ஒருவரின் உருவத்தைப் பழிப்பதே மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. ஒரு பொம்பளையக் கிண்டல் பண்ணனும்னா அது மொக்க ஃபிகர் இல்லைன்னா ஆன்ட்டின்னு சொன்னா முடிஞ்சது. ஒரு நகைச்சுவைத் துணுக்குக்கு சிரிப்பதை வைத்தோ,  ஒரு மீமை பகிர்வதை வைத்தோ, ஒரு கருத்தை விரும்புவதை வைத்தோ கூட நாம் நிறவெறியர்கள் என்பதை நிரூபித்து விடலாம். இப்ப நாமெல்லாம் ஒரு நிறவெறியர்கள் என்பதற்கான சிறிய உதாரணங்கள். 

நமக்கு எதிரிகள் என்பதற்காகவே தமிழிசையை பரட்டை என்று மீம் போடுவது, அதைப் பரப்புவது. 

திராவிடக் கட்சியின் குலக்கொழுந்து உதயநிதி சாக்கடை சந்தானத்துடன் ஒரு சராசரி தமிழச்சியைப் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியாடா த்தூ என்றெல்லாம் உளறுவதைப் பார்த்து நாம் சிரிக்கவில்லையா ?. 

நடிக்க வந்த புதிதில் அதே உதயநிதியின் பழைய புகைப்படத்தைப் போட்டு காசிருந்தா காக்காவும் மயிலாகும் என்று தமிழர்கள் ஃபேஸ்புக்கில் தங்களது நகைச்சுவை உணர்வைக் காட்டினார்கள். 

ராஜகுமாரன் படத்துல வர்ற கவுண்ட மணி, செந்தில், வடிவேல் மற்றும் தங்கச்சி மணிமேகலை காட்சி. அதை எல்லாம் என்ன நியாயம்னு நினைச்சு சிரிச்சோம் நாமல்லாம்.

சுமாரான, அழகில்லாத ஆண்கள் எல்லாரும் அழகான பெண்ணை காதலிக்க, திருமணம் செய்ய நினைப்பார்கள். அதே இன்னொருவன் அழகான பெண்ணின் காதலனாகவோ, கணவனாகவோ இருந்தால் எலுமிச்சப்பழத்தைக் காக்கா கவ்விடுச்சு, இவன் மூஞ்சிக்கெல்லாம் இந்த ஃபிகர் ஓவர் என்று நினைப்பார்கள். 

தன்னைச் சார்ந்த பெண்கள் என்றால் குணங்களைப் பற்றிப் பேசுவார்கள் ஆண்கள். தன்னை சாராத பெண்களைக் குறித்த சராசரி ஆண்களின் உளவியல் என்ன ?. என்னுடைய கணிப்பு இரண்டே இரண்டுதான்.

அழகான பெண்ணைப் பார்த்தால், ஆகா இவளைக் கட்டிக்க எவனுக்குக் குடுத்து வச்சிருக்கோ ?

திருமணமானவராக இருந்தால் நம்ம பொண்டாட்டி இது மாதிரி இல்லையேன்னு ஏக்கமும் திருமணமாகதவராக இருந்தால் இந்த மாதிரி ஒருத்திதான் நமக்கு வரணும்னும் இருக்கும்.

அழகாக இல்லாத பெண்ணைப் பார்த்தால். த்தூ ! இதையெல்லாம் எவன் பார்ப்பான் ? கட்டுவான் ? 

ஆக நமது உளவியல் அழகை வைத்து ஒருவரை குறிப்பா பெண்களை எடை போடுவதுதான். இது கொடிய மனநோய்தான். நாமேதான் சிரமப்பட்டு மாற்றிக் கொள்ள வேண்டும். 

ஒருவரை அழகு என்பதாலேயே இன்னொருவரை அழகில்லாதவர் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறோமே இது தவறில்லையா ? மாற்ற முயல்வோம்.
x
Download As PDF
Bookmark and Share

Post Comment

சிறியதாய் சில பெருந்தவறுகள்

சிறிய விடயங்களில் ஏற்படும் தவறுகளை நாம் பெரியதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் அந்தச் சிறிய தவறுதான் எத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு முறை என் மனைவி ஒரு ஞெகிழிப் பையை மிக இயல்பாக சாக்கடையினுள் எறிந்தார். அங்கே ஏன் வீசறே ? என்றேன். வேற என்ன செய்யறது ? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு முறை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு வயதான பெண் மாடி வீட்டிலிருந்து வெளியே வந்து, குப்பைகளை ஒரு ஞெகிழிப் பையில் இட்டு நிரப்பி முடிச்சுப் போட்டு அதை அப்படியே சாக்கடைக்குள் வீசிவிட்டுச் சென்றார். சாக்கடை நம் வீட்டிற்குள் வரவில்லையே என்ற எண்ணம்தான். கொஞ்சம் நடந்து போய் குப்பையில் குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும் என்ற அடிப்படை அறமே (அறிவெல்லாம் நிறைய இருக்கிறது) இல்லாதவர்கள் முழு மாடாக வளர்ந்து நிற்கிறார்களே நாம் என்னதான் செய்வது. இது ஏன் என்று முதலிலிருந்து விளக்க வேண்டுமா ? சாக்கடை அடைத்துக் கொண்டால் ஒரு மனிதன்தான் இறங்கி அடைப்பை நீக்க வேண்டும். அதற்கு உன்னைப் போன்றவர்கள் குப்பை வீசுவதுதான் காரணம் என்று விளக்கிச் சொன்னால்தான் தெரியுமா ?. இதற்காக ஒவ்வொருவரிடமும் சண்டைதான் போட்டுக் கொண்டிருக்க முடியுமா ?. விதிமுறைகளை மதிப்பவன் அடிப்படை மனிதநேயத்துடன் நடப்பவர்களையெல்லாம் பகடி செய்து விட்டோ அல்லது வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டோ அல்லது மகாத்மாவாக்கிவிட்டோ இது போல் பலர் அலட்சியமாக செய்யும் தவறுகள் எத்தனை விளைவுகளுக்குக் காரணமாகின்றன. இதற்கெல்லாம் யார் தண்டனை கொடுப்பது ? யார் அவர்களுக்கு உணர்த்துவது ? விடிவே இல்லை. சரி தமிழுக்கு வருகிறேன்.

படம் - நன்றி கூகிள்
இது போன்றே இன்னொரு வழக்கமும் இருக்கிறது. சிறு அலட்சியமும், அதிகப்பிரசிங்கித்தனமும் எப்படி பேரழிவை உண்டாக்குமோ (கடலூர், சென்னை பேரழிவு போல) அது போல விளங்கும் தமிங்கிலப் புற்று நோய்தான். தமிழ் நாட்டில்தான் தமிங்கிலம் என்ற வகை உயிரினம் வாழ்ந்து வருகின்றது. இந்த உயிரினம் பலருக்குள்ளும் இருக்கிறது. நான் வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும், அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளவன் அல்ல. ஆனாலும் எல்லாவிடங்களிலும் இயன்ற வரையிலும் தமிழே மணக்க வேண்டும் என்ற பேராவல் உடையவன். அதே நேரம் தற்காலத்தின் நடைமுறை சாத்தியங்களையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எந்த இடத்தில் ஆங்கிலம் தவிர்க்க முடியாது என்றும் எனக்குத் தெரிகிறது. ஆனால் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுப் பேசப்படும் ஆங்கிலம்தான் என்னை ஆத்திரத்தில் ஆழ்த்துகிறது. இது தனிமனிதர்கள் செய்யும் தவறுகள் தொடங்கி பெரிய தொலைக்காட்சி அலைவரிசைகள், நாளிதழ்கள், வார இதழ்கள் வரை செய்யும் தமிழ்க்கொலைகள், தமிழைக் கொன்று வளரும் தமிங்கிலம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழைப் பயன்படுத்த முடியாத மிகவும் கடினமான தருணத்தில்தானே, இடத்தில்தானே ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் இல்லையா ? இங்கே என்ன நடக்கிறது. ஆங்கிலத்தால் சொல்ல முடியாத இடத்தில் மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக Dilemma, Cliche, De javu போன்ற சொற்களுக்கு தமிழில் நேரடியான சொற்கள் இல்லை அல்லது இன்னும் உருவாக்கப்படவில்லை அல்லது பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை என்றும் சொல்லலாம். 

இது போன்ற சொற்கள் தவிர்த்து, மிக எளிமையான சொற்களுக்குக் கூட வேண்டுமென்றே ஆங்கிலத்தைப் பிதுக்கி மேதாவித்தனத்தைக் காட்டுவதுதான் சகிக்கவே முடியாத்தாக இருக்கிறது. மம்மி(அம்மா), டாடி(அப்பா), ஆன்ட்டி(அக்கா/அத்தை/சித்தி), லைஃப்(வாழ்க்கை), வைஃப்(இல்லை), ஹேப்பி(மகிழ்ச்சி), குட்(நல்லது), ஓகே(சரி) பாய்ஸ்(பசங்க), ட்ரோலிங்(கிண்டல்), மேரேஜ்(திருமணம்), ஃபங்க்சன், பஸ், சாங்ஸ் இப்படித் தொடர்கிறது தமிழ்க் கொலை. ஏன் இவற்றை தமிழில் சொன்னால் தேய்ந்தா விடும் ? இல்லை தன்மானம் குறையுமளவுக்கு பழங்காலச் சொற்களுமல்ல. ஆனாலும் இவை ஆங்கிலத்திலேயே சொல்லப்படுகின்றன. நான் தற்போது தொலைக்காட்சிகள் பார்ப்பதையே அறவே நிறுத்தியாகி விட்டது. அவ்வப்போது தொலைக்காட்சியைக் கடந்து செல்லும்போதும், கட்டாயமாக பார்க்க வேண்டிய இடங்களில் கவனித்ததில் நினைவில் இருப்பதைப் பற்றியும்தான் நான் பேசுகிறேன். இவையெல்லாம் ஒரே நாளில் நிகழவில்லை. தாங்கள் வருடக்கணக்காக தமிழில் சொல்லி வந்த சொற்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தில் மாற்றிப் பேசி சுய இன்பம் காண்கிறது தமிங்கில இனம்.

இதற்கெல்லாம் என்ன காரணம், பண்பாட்டு மாற்றங்கள் மட்டும்தானா ? தமிழை வைத்துக் கல்லாக் கட்டி தமிழையே அழித்து வருகின்றவை, தொலைக்காட்சி அலைவரிசைகள்தான். பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே திரைப்படக் கழிவுகளும், நடிகர்களைப் பற்றியதுமாகத்தான் இருக்கின்றன. இதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பங்கெடுப்பவர்கள் கான்வென்டில் படித்த தவளைகள். வெறும் இணைப்புச் சொல்லாக மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறவர்கள். நடிகர்களைப் புகழ்வது மட்டுமே இவர்களுக்கு வேலை. நடிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒரே சார் மயம்தான். அந்த சார் இந்த சார். ஃப்ன்டாஸ்டிக்கா இருந்துச்சு, சூப்பர்பா பண்ணார். டிரைக்டர் சார் சொன்னார். ம்யூசிக் போட்டார் என்று ஆங்கிலச் சொற்களின் பின்னான் "ஆ" சேர்த்து பண்ணுச்சு, இருந்துச்சு, நொட்டுச்சு, புடுங்குச்சு என்றுதான் எல்லா இடத்திலும் பேசுகிறார்கள். இவர்களை தனது முன்மாதிரிகளாகவும், கனவு நாயகர்களாகவும், பொழுது போக்குக்காகவும் கருதுகிறவர்கள் இதையே பெரிய "புதுமைத்துவம்" என்று கருதி முடிந்த வரை ஆங்கிலத்தில் அசிங்கப்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று சொல்லிவிட்டு, திரைப்படம் என்று சொல்லாமல் சினிமா என்றே பயன்படுத்துகிறார்கள் இணைய எழுத்தாளர்கள். அம்மா என்பதை விட அதிகமாக சினிமா என்ற சொல் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ஏனென்றால் சினிமாவுக்கு இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை பாருங்கள். 

இதில் ஆங்கிலத்திலேயே படித்து, ஆங்கிலம் பேசுமிடத்தில் வேலை பார்த்து அதனால் அப்படிப் பேசிப் பழகியவர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் இவர்களைத்தான் தமிழார்வலர்கள் அதிகமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழை இழிவும் செய்து புறக்கணிப்பவர்கள் இது போன்ற மேட்டுக்குடித் தமிழர்கள் இல்லை. அரைவேக்காட்டு நடுத்தரத் தமிழர்களைத்தான் நான் குறை சொல்வேன். சாலைகளெங்கும் போகும்போது இருபக்கமும் இருக்கும் கடைகளின் பெயர்களைக் கவனியுங்கள். பெயர்ப்பலகைகளைக் கவனியுங்கள். உணவகம், அச்சகம், கடை, அடுமனை என்றெல்லாம் 95 விழுக்காடு கடைகளில் எழுதியிருக்க மாட்டார்கள். எல்லாமே ஏதாவது சாமி பெயரில் இருக்கும். ஆனால் ஹோட்டல், பிரிண்டிங் பிரஸ், ஸ்டோர்ஸ், பேக்கர்ஸ் என்று எழுதியிருப்பார்கள். இந்த அறிவாளிகளுக்கு என்னதான் தேவை, ஆங்கிலத்தில் எழுதினால் போதாதா ? ஆங்கிலத்தை ஏன் தமிழில் எழுத வேண்டும் ? ஏனென்றால் Hotel, Press, Bakery என்று ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவாளிகள் ஆங்கிலத்தில் எழுதினால் "உ" "ஊ" தான்.. உங்கள் கடைக்கு வந்து வாங்கப்போகிறவர்கள் தமிழ்நாட்டுக்காரர்தான். நீங்கள் ஒன்றும் ஜப்பானிலோ சைனாவிலோ அமெரிக்காவிலோ கடை வைக்க வில்லை. இத்துப் போன தமிழன்தான் வரப் போகின்றான். பிறகெதற்கு ஆங்கிலத்தின் பெயரை தமிழ் எழுத்துக்களில் எழுதி தமிழை அழிக்கிறீர்கள். ஒரு மொழியைப் பேச வேண்டும் கற்க வேண்டுமென்றால் அதை முறைப்படி வேறு வழிகளில்தான் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இடையிடையே ஒரு சொல்லைப் புகுத்துவதும் தேவையில்லாத இடத்திலும் ஆங்கிலத்தைப் புகுத்துவதும் என்ன வகை தமிழ்(தாய்மொழி) வெறுப்பு மனநோய் ? குமரன் சில்க்ஸ், ஸ்ரீதிவ்யா பேக்கரி போன்ற பெயர்கள் சில எடுத்துக்காட்டுகள்.

நான் ஒன்றைக் கணித்து வைத்திருக்கிறேன் அது சரியா என்று தெரியவில்லை. இது போன்ற கடைகள், சிறிதும் பெரிதுமான கடைகள், மளிகைக் கடைகள், ஆலைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இது போன்றவற்றை நடத்துகிறவர்களுக்கு வயது எத்தனை இருக்கும் ? நிச்சயமாக 20 ஆக இருக்காது. 30, 40, 50, 60 இப்படி இருக்கும். இவர்களெல்லாம் ஆங்கில வாசனையே இல்லாத அரசுப் பள்ளிகள், தமிழ்வழிக் கல்வி கற்ற நபர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்குத் தெரியாத ஆங்கிலம்தான் பெரிது என்றெண்ணிக் கொட்டாவி விட்டவாறே அரைவேக்காடு ஆங்கிலத்தில் பேசியும் பெயர்வைத்தும் தமிழ்ப் புறக்கணிப்புத் துரோகம் செய்வோர்களாக இருக்கின்றனர். மிகச்சிலரே ஊட்டி கான்வென்ட், இன்டர்நேசனல சிலபஸ் வகையான ஆங்கிலக் கல்விகள் கற்றவர்களாக இருப்பர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவிற்கு வெளியே உலக அளவிலான வணிகம், சேவை, பணிப்பு, நியமம் வகையான நிறுவனங்கள் நடத்துகிறவர்களை விட்டு விடுகிறேன். அவர்களிடம் போய் தமிழில் தொழில் செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. ஆங்கிலம் என்பது ஏறக்குறைய உலக மொழியாக இருக்கிற காரணத்தால் அவர்கள் ஆங்கிலத்தில்தான் பெயர்வைக்க முடியும் தங்களுக்குள்ளேயான தகவல், ஆவண பரிமாற்றங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் செய்து கொள்ள முடியும். ஆனால் தமிழகத்திற்குள்ளேயே தமிழர்களிடம் மட்டுமே, அதுவும் தனது தெருவுக்குள்ளேயே பணி, வணிகம், தொழில் செய்யும் பிராணிகளுக்கு எதற்கப்பா ஆங்கிலப் பித்து. அதையும் தப்புத் தப்பாக எழுதி மானத்தை வாங்குகிறார்கள். இவர்களிடம் ஒவ்வொருவரிடமும் போய் சண்டை போட்டா தமிழைக் காக்க முடியும். சொல்லுங்கள். தமிழை வளர்ப்பது எவ்வளவு தேவையே அதை விடத் தேவை இருக்கும் தமிழை அழியாமல் காப்பதும். யாரிடமிருந்து தமிழர்களிடமிருந்துதான் என்பது என்ன ஒரு தர்மசங்கடம் பாருங்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

எழவூடு

ஜாதி என்பது எப்படி இயங்குகிறது. ஒரே ஜாதியில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது முதல் விதி. பிறகு, சில ஜாதிகளுடன் குறிப்பிட்ட எல்லை வரை பழகலாம், இயங்கலாம், உண்ணலாம் உறங்கலாம் என்று நீளும். ஜாதி பல வகையில் வெளிப்படும். அதில் ஒன்றுதான் இறப்பு வீட்டில் தாழ்த்தப் பட்டவர்கள் துக்கம் கேட்கும் விதம்.

எழவு வீடு என்றால், வயதாகி இறந்தவர் என்றால் பெரிய அளவில் துக்கம் வழிந்தோடாது. வீட்டிற்குள் மட்டும் பெண்களின் அழுகைச் சத்தம் கேட்கும். ஆண்கள் யாரும் வரும் உறவினர்களிடம் கட்டிப் பிடித்து அழுவதில்லை. வெளியே உட்கார்ந்து கொண்டு அன்றைய சூடான அரசியல் விவாதங்களையும், வேறு ஏதாவதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

துக்கம் விசாரிக்க யாரேனும் வந்தால், இறந்தவரின் மகனோ அல்லது அவரது உடன் பிறந்தவரின் மகனோ, தம்பியோ முன்னால் அமர்ந்து வருபவருக்கு வணக்கம் சொல்லி விசாரிப்பார்கள். வணக்கம் சொல்வது எப்படியென்றால், இழவு கேட்க வருபவர், இழவு வீட்டாரின் கையைத் தொட்டு வணங்கிக் கொள்வார்கள். அவர் கையைத் தொடும்போது இவர் (இறப்பு வீட்டுக்காரர்) கையை ஏந்தியவாறு வைப்பார் (துக்கம் கேட்க) வருபவர் அதைத் தொட்டுக் கும்பிடுவார்கள். பின்பு இருவரும் அருகருகே அமர்ந்து என்ன ஏது எப்படி நடந்தது, இறந்தவர் எத்தனை நாட்களாகப் படுக்கையில் இருந்தார், எந்தெந்த மருத்துவமனைக்குச் சென்றீர்கள், எத்தனை செலவாச்சு என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். பின்பு பேச்சு அவரவர்களின் சொந்தப் பிரச்சனை குறித்தோ, அல்லது தொழில் குறித்தோ திரும்பி விடும். முதல் நாள் இழவு வீட்டில் இருக்கும் துக்கம் இரண்டாவது நாள் இருக்காது. வெறுமனே ஒரு திருமண வரவேற்பு முடிந்த பின்னர் இருப்பது போல்தான் இருக்கும்.

இப்படி ஒரு நாளில்தான் நானும் சென்றேன். கெக்கே பிக்கே என்று அரட்டையடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். இறந்தவரின் தம்பிதான் துக்கம் கேட்க வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் வந்தார். வந்தவர் அழுகையுடன் இறந்தவரின் தம்பியின் காலில் விழுந்து அழுதார்.

"அந்த மகராசன் எங்களுக்கு எத்தனை பண்ணினார், கேக்கறப்பெல்லாம் எத்தனை தடவை எங்களுக்குக் காசு குடுத்தார்"  என்றெல்லாம் என்று என்னென்னவோ சொல்லி, இழுத்து இழுத்து  அழுதார். (காலில் விழுந்தவாறேதான்). அதற்கு அந்த மனிதரோ,  "சரி சரி விடு விடு, வயசாயிடுச்சு போயிட்டார். எல்லாரும் ஒரு நாளு சாகறதுதானே. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்' என்றார். பின்பு அதே போல் இன்னும் ஒரு மொக்கையான வசனத்தைப் பேச அதையும் நகைச்சுவையென்று ஆதரித்து இரண்டொருவர் சிரித்து வைத்தனர். பின்னர் அந்தப் பெண் போய் அந்த வீட்டின் மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கத் தொடங்கினார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ? அந்த வீடு ஒரு மேல்ஜாதிக்கார (கொங்கு வேளாளக்கவுண்டர்கள்) வீடு. அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். இப்படி இழவு வீட்டிலும் அந்தப் பெண் வந்து செத்துப் போனவனின் சொந்தக்காரன் காலில் விழுந்துதான் "துக்கம் கேட்க" வேண்டியிருக்கிறது.  என்ன கேவலம். இப்படி துக்கம் கேட்க வருவோரே காலில் விழுந்துதான் எழவேண்டும் என்பது என்ன வகை உணர்வு ? சடங்கு சம்பிரதாயம் ? ஆண்ட பரம்பரைக் கனவில் மிதப்பவர்கள் இது போன்ற இழிசெயல்களை எப்படி நியாயப்படுத்துகிறார்கள். இந்த மேல் ஜாதி உணர்வு என்பது ? இப்படி அடுத்த மனிதனை பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் தள்ளி வைத்து, அவனை அவமானப்படுத்து உணர்வே ஜாதி. 

நன்றி - புகைப்படம்  ஃபேஸ்புக்கில் சங்ககிரி ராஜ்குமார் (திரைப்பட இயக்குநர்) பகிர்ந்தது. இந்தப்படத்திற்கும் நான் எழுதியிருக்கும் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஜாதி என்பது எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனென்றால் பலரும் ஜாதியை ஏன் எதிர்க்கிறார்கள், அது வெறும் அடையாளம்தானே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும் நினைக்கக்கூடும். ஆனால் அது எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இந்தப் படமே உதாரணம். கிராமங்களில் மேல்ஜாதிக்காரர்களின் தேநீர் கடையோ வீடோ, இன்றும் இப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் இப்படித்தான் இரு கைகளாலும் வாயில் வைத்துக் குடிக்க வேண்டும். மேல்ஜாதிக்காரர்களின் பாத்திரத்தில் குடிக்கக் கூடாது. இல்லையெனில் அவர்களுக்கென்று கொட்டாங்குச்சியையோ, தனிக் குவளையோ தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். யூஸ் அன்ட் த்ரோ காகிதக் குவளைகள் வந்ததால் இது அதிகமாக வெளியே தெரியாமல் நடக்கிறது. எங்கள் ஜாதிக்காரர்கள் இப்படி ஒரு மனிதனை நடத்த மாட்டார்கள் என்று எந்த ஆண்ட பரம்பரை ஜாதி வெறியனாவது சொல்ல முடியுமா ? இல்லை இது எங்கள் ஊரில் இல்லை என்று மறுக்கத்தான் முடியுமா ?
இதற்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது. இந்த இழிபிறவிகளின் வக்கிர உணர்வே ஆண்ட பரம்பரைப் பெருமையெல்லாம். இல்லாதப் பட்டவர்களை அதிகாரம் செய்து திரியும் இவர்கள் தங்களை மேல் ஜாதியினர் என்று பீற்றீக் கொள்கிறார்கள். எல்லா மேல் ஜாதிகளின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. இந்த "உணர்வு"க்குப் பேரும் "உணர்வுதான்". இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கும் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஜாதி என்பது எந்தக் கோணத்திலும் மன்னிக்க இயலாதது. இவர்களுடன்தான் நானும் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பது எனக்கொரு தண்டனை.

ஆனால் எந்தக் கவுண்டரும் (மற்றெல்லா மேல் ஜாதிக்காரர்களும்தான்), கீழ்ஜாதிக்காரன் விவசாய வேலை செய்து விளைந்த காய்கறிகளை நான் உண்ண மாட்டேன், அவன் தொட்ட பணத்தை
தொட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். தனக்கு சாத்தியமான எல்லா விதங்களிலும் முற்போக்காக நடப்பான். ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த மனிதனை மட்டும் மனிதனாகவே மதிக்க மாட்டான்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

கேட்கிறார்கள் கேட்கிறார்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்

பள்ளிக்குச் செல்லும் வயதில் வீட்டுக்கு வருகின்றவர் போகின்றவர் எல்லோரும் இப்படிக் கேட்பார்கள்

எத்தனாவது படிக்கற ? எத்தனாவது ரேங்க் வாங்கற ?

நல்லாப் படிக்கணும் என்ன !! ? ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் உங்கம்மாப்பா எவ்வளவு சிரமப்பட்டுப் படிக்க வைக்கிறாங்க. படிச்சாத்தான் நல்ல வேலை கிடைக்கும், அப்பறம் எங்கள மாதிரி கஷ்டப்படத் தேவையில்லை. இதெல்லாம் எங்கள் காலம்.

பதில் : ??!!!

இப்போது இக்கேள்விகள் இப்படி மாறியிருக்கும்.

எந்த ஸ்கூல்ல படிக்கற ?  சிபிஎஸ்சியா இல்ல மெட்ரிக்கா ? (இப்பல்லாம் யார் அரசுப் பள்ளியைத் தேடுகிறார், இல்லாதப்பட்டவர்களைத் தவிர) ஹாஃப்ஏர்லில என்ன க்ரேடு வாங்கின ?

அடுத்து கல்லூரிக்குப் போகும் வயதில், வந்து அப்பாவிடம் கேட்பார்கள். அப்படியே நம்மிடமும்.

பையன எந்த கோர்ஸ்ல சேத்தீங்க ? எந்த காலேஜ் ? அது படிச்சா ஃப்யூச்சர் நல்லா இருக்குமா ? ஸ்கோப் இருக்குமா ? வெளிநாடெல்லாம் போக முடியுமா ? என்ன மாதிரி வேலை கிடைக்கும் ?

பதில்: ஃபைனல் இயர்லதான் தெரியும்.

எவனுக்குத் தெரியும் அதெல்லாம், இப்போதைக்கு இதுதான் வளரும் துறை என்று "நம்பி" அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறோம். வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். என்று நினைத்துக் கொள்ள முடியும் வெளிய சொல்ல முடியாது.

படித்து முடித்தவுடன் வந்து கேட்பார்கள்.

இன்னும் வேலைக்குப் போகலையா ? கேம்பஸ்ல செலக்ட் ஆகலையா ? எத்தனை அரியர் இன்னும் இருக்கு ? பார்ட்டைமா போலாம்ல ? இல்ல அப்பா பிஸினஸையே பாத்துக்கப் போறயா ?

பதில்: தேடிக்கிட்டே இருக்கேன், ஒரு கம்பெனில கூப்டறேன்னு சொல்லிருக்காங்க. பாக்கணும் !

வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்ன பிறகும், அல்லது தெரிந்து கொண்டபின்னும் இத்தனை வீச்சுக்கள் !

தக்கி முக்கி ஒரு அடிமை வேலையில் சேர்ந்த பின் வருவார்கள்.

எந்த கம்பெனி ? என்னா மாதிரி வேலை ? எவ்வளவு சம்பளம் ? போகப் போக சம்பளம் ஏறுமா ? வேலை பர்மனென்ட்டா ?

பதில்: ஒரு டொன்டி(20) வரும் என்று பொய் சொன்னால்,

இவ்வளவுதானா ? ரொம்பக் கம்மியா இருக்கே ? இத்தன படிச்சும் இவ்வளவுதான் குடுக்கிறானா ? இதுக்குப் பேசாம தொழிலையே பார்த்துக்கலாமே ? என்பார்கள்

சம்பளம் ஐந்திலக்கத்திற்குக் குறைவு என்றால் கௌரவக் குறைவு என்பதால், பெரும்பாலும் வாங்கும் ஊதியத்தின் இருமடங்காகவே சொல்வார்கள் இளைஞர்கள். இருந்தாலும் கேள்வி கேட்கும் சொந்தக் காரரோ, பக்கத்து வீட்டுக் காரரோ அல்லது வேறு யாருமோ என்ன சொல்வார்கள் தெரியுமா ? எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் இந்த வேலையில் இருக்கிறான். அவனுக்கு சம்பளம் ஒரு இலட்சத்துக்கும் மேலையாம் என்று சொல்வார்கள். நமக்கோ வருடாந்திரமே அதை விட குறைவாக இருக்கும். விப்ரோ மாதிரி நிறுவனங்களிலேயே அப்ரசண்டிகளாக குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள்.

வாலிப வயது நெருங்கியவுடன் மீண்டும் வருவார்கள்.

பையனுக்கு/பொண்ணுக்கு கல்யாணம் பண்ற மாதிரி எண்ணமே இல்லையா ? வயசாயிட்டே போகுதுல்ல ? அப்பறம் கொஞ்சம் வயசு தாண்டிட்டா கல்யாணம் நடக்கறது கஷ்டமாயிடும்.

திருமணம் நடந்த பின்னரும் வருவார்கள். விட மாட்டார்கள்

கல்யாணம் ஆயி இத்தன நாள் ஆயிடுச்சு ஒரு விசேசமும் இல்லையா என்று ஆரம்பிப்பார்கள்.

பிறகு குழந்தை பிறந்து வளர்ந்தவுடன் முதலிலிருந்து தொடங்கும் கேள்விகள். ஒரு நாள் வந்து நீ இன்னும் சாகவில்லையா என்று கூட கேட்பார்களாயிருக்கும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

உலக அன்னையர் நாள்

என்னிடம் ஒரு நண்பர்(பெண்) கூறினார். "என்ன இருந்தாலும் எனக்கு ஜெயலலிதாவை ஒரு விசயத்தில் பிடிக்கும்." எத்தனை ஆம்பளைகளை கால்ல விழ வைக்கிறா !. அதுக்கு எத்தனை கெத்து இருக்கணும் என்றார்.  அது தவறு என்று சொல்ல நினைத்து பின்பு அமைதியாகி விட்டேன். அவர் ஒரு கோணத்தில் சொல்கிறார். அது சரியாகவே தோன்றியது. எல்லா இடத்திலும் அவர்கள்தான் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் மூலம் அவர்கள் தங்கள் "எதிரிகளை" பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும், நாமெல்லாம் திரைப்பட நடிகனை நாமாகக் கற்பனை செய்து கொண்டு மகிழ்கிறோமே அது போல. இதற்கும் அன்னையர் தினத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் உண்மையில் அன்னையர்களை அடிமைகளைப் போலத்தான் நடத்தி வருகிறோம். இதில் ஆண் பெண் பேதமில்லை. அம்மா என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆத்திரத்தையும் காட்டலாம். அவர்கள் அருகாமையை நாம் இழக்கும் போதுதான் தெரிகிறது. நாமெல்லாம் எதற்கும் உதவாதவர்கள் என்று. வீட்டில் ஒரு பொருளை நம்மால் தேடி எடுக்க முடிகிறதா ?

ஒரு முறை ஜக்கி வாசுதேவ் கூறினார். நான் பல பெண்மணிகளிடம், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், "ஓ, நான் வெறும் குடும்பத் தலைவிதான்" (just housewife) என்பார்கள். "ஏன் நீங்கள் வெறும் இல்லத்தரசிதான் என்று சொல்கிறீர்கள் ?!" என்று நான் கேட்பேன். இரண்டு அல்லது மூன்று புதிய உயிர்களை ஊட்டி வளர்ப்பதன் முக்கியத்துவன் அவர்களுக்குப் புரிவது போலத் தோன்றவில்லை. இது ஒரு மிக முக்கியமான வேலை. என் தாயார் என்னிடம் ஒரு போதும் "எனக்கு உன்மேல் கொள்ளை பிரியம்" என்றெல்லாம் எதுவும் சொன்னதில்லை. அவர் சும்மா வாழ்ந்தார். அவருக்கு எங்கள் மேல் பிரியம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தோன்றியதே இல்லை. அவர் வாழ்க்கை முழுவதையும் எங்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் எங்களுக்குள் அந்தக் கேள்வியே எழுந்ததில்லை. அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் என்னுடன் வாழ்ந்த காலகட்டத்தில் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு என் தாயாரின் நேரடியான பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால் எனக்காக அவர் உருவாக்கிய சூழ்நிலை இல்லாமல், நான் இப்போது இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். இது ஏதோ ஒரு கட்டத்தில் வெளிப்படும் என்பதை நன்கு உணர்ந்து, அந்த சூழ்நிலையை உருவாக்க அவர் தன் உயிரையே கொடுத்தார். அதுதான் அவர் எனக்காகச் செய்திருப்பதில் முக்கியமானது. இது முக்கியமானதல்ல என்று எவரும் ஏன் நினைக்கப் போகிறார்கள் ? வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில், எதைப் பற்றியும் நாங்கள் நினைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. சரியான பின்னணி எப்போதும் இருப்பதை அவர் உறுதி செய்தார். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த கவலையே இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். பல நாட்களுக்குத் தொடர்ந்து கண்மூடி அமர்ந்திருக்கும் சாத்தியத்தையும் எனக்கு இதுவே அளித்தது.

இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்திருக்கும். அவர்கள் (அம்மாக்கள்தான்) என்ன செய்கிறார்கள் என்பதையே நாம் கவனிக்கத் தேவையில்லை. அம்மா செய்யும் எல்லாச் செயல்களுமே குடும்பத்துக்காக அன்றி அவளுக்காக இல்லை. இன்னும் சோறாகலையா என்று கேட்கத்தான் நமக்குத் தெரியும். ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன பாடு பட வேண்டியிருக்கிறது ?

அன்னைகளுக்குத் தெரியவில்லை
நமக்கான நாளை "உலகமே" கொண்டாடுகிறது
மற்றவர்க்கான தினங்களைப் போல மற்றவர்களைப் போல
இன்றும் அவர்களுக்கு விடுமுறை கிடையாது
அன்றாட வேலைகளையே இன்றும் செய்கிறார்கள்
அன்னையர்களின் புதல்வர்களோ
அன்னையர் தினமென்று தொலைக்காட்சிகளில் வாழ்த்துகிறோம்
வெட்கச்சிரிப்புடைய அம்மாவுடன் எடுத்த கைப்படத்தையும் பகிர்கிறோம்
நிலைத்தகவல் போடுகிறோம்
கவிதை புனைகிறோம்
அடுக்களையில் இருக்கும் அம்மாவிடம்
அலட்டலாக ஒரு தேநீரும் கேட்கிறோம்
Download As PDF
Bookmark and Share

Post Comment

அரை கிலோ பகுத்தறிவு


பகுத்தறிவு = பகுத்து + அறிவது

எதையுமே பகுத்துப் பாய்த்து ஆராய்ந்து அறிந்து புரிந்து கொள்வதுதான் பகுத்தறிவு. இது ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் இறைமறுப்பு என்ற பொருளில் மட்டுமே கொள்ளப்பட்டது. ஏனெனில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியவர்கள் இறைமறுப்பாளர்கள் எனவே அந்தப் பொருளிலேயே முன்னிறுத்தப்பட்டது. இன்றோ எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நிலையில் பகுத்தறிவு எனப்படுவது அவரவர் கொள்கைகுத் தேவையான தகவல்களைத் தேடித் திரட்டி அதை நிரூபிப்பதே பகுத்தறிவு என்றாகிவிட்டது. சரி தவறு என்று விருப்பு வெறுப்பு பாராமல் ஏற்றுக் கொள்வதெல்லாம் கிடையாது. இதில் யாரும் தோற்றதாகத் தெரியவில்லை, வென்றதாகவும் தெரியவில்லை. இன்றோ எல்லாரும் பகுத்தறிவுவாதிகள்தான். பகுத்தறிவு என்ற சொல்லை எல்லா சமய நூல்களிலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமயவாதிகள் மிகத் தெளிவாகவும், திறமையாகவும் அறிவியல் அறிஞர்களாகவும், வரலாற்றறிஞர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்



மீம்கள்(memes) என்றாலே சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதற்கு இது ஒரு சான்று. ஆனா ஆவன்னா இன்னா ஈயன்னா என்றால் அது கலாய்த்ததாகிவிடுமா ? இந்த மீமில் என்ன சொல்ல வருகிறார்கள். இறைமறுப்பாளரான - பார்ப்பன எதிர்ப்பாளரான கருணாநிதியின் மனைவி ஐயரிடம் ஏதோ சாமி பிரசாதம் வாங்குகிறார். இதனால் கருணாநிதி கலாய்க்கப்பட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். ஏன் சாமி கருணாநிதி சாமி கும்பிடாதவர் என்றால் அவர் மனைவி கும்பிடக் கூடாதா ? சரி இப்படி வைத்துக் கொள்ளலாம். கருணாநிதி அவரது மனைவிகளை சாமி கும்பிட அனுமதிக்கவில்லை என்றால் என்ன சொல்லியிருப்பார்கள். "பாருய்யா நாத்திகனின் சர்வாதிகாரத்தை, மனைவியின் கடவுள் நம்பிக்கைக்குக் கூட அனுமதியில்லை". இப்படி மனைவியின் இறை நம்பிக்கையை அங்கீகரித்ததால் "சொந்த மனைவி கூட கருணாநிதியை மதிப்பதில்லை, இவரெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்ய வந்து விட்டார்" என்று கூறுவார்கள். வேறு எப்படித்தான் இறை மறுப்பாளர்கள் தமது கற்பை நிரூபிக்கச் சொல்கிறார்கள்.

ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஜாதி ஒழிப்பு பேசத் தகுதியில்லை. ஆங்கில வழியில் குழந்தைகளைப் படிக்க வைப்பவர்களுக்கு தாய்மொழிக்கல்வி பற்றிப் பேசத் தகுதியில்லை. இது போன்று பல விமர்சனங்கள் தத்தமது எதிரிகளை தாக்கப் பயன்படுத்துகிறார்கள். சரி இப்படிக்
சொல்கிறவர்கள் பெரும்பாலும் இறை நம்பிக்கை உடையவர்களே. இந்த இறை நம்பிக்கை உடையவர்களின் மனைவிகள் திடீரென்று மனம் மாறி, நான் வேறு மதத்துக்கு மாறுகிறேன் எனக்கு அந்த மதமே உண்மையாகத் தெரிகிறது, எனக்கு தாலி அணியப் பிடிக்க வில்லை என்றெல்லாம் சொன்னால் உடனே இறைநம்பிக்கையாளர்கள் ஆகட்டும் அப்படியே என்று வாழ்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பீர்கள் இல்லையா ?

மே 1 தொழிலாளர் ஊர்வலத்தில் செங்கொடி ஏந்திச் செல்பவர்கள் அனைவரும் மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்தவர்களா என்ன ?

நம் கொள்கை சரிதான் என்று உறுதிபட நம்பினாலும், அதை அடுத்தவர்க்கு புரியவைத்து ஏற்றுக் கொள்ள வைப்பது எத்தனை கடினம் என்று தெரியாதா ? அது தோல்வியிலே கூட முடியும். அதற்குக் கருணாநிதியே  உதாரணம். வீட்டுப் பெண்களைக் கட்டாயப் படுத்தி நம் கொள்கைக்கு ஏற்றவாறு நடக்கச் செய்ய கூட முடியும். ஆனால் அது ஒரு இழிசெயல். மனைவி கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினால் கணவன்தானே கூட்டிச் செல்ல வேண்டும். நான் இறைவனை நம்பாதவன் என்று விறைத்துக் கொண்டு நிற்க முடியுமா ? அடுத்தவர் நம்பிக்கைய ஆதிக்கம் கொண்டு தடுப்பவர்கள் மருட்டுகிறவர்கள் மதவாதிகளும், ஜாதி வெறியர்களும்
தான்.

சரி அந்த ஐயரை ஏன் விமர்சிக்க வில்லை, காலம் பூராவும் தன்னைத் திட்டிய கருணாநிதியின் மனைவிக்கு இவர் ஏன் பிரசாதப் பையை வழங்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லையே. ஒரு வேளை அவரது பெருந்த
ன்மையை ஆராதிக்கும் பொருட்டு அதை விட்டுவிட்டீர்களா ? கருணாநிதி நாத்திகம் பேசுகிறார், இந்துக்களை விமர்சிக்கிறார் ஆனால் சன் டிவியில்தான் முதன் முதலில் ராமாயணத்தை ஒளிபரப்பினார்கள் என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் கருணாநிதிக்கே சன் டிவியின் மீது முழு அதிகாரம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் இதற்குக் கருணாநிதியையே விமர்சித்தார்கள். ஏன் கருணாநிதியின் தொலைக்காட்சியில் போய் ராசி பலன் சொல்கிறார்கள், ஏன் ராமாயண, மகாபாரத ஒளிபரப்பு உரிமையைக் கொடுத்தார்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்று யாரும் கேட்கவில்லையே !!

எனக்கு கருணாநிதியை ஆதரிக்க வேண்டுமென்ற விருப்பமில்லை. கருணாநிதியை விமர்சிக்க நூறு காரணங்கள் இருக்கின்றன. அவரை விமர்சிக்கப் பயன்படுத்து காரணம் கருத்து தவறானது. ஏனென்றால் அது என்னையும் சேர்த்துத்தான் விமர்சிக்கிறது. அதனால்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
Download As PDF
Bookmark and Share

Post Comment

வாட்ஸ்-ஆப் அந்தரங்கக் காணொளிகள் - பகிர்தலும் குற்றமே !

இந்த வாட்ஸ் அப் என்பதை கட்செவிஅஞ்சல் என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கட்செவி அஞ்சலோ மனிதனைப் படுத்தி எடுக்கிறது. குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் செலுத்தி காய்ந்து போயிருந்த நமக்கு, திறன் பேசியுடன் வந்த சீதனமே இந்தக் கட்செவி அஞ்சல். இதில் நாம் குறுஞ்செய்திகள் மட்டுமன்றி, நெடுஞ்செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பவும் இயலும். இது இணைய இணைப்பின் வழி இலவசமாகக் கிடைத்ததால் குறுஞ்செய்தி சேவை நமக்குத் 99 % தேவையில்லாமலே போய்விட்டது. இது ஒரு மக்கள் ஊடகமாக அற்புதமாகப் பயன்படுத்துகின்றனர். சின்னச் சின்ன சாதனைகள், அட போட வைக்கும் கவனிப்பாரற்ற மனிதர்களின் சாகசங்கள் என காணொளிகள் களைகட்டுகின்றன. ஊடகங்களில் வராத செய்திகள் கூட இதில் மிகவேகமாகச் சென்று சேர்கிறது. ஆனால் என்ன ஒன்று திறன்பேசி+வாட்ஸ் அப் + இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

நம் மனிதர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பார்க்கிறோமல்லவா ?  இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக ஆளாளுக்கு ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு கண்டதையும் பகிர்கின்றனர். இதில் நன்மை இல்லாமலும் இல்லை. ஆனால் ஒரு செய்தியின் உண்மைத்தன்மையைப்பற்றி எந்த வித முன்னெச்சரிக்கையும் பொறுப்புமின்றி வெளியிடுகின்றனர். சரி இலவசமாகக் கிடைப்பதால் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமல்லவா ? அதை யார் கேட்கப்போகின்றார்  ? முன்பு ஃபேஸ்புக் பரபரப்பாக இருந்த போது ஒரு செய்தி பொய் எனில் அதை ஒருவர் சொன்னால் எல்லார்க்கும் தெரியும் இன்றோ மூடிய கதவுக்குள் இருக்கும் கட்செவி அஞ்சலில்(Whatsapp) கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைகின்றனர். நான் இதில் நம் மக்கள் எவ்விதம் சீரழிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன்.

இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் பயங்கரவாதிகளின் காணொளிகள் கூட மிக எளிதாக நம்மை வந்தடைகிறது. தலையை வெட்டுவது, அடித்துத் துன்புறுத்துவது, கையை வெட்டுவது, சுட்டுக் கொல்வது என்ற மனித இனத்தின் இழிவை அப்படியே காட்சியாக்கிக் குழந்தைகள் வரை அதை சாதரணமாகக் கொண்டு எவ்வித உணர்ச்சியுமின்றி வந்து நம்மிடம் காட்டுகின்றனர். அவைகளைப் பார்த்தால் நமக்கு ஈரல் குலை நடுங்குகிறது. ஏனெனில் குழந்தைகள்தான் திறன்பேசியை அதிகம் வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலுள்ள டெம்பிள்ரன், சப்வேசர்ஃப் வகை விளையாட்டுக்களில்தான் அவர்கள் திளைத்துக் கிடக்கின்றனர்.

அடுத்து நான் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிட விரும்புவது ஆண்களை, குறிப்பாக இளைஞர்களை. இவர்கள் எவ்வகைக் காணொளிகளை எவ்விதமான குற்ற உணர்ச்சியோ அறவுணர்ச்சியோ இன்றிப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று நான் சொல்லாமலேயே புரிந்திருக்கும். பெண்களின் குளியளறையிலும், கழிவறையிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் கணக்கற்ற வகையில் பரவி வருகின்றன. இதை எல்லா வயது ஆண்களும் ரசித்தும், கேட்டு வாங்கியும், பரப்பியும் வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் பெண்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 7 ஆண்டு சிறை: போலீஸ் எச்சரிக்கை என்று அறிவிப்பு வந்தாலும் அதனால் இது வரை தண்டிக்கப் பட்டவர் யாருமில்லை. ஆனால் பரவும் காணொளிகளுக்கு மட்டும் குறைச்சலில்லை.  இது எப்படி நிற்கும். பரப்புகிறவர் திருந்தினாலொழிய நிற்கப் போவதில்லை. அந்தப் பெண்களின் மனநிலை குறித்து கொஞ்சமாவது மனசாட்சியைக் கொண்டு சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா ?

ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொன்று, தூக்கு தண்டனைக்காகக் காத்திருப்பவனே அந்தப் பெண் மீதுதான் குற்றம் சாட்டுகிறான்(டெல்லி பாலியல் குற்றவாளி முகேஷ் சிங்). ஆக பாலியல் வன்முறை செய்தவனே, கொன்றவனே அதைக் குற்றமாகக் கருதாமல், அப்பெண்ணையே குற்றவாளி ஆக்கும் சமூகத்தில் இது போன்ற நிர்வாணப் படங்களை பரப்பி இன்பம் காண்பவர்கள் ஏற்றுக் கொண்டு நிறுத்தவா போகிறார்கள். ஊர் தவறாமல் சாராயக்கடை இருக்கும்போது கோக் குடிக்காதே உடலுக்குத் தீங்கு என்றால் எள்ளி நகையாடத்தானே செய்வார்கள்.

அவர்கள் ஏன் தங்களைத்தானே குளியலறையில் வைத்து தற்படம் () கைப்படம் (selfie) எடுத்துக் கொள்ள வேண்டும் ? அவர்களாகத்தான் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பியிருப்பார்கள். எனவே இது அவர்களின் தவறு.

இவர்கள் கள்ளக்காதல் செய்யும் எடுத்ததைப் பரப்பினால் என்ன வந்துவிடும், அவர்களே தவறு செய்தவர்கள்தானே அவர்கள் மீது என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது.

இது எல்லார்க்குமே தெரியும். எவனோ ஒருவன் எனக்கு அனுப்பினான் நானும் அனுப்புகிறேன். மற்றதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. நான் அனுப்பாததால் இது பரவாமல் இருக்கப் போகிறதா ?

அவர்கள் ஏன் படுக்கையறையில் இருக்கும் போது உடலுறவு கொள்வதைப் பதிவு செய்ய வேண்டும் இப்போது வருந்த வேண்டும்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் அனுப்புவேன் உனக்கென்ன ?

இப்படியெல்லாம் பதில் வரும். இவையனைத்தையும் ஒரே கேள்வியில் மடக்கி விடலாம். அந்தக் குறிப்பிட்ட வீடியோவிலோ, ஆடியோவிலோ இருக்கும் பெண் உங்களது வீட்டுப் பெண்ணாகவோ, உங்களுக்கு வேண்டிய பெண்ணாகவோ இருந்து விட்டால் என்ன செய்வார்கள். "என்ன" செய்ய வேண்டுமோ அதைத்தானே செய்வார்கள். நம் வீட்டுப் பெண்கள் என்றால் ஒரு நியாயம் தெரியாத பெண் என்றால் ஒரு நியாயமா ? என்றுதான் கேட்கிறேன். தன் வீட்டுப் பெண் பத்தினியாக இருக்க வேண்டும். அடுத்த வீட்டுப் பெண் பரத்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணும் ஆண்கள்தான் திருந்த வேண்டும். இது தவறு என்று ஒவ்வொருவரும் உணரவேண்டும். மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இது நிச்சயம் புரியும்.

சரி அவர்கள் வாதத்தின் படி வைத்துக் கொண்டால், அந்தப் பெண்ணோ ஆணோ குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்குமல்லவா ? அவர்கள் எத்தகைய சங்கடத்தை எதிர் கொள்வார்கள் என்றாவது யோசிக்க வேண்டாமா ? நமது குடும்ப உறுப்பினர் செய்யும் தவறுக்கு நாம் பொறுப்பாக முடியாது, அவரைக் கட்டுப் படுத்தவும் முடியாது. ஆனால் அந்தத் தவறுக்கு நாமும் சேர்ந்தல்லவா பாதிக்கப் படுவோம் ?

இதற்கு முன்பு இணைய வெளியெங்கும் பல்வேறு தளங்களில் இது போன்ற வீடியோக்கள் வெளிவந்தன. சைபர் க்ரைமும் இதற்கு ஒரு தடை போட முடியாமல் திணறின. இன்றும் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இங்கிருந்து எடுக்கப்படும் வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் அயோக்கிய நாதாரிகள் மூலமாக இணையத்தில் ஏற்றப்பட்டு வெளியாகின. இதனால் அவர்களைப் பிடிப்பது இயலாத செயலானது. இன்றோ வாட்ஸ் - அப் மூலமாக இது பல மடங்கு அதிகமாகி விட்டது.

இதை பெண்களின் தவறாக/திமிராக சித்தரிப்பதே தவறானது. ஒருவருக்குத் தெரியாமலே அவரது மடிக்கணினி கேமராவின் மூலமாகவே இதை எடுக்கவும் முடியும். யாருடைய வீட்டின் குளியலறையிலும், படுக்கையறையிலும் ஸ்பை கேமரா வைத்து படம் பிடிக்க முடியும். வீட்டு வேலை செய்பவர், வயரிங் வேலை, ப்ளம்பர், கேபிள் ஆப்ரேட்டர் என்றெல்லாம் சொல்லி வீட்டுக்குள் நுழையும் தெருப்பொறுக்கிப் பன்னாடைகள் இந்தக் கேமராவை ஒளித்து வைத்து எடுக்கின்றனர். எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் வேண்டியவற்றை கறந்து விட்டுப் பின்னர் வீடியோக்களையும் இணையத்தில் ஏற்றி விடுகின்றனர்.

தன்னையே நிர்வாணமாகவோ அரை நிர்வாணமாகவோ படம் எடுத்துக் கொள்பவர்கள் எல்லாரிடமும் அனுப்புவதற்காக எடுப்பதில்லை. திரைப்படம், விளம்பரங்களில் வரும் பெண்களைப் போலவே தங்களை ஒப்பனை, பாவனை செய்து கொள்பவர்கள் தம்மீது கொண்ட குறுகுறுப்பு உணர்வினால் புகைப்படம் எடுப்பர், (அவரவர் படுக்கையறையில், என்னென்ன செய்கிறார்கள் என்று அவரவர்க்குத் தெரியுமல்லவா இதில் என்ன வேடிக்கை இருக்கிறது)

இன்னும் சிலர் விளையாட்டுத்தனமாக ஆபாசமாகப் படம் பிடித்தது எனப் பல வகை வீடியோக்கள் உலாவருகின்றன. பர்தாவுடன் இருக்கும் பெண்கள் கூட இந்த வீடியோக்களில் சிக்கியுள்ளனர்.

உங்கள் வீட்டின் அடுத்த தெருவில் அப்படி ஒரு பெண் இருப்பதே உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவள் வெளியேகூட வந்திருக்க மாட்டாள். ஆனால் அவளுடைய பெயரும் அலைபேசி எண்ணும் அடுத்த ஊரின் பொதுக்கழிவறைச் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் "மேட்டர்" என்ற அடைமொழியுடன். அவள் நண்பனுடன் ஏதாவது பிரச்சனை வந்து விட்டால், அவனும் ஒரு மாதிரியான ஆளாக இருந்தும் விட்டால் மேலே நான் சொன்னபடிதான் நடக்கும்.

அலைபேசியில் பெண்களை வேண்டுமென்றே உடலுறவு, கைமைதுனம் குறித்துப் பேசவைத்து அதைப் பதிவு செய்து எல்லோர்க்கும் பரப்பி அதை ஒரு வைரல்-ஆக மாற்றி பரபரப்பூட்டி மகிழ்கின்றனர். இவர்களை நம்பி தமது அந்தரங்கம், உணர்வுகள், படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களை ஏமாற்றி அவர்கள் மானத்தை வாங்குகின்றனர். ஆனால் பெண்கள்தான் காசுக்காக ஏமாற்றுகிறார்கள் என்று  நடிகர்களும் வசனம் பேசுகிறார்கள். எல்லோரும் அதை வரவேற்று சிரிக்கிறார்கள்.

அது போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்தவர்கள் அதை அழித்து விட்டாலும், அந்த அலைபேசியோ, மெமரி கார்டோ இதற்கென்றே அலையும் நபர்களின் கையில் கிடைத்தால் ரெட்ரைவல், ரிகவரி மென்பொருட்களைப் பயன்படுத்தி, அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் மீட்டு எடுத்து அவைகளைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சராசரிப் பெண்களின் நிலையே இப்படியென்றால் நடிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மாதம் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோக்கள் வருகின்றன. அதை ஊடகங்களே தலைப்பிட்டுப் பரப்பி அவர்களின் மானத்தை வாங்குகின்றன. நடிகை ஆபாசமாக நடிக்கிறாள் என்று அவளுடைய படம், வீடியோ க்ளிப்பிங்க்ஸ் களைப் பார்த்துப்,  பகிர்ந்து பழகிய ஆட்கள், நடிகையாக இல்லாத சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றிப் பரப்பியும், பேசியும் மகிழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு நிர்வாண உடல் மட்டும் போதுமாக இருக்கிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன என்று இருக்கின்றனர். ஏதாவது ஒரு நாள் அவரவர் வீட்டுப் பெண்கள் இதில் மாட்டினால் தெரியும். ஆனால் அப்போது நாம் வருந்துவதைப் போல மற்றவர்கள் வருந்தாமல் வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது பகிராதே எனது குடும்பத்தைப் பாதிக்கிறது என்று சொல்லும் தகுதியையே இழந்திருப்பார்கள். 

இதனால் கொலை, தற்கொலைகள், பணம் பறிப்புகள் எனப் பல நிகழ்வுகளை நாம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் இது போன்ற வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வந்தால் பரப்புவது தவறு என்றோ நாமும் அச்செயலுக்குத் துணை புரிகிறோம் என்றோ யாரும் உணர்வதில்லை. என்னுடைய வேண்டுகோளெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு வரும் எவ்விதமான செய்தியோ, வீடியோ, ஆடியோ- வாக இருந்த போதிலும் அதை மற்றவருக்குப் பகிராதீர்கள். அதை உங்களுக்கு அனுப்பும் நபருக்கும் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். நம்மால் பாலியல் வன்முறை நடப்பதைத் தடுக்க முடியாது, ஆனால் நாம் பாலியல் வன்முறை நடபெறுவதற்குத் துணை புரியாமல் இருக்க முடியும். அதில் பங்கெடுக்காமல் இருக்க முடியும். இது அவரவர் அறவுணர்ச்சி சார்ந்தது. அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று சாக்கு சொல்லிவிட்டு நீங்களும் தவறு செய்ய முடியாது. சாராயக்கடை எல்லா ஊரிலும் இருக்கிறது என்பதற்காக எல்லாரும் குடிப்பதில்லையே, வைராக்கியத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள். ஊரெல்லாம் கறிக்கடை இருக்கிறது என்பதற்காக சைவ உணவுக்காரர்கள் போய் வாங்கிவிடுகிறார்களா ?


Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடுது கொங்குநாடு

தலைப்பைப் படித்து பெரிதாக யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஓ போடுவது ஜே போடுவது ஜால்ரா போடுவது, ஆமாஞ் சாமி போடுவது, சோப்புப் போடுவது, கடலை போடுவது, அறுவை போடுது, ரம்பம் போடுவது, மொக்கை போடுவது, சீன்(scene) போடுவது என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா. அது போலவே டீ போட்டுப் பேசுவது, டா போட்டுப் பேசுவது, சார்(sir) போட்டுப் பேசுவது என்பனவும் நமக்குத் தெரியும். தற்காலத்தில் தமிழ்நாட்டில் பலர் ஒன்றைப் போட்டுப் பேசுகின்றனர். அது என்னவென்பதைத்தான் தலைப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

கொங்கு நாடு கேள்விப்பட்டிருப்பீர்கள். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, போன்ற சில மாவட்டங்களை சேர்த்து கொங்கு நாடு என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பகுதிகளில் வழங்கும் தமிழ் வட்டார வழக்கும் கொங்கு தமிழ் என்றே வழங்கப்படுகிறது. "ஏனுங்" "சரிங்" "வாங்" "போங்" "ஙோவ்" அந்த க என்ற எழுத்தைச் சொல்கிறார்களா இல்லையா என்ற குழப்பம் வருகிற மாதிரி உச்சரிப்பார்கள். அதுவே கொங்கு தமிழின் அழகு எனலாம். இதை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று பண்பலை வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறவர்கள், சில திரைப்படங்கள் ஏனுங்கோ வாங்கோ போங்கோ என்று ஏற்றிச் சொல்லி அப்படிப் பேசுவதுதான் கோயமுத்தூர் தமிழ் என்று உயிரை வாங்கோ வாங்கென்று வாங்குவார்கள்.

என்னுடையது உன்னுடையது, என்பதை என்றது, உன்றது என்றும் சொல்வர். "என்றா கண்ணு சொல்லிப்போட்ட நீயி" என்ற குடும்பம், உன்ற புருசன் என்றெல்லாம் கே.எஸ். ரவிக்குமார் படங்களில் வரும் பெரிய மனுசன்மார்களின் வசனத்தையும் கேட்டிருக்கிறோம். என் + தன் = எந்தன் உன் + தன் = உந்தன் என்றுதான் கவிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்+தன் என்பது என்றன் உன்+தன் என்பது உன்றன் என்றுதான் குறிப்பிட வேண்டுமாம்.  (நன்றி - கவிஞர் மகுடேஸ்வரன்) சரி அது கிடக்கட்டும். எல்லாரும் ஒரு விடயம் சொல்வார்கள். கோயமுத்தூர்காரர்கள் மரியாதை உள்ளவர்கள். கோயமுத்தூர் மரியாதைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றெல்லாம் கூறுவார். மற்ற ஊர்க்காரர்கள் எல்லாம் மரியாதை தெரியாதவர்களா என்ன ? அவர்கள் மொழி நடை, வட்டார வழக்கு அடுத்தவர்களுக்கு மரியாதை தருவதாகத் தெரிகிறது. அவ்வளவே கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்பது தாண்டி கோவை மரியாதை தரும் ஊர் என்பதெல்லாம் "தமிழ் உலகின் மொழி", "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய" போன்ற பழமொழிகளைப் போன்றே வெறும் கேட்பதற்கினிய வதந்தி தான் .

கோவையைத் தாண்டி சற்று ஊர்களுக்குச் சென்று பார்த்தான் தெரியும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவனை தாத்தா வயது கீழ்ஜாதிக்காரர் வாங்க போங்கவென்றுதான் அழைக்க வேண்டும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவன் அப்பா வயது கீழ் ஜாதிக்காரரை பெயர் சொல்லியும், சமயத்தில் வாடா போடாவென்றும் அழைக்கும் அளவுக்கு மரியாதை உள்ள ஊர். அந்தப் பெருமையைச் சொல்லி சிலிர்ப்பவர்கள் இதையும் சொல்ல வேண்டும் அல்லவா ? நமக்கு நடப்பை விட கனவுலகில் இருக்கும் மணித்திருநாடுதானே வேண்டும் போலிப்பெருமை கொள்ள ? ஆனால் கொங்கு நாடு என்பது உண்மையில் மணித்திருநாடாக (utopia)  இல்லாமல் (ஜாதிப்) பிணிமிகு நாடாக (dystopia) அன்றோ இருக்கிறது.

தலைப்புக்கு வருகிறேன். நாம் எல்லோரும் மரியாதையா ஒருவரை விழிப்பதென்றால் எப்படி விளிப்போம். வாங்க போங்க என்றும் நபரின் பெயர் சொல்லியும் அல்லவா ? தற்போது கோவையில் பலரும் பெயருக்குப் பின்னால் ஜி போட்டுத்தான் அழைக்கிறார்கள். 20 வயது கூட நிரம்பாதவர்கள் கூட இப்படிப் பேசிப் பழகியிருக்கின்றனர். என்னய்யா இது ஒரு வசதிக்காக மரியாதைக்காகவும் "ஜி" போட்டுப் பேசுவது தவறா என்று சிலர் எண்ணக் கூடும். நாம் எல்லோரையும் சார் போட்டு அழைக்கிறோமே அதுவே என்ன ஒரு இழிவு தெரியுமா நான் மேற்சொன்ன ஜாதி இழிவைப் போலத்தான். ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அவர்களை அண்டிப் பிழைத்தவர்கள் எல்லாம் இந்த "சார்" என்ற சொல்லைப் பயன்படுத்தித்தான் அவர்களிடம் இளித்து நின்றனர். ஆங்கிலேயர் போன பின்னரும் இந்த "சார்" நம்மை விடவில்லை. நமது எஜமானர்களை அழைக்கப் பயன்படுத்தி வருகிறோம். சார் என்றால் என்ன "Slave I Remain" என்று பொருளாம். ("Servant I Remain"  என்றும் பொருள்)

அவ்வப்போது என்னுடைய உறவினர் ஒருவர் மற்றவர்களை பேச்சினைடையே இப்படி அழைப்பார். அவர் பேசிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மணி என்றால் " மணி "ங்க" இங்க பாருங்க. அதெல்லாம் சரிதாங்க" இது எனக்கு ரொம்பவும் விநோதமாகத் தெரிந்தது. இது மாதிரி வேறு யாரும் அழைத்ததாகத் தெரியவில்லை.

தேவையில்லாத இடங்களில் கூட, வேண்டுமென்றே ஜி ஜீ என்று பெயருக்கு முன்னரும் பின்னரும் சேர்த்துப் பேசத் துணிகின்றனர்.  திரைப்பட விழாக்களில் நடிகர்கள் மாற்றி மாற்றி அந்த சார் இந்த சார் என்று அறுத்தெடுக்கிறார்கள். அது போலவே இப்போது ஜி போட்டு விளிப்பது மிகவும் சர்வசாதரணமாகி வருகிறது.

இல்லீங்ஜி
ஆமாஞ்ஜி
ஜி என்ன இது
சரிங் ஜீ
வரட்டுமா ஜி
பாய்ஜி

ஆரம்பிக்கும்போதும் "ஜி"ல ஆரம்பித்து முடிக்கும்போதும் "ஜி" யிலேயே முடிக்கிறார்கள். ஒருவரை பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை, ஜீ மட்டுமே போதுமாயிருக்கிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் நம்மை விட மூத்த பெண்களை நாம் என்னவென்று அழைப்போம். அக்கா என்றுதானே ? ஆனால் தற்போது பாருங்கள் எல்லாரும் 30 வயது நடிகைகள், கொஞ்சம் மூத்த பெண்கள், திருமணமான பெண்களைக் கூட "ஆன்ட்டி" என்றே அழைக்கின்றனர். ஆன்ட்டி என்பது பெண்களை வயதானவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் கேலிக்குரிய பெயராகிவிட்டது.

முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது பாய் என்கிறோமே ஏன் ? ஹிந்தியில் பய்யா என்றால் அண்ணா என்று பொருள். முஸ்லிம் என்றாலே உருதுவில் பாய் என்றழைத்து அதுவே அவர்களின் அடையாளமுமாகிவிட்டது. தமிழ் முஸ்லிம்களைக் கூட பாய் என்றே அழைக்கிறோம். முஸ்லிம்களே கூட அவர்களிடையே பாய் என்று அழைத்துக் கொள்வதுமுண்டு. இதே போல் இந்த ஜீ என்பதும் வளர்ந்து வருகிறது. முதலில் வட இந்தியர்கள் மட்டும் பயன்படுத்தியது போய், வட இந்தியர்களிடம் பேசும்போது மட்டும் நாம் பயன்படுத்திய ஜி, தற்போது தமிழர்களிடையேயும் பரவிவருகிறது. நானும் கூட இப்படிப் பேச வேண்டி இருக்கிறது சமயத்தில். இணையத்தமிழர்களும் கூட ஜி போட்டு எழுதுகின்றனர்.

இதன் முக்கியக் குற்றவாளிகளாக இந்துத்துவா இயக்கத்தையே நான் குற்றம் சாட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் மொழிவாரி மாநிலம் என்பதையே ஏற்காதவர்கள். நம் பிரதமர் உட்பட. இந்தி, செங்கிருதம் போன்ற மொழிகளைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பவர்கள். மாநாடுகள், பாராட்டு அறிக்கைகள், போராட்ட முழக்கங்கள் உட்பட அனைத்திலும் கூட ஜீ என்ற எழுத்தைப் போட்டுத்தான் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுகின்றனர். சுவரெழுத்துக்களிலும் கூட ஜி என்பது சேர்ந்து விட்டது. ஏன் இவர்கள் அறிவிப்பு முழுவதையும் ஹிந்தியிலேயே எழுதியிருக்கலாமே. அவற்றையெல்லாம் படிக்கும் கொடுமை மற்றவர்களுக்கிருக்காதல்லவா ? இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதுவார்கள் எப்போதாம் ? சித்திரை ஒன்றாம் நாளுக்கு. அதிலும் அந்த ஓம் என்ற (வடமொழிக்)குறியீட்டை பெரியதாக தமிழெழுத்துக்களினிடையே திணித்து தமிழ் வாக்கியத்தைப் பிளந்து வைப்பார்கள். (இவர்களைக் கண்டால்தான் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது)

தமிழெழுத்தைப் பயன்படுத்தி ஹிந்தியை வளர்க்கும் இவர்களை போலத்தான் இந்தியா முழுதும் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஆங்கில எழுத்துக்களின் மூலம் ஹிந்தியத் திணித்து வருகின்றனர். நிகாலோ, சலோ, பச்சோ என்றெல்லாம் ஹிந்திச் சொற்களை ஆங்கிலத்தின் மூலம் எழுதுகின்றனர். விற்பனை பொருட்களின்  பெயர்கள், திட்டங்களின் பெயர்கள்தான் ஹிந்தித் திணிப்பின் வாகனம். இதில் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களும் அடக்கம்.

இவர்களைப் போலவே இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸ் காரர்கள், இவ்வாறு ஜி சேர்த்து எழுதுவதில்லை. அன்னை சோனியா, அன்னை இந்திரா, தலைவி சோனியா அவர்கள்,  தலைவர் ராகுல், அமரர் ராஜீவ் என்றுதான் எழுதியும் பயன்படுத்தியும், பேசியும் வருகின்றனர். தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள் கூட தமிழில்தான் பெயரையும் தலைவர் பெயருக்குப் பின்னர் அவர்கள் என்பதையும் எழுதி வருகின்றனர். கலைஞர் அவர்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்படியெல்லாம் பார்த்திருப்போம்.  என்ன எரிச்சலென்றால் பெயருக்கு முன்னர் அடைமொழி எரிமலை, தானைத் தலைவர், இனமானக்காவலர் வைத்து சிரிப்பு மூட்டுவார்கள். பொதுவுடமைக்காரர்களோ தோழர் என்று சொல்லிக் கொள்வர்.

பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள்தான் மோடிஜீ மோடிஜீ என்று பேசியும் எழுதியும் வந்தனர். இது அப்படியே மற்ற தமிழகத் தலைகளையும் குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். ராமகோபாலன்ஜீ, அர்ஜூன் சம்பத் ஜீ, முருகானந்தம் ஜீ என்று மாறுகிறது. இன்னொரு எரிச்சல் என்னவென்றால் தமிழகம் சாராத தலைவர்களனைவருக்கும் ஜாதிப்பெயரையே தங்களது இரண்டாவது பெயராக வைத்துள்ளனர். பெரும்பான்மையாக இவர்களைக் குறிப்பிட இந்த ஜாதிப்பெயரே பயன்படுத்தப்படுகிறது. மோடி, நாயுடு, ரெட்டி,  பிரகாஷ் காரத், மம்தா பானர்ஜி, பாண்டே, பென், மேனன், நாயர், சாட்டர்ஜி, இப்படியெல்லாம் இருக்கின்ற பெயர்களையே அவர்களைக் குறிப்பிடுகின்றனர். இந்த ஜாதிப்பெயரின் பின்னால்தான் ஜீ போடுகிறார்கள். ஆந்திராவில் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றுதான் அறிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது மட்டும்தான் இல்லை. மற்றபடிக்கு ஜாதி உணர்வெல்லாம் ஆகாவென்றுதான் இருக்கிறது. ஜாதிப்பெயர் பின்னால் இருக்கும் மற்ற மாநிலத்தில் ஜாதி உணர்வே இல்லாமல் இருப்பவர்களும் உள்ளனர். இருப்பினும் மற்ற மாநிலத்தவரைப் போல் ஜாதிப்பெயரை சேர்க்காமல் இருப்பதை நாம் பெருமையாகவே கருத வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இப்போது தமிழ்நாட்டிலும் ஜாதிப்பெயரைப் பின்னால் சேர்த்துக் கொள்வதை ஃபேஸ்புக்கில் தொடங்கியுள்ளனர். ஜாதியை இனமென்றும் சொல்லிக் கொள்வதால் அதன் பெயரில் அழைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள் சிலர். நாளை இவர்கள் பெரிய தலைவர்களாக வளரும் போது இவர்களைப் பார்த்து எல்லா ஜாதிக்காரர்களும் தங்களது பெயரைப் பின்னால் இணைத்துக் கொள்வர். அப்போது இந்த "ஜீ"யும் சேர்ந்து கொள்ளும். அன்றைய நாளினைக் கற்பனை செய்து கொண்டால் இப்படி இருக்கும். "முத்தரையர் ஜி யின் கருத்துக்கு கவுண்டர் "ஜி" அவர்கள் கண்டனம்",  "நாளை தேவர்ஜி பேசுகிறார்" "மதிப்புக்குரிய செட்டியார்ஜி இறந்தார்", "ஐயர் ஜி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது" அறிவிக்கப்பட்டது" "மள்ளர்ஜி நாளை மதுரை வருகிறார்", "கள்ளர்ஜி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்" "நாடார்ஜீ மாலை அணிவித்து வரவேற்றார்". 

இதையெல்லாம் கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா ? "நமஸ்காரம்" என்பதே தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. அதைத் தமிழில் வணக்கம் என்று மாறுவதற்கு தெருவில் நின்று போவோர் வருவோரிடமெல்லாம் வணக்கம் சொல்லி அதை மாற்றியிருக்கிறார்கள் நமது (திராவிட இயக்கத்தவர்)முன்னோர்கள். இதெல்லாம் இனி நிலைக்குமா ? ஏனென்றால் உலகத்திலேயே பேபி ஷாலினி என்று குழந்தைக்குப் பெயர் வைத்தது தமிழனன்றி வேறு யார் என்று எனக்குத் தெரியவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

நடிகன்டா

ஒரு திரைப்படம் தொடங்கும் முன்னரும் முடிந்த பின்னரும் எத்தனையோ பெயர்கள் திரையில் மின்னி மறைகின்றன. ஒருவர் பணம் போடுவார். அவர்தான் அத்தனை பேருக்கும் சம்பளம் கொடுப்பவர். ஒருவரோ இருவரோ அல்லது இன்னும் அதிகம் பேரோ கதை திரைக்கதை வசனம் என்ற துறைகளில் பணிசெய்வர். இதில் முக்கியமானவர் இயக்குநர். அடுத்தவர் இசையமைப்பாளர். இவர் இல்லையென்றால் படம் என்ன நிலையிலிருக்கும் என்று தெரியும். நடிகை/கதைநாயகி - இவர் நாயகனைச் சுற்றி வரவேண்டும், அவிழ்த்துப் போட்டு ஆட வேண்டும். நடன இயக்குநர், சண்டைப்பயிற்சியாளர், ஓளிப்பதிவாளர், எடிட்டர், எனப்பல நூறு பேர் சேர்ந்து உருவான ஒரு திரைப்படம் யாருடைய படமாக அறியப்படுகிறது ? நடிகனின்/கதைநாயகன் பெயரால். நடிகனும் இந்தத் திரைப்படத்தில் ஒரு அங்கமே தவிர அவனால் மட்டுமே அந்தத் திரைப்படம் சாத்தியப்படாது.

ஆனால் நம்மாட்கள் என்ன சொல்கிறார்கள். தலைவர் படமாம். தலைவர் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். இவர்கள் சொல்லும் தலைவர்கள் யாரார் ? ரஜினி காந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களும், அஜித்குமார், விஜய், விக்ரம், சூர்யா, போதாதென்று தனுஷ் சிம்புவையெல்லாம் தலைவா என்று அரற்றிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது.

மேலே இருக்கும் நபர்களையெல்லாம் கலைஞர்கள் என்று சொல்லலாம். ஆனால் தலைவர்கள் என்று சொல்ல இவர்களுக்கு அருகதை இருக்கிறதா ? இவர்களுக்கு மட்டும் ஏனிந்த ஒளிவட்டம் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. எல்லாம் வணிக நோக்கம்தான். இரு நடிகர்களை எதிரிகளாக அல்லது போட்டியாளர்களாக சித்தரித்து அவர்களின் அல்லக்கைகள் செய்யும்  மொட்டை அடிப்பது, சாமி கும்பிடுவது, கெடாவெட்டுவது, கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது இப்படியான அலப்பறைகளையெல்லாம் செய்திகளாக வெளியிடுகிறார்கள். நடிகர்களின் பேட்டிகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் வார இதழ்கள் வெளியிடுகின்றன. அவ்வபோது அவர்களைக் கேவலப்படுத்தியும் விமர்சனம் செய்தும் எதிர்மறையான செய்திகள் வெளியிடப்படும். நடுநிலை ஊடகங்களாம். அட்டைப் படத்தில் தங்கள் தலைவன் படம் இருந்தால் வார இதழ்கள் வாங்கும் வாசகர்கள் அதிகம். அவர்களது படம் வெளியாவது குறித்து செயற்கையான எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

படத்தில் நடிக்க ரொம்பவும் சிரமப்பட்டேன் என்பார்கள். இவர்கள் உழைப்பைப் பற்றிப் பேசியதைக் கேட்டால் உழைப்புக்குப் பேர் பெற்ற ஜப்பான்காரனே வெட்கப்படுவான். இந்த நடிகர்கள் படம் பார்ப்பது ஒரு கடமை போல் ஆகிவிடுகிறது. படம் வெளியானவுடன் விமர்சனம் என்ற பெயரில் இவர்களைப் புகழ்வதற்கென்றே ஒரு பாடு குப்பைகள் கட்டுரைகளாக மெனக்கெட்டு எழுதப்படுகின்றன. இதுவரை வெளியான படங்களிலேயே இதுதான் வரலாறு காணாத வசூல், ஒரே நாளில் இத்தனை கோடி வசூல் என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். படம் நன்றாக இருந்தால் மிகையாக புகழப்படுகிறது. இல்லையென்றால் சற்றும் மனசாட்சியின்றி இழித்துரைக்கப்பட்டு நடிகர்களை நாறடிக்கிறார்கள்.

தலைவர் செமையா நடிச்சிருக்காரு என்று ஒரு வசனம் அவ்வப்போது கேட்கும். தலைவருக்கு நடிப்பதுதானய்யா வேலை, அதற்குத்தானே பல கோடிகளில் பணம் பெறுகிறார்கள். அதென்ன அரசியல்வாதிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாவைப் போன்றே  என்ன செய்தாலும் புகழ்வது அவரைப் பற்றி அவரே அறியாத சாதனைகளையெல்லாம் பரப்புவது.  இப்படியாக கதாநாயகன் கடவுளாக்கப்படுகிறான். தனக்குப் பிடிக்காத நடிகனின் படம் தோல்வியடைந்தால் அதற்காக எதிரி நடிகனின் ரசிகன் மகிழ்கிறான். வெற்றியடைந்தால் அதில் குறை கண்டுபிடிக்கிறான். நடிகன் உளறுவதையெல்லாம் "பஞ்ச்" என்று நிலைத்தகவலாக இட்டு வைத்துக் கொள்கிறான். தனது வாகனத்தில், கைப்பேசியில், சங்கிலியில், மணிக்கட்டில், கடிகாரத்தில் நடிகனின் படத்தை வைத்துக் கொண்டு நான் தல ஃபேன், விஜய்ணா ஃபேன் என்றெல்லாம் சொல்வதை பெருமையாகக் கருதி வாழ்கின்றனர் சிலர்.

இன்றோ திரையரங்கங்கள் முன்பு போல் நிறைவதில்லை. இரண்டு நாட்களில் அள்ளும் பணமே வசூலாகக் கருதப்படுகிறது. எத்தனையோ திரையரங்கங்கள் மூடப்பட்டு விட்டன. தயாரிப்பாளர்கள் பலர் காணாமல் போய்விட்டனர். இருப்பினும் இந்தக் கதாநாயகர்களின் வசூலுக்கு மட்டும் குறைவில்லை. இது எப்படி ? ஒருவன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தால் அவன் செலிபிரிட்டி ஆக்கப்படுவது கட்டாயம். பின்பு அவன் விளம்பரங்களில் தோன்றுவான் கோடிகளில் அள்ளுவான். இது பந்து வீச்சாளர்களுக்குப் பொருந்தாது. அது போல நடிகர்கள் நடித்து ஒரு படம் வெற்றியடைந்தால் அவர் செலிபிரிட்டி ஆக்கப்பட்டு அடுத்தடுத்த படங்களுக்கு அவரையே ஒரு இலவச விளம்பரமாக மாற்றி விடுகின்றனர். ஷாருக்கான் வகையறாக்கள் இப்போதெல்லாம் படங்கள் நடிப்பதே இல்லை. வெறும் விளம்பரம்தான் அது என்ன பொருளாக இருக்கட்டும். போதாக்குறைக்கு ரியாலிட்டி ஷோக்களில் வேறு வந்து ஓவர் ஆக்டிங் கொடுக்கிறார்கள்.

இதில் பல நடிகர்கள் தனது குடும்பத்தினர் ஏற்கெனவே புகழ் பெற்ற, அனுபவம் வாய்ந்த கதாநாயகர்களாகவோ, இயக்குநர்களாகவோ, தயாரிப்பாளர்களாகவோ இருந்திருந்தால் இன்னும் எளிது. நடிப்பதும் ஏற்கெனவே வெற்றி பெற்ற வேற்று மொழிப்படங்களாக இருக்கும். இவர்கள் தங்களது முந்தைய படங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவதையும் தமது படத்தில் வசனமாகவும் வைத்துக் கொண்டு கைதட்டல் வாங்குகின்றனர். ரசிகர்களைப்பார்த்தும் வசங்களைப் பேசுகின்றனர். ஒரு நடிகர் ஒரு படத்தில் இந்தப் பொங்கலுக்கு நமக்கு நல்ல கலெக்சன்மா என்றே வெளிப்படையாகவும் வசனம் பேசியே விட்டார்.

இப்படிப்பட்ட கதாநாயகன்கள் எப்படியெல்லாம் நடிக்கின்றனர். இவர் பொறுக்கியாக/டான்/ரௌடி - ஆக நடித்தால் பொறுக்கியே நாயகன் காவல்துறையும் இன்னபிறரும் தீயகனாகி (villain) விடுவர். இவர் காவல்துறை அதிகாரியாக நடித்தால் காவல்துறை நாயகனாகவும் பொறுக்கிகளும் பொறம்போக்குகளும் தீயகனாக இருப்பர். எத்தனை கொலை செய்தாலும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவர் நாயகனாக இருக்கும் படத்தில் தனது காதலியை வேறொருவர் காதலித்தால் அவன் தீயகன். ஆனால் இவரே இன்னொரு படத்தில் அதை செய்தால் அது தவறாகாது ஏனென்றால் அவர் நாயகன். தீயகன் பெண்ணிடம் வம்பு பண்ணினால் அதை எதிர்த்துச் சண்டை போடுவார். அதையே இவர் ரொமான்ஸ் என்ற பெயரில் அரங்கேற்றுவார். இப்படி கதாநாயகன் என்ன செய்தாலும் அது சரியே என்று ஏற்றுக் கொள்கிறோம். சரி படத்தில்தான் இப்படி நடிக்கிறார்கள். வெளியிலாவது ஒழுங்கு மரியாதையா இருக்கலாமல்லவா ? இருக்கிறார்களா ?

எல்லா பொருட்களையும் பல்லிளித்துக் கொண்டு விற்கிறார்கள் விளம்பரத்தில். வேறு பொருட்களாவது போய்த் தொலைகிறது என்று விட்டுவிடலாம். பன்றி மூத்திரம் போன்று விற்கப்படும் ஒரு மென்பான விளம்பரத்தில் நடிக்கிறார்கள். ஏன் மிகவும் பிரபலமான பிரம்மாண்டமான நிறுவனத் தயாரிப்பின் பிராண்ட் அம்பாஸிடரானால் பல கோடிகள் வாங்கலாம் என்றுதானே ? இதற்குத்தானே கிரிக்கெட் விளையாடுகிறவெனெல்லாம் தேசியநாயகனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த எடுபட்ட மென்பான நிறுவனங்கள் இருப்பதிலேயே பிரபலமான இளம் நடிகர்களை வளைத்துப் போடுகிறார்கள். தொடர்ந்து விளம்பரங்களில் நடிக்க வைக்கிறார்கள். இந்தியா முழுவதும் இனி தண்ணீருக்குப் பதில் கொக்கக் கொலாவையும், பெப்ஸி இன்ன பிற பானங்களையும் காசு குடித்து வாங்கும் நிலைக்கு ஆளாக்குவார்கள் பாருங்கள். இதெல்லாம் இந்த விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்குத் தெரியாமலா இருக்கும். தெரிந்தேதான் நடிக்கிறார்கள்.

இதில் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் இன்னும் யாராரோ தெரியவில்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பே ஏற்பட்ட சர்ச்சையில் இது போன்ற மென்பானங்கள் இங்கே இருக்கும் நீரை உறிஞ்சி நிலத்தடி நீரை மாசுபடுத்தியும், அதை நிரந்தரமாக கெடுத்தும் விடக்கூடியவை என்ற விடயங்கள் எல்லோராலும் யூகிக்கக் கூடியவையே. ஏன் கோக் பெப்ஸி விளம்பரத்தில் பல்லைக் கெஞ்சிக் கொண்டு நடித்த விஜய் தனது கத்தி படத்திலும், விக்ரம் ஐ படத்திலும் குளிர்பானத்திற்கெதிராக வசனம் பேசி தங்களது பாவத்தைக் கழுவிக் கொண்டனர். சூர்யவும் இனிவரும் ஏதாவதொரு ஹரி படத்தில் விறைத்தும் முறைத்துப் பேசிவிடுவார். (விக்ரம் நடித்த அந்த விளம்பரம் ஒளிபரப்பான காலத்திலேயே வெளிவந்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் வடிவேலு அக்கமாலா விளம்பரத்தில் நடிக்கும் நடிகனைக் கன்னத்தில் அறைவது போன்று காட்சி வரும். அப்ப முதலில் மென்பானத்தை எதிர்த்து இளநி குடி என்று சொன்னது வடிவேலுதான்.)

ஆனால் இந்த நடிகர்கள் இப்படி வசனம் பேசுவதால் எவனாவது திருந்துவானா ? கத்தி படம் பார்த்துவிட்டு வந்த ஒரு விஜய் ரசிகன் உணர்ச்சி வசப்பட்டு கோக்கை இனிமேல் தொடமாட்டேன் தலைவரே சொல்லிட்டார் என்பானா. இல்லை தலைவர் படம் செம மாஸ் என்று சொல்வானா ? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் இது போன்ற மூத்திரங்களைக் குடிப்பவர்களின் மனநிலை என்ன பீடி, சிகரெட், சாராயம் போன்றே கெடுதல்களை எதிர்நோக்கியே குடிப்பது போல்தான். இதில் பெரிய ஸ்டைல், கெத்து என்பதெல்லாம் ஒரு மயிறுமில்லை. சரி இப்படி சராசரி மசாலப் படமொன்றில் விஜய் வசனம் பேசுமளவுக்கு இருக்கிறது இந்த மென்பானங்கள் மீதான் எதிர்ப்பு. இந்நிலையில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் ஒருவர் இந்த விளம்பரத்தில் நடித்து அதைப் பெருமையாக வேறு கருதுகிறாராம். யார் அவர் ? அப்பா அண்ணனால் முன்னுக்கு வந்து, மாமனாரின் பழைய படங்களின் படங்களாக நடித்துத் தள்ளும் ஒருவர். அவர்தான் இன்றைய யூத் ஐக்கானாம்.

இனி பாருங்கள்  இவரே 40 வயதில் ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்து விட்டபின்பு ஒரு படம் நடிப்பார். அதில் நாட்டிலேயே பெரிய கூல்டிரிங்க்ஸ் கம்பெனி முதலாளியே தீயகனாக(வில்லன்) இருப்பார். ஊரில் இருக்கும் பெரிய ஆற்றை மாசுபடுத்த வரும் கூல்ட்ரிங்ஸ் முதலாளியை தனி ஒருவனாக போராடி வென்று ஊரிந் ஆற்றையும் விவசாயத்தையும் மக்களையும் காப்பாற்றுவார். அந்தக் கூல்ட்ரிங்ஸ் முதலாளியின் மகள்தான் கதாநாயகி என்பதை சொல்லவும் தேவையில்லை.  அதையும் நம் ரசிகப் பெருமக்கள் வெற்றிப் படமாக்குவார்கள்.


இந்த இணைப்பில் இவர் பெருமைப்படுவதை சொல்லியிருக்கிறார். அதை சிறுமையென்று சாடும் பல சாமானியர்கள். சாமானியர்கள் சரியாக இருக்கிறார்கள், தனக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்பவர்கள்தான் பாவம் செய்கிறார்கள். சாமானியனை இளிச்சவாயனாக்குகிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஸ்ரீ தமிழ் நாடு


இலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வன்முறை செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கலவரம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் தமிழர்கள் மீது கொடிய கொலை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சிங்களப் பேரினவாத வெறி காரணமாக தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை கொலைகள் ஏவப்பட்டன. அதன் விளைவாக தமது வன்முறையை வெவ்வேறு கொடிய வழிகளில் வெளிப்படுத்திய காட்டுமிராண்டிகள் கொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களின் மார்பகங்களின் மீது ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதித் தனது வெறியைத் தணித்துக் கொண்டனர் என்று படித்திருக்கிறோம்.  இன்றும் ஸ்ரீலங்கா என்ற அந்நாட்டின் பெயர் அதன் இனவாதத்தைப் பறைசாற்றி நிற்கிறது. நிற்க.

தற்போது தமிழகத்தில் எங்கெங்கு காணினும் ஒரு நச்சுக் காளானைக் காண முடிகிறது. வீதிகளெங்கும் நிறைந்திருக்கும் கடைகளின் பெயர்ப்பலகைகளைக் கண்டால் கடைகளின் பெயர்களில் முன்னோ பின்னோ ஒட்டிக் கொண்டிருக்கும் "ஸ்ரீ". குழந்தைக்குப் பெயர் வைப்பதிலிருந்து பெரும் நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது வரையில் ஸ்ரீ என்ற ஒரு எழுத்து இல்லாமல் பெயரையே காண முடிவதில்லை. எல்லாம் சிவமயம் என்று கேட்டிருக்கிறோம். இங்கே எல்லாம் ஸ்ரீ மயமாகி இருக்கிறது. ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் இருந்தால் நன்மை நடக்கும் என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். இந்த மூட நம்பிக்கையைப் பரப்புவதோடு அல்லாமல், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.

இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு வட ஹிந்தியர்கள் 70 வருடங்களுக்கு முன்பே வைத்திருக்கும் பெயர்களைத்தான் வைக்கிறார்கள் தமிழகத்தினர். இன்னும் சில முண்டங்கள் நடிகைகளின் பெயர்களையும் பயங்கரமான ட்ரென்டியாக, ஃபேஷனாகக் கருதி வைக்கிறார்கள். 5 வருடங்களில் அந்த நடிகையே இருக்க மாட்டார். அந்த பெயரும் காணாமல் போகும். எனக்குத் தெரிந்து மட்டும் மூன்று பேர்கள் தங்கள் குழந்தைக்கு ஹன்சிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். எனது நண்பன் ஒருவன் பெயர் கணேஷ்குமார். அவனது அப்பா ஏன் அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினாரென்று பெயர்க்காரணம் சொன்னான். அந்தப் பெயருக்கு வட இந்தியாவில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்குமாம். தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு வேலை தேடிப்போன காலத்தில் உருவான மனநிலை, அவனுக்குப் பிடித்த மாதிரி பெயர் வைத்துக் கொண்டு பல்லிளித்தாள் அவன் உடனே அருள் பாலிப்பானா ? வட இந்தியர்கள் தென்னிந்தியாவுக்கு வேலை தேடி வரும் இக்காலத்திலும் தொடர்கிறது இந்த முட்டாள்தனம். போன தலைமுறைகளில் அதிக அளவில் வைக்கப்பட்ட சுரேஷ், ரமேஷ், தினேஷ், ஷங்கர், ராஜேஷ் போன்ற ஹிந்தித் திரைப்படம் பார்த்து பெயர் வைத்த மூடத்தனத்திலிருந்து இன்றைய தலைமுறையினர் மாறிவிட்டனர். இவர்கள் வைக்கும் பெயர்களைக் கேட்டால் வருங்காலத்தில் பாருங்கள் "நம்மை விட ஹிந்தி மொழியுணர்வு மிக்கவனாக இருப்பவன் தமிழன்" என்று வட இந்தியர்களே தலை சுற்றிக் கீழே விழுவார்கள்.

தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொலைக்காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லும் நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரிந்து விடும். ஜாதியையும் அதன் சடங்குகளை மட்டும் ஒரு அங்குலம் விட்டுக் கொடுக்காமல் பின்பற்றும் தமிழர்கள் தமிழில் பெயர் வைப்பதை மட்டும் இழிவாகக் கருதி சமஸ்கிருதப் பெயர்களை வைக்கின்றனர். கண் தெரியாதவன் இருட்டுக்குள் கருப்புப் பூனையைக் கண்டதாக சொல்வது போல அடுத்த வீட்டுக்காரனைப் பார்த்தே தன்னை ஒப்பிட்டுக் கொண்டு வாழும் இவர்கள் பெயர் வைக்கவும் என்ன ஏதென்றே தெரியாமல் வாயிலேயே நுழையாத பெயரை வைக்கின்றனர்.  கட்டாயமாக ஹ ஷ, ஜ என்ற எழுத்துக்கள்  வழியில் தொடங்கும் பெயரையோ அல்லது அந்த எழுத்துக்களில் ஒன்றாவது பெயரின் இடையிலாவது வந்து விட வேண்டும். ஸ்ரீ என்ற எழுத்தை முன்னர் சேர்த்து வைப்பதில் பெயரியல் விதிகள் இடிக்கிறதா ? ஸ்ரீ நந்தினி /ஸ்ரீ வித்யா என்று வைக்க விரும்பியவர்கள் வித்யா ஸ்ரீ/நந்தினி ஸ்ரீ என்று வைத்துக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது மட்டுமல்ல பெரிய தொழிற்சாலைகளோ, பள்ளி, கல்லூரிகள் தொடங்குகிறவர்களும் முன்பு ஸ்ரீ என்ற எழுத்தை ஏதோ கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்பது போல் சேர்த்துக் கொள்கின்றனர்.

இதையெல்லாம் (முதல் பத்தியை இங்கு தொடர்பு படுத்திக் கொள்ளவும்) பார்க்கும் ஈழத்தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். சிங்களனோ அடடா ஈழத் தமிழனுன்களை விட இவனுகளாகவே நம்ம வழிக்கு வந்துட்டானுகளே என்று இன்ப அதிர்ச்சி அடைவான்.

சரி மனிதர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும்தான் மட்டும்தான் வைக்கிறார்களா என்றால் இல்லை. தங்கள் குலதெய்வங்களுக்கும், இன்ன பிற கடவுளின் பெயருக்கு முன்னரும் ஸ்ரீ என்ற எழுத்தை சேர்த்துக் கொள்கின்றனர். ஏன் கடவுளுக்கே பெயரை மாற்றுகிறோமே அந்த கடவுளிடம்தான் தங்கள் தலையெழுத்தை மாற்றும்படி வழிபாடு செய்கிறார்கள் கடவுளின் பெயரையே மாற்றி வைக்கும் பக்தர்கள். என்னவொரு முரண்நகை. செல்லாண்டியம்மன், கோட்டை மாரியம்மன், பிடாரியம்மன், முத்துமாரியம்மன், அய்யன் என எல்லா அம்மன்களும், ஆத்தாக்களும், அப்பன்களும் தங்கள் திருப்பெயரின் முன் ஸ்ரீயுடன்தான் காட்சி தருகிறார்கள். எல்லாவற்றையும் மீறும் வகையில் தமிழ்க்கடவுள்களான சிவனுக்கும், முருகனுக்கும் கூட ஸ்ரீயைச் சேர்த்தாயிற்று. திருச்செந்தூர் முருகன் பேக்கரி/ட்ராவல்ஸ்/வாட்டர் சப்ளையர்ஸ் என்ற பெயர்களுக்குப் பதிலாக ஸ்ரீ செந்தூர் முருகன் என்று எழுத்துக்களைக் காண நேரிடுகிறது. ஸ்ரீ சிவன் என்ற பெயரைக் கண்டு எங்கே முட்டிக் கொள்வது என்று தோன்றியது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். திருமறைக்காடு வேதாரண்யம் ஆனது போதாதா ?

தமிழ் தனித்தியங்கும் தன்மை பெற்றிருந்தாலும் பிறமொழி சொற்களையும், எழுத்துக்களையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. வடமொழிப்பெயர்கள் தமிழ்த் தன்மையுடன் இருப்பதற்காகத்தான் எடுத்துக்காட்டாக ராம் என்ற பெயரை முன்னர் "இ" சேர்த்தும் இறுதியில் "அன்" விகுதியும் இராமன் சேர்த்துத் தமிழாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தமிழ் வெறுப்பாளர்கள் சாதாரணமாக இருக்கும் சராசரி தமிழ்ப் பெயர்களையுமே கூட செங்கிருத ஒலியமைப்புடன் வரும்படி மாற்றிக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். மிகச் சொற்பமான அளவிலேயே தமிழ் செல்வன், தமிழரசன், தமிழ் செல்வி, தமிழரசி வகையிலான பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த சமஸ்கிருதப் பித்து வெள்ளமெனப் பாய்ந்து பரவி வருகிறது.

ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அதில் நகைச்சுவையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக வைக்கப்படும் "அது நம்மள நோக்கித்தான் வருது", எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க" நீங்க வடக்குப் பக்கம் போங்க" போன்ற வசனங்களை எல்லோரும் பேசிச் சிரித்து மகிழ்கின்றனர். அது மொழிமாற்றம் செய்ததன் குறையல்ல. உண்மையிலேயே ஆங்கிலப் படங்களில் பேசும் வசனமே அதுதான். நமக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவர்கள் என்னமோ பயங்கரமான விஞ்ஞானம் பேசுவதாக நினைத்துக் கொள்கிறோம். அது போலத்தான் இந்த சம்ஸ்கிருதப் பெயர்களும் வெறும் கடவுளின் பெயர்களும், வினைப் பெயர்களும் தான். அது நமக்குப் புரியாத மொழியில் இருப்பதால் அது நமக்கு மிக உயர்ந்ததாகத் தெரிகிறது,

ஸ்ரீ என்பது திரு எனப் பொருள்படும் சம்ஸ்கிருத ஹிந்தி சொல்தானே. இப்போது எல்லோரும் சரிங்க் "ஜி" வாங்க"ஜி" என்று வயது பார்க்காமல் மரியாதை நிமித்தம் சொல்லப்படுவது போல.

ரஜினிகாந்த் பேசும் போது கலைஞர் "ஜி", மோடி"ஜி" என்பாரல்லவா .


அதுவே கமல் போன்றவர்கள் பேசும்போது பாலச்சந்தர் ஐயா "அவர்கள்", சிவாஜி ஐயா அவர்கள் என்பார். 


தொலைக்காட்சி விவாதங்களில் "தலைவர் கலைஞர் அவர்கள்" "புரட்சித் தலைவி அம்மா அவர்கள்" என்பனவற்றின் எளிய வடிவம்தான் ஜி என்பது.

அது போலவே திரு.கருணாநிதி, திரு.வைகோ திரு. நரேந்திரமோடி என்று சொல்வோம் (திருமிகு, திருமின் என்று பெண்பாலுக்கு இடலாம்)


ஹிந்திப் பித்துக்குளிகள் தமிழில் அடிக்கும் சுவரொட்டிகளிலேயே "ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்கள்" வருகை புரிகிறார் என்று போடுவார்கள். வீரத் துறவி "ராமகோபாலன் ஜி" உரையாற்றுகிறார் என்றும் போடுவார்கள்.

குழந்தைக்கு பெயர்வைக்கிறவர்கள் ரொம்ப விவரமாக அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்று கேட்டுத்தானே வைக்கிறார்கள் இல்லையா. ஸ்ரீ - க்கு மட்டும் சும்மா புனிதம் என்று விட்டுவிடுகிறார்களா. ஸ்ரீ க்கு என்ன பொருளென்று வினவினால் திரு என்று வரும். அந்த திரு என்ற சொல்லைத்தான் எல்லாப் பெயர்களுக்கும் மெனக்கெட்டு வைக்கிறார்களா ? ஸ்ரீமதி என்றெல்லாம் வைக்கிறார்களய்யா.

வித்யா விகாஸ் என்று ஒரு பள்ளி இருக்கிறது.  பெயரின் பொருளென்ன. ஒன்றுமில்லை கனவான்களே !


வித்யா - கல்வி (அறிவு, ஞானம், கலை போன்ற பல பொருள்கள் தரும் சொல்) விகாஸ் - வளர்ச்சி, முன்னேற்றம், போன்ற பலபொருள்கள் கல்வி என்ற பொருளும் இதில் அடக்கம்)

 கல்வி வளருமிடம், அறிவு முன்னேற்றம் இவ்வளவுதான் அதன் பொருள். இதையே தமிழில் சொல்லும்போது இவ்வளவுதானா என்று வெத்தாகத் தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தில் வைத்தால் கெத்தாக இருக்கிறது

நமக்குத் தெரியாத ஒன்றை உயர்வாக நினைக்கும் போக்குதான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்

சிவபெருமான் = ஷிவா
பிள்ளையார் = விக்னேஷ், கணேஷ், விநாயக்.. 

(மூர்த்தி என்றால் சிலை, கணேஸ் மூர்த்தி என்றால் வியாகர் சிலை, நாராயண மூர்த்தி என்றால் பெருமாள் சிலை என்று கிண்டல் செய்யலாம். எப்படி அருமையாக இருக்கிறது பாருங்கள்)
காளியாத்தா, கொற்றவை - துர்கா
அம்மன் - அம்பா
கலைமகள் - சரஸ்வதி
திருமால் - விஷ்ணு

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். குமாரன் என்று தமிழ்த்தன்மையுடன் இருந்ததை மாற்றி குமார் என்று வைத்தார்கள். சிவக்குமார் என்ற எனது பெயரை யாராவது ஷிவா- என்று அழைத்தாலோ, shiva என்று எழுதினாலோ எரிச்சலாக இருக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு அதுதான் இயல்பாக இருக்கிறது. நடிகை ஸ்ரேயா-வின் பெயர் உண்மையில் ஸ்ரீயா என்பதுதான். அதை ஊடகப் புண்ணியவான்கள் எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எங்கோ தொடங்கி எங்கோ வந்து விட்டேன். திரும்புகிறேன்.

நீலம், பச்சை, சிவப்பு போன்ற கண்ணைப் பறிக்கும் ஆடை அணிபவர்களை எள்ளி நகையாடும் விடலைகள் அதே நிறத்தில் ஃபேஷன் என்று வரும்போது பெருமிதத்துடன் அணிவதில்லையா அது போலவே பெயர் வைக்கும் நகைச்சுவையும் அரங்கேறுகிறது.

தமிழ் மொழியின் வழியில் வந்த இந்துக்களே இப்படி என்றால் எப்போது கிறித்தவ, இஸ்லாமியர் தமிழில் பெயர் வைக்கத் தொடங்குவது ?.

குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவப் பெயர்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் மதம் சார்ந்த நூல்களை கருத்துக்களை சிறப்பாகத் தமிழ்ப்படுத்தியிருந்தாலும் இஸ்லாமியர் யாரும் (மணவை முஸ்தபா என்ற தமிழறிஞர் தவிர) வைத்த மாதிரி தெரியவில்லை. அப்படிப் பெயர் வைப்பது ஹரம் ஒன்றும் இல்லைதானே. இன்னும் ஏன் அன்பன் என்று இல்லாமல் ஆஷிக், மணிமகள் என்றல்லாமல் ஃபாத்திமா என்றெல்லாம் வைக்கிறீர்கள்.

இப்படியே ஸ்ரீ பைத்தியம் பிடித்து அலையும் தமிழ்நாட்டினர் கொஞ்சகாலத்தில் ஊர்ப்பெயர்களையெல்லாம் ஸ்ரீப்பூர்,  ஸ்ரீநெல்வேலி, ஸ்ரீசெந்தூர் என்று மாற்றுவார்கள். தமிழ் நாட்டின் பெயரையும் ஸ்ரீ தமிழ் நாடு என்று மாற்றுவார்கள் இல்லை ஸ்ரீ நாடு என்றே மாற்றுவார்கள். ஏன் தமிழ் மொழியின் பெயரையுமே ஸ்ரீ தமிழ் என்று அழைப்பார்கள் இல்லை இல்லை ஸ்ரீமிழ் என்றே ஆக்குவார்கள்.

வாழ்க ஸ்ரீ வளர்க ஸ்ரீ !

 
Download As PDF
Bookmark and Share

Post Comment

வாழ்த்துதல்களின் கொண்டாட்டங்களின் உண்மை நோக்கம் என்ன ?


வாழ்த்துக் கூறுதல் என்பது ஒரு நல்ல செயலை எதிர்நோக்கியிருக்குமாறு சொல்வது. நல்ல செயல் நடக்கும் என்று நம்பிக்கை சொல்வது. தேர்வில் தேர்ச்சி அடைவாய், தொழிலில் வெற்றி பெறுவாய், வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதை எல்லோரும் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா என்றால் இல்லை. திருமணத்திற்குச் செல்கிறார்கள் அங்கே எத்தனை பேர் மணமக்களை உள்ளப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள். போகிறார்கள், விருந்து எப்படி இருந்தது என்று பேசுகிறார்கள், சைட்டடிக்கிறார்கள், பெண்கள் மற்ற பெண்களின் உடை, நகை ஒப்பனை குறித்து ஒப்பிடுகிறார்கள். மணமக்களின் உடை, நகை, புறத்தோற்றம், ஒப்பனை குறித்து விவாதிக்கிறார்கள். சீதனம் எத்தனை சொத்து இத்தனை இத்யாதிகள் பற்றிப் பேசுகிறார்கள். கலைகிறார்கள். 

ஆண்கள் பழைய நண்பர்களுடன் இணைந்து சரக்கடிப்பதற்காகவே திருமணத்திற்கு வருகிறார்கள். திருமண "வரவேற்பு" காலையில் நடக்கிறதென்றால் முந்தைய இரவே அடித்த போதை தெளியாமல் மல்லாந்து கிடக்கிறார்கள். எல்லாம் முடிந்து கடைசி பந்தியில் உண்டு விட்டுப் போகிறார்கள். திருமணத்திற்கு வந்து வாழ்த்துவதெல்லாம் அவர்கள் நோக்கமில்லை. 

அனைவரும் வந்து வாழ்த்தினால் மணமக்கள் நன்றாக வாழ்வர் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் அழைக்கபடுகின்றனர். வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வே திருமணம். இவர்கள் இப்படி இருக்கையில் என்ன நடந்து விடுகிறது என்பது புரியவில்லை. எல்லாமே சம்பிரதாயத்திற்காகவும், பகட்டுக்காகவும் எந்திரத்தனமாக நடந்தேறுகிறது. 

இந்த புத்தாண்டு வாழ்த்துக்களும் அப்படித்தான். எல்லாரும் சொல்கிறார்கள் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்த்து பரிமாறிக் கொள்கின்ற நாள் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் நல்லதாகத் தோன்றவில்லை. சரக்கடிப்பதற்கு ஏற்ற நாளாகத்தான் இதை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதுவும் சரியாக 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அல்லது அழைத்து வாழ்த்துச் சொல்வது,  நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போலத்தான். அதை சொல்பவர்களும் மகிழ்கிறார்கள், வாழ்த்து பெறுகின்றவர்களும் மகிழ்கிறார்கள். வாழ்த்தாமல் இருந்து விட்டால் இருவரும் சங்கடப் படுகிறார்கள். 

இரு இணைபிரியா நண்பர்கள் என்ன நினைவு வைத்தா சொல்கிறார்கள். எல்லோருக்கும் செல்பேசியின் காலண்டர், ஃபேஸ்புக்கிலோ நோட்டிஃபிகேசன் வந்து விடுகிறது. டெம்ப்ளேட் செய்தியையோ வாழ்த்தையோ தட்டி விடுகிறார்கள். பிறகு ட்ரீட் ஆரம்பமாகிறது. இதில் அன்பு எங்கே இருக்கிறது. 

புத்தாண்டில் வாழ்த்துத் தெரிவித்தால் அவ்வருடம் முழுதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. வாழ்க்கை ஏற்படுத்தும் துயரங்கள் இவ்வருடத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்னவோ பழைய மாதிரிதான் பெரும்பான்மையினருக்கும் தொடரப் போகிறது. அந்த சில நிமிட மகிழ்ச்சிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா ? 

மற்ற எந்த நாளாக இருந்தாலும் பேருக்கு வீட்டில் கொண்டாடி விட்டு, வெளியில் இரகசியமாய் சரக்கடிப்பார்கள். ஆனால் புத்தாண்டில் மட்டும்தான் சரக்கடித்து விட்டு பொதுவிலேயே ஆட்டம் போடலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. கோவையில் இந்த புது வருடத்தின் முதல் நாள் மட்டும் நான்கரைக் கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. வழக்கத்திற்கு ஒரு நாளில் 3 கோடிக்கு மட்டுமே இருந்த விற்பனை ஒன்றரைக் கோடிக்கு அதிகமாகியிருக்கிறது, இது போன்ற போதையில் சமூகத்தை ஆழ்த்துவதற்குத்தான் ஒரு மண்ணுக்காகாத இந்த பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் பிரபலப்படுத்தப் பட்டு பொதுவாக்கப்படுகின்றன.

ஒரு நல்ல செயலைத் தொடங்கவோ அல்லது தம், தண்ணி, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் ரிசொல்யூசன்களை எடுக்க ஒரு சாக்காக இந்த ஆண்டுப் பிறப்பைச் சொல்லிக் கொள்கிறார்கள். அதை விட நினைப்பவர்கள் உண்மையிலே அதுதான் நோக்கமென்றால் அக்கணமே தொடங்க வேண்டியதுதானே. அதற்கென்ன வேண்டிக் கிடக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. இது ஆங்கிலப் புத்தாண்டே இல்லையாம், லத்தீன் புத்தாண்டு வேறயாம். தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி சமஸ்கிருதத் திணிப்போ அது போல. இப்படி பெயரும் பெயர்க்காரணமுமே எல்லாருக்கும் தவறாகப் பரப்பப் பட்டு கொண்டாடப் படுகிறது. 

யாரோ எப்படியோ கொண்டாடினாலோ மகிழ்ச்சியாக இருப்பதால் நமக்கென்ன வயிற்றெரிச்சல் வந்து விடுகிறது. ஆனால் அப்படியில்லை. இவை நம்மீதும் திணிக்கப்படுகிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது போன்ற கொண்டாட்டங்களிலெல்லாம் நம்மையும் ஈடுபடுத்துகிறார்கள் அல்லது நாமே பங்கெடுக்க வேண்டியதாகிறது. பொங்கள் தவிர தீபாவளி, பிறந்த நாள், ஜனவரி 1 போன்றவறையெல்லாம் கொண்டாடுவது எனக்கு அறவே பிடிக்காது ஆனால் நண்பர்களும், உறவினர்களும் கையை குலுக்கியோ, கைபேசியால் அழைத்து நம் வாயிலிருந்து வாழ்த்தைப் புடுங்கி விடுகிறார்கள். பிடிக்காது, நம்பிக்கையில்லை, விருப்பமில்லை என்று என்ன சொன்னாலும் விடுவதில்லை. இவர்கள் விளக்கம் சொன்னால் மனத்தை வேறு புண்படுவதாகக் கூறுவார்கள். நாளும் புதிதாக நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரிடம் சலிக்காமல் நாம் கொள்கை விளக்கம் அளித்துக் கொண்டா இருக்க முடியும் ?

மனிதர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்வூட்டிக் கொள்ளவும் உற்சாகமாக செயல்படவும் கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் இன்றியமையாத தேவைகள். ஆனால் சமூகத்திற்கும், தனிமனித சீரழிவுக்கும் வழிகொள்ளும் இவ்வகை திடீர் மிகை உணர்ச்சிக் கொண்டாட்டங்கள், காலத்திற்கொவ்வாத மதப் பண்டிகைகள், நுகர்வுப் பண்பாட்டைப் ஊக்குவிக்கும் போலிக் கொண்டாட்டங்கள் என்ன பயனைத் தரும் என்று பார்த்தால் ?? இவைகளைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. 

Download As PDF
Bookmark and Share

Post Comment

இவர்கள் இப்படித்தான் - எப்போது திருந்துவார்கள் ?

எங்கள் ஊரில் இப்போதுதான் சாக்கடையைக் கட்டியிருக்கிறார்கள். இன்னும் ஈரம் கூடக்காயவில்லை. தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரிசையாகக் கடைகள் இருக்கின்றன. எந்தவொரு கடையிலிருந்தும் முதலடி வெளியே வைத்தால் சாக்கடைக் கால்வாய்தான். இதையே சௌகரியமாக எடுத்துக் கொண்டு கடையிலிருக்கும் குப்பையையெல்லாம் கூட்டி சாக்கடையிலேயே கொட்டுகிறார்கள் அல்லது கடையிலிருந்து கூட்டி வெளியே தள்ளி விட்டால் அது நேராக சாக்கடைக் கால்வாயிலேயே விழுகிறது. கடைகள் என்றாலே எத்தனைகுப்பைகள் சேரும் என்று சொல்லவேண்டியதில்லை. இப்படி இருந்தால் எப்படி சாக்கடை நீர் போகும் என்று தெரியவில்லை. வீடுகளிலிருந்து குப்பையைக் கட்டி வெளியே வீசுகிற சிலரும் சாக்கடைக் கால்வாயிலேயே வீசுகிறார்கள். இன்னும் சில தெய்வங்களுக்கு தண்ணீர் தேங்கி நின்றாலே அல்லது சாக்கடையைப் பார்த்தாலே பத்து நாள் சேமித்த எச்சிலைக் காறித் துப்பாமல் இருக்க முடியாது. அதைத் தூய்மை செய்பவன் ஒரு மனிதன் என்று நினைத்தால்தானே. அங்கே வீசக் கூடாது என்று தெரியாதா இல்லை குப்பையை நடந்து போய் கொட்டுவது கௌரவக் குறைச்சல், நிக்கற இடத்திலிருந்தே விட்டெறிவதுதான் ஸ்டைல். குப்பையை கைகளால்தான் மனிதர்கள் அள்ளிச் செல்கின்றனர். அதில் எச்சில் துப்பக் கூடாது என்பதற்கெல்லாம் பெரிய மகாத்மா மாதிரி சிந்திக்கிறவர் மட்டுமே செய்ய வேண்டுமா ? அதான் நமக்கெல்லாம் தெரியாதே. அதே போல் பொதுக்கழிவறைக்குச் சென்றால் தண்ணீர் ஊற்றாமல் வருவது, ஃபளஷ் செய்யாமல் வருவது, சிறுநீர் கழிக்குமிடத்து பபிள் கம்மை துப்பி வைப்பது,(ஆமா எதுக்கு ஒண்ணுக்குப் போகும்போது அடுத்தவனுடையதை எட்டிப் பாக்கறது - தேசியப்பழக்கம்), பின்பு கழிவு நீர் தேங்கி நாறினால் அரசாங்கத்தைத் திட்டுவது, துபாயைப்பார் அமெரிக்காவைப் பார் என்று கத்த வேண்டியது.  இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி மாற்றுவது.
Download As PDF
Bookmark and Share

Post Comment

காதல் வலியது


ஜியாவின் இறப்பைக் கேள்வியுற்றபோது இவளுக்கெல்லாம் என்ன குறைச்சல் என்று நினைத்தேன். லண்டனில் பிறந்து வளர்ந்து பின்பு நடிப்பதற்காக இந்தியா வந்து பிரகாசிக்க முடியாமல் தோல்வியடைந்து, காதல் கசந்து பின்பு தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியால் தற்கொலை, கொலை செய்வதெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களிடம் உள்ள வழக்கம். இப்படி பணக்கார பிரபலங்கள் கூட இப்படி செய்து கொள்கிறார்களா என்று தோன்றியது. இது போன்ற தோல்விகளை அதுவும் காதல் தோல்விகளை ஒரு பொருட்டாகவா அவர்கள் கருதுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களும் அதே உணர்வுகள் உருவானவர்கள்தான் போலும். 

ஜியா கான் / நஃபிஸா கான்
18 வயதில் அமிதாப் நடிக்கும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான "நிஷப்த்" படத்தில் அறிமுகமாகிறார். பின்பு அமீர்கானின் "கஜினி" (தமிழ் - கஜினியில் நயன்தாராவின் வேடத்தில்) நடித்தார். இப்படி பெரிய நடிகர்களுடன் முதலிரண்டு படங்களில் நடித்தும் அவள் எதிர்பார்த்தது போல் நல்ல வாய்ப்புக்கள் எதுவும் அதற்குப் பிறகு வரவில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஹௌஸ்ஃபுல் (Housfull) படத்தில் சிறுவேடம் மட்டுமே கிடைத்தது. அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆகி விட்டது. இன்டீரியர் டிசைனர் ஆகலாம் என்று முடிவெடுக்கிறார். ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறார்.  அதுவும் தோல்வியில் முடிகிறது. பின்பு தனது காதலனுடன் நடந்த சண்டையில் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொள்கிறார்.

பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லாததால் ஏற்பட்ட மனவருத்தத்தில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். ராம் கோபால் வர்மா தன்னை சந்திக்க ஜியா வந்ததாகவும், "இத்தனை வருடங்களாக நான் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு என்ன குறை எனக்கு ஏன் வாய்ப்புக்கள் வரவில்லை என்று தெரியவில்லை என்று கூறினாள். ஆனால் அவளுக்குப் பொருத்தமான பாத்திரம் தன்னுடைய படங்களில் இல்லாததால் அவளை நடிக்க வைக்க முடியவில்லை அதனால் அவளிடம் காத்திருக்கும்படியும் கூறினேன்" ஆறு வருடங்களாக மிகப்பெரிய வாய்ப்புகள் ஏதும் வராததால் மனமுடைந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு படம் ஒப்பந்தமாகியிருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜியாவின் தங்கை சொல்லியிருக்கிறார். அதனால் அவள் தனது திரைப்பட வாழ்க்கையில் தோல்வியடைந்தது மனமுடையவில்லை, அவள் குடிக்கு அடிமையாகவுமில்லை என்று கூறியிருக்கிறார்.

தனது ட்விட்டரில் தன்னைப் பற்றி நடிகை, கவிஞர், இசைக் கலைஞர், கனவு காண்பவள், வாழ்க்கையை ரசிப்பவள் என்று எழுதி வைத்திருக்கும் ஒரு 25 வயதுப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. ஆனால் உண்மை காரணம் காதல் தோல்வி.

காதலில் தோல்வி என்பதற்காக உயிரை விடுமளவிற்கு காதல் வலிமையான உணர்வா ? கொலை செய்வது, அமிலம் ஊற்றுவது போன்ற பிசாசுகளைப் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. அவரவர் உயிரையே மாய்த்துக் கொள்ளுமளவுக்கா காதல் வலியது ?  அங்கங்கே படித்த படிக்கும் செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன. சில செய்திகள் எத்தனை நாட்களானாலும் மறப்பதில்லை. ஆள் ஊர் பெயர் மறந்தாலும் அந்த நிகழ்ச்சியின் வீரியம் அதை மறக்க முடியாமல் செய்து விடுகிறது. ஜியா  ஒரு பிரபலம் அல்லது நடிகை என்பதால் எனக்கு தனிப்பட்ட கரிசனம் ஏற்படவில்லை.

ஒரு செய்தியில் தம்பதியினர் இறப்பைப் பற்றியது கணவர் இறந்த அந்நாள் நண்பகலிலேயே மனைவியும் இறந்து விடுகிறார். இவர்களிருவரும் 80 வயதைக் கடந்தவர்கள்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் தூக்குப் போட்டுக் கொண்ட கணவர்

இன்னொரு செய்தியில் வட இந்தியாவில் லாரி ஒட்டுநராகச் சென்ற தன் கணவர் இறந்த செய்தி கேட்டு கர்ப்பிணியாக இருக்கும் மனைவி தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார்.

இப்படிப் பல செய்திகள் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

நடிகைகள் போன்ற பணக்காரர்கள் காதல் தோல்வியடைந்தால் துடைத்து விட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால் காதல் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் ஷோபா, ஃபடாபட் ஜெயலட்சுமி, விஜி, சில்க் ஸ்மிதா, ப்ரத்யுஷா, மோனல் என்று நீள்கிறது. சின்னத்திரை, துணை நடிககள் யார் யாரோ தெரியவில்லை.

அம்மாவோ அப்பாவோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அண்ணனோ தம்பியோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அக்காவோ தங்கையோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால்யாரும் தற்கொலை செய்வதில்லை

நண்பர்கள் இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்வதில்லை.

சில தற்கொலைகள் நடந்திருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கின்றன.

ஆனால் தான் காதலித்த நபரோ, வாழ்க்கைத் துணையோ அல்லது அவர்களது பிரிவோ ஏற்படுத்தும் மனவேதனை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது.

காதலுக்காக பெற்றோரையே விட்டுவிடத் துணிகிறார்கள்

சொத்தை விட்டுவிடத் துணிகிறார்கள்

மதம் மாறி கடவுளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.

காதல் உண்மையில் மகத்தானதுதான்.

காதல் இருக்கட்டும். என்னுடைய நண்பனொருவனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் தலை சுற்றும்.  அவன் மற்ற சராசரி ஆண்களைப் போல் பெண்களுடன் பேசுவதில் எவ்வித கிளுகிளுப்பும் பரவசமும் கொள்ளாதவன், பெண்களுடன் பழகுவதையே வெறுத்தவன். திருமணமே வேண்டாம் என்று இருந்தவன். இறுதியாக பெண் தேடும் படலம் தொடங்கிய போது, வெவ்வேறு இடங்களிலிருந்தும் அவனுக்கு வரன்கள் வந்தன. இறுதியாக ஒரு இடத்தில் திருமணமும் முடிவாகியிருந்தது. இதற்கு முன்பும் பல பேருடன் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அதனால் மாப்பிள்ளை தேடிய சில பெண்கள் இவனுடன் அவ்வப்போதுஅலைபேசியிலும் பேசியிருக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களால் அவர்கள் யாரும் கூடி வரவில்லை.

இப்போது ஒரு பெண்ணுடன் இவனுக்கு நிச்சயமான பிறகும், இன்னும் மூன்று பெண்கள் தன்னையே திருமணம் செய்து கொள்ளும்படி அவனை வற்புறுத்தினார்கள். திரும்பத் திரும்ப அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அவனுக்கு ரொம்பவும் சங்கடமாகப் போய்விட்டது. இதில் ஒன்று மிகப் பெரிய தொகையாக சீதனம் கொடுப்பதற்கும் முன் வந்தார்கள். அந்த மூன்று பேரில் இன்னொரு பெண் இவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்த பின்னர் தூக்க மாத்திரையை விழுங்கி விட்டாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அம்மூவரும் இவனை நேரில் கூடக் காணாதவர்கள். புகைப்படத்தில் கண்டதோடு சரி, அலைபேசியில் பேசியது மட்டுமே அவர்களுக்கிடையிலான தொடர்பு. இதையும் என்னால் நம்ப முடியவில்லை.

ஆண்கள் சிலர் ஒரே சமயத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பார்கள், பொழுது போக்குவார்கள். ஆனால் என்னுடைய நண்பன் வேறு விட இயல்புடையவன். பேசியே மயக்குமளவுக்கு இவனிடம் சரக்குமில்லை. பெரிய பணக்காரனுமில்லை. நல்ல ஊதியம் வாங்கும் பணியிலுமில்லை. அரசாங்க வேலையுமில்லை, சாதாரண தனியார் நிறுவனத்தில்தான் பணி புரிகிறான். இதையெல்லாம் தாண்டி அந்தப் பெண்கள் இவனிடம் எதை விரும்பினார்கள், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் இன்னும் புரியவில்லை. இதையேதான் அவனும் என்னிடம் சொன்னான். நானும் அவனிடம் சொன்னேன். இருவரும் சிரித்துக் கொண்டோம். பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் மனம் மாறலாம். ஆனால் தூக்க மாத்திரையை விழுங்குமளவிற்கு திடீரென்று தோன்றும் அவநம்பிக்கைக்குக் காரணமென்ன ?

பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், பணத்திற்கு ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்பவர்கள்தான் சிந்திக்க வேண்டும். காதல் நாம் நினைப்பதை விட வலியது.

Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்தப் பெண் தலை குனியவில்லை !!

 

இரண்டு காணொளிகளையும் கண்டிருந்தால் யார் மீது தவறு என்று புரியும் . நான் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதில்லை. இஸ்லாமியப் பெண்மணியில் ஒரு இடுகையை பதிந்திருந்தார்கள். அதில் இக்காணொளியை மையப்படுத்தி இருந்தது. அதில் பின்னூட்டமிட்டிருந்த சிலர் இதனால் இஸ்லாமிய சமூகத்திற்குத் தலை குனிவு என்று பொருள்படும்படி எழுதியிருந்தார்கள். நான் அதை மறுக்கிறேன்.



இந்த நிகழ்ச்சியின் இக்குறிப்பிட்ட பெண் பங்கு கொண்ட இரு காணொளிகளையும் கண்டேன். ஸீ தமிழ் தொலைக்காட்சி மிகச் சிறப்பாக பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்து அடுத்தவன் பிரச்சனையைப் பற்றிப் பேசித் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளும் நபர்களின் தினவெடுத்த மூளைக்குத் தீனி போடவும், கலாச்சாரக் காவலர்கள் கரித்து கொட்டவும் ஏற்ற் வகையில் எரிச்சலைக் கிளப்பும் பின்னணி இசையுடன் ஒளிபரப்புகிறார்கள். 

இதில் இருப்பது என்னவென்று எல்லோர்க்கும் புரிந்திருக்கும். முஸ்லிம் பெண் இந்து ஆண் இருவரும் காதலித்திருக்கிறார்கள். இப்போது பெண் கருவுற்றிருக்கிறாள். ஆணோ அவளை ஏற்க முடியாது சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை புகார் கொடுத்துக் கொள் என்கிறான். அவள் அழுது கெஞ்சுகிறாள். அவன் மீது புகார் கொடுப்பதற்கல்ல, சேர்ந்து வாழத்தான் இங்கு வந்தேன், அவனை வரவைத்தேன் என்கிறாள். அவனோ அவள் இவ்வளவு அவமானப்படுத்திய பிறகு சேர்ந்து வாழமுடியாது என்கிறான். அவன் திருமணம் செய்துகொள்வதுதான் தீர்வு, இல்லையெனில் அவன் மீது புகார் அந்தப் பெண் கொடுத்தால் அதை ஆதரிப்போம் என்கிறார் லட்சுமி.

உண்மையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பது அந்த ஆண்தான். ஆண்கள்தான் இதற்குத் தலை குனியவேண்டும். அந்தப் பெண் தலை நிமிர்ந்துதான் நிற்கிறாள். தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கேட்டுத் தலை நிமிர்ந்துதானே நிற்கிறாள். இதில் என்ன தவறு ?  இதை ஏன் அப்பெண்ணுக்குத் தலை குனிவு என்று சொல்ல வேண்டும். அவனிடம் கெஞ்சிக் கேட்டதாலா ? அவனைப் போன்றவனிடம் போய்க் கெஞ்சுவது பெண்ணுக்குத் தலை குனிவுதான். அவள் கேட்ட கேள்விகளுக்கு எதுவுமே சரியான பதில் அவனிடமிருந்து வரவில்லை, அவமானப்படுத்திவிட்டாள் என்கிறான். அவளோ அவனது அண்ணன் இருப்பதால்தான் புகாரளிக்க துணிச்சலாகச் சொல்கிறான் என்கிறாள். அவன் பேந்தப் பேந்த முழிப்பதும் அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்புவதும் அவன் பொய் சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.

ஆக மொத்தம் இவனுக்குக் கசந்து விட்டதால் மொன்னைக் காரணத்தைச் சொல்லி இவளை வேண்டாமென்கிறான். அவள் அவனுடன் வாழ்வதுதான் வேண்டும், புகாரளிக்க விருப்பமில்லை என்கிறாள். அவன் பொய் பேசுகிறவன் என்பதை ஏற்கெனவே தெரிந்துதான் காதலித்தேன் என்கிறாள். என்னை கேட்டால் இவனிடமெல்லாம் கெஞ்சுவது அவளது தன்மானத்திற்கும், பண்புக்கு இழுக்கு என்றுதான் கூறுவேன். அவன் வந்து  கெஞ்சினால் கூட இவள் ஒத்துக் கொள்ளக் கூடாது. இவனைத் தூக்கியெறிந்து விட்டு வாழவேண்டும். வாழ்க்கை விரைவில் அவளுக்கோர் நல்வழிகாட்டும். அவளைப் பார்த்தால் பக்குவப்பட்டவளாகவே தெரிகிறது.

பெண்கள் என்றாலே காதலித்து ஏமாற்றுகிறவர்கள் என்று குறுந்தகவல் அனுப்புகிறவர்கள், ஒரே சமயத்தில் இரண்டு மூன்று ஃபிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டே "வேணாம் மச்சா வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு" என்று நிலைத்தகவல்கள் போட்டு "லைக்"கள் வாங்கும் அறிவாளிகளுக்கு இந்தப் பெண்ணின் காதல் சமர்ப்பணம். இது பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

பெண் காதலிக்க மறுத்ததற்காக அமிலத்தை ஊற்றுவது, பாலியல் வன்முறையை ஏவுவது, கொலை செய்வது என்று வெறியாட்டம் போடும் ஆண்களுக்கு நடுவில் காதலுக்காக இரந்து நிற்கும் இவள் பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

ஆண்கள் எல்லாம் தியாகிகள் என்பது போலவும் பெண்கள் என்பவர்கள் பொழுது போக்கவும், பணத்துக்காகவும், ஊர்சுற்றுவதற்காகவும்  மட்டுமே காதலிப்பதாக நடிக்கிறார்கள் என்று அயோக்கிய நடிகன் பேசும் குப்பை வசனத்துக்காகவும் காது வரை சிரித்து மகிழும் ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்.

இதை வைத்து காதலிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வோர்க்கும் சமர்ப்பணம்.

ஆண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மேட்டர் முடிச்சியா, கை வச்சிட்டியா என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதே ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினால் அவளே ஒரு மேட்டர், கெட்டுப் போனவள், சோரம் போனவள் என்று சொல்வார்கள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம். பெண்களைக் குற்றவாளியாக்கும் ஆண்களின் இரட்டை நாக்கு. ஆண்கள் கலவி செய்தால் அது வெற்றி, அதையே பெண்கள் செய்தால் அது தோல்வி. நல்ல மதிப்பீடு.

ஆண்கள் தாங்கள் அயோக்கியர்களாக இருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பெண்கள் ஏன் அயோக்கியனையே காதலிக்கிறார்கள், அவர்களையே விரும்புகிறார்கள் என்று எரிச்சல்படுவார்கள்.
இப்போது இந்தப் பெண்ணுக்கு  இந்த சமூகத்திடம் கெட்ட பெயர், அல்லது இந்த சமூகமே காறித் துப்புகிறது என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். இந்த நிகழ்ச்சியின் போது இந்தப் பெண்ணுடைய தங்கையும் யாரையோ காதலிப்பதாக அவன் சொல்லி விட்டான். இதனால் அந்தப் பெண்ணுக்கும் கெட்ட பெயர். இங்கு இந்த சமூகம் என்ன சொல்கிறதென்றால், ஒரு பெண் காதலித்தால் அவள் களங்கப்பட்டவள். இதெல்லாம் இந்த சமூகம் வைத்திருக்கும் மதிப்பீடுகள்.

நான் மனித உணர்வுகளுக்குத்தான் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜாதி, மதம் போன்ற மாயக் காரணங்களுக்கல்ல. மனிதனுக்குத்தான் மதமே தவிர, மதத்துக்காக மனிதனல்ல. அந்த வகையில் காதல் என்பது மனித உணர்வுகளில் ஒன்று. நான் காதலை ஆதரிக்கிறேன். அதுதான் பெரிய சவால். இதில்தான் ஆபத்தும் அதிகம், அதிக கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்

ஒன்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதாலேயே அது சரியானது என்றாகிவிடுமா ? இல்லை ஒன்றை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே அது தவறானதாகிவிடுமா? நான் அநீதியான இந்த சமூகத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது வைக்கும் அளவுகோலையும் மதிப்பதில்லை. இந்த சமூகம் எதை மதிக்கிறது என்று சொன்னால் ஒரு பெண் படிக்கிறாள், வேலைக்குப் போகிறாள். திருமணம் செய்யும் வயது வருகிறது. பின்பு வேலையையும் விட்டு விட்டு பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குச் சென்று கணவனுக்கும்  அவன் வீட்டினர்க்கும் பணிவிடை செய்து வாழ வேண்டும். 


எத்தனை பவுன் நகை, எத்தனை பணம், சீதனமாக என்னென்ன கொடுத்தார்கள். என்பதைப் பற்றி சமூகத்தினர் தமக்குள் பேசிக்கொள்வர். பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் எப்படி, அழகு எப்படி குடும்பம் எப்படி என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும்.  இதுதான் இந்த சமூகம் மெச்சத்தக்க குணம் என்று எதைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிதான் பெண்கள் இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் கூடாது. நடந்தால் கொலை கூட நடக்கும்.  இப்படி ஜாதிவாரியாக சீதனம், நகை என்று என்ற தலையை அடகு வைத்து கடன் வாங்கி வணிகத்தைத்தான் நடக்கும் திருமணம் சமூகம் கொண்டாடுகிறது. ஜாதிக்காரன் என்பதற்காக கொஞ்ச நஞ்சம் சீதனம் கொடுக்கல் வாங்கலில் குறைந்தால் கூட திருமணம் நடப்பது பிரச்சனை ஆகிறது. இப்படிப் பெரும்பான்மையான திருமணங்கள் நடந்தாலும், சீதனத்திற்காக மருமகளைக் கொடுமை, கொலை செய்வது வரை நடக்கிறது. இப்படி நடக்கும் திருமணங்கள் கூட சில நேரம் தோல்வியில் முடிகின்றன. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், திருமணமே தவறு திருமணமே வேண்டாம் என்று கூட வேண்டாம் சீதனம் தருவது தவறு என்று கூட பெரிய அளவில் மாற்றத்தைக் காணோம். திருமணம் என்ற சடங்கு அல்லது வணிகம் சமூகத்தின் முழு ஆதரவுடன் ஆரவாரமாக நடந்து வருகிறது.

அனைவரது ஆதரவு, பொருளாதாரச் சிக்கலின்றி நடக்கும் திருமணங்களிலேயே இத்தனை பிரச்சனையிருக்கும்போது, பக்குவமும், அனுபவமும் இல்லாத இரண்டு பேர் எல்லோரையும் எதிர்த்து நடக்கும் காதல் திருமணங்களில் இன்னும் சிக்கல்களும், சவால்களும், போராட்டமும் அதிகம் தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒழுக்கங்கெட்டவர்கள், ஓடுகாலிகள், குடும்ப மானத்தை வாங்கியவர்கள் என்ற பட்டப்பெயர்கள் சமூகத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கும். இப்படி இருக்கிறது நிலைமை. காதலிப்பவர்களெல்லாம் பெற்றோரை ஏமாற்றுகிறவர்கள், மானத்தை வாங்குகிறவர்கள் என்றெல்லாம் ஏசுகிறார்கள். பெற்றோர் நடத்தி வைக்கும் வணிகத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் ஆணும் பெண்ணும் தன்மானமற்றவர், உணர்ச்சியற்றவர்கள் என்று கருதலாமா ?

யாரும் நம்மை 20 வருடம் பெற்று வளர்த்துக் காப்பாற்றும் பெற்றோரை ஏமாற்றியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தெரியாமல் ஊர் சுற்றுவதில்லை,  வேறு மத, ஜாதிக்காரனைக் கட்டிக் கொண்டு ஓடுவதில்லை. நான் இன்னாரைக் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொல்லுமளவுக்கு பக்குவப்பட்டவர்களாகவா பெற்றோர் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உயிருக்காவது உத்தரவாதமிருக்கிறதா ? காதலென்றாலே கல்லைப் போட்டுக் கொல்லுமளவிற்கு ஜாதி வெறியும், மதவெறியும் பிடித்து இருக்கிறார்கள். தலையை வெட்டிக் கொல்கிறார்கள்., கழுத்தை நெரிக்கிறார்கள், நஞ்சை ஊட்டுகிறார்கள். எரித்தும் கொல்கிறார்கள். கட்டாயத் திருமணம் விருப்பமில்லாம செய்விக்கிறார்கள். காதலை ஏற்றுக் கொள்வது போல் நடித்து வீட்டுக்கு வரவைத்துக் கொல்கிறார்கள். இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பிரித்து விட முயற்சிக்கிறார்கள். இப்படி எழவெடுத்த எதற்கும் பயனில்லாத ஜாதியைக் கட்டிக் கொண்டுதான் வெறிகொண்டு அலையும் பெற்றோர்கள் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். காதலிப்பவர்கள் தவறு செய்கிறார்களாம், பெற்றோரை ஏமாற்றுகிறார்களாம்.

தனிப்பட்ட மனிதர்களின் திருமணத்தில் கூட மதமும், ஜாதியும்தான் போலி கௌரவம், குடும்பமானம் என்ற பெயரில் மூக்கை நுழைக்கிறது. அதற்காக பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தையும் நிராகரிக்கிறார்கள் பெற்றோர். ஒரு வேளை பெற்றோர் சம்மதித்தாலும் கூறுகெட்ட ஜாதி, மத, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கூறு கெட்ட சமூகம் அதை தடுக்கிறது.

எல்லோரும் முகம் சுளிக்கும் இன்னொன்று, இவர்கள் வீட்டிலேயே திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டார்கள், அவள் கருவுற்றாள் என்பது. இது தவறாகவே இருக்கட்டும். நானும் இதைத் தவிர்க்கவே சொல்கிறேன். இருப்பினும் இதை ஒரு உலக மகாக் குற்றமாகச் சொல்வதால் இந்தப்புனிதத்தையும் கேள்வி கேட்க வேண்டும்.  வீட்டிலேயே இக்கூத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பார்கள். இதே வெளியில் போய் செய்திருந்தாலும் வெளியே போய்க் கூத்தடித்திருக்கிறார்கள் என்பார்கள். சரி இப்போது திருமணத்தில் என்ன நடக்கிறது ? யாரென்றே பேசிப் பழகாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். இப்போது அலைபேசியின் புண்ணியத்தால் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்கிறது. அதே 10 வருடங்கள் முன்னால் என்ன நடந்தது ? யாரென்று தெரியாத ஒருவருடன் திருமணம் செய்த பிறகு அன்றிரவு உடலுறவு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அவருடன் குடும்பம் நடத்த வேண்டும். அந்த நபருக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஏனெனில் இது பெற்றோர் உற்றார் பணம் செய்து ஊரைக் கூட்டி செலவு செய்து வைத்த திருமணம், புனிதமானது. பேசாமல் கொள்ளாமல் உடலுறவு கொண்டுவிட்டு அடுத்த நாளிலிருந்து பேசிப் பழகிக் கொள்ளலாம். வாழ்ந்து கொள்ளலாம். இந்த அசிங்கத்தை ஒன்றும் உறுத்தலில்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் 7 வருடங்கள் நன்கு பழகி புரிந்து காதலித்தவர்கள் செய்தால் அதைக் காறித் துப்புகிறார்கள். நன்றாக இருக்கிறது.

என்ன இருந்தாலும் பெண் இதை ஒத்துக் கொள்ளலாமா ? இப்போது அவள்தானே அவமானப்பட்டு நிற்கிறாள். பெண் பலவீனமானவள் என்பதால் தானே ஒரு ஆண் அவளிடம் அன்பைக் காட்டி தேனொழுகப் பேசி உடலுறவுக்கும் சம்மதிக்க வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம் 


பெற்றோரும் சமூகமும் சேர்ந்து, திருமணம் செய்து கொண்டு கணவனுக்கு ஒத்தாசையாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை கலாச்சாரம் என்றும் நம்ப வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம். 

இதை மட்டும் பெண் இதை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா ?  இல்லையே அதுதான் பெண்களுக்கு நல்லது என்றுதானே போதிக்கிறார்கள். இரண்டையும் நம்பித்தான் அவள் செயல்படுகிறாள். இதில் ஒன்றை மட்டும் குறை சொன்னால் எப்படி?

ஒரு பெண் கருவுற்றால் அது அவளது "தவறோ" அல்லது அவளுக்கு மட்டுமே "பொறுப்பு" என்று ஆகாது. அதை செய்த ஆணுக்கும் அதில் பாதி பங்கு உண்டும். ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறாள் என்றால் அது அவள் மட்டும் செய்யும் தவறல்ல. அதற்குக் காரணமான அந்த ஆணும்தான் அதற்குப் பொறுப்பாவான். அது போலத்தான் இதுவும். குழந்தை பெண்ணின் வயிற்றில் இருப்பதால் மட்டும் அவள் களங்கமானவள், தன்னையே இழந்து விட்டாள், கற்பு போச்சு, கண்ணியம் போனது என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்புகளே. அவைகள் சொற்பிழைகள், கருத்துப் பிழைகள். பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லும் தந்திரம்.

5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள் என்று செய்தி வருகிறது. 5 வயது சிறுமிக்கு கற்பு எங்கே இருக்கிறது என்று தோண வேண்டாமா ? அது மாதிரிதான் இதுவும் பெண்ணுக்கு மட்டும் எப்படி கண்ணியம் கற்பு எல்லாம் அழிகிறது, மானம் போகிறது இந்தப் போலிக் கற்பித்தத்தைச் செய்த சமூகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். பெண்களின் உணர்வை மதிக்காத இந்த சமூகத்தை ஏன் நாம் மதிக்க வேண்டும். கற்பு, கண்ணியம், பாதுக்காப்பு, குடும்ப மானம் என்று எல்லா எழவையும் பெண்களின் மீது சுமத்தி அவர்களை அலைக்கழிக்கும் சமூகத்தின் தூற்றுதலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்.

இந்தக் கற்பு, ஆணாதிக்கம் பற்றித் தெரிந்தவரே அதை எதிர்க்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணைக் காரணம் காட்டி, நான் அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி ஆயிட்டியே, மானம் போச்சே, வாழ்க்கை போச்சே என்கிற பாணியில் பேசுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறாள். இதில் அவளது மானமோ, கண்ணியமோ எதுவும் போகவில்லை. காதலிக்கும் பெண்களை இழிவாகப் பேசுகிறவர்கள்தான் கண்ணியமில்லாதவர்கள். அப்படி மானம் போனது என்று சொல்கிறவர்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்கட்டும். அவள் தலைகுனியவில்லை. தேவையுமில்லை.

காதலிக்கும் பெண்களே !!

ஆண்கள் எச்சரிக்கை
சமூகம் எச்சரிக்கை
கண்ணியம் எச்சரிக்கை
தூற்றுதல் எச்சரிக்கை
கற்பிதங்கள் எச்சரிக்கை
Download As PDF
Bookmark and Share

Post Comment