எமது பணி குறை சொல்லிக் கிடப்பதே !- இவர்கள் இப்படித்தான் - 2

இந்த வலைப்பூ, அல்லது ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ் இன்னும் நாம் பல இடங்களில் இணையத் தளங்களில் தமிழில் எழுதவும் படிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயல்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும். யாரோ ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம் அதே ஆர்வமுடைய பலருடன் இணைந்து கூட்டு முயற்சியால்தான் உருவாகியிருக்கிறது. அவரகள் கடின உழைப்பின் பலனைத்தான் நாம் நோகாமல் நொங்கு தின்பது போல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையையெல்லாம் தனிநபர் ஆர்வத்தாலும் அவர்களின் தன்னலம் கருதா உழைப்பினாலும்தான் அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. இது அவர்கள் மொழியின் மீது கொண்ட தீராத காதலினால்தான் அவர்கள் உந்தப் பட்டிருக்கிறார்கள்.

எம்புருசனும் கச்சேரிக்கி வந்திருக்கிறான் என்ற பாணியில் சிலர் நக்கலடிக்கிறார்கள். எதை ? ஃபேஸ்புக், ஃபைர்ஃபாக்ஸ் முதலியவற்றை முறையே முகநூல், நெருப்பு நரி என மொழிமாற்றம் செய்து சிலர் பயன்படுத்துவதை. எனக்குக் கூட இதில் பெரிய ஆதரவு இல்லை. காரணம் பெயர்ச்சொல்லை நாம் மொழிமாற்றம் செய்து பயன்படுத்தினாலும் அந்நிறுவனம் சொல்லும் பெயரே அறுதியானது. அதை நம் தமிழார்வத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டாலும் அப்பெயரை பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனத்தைச் சுட்டாது. நிற்க! பின்பேன் நான் அதற்கு கொடி பிடிக்க வேண்டுமென்றால் வேறு எப்படித்தான் தமிழார்வத்தை வளர்ப்பதாம் !! நம்மைப் போன்ற சாமானியர்கள்தான் இதைக் கடைப்பிடித்துப் பரப்ப வேண்டும். வேறு யார் செய்வது ?

இதே போல் நக்கல்களையும் நையாண்டிகளையும் தாண்டித்தானே இணையத்தில் தமிழைப் புகுத்த முடிந்தது. இப்போது படிக்காதவர்கள் கூட ABCD தெரியாதவர்கள் கூட வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கின்றனர். ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதை வரவேற்கலாம். ஆனால் வேண்டுமென்றே ஆங்கிலத்தை இடையிடையே புகுத்துவதுதான் சகிக்க முடியவில்லை. என்னுடன் ஒரு ஓட்டுநர் தங்கியிருக்கிறார். அவருக்கு அலைப்பேசியிலுள்ள ஆங்கிலத்தில் பதிவு செய்திருப்பதால் பெயர்களையே வாசிக்க சிரமப்படுவார். அவர் பேசும்போது அடிக்கடி சொல்வது I "means"  என்று சொல்லிவிட்டு நான் என்ன சொல்றன்னா? என்பார். பிறகு நான் சொல்லித் திருத்தி விட்டேன். இது எதற்கு ஆங்கில மோகமா இல்லை வேறு எதாவதா ? இன்னும் பல வாகன ஓட்டுநர்கள் வண்டி நிற்க வேண்டிய இடம் வந்தால் கத்துவார்கள் ஓஓஓஓல்ல்டீங்க் !! என்று. "Hold on" என்பதைத்தான் Hold in ஆக்கி ஓல்டீங் என மாற்றி விட்டார்கள். உலக மகா எரிச்சலைக் கிளப்பும் இன்னொரு வசனம் நீங்களும் கேட்டிருக்கக் கூடும். பட்டானா வந்து (Butஆனா வந்து என்று கொள்க),  "நடு சென்டரு". இவர்களைக் கிண்டல் செய்வதற்காக நான் இவைகளைச் சொல்ல வில்லை. இப்படிப் பாமரர்களையும் ஆங்கில மோகம் ஆட்டிப் படைக்கிறதே என்பதுதான் என் கவலை. அதற்குத் தமிழிலேயே பேசிட்டுப் போவதற்கென்ன. இல்லை ஆங்கிலத்திலேயே But அல்லது center என்று சொல்ல வேண்டியதுதானே ? ஆங்கிலச் சொல்லின் பின்னால் ஊ போட வேண்டாமே!

ஒரு முறை நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. என்னுடைய மேலாளர் உரை நிகழ்த்தினார். அப்போது சில கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இடையில் தமிழில் கூட உரையாடினோம்.  அப்போது அவர் "Ethics & Values" குறித்துப் பேசினார். அப்போது "ethics" என்றால் என்ன என்று கேட்டார். எல்லோருக்கும் தெரிந்ததுதானே விதிகள் அல்லது விதிமுறைகள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் Values என்றால் என்ன ? மதிப்பு என்பது சரியாகுமா ? ஒரு சில இடங்களில் மதிப்பு என்ற சொல் சரியானது. ஆனால் இவ்விடத்தில் விழுமியம் என்பதே சரியானது. இதை நான் ஒரு நூலில் கண்டது நினைவிருந்தது. அதைச் சொன்னேன். அதிலும் விழுமியத்தில் வருகின்ற "ழு" என்பதை அழுத்திச் சொன்னேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஒரு பெண் "எங்களுக்குத் தெரியலங்கறதுக்காக சும்மா என்ன வேணாலும் சொல்லாதிங்க" என்று கிண்டலடித்தார். இல்லை அவர் தமிழைக் கிண்டலடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. என்னை ஒரு நட்புரிமையில்தான் அப்படிச் சொன்னார். எனது கவலை என்னவென்றால் இப்படியே ஒவ்வொரு சொல்லாக ஆங்கிலத்திற்கு மாறினால் அல்லது தமிழ்ச்சொல்லை அறியாமல் சென்றால் பின்பு என்னவாகும்.

எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. இருந்தாலும் அலைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பும்போதோ அல்லது ஆர்குட், ஃபேஸ்புக், மின்னஞ்சல் அரட்டையிலோ நான் ஆங்கிலத்தில்தான் செய்வேன். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக என்பது முதல் காரணம். ஆங்கில எழுத்தில் தமிழில் எழுதுவது எனக்குப் பிடிக்காதது இரண்டாவது காரணம். ஆங்கில எழுத்தில் தமிழில் எழுதுவது என்பதைக் காட்டிலும் ஆங்கிலத்திலேயே எழுதுவது சுலபம். நிறையப்பேர் என்னை விட ஆங்கிலம் சிறப்பாக எழுதவும் பேசவும் இயன்றவர்கள் கூட தமிழை ஆங்கிலத்தில்தான் எழுதி கருத்தினை, பின்னூட்டமிடுகிறார்கள். சிலர் நிலைத்தகவல் கூட ஆங்கில எழுத்தில் தமிழை இடுகிறார்கள். ஏன் தமிழ்தான் சுலபமாக வருகிறது. தமிழில் தட்டச்சு செய்வது ஆங்கிலம் போல எளிதாக இருந்தால் நிறையப்பேர் தமிழில்தான் செய்வார்கள்.

இப்படி இணையத்தில் தேவையில்லாதவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்துவதாக கொக்காணி காட்டுகிறவர்கள், வேறு மாற்றுவழியிருந்தால் தெரிவிக்கவும். தங்கள் பொன்னான யோசனையைச் செவிக் கொண்டு தமிழை வளர்ப்பவர்கள் தொண்டு செய்வார்கள். அம்மா, ஆத்தா, விலைமகள் வகையிலான வசைச் சொற்களையெல்லாம் தூயதமிழில் பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் ப்ளீஸ், ப்லாக், போஸ்ட், கமென்ட்டு, ஷேர், ஸ்டேசன், டவுட்டு, ஃபேக்ட்டு, சார் என்றெல்லாம் திரைப்படங்களின் குப்பை வசனங்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து ஆங்கிலத்தில் எழுதுவதேன். இப்படிக் கண்ட மேனிக்கு ஆங்கிலத்தைக் கலந்து எழுதிவிட்டு தம்மை பெருமைப்படுத்திக் கொள்கிறவர்கள் இருக்கும்போது, தமிழார்வலர்களில் சிலர் தமது அதிகப்படியான ஆர்வக் கோளாறினால் முகநூல், நெருப்பு நரி என்றெல்லாம் மொழிபெயர்த்தால் உமக்கு என்ன ஓய் ? மகிழுந்து, எழுதுகோல் என்றெல்லாம் உங்களை முற்றிலும் தூய தமிழில் எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்த வில்லை. உங்களுக்கு தெரிந்த தமிழ்ச்சொல்லை இயன்றளவில் பயன்படுத்துவதில் என்ன குறை கண்டீர் ஐயன்மீர் ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 கருத்துகள்:

  1. பெயரில்லா22/7/12 8:41 AM

    அப்பாடியோவ் ! நான் நினைத்தைதை எல்லாம் மந்திரம் மூலம் தெரிந்து நீங்கள் எழுதியது போல இருந்தது ...

    முதலில் பெயர்ச்சொல்களை தமிழாக்கம் செய்யும் கோமாளித்தனம். பெயர்ச்சொல் பெயர்சொல் தான் என்பதை உணரவேண்டும் நம்மவர்கள்.

    அடுத்து தமிழில் அதிகளவு ஆங்கிலம் கலப்பது. என்னுடைய ஆங்கிலத் தோழன் ஒருவன் தமிழ் படங்களைப் பார்த்துவிட்டு ஏன் தமிழில் சொற் பஞ்சமா என்றுக் கேட்டான், ஏன் என்று திரும்பிக் கேட்டேன், இல்லை வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் வருகின்றதே, சப் டைட்டில் இல்லாமல்யே புரிந்துக் கொண்டேன் என்றான் . நான் என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தேன்.

    சொற்பஞ்சம் இல்லாத இடத்தும் ஆங்கிலம் கலந்து பேசுவது .. catch புடி என்பார்கள். இரண்டுமே ஒன்று தான் என்பதை அறியாமல். தமிழை வளர்க்காமல் இருந்தாலும் பரவாயில்லை கொல்லாமல் விட்டாலே போதும்டா சாமி. இப்படி ஆங்கிலத்தை தமிழில் கலந்து பேசுவதால், சில வேளைகளில் சரியான ஆங்கில சொல்லுக்கு பிழையான அர்த்தம் மனதில் பதிந்து இருக்கும், குறிப்பாக அசால்டா என்பது assault ஆகும். இதனால் பல தமிழர்களுக்கு ஆங்கிலம் பேசும் போது பிழைகள் அதிகமாகின்றது. mother tongue influence என்பதையும் தாண்டி குழப்பவாதமாக மாறிவிடுகின்றது.

    chat room-களில், sms போன்றவைகளில் தமிழை ரோமன் எழுத்துகளில் தட்டச்சுவதை விட ஆங்கிலத்தையே பயன்படுத்துவது மிக நல்லது .

    சினிமாவும், தொலைக் காட்சியும் தமிழை கொல்லாமல் கொல்கின்றன .. இதனைப் பார்த்து ஆங்கிலேயே கடுப்பாகியும், எள்ளி நகையாடியும் வருகின்றான் ..

    ஐயகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி இக்பால் !! நாம் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் போல :) அட உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததும்தான் இந்த assault, catch புடி என்பவைகள் நினைவுக்கு வந்தது. ஆம் அது போல பெயர்ச்சொல்லை தமிழ்ப்படுத்தத் தேவையில்லைதான். அது காலப்போக்கில் சரியாகிவிடும் என நினைக்கிறேன். ஊடகங்கள், திரைப்படங்களில் தொடர்ந்து தேவையில்லாமல் ஆங்கிலத்தைத் திணிக்கிறார்கள். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றிகள்

      நீக்கு
  2. பெயரில்லா22/7/12 8:42 AM

    value என்பதற்கு நானும் விழுமியம் என்று தான் கூறிவந்தேன். அப்பாடியோவ். சரியாக்த் தான் சொல்லி வந்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மொழிபெயர்ப்பு நூலில் பார்த்த நினைவு. ஆனால் இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை

      நீக்கு
  3. வணக்கம்
    அருமையை சொன்னீர்கள்,நம் குறையை...
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்