டெசோ மாநாட்டுக்கு முன்னர் தமிழ் ஈழத்துக்கு இந்தியா விதித்த தடை !!


இது கருணாநிதிக்கு சோதனைக்காலம். பேசாமல் இந்த மாநாட்டை அறிவிக்காமலே இருந்திருக்கலாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்றே இதையும் நடத்தி சரிந்திருக்கும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காக தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு (Tamil Eelam Supporters Organisation) மாநாட்டை அறிவித்தார். ஆனால் கெடுவாய்ப்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீட்டித்த அமைச்சகம், அதோடு நில்லாமல் தமிழீழம் என்ற கோரிக்கையோ கருத்தோ கூட இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்திருக்கிறது. 

இதற்குப் பின்னர் பேட்டியளித்த கருணாநிதி தமிழீழக் கோரிக்கை வைக்கப்படாது என்று கூறிவிட்டார். மற்ற கேள்விகளும் மடக்கி மடக்கி கேட்கப்பட, எல்லாவற்றுக்கும் சமாளிப்பாகப் பதில் அளித்திருக்கிறார். ஒரு வேளை கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருந்தால் மத்திய அரசுக்கு எதிராக கருணாநிதி மாநாடு என்று தினமலர் தலைப்புச் செய்தியில் தீட்டு தீட்டென்று தீட்டித் தள்ளியிருக்கும்.

இதற்குப் பின்னர் வழக்கம் போலவே கருணாநிதி காய்ச்சி எடுக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து கருணாநிதி மட்டும் குறி வைத்து குதறப்படுகிறார். இப்படிக் கருணாநிதியைக் கேவலபடுத்துகிறவர்கள் உண்மையில் ஈழத்திற்கு ஆதரவான நிலையின் காரணமாக செய்கிறார்கள் என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்த மாநாடே  பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைய, இந்திய அரசுக்குகோரிக்கை வைப்பதற்காகத்தான் நடத்தப் போவதாகக் கருணாநிதி கூறியிருந்தார். 

அப்படியிருக்க இந்திய அரசே தமிழீழம் என்ற கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அறிவித்து அதைத் தடை செய்தும் விட்டது. இதற்காக ஈழ ஆதரவாளர்கள் உண்மையில் இந்தியாவின் மீதுதானே கோபப்பட வேண்டும். அதுதானே நியாயம். இதற்கு கருணாநிதியைத் திட்டி என்ன செய்யப்போகிறோம். ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறவர்கள் அனைவருமே தமது தன்னல அடிப்படையிலேயே செய்கிறார்கள்.  இதில் கருணாநிதி மட்டும் விதிவிலக்கா என்ன ? 

இந்தியாவையும், அமெரிக்காவையும் ஈழத்தில் தலையிடச் சொல்லும் இவர்கள் கருணாநிதியை மட்டும் எதிர்க்கிற காரணம்தான் என்ன ? கோட்சே தமிழ்ஈழத்தை ஆதரித்தால் ஆதரிப்போம், காந்தி எதிர்த்தால் அவரை எதிர்ப்போம் என்ற சீமான் கருணாநிதியை ஏன் ஆதரிக்க மறுக்கிறார். ஜெயலலிதாவை பெரிதாக விமர்சிக்கும் திராணியற்ற இவர்கள் கருணாநிதியைப் போட்டுத்தாக்கிக் கொண்டே இருப்பதேன். தமிழர்க்காக கட்சி தொடங்கிய சீமானும் இந்திய இறையாண்மையைக் காப்பதாகத்தானே அறிக்கையில் சொன்னார். அப்படியிருக்க கருணாநிதி மட்டும் எப்படி இந்தியாவை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.  தற்போது சிறைநிரப்பும் போராட்டம் நடத்தி கெத்துக் காட்டியுள்ள திமுகவினர் பெரிய எழுச்சியை உருவாக்கி விடுவார்கள் என்று அஞ்சி, திமுக மாநாட்டின் எழுச்சிக்கு பயந்துதான் அரசு தமிழீழத்தைத் தடை செய்தது என்று சொல்லலாமல்லவா ?

தமிழீழத் தடையின் காரணமாக இனிமேல் ஈழத்தைப் பற்றிப் பேசினாலே குற்றம் என்று கூறி சிறையில் அடைப்பார்கள். தமிழீழம், தனித் தமிழ்நாடு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதற்காக இந்தியாவை எதிர்க்குமளவிற்கு தமிழர்களுக்கு தெம்பு இருக்கிறதா ?; ஈழத்தமிழர்களை நிம்மதியாக வாழவிட தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் சும்மா இருந்தாலே போதும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கத்தான் இந்தியாவும் இலங்கையும் போரை நடத்தினார்களா ? இவர்கள் திரும்பத் திரும்ப இந்தியாவை வலியுறுத்துவதன் நோக்கம்தான் என்ன ? போரை நடத்த ஆயுதமும் பணமும், உளவுத் தகவலும் வழங்கிய உலக நாடுகள் போர் முடிந்த பின்பு போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் பொருளாதார ஆதிக்க நோக்குடன்தான் இலங்கையைத் தம்பக்கம் திருப்ப நெருக்கடி கொடுக்கிறார்களே அன்றி தமிழர்கள் நலனோ போர்க்குற்றமோ அவர்களின் இலக்கு இல்லை. 

போர் நடந்த போது இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது என்று கூறி போரை நிறுத்தாத இந்தியா தற்போது தமிழீழம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று சொல்கிறது. அதனால்தான் அதைத் தடை செய்திருக்கிறது என்று கூறுகிறது. இப்போதுதான் முறைப்படி தடையை அறிவித்திருந்தாலும், இதற்கு முன்பிருந்தே தமிழீழம் என்றதை இந்தியாவோ அதன் அரசியல் கட்சிகளோ ஆதரித்ததோ இல்லை. முன்பு புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததே இலங்கை அரசைப் பணியவைக்கத்தான். விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் முரண்பட்டபோது 25 வருடங்களுக்கு முன்பே இந்திய ஈழப்போர் மூண்டது. பின்பு 3 வருடங்களுக்கு முன்பு அதற்காகத்தான் கொடிய போரை ஏவி விடுதலைப் புலிகளை அழித்தது. இன்று வரை தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் இந்திய எதிர்ப்பு பேசுகிறார்கள், காந்தி சிலையை உடைக்கிறார்கள். இந்தியாவிடமிருந்து எதிர்வினையே இல்லை. 

யாரோ சொன்னார்கள் தமிழீழம் அமைவதை இலங்கை அனுமதித்தாலும் இந்தியா அனுமதிக்காது என்று. அதுதான் உண்மை. இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இன விடுதலையை இந்தியா அனுமதிக்கவே செய்யாது. இந்தியாவே பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருக்கிறது. இதில் காஷ்மீர், சில வடகிழக்கு மாநிலங்களில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவராகத்தான் இருக்கின்றனர். இவர்களுக்கென்று மற்ற மாநிலங்களுக்கு இருப்பதை காட்டிலும் சலுகை சட்டங்கள் உள்ளன. இம்மாநிலங்களில் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்பு நடைபெறுகிறது. ஒரு வேளை இந்திய ஆதரவுடன் இலங்கையில் தனிநாடு அமைகிற பட்சத்தில் இம்மாநிலங்கள் பற்றி எரியும். இது இந்தியா தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

சீனாவிற்கு எதிரி என்ற நிலையிலிருந்தே தலாய் லாமாவை இந்தியா ஆதரித்து வருகிறது. அதற்கு பதிலடியாக சீனா காஷ்மீருக்கு தனி விசா அளிக்கிறது. அதே எதிரி என்ற நிலையில்தான் வங்க தேசத்தையும் உருவாக்கியது. ஆனால் இலங்கையோ ஒரு சீனாவையும் பாகிஸ்தானையும் ஒத்ததல்ல. அது கிட்டத்தட்ட இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ளது போலத்தான். இலங்கை மசியாமல் போக்குக் காட்டியதால்தான் விடுதலைப்புலிகளை ஆதரித்தது, புலிகள் தமக்கு ஒத்துவராத போது அவர்கள் மீதும் போர் தொடுத்தது. 

உலகமயக் காலமான இன்று நாடுகளின் எல்லைகளே கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி வருகின்றன. இந்நிலையில் தனி ஈழமே தமிழ்நாடோ எந்தளவு சாத்தியமென்று தெரிந்தும் இன்னும் அதையே பேசி வருகின்றனர். தெற்கு சூடான் அது வேறுகதை. சொல்லப்போனால் விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே தமிழ் ஈழம் சிற்சில குறைகளுடன் அமைந்தேதான் விட்டது. அதற்கு அங்கீகாரம் மட்டும்தான் இல்லாமலிருந்தது. தனிநாட்டைப் போலவே பல நிறுவனங்களையும் நடத்திவந்தது புலிகள் இயக்கம். போரினால் அனைத்தும் அழிக்கப்பட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டதை நான் சதாம் உசேனும், முவம்மர் கடாஃபியும் அழிக்கப்பட்டதைப் போலவே பார்க்கிறேன். என்ன அவர்கள் இறையாண்மை உடைய ஒரு நாட்டின் அதிபர்களாக இருந்தவர்கள். பிரபாகரனோ அங்கீகாரமில்லாத நாட்டின் அதிபர் என்பதே எனது கணிப்பு. 

இராஜீவோ, இந்திரா காந்தியோ, ம.கோ. இராமச்சந்திரனோ உயிருடனிருந்திர்ந்தாலும் தமிழீழம் அமைந்திருக்காது. ஏனென்றால் அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இது தெரிந்தும் சிலர் நம்பாதது மாதிரியே நடிக்கிறார்களா அல்லது அவர்களுக்கு புரிவதே இல்லையா என்பது அவர்களுக்கு வெளிச்சம். இப்படி கருணாநிதி எதிர்ப்பாளர்கள் யாரும் தமிழ் ஈழத்தைத் தடை செய்த இந்தியாவின் மீது கோபப்படாமல் கருணாநிதியை மட்டும் இந்திய இறையாண்மையை மீறச் சொல்கிறார்கள்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்