சிறியதாய் சில பெருந்தவறுகள்

சிறிய விடயங்களில் ஏற்படும் தவறுகளை நாம் பெரியதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் அந்தச் சிறிய தவறுதான் எத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு முறை என் மனைவி ஒரு ஞெகிழிப் பையை மிக இயல்பாக சாக்கடையினுள் எறிந்தார். அங்கே ஏன் வீசறே ? என்றேன். வேற என்ன செய்யறது ? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு முறை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு வயதான பெண் மாடி வீட்டிலிருந்து வெளியே வந்து, குப்பைகளை ஒரு ஞெகிழிப் பையில் இட்டு நிரப்பி முடிச்சுப் போட்டு அதை அப்படியே சாக்கடைக்குள் வீசிவிட்டுச் சென்றார். சாக்கடை நம் வீட்டிற்குள் வரவில்லையே என்ற எண்ணம்தான். கொஞ்சம் நடந்து போய் குப்பையில் குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும் என்ற அடிப்படை அறமே (அறிவெல்லாம் நிறைய இருக்கிறது) இல்லாதவர்கள் முழு மாடாக வளர்ந்து நிற்கிறார்களே நாம் என்னதான் செய்வது. இது ஏன் என்று முதலிலிருந்து விளக்க வேண்டுமா ? சாக்கடை அடைத்துக் கொண்டால் ஒரு மனிதன்தான் இறங்கி அடைப்பை நீக்க வேண்டும். அதற்கு உன்னைப் போன்றவர்கள் குப்பை வீசுவதுதான் காரணம் என்று விளக்கிச் சொன்னால்தான் தெரியுமா ?. இதற்காக ஒவ்வொருவரிடமும் சண்டைதான் போட்டுக் கொண்டிருக்க முடியுமா ?. விதிமுறைகளை மதிப்பவன் அடிப்படை மனிதநேயத்துடன் நடப்பவர்களையெல்லாம் பகடி செய்து விட்டோ அல்லது வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டோ அல்லது மகாத்மாவாக்கிவிட்டோ இது போல் பலர் அலட்சியமாக செய்யும் தவறுகள் எத்தனை விளைவுகளுக்குக் காரணமாகின்றன. இதற்கெல்லாம் யார் தண்டனை கொடுப்பது ? யார் அவர்களுக்கு உணர்த்துவது ? விடிவே இல்லை. சரி தமிழுக்கு வருகிறேன்.

படம் - நன்றி கூகிள்
இது போன்றே இன்னொரு வழக்கமும் இருக்கிறது. சிறு அலட்சியமும், அதிகப்பிரசிங்கித்தனமும் எப்படி பேரழிவை உண்டாக்குமோ (கடலூர், சென்னை பேரழிவு போல) அது போல விளங்கும் தமிங்கிலப் புற்று நோய்தான். தமிழ் நாட்டில்தான் தமிங்கிலம் என்ற வகை உயிரினம் வாழ்ந்து வருகின்றது. இந்த உயிரினம் பலருக்குள்ளும் இருக்கிறது. நான் வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும், அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளவன் அல்ல. ஆனாலும் எல்லாவிடங்களிலும் இயன்ற வரையிலும் தமிழே மணக்க வேண்டும் என்ற பேராவல் உடையவன். அதே நேரம் தற்காலத்தின் நடைமுறை சாத்தியங்களையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எந்த இடத்தில் ஆங்கிலம் தவிர்க்க முடியாது என்றும் எனக்குத் தெரிகிறது. ஆனால் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுப் பேசப்படும் ஆங்கிலம்தான் என்னை ஆத்திரத்தில் ஆழ்த்துகிறது. இது தனிமனிதர்கள் செய்யும் தவறுகள் தொடங்கி பெரிய தொலைக்காட்சி அலைவரிசைகள், நாளிதழ்கள், வார இதழ்கள் வரை செய்யும் தமிழ்க்கொலைகள், தமிழைக் கொன்று வளரும் தமிங்கிலம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழைப் பயன்படுத்த முடியாத மிகவும் கடினமான தருணத்தில்தானே, இடத்தில்தானே ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் இல்லையா ? இங்கே என்ன நடக்கிறது. ஆங்கிலத்தால் சொல்ல முடியாத இடத்தில் மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக Dilemma, Cliche, De javu போன்ற சொற்களுக்கு தமிழில் நேரடியான சொற்கள் இல்லை அல்லது இன்னும் உருவாக்கப்படவில்லை அல்லது பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை என்றும் சொல்லலாம். 

இது போன்ற சொற்கள் தவிர்த்து, மிக எளிமையான சொற்களுக்குக் கூட வேண்டுமென்றே ஆங்கிலத்தைப் பிதுக்கி மேதாவித்தனத்தைக் காட்டுவதுதான் சகிக்கவே முடியாத்தாக இருக்கிறது. மம்மி(அம்மா), டாடி(அப்பா), ஆன்ட்டி(அக்கா/அத்தை/சித்தி), லைஃப்(வாழ்க்கை), வைஃப்(இல்லை), ஹேப்பி(மகிழ்ச்சி), குட்(நல்லது), ஓகே(சரி) பாய்ஸ்(பசங்க), ட்ரோலிங்(கிண்டல்), மேரேஜ்(திருமணம்), ஃபங்க்சன், பஸ், சாங்ஸ் இப்படித் தொடர்கிறது தமிழ்க் கொலை. ஏன் இவற்றை தமிழில் சொன்னால் தேய்ந்தா விடும் ? இல்லை தன்மானம் குறையுமளவுக்கு பழங்காலச் சொற்களுமல்ல. ஆனாலும் இவை ஆங்கிலத்திலேயே சொல்லப்படுகின்றன. நான் தற்போது தொலைக்காட்சிகள் பார்ப்பதையே அறவே நிறுத்தியாகி விட்டது. அவ்வப்போது தொலைக்காட்சியைக் கடந்து செல்லும்போதும், கட்டாயமாக பார்க்க வேண்டிய இடங்களில் கவனித்ததில் நினைவில் இருப்பதைப் பற்றியும்தான் நான் பேசுகிறேன். இவையெல்லாம் ஒரே நாளில் நிகழவில்லை. தாங்கள் வருடக்கணக்காக தமிழில் சொல்லி வந்த சொற்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தில் மாற்றிப் பேசி சுய இன்பம் காண்கிறது தமிங்கில இனம்.

இதற்கெல்லாம் என்ன காரணம், பண்பாட்டு மாற்றங்கள் மட்டும்தானா ? தமிழை வைத்துக் கல்லாக் கட்டி தமிழையே அழித்து வருகின்றவை, தொலைக்காட்சி அலைவரிசைகள்தான். பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே திரைப்படக் கழிவுகளும், நடிகர்களைப் பற்றியதுமாகத்தான் இருக்கின்றன. இதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பங்கெடுப்பவர்கள் கான்வென்டில் படித்த தவளைகள். வெறும் இணைப்புச் சொல்லாக மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறவர்கள். நடிகர்களைப் புகழ்வது மட்டுமே இவர்களுக்கு வேலை. நடிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒரே சார் மயம்தான். அந்த சார் இந்த சார். ஃப்ன்டாஸ்டிக்கா இருந்துச்சு, சூப்பர்பா பண்ணார். டிரைக்டர் சார் சொன்னார். ம்யூசிக் போட்டார் என்று ஆங்கிலச் சொற்களின் பின்னான் "ஆ" சேர்த்து பண்ணுச்சு, இருந்துச்சு, நொட்டுச்சு, புடுங்குச்சு என்றுதான் எல்லா இடத்திலும் பேசுகிறார்கள். இவர்களை தனது முன்மாதிரிகளாகவும், கனவு நாயகர்களாகவும், பொழுது போக்குக்காகவும் கருதுகிறவர்கள் இதையே பெரிய "புதுமைத்துவம்" என்று கருதி முடிந்த வரை ஆங்கிலத்தில் அசிங்கப்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று சொல்லிவிட்டு, திரைப்படம் என்று சொல்லாமல் சினிமா என்றே பயன்படுத்துகிறார்கள் இணைய எழுத்தாளர்கள். அம்மா என்பதை விட அதிகமாக சினிமா என்ற சொல் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ஏனென்றால் சினிமாவுக்கு இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை பாருங்கள். 

இதில் ஆங்கிலத்திலேயே படித்து, ஆங்கிலம் பேசுமிடத்தில் வேலை பார்த்து அதனால் அப்படிப் பேசிப் பழகியவர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் இவர்களைத்தான் தமிழார்வலர்கள் அதிகமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழை இழிவும் செய்து புறக்கணிப்பவர்கள் இது போன்ற மேட்டுக்குடித் தமிழர்கள் இல்லை. அரைவேக்காட்டு நடுத்தரத் தமிழர்களைத்தான் நான் குறை சொல்வேன். சாலைகளெங்கும் போகும்போது இருபக்கமும் இருக்கும் கடைகளின் பெயர்களைக் கவனியுங்கள். பெயர்ப்பலகைகளைக் கவனியுங்கள். உணவகம், அச்சகம், கடை, அடுமனை என்றெல்லாம் 95 விழுக்காடு கடைகளில் எழுதியிருக்க மாட்டார்கள். எல்லாமே ஏதாவது சாமி பெயரில் இருக்கும். ஆனால் ஹோட்டல், பிரிண்டிங் பிரஸ், ஸ்டோர்ஸ், பேக்கர்ஸ் என்று எழுதியிருப்பார்கள். இந்த அறிவாளிகளுக்கு என்னதான் தேவை, ஆங்கிலத்தில் எழுதினால் போதாதா ? ஆங்கிலத்தை ஏன் தமிழில் எழுத வேண்டும் ? ஏனென்றால் Hotel, Press, Bakery என்று ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவாளிகள் ஆங்கிலத்தில் எழுதினால் "உ" "ஊ" தான்.. உங்கள் கடைக்கு வந்து வாங்கப்போகிறவர்கள் தமிழ்நாட்டுக்காரர்தான். நீங்கள் ஒன்றும் ஜப்பானிலோ சைனாவிலோ அமெரிக்காவிலோ கடை வைக்க வில்லை. இத்துப் போன தமிழன்தான் வரப் போகின்றான். பிறகெதற்கு ஆங்கிலத்தின் பெயரை தமிழ் எழுத்துக்களில் எழுதி தமிழை அழிக்கிறீர்கள். ஒரு மொழியைப் பேச வேண்டும் கற்க வேண்டுமென்றால் அதை முறைப்படி வேறு வழிகளில்தான் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இடையிடையே ஒரு சொல்லைப் புகுத்துவதும் தேவையில்லாத இடத்திலும் ஆங்கிலத்தைப் புகுத்துவதும் என்ன வகை தமிழ்(தாய்மொழி) வெறுப்பு மனநோய் ? குமரன் சில்க்ஸ், ஸ்ரீதிவ்யா பேக்கரி போன்ற பெயர்கள் சில எடுத்துக்காட்டுகள்.

நான் ஒன்றைக் கணித்து வைத்திருக்கிறேன் அது சரியா என்று தெரியவில்லை. இது போன்ற கடைகள், சிறிதும் பெரிதுமான கடைகள், மளிகைக் கடைகள், ஆலைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இது போன்றவற்றை நடத்துகிறவர்களுக்கு வயது எத்தனை இருக்கும் ? நிச்சயமாக 20 ஆக இருக்காது. 30, 40, 50, 60 இப்படி இருக்கும். இவர்களெல்லாம் ஆங்கில வாசனையே இல்லாத அரசுப் பள்ளிகள், தமிழ்வழிக் கல்வி கற்ற நபர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்குத் தெரியாத ஆங்கிலம்தான் பெரிது என்றெண்ணிக் கொட்டாவி விட்டவாறே அரைவேக்காடு ஆங்கிலத்தில் பேசியும் பெயர்வைத்தும் தமிழ்ப் புறக்கணிப்புத் துரோகம் செய்வோர்களாக இருக்கின்றனர். மிகச்சிலரே ஊட்டி கான்வென்ட், இன்டர்நேசனல சிலபஸ் வகையான ஆங்கிலக் கல்விகள் கற்றவர்களாக இருப்பர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவிற்கு வெளியே உலக அளவிலான வணிகம், சேவை, பணிப்பு, நியமம் வகையான நிறுவனங்கள் நடத்துகிறவர்களை விட்டு விடுகிறேன். அவர்களிடம் போய் தமிழில் தொழில் செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. ஆங்கிலம் என்பது ஏறக்குறைய உலக மொழியாக இருக்கிற காரணத்தால் அவர்கள் ஆங்கிலத்தில்தான் பெயர்வைக்க முடியும் தங்களுக்குள்ளேயான தகவல், ஆவண பரிமாற்றங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் செய்து கொள்ள முடியும். ஆனால் தமிழகத்திற்குள்ளேயே தமிழர்களிடம் மட்டுமே, அதுவும் தனது தெருவுக்குள்ளேயே பணி, வணிகம், தொழில் செய்யும் பிராணிகளுக்கு எதற்கப்பா ஆங்கிலப் பித்து. அதையும் தப்புத் தப்பாக எழுதி மானத்தை வாங்குகிறார்கள். இவர்களிடம் ஒவ்வொருவரிடமும் போய் சண்டை போட்டா தமிழைக் காக்க முடியும். சொல்லுங்கள். தமிழை வளர்ப்பது எவ்வளவு தேவையே அதை விடத் தேவை இருக்கும் தமிழை அழியாமல் காப்பதும். யாரிடமிருந்து தமிழர்களிடமிருந்துதான் என்பது என்ன ஒரு தர்மசங்கடம் பாருங்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்