வட இந்தியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வட இந்தியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஹிந்தித் திணிப்பு - பாஜகவின் நாடித்துடிப்பு - பின்பு நடிப்பு

மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமல்லவா ? தமிழ்நாட்டில் நாம் சொல்வது தமிழர்கள் உட்பட ஹிந்தி பேசாத மக்களின் மீதான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பேயன்றி, தமிழர்கள் இந்தி மொழி கற்பதை எதிர்ப்பதன்று.


நாட்டின் இருக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக ஒரு இரட்சகர் வருவார் என்றெண்ணிக் காத்திருந்த இந்தியர்கள், நரேந்திர மோடி என்று பெருமாளாக்கப்பட்ட ஈறை நம்பி வாக்களித்து எக்காலத்திலுமில்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தனர்.

அன்னார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் உத்தமபுத்திரர் மஹிந்தரையும் மற்ற நாட்டு அதிபருடன் அழைத்து வந்து ஈழத்தை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கும் பத்தாம்பசலிகளுக்கும், அறிவிலிகளுக்கும் அதிர்ச்சியளித்தார். பாஜகவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு அது பெரிய ஏமாற்றமோ அதிர்ச்சியோ அளிக்காது. ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களுக்கும், வேறு உள்நோக்கங்களுடன் ஆதரித்தவர்களுக்கும் (ஜாதிவெறி/ இந்துத்துவா + ஈழ ஆதரவு என கலந்து கலக்கும் நபர்கள்) அது கசப்பாக இருந்தது. அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற அளவுக்கெல்லாம் நம்பும் ஆட்களும் இருக்கிறார்கள்.

அடுத்து ரயில்வே துறையை தனியார் மயமாக்கம், ரயில் கட்டண உயர்வு என்று அதிரடியாக முதல் மாதங்களிலேயே இந்தியாவையே குஜராத் பாணி "வளர்ச்சியை" நோக்கி நகர்த்தி வருகிறது பாஜக-மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக, RSS - கிளை இயக்கங்கள் படுகொலைகள்(புனே), கலவரங்கள் (சென்னை- பூந்தமல்லி இந்து முன்னணித் தலைவரின் இறுதி ஊர்வலம்) என தங்கள் பாணியில் செயல்பட்டு வருகின்றன.

அடுத்ததாக இந்தியாவிலிருக்கும் அனைத்து நடுவண் அரசு ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை ஆங்கிலத்தில்தான் வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. பின்பு ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே என்று அடக்கி வாசிக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சென்று சிறுவர்களிடம் பேட்டி கண்டு தமிழர்கள் "We want HIndi" என்று வேண்டுவதாகக் கருத்தை உருவாக்கியது. (அது உண்மைதான் எல்லோருக்கும் தேசிய மொழியைக் கற்கவில்லை, இன்னொரு மொழியைக் கற்கவில்லை என்ற வருத்தம்தான்) அதாவது அரசு சட்டமோ அறிவிப்போ கொண்டு வரும் முன்பு இது கருத்தைத் திணித்து அதைப் பொதுக் கருத்து போலவும், தேவை போலவும் ஆக்குவார்கள். ஊடகங்கள் கருத்தைத் திணிப்பார்கள், ஊழல் மன்னர்கள் ஹிந்தியைத் திணிப்பார்கள்.

ஹிந்தியல்லாத மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன் தாளத்தை மாற்றி வாசிக்கத் தொடங்கினர்,

கிரண் ரிஜிஜூ, இந்தியை அனைத்துத் துறைகளிலும் முன்னிறுத்துவதும் மேம்படுத்துவதுமே தங்களது அரசின் முதன்மையான பணி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

.“இந்தி என்பது தேசிய மொழி, இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மொழி. எனவே இந்திக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பது என்பது ஆங்கிலத்தை அவதூறு செய்வதாகாது. எனவே இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்து அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையே. மேலும், இந்தி மொழி என்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, அசாமி, உருது மற்றும் இதர பல்வேறு பிராந்திய மொழிகளின் கூட்டுக்கலவையே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” இந்தி மொழியை அனைத்து இடத்திலும் பரப்ப காந்தி, நேரு, தீனதயாளன் உபாத்யாயா, ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முயற்சி செய்ததாகவும், தங்களது அரசுக்குமுந்தைய அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியை மேம்படுத்த வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்று முக்தார் அப்பாஸ் நக்பி தில்லியில் வெள்ளியன்று கூறினார்.

பாஜகவினர். வெங்கையா நாயுடு குட்டிகரணமடித்து இது மார்ச் 10 நாளே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அறிவித்ததாகும் அதை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்றார்.

இவர்கள் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருக்கு தொலைக்காட்சி விவாதங்களிலோ பாஜக இன்ன பிற ஹிந்தித் திணிப்பு வெறியர்கள், ஹிந்தி வேண்டுமென்ற அறிவுத் தாகமுடையவர்கள் எல்லாம் 1940 களின் வாதங்களயும், இந்துத்துவ-ஹிந்தி வெறியுடனும் கத்திக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போலவே, தொலைக்காட்சியைக் கண்டு தனது அறிவை வளர்க்கும் பாமரத் தமிழர்கள், தமிழை வளர்க்கறானுகளாம் என்று ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களையும், கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் ஹிந்தி மொழியில் உரையாற்றிய மோடி மொழி வாரி மாநிலங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னார். பாரதிய ஜனதாவின் கொள்கையும் அதுதான். இந்நிலையில் இவர்கள் இப்படி கிளப்பியிருப்பது வெறும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்று சமாதானாம் சொல்கிறார்கள். ஹிந்தியை ஆங்கிலம் இரண்டாம் மொழியாக்கி விட்டது, ஆகவே அந்நிய ஆங்கிலத்திலிருந்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காக்க ஹிந்தியை வளர்க்கிறார்களாம். ஹிந்தியை வளர்ப்பதென்றால் ஹிந்தி பேசுகிறவர்களிடமல்லவா செய்ய வேண்டும். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடிப் பேர்களிடமுமல்லவா இவர்கள் திணிக்கிறார்கள். வளர்ப்பு வேறு திணிப்பு வேறு. இவர்கள் promotion என்கிறார்கள். ஆனால் அது  imposition மட்டுமே.

சரி பாகிஸ்தானிகள் பேசும் உருது கூட இவர்கள் பேசும் ஹிந்தி மாதிரியல்லவா இருக்கிறது. எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா ? இல்லை இந்திய தேசபக்தர்கள் வந்தேறி முகலாயரின் வழி வந்த மொழியினை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

சரி இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அல்லது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஹிந்தி தாகம்/மோகம் என்றோர் மாயையைக் கலைப்பதுதான் எனது நோக்கம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்/ பதில்கள்

ஹிந்தியை ஏன் வெறுக்கிறீர்கள்

ஹிந்தியை வெறுக்க வில்லை. ஹிந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஒருவரிடம் போய் ஏர்டெல் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். அவர் என்னிடம் ஏற்கெனவே ஏர்செல் இருக்கிறது என்கிறார். நீங்கள் வந்து அவர் ஏர்டெல்லை ஏன் வெறுக்கிறார் என்று கேட்கிறீர்கள்


கருணாநிதியைக் கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு இந்தப் புகைப்படத்தினை ஹிந்தி ஆதரவாளர்கள் பகிர்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வேறு மொழியினரிடம் அவர்கள் மொழியில் வாக்குப்பிச்சை எடுப்பது எந்த வகையில் தவறு. இதன் மூலம் மக்களுக்கு ஹிந்திக் கல்வியைத் தடை செய்து விட்டு அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். இது ஒன்று தமிழ் வெறியாக இருக்க வேண்டும் இல்லை இந்தி வெறியாக இருக்க வேண்டும். இங்கே நடந்தது கட்டாய ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமேயன்றி, ஹிந்திக் காரர்களைக் கல்லெறிந்து தாக்க வேண்டும் என்ற இனவெறிக் கலவரமல்ல. இதன் மூலம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் ஹிந்தியை வெறுக்க வில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதியை எதற்குத் திட்ட வேண்டுமோ அதற்கு மட்டும் திட்டுங்கள்

தேசிய மொழியை ஏன் கற்க வேண்டாம் எனக் கூப்பாடு ?

ஹிந்தி தேசிய மொழி இல்லை என்பது மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ஹிந்தி அலுவல் மொழி மட்டுமே, மற்ற பிராந்திய மொழிகள் போலத்தான். அரசில் நிறைந்திருக்கும் ஹிந்தி மாநிலத்தவர்களின் ஆதிக்க வெறி காரணமாகத்தான் மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியா முழுதும் பெரும்பான்மையினர் பேசும் மொழியை ஏன் நாம் கற்கக் கூடாது நமக்கு நன்மை பயக்கும்தானே ?


ஹிந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழியும் கிடையாது. இந்தியா முழுதும் பேசப்படும் மொழியும் கிடையாது. மாறாக ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மொழியினரே பெரும்பான்மையாக உள்ளனர். பேசப்படும் ஹிந்தி பேசுகிறவர்களும் ஒரே மாதிரியான ஹிந்தியைப் பேசுவதில்லை. கொஞ்சம் விரிவாக வாசிக்க இங்கு செல்க. 


வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுவோம்தானே ?


தமிழ் நாட்டில் வந்து வேலை செய்யும், குடிவரும் வெளி/வட மாநிலத்தவர் தமக்குத் தமிழ் தெரியவில்லை, பள்ளியிலேயே தமிழ் கற்கவில்லை என்று கவலைப்படுகின்றனரா ?

நான் இங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது என்கிறார்கள். அதெப்படி ஒரிரு நாட்கள் சுற்றுலா சென்றவர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தியை பாடமாக வழங்குவதை புள்ளி விவரமாகச் சொல்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்கிறவர்களுக்காக ஹிந்தியைக் கற்க வேண்டுமெனச் சொன்னால் தமிழ் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செல்லும் சுற்றுலாத்தளமாக ஊட்டி இருக்கிறது, அடுத்து கேரளா இருக்கிறது, கர்நாடகா இருக்கிறது, கோவா இருக்கிறது. எனவே தமிழர்கள் படுகு, மலையாள, கொங்கணி, துளு மொழிகளையும் பாடமாக வைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

ஒரு மொழியாக அரசே வழங்கும்போது கற்கலாமே ?

பல நூறு மொழிகள் பேசப்படும் நாட்டில், நடுவண் அரசு ஒரு மொழிக்கு மட்டும் முகவராக செயல்படுவது ஏற்க முடியாதது. மக்களின் வரிப்பணத்தை வைத்து மொழியை அடுத்தவனிடம் திணிக்கிறது.  ஹிந்தி பேசுகிறவர்கள் வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்று நடுவணரசு எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வட இந்தியாவில் பரப்புமா ?

ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது நமக்கு இழப்புதானே ? ஆம் இழப்புதான். எப்படி ஹிந்திக் காரர்கள் தமிழ் கற்காமல் இருப்பது நமது இழப்போ அது மாதிரிதான் இதுவும். அதற்கு எவ்வளவு கவலைப்பட வேண்டுமோ அது போலத்தான் இதற்கும் கவலைப்படவேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஹிந்திக்கு ஏன் மெனக்கெட்டு வருத்தப்பட வேண்டும். ஜாவா, பெர்ல், C, C++  என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏன் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலத்தவர் எதிர்க்க வில்லை.

தவறு. பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கின்றன. முத்தாய்ப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி எதிர்க்கிறார். கர்நாடகா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக எதிர்ப்பில் இருக்கிறது. தமிழகத்தின் இரு முதன்மைக்கட்சிகளும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத்தின் வழி வந்தவை என்பதால் தமிழகம் முதன்மையில் இருக்கிறது. மேலும் சமஸ்கிருதத்திற்கு ஈடான பழமையும், வளமும் அதன் கலப்பு அதிகமில்லாத தனித்துவமான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்கிருத/ஹிந்தி கலப்பு அதிகம். ஆயிரம் வருட காலமாக சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாறுடைய தமிழ் மொழியைப் பேசும் நான் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்குச் சென்றால் ஹிந்தி தெரியாதா என்று அவமானப்படுத்துகிறார்கள் வெட்கமாக இருக்கிறது

அது காட்டுமிராண்டிகளின் இழிசெயல். நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதற்காக வெள்ளையாக வேண்டும் அழகாக வேண்டும் அப்படியில்லாதது நம் தவறு என்பீர்களா ? மெட்ராஸி என்கிறார்கள், மலையாளிகள் பாண்டிகள் என்கிறார்களல்லவா அது போன்ற இனவெறிதான் அப்படிப் பேசவைக்கிறது. மேலும் ஹிந்தி பேசிகளின் ஆண்டைத்தனம், வட இந்தியனின் தென்னிந்தியா மீதான் இழிவான பார்வை. அதற்கு நீங்கள் குற்ற உணர்வு அடையத் தேவையில்லை. நீ தமிழகம் வரும் போது ஏன் தமிழ் தெரியவில்லை என்று நான் கேட்டால் என்ன சொல்வாயோ அதுதான் இதற்கும் பதில் என்று சொல்வோம். (தென்னிந்தியாவில் மூன்று மொழிகள் செம்மொழியாகியிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா ? அட செம்மொழிகள் என்று கூட வேண்டாம் நான்கு மொழிகள் கோடிக்கணக்கானவர்களால் பேசப்படுவதாவது தெரியுமா)

தமிழ் பேசாத பல மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாழும்போது அவர்கள் மீதும் தமிழகத்தில்  கட்டாயத் தமிழ் சட்டம் என்பது தமிழ்த் திணிப்பு ஆகாதா ?

தமிழகத்தில் கட்டாயத் தமிழ் என்றால் எல்லோர்க்குமே மொழியுரிமை நினைவுக்கு வந்து விடும் என்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களுமே அவரவர் மொழியைக் கட்டாயப்பாடமாகவும், பிறமொழியினர்க்கும் சேர்த்து வைப்பது நியாயமான செயலே. இதன் மூலம் அம்மாநிலத்தில் இருக்கும் பிறமொழியினர் ஒரு மொழியைக் கற்க முடியும். அங்கேயே வசிப்பவர்கள் அம்மொழியைக் கற்பதில் என்ன தவறு, இது பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான். ஆனால் ஹிந்தியை, ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் மீது திணிப்பது வேறு, அந்தந்த மாநிலங்களில் கட்டாயப் பாடமாக வைப்பது வேறு. இதன் மூலம் மட்டுமே பிராந்திய மொழிகளின் பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்தியான்னா இந்தியாதான் !!

இதை எதற்கு எழுதுகிறேனென்றால் நேற்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. அந்தக் கொடுமையை எதிர்க்க வேண்டும். எந்தக் கேவலமான சிறிய மொன்னைக் காரணம் கிடைத்தாலும் கூட அதை வைத்து கிரிக்கெட்டை விமர்சிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதற்காகத்தான் இதை எழுதுகிறேன். தற்போது முகநூலில் ஒரு புகைப்படமானது பகிரப்பட்டு வருகிறது. 


இதுதான் அது. ஒரு வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா என்பது அவரது பெயர். அவர் இந்தியாவிற்காக உலக அளவிலான வில்வித்தைப்  போட்டிகளில் சில பட்டங்களையும் வென்றவர். 

நிஷா ராணி தத்தா
அவர் வென்ற பட்டங்கள்

*  2006 - இல் ஓவரால் சிக்கிம் சாம்பியன்
*  தெற்காசிய சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம்
* 2006 பாங்காக்கில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
*  2007 - இல் தைவானில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதும் பெற்றார்

இவரையெல்லாம் நாம் கொண்டாடவோ அல்லது நினைவு கொள்ளவோ முடியுமா ? இல்லை நமது அரசுதான் இவர்களுக்கு உதவ முடியுமா ? இவருக்கேன் இந்த வேண்டாத வேலை ? போய் கல்யாணங்கட்டிக் கொண்டு புள்ளையைப் பெத்து உப்புமாவைக் கிண்டிவிட்டு காலத்தை ஓட்டுவதை விட்டு இந்தியாவுக்காக விளையாடுகிறாராம். இவருக்கெல்லாம் இது தேவையா ?

தற்போது வறுமையின் காரணமாக தனது பொக்கிஷமாய்ப் பாதுகாத்த உலகத்தரம் வாய்ந்த அம்பையும் வில்லையும் விற்று விட்டாராம். 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அதை எப்படி அவரால் வாங்க முடிந்தது. விளையாட்டுத் துறை கொடுத்ததா இல்லை இல்லை, அவரது திறமையைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது பயிற்சியாளர் கொடுத்தது. 4 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள அதை வெறும் 50000 க்கு விற்றிருக்கிறார். அவர் கொரியர். நல்லவேளை இந்தியாவில் பிறக்கவில்லை அவர். கூடவே அவரது வில்வித்தையில் செய்ய விரும்பிய சாதனைகளையும். ஏன் தெரியுமா களிமண்ணால் கட்டப்பட்ட அவரது வீடு இடிந்து விட்டதாம். அதை சரி செய்ய அவருக்குக் காசு இல்லையாம். எடுபட்ட ரவீந்திர ஜடேஜா என்னும் வீராதி வீரர் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திருநாட்டில் நிஷாவுக்கு ஒரு வீடும், வேலையும், ஊக்கத் தொகையும், பயிற்சியும் கொடுப்பது நம் அரசாங்கத்தால் இயலாது அல்லவா ? அதற்கு நாமெப்படி கிரிக்கெட்டையும், அரசையும் குறை சொல்வது ?

அவரது தங்கை திருமணம் செய்து கொண்ட போதும் சாதனை செய்ய வேண்டுமென்ற வேட்கையினால் மட்டுமே இன்னும் திருமணம் செய்யாமல் (21 வயது) அரசை நம்பிக் கொண்டிருக்கிறார். இவரது செயல் துரதிருஷ்டவசமானது என, விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இல்லை இந்தியாவில் இதுதான் நியாயமானது. 





அடுத்ததாக கபடியில் உலக சாம்பியன் மகளிர், ஆடவர் என இரு பிரிவிலும் இந்தியாதான் சாம்பியன். ஆனால் அவர்களுக்கு நடந்ததைப் பார்ப்போமா ? 12 நாடுகள் விளையாடிய உலக மகா சோம்பேறி மொக்கை விளையாட்டிற்கு சாம்பியன் பட்டம் வென்ற சோதாவிற்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள் !!(கபடியும் நிறைய நாடுகள் விளையாடவில்லைதான்). உலக சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அப்பெண்கள், அவர்கள் தங்கள் கோப்பைகளையும், பதக்கங்களையும், விளையாட்டுச் சான்றிதழ்களையும் ஏந்திக் கொண்டு ரிக்ஷாவிற்காகக் காத்திருந்தார்கள். சிலர் நடந்து சென்றனர். அவர்களுக்கு மகிழுந்து பரிசாகத் தரவேண்டுமென்பதல்ல, போட்டியில் வாகை சூடியதற்காகவாவது ஒரு நாளுக்கு அவர்களுக்கு அந்த வசதியைச் செய்து தந்திருக்கக் கூடாதா ? 

உலக சாம்பியனான இந்தியப் பெண்கள் கபடி அணி
அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காசைக்கூட போட்டி நிர்வாகிகள் செலுத்தவில்லை. அவர்கள் விடுதியின் பணியாளர்களால் ரூ 22,000 பணம் செலுத்தாததற்காகத் 2 மணி நேரங்களாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு சிறிய தீ விபத்தின் காரணமாக அவர்களது சீருடைகள் எரிந்து விட்டன. இது அரை இறுதிப் போட்டிக்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டது. போட்டி நடந்தது இந்தியாவின் பஞ்சாப்தான் என்றாலும் ஒரு வாரமாக அவர்கள் ஒரே சீருடையை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது. இதுதான் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்தவர்கள் நடத்தப்படும் விதம்.

இதே கிரிக்கெட் என்றால் இந்த மூஞ்சிகளைத்தான் நாம் ஆணுறை விளம்பரத்தைத் தவிர அனைத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. சச்சின், டோனி சகாப்தம் முடிந்து இனி கோலி கோடி கோடியாக அள்ளப் போகிறார். 10 வருடங்கள் முன்பு மேற்கிந்தியத் தீவுகள், தற்போது ஆஸ்திரேலியா என பெரிய அணிகளெல்லாம் போண்டியான நிலையில் இனி இந்தியாதான் வெற்றிகளைக் குவிக்கப் போகிறது. இதில் பரவசமடையும் இந்திய தேசபக்தர்கள் எப்படி ஐபிஎல்லையும் அதே பரவச மாநில உணர்வுடன் ரசிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்படியோ தேசபக்தி ஒழிந்தால் சரி.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை நடத்தி வருமானத்தை அள்ள முடியாமல் அதை விட பல மடங்கு அள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தி வெற்றியும் பெற்று விட்ட போட்டியை நடத்தும் முதலாளிகள், வெளிநாடுகள் போலவே இன்னும் cheerleaders - களின் பாவாடையின் உயரத்தைக் இன்னும் மேலே குறைக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் குறைத்து விட்டால் அவர்களது போர்னோகிராபிக் கலாச்சாரத்தை இந்தியாவில் நிறுவிய பெருமையும் சேரும். அது சரி இப்போது மட்டும் என்ன வாழுதாம் ?

மாணவர்களின் தேர்வை முன்னிட்டும், தமிழகத்தின் மின்பற்றாக்குறையை முன்னிட்டும் இதை தடை செய்ய வேண்டுமென்கிறார்கள். பிராந்திய உணர்வை வளர்த்து தேசத்திலேயே பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று ராம கோபாலன் மாதிரி யாராவது தேசபக்தரகள் குரல் கொடுத்தால் தேவலை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

தமிழகத்தில் மராட்டிய பாணியில் பரவும் வட இந்தியர் வெறுப்பு மனோபாவம் !!

ற்போது தமிழகத்தில் வட இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. உதாரணமாக தற்போது நடந்த என்கவுன்டர் என்ற மோதல் கொலையின் பின்னால் அதற்குக் கிடைத்த பரவலான வரவேற்பு. இந்த கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் தமிழ்திரைப்பட நாயகத்தனமான ஒரு மனோபாவம் அதாவது தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் சட்டம், மனித உரிமை, முறையான விசாரணை இது போன்று நேரத்தை செல்வழிக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்ற பாணியிலானவை. இன்னொரு காரணம் என்னவெனில் அவர்கள் வட இந்தியர்கள் என்பது மட்டுமே. தற்போது தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகமாகி வருகிறது.

வட இந்தியாவிலிருந்து அதிகமானவர்கள் இங்கு இடம்பெயர்ந்து கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமானவர்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் கட்டிட வேலைகள், சாலைகள், பாலங்கள் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களல்லாமல் கல்வி கற்க வந்தவர்கள், வேலை தேடி வந்தவர்கள், போர்வைகள் விற்பவர்கள் போன்ற வெவ்வேறு வகையிலான பொதுவாகவே அயலவர்கள் அந்நியர்களுக்கு எதிரானவர்களுக்கு இருக்கும் மனோநிலை தற்போது இந்த வட இந்தியர்களுக்கு எதிராக அதிகமாக இருக்கிறது. அங்கங்கே இவர்களால் நடத்தப்படும் சிறு சிறு குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள் வரை இவர்களுக்கு எதிரான குற்றவாளி மனப்பான்மையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் ஹிந்தியைத் தவிர வேறு மொழியை அறியாதவர்கள். தமிழகத்தில் யாருக்கும் இந்தி பெரிய அளவில் தெரியாததால் அங்கங்கே ஏற்படும் சங்கடங்கள், இடைஞ்சல்கள் என இவர்கள் மீது அனைவரும் எரிச்சலைக் காட்டுகிறார்கள். குறிப்பாக பேருந்து நடத்துனர்கள் சாதாரணமாகவே நம்மூர்களில் நடத்துனருடன் சண்டைபோடாமல் இறங்கவே வாய்ப்பிருக்காது. சில்லைறை கொடுக்கல் வாங்கலில் இருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது அல்லது நிறுத்தாமல் போவது, வேகமாக இறங்க ஏற, எல்லோரையும் உள்ள போகச்சொல்லியே வாழ்க்கை வெறுத்துப்போவது, போதாக்குறைக்கு ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணம் என ஏற்கெனவே உச்சகட்ட எரிச்சலில் இருக்கும் நடத்துனர்களுக்கு மந்தமாக எதிர்வினை புரியும் வட இந்தியர்கள், நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். மொழியும் புரியாமல் பேசவும் தெரியாமல், பல  இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இங்கிருக்கும் மலையாளிகளின் மீது பொழியப்பட்ட வெறுப்புணர்வு வாசகங்கள், தாக்கப்பட்ட அவர்களது நிறுவங்கள் என தமது கையாலாகாத்தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும் எவனோ ஒரு அப்பாவியின் மீது வீரத்தைக் காட்டும் மொன்னைகள்தான் இது போன்ற பொதுவான அடிப்படையே இல்லாத ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவனுங்க அப்படித்தான் என்ற வெறுப்பை விதைக்கிறார்கள். அது போலத்தான் வட இந்தியர்கள் என்றாலே திருடர்கள் என்ற வகையில் இதுவும் பரவுகிறது. மற்றபடி மற்றவனை பகடி செய்யும் விதத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லைதான். கோவையின் பீளமேடு பகுதியில் வசிக்கும் நைஜீரிய இளைஞர்கள் அப்பகுதி மக்கள் தம்மை இனரீதியாகக் கிண்டல் செய்து வருவதாக ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சில மாதங்களுக்கும் முன்பு தினத்தந்தியில் படித்தேன்.

இவர்கள் செய்த சில செயல்கள் இதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன, கோவையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் 3 வட இந்தியர்கள் ஒரு மாட்டுக் கன்றை புணர முயற்சி செய்திருக்கிறார்கள். அது கத்தாமல் இருக்க மண்வெட்டியின் கைப்பிடியை அதன் வாயில் விட்டு அடைக்க முயற்சி செய்ய மரண் பீதியில் அது கத்தி மாட்டுகன்றின் சொந்தக்காரர் வந்து பார்த்து பின்பு ஊர்வலமாக அம்மூவரையும் கொண்டுபோய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இன்னொரு நிகழ்வில் இரு ராஜஸ்தானிகளிடையே ஏற்பட்ட குழுச்சண்டையில், ஒருவனை அடிக்க இன்னொருவன் ஆளை நியமித்திருந்தான், அவன் குறிப்பிட்ட இடத்தில் அடிக்கப்படவேண்டியவன் வந்து கொண்டிருப்பதை தகவல் தர அடியாள் தாக்குவதாகத் திட்டம், இது சொதப்பி திரைப்படங்களில் வருவது போல் நம்மவர் ஒருவர் அவ்வழியில் வந்திருக்கிறார். அவரை தவறுதலாகத் தாக்கிவிட்டான் பின்பு அவனை நையப்புடைத்துவிட்டார்கள்.

இப்படியாகப் பல நிகழ்வுகள் அங்கங்கே. தற்போது ஒரு நிகழ்வு திருடன் எனக் கருதி பள்ளிக்கரணையில் வட இந்தியனைப் போல் தோற்றமுடைய ஒரு இளைஞனை கும்பலாகக் கூடி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், ஆனால் அவனோ மனநிலை சரியில்லாத ஆந்திராவைச் சேர்ந்தவன். இதற்கெல்லாம் என்ன செய்ய ?

முதலில் இந்த கும்பல் வன்முறையின் நோக்கம்தான் என்ன ஒருத்தன் சிக்கியவுடன் என்னவென்றே தெரியாமல் வந்து அடிப்பதுதான். அதிலும் சாலையில் ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் யார்மீது தவறு என்றெல்லாம் நின்று பேசவோ யோசிக்கவே எல்லாம் முயல்வதே இல்லை ஆ ஊ ன்னா கைவைக்க வேண்டியது. இது கொலைவரை நீள்கிறது. இதனால்தான் ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால் உயிருக்கும் அடிக்கும் பயந்தே ஓட்டுநர்கள் தப்பியோடிவிடுகிறார்கள். திருடன் என்ற ஐயத்தின் பேரில் இது போன்று கும்பலாக சேர்ந்து அடிப்பதால் பல அப்பாவிகள்தான் சாகிறார்கள். மன நிலை சரியில்லாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படிக் கும்பலாக அடிப்பதை, கொல்வதை வீடியோ எடுக்கிறார்கள் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன காட்டுமிராண்டித்தனமிது ?

சும்மாவாச்சுக்கும் இம்மாதிரி வட இந்தியர்களை வெறுப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நம் மாநிலத்திலிருந்தும் எல்லா மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் தமிழகத்தவர்கள் இருக்கிறார்கள். இதே போல் அம்மாநிலத்தவர்கள் வன்முறையில் இறங்கினால் என்னவாவது ? மலையாளிகள் ஆதிக்கம் பெருகிவிட்டது, வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பதற்காக கோபப்படுகிறவர்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் நம்மவர்கள் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி ஊரை விட்டுப் பிழைப்புத் தேடிப்போகக் காரணம் அவர்களின் தன்னலமல்ல. உலகமயம்தான் இப்படி எல்லோரையும் குடும்பத்தை விட்டு ஊரூராக அலைய வைத்துள்ளது. மேலும் அவர்கள் கொத்தடிமைகள் போல்தான் வேலை வாங்கப்படுகிறார்கள். குறைவான நேரமே உறங்குகிறார்கள். குறைவான ஊதியமே அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலையில்லாதவர்களும் உண்டு. இவர்களால்தான் பெரும்பாலான சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. போதாக்குறைக்கு திருப்பூர், சென்னை வங்கிக்கொள்ளைகளைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றப்பரம்பரை மனப்பான்மை காவல்துறைக்கும் அதிகரித்து இவர்களைத் தனியாக கணக்கெடுத்து சோதனை செய்வது என்ற நிலைவரை கொண்டு வந்து விட்டுள்ளது.

இது போன்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் மகாராஷ்ட்ர, கர்நாடக மாநிலங்களைப் போல் சகிப்புத்தன்மையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment