அரை கிலோ பகுத்தறிவு


பகுத்தறிவு = பகுத்து + அறிவது

எதையுமே பகுத்துப் பாய்த்து ஆராய்ந்து அறிந்து புரிந்து கொள்வதுதான் பகுத்தறிவு. இது ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் இறைமறுப்பு என்ற பொருளில் மட்டுமே கொள்ளப்பட்டது. ஏனெனில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியவர்கள் இறைமறுப்பாளர்கள் எனவே அந்தப் பொருளிலேயே முன்னிறுத்தப்பட்டது. இன்றோ எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நிலையில் பகுத்தறிவு எனப்படுவது அவரவர் கொள்கைகுத் தேவையான தகவல்களைத் தேடித் திரட்டி அதை நிரூபிப்பதே பகுத்தறிவு என்றாகிவிட்டது. சரி தவறு என்று விருப்பு வெறுப்பு பாராமல் ஏற்றுக் கொள்வதெல்லாம் கிடையாது. இதில் யாரும் தோற்றதாகத் தெரியவில்லை, வென்றதாகவும் தெரியவில்லை. இன்றோ எல்லாரும் பகுத்தறிவுவாதிகள்தான். பகுத்தறிவு என்ற சொல்லை எல்லா சமய நூல்களிலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமயவாதிகள் மிகத் தெளிவாகவும், திறமையாகவும் அறிவியல் அறிஞர்களாகவும், வரலாற்றறிஞர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்



மீம்கள்(memes) என்றாலே சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதற்கு இது ஒரு சான்று. ஆனா ஆவன்னா இன்னா ஈயன்னா என்றால் அது கலாய்த்ததாகிவிடுமா ? இந்த மீமில் என்ன சொல்ல வருகிறார்கள். இறைமறுப்பாளரான - பார்ப்பன எதிர்ப்பாளரான கருணாநிதியின் மனைவி ஐயரிடம் ஏதோ சாமி பிரசாதம் வாங்குகிறார். இதனால் கருணாநிதி கலாய்க்கப்பட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். ஏன் சாமி கருணாநிதி சாமி கும்பிடாதவர் என்றால் அவர் மனைவி கும்பிடக் கூடாதா ? சரி இப்படி வைத்துக் கொள்ளலாம். கருணாநிதி அவரது மனைவிகளை சாமி கும்பிட அனுமதிக்கவில்லை என்றால் என்ன சொல்லியிருப்பார்கள். "பாருய்யா நாத்திகனின் சர்வாதிகாரத்தை, மனைவியின் கடவுள் நம்பிக்கைக்குக் கூட அனுமதியில்லை". இப்படி மனைவியின் இறை நம்பிக்கையை அங்கீகரித்ததால் "சொந்த மனைவி கூட கருணாநிதியை மதிப்பதில்லை, இவரெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்ய வந்து விட்டார்" என்று கூறுவார்கள். வேறு எப்படித்தான் இறை மறுப்பாளர்கள் தமது கற்பை நிரூபிக்கச் சொல்கிறார்கள்.

ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஜாதி ஒழிப்பு பேசத் தகுதியில்லை. ஆங்கில வழியில் குழந்தைகளைப் படிக்க வைப்பவர்களுக்கு தாய்மொழிக்கல்வி பற்றிப் பேசத் தகுதியில்லை. இது போன்று பல விமர்சனங்கள் தத்தமது எதிரிகளை தாக்கப் பயன்படுத்துகிறார்கள். சரி இப்படிக்
சொல்கிறவர்கள் பெரும்பாலும் இறை நம்பிக்கை உடையவர்களே. இந்த இறை நம்பிக்கை உடையவர்களின் மனைவிகள் திடீரென்று மனம் மாறி, நான் வேறு மதத்துக்கு மாறுகிறேன் எனக்கு அந்த மதமே உண்மையாகத் தெரிகிறது, எனக்கு தாலி அணியப் பிடிக்க வில்லை என்றெல்லாம் சொன்னால் உடனே இறைநம்பிக்கையாளர்கள் ஆகட்டும் அப்படியே என்று வாழ்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பீர்கள் இல்லையா ?

மே 1 தொழிலாளர் ஊர்வலத்தில் செங்கொடி ஏந்திச் செல்பவர்கள் அனைவரும் மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்தவர்களா என்ன ?

நம் கொள்கை சரிதான் என்று உறுதிபட நம்பினாலும், அதை அடுத்தவர்க்கு புரியவைத்து ஏற்றுக் கொள்ள வைப்பது எத்தனை கடினம் என்று தெரியாதா ? அது தோல்வியிலே கூட முடியும். அதற்குக் கருணாநிதியே  உதாரணம். வீட்டுப் பெண்களைக் கட்டாயப் படுத்தி நம் கொள்கைக்கு ஏற்றவாறு நடக்கச் செய்ய கூட முடியும். ஆனால் அது ஒரு இழிசெயல். மனைவி கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினால் கணவன்தானே கூட்டிச் செல்ல வேண்டும். நான் இறைவனை நம்பாதவன் என்று விறைத்துக் கொண்டு நிற்க முடியுமா ? அடுத்தவர் நம்பிக்கைய ஆதிக்கம் கொண்டு தடுப்பவர்கள் மருட்டுகிறவர்கள் மதவாதிகளும், ஜாதி வெறியர்களும்
தான்.

சரி அந்த ஐயரை ஏன் விமர்சிக்க வில்லை, காலம் பூராவும் தன்னைத் திட்டிய கருணாநிதியின் மனைவிக்கு இவர் ஏன் பிரசாதப் பையை வழங்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லையே. ஒரு வேளை அவரது பெருந்த
ன்மையை ஆராதிக்கும் பொருட்டு அதை விட்டுவிட்டீர்களா ? கருணாநிதி நாத்திகம் பேசுகிறார், இந்துக்களை விமர்சிக்கிறார் ஆனால் சன் டிவியில்தான் முதன் முதலில் ராமாயணத்தை ஒளிபரப்பினார்கள் என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் கருணாநிதிக்கே சன் டிவியின் மீது முழு அதிகாரம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் இதற்குக் கருணாநிதியையே விமர்சித்தார்கள். ஏன் கருணாநிதியின் தொலைக்காட்சியில் போய் ராசி பலன் சொல்கிறார்கள், ஏன் ராமாயண, மகாபாரத ஒளிபரப்பு உரிமையைக் கொடுத்தார்கள் இறை நம்பிக்கையாளர்கள் என்று யாரும் கேட்கவில்லையே !!

எனக்கு கருணாநிதியை ஆதரிக்க வேண்டுமென்ற விருப்பமில்லை. கருணாநிதியை விமர்சிக்க நூறு காரணங்கள் இருக்கின்றன. அவரை விமர்சிக்கப் பயன்படுத்து காரணம் கருத்து தவறானது. ஏனென்றால் அது என்னையும் சேர்த்துத்தான் விமர்சிக்கிறது. அதனால்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. சிந்தனைக்குரிய அருமையான பதிவு நண்பர்.
    //எனக்கு தாலி அணியப் பிடிக்க வில்லை என்றெல்லாம் சொன்னால் உடனே இறைநம்பிக்கையாளர்கள் ஆகட்டும் அப்படியே என்று வாழ்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பீர்கள் இல்லையா ?//
    தாலியை அகற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இது பொதுவாக மத, இன வெறி கொண்டவர்களின் சுபாவம். உதாரணமாக இஸ்லாமிய நாடுகளில் எவ்வளவோ கொடுமைகள் நடக்கின்றன, அதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இந்தியாவில் அதை விட சின்னதா ஏதாவது நடந்திச்சா பொங்குவார்கள்.வீரப்பனை பிடிக்கிறேன் என்று சொந்த தமிழக பெண்களுக்கு தமிழ போலீஸ் செய்த கொடுமைகள் இதை பற்றி பேசுவாங்களா?ஸ்ரீலங்காவில் பெண்களுக்கு என்ன நடந்திச்சு என்று தான் பேசுவார்கள்,இணையத்தில் கவிதையே ஏழுதுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வேகநரி உண்மையை விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லாரிடமும், எல்லாவிடத்திலும் இருப்பதில்லை. நம் மனம் கடந்து உண்மையை ஏற்றுக் கொள்ளுதலே நேர்மை.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்