உலகின் மிக அழகான பெண் - 2


தன்மானம் ஊட்டிய காரிகை, தறுதலைகளுக்கு தக்க பதில் தந்த தாரகை என்றெல்லாம் தலைப்பு வைக்கலாமா என்றும் யோசித்தேன். இவரைப் பற்றி எழுதியாவது எனது பாவத்தைக் கொஞ்சம் கழுவிக்க் கொள்ளலாம் என்ற நப்பாசையில்தான் இதை எழுதுகிறேன். அனைவருக்குமே இருக்கும் ஒரு மோசமான சமூகத் தொற்று நோய் என்ன உருவத்தை வைத்து எடை போடுதல், எள்ளி நகையாடுதல், எகத்தாளம் செய்தல், ஏற்றிப் பேசுவது என அனைத்தும் அடங்கும். இதை பல பேர் கருத்தளவில் ஏற்றுக் கொண்டாலும் ஏதாவதொருவகையில் அதே நோய்த்தன்மையுடன் நாம் நடந்து கொண்டு விடுகிறோம். பல பேர் இதை ஒரு தொழிலாகவே வைத்துக் கொண்டுள்ளார்கள்.

நான் இதிலிருந்து முக்கால்வாசி வெளி வந்து விட்டாலும் எனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மை இன்னும் முழுவதுமாகப் போய்விடவில்லை. கறுப்பு நிறம், பூ விழுந்த பற்கள், நரைக்கத் தொடங்கிய முடிகள், தாடி, லேசான சொட்டை என சராசரி ஆண்களிடம் காணப்படும் "குறைகள்" அது குறித்த கவலைகள் எனக்குண்டு. பலருக்கும் உண்டு. அதை ஏற்றுக் கொள்ள முழுவதும் நம்மால் முடியவில்லை ஏன். அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம். ஏனென்றால் இப்படி நினைப்பவர்கள்தான் அடுத்தவரை இது மாதிரி எடை போடுவார்கள். இது போன்ற அசிங்கமான மனப்பான்மையை மிகச் சிலர் எளிதில் உதறித்தள்ளி நம்மை வெட்கப்பட வைத்து விடுகிறார்கள்.

பெண்களும் தமது உருவம் குறித்து மிகவும் கவலை கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. சமூகம் ஊடகம் என அனைத்துமே அவர்களை அது குறித்துத்தான் கவலை கொள்ள வைக்கிறார்கள். சிலர் மட்டுமே இதிலிருந்து வெளியே வருகிறார்கள். பெண்கள் முகத்தில் முடி இருந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள், அதை நீக்கவே ஆணும் சரி பெண்ணும் சரி விரும்புவார்கள்.

தன்னை இழிவு செய்தவனை செய்ய நினைத்தவனை மன்னித்து அவனுடன் நகைச்சுவையாகப் பேச எத்தனை பேருக்கு சாத்தியம். ஒரு பெண் செய்திருக்கிறார். அவர் பெயர் பல்பிரீத் கவுர். இவர் ஒரு சீக்கியப் பெண். இவருக்கு ஆண்களைப்போல முகத்தில் லேசான மீசையும் தாடியும் வளர்ந்திருக்கிறது. இப்படி ஒருவரைப் பார்த்தால் நம்மாட்கள் என்ன செய்வார்கள், அவரை ஏற இறங்கப் பார்த்தே கொன்று தள்ளிவிடுவார்கள். ஏண்டா பிறந்தோம் என்று அவரை வேதனைப்படுத்தி விடுவார்கள். அதே போலத்தான் ஒரு நல்ல உள்ளம் இவரைப்பார்த்து இவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து ஒரு தளத்தில் வெளியிட்டு விட்டார். அதற்கு இவர் விட்டிருந்த கருத்து - இப்படத்தைக் குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை ("I'm not quite sure what to conclude from this") (ஆணா இல்லை பெண்ண எனத் தெரியவில்லை). பல ஆண் உத்தமர்கள் தெருவில் போகும் நிற்கும் பெண்களைப் படமெடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து கைமைதுனம் செய்பவர்கள். அது குடித்து விட்டுக் கிடக்கும் பெண்களாக இருக்கலாம், எதுவும் செய்யாமல் வெறும் அழகான பெண்ணாக இருக்கலாம், அல்லது அசிங்கமாக இருக்கும் பெண்ணாக இருக்கலாம், அல்லது குட்டைப் பாவாடை அணிந்திருக்கலாம் அல்லது குனிந்தவாறு நின்றிருக்கலாம் இப்படி எந்த மாதிரி இருந்தாலும் அதைப் படம் பிடித்து இணையத்தில் பரவவிடுவதில் இவர்களுக்கு ஆனந்தம். இவர்களை விட போர்னோகிராபி எடுப்பவன் 10 மடங்கு மேலானவன்.

இது போன்ற ஒரு மன நோயாளி எடுத்து இவரின் படத்தை வெளியிட அது ஃபேஸ்புக் வரை பரவி பின்பு அக்குறிப்பிட்ட பெண்ணுக்கும் செய்தி சேர்ந்து விட்டது. அதற்கு இவர் வெளியிட்ட கருத்து இவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்தி இப்படத்தினைப் பகிர்ந்தவனுக்கு மன்னிப்பையும் கேட்க வைத்து விட்டது. 

பல்ப்ரீத்  கௌர்
அவர் வெளியிட்டிருந்த கருத்து இதுதான், "ஹாய் நான் பல்ப்ரீத்  கௌர், ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் சொல்லும்வரை இப்படம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. இதை எடுத்தவர், என்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தால் நான் புன்னைகைத்திருப்பேன் :). எப்படியாகினும் இப்புகைப்படம் வெளியானதால் அல்லது நேர்மாறான கவனத்தை இப்புகைப்படம் பெற்றதாலோ நான் அவமானமோ, துன்பமோ அடைந்ததாகக் கருதவில்லை ஏனென்றால் புகைப்படத்தில் இருப்பது நான் மட்டுமே. நானொரு ரோமத்துடன் கூடிய திருமுழுக்குப்(ஞானஸ்நானம்) பெற்றசீக்கியப் பெண். ஆம் எனது பாலினம் பல நேரங்களில் குழப்பம் தருகிறது நான் மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்டுத் தெரிகிறேன். திருமுழுக்குப்பெற்ற சீக்கியரின் நம்பிக்கைப்படி, புனிதமான இவ்வுடல் பாலின வேறுபாடற்ற தெய்வத்தினால் அருளப்பட்டது, இதை அப்படியே கெடாமல் தெய்வத்தின் விருப்பமாக வைத்திருக்க வேண்டியது, ஒரு குழந்தை தனது பெற்றோரின் பரிசை எப்படி நிராகரிக்காமல் வைத்திருக்கிறதோ அது போல சீக்கியர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட உடலை நிராகரிக்கக் கூடாது. என்னுடைய உடல் என்று அழுதுவாறே உடலை மாற்றிக் கொள்வதன் மூலமாக நாம் அகம்பாவத்தில் வாழ்வதால் நமக்கும் நமக்குள் வாழும் தெய்வத்திற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் அழகை மேம்படுத்திக் காட்ட நான் எனது செயல்களின் மீதே கவனம் செலுத்துவேன். என்னுடைய அணுகுமுறை, சிந்தனைகள் மற்றும் செயல்கள் மட்டுமே மதிப்புக் கொள்ளும் என்னுடல் இறுதியில் சாம்பலாகப் போவதால் நான் ஏன் உடலினைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் ?நான் இறந்த பிறகு என் தோற்றம் எப்படி என்பதை யாரும் நினைவு கொள்ளப் போவதில்லை என் குழந்தைகள் எனது குரலை மறந்து விடுவார்கள். பௌதீக நினைவுகள் மெதுவாக மங்கிவிடும். எனினும் என்னுடைய தாக்கமும் பாரம்பரியமும் நிலைத்திருக்கும். நான் என்னுடைய தோற்றத்தைக் கவனம் செலுத்துவதை விட்டு, உள்நிலை சார்ந்த பண்புகளையும் நம்பிக்கைகளையும் வளர்த்து, இவ்வுலகிற்காக எனது வாழ்க்கை முறையை மாற்றுவதில் எனது நேரத்தை செலவிடுவேன். எனவே எனக்கு முகமல்ல அதன் பின்னுள்ள புன்னகையும் மகிழ்ச்சியும் மட்டுமே இன்றியமையாதது :-) எனவே என்னை யாராவது ஒஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் கண்டால் வந்து ஹலோ சொல்லுங்கள். நான் இங்கே எனது புகைப்படத்தில் கண்ட அனைத்து நேர் எதிர்மறைக் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் இவ்விசயத்தில் நான் என்னையும் மற்றவரையும் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளேன். அனைத்து சமய இளையஞர் மையம் (Interfaith Youth Core) கொடுத்த பேண்ட்டும், டீஷர்டும் வசதியாக உள்ளது. இந்த விளக்கம் தேவைக்கு அதிகமாக இருக்கும் என நம்புகிறேன், ஏற்பட்ட குழப்பத்திற்கும், நான் யாரையாவது புண்படுத்தியிருந்தாலும் மன்னிக்கவும் வேண்டுகிறேன்."


அதற்கு அந்தப் புகைப்படத்தை பகிர்ந்தவரின் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்தப் பெண்ணிடமும், சீக்கியரிடமும் அந்த படத்தை வெளியிட்டு அவப்பெயர் தேடித்தந்ததற்காக அந்த இணையத்தளத்திடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பெண்களின் உருவத்தைக் கிண்டல் செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் இது அர்ப்பணம். 

இன்னும் பல பேர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே,

பல்ப்ரீத்தின் ட்விட்டர்
 
 சில வருடங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த சபீனா பேகம் என்ற பெண் தாடியுடன் இருப்பதைப் போன்ற புகைப்படமொன்று தினகரனில் வெளியாகியிருந்தது அதனால் எனக்குக் கவலையெதுவுமில்லை என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார். என்பதும் நினைவுக்கு வருகிறது.
ஐரோம் ஷர்மிளா குறித்து எழுதியபோது வைத்த தலைப்பே இதற்கும் வைத்து விட்டேன்
 உலகின் மிக அழகான பெண்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:


  1. அப் பெண்ணின் மறுமெழி ஆணிணத்தின் அகம்பாவத்திற்குக் கொடுக்கப் பட்ட சவுக்கடி!

    பதிலளிநீக்கு
  2. ”அழகென்ன பெரிய அழகு...உருவம் எப்படியிருந்தாலும் மன நிறைவோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவோம்”

    இப்படியொரு உருக்குலையாத கொள்கையுடன் வாழத்தூண்டுகிறது இந்தப் பெண்ணின் வாழ்க்கை.

    பாராட்டுகள் தமிழானவன்.

    இப்படி, தனித்துவத்துடன் வாழும் சாதனையாளர்களைப் பற்றி இன்னும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றிகள் அறுவை மருத்துவன்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்