ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை இல்லை இல்லவே இல்லை !!


எங்கேயாவது யாராவது திராவிட இயக்கத்தினர் அல்லது தமிழர்கள், தமிழகத் தலைவர்கள் தமிழரை ஹிந்தி கற்பதிலிருந்து தடுத்து விட்டனர் என்று சொன்னால் சுர்ரென்று கொதிப்பு தலைக்கு ஏறிவிடுகிறது. இதே போல் வெறியேற்றும் இன்னொன்று இங்கிருந்து இலங்கைக்குப் போய் நாடு கேட்டால் அவனெப்படிக் கொடுப்பான் ? அவர்கள் தெரியாமல் சொன்னாலும் சரி தெரிந்து சொன்னாலும் சரி. எல்லா இடத்திலும் போய் சொல்லிக் கொண்டிருக்கவா முடியும். என்றாலும் சிலரிடம் புரிந்து கொள்ளும் தன்மையுடையவரிடம் மட்டும், தோன்றுகிறவரிடம் மட்டும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், இருக்கிறோம். இருந்தாலும் பெரிய ஞானமுடையவரெல்லாம் இதை சொல்வதுதான் செரிக்க முடியாததாக இருக்கிறது.

அது என்ன எழவோ தெரியவில்லை. ஹிந்தி வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்கிறார்கள்.  இந்த ஒரு சொல்லில் வரலாற்றைத் திரிப்பது என்று சொல்வது போல இந்த ஒரு வரியில் அத்தனை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி, காக்கையைக் குயிலாக்கி, குயிலை கழுகாக்கி விடுகிறார்கள். 


காந்தி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்

ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்

பாரதியார் தமிழை உயர்த்திப் பாடினார்.

இது போன்ற ஒரு வரியில் வரலாற்றைத் தவறாகப் பரப்புவது போலத்தான் ஹிந்தி தேசிய மொழி என்ற பொய் திரும்பத் திரும்பப் பரப்படுகிறது.

தேசிய மொழியாகிய ஹிந்தியைத் தமிழர்கள் கற்பதை அரசியல் வாதிகளும் மொழி வெறியர்களும் தடுத்து விட்டார்கள் அதனால்தான் தமிழர்கள் முன்னேற முடியவில்லை அல்லது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.

நான் அங்கே போனேன், ஹிந்தி தெரியாமல் தொல்லையாக இருந்தது, இன்னார் கேட்டார் அவமானமாக இருந்தது. அரசியல்வாதிகளை நினைத்து ஆத்திரமாக வந்தது.

இது மாதிரியான பேச்சுக்களை அவ்வப்போது அடிக்கடி கேட்கவும் வேண்டியிருக்கிறது. இதிலெது உண்மை ? இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது. ஹிந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஹிந்தி அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் காரணமாகவும் ஹிந்தி மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரும்பான்மை மொழியாக இருப்பதன் காரணமாகவும்தான். இதில் நடுவண் அரசின் பலதுறைகளில் தனிப்பட்ட முறையில் ஹிந்தி வளர்ப்பு அல்லது திணிப்பதற்கெ அரசே முகவராக செயல்படுகிறது.

மொழி வெறி என்னவென்று பார்ப்போம். தமிழ் வெறியர்கள் ஹிந்தியை கற்பதைத் தடுத்து விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. எது மொழி வெறி. இந்தியா உட்பட பல மூன்றாம் உலக நாடுகள் 1950 களுக்கு முன்பு இல்லை. அவர்கள் வசதிக்கேற்ப சிலவற்றை பிரித்துக் கொடுத்தும், சேர்த்து விட்டும் சென்றனர். இந்தியாவில் பல தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதும், ஆப்ரிக்க கண்டத்தில் ஆடை கூட அணியாத மனிதர்கள், ஏகே 47 துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மற்ற இனங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு கண்டங்களிலும் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் 500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக இருந்தது. தொடர்ந்து படையெடுப்புக்கள், இறுதியாக முகலாயர், பின்பு ஆங்கிலேயர் ஆகியோர் மொத்தமாக இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை ஒன்றாக ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

பின்பு 1947 - இல் பிரிட்டிஸ் வெளியேற இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். இந்தத் தலைமையின் கீழ் பல தேசிய இனங்கள் அடிமையாயின. 2 டஜன்க்கும் மேலான மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தன. ஆங்கிலேயர் ஆதிக்கம் காரணமாக ஆங்கிலமும் இருந்தது. ஆங்கில அறிவின் காரணமாகத்தான் பல நாட்டு தத்துவங்களும் சித்தாந்தங்களும் அறிமுகமாயின. ஹிந்தியைத் திணிப்பதன் மூலம் பல மொழிகள் பேசியவர்கள் நிறைந்த நாட்டை ஒரு தேசியத்தில் அடைக்க முயன்றார்கள். மற்ற சிறுபான்மை மொழிகளின் அடையாளங்களை அழிக்க முயன்றார்கள். அன்றைக்கு ஆங்கிலம் இருக்கும் நிலைக்கு பதிலாக ஹிந்தியைத் திணிக்க எத்தனித்தார்கள்.

நாட்டுக்கு "சுதந்திரம்" வாங்கித் தந்த காங்கிரஸில் இருந்தவர்கள் பெரும்பான்மையான தலைவர்கள் ஹிந்தியை தேசிய மொழியாகக் கொண்டவர்கள். ஹிந்தி வெறியர்கள். ஹிந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களுக்கு தேசிய மொழியின் பெயரால் ஹிந்தியைத் திணிக்க முயன்றனர். அதை மற்றவர்கள் எதிர்த்தார்கள். தமிழர்கள் அதிகமாக கடுமையாக எதிர்த்தார்கள். இது போன்ற பிரச்சனைதான் கிழக்கு பாகிஸ்தானில் உருதுவைத் திணித்த போது வங்காளிகள் அதை எதிர்த்தனர், வங்கதேசம் உருவானது.

ஹிந்தித் திணிப்பைத்தான் ஹிந்தி எதிர்ப்பு என்றும் ஹிந்தி வெறுப்பு என்றும் திரித்து பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் மீது தம் மொழியைத் திணித்து அவர்களை அடிமைப்படுத்த நினைப்பவன் மொழி வெறியனா அல்லது தம் மொழிக்காக போராடுகிறவன் மொழிவெறியனா ? ஹிந்தி வெறியர்கள் என்று யாருமே சொல்லக் காணோம். ஹிந்தி வெறியர்கள்தான் போராட்டத்தை அடக்க மத்திய ரிசர்வ் படைய அனுப்பினார்கள். போராடியவர்களை சுட்டுக் கொன்றார்கள். ஹிந்தி வெறியன் என்று யாருமில்லையாம். ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி வெறுப்பாளன் பட்டம். சரி இப்படி வைத்துக் கொள்வோம், ஒரு வேளை காங்கிரஸில் தமிழர்கள் அல்லது தமிழ் வெறியர்கள் அதிகமாக இருந்து, தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருந்தால் அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் என்ன நிலை எடுப்பார்களோ அது போலத்தான் இதுவும்

ஹிந்தி கற்றுக் கொள்வதை யாரும் எதிர்க்கவுமில்லை, வெறுக்கவுமில்லை. அந்தக் காலத்தில் வட இந்தியர் ஆதிக்கமிருந்ததன் காரணமாக பல அரசுத் தொழில் நிறுவனங்கள் வட இந்தியப் பகுதிகளில் தொடங்கப்பட்டன. அங்கே செல்ல வேண்டிய தேவை தென்னிந்தியர்களுக்கு இருந்தது. அதை வைத்து அக்காலத்தில் ஹிந்தி தெரியாதவர்களை குற்ற உணர்வுக்குள்ளாக்கினர். இந்த உலக மயக் காலத்தில் வட இந்தியர்கள் தென்னிந்தியா நோக்கி பிழைக்க வரும் நிலை இருக்கிறது. இன்னும் வந்து பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது ஒன்று அறியாமை இல்லையென்றால் அயோக்கியத்தனம்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு தெரியவில்லை என்று அந்தந்த மாநிலத்திற்குச் செல்லும்போது எவ்வளவு வருத்தப்படுவோமோ அவ்வளவு வருத்தப்பட்டால் போதுமானது. தேசிய மொழியைக் கற்கவில்லை என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மாண்டரின், உருது அரபி ஆகியவை தெரியவில்லை என்றும் வருத்தப்படலாம் தவறில்லை. ஹிந்தி தெரிந்தவர்கள் ரொம்பவும் பீற்றிக் கொள்ளத் தேவையில்லை. வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே படும் அவலங்களைக் கண்ட பிறகும் ஹிந்தி தேசிய மொழியைக் கற்காமல் ஏமாந்து விட்டோம் என்று கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். 

படம் - ஃபேஸ்புக்
இன்னொன்று, ஹிந்தித் திணிப்பை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை என்பது வரலாறு. தமிழர்களைப் போலவே மொழி உணர்வுடையவர்கள் வங்காளிகளும் கன்னடர்களும். தற்போது ஸ்ரீதேவி நடித்து இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படம் வெளியாகவுள்ளது. அதில் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆங்கிலம் தெரியாமல், அமெரிக்காவில் எப்படி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ஹிந்தி தெரியாமல் அமெரிக்கர்கள் இந்தியாவில் எப்படி சமாளிப்பார்களோ அது போலத்தான் என்கிற பாணியில் பதிலளிப்பது போலவும் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் காட்டியிருக்கிறார்கள். ஹிந்தி பேசும் ரசிகர்களிடம் கைத்தட்டலை எதிர்ப்பார்த்தோ அல்லது தமது அறிவின் அடிப்படையிலோ இக்காட்சியை வசனத்தை இயக்குனர் வைத்திருக்கலாம். இது ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத பல கோடி இந்தியர்களை இழிவு செய்வதாகக் கூறியும், அவ்வசனத்தை நீக்கக் கூறியும், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியன்று எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு கையெழுத்துக்கள் மூலமாக எதிர்ப்புக்குரல் Change - தளத்தில் தொடங்கப்பட்டது.

இதைத் தொடங்கியவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள் இல்லை. கன்னடர்கள். அதனால் தமிழர்களைப் போல மொழிவெறியர்கள், திராவிட இயக்கம் தடுத்து விட்டது என்ற வாதமெல்லாம் இங்கு செல்லுபடியாகாது.

அந்த இணைப்புக்கள் :- 


இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை என்பதற்கான  ஆவணம்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. நானும் இதே கருத்தை வலியுறுத்தி ஒரு பதிவிட்டுள்ளேன்.பதிவின் இறுதியில் உங்களின் இந்த பதிவின் முகவரியையும் இணைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேக்காளிக்கு நன்றிகள் !!!இது போன்ற செய்திகளைத் தொடர்ந்து நினைவூட்ட வேண்டியுள்ளது

      http://sekkaali.blogspot.in/2011_01_01_archive.html

      நீக்கு
    2. இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி நண்பா.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்