பாலினப்படுகொலை: பிறக்காமல் போன 160 மில்லியன் பெண்கள்


"இவ்வுலகிலிருந்து100  மில்லியனுக்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை" என்று  கூறி  1990  இல்  அதிர்ச்சியை   ஏற்படுத்தினார்  நோபல்  பரிசு  பெற்ற  அறிஞரான  அமர்த்தியா  சென்.  பொருளாதார  வளர்ச்சி  பெண்களின்  எண்ணிக்கையைக்  குறைத்திருப்பதாக  எழுதிய  அமர்த்தியா  சென்  இருப்பினும்  பெண்களின்  எண்ணிக்கை  எப்படிக்  குறைந்தது  என்பது  குறித்துத்  தெளிவாக  அவர்  விளக்கவில்லை. அமர்த்தியா சென் இதற்கான காரணிகளாக ஊட்டச்சத்துக் குறைபாடு, வறுமை, கல்வியின்மை எனற வகையிலேயே விளக்கியிருந்தார். மிக முக்கியக் காரணியாக இருந்த ஒன்றைக் குறிப்பிடவில்லை, இதை  மாரா விஸ்டெண்டால்  (Mara Hvistendahl)  என்பவர்,  தன்னுடைய  "Unnatural Selection: Choosing Boys Over Girls, and the Consequences of a World Full of Men"  என்ற  நூலில்  விளக்கியுள்ளார்.  உலகில்  அதிகமான  ஆண்குழந்தைகள்  பிறந்து  இறக்கின்றன.  இயற்கையாகவே  இது  நடக்கிறது.  இயல்பான  பிறப்பு  விகிதம்  என்பது,  100  பெண்குழந்தைகளுக்கு  103  -  106  பெண்குழந்தைகள்  வரையில்  பிறப்பதாக  இருந்தது.  ஆனால்  சமீப  வருடங்களில்  இது  மாறி  அதிகமான  பெண்குழந்தைகளின்  இறப்பு  அதிகமாகியிருக்கிறது.  இதற்குக்  காரணம்  பாலினப்படுகொலை (gendercide).  அதாவது  பெண்குழந்தைகளைக்  கருவிலேயே  கலைத்து  விடுவதாகும்.  எடுத்துக்காட்டாக  சீனாவில்  ஆண்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதமானது  125:  100  என்ற  நிலைக்கு  நெருங்குகிறது.  2005  -  இல்  எடுக்கப்பட்ட  கணக்கீடுகளின்படி  ஆண்பெண்  பிறப்பின்  சமன்பாடு  மோசமான  நிலையில்  இருக்கும்  5  நாடுகள்  சீனா,  தென்கொரியா,  அஸர்பெய்ஜான்,  ஆர்மீனியா  மற்றும்  ஜார்ஜியா.  2010  இல்  எடுக்கப்பட்ட  புள்ளிவிபரங்களின்  படி  இவ்வாறு  பிறக்காமல்  போன  பெண்கள்  இந்தியா,  சீனாவில்  மட்டும்  85  விழுக்காடுகள்  இருக்கலாம்.



கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிந்து  கொள்ள  தாய்க்கு  அனுமதியில்லையென்ற  போதிலும்  மருத்துவர்கள்  இதில்  குறுக்கு  வழியில்  உதவுகின்றனர்.  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  ஆய்வும்,  (கருவானது  பெண்ணாக  இருக்கும்  பட்சத்தில்) அதனைத்  தொடர்ந்த  கருக்கலைப்பும்  ஆசியக்  கண்டத்தில்  மட்டும்  160  மில்லியன்  பெண்களை  அழித்துள்ளது.  இந்தத்  தகவல்  2005  இல்  எடுக்கப்பட்ட  புள்ளி  விவரத்தின்  அடிப்படையில்  அமைந்ததாகும்.  அமெரிக்காவிலுள்ள மொத்தப் பெண்களின்  எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகமாகும்.

இதன்  மூலகாரணமாக  விளங்குபவை  பெண்குழந்தையைக்  காட்டிலும்  ஆண்குழந்தை  பெறுவதை  விரும்பும்  கட்டுப்பெட்டித்தனமான  பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க  ஆசிய  சமூக  பண்பாட்டுக்  காரணிகளே.  ஆணாதிக்கப் பாதிப்பு நிறைந்த இந்தியாவில்  வரதட்சிணை  எனும்  மணக்கொடை  பெண்குழந்தை  பெற்றுக்  கொள்வதை  சிரமமாகக்  கருதுகிறது.  இந்து, கிறித்தவம், புத்தம், என அனைத்து சமயங்களிலும் இதுவே நிலை. சீனாவில்  பிறப்பிக்கப்பட்ட  ஒரு  குழந்தைத்  திட்டத்தின்  பின்பு சீனர்கள் பெண்குழந்தைகளைக் கலைத்து விட்டு ஆண்குழந்தையை பெற்றுக் கொள்ளவதில் ஆர்வம் காட்டினர்.

உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாரா  விஸ்டென்டால் சிலிர்க்க  வைக்கும்  காரணங்களை  தனது  நூலில்  கூறுகிறார்.  இவர்  விருது  பெற்ற  அறிவியல்  இதழாளர்.  ஆசியாவில்  9  நாடுகளில்  பயணித்துள்ள  இவர்  இந்நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதம்  குறைவாக  இருப்பதற்கான  காரணங்களை  ஆராய்ந்து  அதன்  மூலகாரணங்களை  கண்டறிந்து  தனது  நூலில்  எழுதியுள்ளார்.  ஆசியாவில்  பாலினத்  தேர்வு (sex selection)  நடப்பது  நாம்  நினைப்பது  போல்  அவ்வளவு  சாதாரணமாகவோ இயல்பாகவோ  இல்லை  என்று  குறிப்பிடும்  மாரா  இதற்காக  மேற்குலகைக் குற்றம்  சாட்டுகிறார்.  அவர்கள்  ஏன்  அதைச்  செய்தார்கள்  என்ற  காரணத்தையும்  அவரே  விளக்கியும்  விடுகிறார்.
மாரா  விஸ்டென்டால்
மேற்குலகின் உதவி

மேற்குலக அரசுகளும், மனித வள மேம்பாட்டு (philanthropic)  நிறுவனங்களும்  இதற்குப்  பெருமளவில்  உதவின.  1950  களிலேயே  மூன்றாமுலக  நாடுகள்  கருக்கலைப்பை  சட்டப்பூர்வமாக்கியதுடன்  அதற்காதரவாக  அமெரிக்கப்  பணத்தின்  உதவியுடன்  பரப்புரையும்  செய்யத்  துவங்கின.   (ஃபோர்டு  அறக்கட்டளை,  உலக  வங்கி,  ராக்ஃபெல்லர்  அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் இதில் உதவின ) பனிப்போர்க்காரர்களான  குடியரசுக்  கட்சியினரும்  மக்கள்  தொகைப்பெருக்கம் காரணமாக அதிகமான எண்ணிக்கையிலான பசித்த வயிறுகள் கம்யூனிசத்தை நோக்கித் திரும்பும் அபாயம் இருப்பதால், பொதுவுடமைத்  தத்துவம்  வளர  வழிவகுத்துவிடுமென்று  நம்ப,  இடதுசாரி  விஞ்ஞானிகளும்,  இயக்கங்களும்  "பெண்களின்  தேவை (
பெண்களின் உரிமை)"  என்றும்,  "எதிர்கால  மனித  வளத்துக்கு  அல்லது  மனிதன்  உலகில்  நிலைத்திருப்பதற்கும்"  கருக்கலைப்பை  இன்றியமையாததாகக்  கருதினர்.  இப்படியாக மாற்றுக் கொள்கைகைக் காரர்களாக இருந்த பொதுவுடமைவாதிகளும் தனியுடமைவாதிகளும் பெண்களின் "பிறக்கும் உரிமைக்கு" ??!  எதிராக கொள்கை ரீதியாக ஒன்றானார்கள்.  இது  போன்ற  மக்கள்  தொகை  கட்டுப்பாட்டு ஆதரவாளர்களின் மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்தும்  ஒரு கோரிக்கையாக முன்வைத்தது  பாலினத்  தேர்வையே.  இதன் மூலம் பெண்கள் குறைவான எண்ணிக்கையில் வைத்திருக்கும் சமூகம் குறைவான மக்கள் தொகையையே  பெறும்  என்று  கணக்கிட்டிருந்தார்கள்.

பனிப்போர்  காலத்தில்  தொடங்கப்பட்ட  மக்கள்  தொகைக்  கட்டுப்பாட்டு  இயக்கங்களின்  மூலமாக,  அதிகமாக  குழந்தைகள்  பிறப்பதும்  அவர்கள்  பசியுடன்  வளர்வதும்  அவர்கள்  கம்யூனிசத்தில்  ஈர்க்கப்பட்டு  விடுவார்கள்  என்று  அஞ்சினார்கள்.  இந்த  அச்சுறுத்தலின்  காரணமாக விளைந்த கொள்கைகளால் இந்தியா,  சீனா,  தென்கொரியா  ஆகிய  ஆசிய  நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதத்தைக்  குறைத்தது.  இதற்கான  ஆதாரங்களையும்  மாரா  கூறுகிறார்.  பல  நிறுவனங்கள்  மக்கள்  தொகையைக்  குறைப்பதற்கான  ஒருவழியாகவே  கருக்கலைப்பை  ஊக்குவித்தனர்.  மேற்குலகின்  பணத்தைக்கொண்டு  இதற்காக  மிகப்பெரும்  வலைப்பின்னல்  உருவாக்கப்பட்டது.   குடும்பக்கட்டுப்பாட்டு  ஆலோசகர்களும்,  மருத்துவர்களும்  பெண்களை  அமினோ  சிண்டிசிஸ்  ஆய்வினை  மேற்கொள்ளுமாறு  ஊக்கப்படுத்தினார்கள்.


அமினோசென்டிசிஸ் (பனிக்குட துளைப்பு) என்ற ஆய்வானது, கருவறையிலிருந்து பெறப்பட்ட ஒரு திரவத்தை ஆய்ந்து அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தையின் உடல்நலத்தினை உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆனால் இந்தியாவிலோ அமினோசென்டிசிஸ் கருவின் பாலியலை உறுதி செய்யும் (Sex Determination) நோக்கத்திற்காகவே அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தி வந்த  மருத்துவ நிறுவனனங்கள், வெளிப்படையான விளம்பரங்களுடனேயே இதை செய்தன. இதற்கெதிரான சட்டமோ கட்டுப்பாடுகளோ இருந்திருக்கவில்லை. இந்த ஆய்வு நடத்துவதற்கு ஆகும் செலவு ரூ 500 என்ற நோக்கில் இம்மருத்துவ நிறுவனங்களின் விளம்பர வாசகங்கள் இவ்வாறு இருந்தன. "எதிர்காலத்தின் செலவு 50,000-ஐ  விட தற்போதைய செலவு 500 சிறந்தது" (“Better 500 now than 50,000 later”) அதாவது எதிர்காலத்தில் (பெண்ணின்) திருமணத்திற்கு ரூ 50000 செலவு செய்வதைக் காட்டிலும் தற்போது ரூ 500 செலவில் அமினோசென்டிசிஸ் ஆய்வை செய்து, பெண்குழந்தையாக இருப்பின் அதைக் கலைத்து செலவை மிச்சப்படுத்துங்கள் என்றன அவ்விளம்பர வாசகங்கள். இவ்வாறு ஒரு சிசு நோய்க்குறியீட்டுடன் இருந்தால் அதைக் கலைத்து விடுவது நல்லது என்பதைப் போலவே சிசு பெண்ணாக இருப்பதால் கலைத்துவிடலாம் தவறில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது.

அதனால்  இந்தியாவில்,  பெண்  சிசுக்கொலைகள்  அதாவது  கருக்கலைப்புகள் அரசு  மருத்துவமனைகளில்  வெளிப்படையாகவே  நடைபெற்றது.  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிய  உதவியதுடன்,  பெண்குழந்தையாக  இருப்பின்  அதைக்  கலைக்கவும்  செய்தார்கள்.  மேலும்  இந்தியாவில்  மிகப்பெரும்  மருத்துவ  நிறுவனமான  அகில  இந்திய  மருத்துவக்  கழகம்  (AIIMS)  இதில்  முன்னணியில்  இருந்தது.  இதன்  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  சோதனைகளை  அதிகப்படுத்துவதன்  மூலம்  மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்த  முடியும்  என்ற  கருத்தைப்  பரப்பினார்கள்.  இதையே  இன்னும்  கொஞ்சம்  தெளிவாகச்  சொன்னால்  மக்கள்  தொகைக்  கட்டுப்பாடு  என்ற  பெயரில்  பெண்சிசுக்களைக்  கலைத்தனர்.  பாலினத்தேர்வு  (sex determintion) பற்றி 1970  களின்  பின்பகுதியில்தான் இந்தியப்  பெண்ணியவாதிகள்    எதிர்ப்புக்குரல்  எழுப்பத்  தொடங்கினர்.  ஆனால்  அதற்கு  முன்னதாகவே  பெருமளவிலான  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இதன்  மூலமாக  பெண்குழந்தைகள்  பிறப்பானது  குறைக்கப்பட்டிருந்தது.  அகில்  இந்திய  மருத்துவக்  கழகத்தில்  மட்டும்  ஏறக்குறைய  100000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இந்தியர்களின்  வரிப்பணமும்  மேற்குலகின்  பணமும்  இதற்கு  உதவின.

1978 - இல் ஒரு நிகழ்வு, டெல்லியிலுள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையிலுள்ள மகப்பேறு தளத்திற்கு ஒரு மருத்துவ மாணவர் செல்கிறார்.
தன் வாயில் உள்ளங்கை அளவிலான ஒரு சதைத் துண்டைக் கவ்வியவாறு பூனையொன்று, அவரைக்  கடந்து செல்கிறது, ஆரம்பத்தில் பூனையின் வாயிலிருப்பது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் பின்பு அவர்  அறுவைசிகிச்சைக்கான கருவிகள் வைக்கப் பயன்படும் தட்டில் சிதைக்கப்பட்ட சிசுவும் இரத்தத்துடன் வைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறார் பின்பு புரிந்து கொண்டு அதிர்ச்சியுடன் அங்கிருந்த செவிலியரிடம் அதை ஏன் முறையாக அடக்கம் செய்யவில்லை என்று கேட்கிறார். அதற்கு அவர் அது பெண்சிசு என்று பதிலளித்தாராம். பெண்சிசுக்கள் கலைக்கப்படுவது மிகவும் இயல்பாகவும் சாதாரண நிகழ்வாகவும் இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

மேலும்  மேற்கு  செய்த  அடுத்த  கொடுமை  வறுமை  சூழ்ந்த  பகுதிகளில்  வாழும்  ஏழைகளுக்கு  பணம்  வழங்கப்பட்டு  குடும்பக்கட்டுப்பாடு  செய்தது.  இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலத்தில் மட்டும்கட்டாய  குடும்பக்  கட்டுப்பாட்டு  அறுவை  சிகிச்சைகள்  ஒருவருடத்தில்  மட்டும்  அரசாங்கத்தால்  ஏறக்குறைய  6  மில்லியன்  ஏழை  இந்தியர்களுக்கு  நடத்தி  முடித்தது.  இது  நாஜிக்கள்  யூதர்களுக்கு  நிகழ்த்தியதை  விட  15  மடங்கு  அதிகமாகும்.


இக்காலங்களிலெல்லாம்  பெண்கள்  பிறப்பு  விகிதம்  தொடர்ந்து  குறைந்து  கொண்டேயிருந்தது.  1970  களின்  இறுதியிலிருந்து  மருத்துவ  மனைகளும்  (clinic)  கருவின்  பாலினச்  சோதனையை  நடத்துவதை  விளம்பரமாகவே  செய்யத்  தொடங்கின.  பஞ்சாப்பிலிருந்து  இது  டெல்லி  ஹரியானா  போன்ற  மாநிலங்களுக்கும்  பரவியது.  1978  லிருந்து  1983  வரையிலான  காலப்பகுதியில்  மட்டும்  78000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டன.  கருவை  அறியும்  சோதனைகளின்  மூலமாகவே  பெண்குழந்தைகளின்  விகிதம்  மோசமான  அளவுக்குக்  குறைந்து  போனது.


இவை  மட்டுமல்ல,  1960  களின்  இறுதியிலும்,  1970  களின்  தொடக்கங்களிலும்,  செல்வாக்கும்  மிக்க  அமெரிக்க  நிபுணர்கள்  கல்வியில்  இதைத்  திணிக்க,  அரசாங்கத்தால்  நிகழ்த்தப்படும்  கருத்தரங்களிலும்  கலந்து  கொண்டு இதை  வலியுறுத்தினார்கள்.  1969  இல்  பாலினத்  தேர்வு  என்பதை  உலகிற்கான  முக்கியமான  திட்டமாக  அமெரிக்க  அரசாங்கத்தால்  அறிவிக்கப்பட்டது. இதன்  முக்கியமான  அம்சம்  பிறப்பு  விகிதத்தைக்  கட்டுப்படுத்துவது.

பாலியல்  சமநிலையின்மையினால்  ஏற்படும்  சமூக  சீரழிவுகள்  :

ஆணாதிக்க  உலகில்  இயல்பாகவே  இருக்கும்  குடும்ப  வன்முறை,  சமூக  வன்முறை, குடும்பப் பெருமை சீர்குலைவு போன்றவற்றை எதிர்கொண்ட பெண்களும் தாம் பெண்குழந்தை பெறுவதைவிரும்பவில்லை.  அமெரிக்க  வாழ்  ஆசிய  சமூகத்தைச்  சார்ந்த  பெண்களிடம்  இது  அதிகமாக  இருக்கிறது. ஆசிய நாடுகளில் பெண் சிசுவைக் கலைக்க விரும்பும் பெண்கள் எழைகளல்ல, மாறாக மெத்தப்படித்தவர்களான மேட்டுகுடி வர்க்கத்தினராவர். நவீன பொருட்களை விரைவாகவும் எளிதாகவும் நுகரும் திறனுள்ள வசதியான பெண்களே பெண் சிசுக் கலைப்பை அதிகமாக செய்கிறார்கள். 





இது   போன்ற   பிறப்பு   விகிதக்   குறைபாட்டினால்   பெண்களின்  எண்ணிக்கை  கணிசமாகக்   குறைந்து   விட துணை   கிடைக்காத   ஆண்களின்   எண்ணிக்கை   அதிகரிக்கிறது.   தென்கொரியாவில்   2008   இல்   நடந்த   திருமணங்களில்   11%   ஆண்கள்   வெளிநாட்டிலிருந்தே   மணப்பெண்ணையே   தேர்ந்தெடுத்துள்ளனர்   என்பதே   இதற்கு உதாரணம்.   மேலும்   சமூக   வன்முறையும்   பெண்துணை   கிடைக்காத   ஆண்களால்   அதிகரிக்கிறது.   இன்னும்   கவலைக்குரியதாக   பெண்கள்   மீதான   வன்முறையை   இன்னும்   பல   மடங்குகளாக   அதிகரிக்கிறது.   இந்த ஆண் பெண் விகிதாச்சாரமானது வன்முறையில் பெரும்பங்கு வகிப்பதாக வாதிடுகிறார் மாரா. இதன் ஆதாரமாக அவர் சீனாவிலுள்ள மாகாணங்களில் எங்கெல்லாம் பாலின விகிதம் சமச்சீரின்றி உள்ளதோ அங்கெல்லாம் வன்முறை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். பெண்களின் விகிதம் குறைவாக இருப்பதால் திருமண நடப்பதே உறுதியில்லாத நிலமையில் உள்ள குறைவான வருவாயைக் கொண்டுள்ள ஆண்களால் வன்முறை அதிகரிக்கிறது என்கிறார். இதனால் வன்முறைக்குக் காரணமாக இருப்பது பாலின விகிதாச்சாரக் குறைவேயன்றி வருமானக் குறைவு மட்டும் அல்ல என்கிறார். 



தற்போது வளர்ந்த நாடுகளிலுள்ள ஆண்கள் ஏழை நாடுகளிருந்து பெண்களை திருமணம் செய்திருப்பது அதிகரித்திருக்கிறது. இதனால் வியட்நாமில் மணப்பெண்களை, பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகம் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பெண்களுக்கான கிராக்கி ஏற்பட்டு அவர்களின் மதிப்பு கூடி இருப்பது அவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. பெண்களின் தேவை காரணமாக அவர்கள் கடத்தப்படுவது, விற்கப்படுவது, கட்டாயத் திருமணம், வேறு நாடுகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது, விருப்பமில்லாத திருமணத்தை ஏற்றுக்கொள்வது, விபச்சாரத்தில் தள்ளப்படுவது, பாலியல் அடிமைகளாக சிக்கிக் கொள்வது என்று அவர்களின் தலையிலேயே விடிகிறது.


 மாரா  எழுதுகிறார்,  "ஆண்களால்  நிறைந்த  இவ்வுலகில்  தைவா
ன்  முதல்  தென்கொரியா  ஹரியானா  வரையிலும்  பெண்துணை  கிடைக்காத  ஆண்களால்  பெண்கள்   மீதான  வன்முறையை  அதிகரிக்கவே  செய்யும்.    பெண்கள்  சகோதர உறவுடைய  ஆண்களை  மணந்து  கொள்ளும்  கலாச்சார நிலை வரும். பாலின ஒடுக்குமுறை (ஆணாதிக்கம்) காரணமாக பெண்களின் விகிதம் குறைந்திருக்கிறது என்று அமர்த்தியா சென் கூறுவதை மறுக்கும் மாரா பெண்கள் உரிமையின்றி வாழும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் பெண் விகிதம் ஓரளவு சமமாக இருப்பதைக் காட்டுகிறார். உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தம்முடைய நோக்கம் கருக்கலைப்புக்கு எதிரான மதவாத, பழமைவாத அமைப்புகளின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது என்று தனது அரசியலை தெளிவுபடுத்தியிருந்தாலும் அதை முன்னெடுப்பதில் மாராவுக்கு சிக்கல் நிரம்பியிருக்கிறது. ஏனெனில் கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை என்ற நிலையில் கருக்கலைப்பைத் தடை செய்யக் கோரவும் முடியாது. கருக்கலைப்பை தடை செய்யக்கோரினால் அது பெண்ணியத்திற்கு பல ஆண்டுகள் போராடிப் பெற்ற பெண்ணுரிமையை  இழக்கும் வகையில் ஒரு பெருமிழப்பாகும். இதற்காக பெண்குழந்தைகள் கருவில் சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் இயலாது என்ற நிலையில் மாரா அல்ட்ரா சவுண்ட் ஆய்வின் போது கருவின் பாலினத்தை அறியும் ஆய்வைத் தடை செய்யவும், அதற்காக தண்டனை விதிப்பதை நடைமுறைப் படுத்துவதையும், பெண் சிசுவைக்  கலைக்க விரும்பும் பெண்களிடம் முறையான காரணத்தை அறியவும் அதிக சிரத்தை எடுக்கவும் மருத்துவர்கள் முன்வரவேண்டும் என்பதையும் மட்டுமே செய்ய வேண்டுமென பரிந்துரைக்கிறார்.

நன்றி Times of India


Progressive என்ற இணைய வானொலிக்கு மாரா விஸ்டெண்டால் நேர்காணல்:



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்