பரியேறும் பெருமாள்

பார்க்க வேண்டிய படம், கொண்டாடப்பட வேண்டிய படம். ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல் படம். தரமான படம். மிக எளிமையான வழக்கமான கதையிலேயே ஜாதி எதிர்ப்பை சொல்லும் படம். படத்தின் தொடக்கத்தில் போடப்படும் மேற்கோள் "ஜாதியும் மதமும் மனித வாழ்விற்கே விரோதமானது". இதுவே மிகப்பெரிய பரவசத்தினை உண்டாக்கியது. வழக்கமாக புகைபிடிப்பது புற்று நோயை உண்டாக்கும், மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது என்ற எச்சரிக்கையும், இப்படத்தில் விலங்குகள் பறவைகள் துன்புறுத்தப்படவில்லை என்ற வாசகங்களுமே எல்லாப் படங்களின் தொடக்கத்தில் காட்டப்படும். அதனுடன் ஜாதி, மத எதிர்ப்பையும் ஒரு எச்சரிக்கையாக வைத்திருப்பது பெருஞ்சிறப்பாம். இன்னும் ஓர் சிறப்பு, இத்திரைப்படம் வணிக ரீதியிலும் வெற்றியை ஈட்டியுள்ளது மாரி செல்வராஜ் போன்ற படைப்பாளிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாகும். இவரைப் போன்ற இன்னும் பல இயக்குநர்களுக்கு கதவைத் திறந்து விடும். 


எப்படி படத்தின் தொடக்கத்தில் போடப்படும் எச்சரிக்கையைக் கண்டு குடிப்பவர்களும் புகைப்பவர்களும் திருந்தப் போவதில்லையோ அது போலவே இந்த ஜாதி மத எதிர்ப்பைச் சொல்லும் மேற்கோளைக் கண்டு ஜாதிமதவெறியர்களும் திருந்தப் போவதில்லை. எனினும் ஒரு பண்பட்ட சமத்துவ சமுதாயத்தின் அடையாளமாக குடி/புகை எதிர்ப்பு இருப்பதைப் போலவே இதைப் போன்ற ஜாதிமத எதிர்ப்பும் இருக்க வேண்டும். இது போல் எல்லாத் திரைப்படத்தின் தொடக்கத்திலும் போட வேண்டும். 

நெறியாள்கை, காட்சிப் படிமங்கள், இசை இம்மாதிரியான தொழில்நுட்பம், நேர்த்திகள் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. படம் பார்ப்பதால் ஏற்படும் உணர்வுகள், நினைவுகள் பற்றி மட்டும் எழுத விரும்புகிறேன். இந்தப் படத்தில் எந்த ஜாதியின் பெயரும் குறிப்பிடாமல் ஜாதியின் புறக்கணிப்பு அது நிகழ்த்தும் வன்முறைகளப் பற்றி ஜாதியத்தின் கொடுமை தெரியாதவர்களுக்கு உணர்த்த முயற்சிக்கிறது. ஜாதியின் கொடுமை தெரியாதவர்கள் யார் ? ஜாதியெல்லாம் இப்போது இல்லை என்பவர்கள், அல்லது ஜாதிக் கொடுமையை நிகழ்த்துகிறவர்கள், அதைக் கண்டு கொள்ளாதவர்கள், அதை மறைமுகமாக அல்லது நேரடியாக ஆதரிப்பவர்கள் அல்லது ஜாதி சமூகத்தில் நிகழ்த்தும் வன்முறைகள், புறக்கணிப்புகள் போன்றவற்றைக் கண்டு கொள்ளாமல் அது தரும் சலுகைகளை அனுபவிப்பவர்கள் என ஜாதியத்தை எதிர்க்காதவர்களுடன் உரையாட முயற்சி செய்கிறான் பரியேறும் பெருமாள் என்ற தலித்.(தலித் என்றால் ஜாதி அன்று. ஜாதியத்தை எதிர்க்கும் ஒரு நிலைப்பாடு).

ஜாதி எங்கு இருக்கிறது ? சரியாகக் கேட்டால் ஜாதி எங்குதான் இல்லாமல் இருக்கிறது ? எல்லா இடத்திலும் இருக்கிறது. ஜாதியை ஆதரிப்பவனிடம் மட்டுமல்ல ஜாதியை எதிர்ப்பவனிடம் கூட ஒளிந்து கொண்டிருக்கிறது. நமக்கே தெரியாமல் நம்மிடம் இருப்பதுதான் ஜாதி. நீங்களே மறந்தாலும் வேறு யாரோ ஒருவர் வந்து உங்களிடம் நினைவூட்டுவார்.10 வயதுச் சிறுவனிடமிருந்து நாளை சாகப் போகின்ற கிழவன் வரை ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும் பரவிக் கிடக்கிறது. இப்படி இருக்கும்போது ஜாதியத்திற்கு எதிரான படத்தை நெஞ்சார வரவேற்க வேண்டியது நமது கடமை.

இதில் பரியனாக நடித்த கதிரின் முதல் படம் மதயானைக் கூட்டம். அப்படம் ஒரு ஜாதிப்பெருமையை போற்றூம் படம் என்று கேட்டிருக்கிறேன். அந்தப் படத்தின் இயக்குநர் பிறன்மலைக் கள்ளர் வாழ்வியலைக் காட்டியவர் என்று ஜாதியவாதிகள் ஃபேஸ்புக்கில் பெருமிதமாகப் பதிவு செய்திருந்தனர்.

பரியேறும் பெருமாள்

படம் எனக்கு ஓரளவுக்குத்தான் பிடித்திருந்தது. ஜாதி என்ற சமூக மனநோய்க்கு எதிராக இன்னும் காரமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்த எந்த ஜாதிவெறியனும், அல்லது ஜாதியை உள்ளுக்குள்ளே ஆதரிப்பவனும் குற்ற உணர்வு கொள்ள மாட்டான். தமிழ்த்திரையுலகின் வணிகத்திரைப்படங்களுக்குரிய எல்லைகளை பரியேறும் பெருமாள் தாண்டாமலேயே நின்றுவிட்டான். ஜாதியை வாழ்க்கையாகக் கொண்டவர்கள் இப்படத்தில் காட்டப்படுவதைப் போல இருக்க மாட்டார்கள். இரண்டு மடங்கு கொடியவர்களாகவும் தான் தீண்டத்தாகாதவர்களாகக் கருதுகிறவர்களிடம் அருவருப்பு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

படம் தொடங்கும்போது பரியனும் அவனது நண்பர்களும் ஒரு கலங்கிய சிறிய குட்டையில் ஊர்ப் பெருமையைப் பாடிக் கொண்டே தமது வேட்டை நாய்களைக் கழுவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் புளியங்குளம் என்ற அவர்களது ஊர் அவர்கள் பாடியதைப் போல் இல்லாமல் பொட்டல்காடாக இருக்கிறது. அப்போது இன்னொரு வேட்டைக் குழுவினர் வருகின்றனர். பரியன் தாங்கள் வேட்டையாடுவது அவர்களுக்கு ஏற்கெனவே பிடிக்காமல் இருப்பதாலும் அவர்கள் வருவதாலும் அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று சொல்லி அவனது நண்பர்களிடம் வற்புறுத்தி அனைவரும் வேண்டா வெறுப்பாகக் கிளம்புகின்றனர். இன்னும் எத்தனை நாளுக்கு இவர்களிடம் பயந்து போவது என்றும், அவங்ககிட்ட வயலும் வரப்பும் நம்மகிட்ட வாயும் வயிறும் இருப்பதாலும், உங்கப்பனும் ஆத்தாளும் அவங்க தோட்டத்துக்கு உழவுக்கு போவதை நிறுத்தும் வரையில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் பேசிக் கொள்கிறார்கள். 

அங்கே வரும் இன்னொரு வேட்டைக் குழு எங்க வந்து எவ்ளவ் திமிரா நாய வச்சு வேட்டையாட்றானுங்க பாரேன். இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டணும் என்று சொல்லியவாரே அவர்கள் பயன்படுத்திய குட்டையில் அனைவரும் சிறுநீர் கழிக்கின்றனர். அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு சென்ற பிறகு பரியன் தனது ""கருப்பி" (நாய்)யைக் காணவில்லை என்று உணர்கிறான். இன்னொருவன் அந்தப் பயலுக மேலதான் சந்தேகமாக இருக்கு என்று கூறுகிறான். அப்போது ரயில் சத்தம் கேட்க அனைவரும் ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே தண்டவாளத்தில் கருப்பியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பரியன் அதை நெருங்குமுன் ரயில் வந்து கருப்பியை சிதைத்து விட்டுப் போகிறது. ஜாதியின் வன்மத்தைக் காட்டும் ஒரு காட்சி இது. கருப்பியைப் பாடும் பாடலில் வரும் ஒரு வரி. உன்னைக் கொன்னது யாருன்னு எனக்குத் தெரியும். அங்க செத்தது யாருன்னு அவனுக்கு மட்டும்தா தெரியும். 


கருப்பி கொலையுண்டபோது
பரியேறும் பெருமாள் என்பது வினைச்சொல் என்று நினைத்திருந்தேன். அது வெறும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயராக மட்டும் இருந்தது ஏமாற்றமாக இருந்தது. பரியேறும் பெருமாள் BABAL மேல ஒரு கோடு என்று திரைப்படத்தில் இடையிடையே சொல்கிறார்கள். 13 வருடங்களுக்கு முந்தைய (2005) கல்லூரிக் காலத்தில் நடப்பது போல் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. திருநெல்வேலி நகரில் சட்டக் கல்லூரிக்கு படிக்க வரும் பரியேறும் பெருமாள் தான் படித்து விட்டு டாக்டராக விரும்புகிறேன் என்று சொல்கிறான். BABAL படித்தால் டாக்டராக முடியாது என்று கல்லூரியின் முதல்வர் கூற, நான் டாக்டர். அம்பேத்கர் மாதிரி ஆகணும்னு சொன்னேன் சார் என்று சொல்கிறான். 
இப்படி அண்ணலின் பெயரைச் சொல்லுமளவிற்கு தெளிவானவனாக இருப்பவன் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவனாக இருக்க வேண்டும். ஆனால் பரியன் அப்படியொன்றும் ஆர்வமுடையவனாகக் காட்டப்படவில்லை. ஆங்கிலம் தெரியாமல் சிரமப்படுவது எல்லா தமிழ் வழி மாணவர்களுக்கும் ஏற்படும் இன்னலே ஆகும். வகுப்பில் பரியனும் ஆனந்தும் பேராசிரியர் வகுப்பெடுக்கும் போது குறிப்புகளை எழுதத் தெரியாமல் வெறும் முட்டையாக போட்டுத்தள்ளி மாட்டுகிறார்கள்.



பரியனுக்கு ஆங்கிலமே வராது. காப்பியடித்துத்தான் தேறியதாகவும் கூறுகிறான். அப்படி இருப்பவன் ஜோ இவனுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து இவன் தேர்வில் தேறுவது எல்லாம் நம்ப முடியாதவகையில் இருக்கிறது. கல்லூரிக் காட்சிகள் எல்லாமே மற்ற படங்களில் வருவது போல்தான் இருந்தது. 

ஜோவின் பெரியப்பா பையனாக வரும் ஒருவனும் இவர்களது வகுப்பிலேயே இருக்கிறான். அவன் இவர்களிருவரும் பழகுவதை காணாமல் இருந்து விட்டு திடீரென்று இடையில் மட்டும் வம்பு செய்கிறான். பரியனைக் கொல்ல வேண்டும் என்றும் ஜோவின் அப்பாவிடம் கூறுகிறான். இன்னொரு காட்சியில் பரியன் தேவையே இல்லாமல் வகுப்பில் இவனுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு சண்டையை இழுக்கிறான். எதற்காக என்பதே புரியவில்லை. 

ஜோ தன்னுடைய சொந்த அக்காவின் திருமணத்திற்கு வகுப்பில் யாரையுமே அழைக்காமல் பரியனை மட்டுமே அழைக்கிறாள். அங்கே இவன் மீது ஜாதி சமூகத்தின் தாக்குதல் நிகழ்கிறது. அதனால் நொறுங்கும் பரியன் ஜோவிடமிருந்து விலகியே செல்கிறான். பரியன் ஜோவின் மீது காதல் இல்லை என்று சொல்லாமல் சொல்லி விடுகிறான். ஜோவும் இவனைக் காதலிப்பதாக உறுதியாகக் காட்டப்படவில்லை. இதை ஒரு குழப்பமாகவே விட்டிருப்பதும் இனிமையாக இருக்கிறது. 

படத்தில் பிடித்தவை

இரண்டு பேர் படத்தின் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். ஒருவர் குலதெய்வத்துக்குச் செய்வதாக நம்பிக் கொண்டு ஆணவக் கொலை செய்யும் முதியவர். ஜாதிவெறிக் கொலை செய்பவர்கள் கொம்பு வைத்துக் கொண்டு இருப்பவர்கள் அல்ல. நம்மிடையே வாழ்ந்து வரும் சராசரியான மனிதர்கள்தான் என்பதைக் காட்டும் சித்தரிப்பு. அதே நேரம் அவர்கள் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனமான எண்ணமும் மூட நம்பிக்கையும், வறட்டு தம்பட்டமும் உடையவர்கள் என்பதையும் எளிமையாகக் காட்டுகிறார்.



இன்னொருவர் பரியனின் அப்பாவாக வருகிறவர். இவரைப் பற்றி நினைத்தால் அழுகை வராத குறைதான். மிகவும். இவர் பேசும் காட்சிகள். வருகின்ற காட்சிகள். அழுகையை வரவைக்கும்.

நான் யார் என்ற பாடலில் பட்டியலினத்தவர் மீதான ஜாதிய சமூகத்தின் சமீப கால வன்முறை ஆணவக் கொலைகள் நினைவுபடுத்தப்படுகின்றன. இது தவிர படத்தில் ஆங்காங்கே நீங்க நாங்க என்று வேறுபாடு காட்டும் சமூகத்தினை நோக்கியும் வசனங்கள் வருகின்றன.


பிடிக்காதவை

எனக்கு அறவே பிடிக்காத இடம் பரியன் பகடிவதை (Ragging) செய்வதாகக் காட்டும் இடம்தான். பகடி வதை செய்பவன் என்னைப் பொறுத்தவரை ஒரு கொடிய மனநோயாளிதான். ஜாதி எதிர்ப்பை பதிய வைக்க நினைத்த இயக்குநர் இக்காட்சியை வைத்தது என்னைப் பொறுத்த வரையில் மன்னிக்கவே முடியாது. Ragging என்பது கல்லூரி மாணவர்கள் ஜாலிக்காக செய்வது என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், அதையெல்லாம் மனித உரிமை மீறலாகக் கருத முடியாது என்று சமூக நீதி பேசும் புரட்சிக்காரர்களுக்கே உறைக்க வில்லை என்றால் ஜாதித் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டும் ஜாதியைத் தவறென்று ஒத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம். ஏன் பரியன் ஒரு பெண்ணை கேலி (Eve Teasing) செய்வது போல் ஒரு காட்சியும், பாடலும் இல்லை. அதையும் பல கதாநாயகர்கள் செய்வது போல் செய்திருக்கலாமே? செய்திருந்தால் மொத்தப் படத்திற்கான மரியாதையும் கெட்டிருக்கும். அது போன்ற ஒரு செயலாகவே Ragging கருதப்பட வேண்டும். Ragging, Eve Teasing ஆகிய இரண்டுமே மனிதநேயத்திற்கு எதிரானது. 

பரியனைக் கொலை செய்ய முற்படும் ஜோவின் அப்பாவிடம் பரியன் சொல்வது, என்னய்யா பெரிய கௌரவம், உங்களின் ஜாதிவெறியை நான் தான் ஜோவிடம் சொல்லாமல் மறைத்து உங்கள் மரியாதையைக் காப்பாற்றினேன். இப்படிச் சொல்வதன் மூலம் ஜோ தனது குடும்பத்தினரின் ஜாதி வெறியைப் பற்றித் தெரியாத அப்பாவியாகவே இருப்பது போலவும், இப்படி ஜாதியத்திற்கு எதிரான ஒரு வசனம் வெறும் திரைப்படத்தின் கதையில் வருவது போலவும் சுருங்கி விடுகிறது. 



ஆக மொத்தத்தில் ஜாதியத்திற்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் வெற்றியடைந்தது மகிழ்ச்சி. ஆனால் இந்தத் திரைப்படம் நிறையப் பேருக்குப் பிடித்திருப்பதால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. நீங்கதான் சார் மாறணும் என்று பரியன் கேட்பதாக முடியும் இப்படம், ஜாதியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு எந்த உறுத்தலையும் தரவில்லை என்பது கவலைப்பட வேண்டிய செய்தி. 

இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா. ரஞ்சித் ஆகிய இருவருக்கும் அன்புகளும் வாழ்த்துகளும்



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்