சகாவு - தோழர் - Comrade

சகாவு (தோழர்) என்ற மலையாளப்படம் பார்த்தேன். ஒரு பொதுவுடமைவாதியின் படம். இல்லை இரண்டு பொதுவுடமைவாதிகள் பற்றிய கதை. பொதுவுடமை கம்யூனிச படம் என்றதுமே படம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. ஆனால் நிவின் பாலியின் படம் என்றதும் ஒரு தயக்கம் ஏற்பட்டது. இதுவே துல்கர் சல்மான் என்றால் அந்தத் தயக்கம் வந்திருக்காது. இந்தப் படம் பொதுவுடமை பற்றிய படம் என்றாலும் பொதுவுடமை என்ற உலகின் மிக முக்கிய சித்தாந்தத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், பல சிறு கட்சிகளையும் கொண்டிருக்கும் சித்தாந்தம்தான் பொதுவுடமை. 

இந்தியாவில் தெற்கே கேரளத்திலும், வடக்கே (கிழக்கு?) மேற்கு வங்கத்திலும் பொதுவுடமைவாதிகள் அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதன் தாக்கம் அந்த மக்களிடமும் இருக்கிறது. ஜாதிக்கொடுமை மிகுந்த கேரளம் 60 வருடங்களில் கல்வியில் இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்றால் அது கம்யூனிசவாதிகளின் ஆட்சியின் விளைவினால்தான். இன்று கூட ஏறக்குறைய ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்துவா ஃபாசிசவாதிகளிடம் வீழ்ந்து விட்ட போது கேரளா இன்னும் மண்டியிடாமல் இருக்கிறது, கம்யூனிச தலைமையில் இந்துத்துவாவை எதிர்த்து நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக அங்கே இரண்டு மதவாதிகளின் வளர்ச்சியும் இருக்கிறது. இந்த நிலையில் கம்யூனிசம் பற்றிய மதிப்பீடுகளை அதிகரிக்கும் படங்கள் வர வேண்டும். 

ஆனால் இது போன்ற திரைப்படங்களால் என்ன பெரிய மாற்றம் இளைய தலைமுறையிடம் வரும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இத்திரைப்படத்தினை நிவின் பாலி என்ற ப்ரேமத்தின் நாயகன் என்ற புகழ் வெளிச்சத்திலேயே பார்ப்பார்கள். ப்ரேமம் போன்ற விடலைகளின் அற்ப உணர்ச்சியை சொறிந்து விட்ட படத்தில் தன்னைக் கண்டு மயங்கிய இளசுகள் இதை ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை. அய்யோ கம்யூனிச படமா என்று அஞ்சுவார்கள் (கம்யூனிசம் என்றாலே சலிப்புதான்). ஏனென்றால் இது உண்மையில் நிவின் பாலியின் நாயகத்தனத்தை போற்றுவது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இக்கதை இரண்டு பொதுவுடமைவாதிகளைப் பற்றியதாகும். இரண்டு வேடத்திலும் நிவின் பாலியே நடித்துள்ளார். சகாவு கிருஷ்ண குமார் என்ற கிச்சு, சகாவு கிருஷ்ணன். சகாவு கிச்சு அல்லது கிருஷ்ண குமார் என்ற, மாணவர் இயக்கத்தில் (கேரள மாணவர் இயக்கம்- SFK) மாவட்ட பொறுப்பில் இருக்கும் சகாவு (தோழர் அல்லது Comrade) கிருஷ்ண குமார் என்கிற கிச்சுவிடமிருந்து படம் தொடங்குகிறது. 

அவன் வீட்டில் அம்மாவிடம் சினந்து கொண்டு உணவை அருந்தாமல் வெளியில் சென்று உணவை உண்கிறான், அவன் நண்பன் அழைக்கும் போது அவனுக்கும் சேர்ந்து இறைச்சி வாங்க வேண்டும் என்று அவனிடம் தான் உண்டு முடித்து விட்டதாகவும், தானே வாங்கி வருவதாகக் கூறுகிறான். தான் இறைச்சி உண்டதை நண்பன் மோப்பம் பிடித்து அறியாமல் இருக்க சௌகாரம் (soap) கொண்டு கழுவுகிறான். வெறும் தோசையை வாங்கி வரும் கிச்சுவிடம் அவனது நண்பன் ஒரு ஹாம்லெட் கூட வாங்க முடியாதா என்று கேட்கிறான். எல்லாம் தீர்ந்து விட்டது என்று பொய் சொல்கிறான். அவனுக்கு தங்க இடம் கொடுக்கும் அந்த நண்பனுடனான உரையாடலுடனேதான படத்தின் ஆரம்பக் காட்சிகள் கழிகின்றன. அதில் அவன் எப்பேர்ப்பட்ட பொய்யனாகவும், அயோக்கியத்தனமாகவும் இருக்கிறான் என்பதை நகைச்சுவையாகக் காட்டுகிறார்கள். அவன் தற்போது இருக்கும் பதவியிலிருந்து படிப்படியாக முன்னேறும் திட்டம் வைத்திருக்கிறான். அதில் எந்த வித நேர்மையும் இல்லாமல் அடுத்தவனை ஏமாற்றுவது, கையூட்டு வாங்குவது, போட்டுக் கொடுப்பது, மக்களிடம் ஏமாற்றி நல்ல பெயர் வாங்குவது எப்படியாவது அமைச்சராவது என்ற வரையில் இருக்கிறது. 

அதில் முதல் கட்டமாக அரசியலில் இருக்கும் அவனுடைய உற்ற நண்பனையே அடியாட்களை வைத்து அடித்து விரட்டி அரசியலில் நகர்வதைப் போல ஒரு திட்டத்தைச் சொல்கிறான். இது போல் பல பத்து குறிக்கோள்களை வைத்து ஒவ்வொரு இடங்களிலும் அவனது நண்பனிடம் சொல்கிறான். (மலையாளப் படங்களில் இது போன்ற ஒரு நண்பன் பாத்திரத்தை வைத்து அவனை பேக்காகவும், அய்யே என்று வாயை அழுத்தி அதிர்ச்சியடையும் வகையில் நாயகனைப் பேச வைத்தும் நகைச்சுவைக் காட்சிகளை வெற்றிகரமாகவே படைக்கிறார்கள்). பிறகு அவர்கள் குருகிக்கொடை கொடுப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.  அங்கே தனது கட்சியின் பெரிய தலைவர்கள் வந்து செல்வதையும் பார்க்கிறான் கிச்சு. 

கிச்சுவின் குருதியை வேண்டியிருக்கும் நோயாளியுடன் வந்திருப்பவரிடம் பேசி அவரிடமிருந்தே கிச்சுவும் அவனது நண்பனும் உணவை உண்கிறார்கள், பழச்சாற்றை அருந்துகிறார்கள். காவல்துறையினர் வந்து மருத்துவரிடம் அந்நோயாளியின் உடல் நிலையை அறிந்து செல்கின்றனர். அவனுடைய கட்சியின் ஒரு தலைவரிடமிருந்து தான் குருதிக் கொடை அளிக்க வேண்டிய நோயாளி ஒரு (தமது கட்சிக்கு வேண்டப்பட்ட) சகாவு என்று சொல்கிறார். எனவே அங்கே இருந்து குருதியை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அப்போது அங்கே தன்னுடையை பள்ளித்தோழி ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் காண்கிறான். அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அவள் விடுப்பில் இருக்கும் அவள் அந்த படுக்கையில் இருக்கும் (கிச்சுவின் குருதியை வாங்கப் போகும்) சகாவைக் காண வந்ததாகக் கூறுகிறாள். யார் அந்த சகாவு என்று கேட்கும் கிச்சு, அவர்தான் அவனது தோழியான அந்த ஐஸ்வர்யாவை படிக்க வைத்தவர் என்று அறிகிறான். அவருக்குக் குருதிக் கொடை அளிப்பதால் பல பேருடைய அன்பும், நன்றியும், வேண்டுதலும் கிச்சுவுக்கு உரித்தாகும் என்று கூறுகிறாள். தனிப்பட்ட முறையில் அவனுக்கு ஒரு பெரிய நன்றியையும் நவில்கிறாள் ஐஸ்வர்யா. 

அங்கே தனக்கு வேலை வாங்கித் தந்தேன் என்பதற்காகாக நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு எளியவரிடம் பணத்தை வற்புறுத்திப் பெறுகிறான். அரசியலில் இருப்பவர்கள் எத்தனை கீழ்த்தரமாக இருப்பார்கள் என்பதை கிச்சுவின் பாத்திரம் மூலமாகப் புரிய வைக்கிறார்கள். பின்பு படுக்கையிலிருக்கும் சகாவு உடன் இருப்பவர் வந்து சகாவுவின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அவர் தனது இளமைக்காலத்தில் கிச்சுவைப் போலவே இருந்ததாகவும் கூறுகிறார். கம்யூனிசக் கட்சியை வளர்ப்பதற்காக வந்த ஒரு கொள்கைப் பற்றுள்ள இளைஞர் என்கிறார். 


சகாவு கிருஷ்ணன்.

சகாவு கிருஷ்ணன் ஒரு அரசியல்வாதி. அரசியல்வாதி என்பதைக்காட்டிலும் வயதைத் தாண்டிய பக்குவமுடைய, கொள்கைப் பற்றுடைய சமூக சேவகர், மக்கள் தொண்டர். தான் முதலில் பீர்மேட்டில் சகாவைக் கண்டதாகக் கூறுகிறார். அங்கே தான் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியதாகக் கூறுகிறார். இங்கே சகாவு கிருஷ்ணன் அறிமுகம் தமிழ் தெலுங்கு படங்களின் மாஸ் நாயகர்களின் அறிமுகத்தைப் போல நிகழ்கிறது. அந்த உதவி ஆய்வாளர் (கிச்சுவிடம் கதை சொல்பவர்) ஒருவரை அடித்துத் தள்ளுகிறார். அவர் வந்து சகாவின் காலடியில் உருண்டு விழுகிறார். அவரை எழுப்புகிறார் சகாவு, இக்காட்சியில் சகாவை பின்புறமிர்ந்து மேல் வரை காட்டுகிறார். கைமுட்டியை முறுக்குவதாகக் காட்டுகிறார்கள். என்னவோ பட்டையைக் கிளப்பப் போகிறார் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த அடிவாங்கியவரை வண்டியில் ஏற்றிக் காவல்துறை செல்கிறது. சகாவு பெட்டிக் கடையில் சோடாவை வாங்கிக் குடித்து விட்டுச் செல்கிறார். 

இது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் என்பவனை பற்றிய ஒரு சித்திரத்தை இது போன்ற காட்சிகள் மூலமாக என்ன பதியவைக்க முடியும். எந்த மொழித் திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் சினம் கொண்ட இளைஞன் கதையின் நாயகன், தான் வந்த இடத்தில் நடக்கும் அராஜகத்தை எதிர்த்துப் போராடுவான். அப்படியிருக்க உலகில் எங்கு அராஜகம் நடந்தாலும் அதைக் கண்டு சினம் கொள்ளும் ஒரு கம்யூனிச பாத்திர அறிமுகம் இப்படி ஒரு மௌனமாக நிகழ்ந்திருக்கிறது. பின்பு அங்கே சக தோழர்களுடன் அறிமுகமாகிறார். மொத்தம் ஐவர் மட்டுமே அங்கே கட்சியாக இருக்கிறார்கள். தொழிலாளிகளுக்கான சங்கம் அங்கே இல்லை, யாரும் இணைவதில்லை என்கிறார்கள் மற்ற தோழர்கள். தொழிலாளர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் அதுதான் முக்கியமானது என்று தோழர்களுக்கு விளக்குகிறான் கிருஷ்ணன். மற்ற ஐந்து தோழர்களும் கிருஷ்ணனை விட பத்து பதினைந்து வருடங்கள் மூத்தவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல கட்சியைப் பற்றியும் கம்யூனிசத்தைப் பற்றியும் சொல்கிறான் கிருஷ்ணன். (அதாவது பாரவையாளர்களுக்குச் சொல்கிறான்)

பின்பு அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் சென்று கேட்கிறார்கள். யாரும் இவர்களுடன் இணைய முதலில் மறுக்கிறார்கள். பின்பு இணைகிறார்கள். இரவில் அவர்கள் வீடுகளின் முன்பு சென்று தீப்பந்த வெளிச்சத்தில் அவர்களது உரிமைகள் பற்றியும், அரசாங்கத்தில் அறிக்கைகள் பற்றியும் போராடுவதன் அவசியம் குறித்தும் உரையாற்றுகிறான். அவர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். காவல்துறையால் கைதாகிறான். அடிவாங்குகிறான். கட்சியால் விடுவிக்கப்படுகிறான் பின்பும் போராடுகிறான், தொழிலாளிகளின் நியாயமான கூலியை போராடிப் பெற்றுத் தருகிறான். தொழிலாளர் சங்கத்தைக் கட்டுகிறான். இவை திரைப்பட பாணியில் படமாக்கப்பட்டுள்ளதை கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் போராட்டம் இன்னும் இன்னல் மிக்கது, நீண்டது. வெறும் உண்டியல் குலுக்கிகள், உண்ணா நோன்பு இருப்பவர்கள் என்று புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அது தெரியாது. இதைப் போன்றே விவசாயத் தொழிலாளர்களுக்கும் வரவேண்டிய நியாயமான கூலியைப் போராட்டங்களின் மூலம் பெற்றுக் கொடுக்கிறான். ஒரு இடத்தில் பாண்டிக்கார ஆட்கள் என்ற இனவெறிச் சொல்லும் வருகிறது சகாவின் வாயிலிருந்தே.

இந்த இடத்தில் ஒரு காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிலவுடமையாளரான அம்பட்டரிடம் பேசிவிட்டு அவர் வீட்டிலிருந்து தோழர்களுடன் வெளியேறுகிறான் கிருஷ்ணன். அப்போது அம்பட்டர் கேட்கிறார்

உன் பெயரென்ன ?

கிருஷ்ணன்.

கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டும்தானா ? பேருக்கு ஒரு வாலில்லையா ? கிருஷ்ணன் நம்பூதிரி, கிருஷ்ணன் நாயர் என்றெல்லாம் இல்லையா ? 

என்னுடைய ஜாதியயும் நம்பிக்கையயும் அறிய வேண்டுமென்றால் அது என்னுடைய பெயரின் வாலில் இல்லை. என்னுடைய பேரின் முன்னர் உள்ளது. தோழர் (சகாவு) !  சகாவு கிருஷ்ணன் ! 

இந்தக் காட்சி ஜாதியை எதிர்ப்பவர் அனைவராலும் கொண்டாடப்படும். 

சகாவின் தொல்லை தாங்காமல் அம்பட்டர், அந்த உதவி ஆய்வாளரை ஏவி அவனை கொல்வதற்கு முயல்கிறார். ஆனால் அவர் சகாவின் நண்பராகி விடுகிறார். அவர்தான் கிச்சுவிடம் இதுவரையான கதையைச் சொல்கிறார். அப்போது அங்கே வழக்கறிஞர் ஒருவரும், இன்னும் சில தோழர்களும் வருகிறார்கள். அங்கே வெளியே காத்திருக்கும் ஆட்களிடமும் அந்த கதை சொல்லும் ஆளிடமும் இது வரை இயங்காமல் இருந்த டீ எஸ்டேட் மீண்டும் திறக்கப்படப் போகிறது என்ற நற்செய்தியைச் சொல்கிறார். அங்கிருப்பவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். அதற்குக் காரணமான சகாவு அங்கே உள்ளே இருக்கிறார் என்று சொல்கிறார் அந்தக் காவலர். இதையெல்லாம் பார்க்கும் கிச்சு தன்னை ஒரு சகாவு போல உணர்கிறான். 

பின்பு சகாவு கிருஷ்ணனின் மனைவியும் மகளையும் பார்க்கிறான். அவர்களும் அங்கேதான் இருக்கிறார்கள். அங்கே சகாவுவின் திருமணம் பற்றி அறிகிறான். அது ஒரு நயமான கதை. லஷ்மி அங்கே தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். அங்கே கட்சியை வளர்க்க வந்த கிருஷ்ணனுடன் போராடுகிறாள் லக்ஷ்மி. அவள் போராடுவதால் அவளுக்கு திருமணம் தள்ளிப் போவதாக அவளது பெற்றோர் அவளை அதிலிருந்து தடுக்கின்றனர். இவள் போராட்டத்தில் ஈடுபடுவதால் யாரும் திருமணம் செய்ய மறுத்தால் தானே திருமணம் செய்வதாக கிருஷ்ணன் அப்போதைக்கு சொல்லி வைக்கிறான். ஆனால் ஒரு வருடம் கழித்து அதை மீண்டும் ஒரு தோழர் நினைவூட்ட பின்னர் சம்மதிக்கிறான். ஆனால் லக்ஷ்மி அவன் விரும்பாவிட்டால் திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணன் திருமணம் செய்ய சம்மதம் என்கிறான். திருமணத்தன்று வெளியே ஒரு பிரச்சனைக்காக முன்னிரவு சென்றவன் திருமண நேரம் கடந்தும் வரவில்லை. சென்ற இடத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு பிரச்சனை தீர்ந்தவுடன் திரும்பச் செல்ல எத்தனிக்கிறான். அப்போது அவனுடன் இருக்கும் தோழர் இனி வேறொன்றும் முக்கியமான வேலை இல்லையே என்று கேட்கிறார். அப்போதுதான் அப்போது அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய நேரம் என உறைக்கிறது. சகாவுக்கள் இப்படி தன்னை மறந்து சமூகத்திற்காக உழைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 

பின்பு திருமணம் செய்யுமிடத்திற்குச் செல்ல அங்கே அனைவரும் சென்று விட்டிருக்கின்றனர். லக்ஷ்மி அவனைப் புன்னகையுடன் வரவேற்கிறாள். தான் ஏமாற்றி ஓடிவிட்டதாக நினைத்துக் கொண்டாயா என்கிறான் கிருஷ்ணன். லக்ஷ்மி தான் அப்படி நினைத்திருந்தால் இவ்வளவு நேரம் அவனுக்காக காத்திருக்க மாட்டேன் என்கிறாள். பின்பு அங்கே கட்டியிருக்கும் சிவப்புத் துணியொன்றை எடுத்து தாலியாகக் கட்டுகிறான் கிருஷ்ணன். இப்படியாகக் கவிதையாக இருக்கிறது அவர்களது திருமணக்கதை. 

இப்படிப்பட்ட சகாவுவின் மகளும் ஒரு அரசியல் ஊட்டப்பட்டதாகவே வளர்கிறாள். அவள் விபச்சாரம் செய்த பெண்களை காவல்துறையின் பிடியிலிருந்து மறுவாழ்வுக்காக மீட்கிறாள். அதில் தனது பாலய காலத் தோழியும் இருந்தது கண்டு அறிகிறாள். அவளது குடும்பம் அவர்கள் பகுதியிலிருந்த டீ எஸ்டேட் மூடப்பட்டதால் பிழைக்க வழியின்றி பலரும் வெளியேறினர். பட்டின் காரணமாக அவள் விபச்சாரம் செய்ய நேர்ந்ததை அவளது தந்தை சகாவு கிருஷ்ணனிடமும், அவரது மகளிடமும் சொல்கிறாள். அதனால் கிருஷ்ணன் அங்கே சென்று பார்க்கிறார். பல வருடங்களுக்கு முன்பு ஒருவர் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக கிருஷ்ணனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். அவரிடம் சென்று அந்த எஸ்டேட்டை வாங்கி நடத்த முடியுமா என்று கேட்கிறார். இதனால் பல பேர் வாழ்வு பெறுவார்கள் என்பதற்காக அவர் சம்மதிக்கிறார். ஆனால் அப்பகுதியில் ரிசார்ட் வைத்திருக்கும் டோன் என்பவன் அதற்கு இடையூறு செய்கிறான். அவனுடன் நடந்த சண்டையில்தான் கத்திக்குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சகாவு கிருஷ்ணன். 

இதையெல்லாம் கேட்கும் கிச்சு, தனது நண்பனையே அடியாள்களைக் கொண்டு தாக்கும் திட்டத்தைக் கைவிடுகிறான். தனது அம்மாவிடம் தான் உணவருந்த விரைவில் வருவதாகவும் அலைபேசியில் கிச்சு சொல்கிறான். அவரைக் கத்தியால் குத்திய டோனியை எதிர்த்து போராடச் செல்கிறான். படம் முடிகிறது. ஒரு சகாவு தொடங்கிய போராட்டத்தை இன்னொரு சகாவு தொடர்வான் என்று முடிக்கிறார்கள். மற்ற திரைப்படங்களில் சித்தரிப்பதைப் போன்றே உடை கசங்காத, ஒப்பனை மிக்க நாயகத்தனமான பாத்திரத்தில் ஒரு தோழனை, பொதுவுடமைவாதியை சித்தரித்திருப்பது அயற்சியை ஏற்படுத்துகிறது என்ற போதிலும் ஓரளவு நிறைவான படமாக இருக்கிறது சகாவு.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்