தமிழகத்தில் மராட்டிய பாணியில் பரவும் வட இந்தியர் வெறுப்பு மனோபாவம் !!

ற்போது தமிழகத்தில் வட இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. உதாரணமாக தற்போது நடந்த என்கவுன்டர் என்ற மோதல் கொலையின் பின்னால் அதற்குக் கிடைத்த பரவலான வரவேற்பு. இந்த கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் தமிழ்திரைப்பட நாயகத்தனமான ஒரு மனோபாவம் அதாவது தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் சட்டம், மனித உரிமை, முறையான விசாரணை இது போன்று நேரத்தை செல்வழிக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்ற பாணியிலானவை. இன்னொரு காரணம் என்னவெனில் அவர்கள் வட இந்தியர்கள் என்பது மட்டுமே. தற்போது தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகமாகி வருகிறது.

வட இந்தியாவிலிருந்து அதிகமானவர்கள் இங்கு இடம்பெயர்ந்து கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமானவர்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் கட்டிட வேலைகள், சாலைகள், பாலங்கள் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களல்லாமல் கல்வி கற்க வந்தவர்கள், வேலை தேடி வந்தவர்கள், போர்வைகள் விற்பவர்கள் போன்ற வெவ்வேறு வகையிலான பொதுவாகவே அயலவர்கள் அந்நியர்களுக்கு எதிரானவர்களுக்கு இருக்கும் மனோநிலை தற்போது இந்த வட இந்தியர்களுக்கு எதிராக அதிகமாக இருக்கிறது. அங்கங்கே இவர்களால் நடத்தப்படும் சிறு சிறு குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள் வரை இவர்களுக்கு எதிரான குற்றவாளி மனப்பான்மையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் ஹிந்தியைத் தவிர வேறு மொழியை அறியாதவர்கள். தமிழகத்தில் யாருக்கும் இந்தி பெரிய அளவில் தெரியாததால் அங்கங்கே ஏற்படும் சங்கடங்கள், இடைஞ்சல்கள் என இவர்கள் மீது அனைவரும் எரிச்சலைக் காட்டுகிறார்கள். குறிப்பாக பேருந்து நடத்துனர்கள் சாதாரணமாகவே நம்மூர்களில் நடத்துனருடன் சண்டைபோடாமல் இறங்கவே வாய்ப்பிருக்காது. சில்லைறை கொடுக்கல் வாங்கலில் இருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது அல்லது நிறுத்தாமல் போவது, வேகமாக இறங்க ஏற, எல்லோரையும் உள்ள போகச்சொல்லியே வாழ்க்கை வெறுத்துப்போவது, போதாக்குறைக்கு ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணம் என ஏற்கெனவே உச்சகட்ட எரிச்சலில் இருக்கும் நடத்துனர்களுக்கு மந்தமாக எதிர்வினை புரியும் வட இந்தியர்கள், நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். மொழியும் புரியாமல் பேசவும் தெரியாமல், பல  இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இங்கிருக்கும் மலையாளிகளின் மீது பொழியப்பட்ட வெறுப்புணர்வு வாசகங்கள், தாக்கப்பட்ட அவர்களது நிறுவங்கள் என தமது கையாலாகாத்தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும் எவனோ ஒரு அப்பாவியின் மீது வீரத்தைக் காட்டும் மொன்னைகள்தான் இது போன்ற பொதுவான அடிப்படையே இல்லாத ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவனுங்க அப்படித்தான் என்ற வெறுப்பை விதைக்கிறார்கள். அது போலத்தான் வட இந்தியர்கள் என்றாலே திருடர்கள் என்ற வகையில் இதுவும் பரவுகிறது. மற்றபடி மற்றவனை பகடி செய்யும் விதத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லைதான். கோவையின் பீளமேடு பகுதியில் வசிக்கும் நைஜீரிய இளைஞர்கள் அப்பகுதி மக்கள் தம்மை இனரீதியாகக் கிண்டல் செய்து வருவதாக ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சில மாதங்களுக்கும் முன்பு தினத்தந்தியில் படித்தேன்.

இவர்கள் செய்த சில செயல்கள் இதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன, கோவையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் 3 வட இந்தியர்கள் ஒரு மாட்டுக் கன்றை புணர முயற்சி செய்திருக்கிறார்கள். அது கத்தாமல் இருக்க மண்வெட்டியின் கைப்பிடியை அதன் வாயில் விட்டு அடைக்க முயற்சி செய்ய மரண் பீதியில் அது கத்தி மாட்டுகன்றின் சொந்தக்காரர் வந்து பார்த்து பின்பு ஊர்வலமாக அம்மூவரையும் கொண்டுபோய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இன்னொரு நிகழ்வில் இரு ராஜஸ்தானிகளிடையே ஏற்பட்ட குழுச்சண்டையில், ஒருவனை அடிக்க இன்னொருவன் ஆளை நியமித்திருந்தான், அவன் குறிப்பிட்ட இடத்தில் அடிக்கப்படவேண்டியவன் வந்து கொண்டிருப்பதை தகவல் தர அடியாள் தாக்குவதாகத் திட்டம், இது சொதப்பி திரைப்படங்களில் வருவது போல் நம்மவர் ஒருவர் அவ்வழியில் வந்திருக்கிறார். அவரை தவறுதலாகத் தாக்கிவிட்டான் பின்பு அவனை நையப்புடைத்துவிட்டார்கள்.

இப்படியாகப் பல நிகழ்வுகள் அங்கங்கே. தற்போது ஒரு நிகழ்வு திருடன் எனக் கருதி பள்ளிக்கரணையில் வட இந்தியனைப் போல் தோற்றமுடைய ஒரு இளைஞனை கும்பலாகக் கூடி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், ஆனால் அவனோ மனநிலை சரியில்லாத ஆந்திராவைச் சேர்ந்தவன். இதற்கெல்லாம் என்ன செய்ய ?

முதலில் இந்த கும்பல் வன்முறையின் நோக்கம்தான் என்ன ஒருத்தன் சிக்கியவுடன் என்னவென்றே தெரியாமல் வந்து அடிப்பதுதான். அதிலும் சாலையில் ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் யார்மீது தவறு என்றெல்லாம் நின்று பேசவோ யோசிக்கவே எல்லாம் முயல்வதே இல்லை ஆ ஊ ன்னா கைவைக்க வேண்டியது. இது கொலைவரை நீள்கிறது. இதனால்தான் ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால் உயிருக்கும் அடிக்கும் பயந்தே ஓட்டுநர்கள் தப்பியோடிவிடுகிறார்கள். திருடன் என்ற ஐயத்தின் பேரில் இது போன்று கும்பலாக சேர்ந்து அடிப்பதால் பல அப்பாவிகள்தான் சாகிறார்கள். மன நிலை சரியில்லாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படிக் கும்பலாக அடிப்பதை, கொல்வதை வீடியோ எடுக்கிறார்கள் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன காட்டுமிராண்டித்தனமிது ?

சும்மாவாச்சுக்கும் இம்மாதிரி வட இந்தியர்களை வெறுப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நம் மாநிலத்திலிருந்தும் எல்லா மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் தமிழகத்தவர்கள் இருக்கிறார்கள். இதே போல் அம்மாநிலத்தவர்கள் வன்முறையில் இறங்கினால் என்னவாவது ? மலையாளிகள் ஆதிக்கம் பெருகிவிட்டது, வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பதற்காக கோபப்படுகிறவர்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் நம்மவர்கள் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி ஊரை விட்டுப் பிழைப்புத் தேடிப்போகக் காரணம் அவர்களின் தன்னலமல்ல. உலகமயம்தான் இப்படி எல்லோரையும் குடும்பத்தை விட்டு ஊரூராக அலைய வைத்துள்ளது. மேலும் அவர்கள் கொத்தடிமைகள் போல்தான் வேலை வாங்கப்படுகிறார்கள். குறைவான நேரமே உறங்குகிறார்கள். குறைவான ஊதியமே அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலையில்லாதவர்களும் உண்டு. இவர்களால்தான் பெரும்பாலான சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. போதாக்குறைக்கு திருப்பூர், சென்னை வங்கிக்கொள்ளைகளைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றப்பரம்பரை மனப்பான்மை காவல்துறைக்கும் அதிகரித்து இவர்களைத் தனியாக கணக்கெடுத்து சோதனை செய்வது என்ற நிலைவரை கொண்டு வந்து விட்டுள்ளது.

இது போன்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் மகாராஷ்ட்ர, கர்நாடக மாநிலங்களைப் போல் சகிப்புத்தன்மையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

5 கருத்துகள்:

  1. தமிழன் அணைத்து இடங்களிலும் அடி வாங்கி வாங்கி அவன் "சொம்பு" நசுங்கி அதிக நாள் ஆகிவிட்டது , உங்களை மிக மரியாதையாக "மதராசி" என வடநாட்டவர் அன்பாக அழைக்கும் போது தான் உங்களுக்கு தேசியம் என்பதின் உண்மையான அர்த்தம் புரியும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலக்கண்ணன். அவர்களைப் பழிதீர்க்க இந்த மாதிரி பஞ்சம் பிழைக்க வந்தவர்களைத் தாக்குவது எவ்வகையில் சரியாகும். கர்நாடக்த்திலோ கேரளத்திலோ நம்மவர்கள் தாக்கப்படும்போது அங்கிருக்கும் சிலர் இதே போல் சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் நம்மால் ?

      நீக்கு
  2. பெயரில்லா28/2/12 3:15 AM

    good post

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா28/2/12 3:24 AM

    இது போன்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் மகாராஷ்ட்ர, கர்நாடக மாநிலங்களைப் போல் சகிப்புத்தன்மையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடும். ,/////


    இடம் பெறட்டும். சகிப்புத்தன்மையோட இருந்து என்ன சாதிச்சிங்க.

    பதிலளிநீக்கு
  4. //good post//நன்றி

    //என்ன சாதிச்சிங்க.//
    கர்நாடகமும் மகாராஷ்டிரமும் என்ன சாதித்தன ? என்ன பிரச்சனை தீர்ந்தது ? இதனால் எதிரிகள் என்று அப்பாவிகள் இலக்கு வைக்கப்படுவதைத் தவிர வேறொன்றும் நடக்காது. இனவெறி சாதிப்பதை விட சகிப்புத்தன்மை சாதிக்கும்

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்