அமெரிக்க முகமூடி அம்பலமானது

அமெரிக்க எப்பேர்ப்பெற்ற குடிநாயக நாடு என்று அனைவருக்கும் தெரியும். ஜனநாயகமா இல்லை பணநாயகமா என்று தற்போது தெளிவாக அம்பலமாகி வருகிறது, இந்தியாவிலும் சிலர் இது போன்ற இணையத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்குக்காக கைது செய்யப்பட்டனர், ஆனால் அது அரசு என்றளவில் இல்லாமல் செல்வாக்குடைய அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தித்தான் கைது செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவிலோ அரசே முன்னின்று இந்த இழிசெயலை நடத்தியுள்ளது. தனிநபர் உரிமைகளில் சாதனை படைத்த நாடு, யாரும் விருப்பம் போலச் செயல்பட எவ்விதத் தடையும் செய்யாத நாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அப்படியான நம்பிக்கை மூட நம்பிக்கையே என்று நிரூபணமாகியுள்ளது.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல அது ஒரு வணிகம் ( USA is not a country it's a business ) என்று ஓர் சொல் உண்டு. அதுதான் எவ்வளவு உண்மை. அமெரிக்கா ஒரு மக்கள் அதிகாரமற்ற நாடு என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. அதற்குக் காரணமானவர் எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க உளவுத்துறை ஊழியர். தனது மனசாட்சி உறுத்தலின் காரணமாக இவர் வெளியிட்ட தகவல் அமெரிக்கர்களின் கண்களைத் திறந்துள்ளது.

அமெரிக்காவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக இராது. ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் அல்லது அமெரிக்க குடிமக்களல்லாத அமெரிக்க ஆதரவாளர்களுக்குத்தான் இது அதிர்ச்சியாக இருந்திருக்கும். அமெரிக்காவை எதிர்ப்பது என்றால் அமெரிக்காவின் 30 கோடிப்பேரை வெறுப்பது என்று பொருள் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம்.
எட்வர்ட் ஸ்னோடன்
அமெரிக்கா குறித்த எளிய உண்மை. அமெரிக்கா என்பது என்ன ? அம்மண்ணின் மைந்தர்களை ஐரோப்பிய வந்தேறிகள் இனக்கொலை செய்து ஆக்ரமித்துக் கொண்ட நிலம். அங்கே ஆப்ரிக்க அடிமைகளின் குருதியில்தான் வளர்ந்து நிற்கிறது வானுயர் கட்டிடங்கள். இதல்லாமல் இரண்டாம் உலகப்போர் தொடங்கி 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவ ஆக்ரமிப்பை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யா பால்டிக் நாடுகளை அச்சுறுத்த நேட்டோ என்ற ராணுவ அமைப்பையும் வைத்திருக்கிறது. 50 உலகின் பல்வேறு நாடுகளில் தனது ராணுவத் தளத்தையும் நிறுவியுள்ளது.  தனது உளவு அமைப்பின் மூலமாக பல நாடுகளின் அரசுகளைக் கவிழ்க்கவும் தனது கைப்பாவை அரசுகளைக் காக்கவும் தனது ராணுவ, தொழில்நுட்ப வலிமைகளைக் கையாள்கிறது.

ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகளை உருவாக்கவும், அல்லது ஒரு நாட்டையே பயங்கரவாதம் என்று சொல்லி ஆக்ரமிக்கவும் செய்யும். தற்போது ஒரு எடுத்துக் காட்டு தான் ஆக்ரமித்துள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லும் அமெரிக்கா உள்நாட்டுப்போர் நடக்கும் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் இரண்டு நாடுகளை ராணுவ ரீதியாக ஆக்ரமித்து நிற்கிறது. 

பிராட்லி மானிங்
இப்பேர்ப்பட்ட கொடிய வெறிபிடித்த சர்வாதிகார நாட்டை ஏன் பலரும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகம் வேறெந்த நாட்டிலும் இல்லை. இது நிச்சயம் உண்மைதான். பல விடயங்களில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத உரிமைகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால் அதுவும் பொய்யென நிருபித்திருக்கிறார் ஸ்னோடன். யார் இவர் ? அமெரிக்க உளவுத்துறையான CIA - இன் ஊழியர். சொந்த அமெரிக்க மக்களையே அமெரிக்க அரசு வேவு பார்த்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள்  என அனைத்தையும் வேவு பார்த்திருக்கிறது. இதைக் காணச் சகிக்காத ஸ்னோடன், இதை அம்பலப்படுத்தினார். இந்த CIA - என்பது என்ன ? அமெரிக்க உளவுத்துறை, உலகில் மற்ற நாடுகளில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் கவனிப்பது, அமெரிக்க நலனுக்கு எதிரான அரசியல் போக்கு உலகின் எந்த நாட்டிலாவது தென்பட்டால் அங்கே மூக்கை நுழைப்பது, உளவாளிகளை அனுப்புவது, இலஞ்சம் கொடுப்பது, கூலிப்படையை அனுப்புவது, தேவைப்பட்டால் ஆட்சிக் கவிழ்ப்புகள், படையெடுப்புகள் வரை நடக்கும். இதில் இருப்பவர்கள் மனசாட்சியை அடக்கம் செய்து விட்டுத்தான் வேலை பார்க்க வேண்டும். அடுத்தவன் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் இந்த வேலையைத்தான் அமெரிக்க ஹாலிவுட் திரைப்படங்கள் நாயகர்களாகவும், தேசபற்றாகவும் சித்தரிக்கின்றன. ஹாலிவுட் படங்கள் சொல்வது உலகத்திலேயே தியாகி அமெரிக்க ராணுவ வீரன், உலகத்திலேயே சிறந்த தேசபக்தன் CIA, FBI உளவாளி.  

ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்தால் மிகவும் பிரபலமான படங்களான, ஜேம்ஸ்பாண்ட் (இங்கிலாந்து உளவாளி), ராம்போ, மிசன் இம்பாஸிபிள் மாதிரியான உளவாளிகள் அல்லது ராணுவ வீரர்களை வியந்து போற்ற வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளில் போய் போரிடுவது அந்நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் வீரமாகவும், திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும், நாயகத்தனமாகவும் சித்தரிக்கப்படும். ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க ராணுவ வீரர்களின் துயரத்தை அலசும் படங்கள் (ஹார்ட் லாக்கர்) , அமெரிக்காவின் பிறநாட்டு ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் ஆர்கோ போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுகளை வெல்கின்றன. இது போன்ற படங்களை ரசிக்கும் நாமும் அறிந்தோ அறியாமலோ அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை ரசித்து அதை ஆதரிக்கிறோம்.

அமெரிக்கா ஈராக்கில் நடத்திய கொடுமைகளை அம்பலமாக்கியது முதன் முதலில் விக்கிலீக்ஸ் என்ற இணையம். அதன் நிறுவனர் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதால், அமெரிக்க அரசால் இன்னும் துரத்தப்பட்டு ஆபத்தான நிலையில்தான் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்கிறார். இன்னொருவர் ப்ரோட்லி மானிங் இவரும் விக்கிலீக்ஸ் க்கு தகவல்கள் - இராணுவ ரகசியத்தை வழங்கியதற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இருவரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதற்காக தண்டனை அனுபவிக்கின்றனர். தற்போது எட்வர்ட ஸ்னோடனும் அது போலவே அமெரிக்க சராசரி மக்களைக் கண்காணிக்கும் படு கீழ்த்தரமான அமெரிக்க அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA - National Security Agency) இணையக் கண்காணிப்பின் மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களைத் திருடியுள்ளது. அமெரிக்கர்களின் அசைவுகளையும் கண்காணித்து வருகின்றது என்பதை அம்பலப்படுத்தி உள்ளார் எட்வர்ட்.

ஹாங்காங்கில் தஞ்சமடைந்து இதை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் எட்வர்ட் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அமெரிக்க அதிபரோ உலக நாடுகளையெல்லாம்  யாரும் எட்வர்ட் ஸ்னோடனுக்கு தஞ்சமளிக்கக் கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். பலநூறு கோடிக்கணக்கான தகவல்கள் பல்வேறு நாடுகளிடமிருந்து திருடப்பட்டுள்ளன. அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட நாடுகளில் ஐந்தாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது என்பது அதிர்ச்சி. என்ன தேசபக்தி அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தியா அமெரிக்காவின் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் எதிர்ப்புத் தெரிவிக்காத நாடு என்று அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்தியாவையும் கண்காணித்திருக்கிறது என்பது என்ன நியாயமோ.

இதற்கு முன்பு உலகையே அதிரவைத்த அமெரிக்க போர்க்குற்றங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸான்ஞ்சே இன்னும் ஈக்வடார் தூதரகத்தில்தான் தஞ்சமடைந்து வாழ்கிறார். எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்யாவின் வானூர்தி நிலையத்திலிருக்கிறார்.

இப்படி அமெரிக்கா சொந்த மக்களையும் நட்பு நாடுகளையும் கூட கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவை ஏதோ ரட்சகனைப் போலவும் சிலர் நம்புகின்றனர். அமெரிக்க உளவுத்துறையோ பாதுகாப்புத் துறையோ பல்வேறு கண்ணுக்கு தெரியாத மென்பொருட்களை வைத்து பல்வேறு தனிநபர்கள், அரசுகள், நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கெனவே அரசல் புரசலாக வெளியான செய்திகள்தான். அரபு வசந்தம், துருக்கி வசந்தம், கிரீஸ்போராட்டம் போன்றவற்றின் தாக்கத்திற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்தது சமூக வலைத்தளங்களே என்பதால் அதையும் கண்காணித்து வருகிறது என்ற செய்தியும் ஏற்கெனவே வெளியானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமெரிக்கா தனிநபர் சுதந்திரத்தில் தலையிடாது என்று மூட நம்பிக்கை உடையவர்களின் கவனத்திற்கு,

சமூக வலைத்தளங்களை வெவ்வேறு போலி முகவரிகளில் வந்து விவாதங்களில் கூட பங்கெடுக்கும் பாமரர்களைப் போலவும் உளவுத் துறையினர் கண்காணிக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ ஆகியோரும் தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களை வழங்கி  உதவியிருக்கின்றன.

சிவலிங்கம் சிவானந்தம் என்ற தமிழர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடித்துக் கொல்லும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வெள்ளை மாளிகையின் விருது பெற்றிருக்கிறார். இதைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். பின்லேடனை உருவாக்கியதே அமெரிக்காவின் சிஐஏ அவரை பயங்கரவாதி என்று அறிவித்து தேடியும், இரு நாடுகளின் மீது படையெடுத்தும், பல மில்லியன் டாலர் செல்வாக்கி அமெரிக்கப் பொருளாதாரமே நாசமாக்கியது. லேடனைத் தேடிக் கொல்வதற்கெல்லாம் தொழில் நுட்பத்தை உருவாக்கியவரெல்லாம் தமிழருக்குப் பெருமை சேர்த்தவராம். இந்த பின்லேடன் பற்றிய கட்டுக்கதையெல்லாம் இன்னும் நம்புவதற்கு ஆளிருக்கிறது. .சரி ஈழப்போர் நடந்த போது இலங்கை அரசுக்கு புலிகளின் நடவடிக்கைகள் பற்றி உளவுத் தகவல்கள் வழங்கிய இரு நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவுமே. இந்தியா எட்டி உதைத்தாலு ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மீதான மூட நம்பிக்கை மாறாது. அதே போலத்தான் அமெரிக்காவின் மீதான் நம்பிக்கையும். புலிகளின் நடவடிக்கைகளை எப்படி அமெரிக்க உளவுத்துறை வேவுபார்த்திருக்கும், அவர்கள் உரையாடல்களைக் கேட்டிருக்கும், சிவலிங்கம் போன்ற தமிழர்கள்தானே உதவியிருப்பார்கள். அவர்களையும் கொண்டாடுவார்களா தமிழர்கள் ? சரி புலிகளின் தகவல்களை அறிய அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளுக்கு உதவிய ஒரு முஸ்லிம் என்று ஒரு செய்தி வருகிறது அதை எப்படி எதிர்கொள்வார்கள் இத் தமிழர்கள்.

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க் போன்றவர்கள் அமெரிக்கனாக இருந்தபோதும் மன்சாட்சியுடன் போலித்தனமான தேசபக்தியையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், அரசின் கொடியமுகத்தை அம்பலப்படுத்தினர். சிலர் அமெரிக்கனாக இல்லாதபோதும் உளவுத்துறைக்குத் துதிபாடுகின்றனர்.    
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

3 கருத்துகள்:

  1. அப்கானிஸ்தானில் போர் நடந்து கொண்டிருந்த பொது பாரபட்சமில்லாமல் உண்மை செய்திகளை வெளியிட்ட அல்ஜசிரா தொலை காட்சி நிலையத்தை குண்டு வீசி தகர்த்து உண்மை நிலவரம் உலகறிவதை இருட்டடிப்பு செய்த இந்த அமெரிக்கர்கள் ஊடக சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசுவதுதான் விந்தை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாட்டின் மீதே படையெடுத்தவர்கள் அவ்வளவு நேர்மையாகவா இருப்பார்கள் ?

      நீக்கு
  2. பெயரில்லா2/7/13 1:47 AM

    Hey there just wanted to give you a quick heads up. The text in your content seem to be running
    off the screen in Firefox. I'm not sure if this is a formatting issue or something to do with internet browser compatibility but I figured I'd post to let you know.
    The style and design look great though! Hope you get
    the problem resolved soon. Many thanks

    Here is my web blog - desktop background changer for windows 7 starter download ::
    ::

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்