வலையுலகம் ஏன் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது ?

தற்போது வலையுலகில் ஒருவித மந்த நிலை நிலவுவது போல் தோன்றுகிறது. இணையத்தில் எழுத்தார்வமும், வாசிப்பார்வமும், தமிழார்வமும் கொண்டோர்க்கு இது மிகவும் கவலை கொள்ளக்கூடியதாகும். இப்போது நிறையப் பேர் புதியதாக எழுத வருகிறார்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் நிறையப் பேர்களை இப்போது காணவில்லை. அவர்கள் வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா என்றும் தெரியவில்லை. சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், ரீடர், பஸ் போன்றவற்றில் மட்டுமே எழுதிவருவதாகவும் கேள்விப்படுகிறோம். இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி சென்றடைய முடியாது என்ற நிலையில் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், சுருக்கிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

திரட்டிகளில் தங்கள் பதிவுகளையும் வலைப்பூக்களையும் இணைத்துக் கொள்ளாதவர்கள் கூட இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் தெரியவில்லை. இது போன்று இணைய வாசிப்புக்காக ஏங்கியவர்களின் பசியைப் போக்கியவைதான் திரட்டிகள். எல்லோருக்கும் எல்லா இணையத்தளங்களின் பெயரையும் முகவரியையும் அறிந்து வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது தெரிந்ததே. எனக்கு ஆனந்த விகடன் மூலமாகவே தமிழ்மணம் அறிமுகமானது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அறிந்தேன். அப்போது திரட்டிகள் வலைப்பூக்கள் என எதுவும் தெரியாது. வெறுமனே இணைப்புகளை சொடுக்குவதன் மூலமே படித்தேன் சில நாட்களாக.

இது போன்று இணையமும் நேரமும் கைவரப்பெற்றும் வலைப்பூக்கள் பற்றி அறியாதவர்கள் திரட்டிகள் மூலமே பல வலைப்பூக்களையும் வாசிக்க இயலும். எல்லாத் தகவல்களையும் பெற்றிட முடியும். மேலும் அவர்கள் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அது அமையும் என்பதே இதன் சிறப்பம்சம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எனக்கு நேரம் என்பது இருந்ததேயில்லை. அதிகம் வாசிப்பதற்கு நேரமில்லை என்ற நிலையிலெல்லாம், தமிழ்மணம் உட்பட எல்லாத் திரட்டிகளிலும் சூடான பதிவுகள் குறையாமல் வந்து கொண்டேயிருந்தன. கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, விமர்சனம், மதம் என அனைத்துத் வகைகளிலும் அல்லது ஒரு சிலவற்றில் மட்டுமாவது மிகவும் பரபரப்பாக இயங்கிய பதிவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்றே தெரியவில்லை. மிகவும் அரிதாக எழுதுகிறார்கள். அல்லது எழுதுவதேயில்லை.

புதிதாக வரும் வலைஞர்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்பது பரவலாகக் காணப்படக் கூடியதாகும். ஏதாவதொரு இணைப்பையோ அல்லது புகைப்படத்தையோ பகிர்ந்து கொண்டவுடன் பத்துப்பேர்கள் வந்து "Like" செய்யவும், அல்லது கருத்துச்சொல்லவும் இது ஒன்றும் ஃபேஸ்புக் அல்ல. எழுதுவது எவ்வளவு சிரமமோ அதே அளவு சிரமமானதுதான் பின்னூட்டமிடுவதும். தமிழில் பதிவு எழுதுவதே அதிகப்படியான சுமை என்னும் நிலையில் நேரமொதுக்கி அடுத்தவர் பதிவைப் படிப்பதற்கும், அதற்கு கைவலிக்க பின்னூட்டம் போடுவதற்கு எல்லோருமே சோம்பேறித்தனம்தான் படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதன் மூலமே நம்மை நாமே வளர்த்துக் கொள்ளமுடியும் என்பது என் கருத்து. எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சிறப்பாக எழுதுகிறவர்கள் நிறையப்பேர்களுக்கு எந்தவொரு பின்னூட்டமும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலரோ ஏற்கெனவே பதிவுலகில் இருந்தவர்கள், அவர்கள் ஏன் அதிகம் பங்களிப்பது இல்லை என்றால் திரைப்படம் சார்ந்த பதிவுகளோ, செய்திகளோ, அச்சு மாறாமல் படியெடுக்கப்பட்டவையோ, நகைச்சுவைக் கும்மிப் பதிவுகளோ மதம் சார்ந்த பதிவுகளோ மட்டுமே எப்போதும் தமிழ்மணத்தின் முகப்பில் முன்னணியில் தெரிகின்றன படிப்பதற்கே விருப்பமில்லை என்கிறார்கள். எல்லாவகையினரும் கலந்து இருப்பதன் மூலமாகத்தான் நிறைய வாசகர்களைச் சென்றடைய முடியும். இது சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும் இதை எழுதக் கூடாது என்றெல்லாம் சொல்லவது நியாயமுமில்லை. அவரவர்க்கு அவரவர் கொள்கைகளுக்காக எழுதுகிறார்கள். எதற்கு எதிராகவும் ஆதரவாகவும் நம்மால் மாற்றுக் கருத்தை வைப்பதற்கு இதுதானே வழிசெய்கிறது. உண்மையிலேயே இது போன்று கவலைப்படுகிறவர்கள் தாங்கள் விரும்பிப் படித்த நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமும், வாக்கும் தவறாமல் போட்டதுண்டா என்பது அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும்.

வலைப்பூக்கள் எழுதும்போதும், படிக்கும்போதும் நம்மையறியாமல் நிறையக் கற்றுக் கொள்கிறோம் தெரிந்தும் கொள்கிறோம். கருத்துக்களில் கொள்கைகளில் நிறைய மாறிவிடுகிறோம். இதன் பொருள் இந்துவாக இருந்து முஸ்லிமாகவோ, முஸ்லிமாக இருந்து கிறித்தவனாகவோ என்ற அள்விற்கு மாற்றம் வந்து விடும் என்பதல்ல. மாறாக சிறு சிறு மாற்றங்கள் நமது பொது அறிவிலும் கேள்வி அறிவுலும் எழுத்திலும் என்று சொல்ல வருகிறேன். மக்கள்திரள் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கும் நம் வலையுலகில் இருக்கும் கருத்துக்கும் எந்தளவு ஒற்றுமையிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியும். அதில் கிடைக்காத செய்திகள் எத்தனையோ இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னோரு வகையில் பார்த்தால் சமூகத்தில் ஒன்றாயிருப்பது, ஒத்த கருத்துக்கள் கொண்ட வேவ்வேறிடங்களிலுள்ள புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. இது போன்ற பல நன்மைகள் வலை உலகில் மட்டுமே சாத்தியம்.

ஆகவே எழுத்தார்வமும், ஆற்றலும் உடையவர்கள் தொடந்து எழுத வேண்டுமென்பதே எனது அவா. நம்ம எழுதி என்னவாகப் போகுது ?, நேரமில்ல ? என்பது போன்ற எண்ணங்கள், வெறுமை, மனச்சோர்வு, இடைவெளி, தேக்கநிலை, வெற்றிடம் என்பது மாதிரியான மனநிலைகள் தோன்றினாலும் தொடர்ந்து சோர்வடையாமல் எழுதுங்கள். எதுவும் எழுதாமல் இருப்பதைவிட எழுதுவது எவ்வளவோ மேலானது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. அருமையான ஊக்கம் தரும் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. சிங்களத் தமிழர்கள் தமிழ் மணத்தில் அதிகம் திரிவதால் தமிழர்கள் பலர் பதிவிடுவதைத் தவிர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. @sravani
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நீங்களும் விரைவில் எழுதத்தொடங்குங்கள்

    @ராவணன்

    அந்த நிலையில்தான் இன்னும் அவர்கள் அதிகமாக பதிவிட வேண்டும். ஆனால் இன்னும் காரணம் தெரியவில்ல. கருத்துக்கு நன்றி ராவணன்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா22/1/12 10:12 PM

    எண்ணங்களை எழுதி kondu உள்ளேன் தோழரே ...கீழ்க்கண்ட
    வலைப்பூவில் ...
    http://sravanitamilkavithaigal.blogspot.com/

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்