உன் அண்மையில் உன் இன்மை


ஒற்றைச்  சொல்லேனும்  உதிர்த்து  விடாமல்
கடக்கும்  கல்மனம்  உனது
புற்றைப்  போல  வளரும்  பெருந்துயரில்
உழலும்  உள்மனம்  எனது
எனக்கென்று  ஏற்கெனவே  வரிசையில்
நிற்கின்றன  கவலைகள்
அவற்றைத்  தோற்கடித்து  முதலிடம்
பிடிக்கின்றன  உன்  நினைவுகள்
என்  துன்பங்களை  மறக்கடிக்கும்  இன்பமும்  நீ
என்  நிம்மதியைக்  கவரும்  துன்பமும்  நீ
உன்  நினைவுக்கும்  உன்  நினைவுக்கும்
இடையேயான  இடைவெளிகளையெல்லாம்
வந்து  நிரப்புகின்றவை  உன்  நினைவுகளே
என்  அன்பின்  மீதான  உன்  புறக்கணிப்பு
உன்  அலட்சியத்தின்  கொக்கரிப்பு
விடாதே  என்கிறது  என்னுள்ளத்தின்  நச்சரிப்பு
உனதன்பைப்  பெறாமல்  நான்  ஏழையைப்  போல
இரந்து  நிற்கிறேன்  இறைஞ்சிக்  கேட்கிறேன்
உன்னிடம்தான்  எனக்குள்ளேயேதான்
உன்னுடனேயே  பேசிக்  கொண்டிருக்கிறேன்
நீ  என்ன  பதில்  சொல்லக்கூடும்  என்று
அனுமானிக்க  முடியாதவனாய்
கொஞ்சம்  பேசிப்  போனால்தான்  என்ன
குறைந்தா  போய்விடுவாய்  ?
இன்னும்  கொஞ்சம்  சிரித்தால்தான்  என்ன
இறங்கியா  போய்விடுவாய்  ?
என்  நேசத்தைப்  பொருள்  கொள்ளாமல்
என்னை  பொருட்படுத்தாமல்  இயங்கும்
உன்  இருப்பு  எனக்கு  ஏற்படுத்தும்  வெறுப்பு
நீ  எனது  அண்மையில்  இருந்த  போதும்
உனது  இன்மையையே  உணர்கிறேன்
உனது  அண்மையை  இழந்து  தவிக்கிறேன்
உனது  தன்மையை  வெறுக்கிறேன்  அன்பே  !
உன்றன்  மீதான  அன்பே  உன்றன்  மேல்
வெறுப்பையும்  ஆக்குகிறது  அன்பே  !
வேறு  கோணத்தில்  உனைக்  கண்டு  நீ  
ஒரு  அழகி  இல்லை என்று  உறுதிபடுத்திக்  கொள்கிறேன்
நான்  கொண்ட  நேசத்திற்கு  உனதழகு  
ஒரு  காரணமாகாது  என்று  ஆறுதல்பட்டுக்  கொள்கிறேன்
உனை  மறந்து  விட்டு  இயல்பாக  இருக்கலாமென்ற  
உன்னுடனான  போட்டியைத்  தொடங்கினேன்
உனது  கொலுசொலி  நீ  வரும்  முன்னே
நீதான்  வருகிறாய்  என்று  என்னை
நினைவூட்டியே  தோற்கடித்தது  எனக்குள்
தூங்கியது  போல்  நடிக்கும்  உன்னைத்
தட்டி  எழுப்பியது  எள்ளி  நகையாடியது
எனது  தோல்வியைத்  துள்ளிக்  கொண்டாடியது
நீ  எனக்குள்  இருப்பதை  நானோ  நீயோ  நினைத்தால்
மாற்ற  முடியாது  என்று  பறைசாற்றியது
இதயத்துடிப்பின்  இடையிடையே  வந்து
என்னைத்  துடிக்க  வைக்கும்  உன்னையெப்படி
என்  இதயத்திலிருந்து  நீக்குவது
துடித்து  விடாதோ  இதயம்  இல்லை
துடிக்க  மறந்து  விடாதோ  இதயம்
பறிபோகிறது  எனது  தூக்கம்
பறித்தது  உன்மேலானாதென்றன்  ஏக்கம்
நீ  கடந்து  போகும்  அத்தருணமா
எப்போதாவது  நீ  பேசும்  நிமிடங்களா
எனக்குள்ளே  நாம்  பேசுகிறோமே  அந்த
இனிய  நினைவுகளா  இவற்றில்  எது  இனிமை  ?
நீ  எனது  வாழ்க்கைநூலின்  இனிய  பக்கங்கள்
நான்  மட்டுமே  அறிந்த  கதையில்..

உன் பார்வை பட்டால் ஊனெங்கும் உதறல் எடுக்க
உன்னுடன் பேசும் போது எப்பாடு பட்டேனும்
உன்னை சிரித்து விட வைக்கவேண்டும் எத்தனிக்க
இதிலுமே எனக்கு தோல்வியா வாய்க்க வேண்டும் ?
உனைச் சுற்றிப் பலபத்துப்பேர்களிருந்தாலும் உனை 
நோக்கியே  என் ஓர்மை குவிய தனியனாய்  
நான் இருந்தாலும் எனை பொருட்படுத்தாத நீ
இப்படி ஓர் கொடுமையை யாரிடம் சொல்ல
காலம் ஆற்றிடும் இக்காயத்தினை மெல்ல

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

  1. "இப்படி ஓர் கொடுமையை யாரிடம் சொல்ல
    காலம் ஆற்றிடும் இக்காயத்தினை மெல்ல" என
    நானும் ஆற்றுப்படுத்த முனைகிறேன்!

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்