குமுதம் திருந்தாது !!


ஒரு நடிகையின் படத்தைப் போடுவதற்கு ஏதாவது ஒரு கருத்தோ அல்லது கிசு கிசுவோ அல்லது பயோடேட்டாவோ போடுவார்கள்.

ஆனால் ஒரு பொம்பள இறந்தால் கூட அவள் சின்ன வயசுல ஜட்டியுடன் இருக்கும் படத்தைப் போடுமளவிற்கு தரம் தாழ்ந்த அச்சு இதழ்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு வேளை பிணம் நிர்வாணமாக இருந்து விட்டால் அதையும் வெளியிடத் தயங்குவதில்லை இவர்கள்.

இவர்கள் வெளியிடும் செய்திகள் திரைப்பட நடிகர்களைக் குறித்ததாக இருப்பின் முடிக்கும் போது ஆம் ஆம் என்றுதான் முடிப்பார்கள். சொல்லிவிட்டாராம், பேசிவிட்டாராம், முடித்துவிட்டாராம் என்று ஒரே ராம் புராணாமாக இருக்கும். இப்படிச் சொன்னால்தான் கிசு கிசு பரவும்.

அதற்கு தற்போதைய உதாரணம்; தோழர் காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் படத்தை விடவும் தெலுங்குப் படத்தில்தான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். பாரதிராஜா உணர்ச்சி வசப்பட்டு, காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று அவரது எதிர்வினையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியில் பாரதிராஜா வின் படத்தையும், கூடவே ஒரு நடுநிலை கருத்துச் சொன்ன ஜனனியின் புகைப்படத்தையு சிறிய அளவில், பிரசுரித்து விட்டு, காஜலின் சேலை விலகி வயிறு தெரியுமாறு இருக்கும் செக்ஸியான படத்தையும் போட்டிருக்கிறார்கள். நான் படம் பாடல்கள் பார்ப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டதால், எது எந்தப் படம் என்பது குறித்த பொது அறிவு குறைவு. ஆனால் காஜலின் அந்தப்புகைப்படம் தெலுங்குப் படத்தில் வருவதாக இருக்கலாம். ஒரு வேளை இதைத்தான் தெலுங்குப் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

எனக்கு என்ன ஐயமென்றால், இங்கே தமிழர்களைக் கேவலப்படுத்திய காஜல் மீது ஆத்திரம் வரவேண்டுமா அல்லது காஜலின் புகைப்படத்தைப் பார்த்து வேறெதாவது உணர்ச்சி வர வேண்டுமா? அந்த உணர்ச்சி வந்த பின் ஏதாவது நடக்க வேண்டுமா? என்ன விரும்புகிறது குமுதம்.

இதே பதிவு கொஞ்ச நாளுக்கு முன்புதான் எழுதினேன் எந்த மாற்றமுமில்லாமல். குமுதம் அப்படியேதான் இருக்கும். எனக்கு மீண்டும் பல முறை இதே பதிவை எழுதவைக்கும். 

குமுதம் ரிப்போர்ட்டர் என்ற புலனாய்வு வார இதழ் குஷ்புவையும், முகவையும் பெரியார் மணியம்மையாகச் சித்தரித்து நூறாவது தடவையாக தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படியெல்லா
ம் யோசிப்பதற்கு, வெளியிடுவதற்கு, இது போன்ற நடிகைகளின் செக்ஸியான படங்களைப் போட்டு இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை நாட்டு நடப்புக்கு இணையான செய்திகளாக்குவதும்தான் காரணம். இறுதியில் அஃசல் குருவின் தூக்குத் தண்டனையை ஆதரித்து தனது பொது மனசாட்சியைக் காட்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, ஆர்யா தமிழ் ரசிகர்களைக் கேவலப்படுத்தியது மாதிரியான தமிழகத்தின் மானம் காக்கும் முக்கியமான செய்திகளைச்சொல்வது பிரச்சனையைக் கிளப்புவது. இப்படியாக குமுதம் கிளப்பிய பிரச்சனைதான் ஜெயராம் கருத்த தமிழ்ப் பொண்ணு என்று தனது பணிப்பெண்ணை வர்ணித்ததை, தமிழர்களைக் கேவலப்படுத்தி விட்டதாகத் திரித்து பிரச்சனையாக்கியது.

ஆனால் இது வெளியிடும் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்களாக இருக்க மாட்டார்கள், வட இந்திய, மலையாளப் பெண்களின் படங்களை மட்டுமே வெளியிடும் ஏனென்றால் அவர்கள்தான் பெருந்தன்மையாக உடையணிபவர்கள், குமுதத்திற்கு அந்த மாதிரியான படங்கள்தான் தேவை. என்னதான் ஃபாரின் பிகர்ஸ் பார்த்தாலும், நம்ம ஊரு ஃபிகருகளை சைட்டடிப்பதுதான் சுகமே என்று கருதும் வாசகர்களும் இருப்பதால், அப்பப்ப ஏதாவதொரு கல்லூரியில் சென்று 10 கல்லூரி மாணவிகளின் கருத்துக்கள் என்று இந்தியா முன்னேற்றமோ அல்லது, பிடித்த நடிகர்கள் குறித்த கருத்துக்களை விவாதங்கள் என்று போட வேண்டியது வெறும் படங்களைப் போடக்கூடாதல்லவா இதென்ன வலைப்பூவா இல்லை ஃபேஸ்புக்கா வெறும் பொம்பளப் படங்களை பகிரவும், வெளியிடவும் ஒரு நியாயம் வேண்டாமா. ஏதாவது மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் ஆசியா, அல்லது ஏதாவதொரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், அவர் சென்னையைச் சேர்ந்த சுத்தத் தமிழ்ப் பெண் என்று பல பேரைப் போட்டிருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் தமிழ்ப் பெண்கள் என்றுதான் தெரியவில்லை.

சிறுகதையில் கூட வரையப்படும் படங்களில், முந்தானை நூல் மாதிரிதான் சுருண்டு கிடக்கும், ரவிக்கை தாழ்வாகவும் இருக்கும் நடுவில் ஒரு கோட்டை தவறாமல் வரைந்திருப்பார்கள். தொப்புளையும் வரைந்திருப்பார்கள், யார்தான் உலகத்தில் அப்படியெல்லாம் சேலை கட்டுவார்களோ தெரியவில்லை. சுடிதாராக இருந்தால் நன்றாக உடலைக் கவ்விப் பிடித்து வடிவைக் காட்டும்படி இறுக்கமாக இருக்கும். க்லீவேஜ் நிச்சயம்.

விளையாட்டு வீராங்கனகளின் படங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஸ்போர்டி அல்லது மினி ட்ரொசர் மாதிரியான உடைகளுடன் இருக்கும் படங்கள் போடுகிறார்கள். இதை தவறானதாக சொல்ல வில்லை. குமுதத்தின் வாசகர்களாக இருப்பவர்களுக்கு குமுதம் எதனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து கிசுகிசுக்களை மானாவாரியாகப் பரவவிடுவது, ஏதாவதொரு படத்தில் பிகினியில் நடித்தைப் படமாகப் போடுவது, இல்லை செய்தியாக முடியாவிட்டால் இரு அனுமானமாகவாவது போடுவது. இதையெல்லாம் படிக்கும் காணும் குமுதம் வாசகனுக்குப் பெண்ணைப் பார்த்தாலே சைட்டடிக்கவும், மார்க் போடவும், அளவெடுக்கவும், கேலி செய்யவும், கமெண்ட் அடிக்கவும்தான் கற்றுக் கொடுக்கிறது. அந்த மன்நிலையுள்ளவன் சானியாவையோ சாய்னாவையோ, தீபிகா பல்லிகலையோ அல்லது வேறு யாராவது விளையாட்டு வீராங்கனையையோ பற்றிய செய்திகளையும், புகைப்படத்தையும் வெளியிடும்போது அவைகளை என்ன கோணத்தில் பார்ப்பான் என்று குமுதம்தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பிரச்சனையை சில நாட்களுக்கு முன்பு கிளப்ப முயன்றது குமுதம். நடிகை சுஹாசினி சொன்னார். கதாநாயகன் முடிவெட்டாமல், சவரம் பண்ணாமல் எப்படி இருந்தாலும் கதாநாயகி மட்டும் அனுஷ்கா மாதிரி அழகாக இருக்கிறார்கள். எங்களுக்கு மட்டும் அழகான ஹீரோக்களைப் பார்க்கணுன்னு ஆசையிருக்காதா ? எம்ஜிஆர், கமல், அரவிந்த் சாமிக்கு அப்பறம் ஹேண்ட்சம் ஆன ஹீரோக்களையே பாக்க முடியல என்று சொல்லியிருந்தாராம். அதை அப்படியே தமிழ்ப்படங்களில் அவர் சொன்னதையே செய்து கொண்டிருக்கும் சில் இயக்குநர்கள், நடிகர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தை வாங்கி அதை, சுஹாசினிக்கு எதிராகப் பொங்கும் தமிழ் ஹீரோக்கள் என்று ஒரு பிரச்சனையாக சித்தரிக்க முயன்றது. அப்புக் குட்டி, தருண்கோபி, விதார்த், இன்னும் யாரோ இருவர். இவர்களெல்லாம் சொன்னது சுஹாசினி அப்படியெல்லாம் சொல்லியிருக்கக்கூடாது, தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் சராசரியான தோற்றம் கொண்டவர்கள்தான் என்ற பொருளில் என்று சொல்லி வருத்தப்பட்டிருந்தார்கள். இதில் யார் சொன்னது சரி தமிழ் திரை ரசிகர்கள் எல்லாரும் சொல்வதைத்தான் சுஹாசினி சொன்னார். இந்த நடிகர்கள் எல்லாம் சராசரியான ஆணின் தோற்றம் அல்லது பொறுக்கியாக இருக்கும் ஒருவன் அந்த வட்டாரத்திலேயே அழகான கதாநாயகியைக் காதலிப்பதாக அல்லது ஆசைபடுவதாகக் காட்டி அந்தக் காதலை வெற்றி பெற வைத்து ஆண்களை பரவசப்படுத்தும் கதைகளை எடுப்பவர்கள் அல்லது நடிப்பவர்கள். இதை என்னவோ பெரிய சண்டையாக கோர்த்து விட முயன்றது குமுதம்.

குமுதம் கிளப்பி விட்டு கதையெழுத நினைத்த பல கிசுகிசுக்கள் பிசுபிசுத்துப் போயின. காஜல் - கார்த்தி காதல், விஷால்- ரீமா காதல், மாதவன் - பூஜா காதல், சித்தார்த்- ஷ்ருதி காதல், இருப்பதிலேயே மிகவும் மோசமாக எழுதப்பட்ட கிசு கிசு கமல் - சிம்ரன் காதல்தான். குமுதம் மட்டுமல்லா எல்லா இதழ்களும் செய்தன.. அதை விடவும் கேவலமாக எழுதப்பட்டது ஷ்ருதி ஹாசன் - தனுஸ் காதல்தான். அதற்கு ஷ்ருதி மறுப்பு வெளியிட்டு அதையே குமுதம் வெளியிடுமளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியது குமுதம். நன்கு காசு பார்த்த கிசுகிசுக்கள் நயன் - பிரபுதேவா, நித்யானந்தா - ரஞ்சிதா.

ரஜினி படையப்பா படம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நடித்த பாபா படம் தோல்வி அடைந்திருந்த நிலையில் ரஜினி படத்தில் மீண்டும் நடிப்பாரா அல்லது நிறுத்தி விடுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ரஜினி இமயமலைக்குக் கீது சென்று விட்டால் ஏதாவது கதை கிதை எழுதி காசுபாக்க முடியாது, எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் விஜய்யா விக்ரமா,தனுசா என்ற முக்கியமான பிரச்சனையை எழுப்பியது. இப்படியாக குமுதத்தின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை.

அரசியல் ரீதியான விமர்சனத்தில், இப்படி பாலியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகை நியாயமென்று தெரியவில்லை. இதற்கு முன்பு கனிமொழி-ராசாவை இணைத்து நகைச்சுவைக்காகக் பேசப்படும் கிசுகிசுக்கள், மன்மோகச் சோனியாவை இணைத்துப் பேசப்படும் கிசுகிசுக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

குமுதம் மட்டுமல்ல தினகரன், நக்கீரன், தினத் தந்தி, தினமலர் என்ற எதுவும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் முதலிடம் தினகரனுக்கே. கடந்த திமுக ஆட்சியின் போது தினகரனில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சோபனுடன் இணைந்து வாழ்ந்த (Living together) ஜெயலலிதாவின் யோக்கியதையைப் பாரீர் என்று திராவிட அறிவாளிகளுக்கே உரிய தரத்துடன் வெளியிட்டிருந்தது. இதுதான் இவர்களின் யோக்கியதையே.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கடந்து சென்ற போது ............


மறக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் என்னிடம்
இத்தனை நாட்களுக்குப் பின் நீ ஏன் என் பார்வையில் மோத வேண்டும்
என் ஊழ்வினை
விநாடிகளில்  தொலைவில் கடந்து போய்விட்ட உன்னைக் காணத்தான் நான் 
காரணமின்றி அனிச்சையாய்த் திரும்பியது
ஆலயம் சென்று கொண்டிருந்த
உன் தரிசனத்தை
பெரிய அதிர்வுகளின்றி என் மனம் ஏற்றுக் கொண்டது
ஆயினும் என்னென்னவோ சொல்லி நச்சரிக்கிறது
பேருந்திருலிருந்து இறங்கி ஓடி உன்னிடம் வந்திருக்கலாம்
நம்மிடையே இடைவெளியும் உறவுகளும்
தடுப்பணைகளாய் இல்லாவிடில்
அல்லது உன் குரல் பழைய நேசத்துடனில்லை என்று
என் பேராசை சொல்லும்
பின்பெனது நிம்மதி கொல்லும்
உண்மை மறந்து உரிமை மறந்து எனது அறம் மாறும்
நினைவில் மட்டும் உன் சஞ்சாரம் போதும்
இன்றைக்கொரு கவி மட்டும் போதும்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

விநோதினிக்கு அஞ்சலி - ஆணாதிக்கத்துக்கு எப்போது அஞ்சலி செலுத்துவது ?

விநோதினி இறந்து விட்டாள். கொல்லப்பட்டுவிட்டாள். மிகவும் கொடிய வதையை அனுபவித்துவிட்டு இறந்து விட்டாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனும் தன்னைப்போலவே துன்பத்த்தை அனுபவிக்க வேண்டும் என்ற இறுதி ஆசையுடன் உயிரை விட்டு விட்டாள். 


டெல்லி கொடூரத்தால் இறந்த ஜோதியைப் போலவே விநோதினியும் நான் வாழவேண்டும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் வாழக்கூடாது என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். தாம் அனுபவித்த கொடிய இன்னலிலிருந்து வெடித்த ஆத்திரம்தான் அது.

ஒரு வேளை ஜோதி உயிர் பிழைத்திருந்தாலோ, அவளது சிறுகுடல் பாதிக்கப்பட்டதால், நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்திருக்க முடியும். விநோதினிக்கோ பார்வையே பறிபோய் விட்டது. வன்முறையை எதிர்கொண்ட போதே அவர்கள் பாதி செத்து விட்டார்கள். மீதியும் மருத்துவர்களின் தோல்வியில் போனது.

இந்த கேடுகெட்ட வெறிபிடித்த உலகத்தில் பிறந்ததால் ஆயிரமாயிரம் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களின் எடுத்துக் காட்டுகள்தான் ஜோதி சிங் பாண்டேக்களும், விநோதினிகளும்.

பாலியல் வன்முறையும், ஆணாதிக்க வெறியும் சேர்ந்து பழிவாங்கிய உயிர்கள், ஆணாகப் பிறந்ததற்காக எத்தனை முறைதான் வெட்கப்படுவதும், வேதனைப்படுவதும் ?

இனிமேல் மரண தண்டனை எதிர்த்துப் பேசவும் வெட்கமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து விட்டு, இனி விநோதினிகள், ஜோதிகள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே கவலைப் பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பது, அவர்களை உணர்வுடையவர்களாகக் கருதாததே ஆகும். அவர்களை வெறும் பொருளாகவே காண்கிறார்கள் ஆண்கள். இதற்கு ஆணாதிக்க சிந்தனையே முதற்காரணமாகும். இதை போற்றி வளர்க்கும் சமூகமும் அதை ஊற்றி வளர்க்கும் ஊடகங்கள், வணிகங்கள், சடங்குகள் என அனைத்துமே இதற்கான காரணிகளே ஆகும்.

 ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)


பாலியல் வன்முறையாகட்டும், அமிலம் ஊற்றுவதாகட்டும், அல்லது கருணைக் கொலையாகட்டும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆணாதிக்க உணர்வு மட்டுமே. பாலியல் வன்முறை என்பது கலவி அல்லது உடலுறவு என்பதை மட்டும் கொண்டு உடைதான் காரணம் நடத்தை தான் காரணம் என்று அளவிடக் கூடாது. அது ஆதிக்க உணர்வு வன்முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

இவை வெவ்வேறு மத கலாச்சார சமூகங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஒரு ஆண் தன் மகள் கீழ்ஜாதிக்காரனை மணந்து கொண்டதால் பெற்ற மகளென்றும் பாராமல் கொல்கிறான். அவளது உயிரை விட தனது, கௌரவம் என்று தான் நம்பும் ஜாதிப்பெருமை அவன் கண்ணை மறைக்கிறது. அதற்காக மகளைக் கொன்ற தந்தை என்ற பட்டத்தை சுமக்கவும் பெருமிதத்துடன் கொல்கிறான். ஜாதிகள் நிறைந்த இந்து மதத்தில் மட்டுமல்ல, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் போன்ற முஸ்லிம்கள் சமூகத்திலும், சீக்கிய சமூகத்திலும் கேள்விப்படுகிறோம். இதில் பெண் ஒருவனை மணக்க் விரும்புவது அவர்கள் குடும்பத்திற்கு இழுக்கு என்று கருத வைப்பது எது ? தான் சொன்னவனை, தகுதிக்கு உட்பட்டவனாகக்கருதும் ஒருவனை மட்டுமே மணமுடிக்க வேண்டும் என்று பெண்ணின் உரிமையை மறுக்கும் ஆணாதிக்கம். அதற்காக பெற்றவளென்றும் பாராமல் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை.

அடுத்து அமிலம் ஊற்றும் அசிங்கம் பிடித்த எண்ணங்கள் ஏன் வருகின்றன. இது போன்று அமிலத் தாக்குதலுக்குப் பெரும்பாலும் பெண்களே ஆளாகின்றனர். பெரும்பாலும் திருமணமாகாத இளம்பெண்கள். செய்கிறவர்கள் இளைஞர்கள். இவர்களிருவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் தகராறா இருக்கப்போகிறது, காதல், பாலியல் உறவு, திருமணம் உறவுச் சிக்கல் அரிதாக வேறு பிரச்சனைகள். இதில் முக்கியமானது காதல், ஒரு பெண் காதலிக்கும் உரிமைக்கு அப்பா என்ற ஆண் குடும்பம், கௌரவம் என்ற ஆணாதிக்கக் கருத்தியல்களால் எதிர்க்கும் அதே நிலையில், ஒரு ஆண் தன்னைக் காதலிக்காத பெண் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் அவள் மீது அமிலத்தை ஊற்றுகிறான். அவளுக்குத் தன்னை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ கூட உரிமை இருப்பதாக எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லது ஆணாதிக்கம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. கொலை செய்வதில் இருக்கும் வக்கிரத்தை விடப் பல மடங்கு கொடூரமானதும், கேவலமானதுமான  பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி அவள் தனது தன்னம்பிக்கையாகக் கருதும் அழகைச் சிதைப்பதில் இன்பமடைகிறது இந்து கருமாந்தரங்கள்.

தெருவில் போகும் தனக்கு தொடர்பில்லாத உரிமையில்லாத ஒரு பெண் தனியாளாக இருப்பதால் சீக்கியடிப்பதும், கேலி பேசுவதும் உரிமை நினைக்கும் ஆணாதிக்க ஓநாய்கள், இரவு நேரமென்றால் அவளை வன்புணர்ந்து கூடப் பாடம் கற்பிக்க தனக்கு அதிகாரமிருப்பதாய் நினைப்பது எத்தகைய கேவலமான மனநோய்.

சமூகத்தின் தாக்கமின்றி வெளியில் வாழும் ஒரு மனிதனுக்குப் பெண் மீது எத்தகைய கண்ணோட்டம் இருக்கிறதோ அதே கண்ணோட்டம்தான் ஒரு சிறந்த பண்பட்ட குடும்பத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. ஒரு இளைஞனோ, சிறுவனோ பெண்கள், பாலியல் குறித்த கருத்துக்களை சமூகத்திலிருந்தே, ஊடகங்கள், திரைப்படங்கள் மூலமே கற்கிறான். அவை என்ன கற்பிக்கின்றனவென்று நமக்குத் தெரியும். பாலியல் குறித்த அறிவியல் கண்ணோட்டமின்றி அவை வெறும் கிளுகிளுப்பாகவும், அருவருப்பானதாகவும், பெண்களுக்கு ஒழுக்கக் கேடாகவும், ஆண்கள் மறைவாக அன்பவித்துக் கொள்ளவும் ஏற்றவாறே இருக்கிறது.

திரைப்படங்களை இதற்கு ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். திரைப்படங்கள் நம்மை நேரடியாகத் தாக்குவதில்ல. அதை நாம் அப்படியே பின்பற்றுவதில்லை. ஆனால் எல்லா வகையிலும் நம்மை ஆக்ரமித்திருக்கிறது. ஏன் தமிழ்மணத்திலேயே பெருமாலும் திரைப்படம், அதனைச் சார்ந்த செய்திகள்தான்.

திரைப்படப் பாடல்கள், நடிகர்கள், வசனங்கள், பட்டப் பெயர்கள் எல்லா இடத்திலும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

திரைப்படத்தில் என்னத்தைக் காட்டுகிறார்கள் பெண்களைப் பற்றி.

பெண்கள் திரைப்படத்தில் வருவதே ஆண்கள்/ நாயகர்களால் காதலிக்கப்படுவதற்குத்தான், அவர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும், அழுவதும், சிரிப்பதும், துடிப்பதும், ஓடுவதும் காதலுக்காகவே/காதலனுக்காகவே/

காதலன் என்பவன் அயோக்கியனாக இருந்தாலும், அவனிடமிருந்து ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடித்து அவனைக் காதலிப்பாள்

அவளைக்கவர்வதற்காக நாயகன்/ என்ன பொறுக்கித்தனம் செய்தாலும் அது நாயகத்தனமாகவே சித்தரிக்கப்படுகிறது. அவன் அவளைத் துரத்தலாம், கடத்தலாம், துன்புறுத்தலாம், புணரலாம், ஏன் கொலை செய்யக் கூட முயலலாம். இது பருத்தி வீரன், பாலாவின் அனைத்துப் படங்களும், தனுஸ், சிம்பு, கார்த்தி படங்கள். புதிய பாதை மூவேந்தர்.

பெண்களைக் கேலி செய்யும் ஈவ் டீஸிங், உடலைக் கிண்டல் செய்வது என்பது போல பெண்களைக் கிண்டல் செய்வது, மேலும் கீழும் தொட்டு விளையாடுவது, உரசுவது, இடிப்பது, உடைகளை பிடித்து இழுப்பது போன்ற பாடல்கள் சிவாஜி, மகோராமச்சந்திரன் காலத்திலிருந்து மாஸ்டர் மகேந்திரன் காலம் வரை தொடரும் பாரம்பரியம். அது நகைச்சுவையாம். பெண்கள் மீது ஒழுக்கத்தை வலியுறுத்தவும் தயங்குவதில்லை.

பாடல் காட்சிகள் பாதி செமிபோர்ன். இடுப்பில் முத்தம் கொடுப்பது, மார்பில் முகத்தை மோதுவது, மொத்த உடலையும் மோப்பம் பிடிப்பது தடவுவது இன்னும் பலதும்.

விவேக், விஜய், சிம்பு, தனுஷ், சந்தானம் வகையறாக்கள் சொல்லும் பெண்களுக்கான வியாக்கியானங்களை எல்லாம் ஆண்களுக்கு தம் ஆணாதிக்க அரிப்பை சொறிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் கொடுக்கின்றன. பீயை மிதிச்சது போல முகத்தைச் சுளித்துக் கொண்டு சந்தானம் "மச்சா இந்தப் பொண்ணுங்க இருக்காளுங்களே" என்று தொடங்கினான் என்றால் பெண்கள் உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினால் அந்தக் கருத்தைக் கேள்விகளின்றி நாம் ஏற்றுக் கொண்டோமென்றுதானே பொருள்.

கொல்றா அவள, வெட்றா அவள, கொலவெறி வகைப் பாடல்களெல்லாம் ஆண்களைத் தியாகியாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையையும், வெறுப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்கின்றன. காதல் தோல்விப் பாடல்கள் என்றால் காதலியை நோக்கிப் பாடுவதாக இல்லாமல் "பெண்கள் என்றால் பொய்யா" என்று மொத்தப் பெண்களையே கேள்வி கேட்கிறதே. வெறுப்பைக் காட்டுகிறதே

அதே நேரம் ஆண்களின் பொறுக்கித் தனத்தைக் கொண்டாடுகிறது.

பெண்களிடமிருது ஒதுங்கியிருக்கும் ஆண் சமூகம் இது போன்ற திரைப்படங்களிலிருந்து எதைக் கற்கும் ? பெண்கள் என்றால் காதலிக்க, செக்ஸ், ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு என்னதான் இவை சொல்கின்றன.

பாலியலிலிருந்து எல்லாவற்றையும் தேவைப்படும் ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படையாக விவாதிப்பதே ஒரே வழியாக இருக்கும். பெற்றோர்க்கு தனது மகன் தம்மடிப்பதோ, தண்ணியடிப்பதோ எப்படித் தெரிவதில்லையோ அது போலவே அவன் பொது இடங்களில் பெண்ணிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

என் மகன் ஒரு போதும் திருட மாட்டான், கொலை செய்ய மாட்டான் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கை. அது பெரும்பான்மையாக உண்மையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் பற்றி என்ன நினைக்கிறான், தன் தங்கை, அக்கா, அம்மா வயதிலிர்க்கும் பிற பெண்கள் மீது அவன் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தால், ஒவ்வொரு அம்மாவும் நொந்து போவாள்.

பெண்கள் மீதான ஆண்கள் கொண்டிருக்கும் கருத்துகளே வன்முறைகளுக்கு மூலமாகக் கருதுகிறேன். பெண்குழ்ந்தைகளை வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதையும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும். என் மகனால் எந்தப் பெண்ணுக்கும் துன்பம் நேராது என்று நம்பிக்கையுடன் சொல்லும்படி வளர்க்க வேண்டும்.

இந்த விநோதினி காதலிக்க மறுத்ததால் மட்டுமல்ல, ஏற்கெனவே இவர்களிருவரும் காதலர்களாக இருந்தவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். காதலர்களாக இருந்தாலும் ஒரு நபருக்குப் பிடிக்க வில்லை என்றால் விலகிவிடுவதுதான் முறை அது கசப்பாக இருந்தாலும். விநோதினி செய்தது தவறில்லையா என்றால், எத்தனையோ ஆண்கள் வயிற்றில் புள்ளையைக் கொடுத்து விட்டு கம்பி நீட்டுகிறார்கள். பெண்கள் என்ன அமிலத்தையா ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஊற்றுவதென்றால் எத்தனை ஆண்கள் மீது ஊற்ற வேண்டும்.

டெல்லி வன்புணர்வுக்காக வாழ்க்கையிலேயே முதன்முறையாக பாலியல் வன்முறைக்கு எதிராக வாயைத் திறந்தவர்கள், உச் கொட்டி விட்டுப் பின்னர் இவளுங்க ஒழுங்கா இருந்தாத்தான ? என்று வெறியேற்றுகிறார்கள். கணவனாக இருந்தாலும் பெண் விருப்பமின்றி உடலுறவு கூடாது என்பதுதான் நியாயம். பெண் ஆபாசமாய் உடையணிந்தால் வன்முறை செய்யலாம் என்று உரிமை கோரும் மனநோயாளிகளுக்கு இதுதான் பதில்.

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான கருத்துக்களையும் இயன்ற வழியிலெல்லாம் எதிர்க்க வேண்டும். ஒரு கருத்து சமூக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்பொது ஏனென்றால் அது வன்முறைகளையும் குற்றங்களையும் நியாயப்படுத்தும்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அற்பம் !!

மாலை அலுவலகம் முடியும் தறுவாயில் ஒரு டீம் லீட்கள் சந்திப்பு நடக்க வேண்டியிருந்தது. அனைவரும் கூடினோம். மேலாளர் பேசத் துவங்கினார். 

பொங்கலுக்கு ஒரு நாள் மட்டும்தான் லீவ். லீவ் முடிஞ்ச அடுத்த ஒரு வாரத்துக்கு மார்னிங் ஒன் ஆர் அன்ட் ஈவ்னிங் ஒன் அவ்ர் வொர்க் பண்ணி காம்பன்செட் பண்ணனும். யாருக்காச்சும் ஏதாவது சொல்லணுமா ?
 

எங்களிடையே சலலப்பு தொடங்கியது தொடர்ந்தது. பின்பு மேலாளரே தொடர்ந்தார்.

ஆஃபீஸ்ல இருக்கற 40 பேர்ல 27 பேர் ஹிந்தூஸ்தான். 10 பேர் கிறிஸ்டியன், மூணு பேர் முஸ்லிம்ஸ். இத்தனை பேர் வேலையும் பத்துபேர் காம்பன்சேட் பண்ண முடியாது. இந்த ஈமெயில் ப்ரோஜக்ட் ஒரு வாரம் முன்னாடியே டெலிவரி பண்ண வேண்டியது. இப்பவே க்ளையண்ட் ஏத்தறான். அதனால டீம் லீட் 7 பேரும் கண்டிப்பா வந்தே ஆகணும் வேற வழியே இல்லை. கிறிஸ்துமஸ்க்கும் நியூ யெர்க்கும் சேர்த்து ஒரு வாரம்  வீட்லதான இருந்தீங்க.


.......

நான் நேந்து விட்ட விலங்கைப் போல அமர்ந்திருந்தேன் என்ன சொன்னாலும் தலையாட்டுவது தவிர ஒன்றும் செய்ய முடியாது. கழுதைக்கு வாழ்க்கைப் பட்டால் ...... என்ன செய்ய ?

ஆர்த்தி உங்களுக்கு ஓக்கேதான ?

.சார்...........

சொல்லுங்க..

எனக்கு ஊருக்குப் போக கடைசி பஸ் எட்டு மணிக்கு, அதுக்கு அப்புறம் ஒம்பதே முக்காலுக்குத்தான். போக ரொம்ப லேட்டாகிடும்.

நீ
ங்க அவினாசி தான ?

இல்ல சார் அவினாசிலிருந்து இன்னொரு பஸ் மாறணும். ..

ஒரு வாரம் அட்ஜஸ்ட் பண்ணலாம்ல.

முடியாதுங் சார்.

இல்லமா நீங்கதான் சீனியர், இல்லன்னா முடிக்க முடியாது.

"அவ்வளவு லேட்டா போனா எங்க வீட்ல தொரத்தி விட்றுவாங்க"
   


என்று அழாத குறையாக சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். அன்றுதான் அவளைப் பார்த்தேன்.

ஆர்த்தி வேறு டீம். நான் வேறு டீம் என்பதால் எப்போதாவது பேசவும் பார்க்கவும் முடியும். சிறிது நாட்களுக்குப் பின்பு கிடைத்த சந்தர்ப்பங்கள் சந்திப்புகள் மூலம் என்னுடன் நட்பாகி விட்டாள். அலைபேசி எண்கள் பரிமாறிக் கொள்ளுமளவுக்கு நெருங்கியிருக்க வில்லை. நான் அவளுடன் பழகியதை அனைவரும் கிண்டலடிப்பார்கள். அது உண்மையில்லை என்ற போது
ம் அவர்கள் ஆர்த்தியை என்னுடைய ஆள் என்று என்னிடம் அல்லது என்னுடன் இணைத்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சில மாதங்களில் நான் வேறொரு நிறுவனத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டேன்.

ஒரு நாள் இதே நிறுவனத்தில் வேலை பார்த்த நிரஞ்சனுடன் அலைபேசியில் பேசினேன். பலதும் பேசிய பின்பு, 


ஆமா ஆர்த்தி இன்னும் அங்கதான் இருக்கா என்றேன்.

ஆமாமா. லவ்வெல்லாம் ஓடிட்டிருக்கு.

லவ்வா யாரை ?


அவன் சொன்ன அந்த நபரின் பெயரைக் கேட்டதும் எரிச்சல் வந்தது. நமக்குப் பிடித்த ஒருத்தி வேறொருவனை விரும்புகிறாள் என்ற போது வரும் அதிர்ச்சி அல்ல. உங்களால் சகித்துக் கொள்ளவே முடியாத இயல்பைக் கொண்ட ஒருவனை அவள் விரும்பினால், அவள் ஏற்படும் பரிதாபம்  பச்சாதாபத்தினால் வந்தது.

யாரு ஃபெலிக்ஸ் ஆ அவனையா ? அது எப்பிடிடா ? எப்பிருந்து ?

என்னது இந்தியா சுதந்தரம் வாங்கிருச்சா !! ஹஹஹா !! அது வருசக் கணக்கா நடக்குது நீ இங்க இருந்தப்பவே இந்தப் படமெல்லாம் ஓடிச்சு. உன் ஃப்ரெண்டப் பத்தி உனக்கே தெரியலையா ?

இதெப்படி உனக்குத் தெரியும் ?

ம்கும். நாங்கல்லாம் யாரு ? யாரு என்ன பண்ணாலும் கண்டு பிடிச்சிருவம்.

அவன் யாரையோ லவ் பண்ணிட்டிருந்தான்னு தெரியும், அது இவளத்தான்னு தெரியாதே. ஒரு தடவை திடீர்னு இவளத் திரும்பிப் பார்த்தான். அவ்ளோதான் எனக்குத் தெரியும். அது சும்மாதான்னு நினைச்சு விட்டேன். ம்ம். அது சரி அவன எப்படின்னுதான் தெரியல. இவ தொட்டாலே அழுதிருவா, அவனப் பாத்தாலே நமக்கெல்லாம் பயமாருக்கும். வாயத்தொறந்தா ஒரு நல்ல வார்த்த வராதே.


டேய் !! நீ எந்த உலகத்தில இருக்க. இப்பல்லாம் பொண்ணுகளுக்கு இந்த மாதிரி பசங்களத்தான் புடிக்குது. யோக்கியனா இருந்தா எவ பாக்கறா ? இவளுங்களுக்கு அறிவே கிடையாது. எக்கேடோ கெட்டுப் போகட்டும். பட்டுத் திருந்தட்டும். எங்க வீட்டுப் பக்கத்திலயும் இது மாதிரி நெறயாப் பேரு அப்பனுக்குத் தெரியாமப் போய் கல்யாணம் பண்ணிட்டாளுங்க. கொஞ்ச நாள் வச்சிருந்திட்டு என்ஜாய் பண்றானுங்க அப்றம் இவளுங்களா புடிக்காம வந்திருவாளுக. அப்பன ஏமாத்திட்டு போறவளுக்கெல்லாம் இப்படித்தான் வேணும். அப்பத்தான் புத்தி வரும். 

 
இன்னொரு நாள் ஃபெலிக்ஸிடம் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பிரதாய கேள்விகளுக்குப் பின் அவனாகவே கேட்டான்.

என்ன பாஸ் அப்றம் விஷயம் கேள்விப்பட்டு ஷாக்காயிட்டீங்களாமே ?

அப்படியெல்லாம் இல்ல. உலகத்தில நடக்காததா என்ன ?

உங்க ஃபிரண்ட கரெக்ட் பண்ணிட்டன்னு எம்மேல கோபப்படாதீங்க பாஸ். ஹி ஹி !!" உன்னுடைய ஆளை நான் மடக்கிட்டேன் பார்த்தியா என்ற நக்கல் தொனித்தது.

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. எப்படியோ நல்லா இருந்தா சரிதான். 

 
ஃபெலிக்ஸின் இலட்சியம் குடிப்பது, ரகளை பண்ணுவது, அரைமணிக்கொருமுறை ஐந்து பைசாவுக்கு பெறாத நடப்புக்களுக்கு ஆத்திரப்படுவது, மிகவும் அழகான பெண்ணை மணம் முடிப்பது மட்டுமே. அவன் உடற்பயிற்சிக் கூடத்தில் முறுக்கேறிய உடலும், சிடுமூஞ்சித்தனமும், எப்போதும் அவன் கை நீட்டிவிடக் கூடிய அபாயமும் இருந்ததால் அவனை அவனது பின்னால் மட்டுமே எங்களால் விமர்சிக்க முடிந்தது. அவன் வீட்டில் ஒரே செல்லப் பிள்ளை பணக்காரன் என்பதாலும் அவன் வீட்டில் சம்மதித்து விட்டார்கள். அவன் கிறித்தவன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு மருமகளும் மதம் மாற வேண்டும் என்ற விதிமுறையுடன் சம்மதித்திருந்தார்கள். இவள் சாதாரண நடுத்தரக் குடும்பத்துக் கவுண்டர் வீட்டுப் பெண் என்பதாலும் இன்னும் வீட்டில் சொல்ல பயப்பட்டுக் கொண்டிருந்தாள். அவன் மணக்க விரும்பும் பெண்ணாக இருக்க வேண்டியவள் என்று வர்ணித்த அளவுக்கு ஆர்த்தி பேரழகியாகவோ வெள்ளை நிறமாகவோ இல்லாமல், இருந்தாள். காதலில் எதுவும் சாத்தியம்தான் என்று புரிந்தது. திருமணம் செய்தால் இவனது இயல்பு மாறி விடும் பக்குவமடையலாம் என்றும் நினைத்தேன்.

9 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு முறை நிரஞ்சனுடன் பேசினேன்.

டேய் விசயந் தெரியுமா ? அவங்க லவ்வப் பத்தி ? போன தடவையே சொல்லலாம்னு நெனச்சேன். வேற பேச்சுல மறந்திட்டேன்.

என்னாச்சாமா ?

புட்டுக்கிச்சாம்.

ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான ? இவங்கூடல்லாம் சரியா வராதுன்னு தெரியாதா ?

அதெல்லாம் இல்ல. இவன் ஸ்ட்ராங்காதான் இருந்தான். ஆர்த்திதான் வீட்டுக்கு பயந்துட்டாளாம். வேற இடத்துல கல்யாணமும் ஆயாச்சு. இப்ப கன்சீவா இருக்காளாம்.

........

என்னடா பேச்சக் காணோம் ?

இல்ல. ஃபெலிக்ஸ் கூட பேசினியா என்ன சொன்னான் ?

நான் ஃபெலிக்ஸ் கிட்ட கேட்டேன். எதுவும் பண்ணலியான்னு. ஒரு தடவை மட்டும் மேட்டர் முடிச்சிட்டானாம். ரெண்டு தடவை மிஸ்ஸாயிடுச்சாம். ஃபெலிக்ஸ் கிட்ட அப்பறேன்டா கவலப்படறன்னு சொன்னேன். நமக்கு தோலா முக்கியம் பழத்த சாப்டமா போனமான்னு இல்லாம. இவளுங்க நம்மள விட பெஸ்டா ஒருத்தங் கெடச்சா டாட்டா காட்டிட்டு போயிருவாளுக, நம்ம உக்காந்து ஃபீல் பண்ணணுமா ? ஒருத்திய லவ் பண்றயா அவ மேல கைய வைக்காம விடக் கூடாது. கைய வச்சபிறகு அவ போனாக் கூட கவலயில்ல. எல்லாப் பசங்ககிட்டயும் அப்படித்தான் சொல்லிட்டிருக்கேன்.
 


அதற்குப்பிறகும் கால் மணி நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்ன பேசினேன் என்பது மட்டும் நினைவில் இல்லை. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜனநாயகத்தின் இரண்டகம்

அராஜகம் நடந்திருக்கிறது. காலையில் ரகசியமாக தூக்கிலடப்பட்டு பின்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரிகள் மீதான அடுத்த உளவியல் தாக்குதல் இது.

அஜ்மல் கஸாப் தூக்கில் இடப்பட்டது போலவே அஃப்ச
ல்குருவும் ஒரு அதிகாலையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். கொலைகார பயங்கரவாதி அஜ்மல் கஸாப்பிற்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு நாம் எதிர்ப்பு சொல்ல முடியாது. தூக்கு தண்டனை எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து வெறும் கோரிக்கை, அல்லது கண்டனம் மட்டுமே சொல்ல முடிந்தது. ஆனால் குற்றமே நிரூபிக்கப்படாத அல்லது போலி வழக்குகளால் சூழப்பட்ட ஊடக வெள்ளத்தில் பயங்கரவாதியாக்கப்பட்டு, தூக்கு தண்டனைக்குத் தகுதியானவர் என்ற கருத்து வலுவாக்கப்பட்டு, இப்போது அவசர அவசரமாகத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

இவரும் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் போலத்தான். நேரடியாக குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்தவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள். அவர்களுடன் தொடர்புடையவர்கள்.

இதற்கு தேசத்தின் மனசாட்சியைத் திருப்திப் படுத்துவதற்காக என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தேசத்தின் மனசாட்சி என்பது நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல், 9 பேர் கொலை, இந்தியாவுக்கு அவமானம் எனவே இவனைத் தூக்கிலிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அவன் குற்றவாளியா என்று ஆராயக் கூடத் தேவையில்லை. வெறும் அனுமானம் மட்டுமே போதுமாக இருக்கிறது. அதே நியாயம்தான் ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கும். இன்று வரையிலும் அவர்களை ராஜீவ் கொலையாளிகள் என்றே எல்லா நாளிதழ்களும், தொலைக்காட்சி செய்திகளும் சொல்லி வருகின்றன.

இந்திய ஜனநாயக்த்தின் கோயிலின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி என்று மிகையுணர்ச்சி ஊட்டும் தலைப்புக்கள் இவன்தான் குண்டை வீசியவன் என்றே நம்ப வைக்கப் போதுமானவை.

இந்த தேசத்தின் மனசாட்சி, தேசபக்தி என்பதே இவர்கள் கட்டமைக்கு போலியான ஒன்றுதான். இதைக் கட்டமைப்பவர்கள்தான் தேசபக்திக்கும், தேசத்தின் மனசாட்சிக்கும் எதிரானவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு காரணமாக ஏற்க முடியாது.

மோடியின் குற்றத்தை மறைக்க குஜராத் வளர்கிறது, திறமையான முதல்வர் என்ற போலி பிம்பம் கட்டப்படுவதைப் போலவே அஃப்சல் போன்றவர்கள் மீதான பயங்கரவாத முத்திரையும் தொடர்ந்து குத்தப்படுகிறது. தண்டனைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

இவர்களையெல்லாம் தூக்கில் போடாமல் வைத்திருப்பது இந்திய அரசின் கையாலாகாத்தனம் என்றும் சட்டம் இன்னும் கடுமையாக வேண்டுமென்றும் இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் தூக்கிலிட்டுவிடத் துடிக்கிறார்கள்.

அஜ்மல் கஸாப் தூக்கிலிடப்பட்ட போது, அப்சல் குருவுக்கு எப்போது தூக்கு என்று கேட்டவர் வாழும் புத்தரான மோடி அவர்கள். பால்தாக்கரே சிறைக்குக் கூடச் செல்லாமல் இயற்கையாக செத்துப் போனார். அது போல அத்வானியும் சாவார். மோடி பிரதமர் ஆகிவிடுவார். அப்சல் குரு போன்றவர்கள் தூக்கில் தொங்கி செத்த மனசாட்சிகளைத் திருப்திப் படுத்துகிறார்கள். இந்தியாவின் ஜனநாயகம் என்பது சிலருக்கு மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. நம்மைப் போன்ற மாநிலங்களில் இருக்கும் ஜனநாயகம், வட கிழக்கில் இல்லை. அங்கே ராணுவ ஆட்சியே நடைபெறுவதாக அறிகிறோம். அது போன்ற சூழலில் ஒரு குண்டு வெடிப்பை நடத்தியோ அல்லது குண்டு வெடிப்பு நடந்தாலோ பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்காமலே சிறையில் வாடுவது, அல்லது தூக்கில் தொங்குவது வரை நடக்கிறது. காஷ்மீர் தொடங்கி தமிழகம் வரை முஸ்லிம்களின் நிலை இதுதான். இலங்கையில் தமிழனின் நிலை போல.

தூக்கு தண்டனை நியாயமானதாக இருந்தால்

அத்வானி, மோடி, தாக்கரே இவர்களையெல்லாம் சட்டம் நெருங்கவே முடிவதில்லை. இன்னும் கொஞ்ச நாள் போனால் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று கேட்பார்கள். பால் தாக்கரே சாவை ஒரு போராளியின் சாவைப் போலவே செய்திகள் வெளியிட்டன. அதே போல் மோடியின் வெற்றியையும் ஒரு வித கொண்டாட்டத்துடனே தலைப்புச் செய்தியாக்கி வெளியிட்டன. இது போன்ற கொலைகாரர்கள் எல்லாம் பிரதமராகவும், தலைவர்களாகவும் நீடிக்க முடிகிறது, மற்றொரு பக்கம் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், கலவரங்கள், என்கவுண்டர்கள், தூக்குதண்டனைகள், சிறைத்தண்டனைகள், கைதுகள், பிணை மறுப்புக்கள், அடையாள அரசியல் என்று சீரழிக்கின்றன.

ஒரு புறம் தூக்கு தண்டனைக்குத் தகுதியானவர்கள் பிரதமராகத் தகுதியானவர்களாகிறார்கள். இன்னொரு புறம் சராசரிக் குடிமகனாக வாழ்ந்தவர்கள் சிறையாளிகளாகவும், நிரூபிக்கப்படாத குற்றத்தைச் செய்தவர்கள் தூக்கிலும் தொங்குகிறார்கள். இதுதான் குடிநாயகத்தின் இரண்டகம்.

தேசபக்தி என்பது பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனை தூக்கில் போட வேண்டும் என்று துடிப்பது மட்டும்தானா ? அதிலும் அவனொரு முஸ்லிமாக இருந்து விட்டால் ? இன்னும் தேசபக்தி அதிகமாகி விடுகிறது.

கோவையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு குழந்தைகளை வன்கலவிக்கு உள்ளாக்கிய இருவரை காவல்துறை மோதல் கொலைகள் மூலம் படுகொலை செய்தது. சட்டத்திற்கு புறம்பான காவல்துறையின் இக்கொலைக்கு பொதுமக்கள் ஆதரவு பெருமளவில் இருந்தது. சட்டத்திற்குள்ளானது என்று இல்லாத போதும், அதில் கொல்லப்பட்டவர்கள் மிகவும் கொடிய குற்றவாளிகள் என்ற நியாயம் இருந்தது.

அதே போல் சென்னையில் 5 வட இந்திய இளைஞர்கள் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரிலும், காவல்துறையினரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். பொது மக்களிடம் அதற்கும் குறிப்பிடத் தக்க ஆதரவு இருந்தது.

கூடங்குளத்தில் கூட சுட்டுத் தள்ள வேண்டும் அந்த தேசதுரோகிகளை என்று கருத்துச் சொன்னவர்கள் இருக்கிறார்கள்.

அது போலவே இதையும் பார்க்கிறேன். முதலில் ஒரு பயங்கரவாதியை தூக்கில் ஏற்றி விட்டு பின்பு, போலியாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனையும் தூக்கில் ஏற்றும் போது அவனுக்கான நியாயமும் செத்து விடுகிறது.

காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை பாஜகவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது இந்தத் தூக்கு. இனி காங்கிரஸின் கையாலாகாத்தனம் என்று எந்த பாஜக தலைவனும் விமர்சிக்க முடியாது என்பதற்காக குருவைத் தூக்கிலிட்டிருக்கிறார்கள்.

சதாமுக்கு தூக்கு சரி - புஷ் - க்கு என்ன தண்டனை

பின் லேடன், கடாஃபி, பிரபாகரன் படுகொலை சரி - ஒபாமாவுக்கும், மஹிந்தவுக்கும், சர்கோஸிக்கும் என்ன தண்டனை

இதுதான் உலக ஜனநாயகமாக இருக்கிறது. கசாப், அப்சல் குருவுக்கு தூக்கு - மோடி, அத்வான் இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை. இவர்கள் நெஞ்சு வலி வந்தோ, சிறுநீரகம் பழுதாகியோ சாவதுதான் ஜனநாயம் இவர்களுக்கு வழங்கும் தண்டனை.

ஈழத்து அகதிகளை முகாம்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, மஹிந்தவை திருப்பதிக்குள் விடுவதுதான் ஜனநாயகம். கோத்ரா வுக்கு தூக்கு பெஸ்ட் பேக்கரிக்கு ஆயுள் என்பதும் ஜனநாயகம்.

தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

டெல்லி பாலியல் வன்முறைக்கு பிறகு வன்கலவி கொலையில் ஈடுபடும் நபர்களுக்கு அவர் யாராக இருப்பினும் அரசியல் தலைவர், ராணுவ வீரர், அதிகாரி, காவலர் என மரண தண்டனை அல்லாமல் / கடுமையான தண்டனைகள் வழங்கும் படிக்கு வர்மா ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆனால் அரசோ பெண்களுக்கு சாதகமான கருத்துக்களை ஒதுக்கி விட்டு, வெறும் மரண தண்டனை என்று ஆரவாரமான தண்டனைக்கு மட்டும் அனுமதித்துள்ளது. இங்கு மரண தண்டனை கூடாது வேண்டும் என்ற விவாதத்திற்கு சொல்லவில்லை. பாலியல் வன்முறையில் ஈடுபடும் இராணுவ, காவல்துறை, அரசு அதிகாரிகள் மீதான சலுகைகள அந்த சட்டம் பரிசீலிக்க வில்லை என்பது முக்கியமானது.

இதன்மூலம் வன்புணர்ச்சி போன்ற குற்றங்களுக்காக தெருப்பொறுக்கிகள் மட்டுமே தூக்கிலிடப்படுவார்கள். பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தும் ராணுவத்தினர், அரசியல்வாதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் போன்றவர்களுக்கு இது போன்ற தண்டனைகள் செல்லாது என்ற நிலை நீடிக்கிறது.

அதே போல்தான் இந்த பயங்கரவாத எதிர்ப்பில் பயங்கரவாதிகளை, அல்லது அப்படி சொல்லப்படுகிறவர்களைத் தூக்கில் போடுவதை முன்னிலைப்படுத்தும் அரசு, கூட்டம் கூட்டமாகக் கொலை செய்வது கலவரம் செய்வது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் காணோம். குஜராத் படுகொலைகளைப் பற்றி காங்கிரஸ் பேசினால் பாஜக வினர் சீக்கியர் படுகொலை பற்றிப் பேசி ஆப்படிப்பார்கள். தான் முதலில் யோக்கியனாக இருந்தாலல்லவா குற்றங்களை நேர்மையாகப் பரிசீலிப்பதற்கு ?

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

போயே விட்டேன் வாங்கியே விட்டேன் !



இன்றுதான் கடைசி நாள் என்றோ ஞாயிற்றுக் கிழமை போன்றே தெரியாதவாறு கூட்டமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நண்பகல் வேளை என்பதாலா அல்லது வாசகர்கள் மொத்தமே அவ்வளவுதான் என்று தெரியவில்லை
 

இம்முறை வாழ்க்கையிலேயே அதிக அளவாக ரூ 1500 க்கு நூல்களை அள்ளி வந்தேன் திருப்பூரில் நடந்த நூல்கள் கண்காட்சியின் இறுதி நாளிலே. இந்த வருடமாவது குறும்படங்கள் பார்க்கலாம். கலை நிகழ்ச்சிகள் காணலாம். சொற்பொழிவுகள் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. சென்ற வருடம் நடந்த கண்காட்சி ஏதோ நேற்றைக்குத்தான் நடந்தது போலிருந்தது ஆனால் அதற்குள் ஒரு வருடம் ஆகி விட்டிருக்கிறது.
 

கண்காட்சிக்குச் சென்று நூல்களை வாங்கலாமா வேண்டாமா என்று எண்ணுமளவுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது. நல்ல வேளையாக சென்று வாங்கி வந்தது நல்லதாகப் போய்விட்டது. பணம் முக்கால்வாசி தீர்ந்து விட்டதாலும், சென்ற வருடம் வாங்கிய நூல்களிலேயே பாதி படிக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதாலும் இம்முறை கொஞ்சம் அதிகமாக வாங்கியும் ஆசை தீராத நிலையிலும் பத்து பதிப்பகங்களுக்குள் நுழையாமல் கூட திரும்பி விட்டேன்.

ரூ 250 க்கும் மேல் நூல்கள் வாங்கினால் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ்கள் தருவார்கள். பட்டப்படிப்பில் வாங்கிய சான்றிதழ்களே வெட்டியாகக் கிடக்கும் போது, இது போன்ற தம்பட்டங்கள் எதற்கென்றுதான் போன வருடமே வாங்கவில்லை. இம்முறையும் வாங்கவில்லை.

வாங்கிய நூல்கள்

அனொனிமா (முகம் மறைத்தவள்) 

ஜெர்மனியில் ரஷ்யப் படைகள் புரிந்த பாலியல் வன்முறைகள் குறித்தது. இது குறித்த கட்டுரையை கீற்றுவில் படித்ததிலிருந்தே வாங்க வேண்டுமென்ற தவிப்பு இருந்தது. இந்நூலைப் பற்றி இருப்பதாகக் கேள்விப்பட்டு வாங்க வேண்டும் என்றேதான் போனேன். இரண்டு பதிப்பகங்களில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இறுதியில் எதிர்பாராவிதமாக எதிர் வெளியீட்டகத்தில் வைத்திருந்தார்கள்.

அன்னி ஃப்ராங்க் டைரிக் குறிப்புகள் 
 
இது பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஜெர்மனியில் நாஜிக்களின் கொடூரத்தை தனது நாட்குறிப்பேட்டில் பதித்த சிறுமியின் குறிப்புக்கள். இதுவும் எதிர் வெளியீடு. இந்த இரண்டு நூல்களின் முக்கியமானவை என்பதால் வாங்கிவிட்டேன்.

அமைதியின் நறுமணம் - ஐரோம் ஷர்மிலாவின் கவிதைகள்

ஐரோம் ஷர்மிளாவுக்கு என்னால் வேறு என்ன கைம்மாறு செய்யமுடியும் ? அவரது கவிதைகளைப் படிப்பதை விட. அவர் மீது கொண்ட மதிப்பினால் வாங்கினேன்.

ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை

இதை சென்ற வருட கண்காட்சியின் போதே எடுத்துப் பார்த்து விட்டு காமிக்ஸ் போன்ற நூல் நூறு ரூபாயாக இருக்கிறது. ஆங்கிலத்தில் வேறு இருக்கிறதே என்று அரை மனதுடன் வைத்து விட்டு வந்து விட்டேன். இம்முறை தமிழில் வைத்திருந்தார்கள் வாங்கி விட்டேன்.

சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் இருந்த சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் வாங்கினேன்.

நீ எறும்புகளை நேசிக்கிறாயா ?

வானவில் பறவையின் கதை


இவையெல்லாம் போக குழந்தைகளுக்கான பெயர்கள் என்ற தலைப்பில் மட்டும் மூன்று நூல்களை வாங்கினேன். உடன்பிறப்பின் குழந்தைக்கு பெயரிட வேண்டியிருப்பதால்.

இது போக தலைப்புகள் கொண்டே சிலவற்றை வாங்கினேன். விலையையும் கருத்தில் கொண்டேதான்.

அறியப்படாத தமிழகம் - தொ பரமசிவன்

ஹரப்பா வேதங்களின் நாடா ?

1857

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

சூஃபி - விளிம்பின் குரல்

எங்கெ செல்கிறது கல்வி ?

தமிழர் மறந்த மரபுக் கலைகள்

கோட்சேயின் குருமார்கள்

தலித் முஸ்லிம்

ஆயிஷா

பெட்ரோல் அரசியல்

ஈராக் - வரலாறும் அரசியலும்

இஸ்லாம் - நேற்று இன்று நாளை

பெரியார்  தமிழுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இரண்டகம் செய்தாரா ?

அழியட்டும் ஆண்மை

தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் பெரியாரும் ம.பொ.சி.யும்

கமலின் கலப்படங்கள்

ஈரானிய சினிமா


இத்தனையும் அடுத்த வருட கண்காட்சிக்குள் படித்து விட வேண்டும் என்று வழக்கம் போலவே முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம். இம்முறையும் வால்கா முதல் கங்கை வரை நூலை எடுத்துப் பார்த்து விட்டு விலை காரணமாக வைத்து விட்டேன். பின்பு வாங்கிக் கொள்ளலாம் என. இது போல் ஒவ்வொரு முறையும் பல நூல்களை விலை காரணமாகவே வாங்க முடிவதில்லை.

ஒரு பயணக் கட்டுரையோ அல்லது கண்காட்சி குறித்தோ ஒரு கட்டுரை வரையுமளவிற்கு எழுத்தாளுமை இன்னும் எனக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது. பத்து வருடங்களுக்கும் மேலாக பொது மக்கள் திரள் ஊடகம் தவிர பல்வேறு மாத இதழ்களும், நூல்களும், விமர்சனங்களும் இலக்கியங்களும் வாசித்து வருகிறேன். இருப்பினும் எனக்குள் பெரிய அளவில் எழுத்து அளவிலோ சிந்தனை அளவிலோ முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சிறு வயதிலிருந்தே தமிழார்வம் அதிகமாக இருந்தது. அது ஆக்கப் பூர்வமாக  இல்லாமல் வெறும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்ற அளவிலேயே இருந்தது. படிக்க நிறைய நேரமும் ஆர்வமும் இளம் பருவமும் இருந்த போது நூல்கள் வாங்குவதற்குப் போதுமான வாய்ப்பு வசதிகள், பணமும் இருக்க வில்லை. இப்போதும் பணம் ஒன்றும் பெரிதாகப் புழங்க வில்லை. கல்லூரி முடிந்ததிலிருந்தே இணையத்திலேயே அதிகம் வாசிக்கும் நிலையாக இருக்கிறது. பிபிஓ பணிச்சுமை, மன அழுத்தத்தின் காரணமாகவும் வாசிப்பு கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது, எப்போதாவது மட்டுமே வாசிக்க இயலுகிறது.

இருந்தும் எப்படியாவது இதிலிருந்து மீண்டு விடவே எத்தனிக்கிறேன். ஒவ்வொரு நூலையும் படித்து அதைப் பற்றியாவது எழுதி வலைப்பூவை ஒப்பேத்தி விடுவதாகத் திட்டம். அடுக்கி வைக்கப்பட்ட நூல்களின் மேலுள்ள அட்டையில் ஆன்னி ஃப்ராங்க் என்னைப்பார்த்து "நீ படிச்சுக் கிழிச்சுட்டாலும் என்று" என்று கிண்டலாக சிரிப்பதாகத் தோன்றுகிறது.  

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

திருந்தித் தொலையுங்கள்

குமுதம் என்ற வார இதழில் வரும் அரசு பதில்கள் நான் விரும்பிப் படிக்கும் ஒரு பகுதி. அதில் பதிலளிப்பவர் உலக அளவிலான பல துறைகள் சார்ந்தும் பதிலளிப்பார். அதே நேரம் ஒரு குப்பைக்கும் ஆகாத நடிகைகள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிப்பார். அதை நான் விமர்சிக்க விரும்புகிறேன். காரணம் பெண்களைக் கிண்டல் செய்வது எனக்கு அருவருப்பானது. தனக்குத் தெரியாத, உறவுமில்லாத ஒட்டுமில்லாத ஒரு பெண்ணை ஒரு பெண் என்ற காரணத்திற்காகவே தனது அரிப்பை சொறிய ஒரு ஆண் செய்யும் கிண்டல் பற்றி நான் சொல்ல வருவது.

டெல்லி பாலியல் வன்முறை தொடங்கும் முன் ஜோதியையும் அவளது நண்பனையும் கிண்டல் செய்து பின்னர் ஜோதி சண்டை போட்ட பின்னரே தொடங்கியது. எனவே இந்த ஈவ் டீஸிங் என்பது ஒரு குற்றம் என்று சொல்ல வருகிறேன். மேலும் இதை செய்பவர்கள் இது ஒரு தவறு என்பதைக் கூட உணர்வதில்லை. அதையே இவர்கள் தனக்கு வேண்டிய பெண்களை இது போன்று விமர்சிக்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

டெல்லி பாலியல் வன்முறைக்கு எதிராக பல இளம் பெண்களும் ஆண்களும் தெருவுக்கு வந்ததை நாம் அறிவோம். ஒரு போராட்டம் மும்பை கேட் அருகே நடந்த போது போராட்டம் நடத்திய இளம் பெண்களைப் பார்த்து இரண்டு ஆண்கள் விசில் அடித்தார்களாம். என்ன புதுமையென்றால் அந்த ஆண்களும் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட வந்தவர்களாம். எப்படியிருக்கிறது பாருங்கள் கதை.

இன்னொரு உதாரணம் நச்சென்று புரியவைக்கும் இதன் இரு வேறு பரிமாணங்களை.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக இருக்கும் புகழேந்திக்கு ஒரு அழைப்பு தொலைபேசியில் வரும். ஒரு இளம் பெண் தலையில் வழியும் குருதியைத் துடைத்து கொண்டு அழுது கொண்டே இங்க ஈவ் டீஸிங் தொல்ல தாங்க முடியல சார் என்பாள். நாயகன் சென்று அந்தப் பொறுக்கிகளை அடித்து நொறுக்கி உள்ளாடையுடன் "பெண்கள் நம் கண்கள்" என்று சொல்லிக் கொண்டேமுட்டி போட்டு நடக்கச் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றுவார். இது பெண்களைக் கேலி செய்தவர்களுக்கு எதிரான ஒரு அறச்சீற்றக் காட்சி.

பாய்ஸ் படத்தில், 5 விடலை நாயகர்களும் அறிமுகப் பாடல்களில் தூள் கிளப்புவார்கள். ரங்கநாதன் தெருவில் தன் அம்மாவின் வயதுள்ள பெண்களை பின்னால் உரசுவார்கள், வேண்டுமென்றே இடிப்பார்கள். குழந்தையைத் தூக்கும் சாக்கில் முலையில் உரசுவார்கள். மிகவும் சிரித்த முகத்துடன் இதையெல்லாம் செய்வார்கள்.

பின்பு பலத்த எதிர்ப்புக்களின் பின்பு இக்காட்சிகள் நீக்கப்பட்டன. நடப்பதைத்தானே காட்டியிருக்கிறார் என்று பலர் விளக்கம் நியாயம் சொன்னார்கள். அந்தப் படம் பார்க்கும் வரை அது மாதிரி நடப்பது எனக்குத் தெரியாது என்பதையும் சொல்லிக்கிறேன். நடப்பதைக் காட்டலாம் அதை ஒரு நாயகத்தனமாகக் காட்டியது தவறு. முதல்வன் படத்தில் வரும் ஈவ் டீஸிங்க் கூட நடப்பதுதான் அதை எப்படி தவறாகக் காட்டினார். அதை விடக் கேவலமாக இதை ஒரு குறும்பைப்போலவும், தமாசாகவும் நாயகத்தன்மையாகக் காட்டியது என்ன நியாயம். இதை எஸ் ஜே சூர்யாவோ சிம்புவோ, தனுசோ செய்திருந்தால் பரவாயில்லை. சமூகப்பிரச்சனையை மையமாகக் கொண்டு படமெடுக்கும் இயக்குநர் என்று சொல்லப்பட்ட ஷங்கரின் புத்தியே இப்படி கோணலாக இருக்கிறதென்றால் மற்ற ஆண்களுக்கு எப்படியிருக்கும்.

பாலியல் வன்முறைகளின் ஒரு வகைதான் ஈவ் டீஸிங்  என்பதும். பெண்களைக் கேலி செய்வது. எப்படிப் பார்ப்பது, எப்படிக் கமென்ட் அடிப்பது என்பனவற்றையும் சொல்லிக் கொடுப்பவை ஊடகங்கள். முக்கியமானது திரைப்படம். அடுத்ததாக வருகின்றவைதான் குமுதம் போன்ற இதழ்களில் வரும் இது போன்ற கண்டு பிடிப்புகள், விவரிப்புகள். கேட்டால் நக்கலடிக்கத் தோன்றும்தான். ஆனாலும் இதுதான் உண்மை. பெண்களின் அழகைக் கிண்டல் செய்வது, உடல் அசைவுகளை, உடல் பாகங்களைக் கிண்டல் செய்வது, உடையைக் கிண்டல் செய்வது என எல்லாமே இதில் அடங்கும். இதை மிகவும் சிறப்பாக செய்வது அரசுவின் பாணி. என்ன இவர் அதிகமாக நடிகைகளை வர்ணிப்பார். அவ்வப்போது  பொதுவிலும் பெண்களைக் கிண்டல் செய்வார்.

என்ன காரணம் என்றால் பெண்களைக் கிண்டல் செய்வது ஆண்களின் பிறப்புரிமை. அது அழகான பொழுது போக்கு. அது தவறில்லை என்ற எண்ணம். இதை செய்கிறவன் பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் பழைய கற்பிதம். நல்லவன், வல்லவன், க்யூட் பாய்ஸ், ஸ்மார்ட் பாய்ஸ், அறிவிலி, அறிவாளன் என்ற எந்த பேதமுமில்லை. பின்நவீனத்துவம் பேசுகிற ஆண்களிலிருந்து பொம்பளப் பொறுக்கிகள் வரைக்கும், வயசு வந்த விடலைகளிலிருந்து நாடி நரம்பெல்லாம் ஆடிப்போன கெழ போல்டுகள் வரை இதுதான் வழக்கம்.

இதைத்தான் பாலியல் வன்முறை செய்கிறவனும் நினைக்கிறான். பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், கிண்டலடிக்கலாம் என்று எண்ணுகிற ஆண் ஒரு கலாச்சார அடிப்படைவாத, மத அடிப்படைவாத ஆண் போலவே பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். கலாச்சார, மதவாதிகள் ஒழுக்கம் பற்றிப் பேசுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அவன் ஒரு சில கட்டுப்பாடுகள், கொள்கைகளாவது வைத்திருக்கிறான். ஆனால் சைட்டடிப்பதையும், ஈவ் டீஸிங் செய்வதையும் மட்டுமே தொழிலாகக் கொண்டவர்களும் ஒழுக்கத்தைப் பேசுகிறார்கள் என்பது எரிச்சலோ எரிச்சல்.

எனது எரிச்சலுக்குக் காரணம் போனவாரம் குமுதத்தில் அரசு பதில்களில் ஒரு கேள்வி ?

நயன்தாரா தமன்னா (வேறு யாரோ நினைவில்லை) எந்த நடிகைக்கு போலிஸ் அதிகாரி வேடம் நன்றாக இருக்கும் ?

 அரசு சொல்கிறார். ஏன் நடிகர்கள் நெஞ்சைத் தூக்கிக் கொண்டு நடப்பது பிடிக்கவில்லையா ?.

இன்னொரு கேள்வி:

நான் நிர்வாணமாகச் சென்றாலும் என்னை வன்புணர யாருக்கும் உரிமை  இல்லை என்கிறாரே பிரியங்கா சோப்ரா ?

அரசு : நம் வீடு என்றாலும் பாத்ரூமிற்கு கதவு இருக்கிறது என்பதை பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் உணர வேண்டும்.

மேலே முதல் கேள்வியில் பெண்களின் உடலைக் கிண்டல் செய்யும் கருத்து இது ஒரு செக்ஸிஸ்ட் ஜோக்தான். ஏன்னா அது சும்மா ஜாலிக்கு. எது பெரிசு எது சிறிசு இப்படியெல்லாம் சொல்வது ஃபன். இரண்டாம் கேள்வியில் அபச்சாரம் அபச்சாரம் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் அறிவுரை சொல்கிறது. நூல் முழுக்கவும் கவர்ச்சிப்படங்களைப் போட்டுக் கொண்டு கண்ட கமெண்டுகளையும் எழுதிக் கொண்டு விற்பனையாகும் இது போன்ற இதழ்களே பெண்களை, பெண் உடலை ஒரு மாஸ்ட
ர்பேசன் ஆப்ஜெக்ட் ஆக்கிவிட்டு, பெண்களுக்கு அறிவுறைகளையும் அள்ளி வழங்குகின்றார்கள்.


 ஸ்ரீயாவின் பிகினி படத்தையும் பிரசுரித்துகொள்ள வேண்டியது, கீழே அய்யோ இதுக்கு இன்னும் ட்ரெஸ்ஸே போடத்த் தெரில என்ற கமெண்ட்டையும் போட்டுக் கொண்டு யோக்கியனாக காட்டிக் கொள்ள வேண்டியது. அவ்வப்போது பெண்களுக்கு அட்வைஸ் மழை.

இந்த மனநிலையில்தான் எல்லா ஆண்களும் இருக்கிறார்கள். தாம் செய்யும் பொறுக்கித்தனத்தை எல்லோரும் இயல்பாகக் கருதுகிறார்கள். பெண்கள் கருத்துச் சொன்னால் பாதுகாப்பின் அவசியம் பற்றிப்பேசுவார்கள். டெல்லியின் வீரத்தலைமகன் ஆண்மையின் சின்னம் ராம்சிங் சொன்னது தனியாக இரவில் வந்த பெண்ணுக்குப் பாடம் புகட்ட நினைத்தேன். அதே கருத்தைத்தான் எல்லோரும் வழிமொழிகிறார்கள்.

ஆணாதிக்க அல்பைகள் ஒழுங்காக உடையணியவும், அந்த பெண் ஏன் தனியாகப் போனாள், இரவில் போனாள் என்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அதற்கெதிராக போராடிய இளம் பெண்கள் என்னை எப்படி உடையணிய வேண்டும் என்று சொல்லாதே, பாதிக்கப்பட்டவளைக் குற்றவாளியாக்காதே, உடை அணிவது என் உரிமை என்ற பொருள் தரும் கருத்துக்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்ததை ஊடகங்கள் வழியாகக் கண்ட ஆண்களுக்குப் பொறுத்துக்க முடிய வில்லை. அது போன்றதுதான் அரசுவின் இரண்டாவது பதில். இந்த வாரம் குமுதத்தில் ஒரு கேள்வி பதில்

எந்த நடிகை காலில் டாட்டூ குத்தியிருக்கிறார் ?

அரசு: நான் கால்களைப் பார்ப்பதில்லை.

இன்னொரு கட்டுரை கீற்றுவில் படித்தேன். அதில் வன்னி அரசு என்பவர்  திரைப்படங்கள் தாக்கத்தின் காரணமாக பெண்களைக் குறிப்பிடும் ஃபிகர் என்ற சொல்லைப் பற்றி எழுதியிருந்தார். அதில் அழகில்லாத பெண்களை ஆண்கள் கிண்டல் செய்யும் ஒரு சொல் அட்டு ஃபிகர் என்பதாகும். இந்த அட்டு என்ற சொல் "Hut" என்ற குடிசையைக் குறிக்கும் சொல்லிலிருந்தே வந்திருக்கும். "Hut Figure" என்று குடிசையில் வாழும் தலித் பெண்களை இழிக்கப் பயன்படுத்திய சொல்லே இது போன்று மாறியிருக்கலாம் என்கிறார். அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் அழகில்லாத பெண்களை ஆண்கள் என்ன சொல்கிறார்கள். மொக்க ஃபிகரு, அட்டு ஃபிகரு, சப்பை ஃபிகரு, டம்மி பீசு இவைகள் போக மேல்ஜாதி ஆண்கள் சொல்வது சக்கிலிச்சி மாதிரியே இருக்கா, கொறத்தி மாதிரி, பறச்சி மாதிரி என்று சொல்வார்கள். இதெல்லாம் "ஜாதிகள் இல்லாத" நகரத்தில் கம்பியூட்டர் யூத்கள் கூடப் பேசுகிறார்கள். எனவே அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம்.

என்ன ஃபிகர் என்று சொல்வதை விடவும், ஃபிகர் என்று சொல்வதே தவறு என்கிறேன். புறத்தோற்றத்தை வைத்து கிண்டலடிப்பது, ஜாதியைச் சொல்லிக் கிண்டலடிப்பது என்று வந்தாலும் இது அனைத்தும் பெண்களைக் கிண்டலடிக்கும் ஆணாதிக்க மனநோயே ஆகும். இதைத் தவறென்று எண்ணுவதற்குக் கூட ஆண்களுக்கு மனம் வருவதில்லை. புரிந்தவர்கள் திருந்திக் கொள்ளுங்கள், அடுத்தவரையும் திருத்துங்கள். திருந்தாதவர்கள் திருந்தித் தொலையுங்கள்.

இன்னொரு விசயம் டெல்லி பாலியல் நிகழ்வில் பலபேர் ஜோதி தனியாக சென்றதாகவும், இரவில் சென்றதாகவும், காதலனுடன் சென்றதாகவும், உல்லாசமாக இருந்ததாகவும் அடித்து விடுகிறார்கள். அவர்கள் செல்ல வருவது அவர்கள் இருவரும் "அது" செய்வதற்காகவே வெளியில் திரிந்து விட்டு வந்தார்கள் அவர்கள் மீதும் குறிப்பாக அந்தப் பெண்ணின் மீது தவறு இருக்கிறது. அதாவது சுருக்கமாக ஜோதி கற்பில்லாதவள், ஒழுக்கமற்றவள்.

அவர்கள் சென்றது நள்ளிரவிலல்ல, 9 மணி வாக்கில்தான். திரைப்படத்திற்குத்தான் சென்றிருக்கிறார்கள். அவள் தன்னிடம் திருமண ஆசை குறித்துச் சொல்லவில்லை எனவும், அந்தப் பையன் வேறு ஜாதி என்பதால் அதற்கு வாய்ப்பில்லை, அவள் படிப்பில்தான் ஆர்வமாக இருந்தாள் எனவும் ஜோதியின் தந்தை குறிப்பிட்டிருந்தார். தன் மகள் மீது தவறு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜோதியைக் குதறியதில் அந்த 6 பிசாசுகள் தவிர்த்து, பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்பவர்கள் அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பவர்கள் ஏனென்றால் குற்றவாளி ராம்சிங்கின் கருத்தைத்தான் அவர்களும் சொல்கிறார்கள்.

அந்த நண்பன் காதலனாக இருந்தாலும், அவர்கள் கலவி செய்யத்தான் வெளியே சுற்றி விட்டு வந்திருந்தாலும் கூட எனது நிலையில் எந்த மாற்றமுமில்லை. ஜோதி சிங் பாண்டே குற்றமற்றவள்தான். சொக்கத் தங்கம்தான். 

அந்தப் பொறுக்கி *@#$%^%^% யை சிறுவன் என்று சொல்லி வெளியில் விடக்கூடாது. இதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையே இவனுக்கும் முடிந்தால் இன்னும் கூடுதலாகவும் பரிந்துரைக்கலாம்.

அடுத்ததாக கமலஹாசன் ஷ்ருதிக்கு முத்தம் கொடுப்பதை பெரிய கலாச்சாரா அதிர்ச்சியாக சித்தரிக்கிறார்கள். பெற்றவன் மகளுக்கு முத்தம் கொடுப்பதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதி விளக்கம் தர வேண்டியிருக்கிறதே. காதல் குற்றம், முத்தம் குற்றம் நல்ல கலாச்சாரம். இந்த கலாச்சாரம் சீரழவு குறித்து விமர்சிப்பவர்கள் நம்முடைய கலாச்சாரா வரலாற்றையும், ஜாதியையும் வைத்தே சொல்லி விடலாம் எவ்வளவு அருமையான கலாச்சாரம் என்று. 


 கூடுதல் தகவலாக கமல் தனது 49 பிறந்த நாளின் போது விருமாண்டி படம் வெளியாகும் முன்பு , மேடையிலேயே வைத்து நடிகை காந்தி மதி கமலுக்கு முத்தம் கொடுக்க, கமலும் திருப்பி முத்தம் பல கொடுத்தார். அதையும் விமர்சிக்கலாம்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment