வலையுலகம் ஏன் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது ?

தற்போது வலையுலகில் ஒருவித மந்த நிலை நிலவுவது போல் தோன்றுகிறது. இணையத்தில் எழுத்தார்வமும், வாசிப்பார்வமும், தமிழார்வமும் கொண்டோர்க்கு இது மிகவும் கவலை கொள்ளக்கூடியதாகும். இப்போது நிறையப் பேர் புதியதாக எழுத வருகிறார்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் நிறையப் பேர்களை இப்போது காணவில்லை. அவர்கள் வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா என்றும் தெரியவில்லை. சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், ரீடர், பஸ் போன்றவற்றில் மட்டுமே எழுதிவருவதாகவும் கேள்விப்படுகிறோம். இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி சென்றடைய முடியாது என்ற நிலையில் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், சுருக்கிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

திரட்டிகளில் தங்கள் பதிவுகளையும் வலைப்பூக்களையும் இணைத்துக் கொள்ளாதவர்கள் கூட இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் தெரியவில்லை. இது போன்று இணைய வாசிப்புக்காக ஏங்கியவர்களின் பசியைப் போக்கியவைதான் திரட்டிகள். எல்லோருக்கும் எல்லா இணையத்தளங்களின் பெயரையும் முகவரியையும் அறிந்து வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது தெரிந்ததே. எனக்கு ஆனந்த விகடன் மூலமாகவே தமிழ்மணம் அறிமுகமானது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அறிந்தேன். அப்போது திரட்டிகள் வலைப்பூக்கள் என எதுவும் தெரியாது. வெறுமனே இணைப்புகளை சொடுக்குவதன் மூலமே படித்தேன் சில நாட்களாக.

இது போன்று இணையமும் நேரமும் கைவரப்பெற்றும் வலைப்பூக்கள் பற்றி அறியாதவர்கள் திரட்டிகள் மூலமே பல வலைப்பூக்களையும் வாசிக்க இயலும். எல்லாத் தகவல்களையும் பெற்றிட முடியும். மேலும் அவர்கள் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அது அமையும் என்பதே இதன் சிறப்பம்சம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எனக்கு நேரம் என்பது இருந்ததேயில்லை. அதிகம் வாசிப்பதற்கு நேரமில்லை என்ற நிலையிலெல்லாம், தமிழ்மணம் உட்பட எல்லாத் திரட்டிகளிலும் சூடான பதிவுகள் குறையாமல் வந்து கொண்டேயிருந்தன. கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, விமர்சனம், மதம் என அனைத்துத் வகைகளிலும் அல்லது ஒரு சிலவற்றில் மட்டுமாவது மிகவும் பரபரப்பாக இயங்கிய பதிவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்றே தெரியவில்லை. மிகவும் அரிதாக எழுதுகிறார்கள். அல்லது எழுதுவதேயில்லை.

புதிதாக வரும் வலைஞர்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்பது பரவலாகக் காணப்படக் கூடியதாகும். ஏதாவதொரு இணைப்பையோ அல்லது புகைப்படத்தையோ பகிர்ந்து கொண்டவுடன் பத்துப்பேர்கள் வந்து "Like" செய்யவும், அல்லது கருத்துச்சொல்லவும் இது ஒன்றும் ஃபேஸ்புக் அல்ல. எழுதுவது எவ்வளவு சிரமமோ அதே அளவு சிரமமானதுதான் பின்னூட்டமிடுவதும். தமிழில் பதிவு எழுதுவதே அதிகப்படியான சுமை என்னும் நிலையில் நேரமொதுக்கி அடுத்தவர் பதிவைப் படிப்பதற்கும், அதற்கு கைவலிக்க பின்னூட்டம் போடுவதற்கு எல்லோருமே சோம்பேறித்தனம்தான் படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதன் மூலமே நம்மை நாமே வளர்த்துக் கொள்ளமுடியும் என்பது என் கருத்து. எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சிறப்பாக எழுதுகிறவர்கள் நிறையப்பேர்களுக்கு எந்தவொரு பின்னூட்டமும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சிலரோ ஏற்கெனவே பதிவுலகில் இருந்தவர்கள், அவர்கள் ஏன் அதிகம் பங்களிப்பது இல்லை என்றால் திரைப்படம் சார்ந்த பதிவுகளோ, செய்திகளோ, அச்சு மாறாமல் படியெடுக்கப்பட்டவையோ, நகைச்சுவைக் கும்மிப் பதிவுகளோ மதம் சார்ந்த பதிவுகளோ மட்டுமே எப்போதும் தமிழ்மணத்தின் முகப்பில் முன்னணியில் தெரிகின்றன படிப்பதற்கே விருப்பமில்லை என்கிறார்கள். எல்லாவகையினரும் கலந்து இருப்பதன் மூலமாகத்தான் நிறைய வாசகர்களைச் சென்றடைய முடியும். இது சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும் இதை எழுதக் கூடாது என்றெல்லாம் சொல்லவது நியாயமுமில்லை. அவரவர்க்கு அவரவர் கொள்கைகளுக்காக எழுதுகிறார்கள். எதற்கு எதிராகவும் ஆதரவாகவும் நம்மால் மாற்றுக் கருத்தை வைப்பதற்கு இதுதானே வழிசெய்கிறது. உண்மையிலேயே இது போன்று கவலைப்படுகிறவர்கள் தாங்கள் விரும்பிப் படித்த நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமும், வாக்கும் தவறாமல் போட்டதுண்டா என்பது அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும்.

வலைப்பூக்கள் எழுதும்போதும், படிக்கும்போதும் நம்மையறியாமல் நிறையக் கற்றுக் கொள்கிறோம் தெரிந்தும் கொள்கிறோம். கருத்துக்களில் கொள்கைகளில் நிறைய மாறிவிடுகிறோம். இதன் பொருள் இந்துவாக இருந்து முஸ்லிமாகவோ, முஸ்லிமாக இருந்து கிறித்தவனாகவோ என்ற அள்விற்கு மாற்றம் வந்து விடும் என்பதல்ல. மாறாக சிறு சிறு மாற்றங்கள் நமது பொது அறிவிலும் கேள்வி அறிவுலும் எழுத்திலும் என்று சொல்ல வருகிறேன். மக்கள்திரள் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கும் நம் வலையுலகில் இருக்கும் கருத்துக்கும் எந்தளவு ஒற்றுமையிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியும். அதில் கிடைக்காத செய்திகள் எத்தனையோ இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னோரு வகையில் பார்த்தால் சமூகத்தில் ஒன்றாயிருப்பது, ஒத்த கருத்துக்கள் கொண்ட வேவ்வேறிடங்களிலுள்ள புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. இது போன்ற பல நன்மைகள் வலை உலகில் மட்டுமே சாத்தியம்.

ஆகவே எழுத்தார்வமும், ஆற்றலும் உடையவர்கள் தொடந்து எழுத வேண்டுமென்பதே எனது அவா. நம்ம எழுதி என்னவாகப் போகுது ?, நேரமில்ல ? என்பது போன்ற எண்ணங்கள், வெறுமை, மனச்சோர்வு, இடைவெளி, தேக்கநிலை, வெற்றிடம் என்பது மாதிரியான மனநிலைகள் தோன்றினாலும் தொடர்ந்து சோர்வடையாமல் எழுதுங்கள். எதுவும் எழுதாமல் இருப்பதைவிட எழுதுவது எவ்வளவோ மேலானது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

புத்தாண்டில் எல்லாம் பொங்கட்டும் !!

 அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
பிடித்த ஜாதி, மத, வர்க்க, இன, பேத பீடைகள் எல்லாம் ஒழியக் கடவது.

வழக்கம் போலவே பொங்கல் வந்து விட்டது. கடவுள் நம்பிக்கையில்லை என்பதால்  கூட்டத்தில் “நின்று சாமி கும்பிடுவது” போல் நடித்துவிட்டு வருவதில் விருப்பமில்லை. சும்மா சடங்குக்காக குறுஞ்செய்திகள் அனுப்புவதும் “மகிழ்ச்சிப் பொங்கல்” என்று ஆங்கிலத்தில் வாழ்த்துவதும் இல்லை. மற்றபடி உறவினர்கள் வருவார்கள் வீட்டில் அனைவருடனும் ஓரிரு நாட்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதே ஒரே மகிழ்ச்சி. சிறுவயதில் ஏன் பொங்கல் பிடிக்குமென்றால் அதற்குத்தான் நான்கு நாட்கள் சேர்ந்தது போல் விடுமுறை கிடைக்கும். தமிழ்நாட்டில் எல்லோருமே தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் மயங்கிக் கிடப்பதால் எந்தப் பண்டிகையாக இருந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் விடுமுறையும் கொண்டாட்டமும் கழிகிறது

மற்ற எந்த கொண்டாட்டங்களை  விடவும் பொங்கல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இது மட்டும்தான் சோறு போடும் விவசாயிகள், உழைப்பாளிகள்  கொண்டாடுவது, மாடுகளுக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்துவது, மேலும் தீபாவளியைப் போன்று வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத சூழலை நாசமாக்கும் வெட்டியான கொண்டாட்டமல்ல, திணிக்கப்பட்டதுமல்ல. இது தமிழுடன் பண்பாட்டுடன்  தொடர்புடையது என்பதில்தான் எனக்கு இன்னும் பற்று அதிகம். அதற்காக இது தமிழர்க்கு மட்டுமே சொந்தமானது என்பதல்ல. வெவ்வேறு மொழியினரும் சற்று வேறான சாயலில் பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.


இந்தமுறை பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலையில் விவசாயிகள் இல்லை. இந்தமுறை மட்டுமல்ல எபோதுமே அவர்கள் நிம்மதியாக இருக்க விட்டதில்லை அரசுகள். இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று இப்போது முல்லைப் பெரியாறு பேராபத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கெதிராக அனைவரும் பொங்கி எழுந்திருப்பது சிறப்பு. இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் அது இன்னும் சிறப்பு.

தமிழ்ப்புத்தாண்டு :

இந்த முறை ஜெயலலிதா பதவியேற்றதும் முந்தைய திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்ததை மாற்றி சித்திரையிலேயே இருப்பதாக திரும்பவும் அறிவித்து தனது புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளார். பல பேர் இது கருணாநிதி ஜெ. இடையிலான சண்டையாகவே பார்க்கிறார்கள். கருணாநிதி மாற்றியதால் மட்டுமே அதைக்  கேலியும் செய்கிறார்கள்.  பல வருடங்களாக மக்கள் கொண்டாடுவதை மாற்ற முடியாது எனில் ஜாதி கூடத்தான் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா. எது சரியோ   அதுதான் முறைப்படுத்தப் பட வேண்டியது. மேலும் இது ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு வடிவம்தான் தமிழே இல்லாத பெயர்கள் தமிழ்ப் மாதங்களாக இருப்பதும் அதைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதும். இழிவானதே.

இதோ புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை தமிழர்களை நோக்கி:

'நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே
தமிழ்ப் புத்தாண்டு '

கூகிள் பேஸ்புக் தடை செய்யப்படுகின்றனவா ?

இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளதாக யாஹூ  உட்பட 21 சமூக வளைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை  அனுப்பும்படி கேட்டுள்ளது. இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் என்பது தான் அதன் சிறப்பும் அதே நேரம் குறையும். சில குறைகளைக் காரணம் காட்டி அவைகளைத் தடை செய்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு ரொம்பவும் அச்சப்படுகிறார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச கருத்துரிமையையும் காவு வாங்க முயல்கிறார்கள். கூகிள் தடை செய்யப்பட்டால் என்னைப் போன்ற பலருக்கு வேலையே கிடையாது. கூகிளார் தரும் விவரங்களை வைத்துத்தான் எனது பணியே நடக்கிறது. பேஸ்புக் இல்லையென்றால் பாதிப் பேருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.

 மஞ்சு விரட்டு

ஜல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக நடத்தப் படுகிறது. இதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் தடை செய்யவும் வலியுறுத்துகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று இதை நடத்துகிறவர்கள் கூறுகின்றனர். தமிழ் கலாசாரம் என்பதற்காக இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா ? இது ஆதிக்க ஜாதியினரின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் மஞ்சுவிரட்டு இருந்தாலும் தற்போதுள்ளது போல் மாடுகளை கொடுமைப்படுத்தி மனித உயிரைக் கொள்ளும் விபரீதமாக இருந்திருக்கவில்லை. தற்போதும் ஸ்பெயினில் என்று நினைக்கிறேன் இது போன்று விளையாடுவார்கள். சாலையின் இருமங்கிலும் மக்கள் நிற்பார்கள். மாடுகளை அந்த சாலையில் ஓடவிட்டு விடுவார்கள் பின்னே இளைஞர்கள் ஓடுவார்கள்  இதனால் மாடுகளுக்கோ மக்களுக்கு காயமேற்படாது.  இது குறித்த செய்தி இங்கே

நான் :

பதிவுலகில் இப்பொது பல புதிய பதிவர்கள் வந்து  சிறப்பாக எழுதிவருகிறார்கள், சிலரைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அவர்களைப்போல் எழுத முடியவில்லையெ என்று எனினும் இரு வருடங்களுக்கு முன்பிருந்த அளவுக்கு செறிவான கருத்துடன் எழுதும் பலர் காணாமல் போய்விட்டார்கள். பலர் கூகிள் பஸ்ஸில் மட்டுமே எழுதிவருகிறார்கள் என்றும் கேள்வி, தற்போது அது தடை செய்யப்பட்டதால் இனி கூகிள் ப்ளசில் சங்கமிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களாக எழுதினாலும் (!!!??) 50 பதிவுகள் கூட வரவில்லை சோம்பேறித்தனம்தான் காரணம், கூடவே நேரமின்மையும். வழக்கம் போலவே இந்த வருடத்திலாவது அதிக பதிவுகள் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment